மின் நூல்

Friday, February 26, 2021

மொழி

                                                                  6   

வட வேங்கடம்  தென் குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து 
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு ஆறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான் மறை  முற்றிய 
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே..

----  என்பது தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் வரிகள்.  பனம்பாரனார் பற்றிய மேலதிக விவரங்களைச் சொல்லுங்களேன் என்று சென்ற பகுதியில் ஸ்ரீராம்  கேட்டிருந்தார்.

பனம்பாரனார் பற்றி மட்டுமல்ல.  தொல்காப்பியம் அரங்கேறிய அந்தச் சூழலையும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களையும் பற்றி விவரித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்வதே முறை என்று ஸ்ரீராம் சொன்ன பிறகு தான் உணர்ந்தேன். 

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பாயிரக் குறிப்பு கூறுகிறது.

யார் இந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பதிலிருந்து தொடங்கலாம்.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இன்றைய வாசிப்புக்கு வழி காட்டலாய் நல்லதொரு அம்சம் உண்டு.   பெரும்பாலும் பெயர்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களைப் பற்றிய ஒரு குறிப்புடனேயே இருக்கும்.   

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அதியஞ்சேரல், காய்தின வழுதி வடிவம் பல நின்ற நெடியோன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்,  வெண் தேர் செழியன்,  சோழன் வளி தொழிலாண்ட உரவோன்,  சேரன் பல் யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும் பூண் சென்னி, ஒல்லையூர் பூதப்  பாண்டியன்    என்பது போல.

-- மேற்குறித்த அத்தனை மன்னர்களும்,   கி.மு. காலத்தவர்கள் என்பது இன்னொரு வியப்பு.   

நிலந்தரு திருவிற் பாண்டியனும் அப்படித் தான்.  நிலம் தந்த பாண்டியன் என்று இந்தக் குறிப்பிலிருந்து தெரிகிறது..  கி.மு. 7-ம் நூற்றாண்டு இவன் காலம் என்று  வரலாற்றியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள்.  அப்படியானால் கி.மு. 7-ம் நூற்றாண்டில் தான் தொல்காப்பியம் அறங்கேறியதா?..

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம்   தலை, இடை, கடை என்ற மூன்று சங்கங்களும் இருந்த காலம்.  தலைச்சங்கம், தென் மதுரையிலும், இடைச்சங்கம்  கபாட புரத்திலும்,  கடைச் சங்கம் இன்றைய மதுரையிலும்  இருந்ததாகக் கொள்ளலாம். தென்மதுரையும்,  கபாடபுரமும்  கடற்கோளால் கடலில் மூழ்கின என்பது  கால மாற்றங்களிலும் நினைவில் கொள்ள வேண்டிய அம்சம்.  'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்பது சிலப்பதிகார வரிகள்.  கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் குமரி மலை என்றே அழைக்கப்பட்ட மலையும் இருந்ததாகத் தெரிகிறது.

சங்ககாலம் பற்றிய பல்வேறு குழப்பச் சர்ச்சைகளுக்கிடையே  தொல்காப்பியம் பற்றி முதல் முதலாய் பிரஸ்தாபிக்கும் இடைச் சங்ககால நூல் ஒன்றைப் பார்ப்போம்.

இந்த  நூலின் பெயர் இறையனார் களவியல்.  காதலுக்கும் இலக்கணம் வகுத்த தமிழனின் அகப்பொருள் சார்ந்த நூல். இறையனார் என்ற புலவரின் படைப்பாகையால் இறையனார் களவியல் என்றே குறிப்பிடுவது வழக்கமாயிற்று..  நக்கீரர் என்று பெயர் தரித்த புலவர் இந்நூலுக்கான உரையில் மூன்று சங்கங்களையும் பற்றிச் சொல்லும் செய்தி தான் முச்சங்கங்கள் பற்றி  நமக்குக் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கையாகும்.

தலைச் சங்கத்தில் கடவுளரும் முனிவர்களும் பெரும் பங்கு வகித்ததாக சொல்லப்படுகிறது.  திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் (சிவபெருமான்)  தலைமையில் முருகவேள்,  அகத்தியர் , முரிஞ்சியூர் முடிநாகராயர்,  நிதியின் கிழவன் போன்றோர் பங்கு கொண்ட மன்றம் இது.    

கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு மேலாக தலைச் சங்கம் செயலாற்றி வந்திருக்கிறது.  தலைச் சங்க காலத்திலேயே அகத்தியரின் அகத்தியம்  தமிழ் மொழிக்கு இலக்கண நூலாக இருந்து  பெருமை பெற்றது.  வேதங்களில் மிகப் பழைமையானது ரிக் வேதம். சமஸ்கிருத செய்யுள்களின் தொகுப்பு நூல் இது. ருக்கு என்றால் மந்திரம்.  அகத்தியரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவ மந்திரங்கள் ரிக் வேதத்தில் காணக் கிடைக்கின்றன..  

தமிழுக்கு ஆதி இலக்கணம் படைத்தருளிய அகத்தியரின் பங்களிப்புகள் ரிக் வேதத்திலும் இருக்கிறது என்றால் சமஸ்கிருதமும் தமிழும் கைகோர்த்து உலாவிய  இரட்டைச் சகோதரிகள் என்று தெரிகிறது.

அதங்கோட்டு ஆசானும், தொல்காப்பியனாரும் அகத்தியரிடம் கல்வி பயின்றவர்கள். மொத்தம் 12 சீடர்கள் அகத்தியருக்கு.  இந்தப் பன்னிரண்டு பேரும் சேர்ந்து பன்னிரு படலம் என்ற நூலை இயற்றியதாக புறப்பொருள் வெண்பா மாலை என்ற பழந்தமிழ் நூல் சொல்கிறது.  

பத்து தமிழ்  எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு நாவலை குமுதம் காலத்தில் படைத்தது இருபதாம் நூற்றாண்டிற்கு என்றால் அந்த நூற்றாண்டிற்கு அது.

(தொடரும்)


Sunday, February 14, 2021

மொழி

 

                                                     5

தொல்காப்பியர் இதைச் சொல்லியிருக்கிறார் என்றால்  அதற்கு  அப்பீலே கிடையாது.  அந்த அளவுக்கு பழந்தமிழர் வாழ்க்கை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நூல் தொல்காப்பியம்.  அதுமட்டுமல்ல, தமிழுக்கென தனித்தன்மையாய் இலக்கிய வடிவில் அமைந்த  ஓர் இலக்கண நூலாய்த் தொல்காப்பியம்  திகழ்வது தான் தமிழ் மொழிக்கான வித்தியாசப்பட்ட சிறப்பாகிப் போகிறது.


பொதுவாக இலக்கணம் என்றால் ஒரு மொழியை தவறில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நெறிப்படுத்தும் விதி முறைகளே இலக்கணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.  இப்படியான இலட்சணம் கொண்ட இலக்கண வரைமுறைகளில் இலக்கியம் சமைப்பது எப்படி  என்பது ஒரு அடிப்படை வினா.

இந்த  அடிப்படை வினாவிற்கு விடையளித்திருப்பது தான் தொல்காப்பியம்.

தொல்காப்பியர் இயற்றியதால் அது தொல்காப்பியம் என்று பெயர் பெற்றதா இல்லை தொல்காப்பியத்தை இயற்றியமையால் அவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்பட்டரா என்பது ஒன்றில்  ஒன்று புதைந்த ஒரு கேள்வி.

எது  எப்படியாயினும் தொல்காப்பியம் என்பது தொன்மையான  நூல் என்று அதன்  பெயரிலிருந்தே பெறப்படுகிறது.

தொல்காப்பியத்தின்  தோற்றத்திற்கு  முன்பே அதன் பழமைக்கு முன்பேயே  இலக்கிய, இலக்கண நூல்கள் இருந்தன என்பது தெரிகிறது. அவர் காலத்தில் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் இருந்திருக்கிறது. அகத்தியரால் இயற்றப்பட்ட அகத்தியம் இருந்திருக்கிறது.  அவற்றையெல்லாம் ஆராய்ந்ததின் அடிப்படையில் அவற்றைப் பற்றியதான ஓர் ஆராய்ச்சி நூல் போன்றே இயற்றப்பட்டது தொல்காப்பியம்.  இந்த ஆராய்ச்சியில் இதெல்லாம் இப்படி இருந்தால் தான் இது;  இல்லையென்றால் இது இல்லை என்று சொல்வது போல இருந்தவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து பெறப்பட்டதை அவற்றிற்கான இலக்கணமாகக் கொண்ட அரிய படைப்பு  தொல்காப்பியம்.

ஒன்றைப் பற்றிச் சொல்வதற்கு அது இருந்தாக வேண்டும் என்ற இருத்தலியக் கொள்கைக்கு சரியான சான்று தொல்காப்பியம்.

பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்றவர்.  இவர் தான் தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதியிருக்கிறார்.  பாயிரம் என்றால் தற்காலத்தில் நூல்களுக்கு முகவுரை என்று எழுதுகிறோமே அது தான். பாயிரம்  இல்லாமல் நூலில்லை என்பது அக்கால வழக்கமாகவே இருந்தது.

வடவேங்கடம்  தென்குமரி
ஆயிடை
தமிழ்கூறு நல்லுலகத்து


----என்று ஆரம்பமாகும் பனம்பாரனார் எழுதிய அந்தப் பாயிரத்தில்,

அதன் கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்
றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

--என்ற வரிகள் காணக்கிடக்கின்றன.
 
முதல் தழிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் அமைந்திருந்ததாக அறியப் படுகிறது.  முதல் தமிழ் சங்கம் அமைந்திருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் கடல்கோளில் மூழ்கடிக்கப்பட்டன. . வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.

இரண்டாம் தமிழ்ச் சங்க காலம்  கி.மு. 3600 முதல் 1500 வரை தொல்காப்பியரின் காலம் இரண்டாவது தமிழ்ச்சங்கம் இருந்த  காலம்.

நிலந்தரு திருவிற் பாண்டிய அரசன் முன்னிலையில் தமிழ்ச்சங்க அவைக்கு அதங்கோட்டாசான் தலைமை தாங்கிட இரண்டாவது  தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறுகிறது.  தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் இடையிடையே எழுத்து பற்றிய சில சந்தேகங்களை எழுப்புகிறார்.  அதற்கு தொல்காப்பியர் தமிழுக்கான எழுதிலக்கணம் பற்றி விளக்கிச் சொல்ல தொல்காப்பியம் அரங்கேறுகிறது.

எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவுகளாக தொல்காப்பியம்  பகுக்கப் பட்டுள்ளது.  எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் இயல்பழகைக்  கூறுகின்றன.   பொருளதிகாரமோ  பழந்தமிழரின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன. பொருளதிகாரத்தில் ஒன்பது அதிகாரங்கள் உள்ளன.

அகத்திணையியல்,புறத்திணையியல்,  களவியல்,கற்பியல்,பொருளியல்,  மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல்,  மரபியல்  என்கிற ஒன்பது இயலியலும்  படைப்பாக்கங்களுக்கு  இட்டுச் செல்கிற கூறுகள் நிரம்பியிருப்பது தான் ஆச்சரியம்.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நுண்மாண் நுழைபுலம் கொண்ட பேராசான்  தொல்காப்பியர் செய்யுளில் கருத்துச் சொல்லும் வழக்கம் இருந்த காலத்திலேயே செய்யுளின் இயல்பையும் அதன் இயல்பின்மையும்  ஒருசேர கற்பிதம் கொள்ளும் அளவுக்கு  உரைவகை நடை ஒன்றை சொன்னதோடு எவ்வகைத்தானது அது என்று விளக்கமும் கொடுக்கிறார்.

பாட்டிடை வைத்த  குறிப்பினாலும்
பாவின்றி எழுந்த கிளவியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்
பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்
உரைவகை நடை மொழியே நான்கென மொழிய

                      (தொல்காப்பியம்  செய்யுளியல்-- 173)

செய்யுள்களுக்கு உரை எழுதுவதையும், செய்யுளின்  கருத்தை மட்டும் எழுதும் உரை வகையையும், கற்பனையாய் புனையும் கதைகளையும், உணமையான செய்திகளில் நகைச்சுவை கலந்து எழுதுவதையும் குறிப்பிடும் பொழுது நம் வியப்பு  எல்லை மீறி திகைக்கிறது.

இன்றைய உரைநடைக்கு முந்தியது  உரையிடையிட்ட  பாட்டுடைச் செய்யுள். செய்யுளுக்கு இடையிட்டு  உரைநடை போலவான வரிகளும் வருவது அது.   உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்கான  தமிழின் முதல் படைப்பு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.

அதே மாதிரி இன்றைய நாவல்களுக்கு முந்தியது அன்றைய காப்பியங்கள்..சொல்லப் போனால் அன்றைய  காப்பியங்களே காலத்தில் மாற்றங்களில் மாற்றம்  கொண்டு இன்றைய நாவல்களாகியிருக்கின்றன.

இத்தாலி நாட்டினர் நூவெல் (Novella)  என்று பெயர் கொண்டு அழைத்த கற்பனை கலந்த கதைகள் தாம் நாவல்கள் என்று காலப்போக்கில் அழைக்கப்பட்டன என்று சொல்வார்கள்.  நாவல் என்பதற்கு புதுமை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  இதன் அடிப்படையில் வந்த  சொல், நவீனம்.

இதெல்லாம் பிற்காலத்துச் செய்திகள்.  இதெற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே உரைநடையும் செய்யுளும் கலந்த உருவில் உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் காப்பியங்கள் என்ற  உருவில் நாவல்கள் தமிழில் முகிழ்த்திருக்கின்றன என்பதே இங்கு எடுத்தாளக் கூடிய கருத்தாகும்.


(தொடரும்)


படங்களை உதவியோருக்கு நன்றி.


Thursday, February 11, 2021

மொழி

                                                              4


 ரணி குப்புசாமி முதலியார்,  வடுவூர் துரைசாமி ஐயங்கார், கே.ஆர்.ரங்கராஜூ  பொன்றவர்கள் ஆங்கில மர்ம நாவலக்ள் கதை மாந்தர்களுக்கு தமிழ் உடை உடுத்தி  அழகு பார்த்தவர்கள் என்றால் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவராய்த் திகழ்ந்தார் வை.மு. கோதைநாயகி அம்மாள்.    வை.மு.கோ. என்று வாசிப்பு  உலகத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.


அந்தக்கால வழக்கப்படி பெண்ணாய்ப் பிறந்ததினால் கல்விச்சாலையை நெருங்க முடியாமல் ஆரம்பக்கல்வியே மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார். குழந்தைப் பருவத்திலேயே தாயை  இழந்த இவரை வளர்த்த சித்தப்பா இவருக்கு ஞான ஆசிரியராய் ஆனார்.  அவரிடம் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்று கற்றார்.  ஐந்து வயதில் பால்ய விவாகம். கணவர் பார்த்தசாரதிக்கு ஒன்பதே வயது.

சிறுவயதிலேயே தன்னையொத்த சிறு குழந்தைகளுக்கு கோதை கதை சொல்லும் திறமை பெற்றிருந்தார். கணவரின், மாமியாரின் அன்பும் ஆதரவும் பெண்ணுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது.  பிற்காலத்தில் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலையிலேயே இவ்ர் சொல்லவும் இவர் சொல்வதை எழுதவும் பட்டமாள் என்ற தோழி கிடைத்தார். அப்படி வை.மு.கோ. சொல்லி எழுதியது தான் இவரின் முதல் நாவலான 'இந்திர மோகனா'!. நாளாவட்டத்தில் பட்டமாளே இவருக்கு கல்வி போதித்த ஆசிரியையும் ஆனார்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் அறிமுகம், சமூக சேவகி அம்புஜம் அம்மாளின் தோழமை, தீரர் சத்யமூர்த்தியின் தீவிர மேடைப்பேச்சு , மஹாத்மாவின் தமிழக விஜயம் எல்லாம் சேர்ந்து இவரை சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இழுத்துச் சென்றது.

இந்த காலகட்டத்தில் தான் 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை தம் சொந்தப் பொறுப்பில் நடத்தவும் அதற்கு ஆசிரியையாகவும் ஆகிறார் வை.மு.கோ. . ஜெகன்மோகினியில் தன் இரண்டாவது நாவலான 'வைதேகி'யை எழுதினார்., பின் 'சண்பகவிஜயம்', ''ராதாமணி,' பத்ம சுந்தரன்', 'கெளரி முகுந்தன்'' என்கிற நாவல்களை 1926-27 காலகட்டத்தில் எழுதினார்.   'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது.  பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர்.  இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.

வை.மு.கோ. தன் நாவல்களுக்கு எடுத்துக் கொண்ட எழுது பொருள் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று--- அத்தனை நாள் ஆங்கில நாவல்களை அடியொற்றி எழுதிய எழுத்துப் பாங்கு தமிழில் இவரால் மாறுபடுகிறது.  இவ்வாறாக தமிழ் நாவல்களில், நாவலுக்காக எழுதும் கருப் பொருளில் முதல் முதலாக மாற்றம் கண்ட பெண்மணி வை.மு.கோ. தான்.  இது தமிழ் நாவல் எழுத்துலகம் கண்ட மிகப் பெரும் வரலாற்று மாற்றம்.

வை.மு.கோ.வின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தீரம் மிக்கது.  காந்திஜியின் அறைகூவலை ஏற்று சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளுக்கடை மறியல், மற்றும் அன்றைய சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றார் என்று ஆறு மாதம் சிறைதண்டனை+ அபராதம் என்று தண்டனை வழங்கப்பட்டு,  அபராதம் செலுத்த மறுத்ததால் இன்னும் 4 மாதங்கள் சேர்த்துக் கிடைத்த தண்டனையையும் புன்முறுவலுடன் ஏற்று சிறை சென்றார்   அன்னிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தண்டனை பெற்று வேலூர் சிறைவாசம்.  சிறை வாழ்க்கையையும் எழுதுவதற்குக்  கிடைத்த வாய்பாகக்  கொண்டு 'உத்தம சீலன்', 'சோதனையின் கொடுமை' என்று இரு நாவல்களைப் படைத்தார்.

வை.மு.கோ,  தேச நலனுக்காகப் பயன்பட்ட நல்ல மேடைப் பேச்சாளர், கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்று ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக் காரர். பெண் எழுத்தாளர்களில் சாதனைகள் படைத்த முதல் பெண்மணி.  பாரத தேசத்தின் நலன்கள் சார்ந்த கொள்கைகளை தம் எழுத்துக்கு கருப்பொருளாக அவர் எடுத்துக் கொண்டது என்றென்றும் நினைவு கொள்ள வேண்டிய சாதனை.

தமிழ் நாவலுலகில் 1879-ல் பிரசுரமான மயூரம் வேதநாயகம் பிள்ளையின் 'பிரதாப முதலியார் சரித்திரம்',  1896-ல் வெளிவந்த ராஜம் அய்யரின் 'கமலாம்பாள் சரித்திரம்' போன்ற நாவல்கள், வை.மு.கோ.வின் நாவல்களுக்கு முற்பட்ட காலத்தினது ஆயினும்  அவை தனி மனித கோணல்மாணல்களை அச்சுப்பிச்சுத் தனமாக வர்ணித்தவை.  இந்த நிலைகளிலிருந்து மாறுப்பட்டுப் போனதும் வை.மு.கோ.வுக்கு வாய்த்த  தனிச் சிறப்புகளாகின்றன.

1898-ல் பிரசுரமான மாதவய்யாவின் 'பத்மாவதியின் சரித்திரம்'  இதற்கு முந்தைய காலகட்டதின் நாவல் தலைப்புகளைப் பிரதி எடுத்திருப்பது மேலோட்டமான பார்வைக்கே புலப்படுவது..  ஒரு நாவல் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வது தான் என்று முடிவு எடுக்கிற மாதிரியும் உள்ளடக்கத்தின் தேர்வு நிகழ்ந்திருக்கிறது.  அதே நேரத்தில் பத்மாவதி என்னும் தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட சோக வரலாற்றின் விவரிப்பாக குறுக்கம் கொண்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நெடுங்காலம் கழித்து 1946-ல் பிரசுரமான க.நா.சுப்பிரமணியம் அவர்களின்  'பொய்த்தேவு' தான் தேறுகிறது. தமிழ் நாவலுலகின் இலக்கிய ஆய்வாளர்களால் விசேஷப்படுத்தும் நாவல் இது.  

இலக்கியம் என்பது  காலத்தின்  கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது.   இலக்கியம் வாழ்வின் மதிப்பிடல்களைத் தீர்மானிக்கும் சக்தி பெறும் பொழுது அதற்கான உண்மையான உயிர்ப்பினைக் கொண்ட சாதனையாகிறது.  அந்த சாதனைகளும் சமூக அவலங்களைக் களைந்த நேர்த்திகளுக்குச் சொந்த மாகும் பொழுது இயல்பாகவே அவை நம் நேசிப்பை விட்டுத் தப்ப முடிவதில்லை.  இதுவே இலக்கியங்களுக்கான அடிக்கோடிட்டு அழுத்தம் திருத்தமாகச்  சொல்ல வேண்டிய அளவுகோல்களுமாகும்.


(தொடரும்)


படம்

Wednesday, February 10, 2021

மொழி

                                                             

"மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?   ஒருவொருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் அது.  அவ்வளவு தானே?" என்று கேட்டார் என் நண்பர்  ஒருவர்.


என்னால் அவ்வளவு எளிதாக அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் (tool) மட்டும் தானா மொழி என்பது?..

நிச்சயமாக இல்லை.    

மொழி பற்றி,  ஒருவனில் அந்த மொழியின்  ஆளுகை பற்றி எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள்.    கருத்துப் பரிமாற்றம் கொள்வதற்கு மொழியை விட்டால் வேறு வழி இல்லை.  உண்மை தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு மொழியில் புலமை பெறும் பொழுது அது நம்மை ஆட்கொள்ளும் நேர்த்தியில் எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக புரிதல் ஏற்படுகிறது.

முக்கியமாக அந்த மொழியின் இலக்கிய செல்வங்கள்.

எந்த மொழியும் தன்னில் ஞானம் கொண்டவனுக்கு இதில் வஞ்சனை செய்ததில்லை.  உலக மொழிகளில் எல்லா மொழிகளும் இந்த செல்வத்தை தன்னை அறிந்தோனுக்கு வாரி வழங்குவதில்  பாகுபாடு கொண்டதில்லை.

 ஒரு  மொழியில் புலமை பெற்றவன்   அந்த மொழியின் கருவூலமான இலக்கிய இன்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதில் ஆழ அமிழும் பொழுது இகவுலக சுகங்களை தாண்டியதான விவரிக்க இயலாத இன்பத்தை ஓர்ந்து உண்ர்ந்து கொள்பவனாகிறான்.

 திவ்ய பிரபந்த நாலாயிரத்தில் ஒரு பாடல் அது.

அச்சுதனின் அரங்கனின் பெருமைகளை  நா புரட்டி உச்சரிக்கும் புல்லரிக்கும் உணர்வை விட்டு விட்டு இந்திரலோகம் ஆளும் பெருமையையும் வேண்டேன் என்று இச்சுவை-- அச்சுவை  வேறுபாடு காட்டி நெகிழ்ந்திருப்பார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

மொழி என்பது ஒரு லாகிரி வஸ்து போல போதை தருவது.

எந்த மொழியாக இருக்கட்டுமே, அந்த மொழியின் படைப்புகளில் ஆழ்ந்த தோய்தல் ஏற்படும் பொழுது அந்த ரசனை ஒருவித கிறக்க உணர்வை ஏற்படுத்தாமல் விடாது.

தாய் மொழி-- பிற மொழி என்றெல்லாம் இதில் பாகுபாடு ஏதுமில்லை. தாய்மொழி என்றால் இரட்டை மடங்கு கிறக்கம்.  அவ்வளவு  தான்.

அது ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காலம்.   பல நல்லது -- கெட்டதுகள் நமக்கு அறிமுகமான காலம்.

ஆங்கில மொழியறிவுக் கள்ளைப் பருகியதின் பாதிப்பில் அது போலவே தமிழில் எழுத வேண்டுமென்ற அளப்பரிய ஆசையின் போதை வயப்பட்டவர் பல பேர்.

'அது  போலவே'என்ற வார்த்தையை அட்சரம் பிசகாமல் தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்டு வந்த சிலரை மறக்கவே முடியாது.  இவர்கள் துணிந்து,பேண்ட், சட்டை, டை கட்டிய கதா பாத்திரங்களுக்கு வேஷ்டி, சட்டை தங்க பித்தான் கோர்த்த கோட், அங்கவஸ்திரம் உடுத்தி அழகு பார்த்தனர்.   சட்டை என்றால் அந்தக் காலத்தில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான். முழுக்கை சட்டையில் மணிக்கட்டு இடத்தில் கஃப் பட்டன் போட்டு, புஜப்பிரதேத்தில் கால் செ.மீ. அளவுக்கு வட்டமாய் துணியை மடித்துத் தைத்த கோலத்தில் அட்டகாசமாய் இருக்கும்.

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜூ (நம்ம ரா.கி.ரங்கராஜன் இல்லை; இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜனும் அறவே இல்லை!)  போன்றவர்களை மறக்கவே முடியாது.  ஆங்கில நாவல்களை தமிழ் படுத்தியதில் பயங்கர இலக்கிய மாற்று பங்களித்தவர்கள் இவர்கள்!   கதைகள் வாசிக்கம்  பழக்கம் இவர்களால் தான் அக்காலத்தில் படித்த வர்க்கத்தினரிடையே வழக்கமாகவும் மாறியது

இரத்தினபுரி இரகசியம்,  சொர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம், அபூர்வ சிந்தாமணி, மதன பூஷணம் அல்லது இறந்தவன்  பிழைத்தது போன்ற ஆரணி குப்புசாமி முதலியார் அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாவல்களை மறக்கவே முடியாது.

ஆரணியாரின் நாவல்களில் ஆங்கில கதாபாத்திரங்களும்  இங்கிலாந்து இடங்களும் தமிழ்ப் பெயர் பூணுவதை ரசித்து படிப்பதே ஒரு  தனி இன்பம் பயக்கும்.   எழுதிய மாத்திரத்தில் இவர் எழுத்தில் லண்டன்  இரத்தின புரியாகும்; வாட்ஸன் விஸ்வநாதன்  ஆவார்; ஆர்ஸின் லூயின் அரசூர் லஷ்மணனாவார்.


ஆரணி குப்புசாமி முதலியார் சிலகாலம் 'ஆனந்த போதினி' என்னும் பத்திரிகைக்கு ஆசிரியாராக வேறு இருந்தார்.  ஆ.கு.மு. காலத்திற்கு பிறகு நாரண துரைக்கண்ணன் (இவர் ஜீவா என்று புனைப்பெயர் கொண்டிருந்தார். பொதுவுடமைக் கட்சி ஜீவா இல்லை)  'ஆனந்த போதினி'யின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.  இந்த நாரண  துரைக்கண்ணன் அவர்கள் 'கலைமகள்'
பத்திரிகையில் தனக்கு முன்னோடியான  ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் ரக்சியம் பற்றி  ரசித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  அந்தக் கட்டுரையின்  சில வரிகளை என் குறிப்புப் புத்தகத்திலிருந்து  எடுத்து இங்கு எழுதுகிறேன்:

"ரெயினால்ஸ், வால்டர் ஸ்காட்,  அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின்  நாவல்களை மொழிபெயர்த்து தமிழர்களுக்குத் தர விரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ்நாட்டுப் பண்பாடுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும்  கதை மாந்தர்களின் பெயர்களையும்  நடை உடை பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார்.   அத்துடன் கதைகளுக்கு இடையிடையே நீதி போதனைகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச் சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

-- என்று நாரண துரைக்கண்ணன் ஆரணியாரைப்  பற்றி ரசனையுடன் எழுதியிருக்கிறார்.

ஆரணியார் இப்படி  என்றால் வடுவூரார் கதையே தனி.  துப்பறியும்  பாணி கதைகளை தனிக்குத்தகைக்கே எடுத்தவர் இவர்.   தமிழ்வாணனில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர் வரை அத்தனை மர்மக்கதை மன்னர்களுக்கும் இவர் தான் முன்னோடி!  இவர் எழுதுவதற்காகவே தான் பணியாற்றிய  தாசில்தார் வேலையைத் துறந்தார்.  அந்தக்காலத்தில் 'அல்லது'  இடையிட்டு நாவல் தலைப்பை எழுதுவது பிராபல்யம் அடைந்தவர்களின் ஒரு பழக்கமாகவும் இருந்தது!

கல்யாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த  விந்தை

மரண புரத்தின்  மர்மம் அல்லது லீலாவதியின் மூடு மந்திரம்

இரு மன  மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி!

--என்று வடுவூராரின் 'அல்லது' போட்ட சில நாவல் தலைப்புகள் இன்னும் நினைவுகளில் நிழலாடுகிறது!

இவரது ''கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்' பயங்கர பிரபல நாவல்!  திகம்பரம்  (ஐயே!)  என்றால் அர்த்தம் தெரியும் தானே!  'திகம்பர சாமியார்' திரைப்படமாகவும் வந்திருக்கிறது.  எம்.என்.நம்பியார் தி.சாமியாராய் நடித்து அசத்தியிருப்பார்!  மயிலாப்பூர்  அல்லையன்ஸ் பதிப்பகத்தார்  இவரது நாவல்களின் வரிசை ஒன்றை சில ஆண்டுகள் முன்பு பதிப்பித்திருக்கிறார்கள்!  வேண்டுகிறவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்!

(தொடரும்)

                                               
                

Tuesday, February 9, 2021

மொழி

                                                                2

லகில் மொத்தம்  2796 மொழிகள் உள்ளனவாம்   இதில் பல மொழிகள் பேச்சு மொழிகளாகவே உள்ளன.  அதாவது அவற்றிற்கு எழுத்து வடிவம் இல்லை.


பாரதத்திலோ,  499-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்த நானூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆறு மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன.  அவை:  தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஒடியா மொழி.  பொதுவாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து  கிளைத்த தமிழ்க் குடும்ப மொழிகளாதலால் மனத்தளவில் அவற்றைத் தனியாகப் பிரித்தும் பார்க்க முடியவில்லை.   இருப்பினும் கணக்குக்காக  ஆறில் நான்கு திராவிட மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன என்பது நமக்குப்  பெருமை.

உலக அளவில்  கிரேக்க மொழி, இலத்தீன், பாரசீக மொழி, அரபு மொழி, எபிரேயம் மற்றும் சீன மொழி ஆகியவை செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

எதையும் ஆங்கிலத்தில் சொன்னால் இளைஞர்களுக்கு சுலபமாகப் புரியும் காலம் இது.

செம்மொழி என்றால் classical language. என்று ஓரளவு பொருந்தக் கூடிய அர்த்தத்தில் சொல்லலாம்.

அது சரி,  classical language  என்றால்---

"To qualify as a classical tradition, a language must fit several criteria:  it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature "

---  என்று மொழியியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூறுகிறார்.

செம்மொழி என்பது ஒரு மொழியில் அமைந்திருக்கும் இலக்கிய மற்றும் கலைப்படைப்புகளைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது.  என்றோ இருந்த பழங்கதையாக இல்லாமல் அப்படியான இலக்கிய கலைப்படைப்புகள், வருங்காலத்திலும் மென்மேலும் உருவானால் தான் இந்த மொழி செம்மொழி என்பதற்கான வரலாற்று பெருமைகளையும் தக்க வைத்துக் கொண்டவர்களாவோம்.

தற்கால தமிழின் கலை இலக்கிய  கலைப்படைப்புகள்  பற்றிய பார்வை நமக்கு அவசியம்.  பண்டைய தமிழ்ப் புலவர்களின் தொடர்ச்சியாய் தொடர்ந்து வரும் இன்றைய இலக்கிய சாம்ராட்களின்  படைப்புகளைப் பற்றிய பார்வையும் நமக்கு அவசியம்.

மன்னர்களின் ஆட்சி காலங்களின் பொழுது இயல்பாகவே  கலை இலக்கியங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமை பெற்றிருந்த மன்னர்களைச் சார்ந்திருந்தன.   தமிழில் கூட மன்னரைத் தவிர்த்து  ஒரு வணிகனை பாட்டுடைத் தளைவனாக வரித்துப் பாடப்பாட்ட முதல் காப்பியம் சிலப்பதிக்காரமே. அந்த வகையில் அதுவே தமிழில் முதன் முதல் தோன்றிய குடிமக்கள் காப்பியமாகும்.

சங்க காலத்தில் தமிழின் தமிழகத்தின் தமிழ்ப்புலவர்களின் நிலையை இன்றைக்கும் தாம் தெரிந்து கொள்வதற்கு தோன்றாத் துணையாய் இருப்பது சங்க இலக்கியங்களே. அந்த வகையில் இலக்கியங்கள் காலத்தின்  கண்ணாடி என்பது எல்லா நாட்டு அறிஞ்ர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

அதே போல தற்காலத்தைப் பற்றி எதிர்காலத்துக்கு எடுத்துச் சொல்லப் போவது இன்றைய இலக்கியங்களே.  அதனால் தமிழின் இன்றைய இலக்கியங்களை இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கக் கூடியதாய் படைக்க வேண்டியது அவசியமாகிறது.  அதே நேரத்தில் செம்மொழித் தமிழின் நீட்சியாய் இன்றைய தமிழ் இலக்கியங்களும் தமிழ் மொழியின் பெருமைகளை இழக்காமல் அதே நேரத்தில் காலத்தின் அலையோட்டத்தில் அமிழ்ந்து போய் விடாமல் காலத்தைத் தாண்டி வாழும் படைப்புகளாய் ஜீவிதம் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் ஆகிறது...

இந்தக் கோணத்தில் தற்கால தமிழ் இலக்கியம் பற்றிய  புரிதல் நமக்கு அவசியம்.

வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிற சிறப்பில் தமிழின் சங்க இலக்கியத்திற்கு ஈடு இணை இல்லை.  இதே ஈடு இணை எதிர்காலத்திற்கான தற்கால படப்பிடிப்புக்கும் தேவை என்றே சங்க இலக்கியங்கள் நமக்கு பாடம் சொல்கின்றன.

இலக்கியத்தை பாட்டில் வடித்தது பண்டைய காலம்;  உரைநடையில் சொல்வது தற்காலம்.   இதை ஒழுங்கில் சொல்ல வேண்டுமானால், பண்டைய கால கதைப்பாடல்கள்,  காப்பியங்கள்  என்று நம்மால் அடையாளப் படுத்தப்பட்டன.  அன்றைய காப்பியங்கள் தாம் இன்று நாவல் என்று பெயர் கொண்டு வலம் வருகின்றன.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அன்றைய காப்பியங்கள் என்றால் கல்கியின் அலைஓசையும், ஜெயகாந்தனின்  'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகமும் .சமகால நாவல்கள்.

நம் தேசத்தில் நூற்றைம்பது  கால அன்னிய ஆங்கிலேயர் ஆட்சி எல்லாவற்றிலும் தன் தடத்தைப் பதித்திருப்பது போல இலக்கியங்களிலும் தன் தடத்தைப் பதித்திருக்கிறது.

நாம் காப்பியங்கள் என்று பெயர் சூட்டியவை போன்று அமைந்திருப்பதை அவர்கள் நாவல் என்று அழைப்பார்கள் என்று புரிந்து கொண்டோம். அவர்கள் நாவல் என்று அழைத்ததினால் அத்தகையவற்றை நாமும் நாவல் என்று அழைக்கத் தலைப்பட்டோம்.

நாவல் என்பதனை புதினம் என்று அழைப்பதினால் அது ஒன்றும் தமிழ் வடிவமாகி விடாது.    ஆங்கில நாவல்கள் போன்று உரைநடையில் நாமும் நாவல்கள் படைக்கத்  தொடங்கினோம் என்பதே உண்மை.


(தொடரும்)

Related Posts with Thumbnails