மின் நூல்

Friday, February 6, 2015

இரு கவிஞர்கள்; இரு வேறு நினைவுகள்

புதுவையில் வசித்த காலத்தில் மறக்க முடியாமல் மனதில் தடம் பதித்த நினைவு இது.

புதுவை பெருமாள் கோயில் தெருவில் நுழைந்தாலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் நினைவு வரும்.  அந்தத்  தெருவில் 95 இலக்கமுள்ள வீடு அவரது.

தன் சுயத்தை  மதிப்பவர் பிறரது சுயத்தையும் தவறாது மதிப்பார் என்கிற சிறந்த குணத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் புரட்சிக் கவிஞர்.  தன் மனத்திற்கு ஏற்புடையதை  ஏற்றுக் கொண்டாரேயானால் அந்தக் கொள்கையில் பிறழாது ஒழுகுபவர்.  அவர் பூண்டிருந்த புனைப்பெயர் கூட
பலரின் கண்களை உறுத்தியது.  நெருங்கிய வட்டாரத்தின் முகச்சுளிப்பிற்காக தன் மனதுக்கு பிடித்த செயல்களை அவர் மாற்றிக்  கொண்டதில்லை.  அதில் அவருக்கு எஃகு போன்ற உறுதி  இருந்தது.

நடிகர் திலகத்தை நாயகனாகக் கொண்டு தனது 'பாண்டியன்  பரிசை' திரைப்படமாக்க வேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது.  அதன் தொடர்பான நடவடிக்கைகளுக்காக என்றே புதுவை நீங்கி சென்னைக்கு குடிபெயர்ந்தார்.  இது 1961 ஆண்டு வாக்கில் என்று நினைவு.

அவர் சென்னை சென்றதைத் தொடர்ந்து புதுவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த அவரது 'குயில்' கவிதை ஏடும் சென்னையிலிருந்து வெளிவரத் துவங்கியது.  ஒரு பக்கம் பாண்டியன் பரிசுக்கான வேலைகள் நடந்து  கொண்டிருக்கையிலேயே  பாரதியாரின் வாழ்க்கையையும் திரைப்படமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

அப்பொழுது புதுவையில் அரசுப் பணியில் இருந்தேன்.  தொலைபேசி  இலாகா.  அதற்கே உரித்தான ஷிப்ட் ட்யூட்டி.  ஒரு நாளின் பல மணி நேர இடைவெளிகளில் பணி  இருக்கும்.   காலை 6.00 லிருந்து 13.30 வரை.  காலை0800 மணியிலிருந்து 1530 வரை  காலை 1000 மணியிலிருந்து 1730 வரை 1330  மணியிலிருந்து 2100 வரை 1530 மணியிலிருந்து 2300 மணி வரை 1640 மணியிலிருந்து 0000 மணி வரை 0000 மணியிலிருந்து அடுத்த நாள் 0640 வரை என்று நாள் முழுக்க பல ஷிப்டுகளாக அலுவலகப் பணி  நேரம் இருக்கும்.

1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி.   அன்று மதியம் 1330-யிலிருந்து இரவு 2100 மணி வரை பணிக்காலம்.  அந்த   நேரத்தில் தான் பாரதிதாசன் அவர்கள் சென்னை  பொது மருத்துவ மனையில் காலமாகிவிட்டார் என்று கலங்க வைக்கும் அந்தச் செய்தி தெரியவந்தது.  அவர் புகழுடல் புதுவைக்கு  காரில் வருவதாகத் தகவல்.  இரவு ஒன்பது மணிக்கு அலுவலகப் பணி முடிந்ததும் நேரே பெருமாள் கோயில் தெருவிற்கு நானும் என் அருமை நண்பர் அ.க.பெருமாள் அவர்களும் மிகுந்த சோகத்துடன்  விரைந்தோம்.

சின்ன மரத்தூண்கள் பொருத்திய அகல வாசல் கொண்டு உள்ளடங்கிய வீடு. உள்பக்க பெரிய ஹாலில் வீறுகொண்ட கவிஞரின் பூத உடல்  கிடத்தப் பட்டிருந்தது.   கருப்பு-சிவப்பு சின்னகட்டங்கள் போட்ட பட்டுப் போர்வை போர்த்தியிருந்தார்கள். புரட்சிக் கவிஞருக்கே தனித்த ஒரு அடையாளமாக அமைந்திருந்த சின்ன அடர்த்தியான மீசைக்கிடையே புன்முறுவலுடனான
அவர் முகம் மனசைப் பிசைந்தது.   சிம்ஹம் போன்ற துடிப்பு கொண்ட அடலேறு ரோஜாப்பூ மாலைகள் சூட்டப்பெற்று அமைதியாக அப்படி இருந்தது அவரது இயல்புக்கு மாறான ஒரு செயலாய் மனசைக் குடைந்தது.  ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஓரிரு குத்து விளக்குகள்.  தலைமாட்டிற்கு பின்புறச் சுவரின் உயரத்தில்  புரட்சிக் கவிஞர் ஏட்டில் பேனா பிடித்து எழுதுகிற தோற்றத்தில் ஓரளவு பெரிய  புகைப்படம்.

அந்த இரவு நேரத்தில் நீண்ட அந்த ஹாலில் எங்களைச் சேர்த்து எட்டு அல்லது ஒன்பது பேர் இருந்திருப்போம்.   இருவர் கைத்தாங்கலாக அழைத்து வர தடியூன்றிய  ஒரு பெரியவர் உள்பக்கம் வந்ததும்  "வாங்கய்யா, வாங்க...  வாத்தியார் ஐயா வந்திட்டாரான்னு கேப்பீங்களே!  இதோ இருக்காரய்யா.." என்று பெருங்குரல்அழுகை கொண்டு பெண்கள் பக்கமிருந்து துக்கம் பொங்கியது.

மனம்  கனத்துப் போனது.  நானும் நண்பர் பெருமாளும் புரட்சிக் கவிஞரின்  காலடிப் பக்கம் அமர்ந்து கொண்டோம்.  'துன்பம்  நேர்கையில் யாழெடுத்து நீ...'  என்கிற கவிஞரின் பாடல் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நெஞ்சுக்கூட்டை நிரப்புகிற வரிகளாய் எனக்குள் பீறிட்டது. அழக்கூடாது என்று என்ன முயன்றும் முடியவில்லை.  ஏதேதோ நினைவுகளில் மனம் துவண்டு தத்தளித்தது.  கண் நீரை கட்டுப்படுத்த முடியாமல் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மெதுவாக எழுந்திருந்து வெளி வந்தோம்.

காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்புகையில் வெளிச்சுவர் பக்கம் நிமிர்ந்து பார்த்தேன்.   பித்தளைத் தகட்டினால் வேய்ந்த பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.  அந்தப் பெயர்ப் பலகையில்  பாரதிதாசன்  என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று  IN  -- OUT   குமிழ்கள் தென்பட்டன.   புரட்சிக்கவிஞர் அவர்கள் சென்னையில் இருந்ததினால் போலும்,  பித்தளைக் குமிழின் 'IN' மறைக்கப்பட்டு  OUT- தெரிவதாய் இருந்தது. அதைப் பார்த்ததும் மனம் வேதனையில் துவண்டு, சடாரென்று  மனசில் முகிழ்த்த எண்ணமாய், பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ  மறைத்து ' IN'  தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன்.    ஆம்!  சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின்  'அழகின் சிரிப்பு'ம், குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம்  இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'  என்று நினைப்பு நெஞ்சில் அலையாய் புரண்டது.

அடுத்த நாள் புரட்சிக் கவிஞருக்கு அஞ்சலி செலுத்த பெருங்கடல் பொங்கி வந்தால் போல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் புதுவை  திணறியது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் நிறைய வந்திருந்தார்கள்.

பிற்காலத்தில் 'கடைசி வரை யாரோ?' என்று பாடல் எழுதிய கவியரசர் கடைசி வரை நடந்தே வந்தார்.

அந்த வார குமுதம் இதழில் இந்த என் நினைவுகளை  பதிவும் செய்திருந்தேன்.



து நடந்ததும் புதுவையில் தான்.   புதுவை கடற்கரை சாலையில்.

கவியரசர் கண்ணதாசன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.

கண்ணதாசன் அவர் கார் கதவு திறந்து வெளிவந்த பொழுதே ஆட்டோகிராப் புத்தகத்துடன் நெருங்கிய என்னை பார்த்து விட்டார்..  அந்தக் காலத்தில் மனசுக்குப்  பிடித்தமான பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது ஒரு பழக்கமாகவே இருந்தது.  தனக்கு  பிடித்த பொன்மொழி மாதிரி ஏதாவது வரி எழுதிக் கையெழுத்திட்டுத் தருவார்கள்.

சட்டென்று கவிஞருக்கு மிகவும் அருகில் சென்றவுடன் அவரே என் கையிலிருந்த ஆட்டோகிராப்  புத்தகத்தை வாங்கிக் கொண்டார்., முதல் தடவையாக அவ்வளவு நெருக்கத்தில் கவியரசரைப் பார்க்கிறேன். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அவரிடம் தந்தபடியே சொன்னேன்: "எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர்.  ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன்.  ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும்  பிடிக்கும்.  அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்.." மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன்.  என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.

"அப்படியா?" என்று கண்ணதாசன்  புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது.  காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப்  புத்தகத்தை வைத்து  'இலக்கிய கண்ணதாசன்' என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே
கையெழுத்திட்டார்.   முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக்  கொடுத்தது மனசுக்கு  சந்தோஷமாக இருந்தது.  என் தோளில்  லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணுதெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன்  சொன்ன பொழுது திகைப்பாக  இருந்தது.

எனது அந்த 22 வயசில் தத்துவார்த்தமாக அவர் சொன்னது புரியாது பின் புரிபட்ட பொழுது இந்த நிகழ்வை நினைக்கும் பொழுதெல்லாம் அவரது வசீகரமான புன்முறுவல் தான்  நினைவுக்கு வரும்.

இந்த என் அனுபவமும் குமுதத்தில் அந்த வார இதழில் பிரசுரமாயிற்று.

இந்த மாதிரி குமுதப் பிரசுரமான  ஆட்டோகிராப் நினைவுகள் நிறைய. இருந்தாலும் அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் இந்த மாதிரியான பிரசுரங்களில் ஒரு வருத்தமும் இப்பொழுது மேலோங்குகிறது.

ஜெராக்ஸ் மிஷின்கள் இல்லாத காலம் அது.  அதனால் பத்திரிகை காரியாலயங்களுக்கு ஒரிஜனல் தான் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அதற்கு அச்சு வடிவம் கொடுத்தாலும் ஒரிஜனல் இல்லாதது இப்பொழுது நினைத்துப்  பார்க்கையில் ஒருவிதத்தில் இழப்பாகத் தான் தெரிகிறது.



குறிப்பு:  படங்கள்  உதவியவர்களுக்கு நன்றி.


Related Posts with Thumbnails