மின் நூல்

Monday, November 21, 2016

விகடனில் புதிய வரலாற்றுத் தொடர்


 காவல்கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு  பெற்ற எழுத்தாளர்  சு. வெங்கடேசனின் புதிய வரலாற்றுத் தொடர்கதை  சமீபத்தில்  ஆனந்த விகடன்  இதழில் துவங்கியுள்ளது.  

‘வீரயுக நாயகன் வேள் பாரி’ என்றுத் தலைப்பிட்டிருப்பதால்  பரம்பு மலையை ஆண்ட  கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்றவரான பாரி வள்ளலை  நாயகனாகக் கொண்ட நாவல் என்று தெரிகிறது.


‘பாணர்களின் நாயகன்’ என்றுத் தலைப்பிட்ட  அத்தியாயத்தின் தொடக்க வரியே இப்படி ஆரம்பிக்கிறது


இது சுமார் முன்னூறு ஆண்டுக்காலக் கதை.  

அப்போது வடவேங்கடம், தென் குமரி என்று தமிழ் நிலத்திற்கு எல்லையோ, பெயரோ கூட உருவாகிவிடவில்லை.  


அடர்ந்த வனத்தில், ஆற்றுப்படுகையில், வண்டல் பூமியில், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என வெவ்வேறு வகையான நிலங்கள் தோறும் இனக்குழுக்காளாக சேர்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குல முறைப்படியான வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர்.  அரசோ, அரசனோ உருவாகிவிடவில்லை.  குலத்தலைவன் மட்டுமே இருந்தான்.  அவனே குலங்களை வழி நடத்திக் கொண்டிருந்தான்.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்களோடு செழித்திருந்தன.   இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது...  வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு  தின்று கொண்டிருந்த போது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்க வைத்து இறைச்சியை அதில் வேக வைத்தனர்...


----என்று ஆதிமனித குகை வாழ்க்கை  பழைய கற்காலத்திலிருந்து ஆரம்பித்து,


குலத்தலைவர்களும் சிற்றரசர்களும் பாணர் சமூகத்தை அரவணைத்து அள்ளித் தந்தனர். அவர்களின் ஆற்றலையும் வள்ளல் தன்மையையும் பாணர்கள் விடாமல் பாடினர்.


இப்போது வள்ளல்களில் தலைநாயகனாக பறம்பு நாட்டை ஆளும் வேள்பாரி இருந்தான்.


---- என்று பாரிவள்ளல் 
 காலத்திற்கு  ஆசிரியர் வருகிறார்.

பல  தடவைகள்  திருப்பித் திருப்பி வாசித்தும் ஆசிரியர் குறிப்பிடும் அந்த முன்னூறு ஆண்டுக் கதைக் காலம்  எதுவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

நம் பதிவர் குடும்பத்தில் வரலாற்று நூல்களை வாசிப்போர் எக்கச்சக்கம்.


தெரிந்தவர்கள்,  புரிந்தவர்கள் பின்னூட்டமிட்டு என் வாசிப்பு ரசனைக்கு உதவலாம்.



து  லா.ச.ராவின்  நூற்றாண்டு.

லா.ச.ரா.  அம்பாள் உபாசகர்.   அம்பாளில் தாயார் தரிசனம்.   அவரைப் பொறுத்தமட்டில் அத்தனையுமே சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.  சகுந்தலை,  அபிதா, தரிசினி,  ஜனனி, தயா, அஞ்சலி,  கங்கா என்று வித்விதமான நாமங்களில் வர்ணக் கோலங்கள்.   

அடிப்படையில் நான் செளந்தரிய உபாசகன் என்று லா.ச.ரா.வே சொல்லியிருக்கிறார்.  அவர் எழுத்தின் ஆழ்ந்த வாசிப்பும் ஏதோ சக்தி பூஜையை ஆரம்பித்து முடித்தது போல இருக்கும்.  அவர் கதைகளின் வாசிப்பின் ஊடே உள்முக தரிசனமாய்  மீண்டும் மீண்டும் ஒருவித லய சுத்தத்துடன் புரண்டு வரும் வார்த்தைகளுக்கும்  மந்திர உச்சாடங்களுக்கும் வேறுபாடு காண முடியாத நெருக்கத்தில் இருக்கும்.  

ல.ச.ரா.விற்கு  சடங்களிலோ, சம்பிரதாயங்களிலோ துளியும் 
 நம்பிக்கை இருந்ததில்லை என்று அவர் துணைவியாரே சொன்னதாக சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில்  படித்தது ரொம்ப நாட்களாக உறுத்தலாக இருந்தது.  ஏனென்றால்  சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்  சுற்றிச் சுற்றி நெய்யப்பட்டதாகவே லா.ச.ரா.வின் எழுத்து இருந்தது..  குடும்ப வட்டத்தை விட்டு வெளிவராத எழுத்தில் பூஜைகள்,  குத்து விளக்கு, தீபச்சுடர், அதன் குதியாட்டம்,  மந்திர உச்சாடனங்கள் போன்ற வார்த்தைத் தெரிப்புகள் என்று பக்கத்திற்குப் பக்கம் பின்னலிடப்பட்டிருந்தன.   சடங்குகளில் அவருக்குத் துளியும்  நம்பிக்கை இல்லை என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.   அப்படி இருக்குமேயானால் தனக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லாத ஒன்றை வாழ்நாள் முழுதும் கதைக்காக கதை பண்ணினவராய் ஆகிப்போவார். .   லா.ச.ராவின் எழுத்துக்கள் அவாது உணர்வில் புடம்போடப்பட்டு விதிர்விதிர்த்து வார்த்தைகளானவை.   அதனால் அப்படி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு பேட்டி என்பதினால்  பேட்டி எடுத்தவரின் புரிதலுக்கேற்ப வார்த்தைகள் மாறுபடுவதற்கு

வழியிருக்கிறது.  நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று பேட்டி வெளிவந்த  பிறகு  பேட்டி கொடுத்தவர் சொன்ன உதாரணங்களையும் நாம் நிரம்பவே பார்த்து விட்டோம்.  

'கல்கி'  நவம்பர் 6  இதழில்  லா.ச.ரா.வின்  புதல்வர் சப்தரிஷி  தன் தந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார்.  

வாலி  தலைமையில் ல.ச.ரா.வுக்கு ஒரு பாராட்டுக்கூட்டம்  நடந்ததாம்.   அப்போ ஒருத்தர் லா.ச.ரா.வைப் பார்த்து கேட்டாராம்.

"நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?'

"என்னால் எழுதாம இருக்க முடியலே.   அதனாலே எழுதறேன்.  நான்  மெதுவாக எழுதுபவன் தான்.  ஆனால் எழுதிக் கொண்டேயிருப்பவன்.  தெனம் சாதகம் பண்ணிண்டே இருக்கணும்.."

ஆமாம்.  லா.ச.ரா.  மிகவும் மென்மையானவர் தான்.  இப்படியெல்லாம் அச்சுப்பிச்சென்று கேள்வி கேட்பவர்கள் நாணும்படி  பதில் சொல்ல லாயக்கானவர் ஜெயகாந்தன் தான்.  

 'நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?' என்று ஜெயகாந்தனிடம் யாராவது கேட்டிருந்தால் சுரீரென்று  பதில்   வந்திருக்கும் என்று அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப  நினைத்துக் கொண்டே மேலே படித்தபோது எழுதுவது பற்றி லா.ச.ராவே ஜேகேயிடம் கேட்ட ஒரு சம்பவம் பற்றி சப்தரிஷி சொல்கிறார்.

கலைஞன் பதிப்பகம்  லா.ச.ரா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ரா.வுக்கு ரீடர் வெளியிட்ட விழாவில்  ஜெயகாந்தனிடம்  ல..ச.ரா.  கேட்டாராம். "என்னப்பா, இப்பல்லாம் உன் எழுத்தைக்  காண முடியறதில்லே?"

"எல்லாம் எழுதி முடிச்சாச்சு  லா.ச.ரா." என்றாராம் ஜே.கே.                

"என்ன நீ இப்படிச் சொல்றே? சரஸ்வதியே இன்னும் புஸ்தகத்தைக் கீழே போடாமே வெச்சிருக்காளேப்பா.." 

ஜெயகாந்தன் வாஞ்சையுடன் லா.ச.ரா.வின் கைகள் மேல் கைவைத்து, "வாஸ்தவம் தான்" என்றாராம்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள்  என்ற படைப்பிலக்கிய பிர்மாக்களிடம்  ப்ரேமை கொண்டவர்கள் யார் என்று கேட்டால்,  சட்டென்று அவர்களுக்கென்று அமைந்து போகும் வாசகர்கள் தான் என்று பதில் சொல்லி விடலாம்.

பத்திரிகைகளுக்கு  அந்தப் படைப்பிலக்கிய   ஆளூமைகளுடன்  அவர்கள் எழுத்து அந்தந்த பத்திரிகைகளில்  வெளிவரும்  காலத்தில் ஏற்படும் வியாபாரத்  தொடர்பாக இருக்கலாம். அதைத் தாண்டி தம் எழுத்தால் பத்திரிகையின்  சர்க்குலேஷனை உயர்த்திய,  அந்தந்த பத்திரிகைகளுக்கென்று அமைந்து  போன எழுத்தாளர்களை பத்திரிகைகளும் அவ்வளவாக நினைவில் வைத்துக்  கொண்டிருப்பதில்லை.   தம் பத்திரிகையோடு நெருக்கமாக  சம்பந்தப்பட்ட அமரான எழுத்தாளர்களின் நினைவு தினங்களில் அவர் புகைப்படம் போட்டு அவர் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிட்டு நினைவு கொள்ளலாம்.   இப்படிச் செய்வது எழுத்துத் தொடர்புள்ள  இந்தத் தலைமுறைக்கு அந்தத் தலைமுறையுடான ஒரு உறவுத் தொடர்பாகவும் அமையும்.   ஆனந்தவிகடன் என்றால் தேவனும்,  குமுதம் என்றால் ரா.கி.ரங்கராஜனும் நினைவுக்கு வருவது வாசகர்களுக்குத் தான் போலும்.  

பெரும்பாலான படைப்பாளிகளின் குடும்பத்தினருக்கு  அப்பா, தாத்தா, கணவன் என்று அந்தப் படைப்பாளியிடம் கொண்ட குடும்ப  உறவைத் தான் முக்கியமாக உணர்கிறார்கள். சில எழுத்தாள குடும்பங்களில் அலுவலகத்திற்குப் போய் சம்பாதிப்பது போல  எழுதுவதை ஒரு உத்தியோகமாக எண்ணுகிறார்கள்.  சம்பாதிப்பதற்கான ஒரு வழி இது என்று சில எழுத்தாளர்களே தங்கள் எழுத்தைப் பற்றி  நினைக்கும் பொழுது இதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.     பிரபல சில எழுத்தாளர்களின் குடும்பத்தினர் அவர் எழுதிய எதையையும் படித்ததில்லை என்பது ஒன்றும் பிரம்ம ரகசியமில்லை.  சிலர் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.   

இதையெல்லாம் பார்க்கும்  அவர்களின் அத்யந்த  வாசகர்களுக்கு மனம்  வெறுத்துப் போகலாம்.  புத்தகம்,  வாசிப்பு,  அவை பற்றிய விமர்கசனங்கள்,  எண்ணங்கள் என்று தாம் தான்  புத்தி பேதலித்துத் திரிகிறோமொ என்ற எண்ணம் கூட வரலாம்.

ஆனால் அவையெல்லாம் ஷணநேர மயக்கங்கள்.  வாசிப்பை நேசிக்கும் எவர்க்கும் அந்த வாசிப்புப் பழக்கத்திலிருந்து விலகுவது அவ்வலவு லேசான காரியமில்லை.

போதைப் பழக்கங்களிலிருந்து   விடுபடுதல் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று சொல்வார்கள்.   வாசிப்பை நேசிப்பதும் அது போல ஒன்று தான்.   வாசிப்பு ஆரோக்கியமான ஒரு போதைப் பழக்கம் என்று கூட செல்லமாக அதன் மேல் மேலான காதல் கொள்ளலாம்.



விகடனுக்கும்  கல்கிக்கும்  நன்றி. 
புகைப்படங்கள் நல்கிய நண்பர்களுக்கும் நன்றி.


Sunday, November 13, 2016

இளைய ராஜாவும் அசோகமித்திரனும்......


களிர் இதழ்களில்  'அவள் விகடனு'க்கு என்று எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு.  அவள் விகடன் 15-11-16  இதழ்   அந்த தனித்துவத்தை தெளிவாகவே சொன்னது.

பெண்கள் பொதுவாக மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவு செய்யும் பொழுது கணவர் பெயர் சேர்த்தோ,  அல்லது அவரது  பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாகக் கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள்   கல்வி மற்றும்  பிறப்புச் சான்றிதழ்களிலோ  தந்தையின் பெயரே இன்ஷியலாக இருக்கும் பொழுது அலுவல்  ரீதியான  குழப்பங்கள் ஏற்படுகின்றன' ஆரம்பித்து உருப்படியான ஒரு விவாதத்தை கட்டுரை முன் வைக்கிறது.                                                                                                                

வழக்கறிஞர் அருண்மொழி அவர்களும்  பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா அவர்களும்  தங்கள் கருத்துக்களைச் சொல்லி  இந்த விவாதத்தைச் செழுமைபடுத்தியிருக்கிறார்கள்.   வாசிக்க வேண்டிய  கட்டுரை.

சில ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களின்  பிறந்த ஊரையும் (பெரும்பாலும் சொந்த ஊர்)   இன்ஷியலின் முதல் எழுத்தாகச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் நெடுங்காலமாக  உண்டு.  இது ஊர்ப்பாச விஷயம்.  பெற்றெடுத்தத் தந்தை தாய்க்கு இணையாக  பிறந்த ஊரையும் மறக்காமல் தங்கள் பெயருடன் சேர்த்துக்  கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பற்றி இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இருவருமே குறிப்பாகக் கூட எதுவும் சொல்லவில்லை என்பது ஒரு உபரித் தகவல்.

தே   'அவள் விக்டன்'  இதழில் 'மை டியர் சேமிப்புப்  புலிகளே'  என்று பா.விஜயலெஷ்மி  எழுதும்  தொடர்.   பெண்கள் மத்தியில் சேமிப்புப் பழகத்தை ஊக்குவிக்கும் அற்புதமான தொடர்.

'முதலில் வீட்டுக்கான மாத பட்ஜெட் போடுவதை பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.  மளிகை சாமான் தொடங்கி,   மருந்துப் பொருட்கள் வரை விலை எக்கச்சக்கமாம உயர்ந்திருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த காலகட்டம் இது'  என்று ஆரம்பித்து  'எதிர்காலத்தில் வாங்கும் சம்பளத்தை விட செலவுகள் அதிகரிக்கப்போகும் அபாயகரமான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்' என்று எச்சரிக்கிறார்.  இனி அன்றாட நிதி நிர்வாகம் பெண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

'ஜன்னல்'  பத்திரிகையின் தீபாவளி இதழ் பிரமாதம்.

பத்தோடு பதினொன்றாக 'ஜன்னல்' பத்திரிகையையும் ஒரு சினிமாப் பத்திரிகையாக ஆக்கிவிடாமல் தடுத்தாண்டாண்டு கொண்டிருக்கும் சில சங்கதிகளைச் சொல்கிறேன்.  வரிசையாக 'ஜன்னல்' புராணம் தான்.

ராஜ்சிவா எழுதும்  'அவர்கள்' என்னும் அறிவியல் தொடர் பற்றி இதற்கு முன்னால் இதே பகுதியில் குறிப்பிட்ட  ஞாபகம்.   அந்தத் தொடர் 21-வது அத்தியாயமாக இந்த இதழிலும் தொடர்கிறது.

ராஜ்சிவா வித்தியாசமாக எழுதுகிறார்.  அறிவியல் பாணி சமாச்சாரங்களை கடந்த அரை  நூற்றாண்டுக்கும் மேலாக சுஜாதா  சொல்லேர் உழவனாய் உழுது தள்ளியிருக்கிறார்.   இந்த விஷயத்தில் அவர் பாணியை தவிர்த்து எழுதுவது என்பதே பெரிய விஷயம்.   ராஜ்சிவா அந்தக் காரியத்தை திறம்பட செய்கிறார்  என்பதற்காக சொல்ல வந்தேன்.

இதுவரை அறிவியல் கண்டுபிடித்தகற்றில் அதி வேகமாகச் செல்வது ஒளி தானாம்.  ஒரு செக்கனுக்கு மூன்று லட்சம் கிமீ .  கற்பனைக்கே கட்டுப்படாத வேகம்.   வேகம் சரி,  இந்த ஒளி நகர்தலும் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் தானே?..  ஒரு  மீட்டர் கடக்க மூன்று நானோ செக்கன் நேரமாம்.

தூரத்தில்  ஒரு  மீட்டர் தூரத்தில் ஒரு பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அந்தப்  பொருளிலிருந்து ஒளி உங்களை வந்து அடையும் ஆகும் நேரம்  இந்த மூன்று நானோ செக்கனாம்.  ஒரு நானோ செக்கன் என்பது ஒரு செக்கனின் பில்லியன் மடங்கில் ஒரு பகுதியாம்.

ஏற்கனவே  நான் இந்த கணக்கு சமாச்சாரத்தில்  கொஞ்சம்  வீக். இருந்தாலும்
என்ன சொல்கிறார் என்பது தெளிவாகப் புரிய நானும் சில கணக்குக்களைப் போட்டுப் பார்த்தேன்.  இந்த மாதிரியான பயிற்சிகள் தான்  ராஜ்சிவாவின் இந்தத் தொடரை ஆர்வத்துடன்  படிக்கத் தூண்டுகோலாக இருக்கிறது என்று அடித்துச் சொல்வேன்.
.
ழுத்தாளர் சாரு நிவேதிதா என்னைக்குமே  எதைச்சொன்னாலும்     வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.   வழவழவுக்கு இடமே இல்லை;  தெளிவா இருக்கும்.

பாப் டிலனுக்கு இலக்கிய நோபல் பரிசு கொடுத்திருக்கக் கூடாது, உவர் ஆனர் என்று  தன் தரப்பு  நியாயத்தைச் சொல்லியிருக்கிறார்.

பாப் டிலர் நோபல் பரிசுக்கு உரியார் தான்.  அமெருக்க கலாச்சார உருவாக்கத்தில் அவர் பணி மகத்தானது.   அவர் ஒரு நல்ல பாடகர்; பாடலாசிரியர் மட்டுமே. அதனால்  இலக்கியத்திற்கும்  அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'  என்பது சாருவின் வாதம்.  பாடல் இலகியமாகாதா என்றால் ஆகாது என்று ஆணித்தரமாக மறுக்கிறார்.

ஒரு காலத்தில்'வைரமுத்து பாடல்களுக்கு நோபல் பரிசு கிடைக்கலாம்' என்று பகடியாக எழுதியிருந்தேன்.  இப்போது பார்த்தால் அது நடந்து விடும் போலிருக்கிறது' என்று நம்மை முறுவலிக்க வைக்கிறார்.

"ஒரு உதாரணம் சொல்கிறேன்.." என்கிறார் சாரு. "அசோகமித்திரனும் இளையராஜாவும் எதிர் எதிர் வீடு.  இளையராஜா தமிழரின் இசைக் கடவுள்; அசோகமித்திரனை  எத்தனை பேருக்குத்  தெரியும்?  சொல்லுங்கள்.  இந்த நிலையில்,  இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருதை, இளையராஜா எழுதிய சினிமா பாடல்களுக்காகத் தருகிறோம் என்று சொன்னால் நாம் என்ன செய்ய முடியும்?"  என்கிறார்.

"பாடல் இலக்கியமாகாதா?.,. பாரதியின் பாடல்கள் இலக்கியமில்லையா?-- என்ற கேள்வி வரும் பொழுது, "தர்க்க ரீதியாக இந்தக் கேள்வி சரிதான்.." என்று ஒப்புக்கொள்கிறார் சாரு.  "ஆனால் நான் சொல்வது அறம் சம்பந்தப்பட்டது.  சினிமா பாடல்,  மேடைப் பாடல், சினிமா வசனம் என்று எல்லாவற்றையும் இலக்கியத்தில் அடக்கினால், அதற்குப் பிறகு இலக்கியத்தை சீந்த யாருமே இருக்க மாட்டார்கள்.." என்று  அவர் சொல்லும் பொழுது அவர் பக்க நியாயம் புரிகிற மாதிரியும் இருக்கிறது.

டுத்து ஜெமோ.  (இப்போவெல்லாம்  ஜெமோவை பற்றி நீங்கள் ஏதாவது எழுதாமல் இருப்பதில்லை என்ற முணுமுணுப்பைத் தாண்டி....)

ஜன்னல் இதழில் 'தெய்வங்கள்.. தேவர்கள்.. பேய்கள்..' என்ற வினோத தலைப்பில் ஜெயமோகன்  ஒரு தொடர் எழுதுகிறார்.

பெரும்பாலும் நாட்டார் கதைகள்.  இந்த இதழில் குலசேகரப் பெருமாள் பற்றியது.  குலசேகரப் பெருமாள் யார் என்றால்   சுருக்கமாகவே சொல்லி விடுகிறேனே!  சேரன் செங்குட்டுவன் வழித்தோன்றல்களாக வந்தவர்கள் சேரமான் பெருமாள் அரசர்கள்.  இவர்களில் கடைசிப் பெருமாள், குலசேகரப் பெருமாள்.  வடக்கே கொடுங்கல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவராம் இவர்.  கொடுங்கல்லூரை போர்ச்சுக்கீசியர் தாக்கிய பொழுது, அப்படியே மொத்த தன் கருவூலச் செல்வங்களையும் காப்பாற்றிக் கொண்டு தென் சேர நாட்டிற்கு வந்து விட்டாரம்.   இதான் தொடரும் கதையின் அல்லது வரலாற்று நிகழ்வின் ஆதாரப் புள்ளி.

அப்புறம்  திருவனந்தபுரம் கோயிலின் ரகசிய அறை,  இரணியல் அரண்மனையின்  இடிபாடுகள்,  பள்ளியறை யக் ஷி,  மீனாட்சி பிள்ளை அவள் மகள் காமாட்சி பிள்ளை,  கல்குளம் உடையார்,  அச்சிக்குறும்பு, தினம் தினம் பள்ளியறையில் காணப்படும் பொன் நாணயம் என்று நிறைய சுவாரஸ்ய விஷயங்கள் உண்டு.

ண்ணதாசன் சிறுகதை ஒன்று இந்த ஜன்னல் இதழில்.   'ஒரு கனவு,
சொப்பனம்..'  என்பது கதையின் பெயர்.  வழக்கமான வண்ணதாசன் சிறுக்தைகள் எப்படி இருக்குமோ அதற்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் இந்தச் சிறுகதையும் இருப்பதே பங்கமாக் தெரிகிறது.   மனசில் பூக்கும் எண்ணங்களை  வெளிப்படுத்தலில் கூட   அப்பப்போ மாற்றம் வேண்டாமா,  கல்யாண்ஜி, சார்?..   வண்ணதாசன் என்றால் இப்படித் தான் எழுதுவார் என்று பழகிப்போன வாசிப்பாக ஆகிவிடக் கூடாதல்லவா?..    இதெல்லாம் நம் ஆதங்கம் தானே தவிர,  கதை நிகழ்வுகளை நம் கண் முன்னால் காட்சிப்படுத்தும் அவர் திறமை என்றைக்குமே 'ஓகோ' ரகம் தான்.    இந்தக் கதை ருக்கு அக்கா மனசில்  நிற்கிறார்.

ருத்துவர் கண்ணன் அவர்களின்  'சுரக்கும் சூட்சுமங்கள்'  பற்றிச் சொல்லாவிட்டால் பாவம்.    தமிழில் இதுவரை இந்த  தலைப்பில் எந்த மருத்துவக்கட்டுரையும் எந்தப் பத்திரிகையிலும் வெளிவந்ததாக நினைவில்லை.   இந்தத் தொடரைப் பிரசுரிப்பதின் மூலம் 'ஜன்னல்'  பெரும் பெருமையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி  சென்ற இதழில் மருத்துவர் ஐயா எழுதியிருந்தார்.  இந்த  இதழில்  அட்ரீனலின் ஆதாரமான அக அட்ரீனல் பற்றி விவரமாக எழுதியிருக்கிறார்.


ட்டக் கடைசியாக ஒரு  குட்டிக் கவிதை:    நானிலம் போற்றும்  நீதி பற்றி.

காடு இருந்த இடத்தில் 
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடு கட்டிக் கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும்  உயர் மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!

---   சேயோன்  யாழ்வேந்தன்                           நன்றி: ஆனந்த விகடன்
                                                                                                   (இதழ்:  2-11-16)



படங்கள் உதவிய நண்பர்களுக்கு  நன்றி.






Related Posts with Thumbnails