Thursday, July 9, 2009

கணவனைத் தொலைத்த காரிகை

போன வாரம் ஒரு நாள் மாலை. எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் பக்கம் நின்றிருந்தேன்.


அரக்கப்பரக்கத் தொய்ந்த முகத்துடன் வேகமாக வந்தான் ராகவன். ராகவன் என் மகனின் நண்பன். அவன் வயசொத்தவன். ஆறாவது மாடி பிளாட்டில் இருக்கிறான்.


"ஸார்...என் மனைவியைப் பார்த்தீங்களா.. இந்தப்பக்கம் வந்தாங்களா?" என்றான்.

"நான் கால்மணி நேரமா இங்கே தான் நின்றிருக்கிறேன், ராகவன்!.. வந்ததாத் தெரியலையே?.. என்னப்பா.. என்ன விஷயம்?"

"தி.நகர் போயிருந்தோம், ஸார்.. பஸ்ஸில்; 11-G. போத்தீஸ் எதிரில் கூட்ட நெரிசலில் பஸ் நின்னது. நாங்கள் ரங்கநாதன் தெரு போகவேண்டியிருந்தது. அங்கே இறங்க எண்ணி, அவளையும் இறங்கச் சொல்லிவிட்டு, நின்றிருந்த பஸ்ஸிலிருந்து முதலில் நான் இறங்கி விட்டேன். பத்மா இறங்க முற்படுகையில் சட்டென்று பஸ் கிளம்பி விட்டது."


"அடடா.."

"நான் பஸ் பின்னாடியே ஓடினேன். கூட்ட நெரிசலில் வேகமாக ஓட முடியவில்லை. சரி, பனகல்பார்க் நிறுத்தத்தில் இறங்கி நின்றிருப்பாள் என்று வேகமாகப் போய் அங்கே தேடினேன். அங்கே காணோம். 'பனகல் பார்க்கில் பத்மா இறங்கியிருப்பாளோ இல்லையோ?' என்று மனம் பதைபதைத்தது.


"அங்கே தானப்பா இறங்கியிருக்கணும்... இல்லை, உன்னைத்தேடி நீ இறங்கின இடத்துக்கு அவங்க வந்துட்டாங்களோ?"


"அப்படித்தான் ஸார், நானும் நினைத்து மறுபடியும் துரைசாமி சப்-வே பக்கம் வந்து தேடினேன். இப்படியே ஒரு மணி நேரம்; வேர்த்து விறுவிறுத்து பைத்தியம் பிடிக்காத குறைதான்."

"உன்னைக் காணோம் என்றவுடன் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்திருப் பாங்களோ?"


"அவள் கையிலே காசு இல்லையே, சார்! எத்தனை தடவை சொல்லிப் பார்த்து விட்டேன்! கேட்பதே இல்லை... வெளிலே கிளம்பினா, பைசா காசு தன்னிடம்
வைத்துக் கொள்ள மாட்டாள். நீங்க இருக்கறச்சே எங்கிட்டே வேறே எதுக்கு?" என்பாள்.

"காசில்லாவிட்டாலும் ஆட்டோவில் இங்கே வந்துவிட்டால் யார் கிட்டேயாவது வாங்கிக் கொடுத்திட்டால் போச்சு.. அப்படித்தான் செய்வாங்க, பாரு!.. '

"பத்மா புத்திலே அப்படிச் செய்யணும்னு படணுமே, ஸார்.. அப்படிப்பட்டால், தேங்ஸ் காட்."

"இப்போத் தான், இந்த மொபைலோட அவசியம் தெரியறது, ராகவன்.. நீங்க செல் வைச்சிக்கறது இல்லையா?"

"இல்லையே, ஸார்..."

நான் பரிதாபமாக ராகவனைப் பார்த்தேன்.

"ஒண்ணு செய், ராகவன்.. உடனே வீட்டுக்க்குப் போ.. எங்கேயிருந்தாவது உங்க லேண்ட் லைனுக்கு அவங்க போன் பண்ணலாம்."


"ஓ.. இது எனக்குத் தோணாமல் போச்சே!.. தேங்ஸ், ஸார்.." என்று லிஃப்ட் பக்கம் ஓடினான், ராகவன்.


அவன் போய் ஒரு நிமிடம் கூட இருக்காது.. ராகவனின் மனைவி பத்மா வேகவேகமாக சோர்வு தட்டிய களைப்புடன் தெரு முனையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் தான் என் மனசில் நிம்மதி பிறந்தது.

என்னைத் தாண்டிச் செல்கையில், "அவரைப் பார்த்தீர்களா?" என்று தான் கேட்பார்கள் என்று தெரியும். அதற்குக் கூட இடம் வைக்காமல், "ராகவன் இப்போத்தான் வந்தார். உங்க வீட்டுக்குத்தான் போயிருக்கிறார். போங்கள்!" என்றேன்.


"அப்படியா, ஸார்! " என்று பெருமூச்சுடன் முகம் மலர்ந்தார் அவர். அவர் லிப்ஃடிற்குச் சென்றது பறக்கிற மாதிரி தான் எனக்குத் தோன்றியது.


மாடியில், ஒருவரை ஒருவர் பார்த்ததும், "அம்மாடி___" என்று இருவரும் வேண்டிக்கொண்ட தெய்வங்களுக்கு நன்றி சொல்லியிருப்பார்கள்.


இப்படித்தான் ஆயிற்று ஆட்டநந்தி--ஆதிமந்தி கதையும்.

ஆடற்கலையில் தேர்ந்த வட்ட விழி அழகி, ஆதிமந்தி. இவள் கணவன் ஆட்டநந்தியும் ஓர் ஆட்டக்காரன் தான்! கச்சும் கழலும் அணிந்து திருவிழாக்களில் இவர்கள் இருவரும் கூத்தாடுகையில் கூட்டமெலாம் மனம் சரிந்து கூத்தாடும்.

காவிரியில் புதுப்புனல் புறப்பட்டு வருகிறதென்று ஜனமெல்லாம் சாய்ந்திருதது. ஆட்டம், பாட்டம், கூத்து, கொண்டாட்டம் என்று எங்கணும் கேளிக்கை உணர்வு பூத்துக்குலுங்கும். சோழநாட்டினருக்கு தாய், தெய்வம் எல்லாம் காவிரிதான்.. அவள் கருணையால் தான் முப்போகத்தை முழுசாகக் காணமுடிகிறது. புனலாய்ப் பெருகி, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பவள் அவள். அந்த தெய்வத்தின் தரிசனம் காண கரையெல்லாம் மனிதத் தலைகளாக மண்டியிருக்கும். அன்னைக்குப் பொங்கலிட்டு, நிரில் அகல்விளக்கு ஏற்றி விட்டு, விழாக்கோலம் மகிழ்ச்சியில் கொப்பளித்துக் கொண்டிருந்தது.


ஆதிமந்தியும் புதுப்புனல் காணப் பொன்மகளெனப் புறப்பட்டு வந்திருந்தாள். தனியாக இல்லை, தன் ஆசைக் கணவனின் கைகோர்த்துத்தான்.


பெரும் பிரவாகமாய், காவிரி நொப்பும் நுரையுமாய் துள்ளிக்குதித்து வருகையில் நெஞ்சமெலாம் கூத்தாடுகிறது. முதலில் கரை தாண்டி இறங்கிக் கால் நனைத்து, அதற்குப் பின் மடி வரை--கழுத்து வரை என்று நீரில் நனைந்து எழுந்து தலை கோதிப் பின் காதலன் கைபிடித்து மூழ்கி மேலெழும்பி, கோர்த்த கை நீக்கி, ஒருவரை ஒருவர் விலகிப் பின் தன்னவன் நெஞ்சில் தலைசாய்த்து... புனலாடலில் தான் எத்தனை வகை?.. அத்தனையையும் அனுபவித்து விடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்ட பொழுதுதான் அது நடந்தது.

பெரிதாக நெருங்கி வந்த நீர்ச்சுழலொன்று வட்டமடித்து எழும்பி குனிந்திருந்த ஆட்டநந்தியின் முகத்தில் மோதி, மணலில் அவன் ஊன்றியிருந்த காலைச் சரித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக வேகச்சுழலில் நழுவி நீரின் போக்குக்குப் போகத் தலைப்பட்டான் அவன். பக்கலில் நீராடி அடுத்த விளையாட்டில் அவனுக்குப் போக்குக்காட்ட காத்திருந்த ஆதிமந்தியை எப்பொழுது, எப்படித் தவறவிட்டோமென்று அவனுக்குத் தெரியவில்லை.

ஆதிமந்திக்கும் இதே நிலை தான். ஆருயிர் அழகன் எங்கே, எங்கே என்று அலமந்து அங்கேயும் இங்கேயும் தேடுகிறாள்! எங்கே தேடியும் காணாது கண் கலங்குகிறாள், பேதை!

நினைக்கவே துக்கம் பொத்துக்கொண்டு பொலபொலவென்று கண்ணீர் அவள் கன்னம் நனைக்கிறது; கன்னம் நனைந்த சூட்டில் கன்னிப் போகிறாள், கன்னி! இவனை இழக்கத் தானா அத்தனை சந்தோஷத்தோடு நீராட வந்தோம் என்று துடிக்கிறாள்.. தேடித்தேடி எங்கேயும் அவன் காணாத துக்கம் கால்களைத் துவளச் செய்கிறது. பெருங்குரலெடுத்துக் கேவுகிறாள், கேளுங்கள்:

மள்ளர் குழீய விழவினானும்
மகளிர் தழீஇய நுணங்கை யானும்!
யாண்டும் காணேன்! மாண் தக்கோனை!
யானும் ஓர் ஆடுகள மகளே! என்கை,
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே!



(குறுந்தொகை: 31)


அவனைப் பார்த்ததாக யாராவது சொல்ல மாட்டார்களா என்று நெஞ்சின் ஏக்கம் நெடுமூச்சாய் வெளிப்படுகிறது.. அந்த நேரத்தில் அவள் தோழி மருதி என்பாள், அவளைப் பார்த்து ஓடி வருகிறாள்.. "இங்கே ஆட்டநந்தி உன்னைக் காணோமென்று தேடிக்கொண்டிருக்க, நீ எங்கே போனாய்?" என்று அவள் கேட்பது கூடக் காதில் விழாமல், "என்னவரைப் பார்த்தாயா?" என்று தடுமாறுகிறாள்.

"இதோ!.." என்று அவள் காட்ட, ஆட்டநந்தியைக் கண்டு சந்தோஷத்தில் அவள் கன்னம் மீண்டும் நனைகிறது; இந்த நனைதல் சூடாய் இல்லை; சுகமாய் இருக்கிறது.. அந்த சுகத்தோடு வெட்கமும் சேர்ந்து கன்னக்கதுப்புகள் சிவக்கின்றன...
*****

அன்பு, பாசம், நேசம், காதல் என்று என்ன பெயரிட்டு வேணுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது சங்ககாலமாயிருந்தால் இருந்தால் என்ன? இந்த இருபதாம் நூற்றாண்டாய் இருந்தால் தான் என்ன?.. இடையில் எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடிப் போயினும், ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் ஆழ்ந்த பிரேமையில் எந்த மாறுதலும் இல்லை.

வெறும் அடையாளச் சின்னங்களான நபர்களின் பெயர்கள் வேண்டுமானால் மாறலாம்; அன்றைய ஆட்டநந்தி, ஆதிமந்தி, அவர்களைப் போன்றோர் இன்றைய இராகவனாகவும், பத்மாவாகவும், இன்னும் பலராகவும்.. மனிதர் கொள்ளும் அடிப்படை உணர்வுகளுக்கு மாற்றமே இல்லை. அவை காலங்கடந்தும் சாஸ்வதமாய் நிற்பவை.

6 comments:

dondu(#11168674346665545885) said...

ஆட்டநந்தி--ஆதிமந்தி கதையை நான் வேறு வெர்ஷனில் கேட்டிருக்கிறேன். அதாவது ஆட்டநந்தியை காவிரி அடித்து கொண்டு போக ஆதிமந்தி அவனைத் தேடி ”கடலலையே என் கணவன் எங்கே, காவிரியே என் கணவன் எங்கே” என அரற்றியவாறு ஓடி வருகிறாள். இதை நான் ரேடியோ நாடகத்தில் ஐம்பதுகளில் கேட்டுள்ளேன். பிறகு ஆட்டநந்தியை ஒரு பெண் காப்பாற்றி என்றெல்லாம் கதை போக்கிறது.

அன்புட,
டோண்டு ராகவன்

ஜீவி said...

dondu(#11168674346665545885) said...
//ஆட்டநந்தி--ஆதிமந்தி கதையை நான் வேறு வெர்ஷனில் கேட்டிருக்கிறேன். அதாவது ஆட்டநந்தியை காவிரி அடித்து கொண்டு போக ஆதிமந்தி அவனைத் தேடி ”கடலலையே என் கணவன் எங்கே, காவிரியே என் கணவன் எங்கே” என அரற்றியவாறு ஓடி வருகிறாள். இதை நான் ரேடியோ நாடகத்தில் ஐம்பதுகளில் கேட்டுள்ளேன். பிறகு ஆட்டநந்தியை ஒரு பெண் காப்பாற்றி என்றெல்லாம் கதை போக்கிறது.

அன்புட,
டோண்டு ராகவன் //

ஆமாம், இந்த ஆட்டநந்தி-ஆதிமந்தி
கதையை வெவ்வேறு விதத்தில் பலர் சொல்லியிருக்கின்றனர். கண்ணதாசன் கூட காவியமாக வடித்திருக்கிறார்.
ஆதிமந்தி சோழன் கரிகால்வளவன் மகள் என்று ஒரு சாரார் கூற்று.
எனக்கென்னவோ அது சரியாகத் தெரியவில்லை. ஆதலாலேயே சாதாரண குடிமக்களில் ஒருவராக இவர்களைக் காட்டியிருக்கிறேன்.
ரேடியோ நாடகமாகக் கேட்ட நினைவு எனக்கும் இருக்கிறது.

திருவாளர்கள் சுகி சுப்ரமணியன், கூத்தபிரான் போன்றோர் ரேடியோவில் இருந்த காலம் அதன் பொற்காலம்.
சுகி காலத்தில் நானும் வானொலிக்காக நாடகங்கள் எழுதியது உண்டு. சென்னை வானொலியில் ஒலிபரப்பாகிப் பின் அந்தமான் பகுதிக்காகத் தனியே சிறப்பான நாடகங்கள் ஒலிபரப்பாகும்.
நல்ல நினைவுகளை ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்.. நன்றி.

கவிநயா said...

//மனிதர் கொள்ளும் அடிப்படை உணர்வுகளுக்கு மாற்றமே இல்லை. அவை காலங்கடந்தும் சாஸ்வதமாய் நிற்பவை.//

உண்மைதான் ஐயா. அழகாய் எடுத்துக் காட்டி இயம்பியிருக்கிறீர்கள் :)

ஜீவி said...

கவிநயா said...
//மனிதர் கொள்ளும் அடிப்படை உணர்வுகளுக்கு மாற்றமே இல்லை. அவை காலங்கடந்தும் சாஸ்வதமாய் நிற்பவை.//

//உண்மைதான் ஐயா. அழகாய் எடுத்துக் காட்டி இயம்பியிருக்கிறீர்கள் :)//

எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி, கவிநயா!

கிருத்திகா said...

ஆட்டநந்தி, ஆதிமந்தி கூட எங்களையும் காவிரியில் நனைய வைத்துவிட்டீர்கள்... நான் கூட இந்தக்கதையை வேறு வடிவத்தில் படித்த ஞாபகம்.. ஆனால் இதுவும் நன்றாகத்தான் உள்ளது....

ஜீவி said...

கிருத்திகா said...

//ஆட்டநந்தி, ஆதிமந்தி கூட எங்களையும் காவிரியில் நனைய வைத்துவிட்டீர்கள்... நான் கூட இந்தக்கதையை வேறு வடிவத்தில் படித்த ஞாபகம்.. ஆனால் இதுவும் நன்றாகத்தான் உள்ளது....//

ஆமாம், கிருத்திகா! டோண்டு சார் சொல்லியிருப்பது போல இந்தக் கதைக்கு நிறைய வெர்ஷன்கள் இருக்கின்றன. ஆனால், அவள் மன்னன் மகளாக இருந்திருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
பாராட்டுக்கு மிக்க நன்றி.