மின் நூல்

Wednesday, December 31, 2008

ஆத்மாவை தேடி....29

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

29. புது விஷயம்; புது உலகம்

நீண்ட நேரம் டெலிபோன் ரிஸீவரைப் பிடித்திருந்ததினால் கை லேசாக வலிக்க, ரிஸீவரை இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டார், கிருஷ்ணமூர்த்தி.

"மாலு! நான் சொல்ல வர்றதைப் புரிஞ்சிக்கோ.. யாரைப் பாக்கலாம்னு அன்னிக்கு அப்படிக் கிளம்பினேனோ, அவரே, அந்த நீலகண்டனே, 'பைத்தியக்காரா! இங்கே எங்கே வர்றே'ன்னு என்னைத் திசைதிருப்பி விட்டான். மனோகர்ஜின்னு ஒரு பெரியவரைப் பாக்க வ்ச்சான். ஞான விஷயமா இன்னும் நெறைய நான் தெரிஞ்சிண்டு வரணும்னு நெனைச்சானோ என்னவோ, பெரிய பெரிய படிப்பு படிச்ச பண்டிதர்கள் பேசி விவாதிக்கற சபைலே என்னை மேடை ஏத்தி என்னோட மழலையை ரசிச்சான். 'ஆத்மா'ன்னு ஒரு சதஸ் வேறே இங்கே நடக்கப் போறது"

"என்னன்னவோ சொல்றையே?"

"ஆமாம். இங்கே டெல்லிலே ஒரு பெரிய சதஸ் நடக்கப் போறது. மனோகர்ஜிதான் ஏற்பாடு பண்ணியிருக்கார். 'ஆத்மா'ங்கற சப்ஜெக்டை எடுத்திண்டு பல கோணங்கள்லே பண்டிதர்கள்லாம் அலசப்போறா."

"ஹஹ்ஹ்ஹா.." என்று பெரிதாக சிரித்தாள் மாலு. "ஏண்டா, கிருஷ்ணா! கேட்டாலே சிரிப்பு வரலை? பேசறதாவது.. விவாதிக்கறதாவது.. பேசித் தெரிஞ்சிக்கறதாவது.. எனக்குப் புரிபடலை.. ஏண்டா, கிருஷ்ணா, சொல்லு. பேசி, விவாதித்து, புரிஞ்சிக்கற விஷயமாடா, அது? சொல்லு."

"மாலு----"

"கிருஷ்ணா! நீ ஒண்ணை மொதல்லே புரிஞ்சிக்கோ.. அது ஆம்பளையோ, பொம்பளையோ என்னைக்கு அவாளுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆயிடுச்சோ, அன்னிக்கே அவா கூண்டுக்கிளியாயிடறா.. கிரகஸ்தாளாயிடறா.. நாற்பது சமஸ்காரங்களும் தெரிஞ்ச ஒனக்கு நா சொல்ல வேண்டியதில்லே; இல்லறத்தாளோட கடமைகள் நீ அறியாததும் இல்லே.. 'செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்; நல் விருந்து வானத்தவர்க்கு'ன்னு வள்ளுவர் சொல்லலிய்யா?.. வேதசாஸ்திர மந்திரங்கள் எனக்கும் தெரியும்.. சொல்றதுன்னா சொல்லுவேன்.. கல்யாணம் ஆயிடுச்சின்னா, கிரகஸ்தாளாயிருந்திண்டு கடவுளைத் தேடறது தான் அவாளுக்கு இட்ட வழி... இப்படி பொண்டாட்டியை தனியா விட்டுட்டு, தான் மட்டும் துண்டை உதறிப் போட்டுட்டு கிளம்பறதில்லே. தெரிஞ்சிக்கோ."

"நீ என்ன நான் சந்நியாசமே வங்கிண்டு வந்துட்ட மாதிரி பேசறே?.. என்னிக்கு 'ஸப்தபதி' ஜபித்து ராதையோட கையைப் பிடிச்சிண்டு அக்னி வலம் வந்தேனோ, அன்னிக்கேத் தீர்மானமானது அது."

"என்னது?"

"இறப்பு ஒண்ணு தான் எங்க ரெண்டு பேரையும் பிரிக்கக் கூடிய ஒண்ணுன்னு. அது அவளுக்கும் தெரியும். நானும் அடிக்கடி பத்து நாள், பதினெஞ்சு நாள்னு புராணக்கதை சொல்றேன்னு வெளிலே போயிண்டு வந்திண்டிருக்கறது வழக்கமான ஒண்ணுங்கறதாலே, என்னோட இருப்பு அங்கே இல்லாதது அவளுக்கு பெரிசாத் தெரியலே.. எனக்கும் குடும்பத்தை விட்டான இந்த தற்காலிக பிரிவெல்லாம் பழக்கப்பட்டுப் போயிடுத்து.. மத்தபடி மானசீகமா எப்போதும் எந்நேரமும் அவளோடையே தான் இருக்கேன். இன்னிக்கு ஒங்கிட்டே சொல்றேன். தெரிஞ்சிக்கோ."

"---------------"

"அவளோட மட்டுமில்லே.. உங்க எல்லாரோடையும் கூடத்தான். இன்னிக்கு அதிகாலைலே என்னோட கனவுலே நீ வந்தே.. தெரியுமா, சேதி?"

"என்ன சொல்றே, கிருஷ்ணா?"

"ஆமாம்... கனவுலே நீ மட்டுமில்லே... அண்ணா, மன்னி கூடத்தான். அந்த தஞ்சாவூர் ராணி வாய்க்கால் தெரு வீடு.. பெரிசு பெரிசா அந்த ஜன்னல்கள்.. அதெல்லாம் ஒனக்கு நினைவிருக்கா, மாலு?.. ஜன்னல் பக்கத்லே பாய் விரிச்சு நீ, நான், மன்னி-- எல்லாரும் படுத்திருக்கோம்.. சிபிச் சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமான்னு நீ கேக்கறே--"

"கிருஷ்ணா!---"

"இன்னிக்கு காலம்பற பொழுது விடியறத்துக்கு முன்னாடி வந்த கனவு இது.
பச்சுன்னு இப்பவும் ஞாபகத்லே இருந்து ஒடம்பு சிலிர்க்கறது."

"ஆச்சரியமா இருக்கு, கிருஷ்ணா!"

"எனக்கும் தான்."

"என்னோட ஆச்சரியம் வேறே... சித்தே முன்னாடிதான் அந்த ராணி வாய்க்கால் தெரு மகாத்மியம் பத்தி ராதைகிட்டே சொல்லிண்டு இருந்தேன்.. அப்படியெல்லாம் கதை கேட்டவன், இன்னிக்கு ஊருக்கெல்லாம் கதை சொல்லிண்டு இருக்கான்னு சொல்லிண்டு இருந்தேன்..... ச்சூ... ச்சூ... அந்தக் கழியை எடுத்து அங்கே வை ராதை.."

"என்ன மாலு?.."

"ஒண்ணுமில்லே.. இங்கே பக்கத்லே புறா வளக்கறாப் போல இருக்கு. அதிலே ரெண்டு நம்பாத்து முத்தமே கதின்னு கெடக்கு. 'படபட'ன்னு இங்கேயும் அங்கேயும்ஓடிப்பறந்து, ஹாலுக்கு வந்திடுத்து.. அதான் விரட்னேன்."

இன்னொரு பக்கம் ஃபோனைப் பற்றியபடி கிருஷ்ணமூர்த்தி பிரமை பிடித்து நின்றார்.

"ச்சூ.. ச்சூ.." என்று மாலு புறாவை விரட்டுவது இங்கு கேட்டது. அவள் புறாவை விரட்டுவது கிருஷ்ணமூர்த்திக்கு தன்னையே விரட்டுவது போலிருந்தது.

"மாலு.. வேண்டாம்.. புறாவை விரட்டாதே.. பக்ஷிகள் நெருங்குவது பாக்கியம். விரட்டாதே."

"விரட்டாம என்ன செய்யறதாம்?... 'பிலுபிலு'ன்னு முத்தம் பூரா அதுகளோட எறகுத்துண்டுங்க தான். பெருக்கிப் போட்டு மாளலே."

"பக்ஷிகள்லாம் 'த்விஜ' பிறவிகளல்லவோ?.. விரட்டாதே.. சொல்றதைக் கேளு."

கிருஷ்ணமூர்த்தி புறாக்களுக்குப் பரிந்து பேசுவது மாலுவுக்கு ஆச்சரியமாயிருந்தது.. டெல்லி போய் புதுசு புதுசா நிறையத் தெரிஞ்சிண்டு பேசறது போலவும் இருந்தது. வீடு பூராவும் துளியூண்டு துளியூண்டாய் இறகுத் துண்டுகளும், ஒருமாதிரி மூக்கைச் சுளிக்கிற நாற்றமும் அவளுக்கு வயிற்றைக் குமட்டியது. 'அங்கிருந்து பேசலாம்; இங்கிருந்தால் தெரியும்' என்கிற எரிச்சலில், "என்ன சொல்றே?" என்றாள்.

"இங்கே காணுமேன்னு பாத்தேன்... அங்கே வந்திடுத்தா அதுக்குள்ளாறே?" என்று கிருஷ்ணமூர்த்தி ஆச்சரியப்பட்டார்.

"உளறாதே."

"உளறலே. உண்மையைத் தான் சொன்னேன்."

"என்ன உண்மை?"

"விளக்கமா எதுவும் எனக்குச் சொல்லத் தெரியலே.. இதெல்லாம் எப்படிச் சாத்தியம்னும் தெரியலே. ஆனா, நடக்கறத்துக்கெல்லாம் ஒண்ணுக்கொண்ணு ஏதோ கண்ணுக்குத்தெரியாத இழைலே கட்டி வைச்சத் தொடர்பு இருக்கற மாதிரித் தெரியறது."

"புதிர் போடாதே. தெளிவாச் சொல்லு."

"ஃபோன்லே என்ன சொல்றது?.. அதுவும் உணர்றதைச் சொல்றதும் ஓரளவுக்குத் தான் முடியும், மாலு."

"இது சொன்னையே, கரெக்ட்.. உணர்றதைச் சொல்றதும் ஓரளவுக்குத் தான் முடியும்.. சத்தியமான வார்த்தை. இப்போதான் நீ பழைய கிருஷ்ணமூர்த்தி மாதிரி இருக்கே."

கிருஷ்ணமூர்த்தி சிரித்தார். " நா எப்பவும் ஒரே மாதிரியாத்தான் இருக்கேன்."

"அப்படியா?.. வந்து பாத்தா தெரியறது. இன்னொரு விஷயமும் உண்டு, கிருஷ்ணா! வரும் வாரம் நானும் அவரும் அங்கே வர்றோம். திடீர்னு முடிவான ப்ரோக்ராம்... அங்கே வரச்சே, உன்னைப் பாக்கறேன். சரியா?"

"வெல்கம் மாலு.. நானே கூப்பிடணும்னு இருந்தேன். நீயே சொல்லிட்டே. ஒரு வாரம் இருக்கற மாதிரி வா.. புது விஷயம். புது உலகம்."

"அட்ரஸ் சொல்லு. குறிச்சிக்கறேன்."

"ஒரு நிமிஷம்---" கிருஷ்ணமூர்த்தி தூரத்தில் அமர்ந்திருந்த ராம்பிரபுவைக் கூப்பிட்டு விஸிட்டிங் கார்டு வாங்கி, மஹாதேவ் நிவாஸ் அட்ரஸ் சொன்னார்.

"பாக்கலாம், கிருஷ்ணா! நாங்க ரெண்டு பேரும் வர்றோம். சரியா?"

"ரொம்ப சந்தோஷம். ராதை கிட்டே போன் கொடு."

"ராதை--"

"சொல்லுங்கன்னா."

"அடுத்த வாரம் மாலுவும் அவள் அகத்துக்காரரும் இங்கே வர்றாளாம்."

"கேட்டுண்டிருந்தேன்."

"நீ சுபாவைப் பாத்துக்கோ. அர்ஜூன் கிட்டேயும் சொல்லு. வேற விஷயம் ஏதாவது இருந்தா, போன்லே பேசு. சரியா?"

"சரின்னா."

"ஃபோனை வச்சுடட்டுமா?"

"சரின்னா."

(தேடல் தொடரும்)

Monday, December 22, 2008

ஆத்மாவைத் தேடி....28

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


28. காதலியை கானகத்தே கைவிட்டு...


கிருஷ்ணமூர்த்தி, நிமிர்த்தி மல்லாக்க வைத்திருந்த தொலைபேசி ரிஸீவரைத் தொட்டுத் தூக்கும் பொழுது லேசாக வழுக்கியது. நழுவி கீழே விழுந்து விடாமல் அதை இறுகப் பற்றி, "ஹலோ--" என்றார்.


மறுபக்கம், "ஏன்னா! நான் தான்!" என்றாள், ராதை.

"அப்படியா?.. எல்லாரும் அங்கே செளக்கியம் தானே?" என்று படபடத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"எல்லாரும் செளக்கியம் தான். நீங்க நன்னா இருக்கேளா? அந்தப் பக்கமெல்லாம் ரொம்ப குளிர்னு டி.வி.லே சொன்னாளே?.. உடம்பைப் பாத்துக்கோங்கோ."

"பேஷா. எனக்கொண்ணும் குறைச்சல் இல்லை. இங்கே கிடைச்சிருக்கற மனுஷாள்லாம் ரொம்பத் தங்கமானவா. எல்லாரும் வித்வான்கள். நெறைய படிச்சவா. பெரிய பெரிய விஷயமெலாம், எனக்கு இத்தனை நாளும் தெரியாததெல்லாம் அலசறா. கேட்கக் கேட்க ரொம்பவும் பிரமிப்பா இருக்கு."


"அப்படியான்னா?.. நீங்க கொடுத்து வைச்சவா. சத்விஷயம் பேசறவாளோட சிநேகம் கிடைச்சிருக்கு. உடம்பைப் பார்த்துங்கோங்கோ. எல்லாத்தையும் பாத்து,கேட்டு, ரசிச்சிட்டு வாங்கோ.."

இப்பொழுது தான் கிருஷ்ணமூர்த்திக்கு நிதானம் திரும்பித்து.."ஆமாம், எதுக்குக் கூப்பிட்டே?"

"பாத்தேளா?.. மெனக்கெட்டு போன் பண்ணிட்டு எதுக்குன்னு சொல்ல மறந்திட்டேன், பாருங்கோ!.. உங்க குரல் கேட்டதும் மனசு தொஞ்சு போயிடுத்து.. எப்படியிருக்கேளோ, என்னவோ ஏதோன்னு படபடப்பிலே எல்லாத்தையும் மறந்திட்டேன்."

"எதுக்குக் கூப்பிட்டேனு ஞாபகம் வந்திடுத்தில்லையோ?.. சொல்லு, ராதை!" என்று பரிவுடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

"எனக்கு இப்போ இருக்கற சந்தோஷத்லே கையும் ஓடலே; காலும் ஓடலேன்னா. நீங்க ரெண்டாந்தடவை தாத்தாவாகப் போறேள்.. சுபா உண்டாயிருக்கான்னா."

"ஓ..தேங்க் காட். ரொம்ப ரொம்ப சந்தோஷம், ராதை!"

"நேத்திக்கு வயத்தைப் புறட்டறதுன்னு கொல்லைக்கும், ரேழிக்கும் அலைஞ்சிண்டிருந்தாளா, என்னவோ ஏதோன்னு டாக்டர்கிட்டே கூட்டிண்டு போனோம். லேடிடாக்டர் 'கன்பர்ம்' பண்ணிட்டா.. ரெண்டு மாசமும் ரெண்டு வாரமும் ஆறதாம்."

"சுபாவை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ, ராதை! பாவம், அவ குழந்தை. இது வேணும், அது வேணும்னு அவளுக்குக் கேக்கத் தெரியாது. நீதான் வாய்க்கு ருசியா பண்ணிக் கொடுக்கணும். அர்ஜூன் என்ன, ஆபீஸ் போயிருக்கானா?.. அவன் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லு. ' அனிமிக்' ஆயிடாமே, அவளுக்கு வேணுங்கற டானிக்கெல்லாம் வாங்கிக் கொடுக்கச் சொல்லு. அரை லிட்டர் பால் அதிகம் வாங்கிக்கோ.. குங்குமப்பூ போட்டு தினம் காய்ச்சிக்கொடு. படுக்கப் போகறச்சே சாப்பிடட்டும். என்ன, கேக்கறதா?"

"செய்யறேன்னா.. அர்ஜூன் அப்பறமா உங்ககிட்டே பேசுவான்.. நேத்திக்கு ராத்திரி யு.எஸ்.லேந்து கிரிஜா பேசினா. அவளுக்கும் சந்தோஷ சமாச்சாரம் சொல்லிட்டேன்.. அவாளுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். குழந்தை ரிஷி அங்கே நன்னா விளையாடிண்டு இருக்கானாம். நாளைக்கு பக்கத்தாத்து கம்ப்யூட்டர்லே வரேன்னு சொல்லியிருக்கா.. நாளைக்கு பேசிட்டு, குழந்தையை காமராலே பாத்துட்டு வர்ரேன். நீங்க எந்தக் கவலையையும் மனசிலே வச்சிக்க வேணாம். எல்லாம் நான் பாத்துக்கறேன்... அப்புறம், உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ்..."

"அப்படியா.. நீ கூட சஸ்பென்ஸெல்லாம் போட்டுப் பேச ஆரம்பிச்சிட்டேயே.. என்ன சொல்லு.." என்று சிரித்தார் கிருஷ்ணமூர்த்தி.

"நம்ம மாலு அக்கா பெங்களூர்லேந்து வந்திருக்கான்னா.."

"அடேடே.. மாலுவா.. வெரிகுட்! ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. ராதை.. போனை அவகிட்டே குடு."

".............................."

"ஹலோ, மாலுவா?.. மாலுவா பேசறது?"

"கிருஷ்ணா.. நாந்தாண்டா.." என்று குரலில் உரிமை குழைந்தது.

பெரியவர் கிருஷ்ணமூர்த்திக்கு கண் கலங்கி விட்டது. "மாலு.. நன்னா இருக்கையா?.. மாப்பிள்ளை, குழந்தைங்க எல்லாம் நன்னா இருக்காளா?"

"எல்லாம் பேஷா இருக்கா.. நீ என்ன சொல்லிக்காம, கொள்ளாம இப்படி செஞ்சிட்டே?.. தேசாந்திரமா கிளம்பிட்டே?.. நாங்கள்லாம் குத்துக்கல்லாட்டமா இருக்கறச்சே,கட்டின வேஷ்டியோட கிளம்பறத்துக்கு உனக்கு மனசு எப்படிடா வந்தது?"

"இல்லை, மாலு! இதோ பார்.. நானும் ஒவ்வொரு கடமையா முடிச்சிட்டேன்.. அன்பைப் பரிமாறிக்கறத்துக்கு அவாவாளுக்கு ஒரு குடும்பம் அமைஞ்சாச்சு.. சுபாக்கும்இப்போ கடவுள் அருள்பாலிச்சிட்டார். மெதுமெதுவா ஒரு வட்டம் பூர்த்தியாறப் போறது.. அதையும் கண்ணாலே பார்த்துட்டேனா.."


"எப்படிடா உனக்கு இப்படி விட்டேத்தியா பேச மனசு வந்தது?.. நீ அப்படிப் பேசறவன் கூட இல்லையேடா.. அதானே எனக்கு அதிசயமா இருக்கு.. உனக்கு என்னகுறை வைச்சோம், சொல்லு. ராதை நம்பாத்து குழந்தைடா. அந்தக் குழந்தை கழுத்திலே குடும்ப பாரத்தைக் கட்டிட்டு, நீ பாட்டுக்க கிளம்புவேனா.... 'காதலியைக் கானகத்தே கைவிட்டு'... நீ என்ன நள மகராஜாவா?.. ஆயிரம் புராணக்கதை சொல்றேன்னு பெருமைப்பட்டேனே?.. அத்தனையும் வீணா?..." என்று ஆற்றாமையில் அழுது தீர்த்தாள் மாலு.


"மாலு.. அழாதே.. கண்ணைத் தொடைச்சுக்கோ.. பாசம் உன் கண்ணைக் கட்டறது.. நான் சொல்றதைப் புரிஞ்சிக்கோ."


"சொல்லு.. புரிஞ்சிக்கறேன்.. நான் பொண்ணாப் பொறந்த பாவத்தைப் புரிஞ்சிக்கறேன். சொல்லு."


"இதோ பார்--- நான் எங்கேயும் கண்காணாத எடத்துக்குப் போயிடலே. பரமேஸ்வரர்--பார்வதியைப் பார்கலாம்னு இமயமலைக்குக் கிளம்பினேன்."

"சிரிக்கத்தான் வேணும். பரமேஸ்வரரைப் பாக்கறது அவ்வளவு ஈஸியா?.. நானும் இமயமலைக்குக் கிளம்பினேனா, அவரைப் பாத்துடலாமா?"

"நல்ல ஞானமான கேள்வி, மாலு, நீ கேட்டது.. யூ ஆர் கரெக்ட்!.. சரியாச் சொன்னே.."

பின்னே, திரும்பிட வேண்டியது தானே?.. அங்கே எங்கே உக்காந்திருக்கே?.." மாலுவின் குரலில் சீற்றம் இருந்தது.

(தேடல் தொடரும்)



Saturday, December 20, 2008

ஆத்மாவைத் தேடி....27

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


27. புறாக்களின் நினைவு.

தான் தான் கீழ்க்கிளைப் பறவையோ என்று கிருஷ்ணமூர்த்திக்கு பொறி தட்டிய மாதிரி ஒரு நினைப்பு வந்து விட்டுப் போனதும், அந்த மசமசத்த இருட்டில் இன்னும் தீட்சண்யமாக மரக்கிளை பக்கம் தன் பார்வையைச் செலுத்திப் பார்த்தார்.


லேசாகக் காற்று வீசி தடவி விட்டுப்போன சுகத்தில் இலைகள் ஒயிலாக சிலிர்த்து நிமிர்ந்து மீண்டும் ஒரு தடவலுக்குக் காத்துப் படுத்தன. எந்தப் பறவையையும் இப்போது காணோம்! மரமே வெறிச்சோடிக் கிடந்தது.

'கொஞ்ச நேரதிற்கு முன்னாடி தானே பார்த்தோம்? அதற்குள் எங்கே போய்விட்டன?.. ம்... ஒருகால், பிரமையோ?.. கனவில் கண்டதை நினைவில் பொருத்திப் பார்க்க மனம் ஆசைப்பட்டதில் நேர்ந்த சலனமோ?..
'இல்லை, கீழ்க்கிளை பறவை மாதிரி தன்னைப் பாவித்துக் கொண்டு, மேல்கிளைப் பறவையை நான் பார்க்க நினைத்தது தவறோ?.. அதனால் தான் தரிசனம் கொடுக்காமல் மாயமாய் மறைந்து போயிற்றோ?.. 'தவறாய் இருந்தால், மன்னிக்க வேண்டும், இறைவா' என்று கிருஷ்ணமூர்த்தி மானசீகமாய் மனத்தில் துதித்துக் கொண்டார். அப்படியே யோசனையில் எவ்வளவு நேரம் நின்றார் என்று அவருக்கேத் தெரியாது..


'பொலபொல'வென்று விடியத் தொடங்கி விட்டது. ' இப்பொழுது ஆரம்பித்தால் தான் செளகரியமாக இருக்கும். சூரியநமஸ்காரத்திற்கு தயார் ஆவதற்கு சரியாய இருக்கும். இங்கு வந்ததிலிருந்து மூச்சுப் பயிற்சி வேறு காலை லிஸ்டில் சேர்ந்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டே கொடியில் தொங்கிய டவலை எடுத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.

அன்றைக்கு ஐந்தே முக்காலுக்கு சூரிய உதயம். ஐந்தரைக்கே எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு தயாராகி விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

சூரிய நமஸ்காரமும், அதைத் தொடர்ந்து மூச்சுப் பயிற்சியும் முடித்து எழுந்த பொழுது ஒருவித திருப்தி மனசில் வந்து குவிந்தது அவருக்கு நன்றாகவேத் தெரிந்தது. ஆனால், வழக்கம் போல இல்லாமல் ஏதோ ஒன்றைச் சுற்றிச் சுற்றியே நினைவு சுழல்வதாக ஒரு பிரமை இருந்ததைத் தவிர்க்க முடிய வில்லை அவரால்.


'காரணம் கனவா?.. அது கனவுதான்னு அடிச்சுச் சொல்லக்கூட முடியலயே.. அண்ணா-மன்னி நினைவில் வந்தது, இராணி வாய்க்கால் தெரு, மாலுவுடன் பேசினது இதெல்லாம் வேணா கனவா இருக்கலாம்.. ஆனா, கண்ணுக்குத் தெரிய அந்த ரெண்டு புறாக்களைப் பார்த்தது?.. 'படபட'வென்று சிறகடித்து கீழ்க்கிளை புறா கண்ணுக்கு முன்னாடி மேல்கிளை தாண்டியதே.. அதுகூடக் கனவா?.. இல்லை. நிச்சயம் இல்லை. புறாக்கள் கனவில் வந்தது போலவே, நினைவிலும் காட்சியாய் வந்ததும் உண்மைதான்'


'இந்தப் புறாக்கள் வந்தது ஏதாவது சகுனக்குறியாக இருக்குமோ' என்ற யோசனை அவருக்கு திடீரென்று வந்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த வழியிலேயே யோசிப்பார்கள். கிருஷ்ணமூர்த்திக்கென்றால், 'புராணக்கதைகளில் புறா வந்த நிகழ்ச்சிகளையெல்லாம் யோசித்துப் பார்க்கலாமா?' என்று தோன்றியது. அப்படிப்பட்ட நினைப்பு வந்தவுடனேயே, சடாரென்று சிபி சக்கரவர்த்தி கதை அவர் நினைவுக்கு வந்தது. 'கனவில் மாலு கேட்டாளே, "கிருஷ்ணா, சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா"ன்னு. கழுகிடமிருந்து புறாவை மீட்க, அந்த புறாவின் எடைக்கு எடை தன் தொடைச்சதையையே அரிந்து தரத் தயாராகியும், புறாவின் எடை கூட இருக்கக் கண்டு தானே தராசுத் தட்டில் ஏறி நின்ற தியாகியின் கதையல்லவோ, அது?.. அந்தக் கதையிலும் புறா வருகிறதே?.. அந்த நினைவுதான் பூங்குழலி சொன்ன மரக்கிளை புறாவுக்கு மாறிப்போனதோ?.... ஓஹ்! நிஜத்திலும், கனவிலும் எத்தனைப் புறாக்கள்?.. ' புறாக்களுக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாகவே அவருக்குப் பட்டது.

கிரெளஞ்சப் பட்சிகளைப் பார்த்த பொழுது நேற்று கூட மனோகர்ஜி கைகொட்டி எவ்வளவு சந்தோஷப்பட்டார்?... "கிருஷ்ணாஜி! இதுக்கு முன்னடி கூட ரெண்டு மூணு தடவை இந்த பக்ஷிகளோட தரிசனம் கிடைச்சிருக்கு.. ஏதாவது நல்லபடியா, நல்ல காரியமா நான் செஞ்சு முடிச்சாத்தான் அவங்க தரிசனம் கிடைக்கும்.. உண்மைலே என்னோட பாட்டனார் மனோகர்ஜி தான் கடவுள் தூதரா பாட்டியாரோட பட்சிகள் உருவிலே வந்து என்னை இன்னும் நிறைய நல்லது செய்ய ஆசிர்வதிப்பதாகவே நான் நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க,ஜீ!" என்று ஒருதடவை அவரிடம் கேட்டது, இப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் நினைவுக்கு வந்தது.


"அந்த மாதிரி இந்தப் புறாக்கள் கனவிலும் நனவிலும் வந்து-- ஓ, புறாக்களின் கால்களில் சீட்டு கட்டி சேதி அனுப்புவாங்களாமே, அந்தக்காலத்தில்?.. இவங்க, இந்தப் புறாக்கள் எனக்குச் சொல்லும் சேதி என்ன கடவுளே!" என்று சுவரில் மாட்டியிருந்த பெரிய மஹாதேவரின் படம் நெருங்கி உணர்ச்சி வசப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. கணகள் மூடி தியானித்தார்.

"கிருஷ்ணமூர்த்தி!--தனியாச் சொல்வானேன்?.. அதான் ஒவ்வொண்ணா நடக்க நடக்கத் தெரிஞ்சிண்டு வர்றேயே?" என்று நினைப்பிலேயே குரல் கிடைத்த மாதிரி இருந்தது அவருக்கு.

'அதுவும் சரி. உயிர் கொடுத்து, அது தங்க உடலும் கொடுத்து, நல்லது செய்ய சந்தர்ப்பங்களும் கொடுத்து, புண்ணியம் சேர்த்திண்டு எங்கிட்டே வா!' என்கிறானே, அதுபோதாதா?' என்று அவர் நியாயமாக நினைத்துக் கொண்டிருக்கையில், "சார்! வரலாமா?" என்று வெளியே குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் முகம் மலர்ந்தது.

"ஓ.. வாப்பா ராம்பிரபு!"

"மார்னிங்..சார்.. உங்களுக்கு போன் கால் வந்திருக்கு.. அதைத்தான் சொல்ல வந்தேன்" என்றான் ராம்பிரபு.

"போனா?.. எனக்கா?.. யாருப்பா?"

"அரியலூர்லேந்து கால் சார். லைன்லே உங்க வீட்டு அம்மா இருக்காங்க.. ' அழைத்து வரேன்'ன்னு சொல்லிட்டு, ரிஸிவரை எடுத்து வைச்சிருக்கேன்.. பதட்டப்படாம வாங்க, சார்!" என்றான் அவன்.


என்னவோ ஏதொவென்று தொலைபேசி இருந்த ஹால் பக்கம் ராம்பிரபுவுடன் விரைந்தார் அவர்.

(தேடல் தொடரும்)

Tuesday, December 16, 2008

ஆத்மாவைத் தேடி....26

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....

26. மரக்கிளைப் புறாக்கள்

கிருஷ்ணமூர்த்தி புரண்டு படுத்தார்.

ஒரே பக்கத்தில் படுத்திருந்ததினால் சீரான சுவாசம் தடுமாறியதோ என்னவோ தெரியவில்லை, இடது பக்கம் திரும்பி இடது பக்க புஜத்தை தலைக்கு அண்டை கொடுத்தமாதிரி படுத்தது செளகரியமாக இருந்தது.
இடையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்ளலாமா என்று லேசாக மனசில் அரும்பிய நினைப்பு, அயர்ந்த தூக்க சுவாரஸ்யத்தில் அடிபட்டுப் போயிற்று. வலது கை, தலையணைக்கு பக்கத்தில் ஞாபகமாக படுக்கும் பொழுதே வைத்து விட்டுப் படுத்த வெற்றிலைப் பெட்டியைத் தொடமட்டும் செய்து விலகிக் கொண்டது. ஆழ்ந்ததூக்கம் அதல பாதாளத்திற்கு இழுத்துக் கொண்டு போகிற மாதிரியான உணர்வில் உடல் தளர்ந்து போயிற்று.


தஞ்சாவூர் ராணி வாய்க்கால் தெரு. மகாராஜாக்கள் காலத்தில் ராஜாங்க உபயோகத்தில் இந்தப் பகுதியே இருந்தன என்று சொல்லிக் கொண்டார்கள். அந்த தெருவையே அடைத்துக் கொண்டிருந்த அரண்மனை மாதிரியான வீட்டை தனித் தனியாக நான்கு போர்ஷன்களாகப் பிரித்துத் தடுத்திருந்திருந்தார்கள். வீட்டிற்குள் நுழையவே தூக்கிக் கட்டியிருந்த பத்து, பன்னிரண்டு படிக்கட்டுகளில் ஏறித்தான் வாசல் பக்கக் கதவை அடையவேண்டும்.


எப்பொழுது வந்தோம் என்று தெரியவில்லை; ஏன் இங்கு வந்தோம் என்றும் நினைவில்லை. ஆனால் ரயிலில் வந்தது, புகைக்கக்கிய ரயில் வண்டியின் இன்ஜின் தோற்றம், வெள்ளை உடுப்பு நபர் பச்சைக் கொடியை சுருட்டி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, சிவப்புக் கொடியை பிளாட்பாரத்தில் நின்று கொண்டு வீசிவீசி ஆட்டியதும் ரயில் நின்றது, மூட்டை முடிச்சுகளை போர்ட்டர் தூக்கிக் கொண்டு அண்ணாவோடு ஸ்டேஷன் வாசலுக்கு வந்து மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டது நினைவில் ஓடுகிறது. மன்னி பக்கத்தில் ஒண்டி உட்கார்ந்த பொழுது, வண்டிக்காரன் உட்காரும் இடத்திற்கு மேலேயும், வண்டி பின்பக்கமும் வண்டிக்கூடு வளைஞ்சு இருந்தது கூட தீர்க்கமா நினைவுலே தட்டுப்படறது.


பெரிய மாக்கல்சட்டி. கழுத்து வரைக்கும் வெள்ளைவெளேரென்று தயிர் சாதம். குவிச்சு வைச்சிண்டிருக்கற கையிலே மன்னிதான் சாதத்தை உருட்டிப் போடறா. இடைஇடையே வறுத்த மோர்மிளகாயை வேறு நசுக்கி நசுக்கி வைக்கறா.

"மாலு! வத்தக் குழம்பு கூட இருக்கு. போடட்டுமா?"

மாமா பெண் மாலினி "போடுக்கா.." என்கிறாள்.

கரண்டி எடுத்து குழம்பை அவளுக்கு ஊத்திட்டு, "கிருஷ்ணா! உனக்குடா?"

"சரி. மன்னி"ன்னு கையிலே போட்ட சாதத்தைக் குவிச்சிக்கிறேன். கல்சட்டி தயிர்சாதம் தேவாமிர்தமா இருக்கு. வத்தக் குழம்பு புளிப்பு சேர்ந்த தித்திக்கற காம்பினேஷன்.

"இன்னிக்கு வாழைப்பூ கறி இல்லையா?.. அதான் வாழைப்பூ மடல் கூட இருக்கு. அதிலே போட்டு சாப்பிடறேளா?"

சாதம் வாயில். பதில் சொல்ல முடியாமல் ரெண்டு பேரும் தலையை ஆட்றோம். இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்னு மன்னி சட்டி சாதத்தையும் எங்களுக்குப்போட்டு காலிபண்டிட்டா.

சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ரேழி பெருக்கி பெரிய பெரிய பாய் விரிக்கிறாள் மாலினி. தட்டி தலையணை கூட போட்டாச்சு.

"கிருஷ்ணா.. உனக்கு என்ன கதை வேணும்?.. ஈசாப்பா.. தெனாலிராமனா?"

"தெனாலிராமன் தான் நேத்திக்கு பாதிலேயே நிறுத்திட்டியே.. பாக்கி சொல்லலையே, மாலு?"- என்று நினைவு படுத்திக் கொண்டு தலைசாய்த்துத் திரும்பறேன்.

அடுக்களை வேலையெல்லாம் முடிச்சிண்டு மன்னியும் வந்திட்டா. "ஏண்டா..கிருஷ்ணா! மாலு விட்டதிலேந்து, நா முடிக்கலையா?.. மறந்திட்டையா?"

"இன்னிக்கு நீதான் எங்களுக்குக் கதை சொல்லப் போறியாம்.. என்ன, சரியா?"

"வந்து...வந்து.."ன்னு இழுத்து "எனக்குச் சொல்லத் தெரியாதே" ங்கறேன்.

"சரிடா.. நான் சொல்றேன்" என்று மாலு பெரிய மனுஷி மாதிரி சொல்றா. "சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா?"

"ஊம்.."

பாய் விரிச்ச இடத்துக்கு நேராவே, முறுக்குக்கம்பி போட்ட பெரிய பெரிய ஜன்னல்... ஜன்னல் வழியா நிலா தெரியறது. முழுசா பெரிசா பளிச்சின்னு தெரிஞ்சிட்டு பக்கத்து சந்து மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சிடுத்து.
மரத்திலே புறா மாதிரி ஒரு பறவை உட்கார்ந்திருக்கு. ஒண்ணு இல்லே, ரெண்டு. கீழே ஒண்ணு; மேலே ஒண்ணு.

திடீர்னு பேராசிரியர் பூங்குழலி குரல் கணீர்னு கேக்கறது. "மேலே இருக்கற பறவை தான் ஆத்மா.. கீழே இருக்கறது..."

"ஜீவன்.."ன்னு சொல்லப் போறத்தே சட்டுனு விழிப்பு வந்திடுத்து.

கிருஷ்ணமூர்த்தி இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டு விட்டார்... திறந்து வைச்சிருந்த ஜன்னல் வழியா படுத்துக்கொண்டே பார்த்தார். நிலா தெரியலே. கண்டது, கனவா?..

'அப்பாடி..ராணி வாய்க்கால் தெருன்னா, அப்போ ஆறு-ஏழு வயசு இருக்குமா?....யோசிச்சார். அப்போ நடந்தது, படம் பிடிச்ச மாதிரி இப்போ நினைவுத் திரைலே ஓடறது.

அண்ணாவும் இல்லே, மன்னியும் இல்லே, இப்போ.. மாலு பெங்களூர்லே இருக்கா, பேரன் பேத்தியோட. புருஷன் எச்.ஏ.எல்.லேந்து ரிடையர்டு.

எப்பவோ பெங்களூர் போயிருக்கறச்சே, "மாலு..எவ்வளவு வருஷமாச்சு.. எனக்கு ஈசாப் கதை சொல்றையா?"ன்னு கிருஷ்ணமூர்த்தி கேட்டார்.


"ஊருக்கெல்லாம் கதை சொல்றேயேடா.. அற்புதமா சொல்றேன்னு மத்தவா சொல்லி அதைக் கேக்கறச்சே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு, தெரியுமா?" அதை பிரமிப்போடச் சொல்றத்தே அவள் முகம் பூரா பூரிப்பு.

"என்ன இருந்தாலும் ஒன்னை மாதிரி சொல்ல முடியுமா?.. 'அப்புறம் என்ன நடந்தது தெரியுமா'__ன்னு அடிக்கடி நீட்டி முழக்கி, எவ்வளவு சுவாரஸ்யமா சொல்லுவே?"


"இன்னுமாடா அதெல்லாம் ஞாபகம் வைச்சிண்டிருக்கே?.."


"அதெல்லாம் மறக்கமுடியுமா, மாலு?.. அப்படியே காட்சி காட்சியா நெஞ்சிலே கல்வெட்டா பதிஞ்சு போயிடுத்து.... அந்த வீடு, அந்த பெரீய்ய ஜன்னல்.. ஜன்னலுக்குவெளியே பெரிய மரம்.. மரத்லே.."

சட்டென்று கிருஷ்ணமூர்த்திக்கு கனவுலே மரத்லே பார்த்த பறவைகள் ஞாபகம் வந்தது. இங்கேயும், மஹாதேவ் நிவாஸ்லே ஜன்னலுக்கு வெளிலே கிளை பரப்பிக்கொண்டு ஒரு பெரிய மரம்.

கனவுலே பார்த்த மாதிரியே நெஜத்திலேயும்---

விடிவிளக்கோட குறைஞ்ச வெளிச்சம் மசமசவென்றிருந்தது.

மெத்தை படுக்கையிலிருந்து கீழிறங்கிய கிருஷ்ணமூர்த்தி மெதுவாக நடந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்.


என்ன ஆச்சரியம், அவர் கனவில் பார்த்த மாதிரியே இரண்டு புறாக்கள்.. ஒன்று மேல் கிளையில், மற்றொன்று கீழ்க் கிளையில்.
உடம்பு சிலிர்த்தது கிருஷ்ணமூர்த்திக்கு.

இவர் பார்த்துக் கொண்டே இருக்கையில், கீழ்க்கிளை பறவை, சட்டுன்னு பறந்து ரெண்டு கிளை மேலே தாண்டி கொஞ்சம் மேலே போய் அமர்ந்தது.
ஓ!.. பேராசிரியர் பூங்குழலி சொன்ன மாதிரி மேல் கிளை பறவையை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறதோ?..


'தான் தான் கீழ்க்கிளைப் பறவையோ'ன்னு கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு நிமிஷம் நெஞ்சில் நினைவொன்று வெட்டி விட்டுப் போயிற்று.


(தேடல் தொடரும்)

Monday, December 15, 2008

ஆத்மாவைத் தேடி....25

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


25. மீண்டும் கிரெளஞ்ச பட்சிகள்

கோதரி பூங்குழலி தொடர்ந்து பேசலுற்றார்:

"இவ்வளவும் சரி. அடிப்படையான கேள்வி ஒன்று இருக்கிறது. உடம்பு, மனம், புத்தி, புலன்கள் என்று வரிசைகட்டி நிற்கும் இவற்றைச் செயல்படுத்துவது பிராணன் என்றால், அந்தப் பிராணனைச் செயல்படுத்துவது யார்?.. யாரால் இவையெல்லாம் இயங்குகின்றன?..


"'கேனோபநிஷ'த்தில் இந்த கேள்வி எழுப்பப்பட்டு, பதிலையும் புரிய வைக்கிறது.


"'கேன' என்றால், 'எதனால்' என்று அர்த்தம். இந்த உபநிஷதம் சாமவேதத்தின் ஒன்பதாவது பகுதியைச் சேர்ந்தது.



"ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம் மனஸோ மனோ யத்
வாசோ ஹ வாசம் ஸ் உப்ராணஸ்ய ப்ராண:
சக்ஷூஷச்சக்ஷூரதிமுச்ய தீரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி"


"பிராணனைச் செயல்படுத்துவது முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பது ஆத்மா'-- என்று இந்த மந்திரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


"அம்மாடி!.. ஒரு வழியாக நேரடியான பதில் இப்பொழுது கிடைத்து விட்டது. அதற்குப் பிறகு என்னவென்று பார்ப்போம்.


"வெளிப்படத் தெரியும் புற உலகில் காண்பனவற்றை அறிவதற்காக அமைந்தவை புற உறுப்புகள். அதனால் புற உறுப்புகளால் அகத்திலுள்ளதை அறிய முடியாதாம்... ரொம்ப சரி.. வேறு எப்படித்தான் பார்ப்பதாம்?.. அல்லது உணர்வதாம்?.


"'நாம் அறிந்தவைகளுக்கெல்லாம் மேலானது அது; அறியாதவைகளுக்கும் உயர்வானது; ஆதலால் அதுபற்றி அறியோம். எங்களுக்கு இதுபற்றிச் சொன்னவர்கள், இப்படித்தான் சொன்னார்கள்' என்கிறது அடுத்த மந்திரம்..



ஆஹா, ஞானம் சித்தி பெற்ற தவ சிரேஷ்டரான முனிவர், தனக்கு ஞானம் சித்தி பெற்றிருந்தாலும் எவ்வளவு அடக்கமாகக் கூறுகிறார் என்று ஆச்சரியப்படுகிற நேரத்தில், ' இது-அது' என்று ஒவ்வொன்றையும் சுட்டி, 'ஓகோ, அதுதான் இதுவாக்கும்' என்று அறிந்து கொள்கிற மாதிரி, ஆத்மாவை அறிய முடியாது' என்று நமது ஜாக்கிரதை உணர்வைக் கூட்டுகிறார்.


"அடுத்தடுத்த மந்திரங்களைப் பார்த்தால், புரிபடுகிறது மட்டுமல்ல, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று வியந்தும் போகிறோம்.

"எதைச் சொல்லால் சொல்லித் தெரிய வைக்க முடியாதோ, எதனால் சொல்ல முடிகிறதோ, அதுவே ஆத்மா!


"எதை மனசால் அறிந்து கொள்ள முடியாதோ, எதனால் மனம் அறிந்து கொள்ள முடிகிறதோ, அதுவே ஆத்மா!


"எதை விழிகளால் தரிசிக்க முடியாதோ, எதனால் விழிகளால் பார்க்க முடிகிறதோ, அதுவே ஆத்மா!


"எதை காதுகளால் கேட்க முடியாதோ, எதனால் காதுகள் கேட்கும் சக்தியை பெற்றிருக்கிறதோ, அதுவே ஆத்மா!

"எதை மூச்சினால் சுவாசிக்க முடியாதோ, எதனால் மூச்சு சுவாசம் பெற்றிருக்கிறதோ, அதுவே ஆத்மா!


"ஆக, எதனால் சொல்லித் தெரியவைக்க முடிகிறதோ, எதனால் மனதுக்கு அறியும் சக்தி கிடைத்திருக்கிறதோ, எதனால் பார்க்க, கேட்க, சுவாசிக்க முடிகிறதோ அதுவே தான் ஆத்மா என்றால்---ஓ, ப்ரம்ம சொரூபமே ஆத்மாவா?


"நாதன் உள்ளிருக்கையில், தேடித் தேடித் தினம் தினம் எங்கெல்லாம் திரிந்து அலைகின்றோம்?..

"ஓம்..நமசிவாய--- போற்றி, போற்றி!
நின் மலர்த்தாள் போற்றி, போற்றி!"

விழிகளை மூடித் திறக்கையில் 'குபுக்'கென்று வெளிப்பட்டு, லேசாய், கோடாய்
கன்னங்களில் வழிந்த நீரைச் சடாரென்று துடைத்துக் கொண்டு, மேலும் பேச முடியாது, தழுதழுத்தக் குரலில் தலை தாழ்த்தி, "நன்றி..நமஸ்காரம்.." என்று இரண்டே வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மேடை விட்டு இறங்கினார் சகோதரி பூங்குழலி.


சபையே நிசப்தத்தில் உணர்ச்சி மிகுந்து ஆழ்ந்த மோனத் தவத்தில் இருந்தது. அந்த அமைதியை கலைத்தது போல கணகணவென்று மணி சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, "டணார், டணார்' என்று ஆலயமணி ஓசை பூங்குழலியின் பேச்சை ஆமோதித்தது.


மகாதேவ் நிவாஸின் சிவன் கோயிலின் சாயரட்சை பூஜையின் தொடக்க அறிகுறியான அந்த மணியோசையைக் கேட்டதும் எல்லோர் முகமும் அர்த்தபுஷ்டியுடன் மலர்ந்தன.


கிருஷ்ணமூர்த்தி வேகமாக மேடையேறி, உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளால் பேராசிரியை பூங்குழலிக்கு நன்றி சொன்னார்.


அதைத் தொடர்ந்து மனோகர்ஜியும், கிருஷ்ணமூர்த்தியும் கோயிலை நோக்கி முன்செல்ல அனைவரும் அவர்களைத் தொடர்ந்தனர். அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்பதே போன்று மண்டபத்தின் நடு ஸ்தூபி அருகே அந்த இரண்டு கிரெளஞ்ச பட்சிகளும் சிறகடித்து அமர்ந்திருந்தன.
அவற்றைப் பார்த்ததும் மனோகர்ஜி எல்லை மீறிய சந்தோஷத்தில் கைதட்டி மகிழ்ந்தார்.


(தேடல் தொடரும்)

Friday, December 12, 2008

ஆத்மாவைத் தேடி...24

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


24. நானும் நானும்


கோதரி பூங்குழலி நளினமான தனது குரலில் தொடர்ந்து பேசலானார்.

"அனைத்து உயிர்களின் உள்ளேயும் இறைவன் இருக்கின்றான் என்கிற எண்ணமே மேலான செய்கைகளுக்கு நம்மை வழிநடத்திச் செல்லும்.
நம்மிடம் இருப்பது போலவே, அடுத்தவர் உள்ளத்திலேயும் அதே இறைவன் உறைந்திருக்கிறான் என்கிற நினைப்பு, 'தான்', 'தனது மேதமை' என்கிற மமதையை மண் போட்டு மூடச்செய்யும்.

"அவ்வளவு தூரம் போவானேன்?.. பரிசோதனையாக, தனது சின்னஞ்சிறிய குடும்பத்திற்குள்ளேயே, குடும்ப உறுப்பினர்களே ஒருவொருக்கொருவர் மதித்தல், விட்டுக் கொடுத்தல், உதவியாய் இருத்தல் போன்ற நாளும் விதவிதமான நல்ல செயல்களை புழக்கத்துக் கொண்டு வரத் தொடங்கினால், அந்த உயர்ந்த எண்ணங்கள் ஏற்படுத்தும் மாறுதலை நிதர்சனமாக உணரலாம். ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும் நல்ல சிந்தனை, அதன் நடைமுறைப்படுத்தல் ஏற்படுத்தும் மாற்றம் ஆச்சரியப்படத் தக்கது. அதை உண்ர்ந்தவரே அறிவர். சின்னஞ்சிறிய நமது குடும்பத்தில், அதை அனுபவப்படுத்தும் பொழுது, சின்னஞ்சிறிய நமது சொந்த 'லாப்'பில் பரிசோதனை செய்து பார்த்தத் திருப்தியும் நமக்கு ஏற்படும்.

"அடுத்த கேள்வி. நம் எல்லோரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கையில், ஏன் சில நேரங்களில் நமது குறைந்தபட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேறாமல் போவதன் காரணமென்ன?..

"முண்டக உபநிஷதத்தில் அழகான காட்சி ஒன்று வருகிறது. சுவாமி விவேகானந்தர் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்ட காட்சி அது.

"பெரிய மரம் ஒன்று. அதில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன.
அச்சு அசலாக இரண்டு பறவைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஒன்று கீழ்க்கிளையில் என்றால், மற்றொன்று சற்று மேலே இருக்கும் மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது.

"இந்த நேரத்தில், கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் அந்த அழகுப்பறவை தன் அலகில் பழம் ஒன்றைக் கொத்திக்கொண்டு சுவைக்க முற்படுகிறது. இதோ, அதைக்கொத்திசுவைக்கவும் தொடங்கி விட்டது.

"மேல் கிளையில் வீற்றிருக்கும் பறவை கண்கொட்டாமல் பழத்தைத் தின்று சுவைக்கும் கீழ்க்கிளைப் பறவையை தேமேனென்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

"--கண்ணுக்குத் தெரிவது இந்தக் காட்சி. இந்தக் காட்சியின் விளக்கமாய் சொல்லப்படும் தத்துவ வெளிப்பாடு அழகு மிக்கது.

"மரம் மனித சரீரத்திற்கு உவமை. கீழ்க்கிளையில் பழத்தை ருசிக்கும் பறவை ஜீவன். பழம் தின்னும் பறவையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மேல்கிளைப் பறவை ஆத்மா. அனுபவிக்கும் இன்ப-துன்பங்களே பழம்.

"இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்ப துன்பத்தை அனுபவிப்பது ஜீவனே தவிர, ஆத்மா இல்லை. இதனால் தான் ஒரு இன்பம் என்றால் பாதாதிகேசம் மகிழ்ச்சி அலை பரவுகிறது. ஒரு துன்பம் எனில், உள்ளத்திலிருந்து ஆரம்பித்து உடல் வரை சோர்ந்து போகிறது.

"இன்பமோ துன்பமோ எதுவரினும் அதற்கேற்ப ஒரு அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தின் அனுபவத்திற்கேற்ப மனமும் புத்தியும் அவ்வவ்போது மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. புத்தியின் வழிகாட்டுதலாகவோ, அல்லாது மனத்தின் வழிகாட்டலாகவோ அன்றி இரண்டும் சேர்ந்து முடிவெடுக்கும் வழிகாட்டுதலாகவோ, செயல்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளின் திரட்சி தான் கனிந்து ஒரு முழுமைபெற்ற சிந்தனையாக உருவாகிறது.

"இந்த முழுமைதான் ஒரு மனிதனை இறைவனிடம் நெருங்கச் செய்கிறது. இதற்கு ஒரு வழிகாட்டு என்று இறைஞ்சுகிறது.

"நெருங்கினால், மேல் கிளையில் இருக்கும் பறவையும் தானும் வேறல்ல, அதன் பிரதிபிம்பமே தானென்று கீழ்க்கிளைப் பறவை உணரும்; உணர்ந்து ஒளிமயமான மேற்பறவையுடன் கலந்து விடும். கலப்பது என்பது ஒன்றில் ஒன்று மேவி ஒன்றாவது. நிழல் நிஜத்தில் ஐக்கியமாவது; ஒரே ஜோதியாவது.

"ஆரோக்கியமான இந்தச் சிந்தனையிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இன்பமோ, துன்பமோ இது சாஸ்வதமானதல்ல என்று தெரிகிறது. அதாவது நீடித்த துன்பமுமில்லை; நீடித்த இன்பமுமில்லை. கண்கட்டு வித்தையான இந்த உலக இன்பத்தை அனுபவிக்கும் அந்த நீட்சியின் கடைக்கோடியிலேயே துன்பம் காத்திருப்பது போலவே, துன்பத்திற்கு அடுத்து இன்பமும்.

"அதனால் ஒன்று செய்யலாம். இன்பமோ, துன்பமோ எதுவரினும் அதை அனுபவிக்கும் நம் மனதை ஒரு தயார்நிலையில் வைத்துக் கொள்ளலாம். தேனை மாந்துகிறேன் பேர்வழி என்று தேனீ, தேனில் மூழ்கி இறக்கைகள் நனைந்து பறக்கத் தத்தளிக்கும் அந்த அவலநிலை மாதிரி இல்லாமல், இன்பமோ, இல்லை துன்பமோ அதை எதிர்கொள்ளும் பொழுது அதில் மூழ்கிவிடாமல் தடுத்தாற்கொண்டால் போதும். இப்படிச் செய்வது மனவளமைக்கு ஆரோக்கியமளித்து, உடல் வலிமையை பாதுகாத்துப் பேணும்; இன்ப-துன்ப நிலையாமையைப் புரிந்து கொண்டு அதைச் சட்டைசெய்யாமல் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மையை உருவாக்கும். அடுத்துச் செய்ய வேண்டியதை ஆலோசிக்கும் திண்மையை மனசுக்குக் கொடுக்கும்.


"இதைத்தான் ஆன்மீகத்தில், இன்பமோ-துன்பமோ எதுவரினும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளுதல் என்கிறார்கள். தாமரை இலைத் தண்ணீர் மாதிரிவரும் வாழ்க்கையை எதிர்கொள்ளுதல் என்கிறார்கள். கொண்டாடிக் கூத்தாடுதலும் இல்லை; கூனிக் குறுகி நைந்து போதலும் இல்லை என்கிற நிலை. எதற்கேற்பவும் ஆன மனவலிமையைக் கொடுப்பவனும் அவனே.


"ஒன்று நிச்சயம். நம்மில் இருக்கும் இறைவனின் கட்டுப்பாட்டிலேயே அனைத்தும் நடக்கின்றன. அவனில் அடக்கம் பெற்ற சிந்தனை, வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டுமல்ல, ஏனோதானோ என்றில்லாமல் வாழ்வாங்கு வாழவும் வழிவகுக்கிறது.


"ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாக்ப்ராணச் சக்ஷூ: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி: ஸர்வம் ப்ரஹ்மெளபநிஷதம் மாஹம் பிரஹ்ம் நிராகுயாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம் கேsஸ்து: ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸூ தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி !!

-- என்பது கேன உபநிஷதத்தின் சாந்தி மந்திரங்களில் ஒன்று.

"என்னுடைய் அங்கங்களும், வாக்கும், பிராணனும் பலம்பெற்றுத் திகழட்டும்!கண், காது மற்றும் எல்லா இந்திரியங்களும் நன்கு இயங்கும்படி ஆற்றல் பெற்றிருக்கட்டும்!அனைத்தும் உபநிஷதங்கள் கூறுகின்ற பிரம்மமே!பிரம்மம் என்னை விட்டு விலகலாகாது!நானும் பிரம்மத்தை விட்டு விலகலாகாது!இந்த விடாத உறவுநிலை என்றும் நிலைபெறட்டும்!--என்று மேன்மேலும் பிரார்த்திக்கிறேன்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!"

பேராசிரியர் சகோதரி பூங்குழலி காகிதக் கத்தையின் அடுத்த பக்கத்தைப் புரட்டும் பொழுது சபையே இறைவனின் அருகாமையை உணர்ந்த உணர்வில் கட்டுண்டு கிடந்தது.


(தேடல் தொடரும்)




Monday, December 8, 2008

ஆத்மாவைத் தேடி....23

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

23. ஆனந்த உடம்பு

கோதரி பூங்குழலி உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். அவரது உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக் கொண்டது, எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் அவர் பேச்சை செவிமடுத்து அவ்வப்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டதிலிருந்து தெரிந்தது.



"புற உலகில் பார்க்கும், படிக்கும், புதிதாகத் தெரிந்து கொள்ளும் விஷயங்களுக்கேற்ப புத்தி தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். முதலில் எதுபற்றியாவது கொண்ட எண்ணம் தவறாகத் தெரிந்தாலும், பாம்பு சட்டையைக் களைகிற மாதிரி களைந்து புதுசாக உணர்ந்த கருத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இப்படிச் செய்வதுஆரோக்கியமான ஒன்று. இது புதுப்புது சிந்தனைகளுக்கேற்ப தன்னை புதுவார்ப்புகளாய் செழுமைபடுத்திக் கொள்ளும் புத்திக்கு அழகு. மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று வீம்புத்தனமாய் அடம் பிடிக்கும் புத்தி நாளாவட்டத்தில் நடைமுறை உலக மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்காமல் முடங்கிப் போகும். செய்யும் செயல்களில் தோல்விகள் மிகுந்து தொய்ந்து போக நேரிடும்.


"மனதுக்கு என்றால், புத்தி செயல்படுத்தத் துடிக்கும் எதையும் உணர்வுகள் அடிப்படையில் உரசிப்பார்க்க முனையும். கற்பனை வலை பின்னும். சரிப்பட்டு வரவில்லை என்றால் , புத்தியை சந்தேகப்படுத்தத் தயங்காது. இந்த தயக்கம், புத்தியின் செயல்படுத்தும் வேகத்தைக் குறைக்கும். சந்தேகம் பொய்ந்துப் போகின், புத்தியால் தாங்கிக்கொள்ள முடியாது. மனத்தை மட்டந்தட்ட முயலும். இரண்டும் இரண்டு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். ஆரோக்கியமான வளர்ச்சிகள் தடைப்பட்டுப் போகும்.



"ஆனால், இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், புத்தியோ மனமோ இரண்டுமே தாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தாம் செயல்படும் என்பது ஓர் அடிப்படைஉண்மை. மேலோட்டமாகப் பார்க்கையில் இரண்டுக்கும் அனுபவம் என்பது ஒன்றாகத் தானே இருக்கும் என்று தோன்றும். ஒரு விஷயத்தில் மனதில் அலசி, அந்தக்காரியம் வெற்றி பெற்றதென்றால், அது மனசுக்குக் கிடைத்த வெற்றியாக மனிதன் எண்ணத் தலைப்படுவான். அதைத் தொடர்ந்து, சடாரென்று உடனே எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல், யோசித்து, யோசித்து தாமதித்து நடவடிக்கைகள் எடுப்பான். யாராவது சொல்லி, எதையாவது படித்து, யதார்த்த உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கணக்குப் போட்டு சட்டுபுட்டென்று காரியம் வெற்றியடைந்தால், அதை புத்தி கொடுத்த வெற்றியாக மனிதன் எடுத்துக் கொள்வான். அந்த முறை தோல்வியடையும் வரை, அந்த முறையையே தொடர்வான். இது அமாவாசை, பெளர்ணமி மாதிரி மாறி மாறி நடவடிக்கை.



"இப்படி மாறி மாறி இல்லாமல் தொடர்ந்த வெற்றிக்கு, புத்தியும் மனதும் ஒன்றிற்கொன்று முரண்டு பிடிக்காமல், இரண்டு மாடுகளையும் ஒருசேர வண்டியில் பூட்டி சவாரி செய்வதை சாத்தியப்படுத்த வேண்டும். புத்தியையும், மனதையும் ஒருசேர ஒரே சிந்தனையில் மையப்படுத்துவது தான் அது.


"இதையே இன்னொரு பாஷையில் சொல்வதென்றால், புத்தியையும் மனசையும் ஒன்றிற்கொன்று விஞ்சாமல் பார்த்துக் கொள்வது தான்.
"புத்தியையும் மனதையும் கணவன் -மனைவி என்று கொண்டால், ஒன்றிற்கொன்று காதல் வயப்பட வேண்டும்; பிற்பாடு, இரண்டும் ஒன்றிற்கொன்று வசப்பட்டுப் போகும்.



"இதை செயல்படுத்த ஒரு சுலபமான வழி இருக்கிறது.



"நமது அனுபவங்களை நல்லனவையாக அமைத்துக் கொண்டால் போதும்; இந்த இரட்டை மாட்டு வண்டி சவாரி சாத்தியப்பட்டுப் போகும்.


"செயல்களே அனுபவத்தை ஏற்படுத்துமாகையால், நல்ல எண்ணங்கள், நல்ல நண்பர்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மமதை கொள்ளாமமை, பிறர் சொல்லும் நல்லனவற்றைக் காதுகொடுத்துக் கேட்டல், பிறரை வெறுத்தல் இன்மை, சுறுசுறுப்பு, பயன் கருதாத செயலூக்கம், வறுமையிலும் செம்மை என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் போதும். ரொம்ப சுலபத்தில், ஒரு பெரும் கூட்டத்தின் மத்தியில் நாம் அடையாளம் காணப்பெற்று, நல்லனவை நடக்கத் துவங்கும். கவனத்தில் கொள்ளவும்: நமது காத்திருப்பு, நல்லதொரு தொடக்கத்தின் துவக்கத்திற்குத் தான். அது துவங்க வேண்டியதற்கு தான்; பிறகு நல்லவை நடப்பது தொடருவதை தக்க வைத்துக் கொள்வது தான், நாளுக்கு நாள் நமது வேலையாகிப் போகும். எது எப்படி இப்படி நம்மைக் குன்றின்மீது ஏற்றி கொண்டாடச் செய்தது என்பது நமக்கே வியப்பாகிப் போகும்.


"புத்தியும் மனமும் கூடிக் குலாவும் மகிழ்ச்சியில், நல்லனவற்றைத் தேடிப்போக வேண்டாம்; நல்லனவையே நம்மைத் தேடி வரும்; அப்புறம் வாழ்க்கை பூராவும் வசந்தம் தான். 'வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்; அதை வாங்கிக் கொடுத்தப் பெருமை எல்லாம் எம்மைச் சேரும்' என்று புத்தியும் மனசும் ஒருசேரக் களிக்கும். அவை களித்தால் நமக்குக் கொண்டாட்டம்; இரண்டும் முரண்டு பட்டால் தான் நமக்குத் திண்டாட்டம்.

"ஆனால், புத்தியையும், மனதையும் ஒன்றிற்கொன்று வசப்படுத்துவது லேசுப்பட்ட காரியம் இல்லை.

"அப்படி வசப்படுத்தி மட்டும் விட்டால், இன்பத்தைத் தலையாகவும், மகிழ்ச்சியை வலது பக்கமாகவும்,. சந்தோஷத்தை இடது பக்கமாகவும் கொண்ட ஆனந்த உடம்பு பெறலாம்.


"உள்ளத்தில் குடிகொண்ட இறைவனுக்கு மனசாலும், புத்தியாலும் புஷ்பாஞ்சலி செலுத்தலாம்.


"எப்படி?

"த்வமேவ மாதா ச்சபிதா த்வமேவ
த்வமேவ பந்து ச்சஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மமதேவ தேவ!"


-- நீங்கள் தான் அன்னையாகவும், தந்தையாகவும்,
சொந்தமாகவும், நண்பனாகவும்,
கல்வியாகவும், செல்வமாகவும்
எங்களுக்கு இருக்கிறீர்கள்!
ஹே! தேவனுக்கெல்லாம் தேவனே!
நீதான் எனக்கு எல்லாமுமாகி இருக்கிறாய்!


(தேடல் தொடரும்)

Friday, December 5, 2008

ஆத்மாவைத் தேடி....22

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


22. மனமும் புத்தியும்

பிரதிநிதிகள் அறுபத்து நான்கு பேரையும், எட்டுபேர் கொண்ட குழுவாக, எட்டுக் குழுக்களாகப் பிரித்திருந்தது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைப்பு. அந்தந்த தலைப்பிலான பேச்சுக்களை அந்த தலைப்பு சார்ந்த குழு தங்களுக்குள் அலசி ஆராய்ந்து 'பேப்பர்'களை சமர்ப்பித்திருந்தார்கள். அந்தத் தலைப்புகளில் தான், பேசிக்கொண்டிருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, சகோதரி நிவேதிதாவின் குழு சார்ந்த சகோதரி பூங்குழலி பேசத்தொடங்கினார்.

அவர் குரல் தீர்க்கமாக, வார்த்தைக்கு வார்த்தை ஸ்பஷ்டமாக வெளிப்பட்டது. இதற்கு மேல் என்ன என்று உன்னிப்பாக அவையோர் கேட்கத் தயாராயினர்.


"அகவயப் பார்வையின் அவசியம் தெரியாத நேரத்து, சகஜமான வெளிப் புலனுணர்வுகளும் அவை அளிக்கும் இன்பமே முக்கியமானதாகத் தெரியும். அதுவே இறுதி எல்லையாக உணர்வதால், அதற்குத் தாண்டி எதுவும் இருக்க முடியாதென்று கூடத் தோன்றும்.


"செயல்படுதலால், அனுபவமும், அந்த அனுபவத்தின் பலனைத் துய்ப்பதால் அதுபற்றிய அறிவாகிய புத்தியும் ஏற்படலாம். அனுபவங்களும், அவற்றைத் துய்ப்பதற்கான திறமைகளும் அல்லாது வாய்ப்புகளும் எல்லோருக்கும் வாய்த்து விடப்போவதில்லை. காக்பிட்டில் உட்கார்ந்து விமானத்தைச் செலுத்தும் விமான ஓட்டியின் சாகச அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது தான். நாம் வியப்புடன் அவர் சொல்வதைக் கேட்பது அவருக்கு சாதாரணமாக ஆன அனுபவமாய் இருக்கலாம். இப்படியான ஒரு அனுபவம், ஒரே காரியத்தைத் தொடர்ந்து செய்வதான பழக்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. எழுபதாயிரம் அடி உயரத்தில் விமானம் ஓட்டிய விமானி, வீட்டுக்கு வந்ததும் மனைவி சமையலை ரசித்து, "எப்படி இவ்வளவு சுவையாக இந்த கருணைக்கிழங்கு மசியலைப் பண்ணினே?" என்று வியக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அற்புதம். எல்லாவற்றையும் ரசிக்கும் மனோபாவமும் எல்லோருக்கும் இருந்து விடப்போவதில்லை.


"கொடைக்கானலில் குறிஞ்சிப்பூ பூக்கையில், எங்கிருந்தோவெல்லாம் வந்து அதைப்பார்த்து மகிழ்வோர் உண்டு. வெளியூர் வாசிகளைப் பார்த்து, "எதற்குக் கூட்டங்கூட்டமாக இங்கு இப்படி வருகிறார்கள்?" என்று உள்ளூர்வாசி மலைக்கலாம். வள்ளல் பாரியின் பரம்பு மலை வளப்பம், அந்த பரம்புமலையில் வாழ்வோருக்குத் தெரியாது என்று ஒரு வாசகம் உண்டு.


"பொதுவாக மனத்தின் இயல்பு 'சட்'டென்று ஒரு விஷயம் பிடித்துப் போதல்; பிடித்துப் போவதை பரவசப்பட்டு ரசித்தல். வண்ண வண்ண பொம்மைகளைப் பார்த்து குழந்தை கைகொட்டிச் சிரிக்குமே, அதுபோல! கல்மிஷமில்லாத இந்த குணத்திற்கு ஈரேழு உலகங்களும் சமனாகாது.


"ஆனால், புத்தி என்பது வேறு! அது பெற்ற அறிவுக்கு அடிமையான ஒன்று. தீக்குள் விரலை வைத்தால், சுடுமே தவிர, 'நந்தலாலா, உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்யா' என்னும் பாரதியைப் பார்த்து பிதற்றுவதாகப் பரிகசிக்கும்!


"புத்தி எச்சரிக்கை உணர்வு கொண்டது. "ஏய்! குதிச்சிண்டு ரொம்ப தூரம் போகாதே! திரும்பற அலை இழுத்திண்டு போயிடும்"ன்னு எச்சரிக்கும் குணம் கொண்டது. எச்சரிக்கைகள் எப்பொழுதும் 'எக்டஸி' நிலை அடையாமல் தடுக்கும். அறிவைத் தாண்டி எதையும் செய்யத் துணியாது; துணியும் நேரத்தும், யோசிப்பு வேலிபோட்டுத் தடுக்கும். பல எதிர்கால சாதனைகளை மொட்டாய் இருக்கும் பொழுதே பொசுக்கி விடும். அதற்காக யோசிப்பு கூடாதென்றும் இல்லை; எடுத்தெற்கெல்லாம் யோசிப்பு, எதிர்மறைச் சிந்தனைகளைக் கூட்டும். அதுவும் யோசிப்பு என்பது பெற்ற அறிவிற்கேற்பத்தான் இருக்கும் என்பதால், எத்தனையோ தேவையான விஷயங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நழுவவும் வாய்ப்பிருக்கிறது.


இந்த இடங்களில் எல்லாம் புத்தி என்பதை பிறரால் தெரியப்படுத்தப் பட்ட, அல்லது படித்துத் தெரிந்து கொண்ட அறிவு என்கிற அர்த்தத்திலேயே உபயோகப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அறிவு வேறு ஞானம் என்பது வேறு. புத்தகங்களிலும், கல்விச் சாலைகளிலும் படித்தவை அறிவு என்று கொள்ளலாமா என்றால் கொள்ளலாம்; ஆனால், அதுவே முழுமை பெற்ற அறிவாகாது. அது இன்னொருவரால் தெரிவிக்கப்பட்ட, புகட்டப்பட்ட, நாம் புரிந்து கொண்டதற்கேற்பதான அறிவு. பெற்ற அறிவைக் கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி புதிதாக கண்ட அனுபவத்தின் பேரில் ஏதாவது புதுசாகத் தெரிந்தால், அதை ஞானம் எனலாம். புற்றுநோய்க்கு தான் பெற்ற அறிவால் க்யூரி அம்மையார் ரேடியம் சிகித்சை கண்டறிந்து உலகுக்கு அளித்த கொடை, ஞானம்; அந்தக் கண்டுபிடிப்பு சமுதாயத்திற்கு பயன்படுவது இன்னும் விசேஷம். இது பற்றி நாம் படித்துத் தெரிந்து கொண்டது அறிவு. அறிவு என்பது கற்பிக்கப் பட்ட ஒன்று; பெற்ற அந்த அறிவை மூலதனமாக வைத்து முயற்சி செய்த சுய வெளிப்பாடு இல்லை; பலருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் தான், இந்த மாதிரி படித்துப் பெற்ற அறிவிற்கெல்லாம் நிறைய பேர் அலட்டிக் கொள்வதில்லை.


"இது இன்னதென்று கண்டு கொள்ளல், தெரிந்து கொள்ளல், போன்ற 'பார்க்கின்ற' சமாச்சாரங்களே புறக்கண்களால் ஆகக்கூடிய காரியங்கள். ரசித்தல், அனுபவித்தல்,மகிழ்தல் போன்றவை மனம் சம்பந்தப்பட்டவை.
"'பார்த்து ரசித்தான்'... என்கிற சொல்லில், 'பார்த்தல்' கண்களுக்குச் சொந்தமாயும், 'ரசித்தல்' மனதுக்குச் சொந்தமாயும் இருக்கிறது.


"புற உலகில் கண்ணால் பார்க்கும், காதால் கேட்கும், புலன்களால் தொட்டு உணரும் எல்லாவற்றிற்கும் தான் புத்தி சம்பந்தப்பட்டிருக்கிறது. அதாவது புத்தியின் ஆளுகைக்கு உட்படுத்தி அவற்றை அலசலாம். மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவை. புத்தி குறுக்கே புகுந்து தடுத்தாலும் அதை அப்பால் தள்ளி அன்பு பாராட்டும் உணர்வுகள் அவை. 'ஆமாம், அவன் அப்படித்தான் ---அதுக்காக விட்டுக் கொடுத்திட முடியுமா?' என்கிற பரிவே மனசில்கொப்பளித்து ஆதரவு தந்து அணைத்துக் கொள்ளும்.


"அறிவாகிய புத்தி காரியவாதி; செஸ் விளையாட்டு போல கணக்குப் போட்டு, காய் நகர்த்தி காரியம் சாதித்துக் கொள்வது; கணக்குப் போட்டு எதிரியை வீழ்த்தும், வாழ்த்தும் சாணக்கியத்தனம் கொண்டது.

"மனத்திற்கு என்று சில கல்யாணகுணங்கள் உண்டு. தனக்குப் பிடித்து விட்டதென்றால், தனக்குப் பிடித்தவர் என்றால், லாப-நஷ்ட கணக்குப் பார்க்காது. தன்னிடம் இல்லை யென்றாலும், கடன் வாங்கியாவது இன்னொருவருக்குச் செய்து களிப்படையும். எத்தனைபட்டும் 'புத்தி' வராது, மீண்டும் மீண்டும் தன்னை இழத்தலில் சந்தோஷப்படும். பிறர் துன்பத்தைத் தன்மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு மருகும்.



--இது பற்றி இன்னும் நிறையச் சொல்ல வேண்டுமென்கிற ஆர்வத்துடன் காகிதங்களைப் புரட்டினார், பூங்குழலி.

(தேடல் தொடரும்)














Monday, December 1, 2008

ஆத்மாவைத் தேடி....21

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


21. நிழல் காட்டிய ஒளி


சகோதரி நிவேதிதா தொடர்ந்து பேசலானார்:

"இந்த பிராணன், உயிர்க்காற்று தான் பிரதானமாக இருந்து கொண்டு தானே அபானன், சமானன், வியானன், உதானன் என்று வேறு வேறு பெயர்களில் வேறு வேறு செயல்களில் ஈடுபடுகிறதாம். பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும் பிராணன் கொடுக்கும் சக்தியாலே தான்.

"'சித்த வைத்தியம்' தலைப்பில் பேசவிருக்கும் வைத்தியநாதன் அவர்கள் இந்த பிராணனைப் பற்றி விவரமாகப் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆகவே இது பற்றிமேலோட்டமாக நான் சொல்ல நினைக்கிறேன்.

இறைவன் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பொழுதே, பிராணசக்தியும், அந்த பிரபஞ்சத் தோற்றத்துடனேயே ஓர் அம்சமாகத் தோன்றிவிட்டது. ஆக, வெளியெங்கணும் இந்தப் பிராணன் வியாபித்திருக்கிறது.

"பூரிதி வை ப்ராண: புவ இத்யபான: ஸூவரிதி வ்யான: மஹ இத்யன்னம் அன்னேன வாவ ஸர்வே ப்ராணா மஹீயந்தே"
--என்று யஜூர்வேதம் சார்ந்த தைத்திரீய உபநிஷதில் சொல்லப் பட்டிருக்கிறது.

.இயக்க சக்திக்கு காரணமான பிராணன் உட்கொள்ளும் உணவினால் தான் இயங்குகிறது என்று சொல்கிறது. அதாவது உட்கொள்ளும் உணவே, உடல்இயக்கத்திற்கு சக்தியளித்து பிராணனை நிலைபெறச் செய்கிறது என்று அர்த்தம். ஆதலால் உண்ணும் உணவு தெய்வீகமானது. பிறருக்கு உபசரித்து உணவிடுதலும் தெய்வீகமான செயல். உடல் உழைப்புக்கேற்பவும், ஏற்கும் அளவும் அளவோடு சாப்பிட்டு அதையே அமுதமாக பாவிக்கவும் வேண்டியிருப்பதால், அது மருந்து போன்றதும் கூட.

"ஊர்த்வம் ப்ராணமுன்னயதி அபானம் ப்ரத்யகஸ்யதி மத்யே வாமனமாஸீனம் விச்வே தேவா உபாஸதே"
--என்று கட உபநிஷதம் சொல்கிறது. கடர் என்னும் முனிவர் இதை அருளியதால், அவர் பெயர் கொண்டு அழைக்கப்படும் இதுவும் யஜூர்வேதம் சார்ந்த உபநிஷதம் தான்.

"உடம்பின் நடுவில் ஜீவன் உள்ளது. இந்த ஜீவன் தான் பிராணனை மேலேயும், அபானனை கீழேயும் செலுத்துகின்றது. அவயவங்கள் அத்தனையும் ஜீவனையே சார்ந்து இருக்கின்றன".

பிராணனுக்கு அடுத்து ஜீவன்.

"ஓ! இந்த ஜீவன் தான் உயிர் போலிருக்கிறது!

"புரிவது போலிருக்கிறது; ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.


"நமது செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம்; உடல், மனம் என்று.
இந்த இரண்டு செயல்பாட்டிற்கும், இரண்டும் சேர்ந்த செயல்பாட்டிற்கும் சக்தி அளிப்பது பிராணனே. இதையே இன்னொரு விதத்திலும் சொல்லலாம். பிராண சக்தியை உடலும், மனமும் தமது தனித்தனி செயல்பாட்டுக்கும், சேர்ந்த செயல்பாட்டிற்கும் உபயோகப்படுத்திக் கொள்கின்றன என்று. அந்தப் பிராணன் இல்லையென்றால் எதுவும் லபிக்காதென்று, உடலும், மனமும் தங்கள் செயல்பாட்டிற்கு பிராணசக்தியையே சார்ந்து இருக்கின்றன.


"மனம் ஓர் அரூப 'வஸ்து'. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் அபூர்வ 'வஸ்து'. ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்களை எழுதியும் அழித்தும் அலைமோதவிடும் அபூர்வ படைப்பு. அனுபவங்கள், அபிலாஷைகள், பரிவு, பாசம் என்று ஏகப்பட்ட வலைகளை தனக்குத்தானே சுற்றிக்கொண்டாலும் துடிதுடிப்பான ஒன்று அது.. நினைத்ததை நிறைவேற்றத் துடிக்கும் இதற்குக் கிடைத்த இயங்கு பொருளே உடல்..... மனம், உடல் இந்த இரண்டையும் உருவாக்கியதும் பிராணன் தான்; அவற்றை இயக்குவதும் அதுவே.

.
"ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே; யதைஷா புருஷே சாயா ஏதஸ்மின் ஏததாததம் மனோக்ருதேனாயாதி அஸ்மின் சரீரே"
--என்று அதர்வண வேதத்து பிரச்ன உபநிஷதம் கூறுகிறது.


"இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.


"ஆதமாவும், பிராணனும் மனிதனும் அவனது நிழலும் போல என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மாவின் நிழலே பிராணன் என்றால், ஆத்மா?.. கிட்டதட்ட நெருங்கி வந்து விட்டது போல் தோன்றுகிறது; ஆனால் தட்டுப்படவில்லை. தொடர்ந்து தேடுவோம்.


"பிராணசக்தி இருப்பதால் உடலுக்கும் மனத்திற்கும் இயக்கம் இருக்கிறது. அது இல்லையேல் எதுவும் இல்லை. ரொம்ப சரி.


"ஒரு பொருளின் மீது வெளிச்சம் பட்டால், ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக, வெளிச்சம் படாத பகுதிதான் நிழலாக நீள்கிறது; நிழல் இருப்பின் வெளிச்சம் இன்னொரு பக்கம் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட நிச்சயமான ஒன்றாய்த்தான்--- பிராணனும், அதன் இயக்கமான பிராணசக்தியும் இருக்கையில், ஆத்மாவும் இருக்கிறது என்பதை அனுமானித்துக் கொள்ளலாம். ஒளியான ஆத்மா இருப்பதை, பிராணனான நிழல் இருப்பதின் மூலமாகவும், பிராணன் இருப்பதை அதன் சக்தி இயக்கமான உடலியக்கம் இருப்பதின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். உடல், மனம் இயக்கம் இல்லையா, பிராணன் இல்லை; பிராணன் இல்லையெனில், ஆத்மாவும் இல்லை என்பதே மறுதலைப் பாடம்.


"உடல், மன இயக்கம் இருக்கையில் இந்த சகலமும் இருக்கின்றன என்பது புறப்புலன்களுக்கு தட்டுப்படாத பார்வை. வெளிப்புலன்களுக்குத் தட்டுப் படாததாலேயே, அவை இல்லை என்றும் அர்த்தம் இல்லை. உள்நோக்கி செலுத்திய தீட்சண்ய உணர்வின் மூலம் அவை தட்டுப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆக, அவை தட்டுப்படாததற்குக்காரணம், அகவயப்பார்வை இன்மையே".

அந்த அவையே ஒட்டு மொத்த ஈடுபாட்டுடன், சங்கீத அலைபோல் அந்த ஹால் முழுக்க நிறைந்திருந்த நிவேதாவின் பேச்சொலியில் கட்டுண்டு கிடந்தது.
(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails