மின் நூல்

Saturday, December 26, 2009

ஆத்மாவைத்தேடி....24 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

24. தனி உலகம் இது!

லேசாக வெள்ளி முளைக்கும் பொழுதே, மஹாதேவ் நிவாஸ் விழித்துக் கொண்டு விட்டது.

சூரிய நமஸ்காரம், சந்தியா வந்தனம் எல்லாம் முடித்துக் கொண்டு கிருஷ்ண மூர்ததி, சிவராமன் தம்பதிகளுடன் காலை கோயில் தரிசனத்திற்கு கிளம்பும் பொழுது மணி ஆறாகி விட்டது.

மஹாதேவ் நிவாஸின் கிழக்குப்புற வாசலில் உடற்கூறு இயல் அறிஞர் உலக நாதனும் அவரைச் சூழ்ந்து இன்னும் சிலரும் படியிறங்கிக் கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. பக்கத்தில் வந்ததும் தான் அந்தக் கூட்டத்தில் மனவியல் அறிஞர் மேகநாதனும் இருப்பது தெரிந்தது. கிருஷ்ண மூர்த்தியும் மற்றவர்களும் அருகில் வந்ததும், எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒன்று கூடினர். அப்பொழுது மேகநாதன், தம்முடன் இருந்த உளவியல் பேராசிரியர் தேவதேவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். "இன்றைக்கு உரையாற்றப் போவது இவர்தான்" என்று மேகநாதன் சொன்னார். கிருஷ்ண மூர்த்திக்கு முதலிலேயே மேகநாதனின் குழுவிலிருக்கும் தேவதேவனைத் தெரியும் என்றாலும், அவர்தான் அன்றைக்கு விரிவுரை ஆற்றப்போகிறார் என்று தெரியாது. தெரிந்து கொண்டதும், வழக்கமான வாழ்த்துக்களை தேவ தேவனுக்கு தெரிவித்தார். மேகநாதனை நோக்கி, "இதற்கான குறிப்புகளை ஒருங்கிணைப்பா ளர் குறிப்பேட்டில் குறித்துக் கொள்கிறேன்" என்றார்.

"நேற்று மாலை அவை முடிந்த பிறகு அடுத்த நாள் உரை பற்றி எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து விவாதித்தோம். அப்பொழுது இன்னும் பதினைந்து நாட்களுக்கான விவாதப்பொருளை ஒரு சார்ட் மாதிரி தயாரித்துக் கொண்டிருக் கிறோம். உங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் அது அப்ரூவ் ஆக வேண்டும். இன்று காலை அமர்வுக்கு சற்று முன்னால் நாம் கூடினால் அதைப் பற்றி முடிவெடுத்து விடலாம்" என்றார் மேகநாதன்.

"அப்போ எட்டரை மணிவாக்கில் உங்கள் அறைக்கு மற்ற
ஒருங்கிணைப்பாளர்களுடன் வந்து விடுகிறேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"அப்படியே செய்து விடலாம்," என்று மேகநாதன் சொல்வதற்கும், சிவன் கோயிலின் வெளிப் பிராகார வெளியை அவர்கள் நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

தொடுத்த மாலை ஒரு குடலில் இட்டு மாலுவின் கையில் இருந்தது. அவளும் சிவராமனும் தேவாரப் பாடல்களை பண்ணிசைத்து பாடியபடி முன்னால் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவே எல்லோரும் சேர்ந்திசைத்த அநதக் காட்சி பார்பபதற்கும் கேட்பதறகும் அற்புதமாக இருந்தது.

சன்னதியை நெருங்க நெருங்க பூங்குழலி, நிவேதிதா, சாமபசிவம், யோகி குமாரஸவாமி மற்ற குழுவினர் எல்லோரும் சன்னதிக்கு முன்னால் அமர்ந்து திருவாசகம் ஓதிக் கொண்டிருப்பது தெரிந்தது. பின்னால் வந்தவர்களும் அவர்களுடன் கலந்து கொள்ள அவர்கள் உற்சாகம் பீறிட்டது. கொண்டு வந்த பூக்குடலையை சநநிதிக்கு முன்னால் வைத்து விட்டு, மாலுவும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்.

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய தற்சிறப்புப் பாயிரத்தின் ஆரம்ப அடிகள் அவர்களின் சேர்ந்திசையில் அமுத மழையாகப் பொழிந்தது..

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க... (நமச்சிவாய்..)


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.... (நமசிவாய)

மெதுவாக சீரான ஓசை லயத்துடன் பெண்கள் பகுதியிலிருந்து உச்சாடன அலையெனக் கிளம்பிய நாதவொலி, இரண்டடி இரண்டடியாக அவர்கள் பாடி முடிக்க, அதே அடிகளை ஆண்கள் பக்கம் திருப்பிப் பாட எல்லோருக்கும் திகட்டாத தேனஇசையாக அது தெரிந்தது.


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி.... (நமசிவாய)


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.... (நமசிவாய)

'முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்..' என்று மீண்டும் அந்த வரியைப் பாடி 'நமசிவாய..' என்று ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கண்களில் நீர் வழிந்தது. மெய் விதிர்த்து இறைவனின் அருளை அந்த அன்பை செவிவழி துய்த்து நெஞ்சுக் கூட்டில் நிரப்பிக் கொணட புளகாஙகிதம், அததனை பேரின் முகத்திலும் ஈடற்ற பிரகாசமாய் பிரதிபலித்தது.

பண்ணிசைப் பாட்டு முடிந்ததும் நெடியதோர் நீண்ட அமைதி அங்கு நிலவியது. அவரவர் மூச்சொலி கூட வெளியோசையாய் வெளிப்படா வண்ணம், அத்தனை பேரும் ஆழ்துயிலில் ஆழ்ந்துவிட்டதே போன்று அப்படியொரு நிசப்தம். இறைவனுடனான தங்களுக்கான தனிஉலகைச் சமைததுக் கொள்கிற சக்தியை அனைவரும் கைவரப் பெற்றிருந்தனர். தொடர்ந்த அவைக்கூட்ட அமர்வுகளில் அவர்கள் பெற்ற பலன் அங்கே கண்ணுக்குத் தெரிகிற வெளிப்பாடாய் வெளிப்படையாய்த் தெரிந்தது.

தீபாராதனைக்காக கண்டாமணி ஒலித்த பொழுது, பிரியமாட்டாமல் பிரிந்து வந்த உணர்வில் நினைவுலகுக்கு வந்தது போல அவர்கள் எழுந்து நின்றனர். வேறோரு உலகிலிருந்து பிய்த்துப் பிரித்தெடுத்து இங்கு தள்ளப்பட்டது போல பிரமித்து, விழித்து, திகைத்த நிலையில் கருவறையில் ஈசனுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் தொடர்ந்த தரிசனத்தின் தொடர்ச்சியில் மனமுருகி பிறவா யாக்கைப் பெரியோனைத் துதித்தனர்; கரம் குவித்து 'ஹர ஹர மஹாதேவா!' என்று ஒருசேர ஓங்கிக் குரல் கொடுத்து ஒருவருக்கொருவர் தொத்திக் கொண்ட உத்வேக மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பிரசாதம் வழங்கப்பட்டு அனைவரும் சன்னதியிலிருந்து வெளிப்பட்டு பிராகாரம் வருகையில் இன்றைக்கு என்னவோ அத்தனைபேரின் மனத்திலும் இனம்புரியாத சந்தோஷம் கூத்தாடியது.

நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருப்பது போல அவர்களின் இந்த சந்தோஷத்திற்கும் அவர்களுக்கேத் தெரியாத ஒரு காரணம் இருந்தது.


(தேடல் தொடரும்)




Tuesday, December 22, 2009

ஆத்மாவைத் தேடி....23 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

23. சர்வைவர் சமோவா...

முதலில் அந்தப் பெண் தான் தமயந்தியின் அருகில் வந்து, "நீங்கள் தமிழ்நாடு தானே?.. உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?" என்று உரிமையுடன் அவள் கை பற்றினாள்.

பற்றிய அவள் கையை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொள்ளத் தயங்கி, லேசாக நெளிந்தாள் தமா. "ஆமாம், தமிழ்நாடு தான்.. திருச்சி பக்கம் அரியலூர்.. நீங்கள்?"

"நான் கோயம்புத்தூர். ஆர்.எஸ்.புரம்" எனறவள், அதற்குள் கிரிஜாவும் அவர்கள் அருகில் வந்துவிட, அவளைப்பார்த்து "இவங்க உங்க தங்கையா?" என்றாள்.

"ஆமாம், தங்கையேதான். ஆனால் மாமா பெண்" என்று சொல்லிச் சிரித்தாள் தமயந்தி.

அந்தப் பெண்ணும் சிரித்து விட்டு, கிரிஜாவைப் பாத்து "நீங்களும் இவங்க மாதிரியே அழகா இருக்கீங்க" என்றாள்.

"நீங்க மட்டும் என்னவாம்?.." என்று கிரிஜா அவள் பங்குக்கு சொல்ல,அந்த நிமிஷமே பெண்கள் மூவரும் கலகலப்பாகி விட்டனர்.

"எல்லாம் சரி.. உங்கள் பெயரை இன்னும் எங்களுக்குச் சொல்லலியே?" என்றாள் தமா.

"மாதுரி" என்று சொல்லி விட்டு லேசாக வெள்ளைப் பற்கள் தெரிய அவள் சிரித்தாள். அவள் சிரித்த அந்த ஒருவினாடிப் பொழுதில் இடதுபக்க வரிசையில் அவளுக்கு ஒரு தெத்துப்பல் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டாள் கிரிஜா. உடனே அந்தத் தெத்துப்பல்லும் சிரிக்கும் பொழுது இவளுக்கு அழகாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

தங்கள் கணவன்மார்களை இருவரும் மாதுரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். மாதுரியும் தன்கணவன் சுரேஷைக்கூப்பிட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.இன்னொருவர் அவள் அண்ணன் என்றும் கூட இருந்த பெரியவர் தனது பெரியப்பா என்றும் சொன்னாள். மாதுரியும் அவள் கணவனும் கொலம்பியாவில் பணியாற்றுவதாகவும், அண்ணனும், பெரியப்பாவும் இந்தியாவிலிருந்து டூரிஸ்டாக வந்திருப்பவர்கள் என்று சொன்னாள். "இலையுதிர் பருவகால சுற்றுலாவாக இந்தப் பகுதிக்கு எல்லோரும் வந்திருக்கோம்" என்று மாதுரி சொன்ன போது, "நாங்களும் அதே!" என்றாள் கிரிஜா.தூரத்தில் இருந்து பார்க்க மாதுரி வயதானவள் மாதிரித் தோற்றமளித்தாலும் நெருக்கத்தில் பார்க்கையில் அப்படி ஒன்றும் அவளுக்கு வயசாகி விடவில்லையென்று த்மயந்திக்குத் தோன்றிற்று.

சுத்தமாக நீள இருந்த மரபெஞ்ச்சைப் பார்த்ததும், அதைக்காட்டி,"இப்படி உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா?" என்றாள் மாதுரி.

கிரிஜா தமாவைப் பார்க்க, "ஓ..எஸ்.." என்றபடி தமா காருக்குச் சென்று டிக்கி திறந்து ஒரு தூக்குக் கூடையை எடுத்து வந்தாள். அதற்குள் தமாவின் ஆறு வயதுப் பையன் மணிவண்ணனுடன் நெருக்க்மாகி விட்டாள் மாதுரி..அவளது கணவன் விடியோ கேம் மாதிரி ஒரு பார்ஸலை காரிலிருந்து எடுத்து வந்து அவனுக்குப் பிரஸெண்ட் பண்ணியிருந்தார். பிரகாஷ், மாதுரியின் கணவர் சுரேஷூடனும், குமாருடனும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக்கொண்டு மரபெஞ்ச்சுக்கு வந்தனர்.. அவள் பெரியப்பா--அந்தப் பெரியவர்--ரிஷிக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்.

தூக்குக் கூடையைத் திறந்தபடியே, "ஒண்ணு சொன்னா ஆச்சரியப்
படுவீங்க.. நானும் கிரிஜாவும் இன்னிக்கு அதிகாலையிலேயே உங்களைப் பார்த்து விட்டோம்!" என்றாள் தமா.

பளீரென்று வெட்டிய மின்னல் மாதிரி மாதுரியின் முகத்தில் ஒரு வியப்பு ரேகை வெட்டி விட்டுப் போனது. "அப்படியா?" என்று திகைத்தவள் "எங்கே பார்த்தீர்கள்?" என்று கேட்ட படியே, மெக்-டொனால்டின் ப்ரென்ச் ஃப்ரைஸ் பொட்டலத்தை எல்லோரும் சாப்பிடுவதற்கு வாகாகப் பிரித்து வைத்தாள்.

"எங்கே தெரியுமா?" என்று கிரிஜா அதற்குள் சொல்லாமல்
"சஸ்பென்ஸ்.." என்று சிரித்தபடி உருளைக்கிழக்கு குச்சி ஃப்ரைஸ் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். போட்டுக் கொண்ட அது, இன்னொன்று கேட்டு உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது.

"பாவம்டி.. சொல்லிடலாம்.. அவங்க திகைச்சுப் போயிட்டாங்க.." என்று ஃபாயில்ஸ் கவர் போட்டுச் சுற்றியிருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தாள் தமா.. "வெரைட்டியா சித்ரா அன்னம் தயாரித்துக் கொண்டு வந்தோம்.. உங்க டேஸ்ட்டுக்கு எப்படியிருக்கும்னு தெரியலே!" என்றவள், "இந்த தேங்காச்சாதம் எப்படியிருக்கு, சொல்லுங்க.." என்ற்படி, எல்லாருக்கும் கொண்டு வந்திருந்த தேங்காய்சாதத்தைக் கரண்டியில் எடுத்துப் பரிமாறினாள். கிரிஜா ஸ்பூன்களை எடுத்துப் பரப்பி வைத்தாள்.

"ப்ளீஸ்.. எங்கே எங்களைப் பாத்தீங்கன்னு சொல்லிடுங்க... என்னாலே இந்த சஸ்பென்ஸ எல்லாம் தாங்க முடியாது!" என்று மாதுரியின் கணவர், குமார் பக்கம் சிப்ஸ் பாக்கெட்டை நகர்த்தினார்.

"இன்னிக்கு அதிகாலைலே மேகக்கூட்டம் பாக்கலாம்னு எங்க காபின் ஸிடஅவுட்லேந்து பாக்கறச்சே, பக்கத்துப் பள்ளத்தாக்குப் பாதைலே நீங்கள்ளாம் நடந்து போயிண்டிருந்தீங்க!"

"நாங்களா?" என்று யோசனையுடன் இழுத்த மாதுரியின் அண்ணன், "கரெக்ட்.. அதிகாலைலே ஜாக்கெட் போட்டுண்டு வாக்கிங் கிளம்பிட்டோம்; எல்லாரும் கிளம்பினோம் என்றாலும் ஒரு வேலையா நான் உடனே எங்க கேபினுக்குத் திரும்பிட்டேன்" என்றார்.

"அப்போ நீங்க போட்டிண்டிருந்த ஜாக்கெட்டின் நிறம் நீலம் தானே?" என்று ஆவலுடன் கேட்டாள் கிரிஜா.

"வாவ்! எப்படி இப்படி கரெக்டா சொல்றீங்க?.."

"எங்க காபின்லேந்து தான் அந்தப் பாதையெல்லாம் கிளியரா தெரியுதே?.. இன்ஃபாக்ட் உங்களையெல்லாம் நாங்க பாத்திட்டு பெரிய ரகளையே ஆயிடுத்து," என்று சொல்லிச் சிரித்தாள் கிரிஜா.

"ரகளையா?.. ஓ, என்ன சொல்றீங்க?..." என்றார் மாதுரியின் கணவர் சுரேஷ்.

"சீ.. சும்மா இரு; உனக்கு எப்பவும் இப்படி தமாஷ் தான்!" என்று அவளை அடக்கி விட்டு அவர்கள் பக்கம் திரும்பி, "ஒண்ணுமில்லீங்க.. புடவை காஸ்ட்யூமோட இவங்களைப் பாத்துட்டோமா, உடனே இந்தியர்கள்னு தெரிஞ்சிடுத்து.. அடுத்தாப்பலே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவ்ங்கன்னு எங்களுக்குள்ளே விவாதம். கடைசிலே ஜெயித்தது என்னவோ கிரிஜாதான்.. அவதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தான் இவங்கன்னு கரெக்டா சொன்னா!" என்றாள் தமா.


"ஓ.. ஒண்டர்புல்!" என்று சொல்லிவிட்டு தெற்றுப்பல் தெரிய சிரித்தாள் மாதுரி..

"இப்போ நீங்களும் அவரும் சுவாரஸ்யமா ஏதோ டிஸ்கஸ் பண்ணிகிட்டு வந்தீங்களே?.. " சுரேஷைக் காட்டி கணவனிடம் கேட்டாள் தமயந்தி. "என்னன்னு தெரிஞ்சா எங்களுக்குத் தெரிஞ்சதை நாங்களும் சொல்வோம்லே!"

புளியோதரையை ஒரு ஸ்பூன் வாயில் போட்டுக்கொண்டே, "ஓ.. அதையாக் கேக்கறே?" என்று சிரித்தான் குமார். சிரித்த சிரிப்பில் அவனுக்குப் புரையேறி விட்டது..

"என்னங்க நீங்க, அவரைப் போட்டு.." என்று உதவிக்கு வந்தார் சுரேஷ். "இங்கே டி.வி.லே ஒளிபரப்பாகுற விளையாட்டுப் போட்டி 'சர்வைவர் சமோவா' ப் பத்தித் தான் பேசிகிட்டு வந்தோம்.. கடைசிலே ரஸல் தான் ஜெயிப்பார்ங்கறது உங்க கணவரோட கட்சி.."

"இல்லே.. ஷாம்போ தான் ஜெயிப்பாங்க, பாருங்க.." என்றாள் கிரிஜா. "ஏதாவது நடந்து ஷாம்போ ஜெயிக்க நிறைய சான்ஸ் இருக்கு!"

"இல்லே.. பிரட் தான்" என்றாள் தமயந்தி, தயிர் சாத பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே.

"நீங்க என்ன சொன்னீங்க?" மாதுரி தன் கணவனைப் பார்த்துக் கேட்க, "என்னோட ஓட்டும் ரஸலுக்குத் தான்.. இதுலே குமாருக்கும் எனக்கும் ஒரே கருத்து தான்" என்றார் அவர்.

"அப்போ, பிரகாஷ் கருத்து என்னவோ?"

"இதுலே சொல்றத்துக்கு ஒண்ணுமில்லே; ஆட்டத்திலே நட்டாலி, மிக் எல்லாம் இருக்காங்க.. கடைசிலே மிஞ்சற் மூணு பேர்லே, என்ன விநோதம் வேணுமானாலும் ந்டந்து யார் வேணா ஜெயிக்கலாம்.. ஏன்னா, இந்த ஜூரிங்க என்ன செய்வாங்கன்னு யாரும் சொல்ல முடியாது.." என்றான் பிரகாஷ்.

"ஆளாளுக்கு ஒருத்தரைச் சொன்னா எப்படி? க்டைசிலே ஜெயிக்கப் போறது யாருங்கறது ஒன் மில்லியன் டாலர் க்வெஸ்டின் இல்லையா?" என்றார் மாதுரியின் பெரியப்பா.

"ஓ..ஓ... பெரியப்பா கூட இதப் பார்க்கறா?.. " என்று கிரிஜா கைகொட்டிச் சிரிக்க,

"பெரியப்பா என்ன, மணிவண்ணனைக் கேட்டால் கூடச் சொல்லுவான்" என்று பிரகாஷ் சொல்ல அவர்கள் சிரித்த சிரிப்பைப் பார்த்து அப்பொழுது தான் ஒரு டிரக்கில் வந்து இறங்கிய ஒரு அமெரிக்க குடும்பம, என்னவோ ஏதோ என்று இவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது.

சாப்பிட்டு முடிந்ததும், வேஸ்ட்டையெல்லாம் திரட்டி பக்கத்திலிருந்த டிராஷில் போட்டு விட்டு வந்தனர். காபினிலிருந்து கிளம்பும் பொழுது தான் ரிஷிக்கு கிரிஜா பருப்பு சாதம் ஊட்டி யிருந்தாள். அதனால் இப்போது ஜூஸ் பாட்டிலை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். அவன் பாப்-டார்ட் வேண்டுமென்றான். "உன்னோட கார் ஸீட்டில் இருக்கு; அப்புறம் எடுத்துக் கொடுக்கிறேன்" என்றாள். குழந்தைக்கு என்ன புரிந்ததோ, சமர்த்தாக போதுமென்று ஜூஸ் பாட்டிலேயே ஆழ்ந்து விட்டது.

மாதுரி குடும்பம் அதிகாலையிலேயே கிளம்பி முடிந்த வரை எல்லா இடங்களையும் பார்த்து விட்டு இப்பொழுது கேபினுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களாம்.. இவர்கள் இப்பொழுது தான் மலைப் பாதையின் மேல் நோக்கிச் செல்வதால், இந்த இடத்திலிலேயே விடைபெற்றுக் கொண்டனர்.

வருந்தி வருந்தி மாதுரி கூப்பிட்டதினால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. "நாளைக்கு உங்களிடத்திற்கு வருகிறோம்" என்று தமா அவள் காபின் எண் வாங்கிக் கொண்டாள்.

"ஒன்பது மணிக்கு வந்து விடுங்கள்.. ஒன்றாகவே சேர்ந்து சாப்பிட்டு விடலாம்" என்றாள் மாதுரி.

"சரி.." என்று தமா சொல்லி விட்டாளே தவிர, நாளை என்ன செய்வது என்பது தீர்மானிக்க முடியாமல் இருந்தது.. முதலில் அப்பாவுடன் தில்லிக்குப் பேசி நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே அவள் மனசு பூராவும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

(தேடல் தொடரும்)














Saturday, December 19, 2009

ஆத்மாவைத்தேடி....22 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

22. மறுபடியும் அவர்கள்

ங்கியிருந்த கேபின் அற்புதமாக இருந்தது. மெயின் ரோடிலிருந்து உள்ளடங்கி இருக்கும் சாலையில் உயரே வளைந்து வளைந்து ஏற வேண்டியிருந்தது. கொஞ்ச தூரம் அப்படி ஏறித் திரும்பினால் அதற்கு மேல் போகமுடியாதவாறு பாதையை அடைத்துக் கொண்டு இரும்புக்கதவுகள் சாத்தப்படடிருந்தன. கதவு திறப்பதற்கான பாஸ்வேர்டை காரை விட்டு இறங்காமலேயே கைநீட்டி மெஷினில் பதிந்தால், அலிபாபா 'ஓபன் ஸீஸேம்' மாதிரி சாத்தியிருந்த இரட்டைக்கதவுகள் திறந்தன. கதவு தாண்டிய பாதையில் கொஞ்ச தூரம் ஏறித் திரும்பினால் ஒதுக்கப்பட்டிருந்த கேபின் வந்து விடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக பாதைச் சரிவில், செங்குத்துத் திருப்பத்தில் என்று நிறைய கேபிங்கள் தாம்.

உள்ளே போவதற்குத் தான் பாஸ்வேர்ட் தேவையாயிருந்தது. வெளியே வருவதற்கு அவசியம் இல்லை. உள்ளிருந்து வெளிச்செல்ல வரும் கார்கள் அருகில் வந்ததும் தாமாகவே கதவுகள் திறந்து கொண்டன. அதே மாதிரி கேபினின் மெயின் டோர் திறக்கவும் பாஸ்வேர்டைத் தான் பதிக்க வேண்டியிருந்தது.. 'செக்-இன்', 'செக்-அவுட்'களைக் கவனிக்க யாரும் கிடையாது.. வந்து தங்கிக் கொள்ள வேண்டியது; காலிபண்ணும் பொழுது போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.. இரகசிய வார்த்தைகள் மறந்து போய்விடாமல் இருக்க தமயந்தி பாஸ்வேர்ட்களை கார்ஸீட்டிற்கு பின்னாலேயே காகிதத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தாள். கான்டான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் கேபின் இருந்தது; ரோடுக்கு வந்து விட்டால் வெயினஸ்வில் தான்.

தில்லிக்குப் பேசிவிட்டு, எல்லோரும் சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் மணி பதினொன்று ஆகிவிட்டது. கேபினிலிருந்து கீழிறங்கும் பாதையில் இறங்கி சாலைக்கு வந்ததும் கேஸ் ஸ்டேஷனில் காருக்கு கேஸ் போட்டுக்கொண்டார்கள். சற்று தூரத்திலேயே சாலைக்கு உள்ளடங்கி இருந்த விஸிட்டர் செண்டரைப் பார்த்ததும் எல்லோருக்கும் சந்தோஷம். தமா கணவரைப் பார்த்து, "விவரமெல்லாம் தெரிஞ்ச்சிண்டு வந்து விடலாங்க" என்று காரை குறுக்குப் பாதையில் ஓட்டினாள். தமாவுக்குப் பின்னாலேயே காரை ஓட்டி வந்த கிரிஜாவும் காரை தமாவின் காருக்குப் பக்கத்தில் நிறுத்தினாள். கிரிஜாவிடம் சொல்லி விட்டு அவள் கணவன் பிரகாஷ், தமாவின் கணவன் குமாருடன் செண்டருக்குள் போனான். விஸிட்டர் ஸெண்டரில் போய் ப்ளூ ரிட்ஜ் பார்க்வே பற்றித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டனர். அங்கு முழுத்தகவல்கள் அடங்கிய கைடும், மேப்பும் கிடைத்தது மிகவும் வசதியாகிப் போனது.

விஸிட்டர் ஸெண்டரை விட்டு ரோடுக்கு வந்த்துமே, வலது பக்கம் திரும்பிய கொஞ்ச தூரத்தில், ப்ளூ ரிட்ஜ் பார்க் வேக்கு மலையேறும் பாதை வந்து விட்டது. நிறைய கொண்டை ஊசி வளைவுகள், உடனே உடனே என்று இல்லாமல் விரவி இருந்தன. இரண்டு பக்கமும் விதவிதமான மரக்கூட்டங்கள்; மஞ்ச மஞ்சரேன்று, கருஞ்சிகப்பிலென்று , சில இன்னும் மஞ்சளோ சிவப்போ அடையாமல் என்று-- இலைகளைச் சுமந்து கொண்டு வரிசை வரிசையாக சாலையின் இருபக்கமும் இருந்த மரக்கூட்டங்கள் பார்க்க பார்க்கப் பரவசம் ஊட்டின.

நீண்ட பாதையில் போகும் வழியிலேயே அங்கங்கே பிர்மாண்ட பள்ளத்தாககுகளைப் பார்க்க வசதியாக பாதையை அகலப்படுத்தி சின்னச் சின்ன கைப்பிடிச்சுவர் கட்டப் ட்டிருந்தது. அப்படிப் பட்ட இடங்களின் பெயர்களை கல்லில் பொறித்து அங்கங்கே பதிததிருந்தார்கள். அதைத் தவிர ஒரு கூட்டமே உட்கார்ந்து உணவருந்துகிற மாதிரி மர பெஞ்சுகள் வேறு. அங்கங்கே தங்கள் கார்களை நிறுத்தி, இறங்கி, பள்ளத்தாக்குகளைப் பார்த்து வியந்து கையோடு வைத்திருக்கும் காமிராக்களில் பார்க்கும் காட்சிகளை சிறைப்படுத்திக் கொண்டு என்று... எல்லா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பலர் நின்று கொண்டிருந்தனர். தமயந்தியும், கிரிஜாவும் தங்களுக்கு பார்க்க வேண்டும் என்று மிகவும் பிடிந்திருந்த இடங்களில் மட்டும் காரை நிறுத்திக் கொண்டிருந்தனர்.

அப்படித்தான் ஒரு வளைவு திரும்பி சற்று தூரத்தில் இருந்த பள்ளத்தாக்குப் பார்வையாளர் இடத்தில் காரை நிறுத்தலாம் என்று அந்த இடத்தை நெருங்கி வந்து காரைப் பார்க் செய்த போது அங்கு நின்று கொண்டு பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இந்திய குடும்பத்தைப் பார்த்ததும் தமாவும் கிரிஜாவும் திகைத்துப் போய்விட்டனர்.

சந்தேகமில்லாமல் இவர்கள் இன்று அதிகாலையில் தாங்கள் கேபினின் பக்கத்து மலைப் பாதையில் பார்த்தவர்கள் தான் என்று இருவருக்கும் நிச்சயமாயிற்று. இப்பொழுது கூட பின் பக்கம் பார்க்கையில் புடவை கட்டிய அந்தப் பெண்ணின் தோற்றம் தன் அம்மா மாலுவைப் போலவே இருந்தது கண்டு தமயந்திக்கு வியப்பு தாளவில்லை.

'இன்று காலையில் தான் அம்மாவுடன் போனில் பேசினோமே' என்கிற நினைப்பு தமயந்திக்கு மற்ற ஆச்சரியங்களை அடக்கிக் கொண்டு மேலோங்கி வருகையில், அந்தப் பெண்ணுடன் இருந்தவர்களை நெருக்கத்தில் பார்க்கையில் தங்கள் தந்தையைப் போலில்லை என்பது இருவருக்குமே நன்றாகவேத் தெரிந்தது.. இருந்தாலும் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளூம் ஆவல் அவர்களை உந்தி முன்னால் செலுத்தியது.

இதற்குள் காரை விட்டு இறங்கிய இவர்களை பரிவுடன் பார்த்தபடி தயங்கியபடியே அவர்கள் நின்றிருந்தனர்.


(தேடல் தொடரும்)

Wednesday, December 16, 2009

ஆத்மாவைத்தேடி....21 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

21. காக்கைச் சிறகினிலே, நந்தலாலா!....

"எப்படிப்பா, இருக்கே?" என்று ஆதுரத்துடன் கிரிஜா தந்தையைக் கேட்டாள்.

"நன்னா இருக்கேம்மா. நீ எப்படியிருக்கே?.. குழந்தை ரிஷி எப்படியிருக்கான்?"

"நான், அவர், குழந்தை எல்லோரும் ஃபைன் அப்பா. ரிஷியை வர்ற வருஷம் மாண்டிஸேரி ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு நெனைக்கறோம். நேத்திக்கு அரியலூருக்குப் பேசினேன், அப்பா! அங்கே எல்லாரும் செளக்கியம். சுபா மன்னி செக-அப்புக்கு போயிண்டு வர்றாங்களாம்; பேபி வாகா நன்னா இருக்காம்."

"சந்தோஷம், கிரிஜா! நம்ம கையிலே என்ன இருக்கு?.. எல்லாம் அவன் பாத்துப்பான்.. போனவாரம் ஒருநாள் அர்ஜூன் பேசினான்.. அங்கே இருக்கற நிலவரமெல்லாம் சொன்னான். பாவம், உங்கம்மா.. நான் அங்கே இருந்தேன்னா அவளுக்கு யானை பலம் மாதிரி.. இப்போ, பாரு.. தனியாளாய் எல்லாத்தையும் சமாளிச்சிண்டிருக்கா.."

"அம்மா கிட்டேயும் பேசினேன். அம்மா என்ன சொன்னா தெரியுமா?"

"என்ன சொன்னா?"

"பாவம், அப்பா.. இங்கே அவர் இருந்து தனக்குன்னு கேட்டு எதையும் அனுபவிக்கலே; காலம் பூராவும் 'கதை சொல்றேன், கதை சொல்றேன்'னு அவர் காலம் போயிடுத்து.. இப்போ அவருக்கா தோணி மனசுக்குப் பிடிச்சதுன்னு போயிருக்கார். இப்ப இருக்கற இடம், அவருக்கும் பிடிச்சிருக்குப் போலிருக்கு. பிடிக்கறவரைக்கும் இருந்துட்டு வரட்டும்; இருக்கவே இருக்கு நம்ம பாடு; நாமா எதையும் சொல்லி புருஷாளைக் கவலைப்படுத்தக் கூடாது'ன்னு சொன்னா."

"கிரிஜா! என்னிக்கும் அவ சுபாவம் அப்படி; புதுசாவா திடீர்னு இன்னிக்கு மாறிடப் போறது? உங்களுக்கும் என்னோட அம்மா மாதிரியே அப்படியே உரிச்ச வைச்ச ஒரு அம்மா!... இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சிருக்கோம்னு தான் தெரியலே.. எப்படியெல்லாம் அந்த ஆண்டவன் அனுகிரச்சிருக்கார்னு ஒவ்வொரு விஷயத்திலும் நெனைச்சுப் பாத்து அவனைத் தொழறதைத் தவிர, வேறெதுவும் எனக்குத் தோணலைம்மா."

"நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம், அப்பா! எல்லாம் உங்க மனசுக்கு நல்லபடி நடக்கும்.. ஆனா எனக்கு எப்பவும் உங்களைப் பத்தின கவலை தான்.."

"நான் நன்னா இருக்கேம்மா.. எனக்கென்ன?.. நீ உன் உடம்பை.."

"ஏதோ இந்தியாவிலே வடக்கே கிழக்கேன்னு வேறே ஸ்டேட்லே இருந்தாக்கூட அடிக்கடி இல்லேனாலும் ஆறு மாசத்துக்கு ஒருமுறையாவது வந்து பாக்கலாம்.. பொண்ணாப் பொறந்தவாளுக்கே இப்படித்தான்னு நிர்ணயிச்சிக்குன்னாலும், அயல் தேசத்திலே வேறு இருக்க நேர்ந்திடுச்சா.. எல்லா உறவுகளையும் மறந்திட்டு இருக்க முடிலேப்பா.."

"வாழ்க்கைங்கறது அதான்ம்மா.. கிடைச்சதை சந்தோஷமா ஏத்துக்கணும்.. அதுலே சிறப்பா நமமளாலே என்ன செய்ய முடியும்னு பாக்கணும்."

"சொன்னா ஆச்சரியப்படுவே.. நேத்திக்கு ராத்திரி என்ன நடந்தது தெரியுமா?.. ராத்திரி சாப்பாடு முடிச்சிடடு, ரவுண்டா எல்லாரும் உட்கார்ந்திண்டு நம்ம ஊர்க்கதையெல்லாம் பேச ஆரம்பிச்சோம், பாரு!.. பாதி பேசிண்டிருக்கறச்சேயே, தமாவுக்கு அவ அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்து.. கண்லே நீர் முட்டறது; அவளை நான் தேத்தினாலும், என்னைத் தேத்திக்க முடிஞ்சாத் தானே?.. ராத்திரி பூரா உங்க ஞாபகம் தான்; வயசான காலத்திலே குடும்பத்தோட இல்லாம, இது என்ன டெல்லிலேன்னு ஒரே ஆதங்கமா இருந்தது.. யோசிச்சிண்டே படுத்திண்டிருந்தேன். தூக்கம் வர்லே.. தண்ணி குடிச்சிட்டுப் படுத்துக்கலாம்னு வெளிலே வந்தா, இந்த கேபின் பின்பக்கம், பால்கனிப் பக்கம் கண்ணாடி போட்டு தடுத்திருக்கும். அங்கே சேர்லே உட்காந்திண்டு, தமா வெளிப்பக்கம் வெறிச்சுப் பாத்திண்டிருக்கா.. 'என்னடி, தூங்கலியா'ன்னா, 'அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்துடி.. ஏதோ யோசிச்சிண்டு உட்கார்ந்திருக்கேண்டி'ன்னா. நானும் அவளோட் கொஞ்ச நேரம் பேசிண்டிருண்டிருந்து, படுக்கப்போறச்சே மணி மூணு.. "

"கிரிஜா!.. இங்கே நம்ம மனசைப் பத்தி ஒரு பேராசிரியர், மேகநாதன்னு பேரு, எவ்வளவு சொல்றார் தெரியுமா?.. பிரமாதம் போ! ஒண்ணைப் பத்தியே விடாது நெனைக்கிற நெனைப்பு, எண்ணம்ங்கறது ரொம்ப பலம் வாஞ்சதாம்; மனசாலேயே மானசீகமா வேண்டியவர்கள் உருவத்தைக் கூடப் பாக்கலாமாம். நான் சின்ன வயசிலே, அம்புலிலே எங்க அம்மாவைப் பாத்திருக்கேன்.. ராத்திரி வேளைலே வாசல் குறட்டிலே உக்காந்திண்டு பளிச்சினு தெரியற நிலாவை கண்கொட்டாமப் பாத்திண்டிருப்பேன்.. அம்மாமுகத்தை நெனைச்சிண்டு அந்த நிலாலே அம்மா தெரியறமாதிரி கற்பனை பண்ணிண்டு பாப்பேன்.. கண்ணாடிலே தெரியற மாதிரி அம்மா மூஞ்சியே நிலாலே தெரியும்.. ஊர்ந்து அம்மாவும் நெலாவோடேயே போற மாதிரி தெரியும்.. இப்போ கூட கண்ணை மூடிண்டு உக்காந்திண்டு உங்களையெல்லாம் நெனைச்சாப் போதும், ஒவ்வொரு சீனா சினிமாலே ஓடற மாதிரி, ஒவ்வொருத்தரா எனக்கு முன்னாடி நடமாடற மாதிரி தோணறது.. எல்லாமே ஆச்சரியமாத் தான் இருக்கு.." என்று தன் தந்தை சொல்லிக்கொண்டே வருகையில், இன்று காலை கண்ட நிகழ்ச்சியைப் பற்றி அவரிடம் தான் சொல்லாமலேயே, கண்ட காட்சிக்கு அவர் விளக்கம் சொல்கிற மாதிரி இருந்தது கிரிஜாவுக்கு.

"பாரதியாரும் இந்த மாதிரியான உருவெளிக்காட்சியை உணர்ந்திருக்கார் போலிருக்கு; அதான் கண்ணனை நினைச்சே இருந்த அவருக்கு, பாக்கற காக்கை, மரம் எல்லாம் நந்தலாலாவாத் தோணித்தோ என்னவோ.. " என்று அவர் சொன்ன போது, கிரிஜாவுக்கு உடல் சிலிர்த்தது.

"ரொம்ப நேரம் ஆயிட்டது, கிரிஜா! அப்புறம் பேசலாமா?" என்று கிருஷ்ண மூர்த்தி சொன்ன போது அவர் சொன்னதே மனசில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்த உணர்விலேயே அனிச்சையாய், "சரிப்பா.. அப்புறம் பேசலாம்.." என்று சொல்லியபடி போனை வைத்தாள்.

அடுத்த நாளே அவள் அவரைக் கூப்பிடுவாள் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாதிருந்தது.


(தேடல் தொடரும்)

Friday, December 11, 2009

ஆத்மாவைத்தேடி....20 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின அடுத்த கட்டத்தை நோக்கி....

20. பார்த்த காட்சி

தமயந்தியின் குரலில் ஒரு பதட்டம் இருந்தது. "ஆமாப்பா.. உங்களையெல்லாம் இங்கே பார்த்தோம்ங்கறது நிஜம். முதல்லே பாத்தது நான் தான். பாத்தவுடனேயே ஆச்சரியப்பட்டு சந்தோஷத்தோட கிரிஜா கிட்டே காட்டினேன்."

"கிரிஜாவா?"

"ஆமாம்'பா! நம்ம கிருஷ்ணா மாமா பொண் கிரிஜாதான். இந்த டூர் ப்ரோக்ராம் பிக்ஸ் ஆனவுடனேயே கிரிஜாவையும் அவ ஊர்லேந்து நேரா இங்கே வரச்சொல்லிட்டோம். அவளுக்கும் இப்போ வெக்கேஷன் பிரீயட்னாலே குடும்பத்தோட வந்திருக்கா..."

"அப்படியா, ரொம்ப சந்தோஷம். பின்னாடி அவா கிட்டே பேசறேன். நீ சொல்லு."

"இந்தப் பகுதி நார்த் கரோலினா ஸ்டேட்லே இருக்குப்பா; எங்க இடத்திலே இருந்து நாலுமணி நேர டிரைவ் டைம். நாங்க இங்க வந்து இன்னியோட நாலு நாள் ஆகப்போறது.ஆன்லைன்லே ஒரு வாரத்திற்கு தங்க கேபின் புக் பண்ணியிருந்தோம். கேபின்னா, தனி வீடு மாதிரி. ஒரு வீட்டுக்குள்ளே இருக்கற ஓவன், கேஸ், பிரிட்ஜ், ஃப்யர் ப்ளேஸ்னு அத்தனை வசதியும் இங்கே இருக்கு. கல்யாணம் முடிஞ்சு கட்டுசாதக் கூடை கொடுத்து அனுப்பற மாதிரி வந்து இறங்கியவுடன் அவசர சமையல்னா தேவையான குறைந்தபட்ச சமையல் சாமாங்கள் கூட இருக்கு. வந்து இறங்கினவுடனேயே பக்கத்து வால்மார்ட்டுக்குப் போய், தேவையான தெல்லாம் வாங்கிண்டு வந்திட்டோம். சமையல், சாப்பாடு எல்லாம் இங்கே தான்..

"ஓ ஃபைன்."

"காலம்பற பத்து மணிக்குள்ளே சாப்பாட்டுக் கடையை முடிச்சிண்டு கிளம்பிடுவோம். நேத்திக்கு ஸ்மோக்கி மவுண்ட்டன் போயிட்டு வந்தோம்; இன்னிககு ப்ளூ ரிட்ஜ் பார்க்வேன்னு பக்கத்லே இருக்கற மலைப்பகுதிக்குப் போறதா இருக்கோம்.. எங்க கேபினுக்குப் பின்பக்கத்திலே பெரிய தடுப்பு; நம்ம ஊர் பால்கனி மாதிரி. அங்கேயிருந்து பாத்தா, சுத்து வட்டாரம் பூரா பாக்கலாம். காலம்பற வேளைலே, பள்ளத்தாககு பகுதி மொத்தமும் வெள்ளை வெளேர்ன்னு பனி மூடிண்டு இருக்கற மாதிரி மேகக்கூட்டம் கத்தை கத்தையா படிஞ்சிருக்கும். அதைப் பாக்கறது கண்கொள்ளாக் காட்சி.

"ம்...."

"இன்னிக்குக் காலைலே எழுந்தவுடனே பள்ளத்தாக்கிலே மேகமூட்டத்தைப் பார்க்க ஆசையோட அந்த பின்பக்க ஸிடஅவுட்டுக்கு ஓடினேன். அப்போத்தான் பக்கத்து மலைச் சரிவு பாதைலே உங்களைப் பார்த்தேன். முதல்லே புடவை கட்டிண்டு அம்மா எடுப்பா தெரிஞ்சா; அம்மாக்கு கொஞ்சம் பின்னாடி நீ, உனக்கு பின்னாடி அந்தப் பெரியவர், அவருக்குப் பக்கத்திலே கிருஷ்ணா மாமான்னு---நான் உங்களையெல்லாம் பார்த்ததும், சந்தோஷத்திலே கத்திட்டேன். என்னவோ ஏதோன்னு ஓடிவந்த கிரிஜா கிட்டே காட்டி, பாக்கச் சொன்னேன். அவளுக்கு சரியாத் தெரியலே; பைனாக்குலரை எடுத்து வந்து பார்த்தா... 'ஆமாண்டி.. ஆச்சரியமா இருக்கு'ன்னு அவ சொல்லிண்டிருக்கறத்தேயே, முகடு மாதிரி நீட்டிண்டிருந்த ஒரு பக்கத்தைச் சுத்திண்டு நீங்க திரும்பி வர்ற மாதிரி தெரிந்சது.. திரும்பி வரட்டும், நன்னாப் பாக்கலாம்னு பார்த்திண்டே இருந்தோம். ஆனா திரும்பி வர்றச்சே, கிருஷ்ணா மாமா மட்டும் தான் வந்திண்டிருந்தார். மாமா பின்னாடி நீங்க வருவேள்னு பத்து நிமிஷத்துக்கு மேலே பாத்திண்டே இருந்தோம். கடைசி வரை வரவே இல்லே...

""நீங்க திரும்பி வராததைப் பாத்து எனக்கு கலவரமாப் போயிடுத்து. அடக்க முடியாம அழுகை அழுகையா வர்றது.. 'சீ! பைத்தியம், அழாதே! நீ வேறே யாரையாவது பாத்திட்டு உங்கப்பா--அம்மான்னு நைனைச்சிருப்பே'ன்னு என்னைத் தேத்தினார் இவர். 'இதோ இப்பவே டெல்லிக்கு போன் போட்டு பேசினாப் போச்சு'ன்னு இவர் சொன்னதினாலே, உங்களைக் கால் பண்ணினேன்; ஸாரிப்பா.." என்று மூச்சுவாங்க் அத்தனையையும் குழந்தை பாடம் ஒப்புவிக்கற மாதிரி சொல்லிக் கொண்டே வந்த தமயநதி முடிக்கும் பொழுது கேவினாள்.

"இதோ பார், தமா! எதுக்கு அழறே?.. நாங்க எல்லாரும் இங்கே செள்க்கியமா இருக்கறோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகலே.. ஓக்கே.. நீ ஃபோனை கிரிஜா கிட்டே கொடு.." என்று சிவராமன் மகளை ஆசுவாசப்படுத்தினார்.

கொஞ்ச நேரம் கழிச்சு, "மாமா.." என்று குரல் கேட்டது.

"கிரிஜா எப்படிம்மா இருக்கே?.. குழந்தை ரிஷி விளையாடிண்டிருக்கானா?"

"நாங்களெல்லாம் ந்னனா இருக்கோம், மாமா! நான் கூட பைனாக்குலர்லே பாக்கறச்சே நீங்கள்ளாம் அப்படியே தெரிஞ்சேள், மாமா! அப்பா கூட நீலக்கலர்லே சட்டை போட்டிருந்தார்" என்று கிரிஜா சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த ஹாலின் கோடியில் நீண்ட பெஞ்சில் அமரந்து மாலுவுடனும் ராம்பிரபுவுடனும் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த பொழுது அவர் நீலக்கலர் சட்டை அணிந்திருந்தது சிவராமனை துணுக்குறச்செய்தது.

இருந்தாலும் தன்னை சரி பண்ணிக்கொண்டு, "நீயும் அதையேச் சொல்லி உங்கப்பாவைக் கலவரப்படுத்த வேண்டாம்.. என்ன, தெரிஞ்சதா? இதோ, உங்க அப்பா கிட்டே போனைக் கொடுக்கறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, "கிருஷ்ணா..." என்று கூப்பிட்டார் சிவராமன்.

கிருஷ்ணமூர்த்தி அருகில் வந்ததும், "கிரிஜா பேசறா, பாரு!" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் போனைக் கொடுத்தார்.

(தேடல் தொடரும்)

Tuesday, December 8, 2009

ஆத்மாவைத் தேடி....19 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

19. பச்சையும் பழுப்பும்

ழுந்திருந்து நகர்ந்த கிருஷ்ணமூர்த்தி வாசல் கதவுக்கு போவதற்குள்ளேயே 'டொக், டொக்' கென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கதவு திறந்த கிருஷ்ணமூர்த்தி, வெளியே ராம்பிரபு நிற்பதைப் பார்த்ததும், முகம் மலர,"வா, ராம்பிரபு! உள்ளே வாயேன்" என்று நகர்ந்து ராம்பிரபு உள்ளே வருவதற்கு வழிவிடுகிற மாதிரி நின்றார்.

"பக்கத்து அறைக்கதவு பூட்டியிருந்ததும், இங்கே இருப்பாரோன்னு கதவு தட்டினேன் ... சிவராமன் சார் இருக்காரா, சார்?"

"இருக்காரே, என்ன விஷயம்?"

"அவருக்கு போன் கால் வந்திருக்கு சார்.. தமயந்தின்னு சொன்னாங்க.."

"ஓ--" என்று மாலு அதற்குள் கதவு பக்கம் வந்து விட்டாள். "வாங்க, ராம்பிரபு! தமயந்தி என் பொண்ணு தான்."

"அப்படியாம்மா.. வெளி ஹால் போனுக்கு கால் வந்திருக்கு; லைன்லே தான் இருக்காங்க.." என்று ராம்பிரபு சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே சிவராமனும் வெளிவந்து மாலுவைத் தொடர்ந்தார்.

படியிறங்கி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி ரிஸீவர் மல்லாக்க வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

ரிஸீவரை எடுத்து "ஹலோ--" என்றாள் மாலு. "நான் மாலு.."

"அம்மா.. தமயந்தி பேசறேன்."

"ஹாய்.. எப்படியிருக்கே, தமா?"

"நான் நன்னா இருக்கேன், அம்மா.. அப்பா எப்படியிருக்கார்?"

"ந்ன்னா இருக்கார்... என்ன விஷயம்?, இந்த ராத்திரிலே போன் பண்ணினே?"

"ராத்திரியா!.. ஓ, சாரி.. எங்களுக்கு காலம்பற இல்லையா?.. ரொம்ப நேரம் ஆயிடுத்தோ?.. இன்னும் படுத்திருக்க மாட்டேள்னு நெனைச்சேன்."

"இன்னும் படுக்கலே.. பேசிண்டு இருந்தோம்.."

"ஓ.. கிருஷ்ணா மாமா எப்படியிருக்கார்?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கார். அவர் மட்டுமில்லே.. வி ஆல் ஆர் வெரிமச் ஹேப்பி.. இங்கே வந்ததே எங்க லைப்லே ஒரு,.. தமிழ்லே ஒரு வார்த்தை சொல்லுவோமே, எஸ்.. ஒரு திருப்புமுனை மாதிரி இருக்கு."

"யூ மீன் turning point?.. ஓ.. லவ்லி.. இத்தனை வயசுக்கு அப்புறமும் ஒரு திருப்புமுனையா?" என்று சொல்லிவிட்டு, 'ஹஹஹஹ்ஹா.." என்று தமயந்தி சிரித்தாள்.

"ஆமாம், தமா! வாழ்க்கைங்கறதே உச்சத்துக்கும், கீழேயும் இறங்கி ஏறிண்டிருக்கற மலைப் பாதைன்னு ஆயிட்ட் பிறகு, திருப்புமுனைக்கு கேக்கவா வேணும்?'

" வேதாந்தமா, அம்மா?"

"வேதாந்தம், சித்தாந்தம்.. என்னவேணா வசதிக்கேத்த மாதிரி ஏதோ பேரிட்டிக்கலாம், தமா! மனசை மலர்த்தி வைச்சிண்டா எல்லாமே ஆனந்தமா இருக்கறது தான் அதிசயம்.."

"ஹை.. எங்க்ம்மான்னா எங்கம்மா தான்.. "

"எதுக்கு?"

"இப்படியெல்லாம் பேசறதுக்கு; கேக்கறவங்களையும் ஆகர்ஷிக்கறத்துக்கு."

"தாங்க்யூ.. ஏதாவது அவசர விஷயமா, தமா?"

"பாத்தியா.. உன்னோட பேசற ஜோர்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பதறி கவலைப் பட்டதே மறந்து போச்சுமா.."

"கவலையா?.. என்னடி சொல்றே?"

" ஒண்ணுமில்லேம்மா.. ஜஸ்ட் பேசணும்னு தோணித்து.. போன் போட்டேன்.. கொஞ்சம் அப்பாகிட்டே தாயேன்.."

"இந்தாங்க.. உங்க பொண்ணு பேசறா.." என்று ரிஸிவரை சிவராமனிடம் தந்தாள் மாலு.

"அப்பா.. எப்படிப்பா இருக்கீங்க?.. தமா பேசறேன்."

"நன்னா இருக்கேம்மா.. இங்கே வந்தது மனசுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கு.. வேறென்ன வேணும்?.. நீ எப்படியிருக்கே? மாப்பிள்ளை, குழந்தைகள் எல்லோரும் செளக்கியம் தானேம்மா?"

"எல்லாரும் செள்க்கியம்பா.. இப்போ எல்லாரும் வெயின்ஸ்வில்ங்கற இடத்துக்கு வந்திருக்கோம்பா.. இங்கே இப்போ ஃபால்ஸ் ஸீஸன் இல்லையா?.. செடி, கொடி, மரம் அத்தனையோட இலைகளும் பழுப்பாய்ப் போய் உதிர்ற இலையுதிர் காலம். அமெரிக்காலே இதை அனுபவிக்க வெளியே கிளம்பியாச்சு.. கூட்டம் கூட்டமா எத்தனை பேர், வரிசையா ரோடு கொள்ளாம எத்தனை கார் தெரியுமா?"

"சிலசமயங்கள்லே உங்க ரசனையே எனக்கு புரியலேம்மா.. பூத்துக் குலுங்க்றதை ரசிக்கறதை புரிஞ்சிக்க முடியறது.. இலைகள் உதிர்ந்து மொட்டையா எல்லாம் போகப்போறதை ரசிக்கிறதா?.."

"அப்படியில்லேப்பா.. பச்சைப் பசேல்னு இருந்த அத்தனையும் பழுப்பைப் பூசிண்டு ஒரே பழுப்புக் காடா மாறி நிக்கறது, எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?.. எல்லாம் வண்ண மாற்றம் தானே அப்பா?"

"இல்லே.. மனசுக்கு என்னவோ பச்சைனா அது அதன் செழுமையை, இளமையைக் குறிக்கறதாகவும், பழுப்புனா உதிர்ந்து போயிடற வயோதிகத்தைக் குறிக்கறதாகவும்.. மனுஷாளுக்கு கறுப்பு தாடி, வெள்ளையாயிடற மாதிரி.."

"......................."

"அதுசரி.. எப்போவுமே பச்சையா இருக்க முடியாது தான்; பழுப்பாறது இயல்புதான். நீ ஏத்துண்டாலும், ஏத்துக்கலையானாலும் அது காலத்தின் கட்டாயம். ஆனா, அதை ரசிக்கறது எப்படின்னு தான் தெரியலே."

"ஒருவிதத்தில் முதுமையின் அழகைக் கண்ணாறக் கண்டு களிக்கறதுன்னு வைச்சுக்கோயேன். அதை அலட்சியப்படுத்தாம, அது வாழ்ந்த வாழ்க்கைக்கு வணக்கம் சொல்றதுன்னு வைச்சுக்கோயேன்.. அப்படியே வரப்போற பச்சைக்கும் வாழ்த்துக்கூறல்.. 'ப்ழையன கழிந்து.. ' ஓ, ஸாரிப்பா.. நீ சொல்ற மாதிரி அடைந்த எதையும் இழக்க கஷ்டமாத்தான் இருக்கு."

"நான் அதுக்குச் சொல்லலே.. கண்ணதாசன் சொன்ன மாதிரியும் எடுத்துக்கணும் இல்லையா? 'வ்ந்தவரெல்லாம் தங்கி விட்டால்..?"

"வேறே பேசலாமே?.. நான் பயந்த மாதிரியே பேச்சுப் போறது.. ஓக்கே. லீவ் இட்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நாங்கெல்லாம் இங்கே உங்களைப் பாத்தோமே?.. நீ, அம்மா, கிருஷ்ணா மாமா, அப்புறம் ரொம்ப வயசான இன்னொருத்தர்--- நீங்க இப்போ டெல்லிலேந்து பேசறேள்; ஆனா, அரைமணி நேரத்துக்கு முன்னாடி, உங்க அத்தனை பேரையும் இங்கே நாங்க பாத்தோம்.. அச்சு அசாலா நீங்க எல்லாருமே தான்!.. ஆச்சரியமா இல்லை? நான் இப்போ உங்களைக் கூப்பிட்டதே, நீங்க டெல்லிலே தான் இருக்கேளான்னு நிச்சயப்படுத்திக் கொள்ளத்தான்."

"தமா.. நீ என்ன சொல்றே?" என்று சிவராமன் திகைத்தார்.


(தேடல் தொடரும்)

Wednesday, December 2, 2009

ஆத்மாவைத்தேடி....18 இரண்டாம் பாகம்

ஆன்மீகதின் அடுத்த கட்டத்தை நோக்கி....

18. தர்மம் தலை காக்கும்

சாயந்திர கோயில் தரிசனம் முடிந்து, சாப்பிட்டு அறைக்குத் திரும்பும் பொழுது ம்ணி எட்டுக்கு மேலாகிவிட்டது.

இன்று ஈஸ்வரன் கோயிலில் மாலுவின் பாட்டு அற்புதமாக இருந்தது.
பாபநாசம் சிவனின் "பராத் பரா பரமேஸ்வரா, பார்வதி பதே ஹரே பசுபதே.." கீர்த்தனையை வாசஸ்பதி ராகத்தில் மாலு பாடினாள்.. "புண்ணிய மூர்த்தி சுப்ரமணியன் தந்தையே.." என்று கடைசி வரியைப் பாடி, மீண்டும் பல்லவிக்குத் திரும்பும் பொழுதே, அதற்குள் பாட்டு முடிந்து விடுகிறதே என்கிற ஏமாற்றம் எல்லோர் முகங்களிலும் கவிந்து, இன்னும் பாடமாட்டார்களா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குள் மாலு அடுத்த பாட்டிற்கு தயாராகி, "நீ இரங்காயெனில் புகலேது அம்ப.." என்று அடாணா ராகத்தில் ஆரம்பித்த பொழுது எல்லோர் முகங்களிலும் பிரகாசம். "தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ, ஸகல உலகிற்கும் நீ தாயல்லவோ.." என்கிற வரிகள் வரும் பொழுது அந்தப் பிரகாசம் பரவசமாக மாறியது.

சங்கீதத்திற்கு எந்த மொழியும் விலக்கல்ல; தடுத்து நிறுத்த வேலியும் அல்ல. அத்தனை பேரும் மெய்மறந்து கேட்டனர். கோயில் கண்டாமணி தீபாராதனை காட்ட ஒலித்த் பொழுது தான் நினைவுலகுக்கு வந்தனர். மனோகர்ஜி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொள்ளக்கூட ஸ்மரணையற்று நின்றார்.

"சிவராம்ஜி! எங்கெங்கோ இருந்த நீங்களெல்லாம் ஒண்ணாச்சேர்ந்து இங்கே ஒரு லட்சியத்திற்காகக் கூடியிருப்பது, தெய்வ சங்கல்பம்
என்று தான் நினைக்கிறேன். எங்க அப்பா காலத்லே இப்படி ஒரு சதஸ் நடத்தணும்னு ரொம்ப ஆசைப்பட்டார். அவரோட அந்த ஆசை உங்க எல்லாருடைய ஒத்துழைப்பினாலும் இப்போ நிறைவேற ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்" என்றார் மனோகர்ஜி.

தீபாராதனைத் தட்டு அருகில் வருகையில், இவ்வளவு நல்ல மனம் படைத்த மனோகர்ஜியின் நல்வாழ்வுக்காக வேண்டிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார் சிவராமன்.

அதை இப்பொழுது நினைத்துக் கொண்டு, மனோகர்ஜி கோயிலில் தன்னிடம் சொன்னதைச் சொன்னார் சிவராமன்."எத்தனை பேருக்கு இப்படிச் சொல்ல மனம் பக்குவப்பட்டிருக்கும்னு நினைக்றே?" என்றார் சிவராமன்.

"நானும அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன்" என்றாள் மாலு.

"அவர் அப்பாவைப் பத்தின நினைப்பு அவருக்கு அடிக்கடி வந்துடும். தந்தை ஆசைப்பட்டது அவர் காலத்லே முடியலே. மரணம் குறுக்கிட்டு அவர் பட்ட ஆசையைத் தட்டிப் பறிச்சிடுத்து. இப்போ தனயன், தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார்" என்றபடி கதவு திறந்தார் கிருஷ்ணமூர்த்தி.

"இப்படிப்பட்ட பிள்ளை ஒரு தந்தைக்கு கிடைக்கறது அபூர்வம் அல்லவா?'

"நிச்சயமா, மாலு! உலக ஷேமத்துக்காக அந்த ஆசைகள் இருந்தால் இன்னும் விசேஷம்."

"வாஸ்தவம் தான்," என்று கிருஷ்ணமூர்த்தி சொன்ன பொழுது அவர் குரலில் சிவராமன் சொன்னதை மனசாரப் புரிந்து கொண்ட திருப்தி இருந்தது. "மஹாதேவ்ஜியின் குடும்பத்தைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்" என்று அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்ட பொழுது, சுவாரஸ்யத்துடன் அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானாள் மாலு.

"அடிப்படையில் பரம்பரையாக இவர்கள் குடும்பம் வியாபாரத்தில் ஈடுபட்ட குடும்பம். மனோகர்ஜியின் தாத்தா மஹாதேவ்ஜி ஒருவிவசாயி. கடுமையான உழைப்பாளி. நிலத்தில் அவ்வப்போது சாகுபடி செய்வதில் சொந்த உபயோகத்திற்கு போக மிதமிஞ்சி இருப்பதை வண்டி கட்டி எடுத்துப் போய் வாரச்சந்தைகளில் விற்பாராம். யாருக்கு எந்த கஷ்டம் என்றாலும் ஓடிப் போய் உதவி செய்திருக்கிறார். சுற்று வட்டார மக்கள் அவரை வெகுப் பிரியமாக நேசித்திருக்கிறார்கள்.

"ஒரு நாள் அவர் நிலத்தில் கிணறு தோண்டுவதற்காக வெடிவைத்துப் பாறைகளைப் பிளக்கும் பொழுது பாறையோடு பாறையாக மழுமழுவென்று வேறொரு வஸ்துவும் பறந்து வந்தது. பதறிப் போய் பக்கத்தில் சென்று பார்க்கும் பொழுது அந்த வேறொரு வஸ்து, கல் விக்கிரகமாகப் புலப்பட்டது. அந்த சிவலிங்க் விக்கிரகம் தான், இந்த மஹாதேவ நிவாஸில் இருக்கும் சிவன் கோயில் மூலஸ்தான விக்கிரகம். மகாதேவ்ஜி காலத்திலேயே சிறு கோயில் மாதிரி எழுப்பி அதை ஸ்தாபிதம் பண்ணியிருக்கிறார்கள். அந்த சிறு கோயில் தான் தனித்தனி சந்நிதிகள், சுற்று மண்டபம் என்று இப்பொழுது பெரிய கோயிலாக எழும்பியிருக் கிறது. மஹாதேவ்ஜி காலத்திற்குப் பிறகு கோயிலைச் சுற்றிய பெருநில பாகத்தையே மாளிகையாக்கி, தாத்தாவின் நினைவாக அவர் பெயரையே மாளிகைக்கு சூட்டிவிட்டார் பேரன்!

" மஹாதேவ்ஜியின் மகன் குருதேவ்ஜி. அவர் காலத்தில் தானிய வியாபாரம் செய்திருக்கிறார். அவரது ஹோல்சேல் வியாபாரம். புராதன டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் அவரது தானியக்கிடங்கு இருந்திருக்கிறது. மனோகர்ஜிக்கு அவரது ஆறு வயதிலிருந்து தனது தந்தையைப் பற்றின ஞாபகம் இருக்கு. அவரைப் பற்றி நினைத்தாலே லாரிகள் நினைவுதான் முந்திக் கொண்டு அவருக்கு வருமாம். அப்படிக் கிடங்கின் முன்னால் லாரிகள் வரிசை கட்டி நின்றிருக்குமாம். தேசத்தின் பல பகுதிகளுக்கும் அவர் கிடங்கிலிருந்து ரயில் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் எல்லா வகையான தானியங்களையும் விநியோகித்திருக்கிறார். இலாபத்தில் பெரும்பகுதியை தர்ம காரியங்களுக்கு ஒதுக்கி வைத்து விடுவாராம். தர்ம் காரியம் என்றால், அவர் நோக்கில் பெரும்பாலும் தர்ம சத்திரங்கள் தான். ஹரித்வார், காசி, கயா என்று வடக்குப் பகுதிகள் என்று தான் இல்லை, ஹூப்ளி, புவனேஸ்வர், புனா, ஹாசன், உடுப்பி என்று தேசத்தின் பல பகுதிகளிலும் தர்ம சத்திரங்களைக் கட்டி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் திருத்தணியிலும், இராமேஸ்வரத்திலும் இவர் பெயரில் பெரிய சத்திரம் இருக்கிறது. இன்றைய தேதி வரை அத்தனையும் இலவசம் என்பது தான் விசேஷம்.இன்றும் மனோகர்ஜியின் புத்திரர்கள் தங்கள் வருமானத்திலிருந்து நிதி ஒதுக்கி இவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார்கள்.

"அடடா! கேட்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு!" என்று வியந்தாள் மாலு.

"மனோகர்ஜி காலத்தில் தானிய வியாபாரம் முழுசாக மொத்த வியாபாரம் என்று இல்லாமல், ரிடெயில் மார்க்கெட் பக்கமும் கொஞ்சம் திரும்பியிருக்கு. தானியங்களைச் சுத்தம் செய்து சிறு பைகளில் அடைத்து தேசம் பூராவும் சப்ளை செய்திருக்கிறார்கள். இவரது 'மான் மார்க்' கோதுமை பைகள் பிரசித்தமானதாம். மனோகர்ஜியின் மகன்கள் காலத்தில் இப்பொழுதும் வியாபாரம் தான் என்றாலும் அது வெவவேறு விதமாக டைவர்ஸிஃவைடு ஆகிவிட்டது. ஒருநாள் என்னைக் காரில் அழைத்துச் சென்று தன் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அத்தனை பேரும் ரொம்ப நல்ல மாதிரி. தந்தை கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள்."

"மனோகர்ஜியின் தந்தை குருதேவ்ஜிக்கு நண்பர் கிருஷ்ணமகராஜஜி. இருவரும் காசி சர்வ் கலா சாலையில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பிற்குப் பிறகு குருதேவ்ஜி வியாபாரத்திற்கு வர, கிருஷ்ண மகராஜ்ஜியோ யோகம் பயில இமயமலை நாடினார். வியாபாரம் பிடிக்காமல் மனோகர்ஜியின் தாத்தாவும் கிருஷ்ண மகராஜ்ஜியைத் தேடி இமயம் சென்றார். இந்தக் கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்."

"கிருஷ்ணா! கேட்க கேட்க பிரமிப்பா இருக்கு.. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" என்றார் சிவராமன்.

"எல்லாம் மனோகர்ஜி சொன்னது தான்.. அதுவும் லேசில் சொல்லலே; ஏதாவது கேட்டால் பலசமயங்களில் லேசா சிரிச்சிண்டு பேச்சை மாத்திடுவார். அத்தனையும் துருவித் துருவிக் கேட்டு தெரிஞ்சிண்டது.. செஞ்சதை செஞ்சவுடனே மறந்திடுவார்.. இதெல்லாம் செய்யறதுக்குத் தான் பிறவி எடுத்திடுக்கிற மாதிரி, ஒரு போக்கு. தான் தான் இதைச் செய்கிறோம்ங்க்கற நினைப்பு கூட இல்லாத, அப்படி ஒரு ஆத்மா!" என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவர் அறை வெளிப்பக்கம் யாரோ நடமாடுகிற மாதிரி
சப்தம் கேட்டது.

"வெளியே ஏதோ சப்தம் கேட்டமாதிரி இல்லை?" என்று மாலு கேட்டாள்.

"இல்லை. உனக்கு பிரமையா இருக்கும்.." என்று சிவராமன் சொல்லிக் கொண்டே இருக்கையில், "எனக்கும் கேட்ட மாதிரி இருந்தது" என்று கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து கதவு பக்கம் நகர்ந்தார்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails