மின் நூல்

Friday, December 30, 2011

பார்வை (பகுதி-19)


                     அத்தியாயம்--19
ன்னிக்குக் காலைலே படுக்கைலேந்து எழுந்துக்கறச்சேயே மனசுக்கு ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு..  வழக்கமா முன்னேல்லாம் கண் பார்வை இருக்கறச்சே, உள்ளங்கை ரெண்டையும் தேய்ச்சு,, பின்னாடி அதைப் பாத்துத் தான் விழிக்கறது வழக்கம்.  பிற்பாடு பார்வை போனதுக்கு அப்புறம் கொஞ்ச நாட்கள் வெறுமனே உள்ளங்கைகளை ஒண்ணோடு ஒண்ணு தேய்க்கறதை மட்டும் செஞ்சிண்டு மனசில் உள்ளங்கைகளைப் பார்க்கறதா பிரமையை மட்டும் பதிச்சிண்டிருந்தேன். நாளாவட்டத்திலே அந்தப் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாது போனது..

இன்னிக்கு என்னவோ எழுந்திருக்கறச்சேயே அந்தப் பழக்கம் நினைவுக்கு வந்து உள்ளங்கை இரண்டையும் தேய்ச்சிண்டு, அதை கண் ஒத்திப் பாக்க முடியாட்டா லும், சீக்கிரத்தில் முன்னே மாதிரியே பாக்கற சக்தியைக் கொடு தாயேன்னு தெய்வத்தை வேண்டிண்டேன்.   இன்னைலேந்து ஆரம்பிக்கற இந்த புதுமாதிரியான சிகித்சை வெற்றிகரமா முடிஞ்சு எனக்கு பார்வை பழையபடி வந்திடும்ன்னு அசாத்திய நம்பிக்கை மனசில் அதுவாகவே துளிர்விட்டது.  பாஸிட்டிவாக அந்த நம்பிக்கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கணும்னு உறுதி பிறந்ததும் என்னைக்கும் இல்லாத உற்சாகம் மனசில் பொங்கி வழியறது...

காலைக் கடன்கள் முடிச்சு பல் தேய்த்து முகத்தைத் துண்டால் துடைசிண்டிருக்கறச்சே, "காப்பி கொண்டு வரட்டுமா?"ன்னு சுசீலா கேட்டது,  கேட்கிறது..

"கொண்டு வாயேன்.. அவங்கள்லாம் எழுந்தாச்சா?"

"அவா மாடிலே தூங்கப்போனா.  சித்த நேரத்துக்கு மின்னாடி குழாய் சத்தம் மட்டும் கேட்டது.  உங்க தம்பி எழுந்திட்டார் போலிருக்கு.  இப்போத் தான் கலந்தேன். உங்களுக்குக் கொண்டு வர்றேன்."

"தம்பியும் வந்திடட்டுமேன்னு பாக்கறேன்."

"கலந்திட்டேன்.  ஆறிடப் போறது. அவா கீழே இறங்கி வந்ததும், புதுசா கலந்து தர்றேன். டிகாஷன் இறங்கிண்டிருக்கு."

"சரி.."

சித்த நேரத்தில் வந்தவ,  விரித்த என் கையில்லே காப்பி டம்ளரைக் கொடுக்கிறாள். ஒரு மடக்கு உள்ளே போனதுமே, தேவாமிர்தம் போலிருக்கு..

"ராத்திரி போன்லே சாந்தி பேசினான்னா"

"அப்படியா?.. என்ன சொன்னா? புது வைத்தியத்தைப் பத்தியா?"

"இல்லேன்னா.  விவேகானந்தனைப் பத்தி."

"ஓ. வெரிகுட்.."ன்னு திடீர்னு ஏற்பட்ட உற்சாகத்தில் எனக்கே வியப்பா இருக்கு.. "டாக்டரம்மா விவேகானந்தனைப் பார்த்தாங்களாமா?"

"ஆமான்னா..  இங்கேயிருந்து சாந்தி கிளம்பினதுமே நேரே விவேகானந்தன் வீட்டுக்குத் தான் போயிருக்கா.  நல்லவேளை, அவனும் வீட்லே இருந்திருக் கான்."

"அங்கங்கே நிறுத்தாமா சொல்லு.."

"அப்படிச் சொல்லித் தான் எனக்கு பழக்கம்.  அதைத் தெரிஞ்சே வேறே மாதிரி சொல்லுன்னா, எப்படிச் சொல்றது,  சொல்லுங்கோ."

"சரி. அதுக்காக சிணுங்காதே.  உன் வழிலேயே சொல்லு."

"இவ்வளவு வயசாச்சே தவிர நம்மளுக்கும் பல விஷயம் தெரிலேன்னா."

"என்ன தெரியாம போயிடுச்சுன்னு சொல்லு."

"சின்னஞ்சிறுசுகள் ரெண்டும் எப்படா இந்த கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சு அடுத்தாப்பலே நடக்க வேண்டியதெல்லாம் நடக்கும்ன்னுட்டு காத்திண்டிருக்கறது உண்மை தான்...  அந்த பரபரப்புக்கு நடுவேயும் இந்தப் பையன் கொஞ்சம் கூட பதட்டப் படாம முறையா எல்லாம் நடக்கணும்ங்கற திலே எவ்வளவு அக்கரையா இருக்காங்கறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு."

"எதுக்குத் தான் நீ ஆச்சரியப்படலே, இதுக்கு ஆச்சரியப்படாம இருக்கறதுக்கு!
அவனுக்கு குடும்ப பாசம் ஜாஸ்தி.  எதுவும் முறைப்படி நடக்கணும்னு தான் விரும்புவான்னு எனக்குத் தெரியும்."

"தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? அவனுக்கும் அவனைப் பெத்த அப்பா அம்மா இருக்கா, அவா கிட்டே பேசி அவா சொல்றதையும் கேட்டுண்டு அவங்க ஒப்புதலோட அதுக்கு மேலே உங்க தம்பி கிட்டே விஷயத்தை ஆரம்பிக்கணும்னு கொஞ்சமாவது நீங்களோ நானோ நெனைச்சுப் பாத்தோமா? சொல்லுங்கோ.."

சுசீலா கேக்கறது நியாயம் தான்.  விஷயம் நடக்கணும்ங்கற வேகம் பலதை யோசிச்சுப் பாக்க வைக்காம புத்தியை பல நேரங்கள்லே மழுங்கடிச்சிடுது. "சுசீலா, ஒப்புத்துக்கறேன்.  நமக்குன்னு எதுவும் இல்லாம போயிட்டதனாலே, இந்த அனுபவமெல்லாம் புதுசாப் போயிட்டது. தப்பு என் மேலே தான். மேற்கொண்டு என்ன நடந்தது, டாக்டர் அம்மா என்ன சொன்னாங்கங்கன்னு நீ சொன்னேன்னா புண்ணியமாப் போகும்.."

"அதைத் தானே சொல்ல வந்தேன்.  நீங்க வேறே குறுக்கே குறுக்கே ஏதாவது சொன்னா, எனக்கும் அவ சொன்னதெல்லாம் மறந்து போயிடும். கொஞ்சம் இருங்கோ. டிகாஷன் எறங்கிடுத்தான்னு பாத்திட்டு வந்திடறேன்."

"நடந்ததை சொல்லிட்டு அதைப் பாக்கப் போகக்கூடாதா?"

"தோ வந்திட்டேன்.." என்று போனவள் தான்.  ஆளையே காணோம்.

ஹாலில் தம்பியோட குரல் கேக்கறது. எழுந்திட்டான் போலும்.

"அண்ணி.. ரொம்ப நாளாச்சு இப்படி வாகா காப்பி குடிச்சு.."ன்னு அவன் சொன்னது கேட்டதும் தான், அவனுக்கும் காப்பி கலந்து கொடுத்து விட்டாள்னு  தெரியறது.  பாவம். ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு அவளும் எத்தனையைத் தான் சமாளிப்பாள்ன்னு எனக்கும் அவளை நெனைச்சு இரக்கமா இருக்கு..

இருந்தாலும் சட்டுபுட்டுன்னு அவளும் டாக்டர் சாந்தி போன் பண்ணிச் சொன்னனதைச் சொல்லிட்டுப் போயிருக்கலாம்னு தான் திருப்பித் திருப்பி மனசு நெனைக்கிறது.  சுசீலா சொன்னதிலேந்து, அடுத்த வேலை விவேகானந்தனோட அப்பாக்கு அவரோட பையன் சம்பந்தமாய் நம்ம புரோப்பசலை வைக்க வேண்டியது தான்னு தோண்றது.  பெண்ணுக்குப் பெரியப்பா நான்;  இந்த கல்யாணத்தைப் பொறுத்த மட்டில் இங்கேயும் அங்கேயும் ரெண்டு பக்கமும் பேசி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியது என்னோட பொறுப்புன்னு மனசார நெனைக்கறேன். அதுக்காக அடுத்தது அடுத்ததுன்னு நெறைய வேலைகள் பாக்கி இருக்கு..

டாக்டர் சாந்தி ரொம்பவும் இண்ட்லிஜெண்ட்.  அடுத்தாப்லே அவங்க என்ன செஞ்சிருக்காங்க்ன்னு தெரிலே.  போன்லே சுசீலாகிட்டே சொல்லியிருக்கலாம்.
அதையாவது இவள் சொல்லிட்டுப் போயிருந்தா, மேற்கொண்டு என்ன செய்யணும்னு முடிவெடுக்கலாம்னா, அதுவும் சொல்லாம போயிட்டாளே..' ன்னு நெனைச்சிண்டிருக்கறச்சேயே..

"என்னண்ணா, எழுந்தாச்சா?"ன்னு கேட்டுண்டே விஸ்வநாதன் ரூமுக்குள் நுழையறான்.

"வாப்பா.. எழுந்து காப்பியெல்லாம் கூட ஆச்சு."

"அப்படியா?.. ஃபைன்.  மணி ஏழாறது.  பத்துக்கெல்லாம் எல்லாரும் வந்திடுவா.
அதுக்குள்ளே நாம எல்லாரும் ரெடியாகணும் இல்லையா?"ன்னு அவன் கேட்கிற பொழுது தான், இன்னிக்கு எனக்கு ஆரம்பிக்கப்போற புது வைத்தியம் நினைப்பிலேயே இவன் இருக்கான்னு தெரியறது.  எனக்கும் இப்போத் தான் அதுவும் நினைப்புக்கு வர்றது.

நல்ல வேடிக்கை..  இவன் பெண்ணோட எதிர்கால நலனைப் பத்தி நான் யோசிச்சிண்டிருக்கேன்.  இவன் என்னடான்னா, என்னோட நலனைப் பத்தியே சிந்தனைலே இருக்கான்!    

எதுக்கு எது முந்தின்னு தெரிலே.  எல்லாம் முக்கியம் தான்.  ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காம ரெண்டுலேயும் முழு கவனத்தைப் பதிக்கணும்னு நெனைச்சிக்கறேன்.

இப்பவே சங்கரி கல்யாணம் பத்தி நாங்க நினைச்சிருக்கறதை இவனிடம் சொல்லிடலாமான்னு நெனைக்கிறேன்.  நான் சொன்னா இவன் அதுக்கு மறுப்பு ஒண்ணும் சொல்லப் போறதில்லை.  அவன் மறுப்பு சொல்றத்துக்கும் எது ஒண்ணும் இருக்கறதா எனக்குத் தெரிலே.   அவனைப் பொருத்தமட்டில் நான் எது சொன்னாலும் சரிதான்.  இவன் என்ன சொல்றான்னு தெரிஞ்சிண்டு, அதுக்கு அப்புறம் விவேகானந்தன் அப்பாவை அப்ரோச் பண்ணறதும் நல்லது தான்.
எக்குத் தப்பா பேச்சு வார்த்தைலே எதாச்சும் மாறிப் போனாக் கூட, சொந்த தம்பிக்கு சமாதானம் சொல்றது சுலபம்.  எல்லாம் நினைப்பாவே இருக்கறது ரொம்ப தப்பு.  அடுத்த கட்டத்திற்கு மூவ் ஆனால் தான், அதுக்கு அடுத்த கட்டத்திற்கு அதை நகர்த்தலாம்.  எத்தனை கட்டம் தாண்டணுமோ, அதுவும் தெரிலே.  இப்போதைக்கு தம்பி கிட்டே லேசா கோடி காட்டி, ஆரம்பிச்சு வைக்கலாம்னு நான் நெனைச்சிண்டிருக்கறச்சே,  வாசல் காலிங்பெல் கணகணக்கிறது.

புரொபசர் பத்து மணிக்கு வர்றதாச் சொல்லியிருந்தாலும், டாக்டர் சாந்தி கொஞ்சம் முன்னாடியே வந்திட்டாங்க போல இருக்கு.  அவங்க குரல் தான் உற்சாகமா கேக்கறது.

ஏன் அப்படி முன்னாடி வந்தாங்கன்னு பின்னாடி தான் தெரிஞ்சது.  தெரிஞ்சது அது மட்டுமில்லே, ஒவ்வொரு விஷயத்தையும் நான் எவ்வளவு மேலோட்டமா பாக்கறேங்கறதும் எல்லாத்தையும் எங்கிட்டே அவங்க சொல்லறப்போத் தான் தெரியறது..


(இன்னும் வரும்)




   

Wednesday, December 28, 2011

பார்வை (பகுதி-18)

                   அத்தியாயம்--18

து எப்படின்னு அவளுக்கே கூடத் தெரியாது.  எல்லாம் உத்தேசமான குத்துமதிப்பு தான்.  அதுக்காக அவ அப்படி ஒண்ணும் சிரமப்பட்ற மாதிரியும் தெரியாது.  பார்த்திண்டு இருக்கறச்சேயே அடுத்தது அடுத்ததுன்னு ஒவ்வொண்ணா கச்சிதமா முடிஞ்சிடும்..   இப்படித்தான் தனி ஒரு ஆளா இழுத்துப் போட்டுண்டு விருந்துக்காக அத்தனையும் செஞ்சது அற்புதமா அமைஞ்சு அத்தனை பேரும் பாராட்டினப்போ சுசீலாவுக்கு மனசு இலேசாகித் தான் போயிருக்கும்..

விவேகானந்தனின் வருகையை எதிர்பார்த்து ஏதேதோ பேசுகிற சாக்கில், கொஞ்சம் நேரம் கடத்தினது வாஸ்தவம் தான்.  சாப்பாட்டுக்கும் நேரம் ஆய்டவே, சங்கரியைக் கூப்பிட்டு டாக்டர் சாந்தி எல்லோருக்கும் இலையைப் போடச் சொல்லிட்டார்.   விவேகானந்தனையும் வரச்சொல்லி சொல்லியிருந்தது விஸ்வநாதனின் குடும்பத்திற்குத் தெரியாமல் போனது நல்லதுக்குத்தான்னு ஆயிற்று.

சாப்பிட்டானதும் எல்லாரும் ஹாலில் உக்கார்ந்து பேசிண்டிருக்கறச்சே, புரொபசர் மித்ரா மேற்பார்வைலே நாளைலேந்து எனக்கு செய்யப்போற 'ம்யூசிக் தெரபி' வைத்தியம் பத்தி டாக்டர் சாந்தி நிறையச் சொன்னார்.. நான் ஒண்ணும் சொல்லாம கம்முனு அவர் சொல்றதைக் கவனமாக் கேட்டிண்டி- ருந்தேன். விஸ்வநாதனுக்குத் தான் சந்தோஷமான சந்தோஷம் போலிருக்கு.  "டாக்டரம்மா.. என்ன சொல்றதுன்னே தெரியலே;  அண்ணாக்குப் பார்வை திரும்பறத்துக்கு நீங்க படற சிரமத்திற்கு உங்களை கோயில்லே வைச்சுத்தான் கும்பிடணும்.."ங்கறான்.

அவங்களோ, "அப்படில்லாம் சொல்லி என்னை தெய்வமாக்கிடாதீங்க.. நான் மனுஷி சார்! இந்தக் காரியம் நல்லபடி நிறைவேற நம்மையெல்லாம் அந்த தெய்வம் தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்குன்னு வேணும்னா சொல்லுங்கோ.."ங்கறாங்க.

இதான் டாக்டரம்மா கிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது.  எப்பவும் இப்படித் தான்.
எந்த சமயத்திலேயும் நெலைகுலையாத அடக்கம்.  எந்த ஒயரத்துக்குப் போனாலும், அவங்க கால் தரைலே தான் பாவி நிக்கும். தன்னாலே எதுவும் நடக்கலைங்கற ஆழ்ந்த நம்பிக்கை அடிநாதமா அவங்க செய்யற, பேசற அத்தனைலேயும் படிஞ்சு இருக்கும்.  இப்படிப்பட்டவங்களோட பழகற, பேசற பாக்கியம் நமக்கும் கிடைச்சிருக்கேன்னு அப்பப்ப நெனைக்கத் தோணும்.

"காலைலே ஒரு பத்து மணிக்கு இங்கே இருக்கற மாதிரி அல்லாரும் வந்திடுங்கோ.  வாத்தியம் வாசிக்கறவங்க அவங்க அவங்க வாத்தியத்தோட இங்கே வந்திட்டா நல்லது"ங்கறார் புரொபசர்.  புரொபசர் குரல் ரொம்ப இதமா மென்மையா இருக்கு.  குரலை வைச்சு அவர் எப்படி இருப்பார்ன்னு நெனைக்கற நெனைப்பைப் புறந்தள்ளி, அவர் என்ன சொல்றார்னு கவனமா கவனிக்கறேன்..

"நான் வயலின்.  என் பொண்ணு வாய்ப்பாட்டு.  இனிமே எங்களுக்கு ஞாபகம் எல்லாம் இந்த வைத்தியத்திலே தான்.  எப்படா பொழுது விடியும்னு பாத்திருப்பேன். விடிஞ்சதும் இங்க வர்ற நினைப்பிலேயே எல்லாக் காரியமும் இருக்கும்.  பத்துக்கு மின்னாடியே வந்திட்றோம்" என்று விஸ்வநாதன் குழந்தை மாதிரி சொன்னப்போ, அவன் வெகுளித்தனத்தை நெனைச்சு வெளிக்குத் தெரியாம மனசிலேயே சிரிச்சுக்கறேன்.

"நீங்கள்லாம் உங்க செளகரியப்படி வாங்கோ. நான் பத்துக்கெல்லாம் இங்கே ரெடியா இருப்பேன்.  கரெக்டா நேரத்திற்கு வர்றது, லெசனை ஆரம்பிக்கறது ன்னு ரெண்டு நாள் போனா எல்லாருக்குமே ஒவ்வொண்ணா பழக்கமாயிடும்.  இன்னது தான் இதுன்னு இந்த வைத்தியமும் ஓரளவு தெரிஞ்சிடும்.  அது தெரிஞ்சிட்டா ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க என்ன செய்யணும்னும் பிடிபட்டுப் போயிடும்.  என்ன, நான் சொல்றது?" என்கிறார் மித்ரா.

இத்தனையும் எனக்காகத் தான்.  எனக்காகத் தான் அத்தனை பேர் பாடும்.  அதையெல்லாம் கேட்டுண்டு நா மட்டும் பொம்மை மாதிரி ஒக்கார்ந்திருக்க முடியலே. எனக்கு என்ன பொறுப்பு ஒதுக்கியிருக்குன்னு தெரிஞ்சிக்கற ஆவல், மனசில் பாரசூட்டாய் குடைவிரிக்கறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்திட்டு எனக்கான வேலை பத்தி புரொபசர் ஒண்ணும் சொல்லாததினால், சடாரென்று கிளர்ந்தெழுந்த ஆவேசத்தில், "நான் என்ன செய்யணும்?.. எனக்கு ஒரு வேலையும் இல்லையா?.." ங்கறேன்.

"ஏன் இல்லாம?.. நீங்க தான் மொத்த வேலையும் செய்யப்போறீங்க.. உங்களைச் சுத்தி தான் அத்தனையும் நடக்கப் போறது. அப்படி நடக்கறச்சே சும்மா இருந்திட முடியுமா உங்களாலே?.. நீங்க இருக்க நெனைச்சாலும், உங்க மனசு உங்களை சும்மா இருக்க விடாது. என்ன, நான் சொல்றது?" என்கிறார் மித்ரா.

"பெரிப்பா.. நான் பாடறச்சே தப்பு இருந்தா திருத்தி நீங்க தான் கரெக்ட் பண்ணிப் பாடனும்.. ஓ.கே..வா?" என்று கேட்கிறாள் சங்கரி.

"டபுள் ஓ.கே.."ன்னு நான் சொன்னதும், அந்த ஹாலே சிரிப்லே அதிர்றது.

சங்கரியின் குரலைக் கேட்டதும் விவேகானந்தனின் நெனைப்பு தன்னாலே வருது. இந்தக் குழந்தைக்கு எல்லாம் நினைக்கற மாதிரி நல்லபடியா நடக்கும்னு ஒரு தெம்பு. அதே சமயத்தில் 'என்ன இந்த பையனை இன்னும் காணோம்?'ன்னு மனசிலே இன்னொரு பக்கத்திலே ஒரு குடைச்சல் வேறே.

"போனவாரம் அண்ணி கச்சேரிலே சங்கரியும் கூடப் பாடினாளே.. தெரியுமா, டாக்டர்?" என்று விஸ்வநாதன் கேட்பது மெதுவா கேக்கறது..

"தெரியுமே?"ங்கறார் டாக்டர் சாந்தி. "விவேகானந்தன் தானே அன்னிக்கு பிடில்?.. அந்தப் பையனும் நன்னா வாசிச்சானே?"

"அந்தக் கச்சேரி தான்.. அது ரொம்ப நன்னா அமைஞ்ச ஒண்ணு.. அதுசரி, அந்தப் பையனுக்குச் சொல்லலியா?..   இந்த க்ரூப்லே அவனும் இருந்தா, அற்புதமா இருக்குமே?"ன்னு கேக்கற தம்பியோட குரல்லே ஆசை ததும்பி வழியறது.

'தம்பி! அவன் தான் உனக்கு மாப்பிள்ளை ஆகப்போறான், தெரிஞ்சிக்கோ'ன்னு சொல்ல உதடு வரை வார்த்தை வந்திடுச்சு.   கஷ்டப்பட்டு அடக்கிக்கறேன்.   "அந்த விவேகானந்தனுக்கும் சொல்லிடுங்க, டாக்டர்..  விஸ்வநாதனோட சேர்ந்து ரெட்டை வயலின் ஆச்சு.."ங்கறேன்.

"எத்தனை ரெட்டை பாருங்க..  சங்கரியும் நானும் பாட்டு.  மச்சினரும், விவேகானந்தனும் வயலின்" என்று சுசீலாவின் குரல் கேட்டதும், 'என்ன, என்னை உங்க லிஸ்ட்லே சேர்த்துக்க மாட்டீங்களா!"ன்னு கொஞ்சம் சத்தமாவே நான் முணுமுணுத்ததைக் கேட்டு, "எஸ்.." என்று புரொபசர் மித்ரா சொன்னதும் எனக்காக என்ன வேலை சொல்லப் போறாரோ என்றிருந்தது..

"நீங்க இல்லாமலா? நீங்க தான் மெயின்.  ஆனா ஒண்ணு.  நீங்க ஸோலோவா பாடினா இன்னும் எஃபெக்டிவ்வா இருக்கும்.  எஃபெக்டிவ்னு நான் சொன்னது இன் தெ ஸென்ஸ் ஆஃப் க்யூர்.  மியூசிக்கே மருந்தா ஒர்க் பண்ணப் போறது தான் இந்த ட்ரீட்மெண்டோட எஸ்ஸன்ஸ். மத்தவங்களோடு சேர்ந்து இல்லாம தனியா நீங்களே பாட்றதுங்கறது அந்த ஸ்வர கற்பனை சஞ்சாரத்தில் மெய்மறந்து பயணிக்கலாம்ன்னு ஒரு அட்வாண்டேஜ் உங்களுக்கு கெடைக்கறது, இல்லையா.?.. அதுக்காகச் சொன்னேன்.  இந்த மாதிரி அப்பப்ப சமயம் கிடைக்கும் போதெல்லாம், உங்களை நீங்க மறக்கறதும் நல்லது..  மறக்கறதுன்னா தெரிஞ்சே நைஸா இந்த உலகத்தோட பிணைச்சுக் கட்டியிருக்கற சங்கிலிலேந்து விடுபட்டுக்கறது..  அப்படி உங்களை மறக்கற அருமையை இதுக்கு முன்னாடி நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க.. அதனாலே சொல்றேன்..  ஸோலோ தான் உங்களுக்கு பெஸ்ட்..என்ன, நான் சொல்றது?" என்கிறார் புரொபசர்.

"நா என்னை மறக்கற நேரத்லே என் மனசை உங்க பிடிலே எடுத்துக்கப் போறீங்க, இல்லையா, டாக்டர்?"

அவசர அவசரமாக எனக்கு மறுப்பு சொல்கிற தொனியில், "நோ.."ங்கறார்  புரொபசர். "அப்படிப்பட்ட மெஸ்மரிஸமெல்லாம் இல்லை. திஸ் ஈஸ் ப்யூர்லி சயின்ஸ்"ங்கறார்.  "இப்போ பாருங்க.. ஸாரி.. கொஞ்சம் உன்னிப்பா கேளுங்க.. வெளிப்பக்கம் இருக்கற அந்த வேப்ப மரத்தின் கிளையொண்ணு இந்த ரூம் ஜன்னல் கதவு மேலே காத்திலே உரசி உரசி விடுபடறது, கேக்கறதா.. அப்படி உரசரதும், விடுபடறதும் மாத்தி மாத்தி நடக்கறச்சே அந்தக் காரியமே 'ரிதமா'  இசை புரிபடற மனசுக்கு புரியறச்சே ஒரு புல்லரிப்பு ஏற்பட்றது.  ஒருதடவை அந்த மரக்கிளை ஜன்னல் கதவிலே உரசி விடுபட்டதும் அடுத்த உரசலை எதிர்பார்த்து மனசு காத்திருக்கு..  காத்து வீசாம அந்த உரசல் நடக்கலேனா, ஏன் இந்த தாமதம்னு மனசு ஏங்கும்.  'காத்தே வீசு; அந்த மரக்கிளையை அசக்கு'ன்னு கூட மானசீகமா மனசு காத்தை இறைஞ்சும்.   என்ன நான் சொல்றது?" என்கிறார் புரொபசர்.

"நீங்க சொல்றதை அனுபவிக்கறேன், புரொபசர்! ப்ளீஸ் கன்ட்னியூ."

"வீசற காத்து, ஓசையோட எழுந்து கரைக்கு படிஞ்சு வந்து திரும்பிப் போற சமுத்திர அலை, 'ஹோ'ன்னு மேலேந்து கீழே சரிஞ்சு குதிக்கற நீர்வீழ்ச்சி, சடசடன்னு பெய்ற மழைன்னு, உன்னிப்பா கவனிக்கற அத்தனை உலக நடவடிக்கையிலும் ஒரு ரிதம் இருக்கு. அந்த ரிதத்தை அனுபவிக்கறதிலே ஒரு சுகம் இருக்கு. அந்த சுகம் தான் மருந்தா செயல்படறது.  இப்போதைக்கு இது போதும்.  மத்ததை அடுத்த சந்திப்பில் வைச்சிக்கலாம்.  இப்போ வார்த்தைலே சொன்னா கற்பனைலே அந்தக் காட்சியைக் கொண்டுவந்து அதெல்லாம் நடக்கும் போது இதுக்கு முன்னாடி அனுபவிச்ச அனுபவிப்புகளை நினைவிலே மீட்டிப் பார்த்து ரசிக்கத் தெரிந்தவங்களைத் தவிர மத்தவங்களுக்கு அவ்வளவா புரிபடாது.  ஆனா அதை அனுபவிக்கறத்தே தெரியும்.. இதுக்கு முன்னாடியும் அதையே நீங்க அனுபவிச்சிருப்பீங்க.. ஆனா, அப்பல்லாம் அதன் அருமை தெரியாத அனுபவிப்பு.  இப்போத்தான் முதல் தடவையா அது தன்னோட அருமையை உங்களுக்குத் தெரியப்படுத்தப் போறது.. என்ன, நான் சொல்றது?"ன்னு புரொபசர் சொல்வது, எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புக்கு என்னை ஏங்க வைக்கிறது.

"தெரியப்படுத்தப் போறதா? விளங்கலியே புரொபசர்?"

"தெரியப்படுத்தப் போறதுன்னா? ம்ம்.. ஐ மீன், நீங்க உணரப்போறீங்கன்னு வைச்சிக்கங்களேன்.. என்ன, நான் சொல்றது?"

இப்போ தான் தெளிவா அதைக் கவனிச்சேன்.  இந்த புரொபசர் தான் எதைச் சொன்னாலும், 'என்ன, நான் சொல்றது?'ன்னு கேட்டுத்தான் தான் சொல்றதை முடிக்கிறார்ங்கறதை கவனிச்சேன்.  இன்னும் அதை நிச்சயப்படுத்திக்க அடுத்த தடவை அவர் பேசறச்சே அதை உன்னிப்பா கவனிக்கணும்னு மனசிலே நெனைச்சிக்கறேன்.

திடுதிப்பென்று "நானும் உங்களோட கலந்துப்பேன்.  நாளைக்கு நான் வர்றச்சே என்னோட ப்ளூட்டோட வர்றேன்."ங்கறார் புரொபசர்.

எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்.  புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்த புரொபசர்.  கற்பனையில் என் மனசில் எழுதிப் பார்த்த இந்த வார்த்தைத் தொடரே ஒரு வினோத கிளர்ச்சியை கிளப்பறது.

"புரொபசர்!.  நீங்கள் புல்லாங்குழல் வாசிப்பீங்களா?..  ஓ. ஃபைன்!எனக்கு அதன் மேல் ஏகப்பட்ட கிரேஸ்.. நாளைக்கு நீங்க அவசியம் வாசிக்கணும்.. அதுக்காக நான் காத்திருப்பேன்.."ன்னு எனக்கே புரிபடாத ஒரு அவசரத்தில் பரபரக்கிறேன்.

"நிச்சயம்.."என்கிறார் புரொபசர். "அடிப்படையில் நானும் ஒரு இசைக்கலைஞன் தான்.  அந்த இசை என்னில் ஏற்படுத்திய அதிர்வுகள் தான் இந்த வைத்தியத்தின் பக்கமே என்னை இழுத்து வந்தது. யார் யார் இந்த இசை கைப்பட்டு எப்படி எப்படி ஆனார்கள்ங்கறதை நாளைக்கு விவரமா பகிர்ந்துக்கலாம். என்ன, நான் சொல்றது?"ன்னு புரொபசர் சொன்ன போது புரிகிறது.  அந்த 'என்ன, நான் சொல்றது'க்கு அர்த்தம் நான் சொல்றது புரியறதா, நான் சொல்றது பத்தி உங்களுக்குச் சொல்ல ஏதாவது இருக்கான்னு அர்த்தம்ன்னு இப்போ நன்னாத் தெரியறது.

இன்னிக்கு என்னாச்சுன்னு எனக்கே தெரியலே.  சிறுபிள்ளை விளையாட்டு மாதிரி இருக்கு.  நானும் புரொபசருமே மாத்தி மாத்தி ரொம்ப நேரம் பேசிண்டிருந்திருக்கோம்னு தெரியறது.  குறுக்கே யாருமே பேசலைங்கறது இப்போ எனக்கு உறுத்தறது.  யாரானும் குறுக்கிட்டு ஏதானும் சொல்ல வந்ததையும் ஜாடை காட்டி இவரே தடுத்தும் இருக்கலாம். என்னை நிறைய பேச வைக்கறத்துக்கான 'டிரிக்'கா இருக்கலாம்.

இதுவே புரொபசர் செஞ்ச ஒரு ஏற்பாடோன்னும் தோண்றது.  இல்லை, இதுவும் இவர் செய்யப் போற வைத்தியத்தின் ஒரு பகுதியோ தெரியலே.  எதுவானாலும் ஆரம்பத்திலேயே தெரிஞ்சிக்க விரும்பற என்னோட பிறவி குணத்தை கொஞ்சம் கொஞ்சமா மட்டுப்படுத்திண்டு அறவே அதை விட்டொழிக்கணும்னு இந்த சமயத்லே நெனைச்சிக்கறேன்.

விவேகானந்தன் என்ன ஆனான்னு தெரியலே.  இந்த 'மியூசிக் தெரபி' ஒரு பக்கம் இருக்கட்டும்.  அவன் இங்கே வரப்போக இருந்தான்னா, மேற்கொண்டான நடவடிக்கைகளை துரிதப் படுத்த அது உதவும்ன்னு தோண்றது.  எப்படியும் இப்பவானும் அந்தப் பேச்சை ஆரம்பிச்சாத்தான்
அடுத்த சித்திரையிலாவது சங்கரி திருமணத்தை முடிக்கத் தோதா இருக்கும்னு நெனைச்சிக்கறேன்.

"என்ன, எந்த லோகத்லே சஞ்சாரம்?.. சொன்னது காதுலே விழலையா?" என்று சுசீலாவின் குரல் கிசுகிசுப்பா பக்கத்தில் கேட்கிறது.

"ஆங்!.. சொல்லு, சுசீலா! என்ன, விஷயம்?"

"ஒண்ணுமில்லே..  அவனை இன்னும் காணோம்.  அதைத் தான் சொல்ல வந்தேன்."

"நானும் அதைத்தான் நினைச்சிண்டு இருக்கேன்.  என்னாச்சுன்னு தெரியலியே?.. பாக்கலாம்.  வந்துட்டான்னா நல்லது."

அரைமணி ஆச்சு; அப்புறம் ஒருமணியும் ஆச்சு.   வந்தவர்கள் எல்லாம் கிளம்பிப் போயும் ஆச்சு.  தம்பியும் சங்கரியும் மட்டும் இங்கேயே தங்கி விட்டார்கள்.  அடுத்த நாள் மாலைக்கு மேல் அவர்களிடத்திற்குப் போவதாக ஏற்பாடு.

இப்பவாவது விவேகானந்தன் வருவானோ என்று நப்பாசை.  ஆனால் கடைசி வரை அவன் வரவே இல்லை.


(இன்னும் வரும்)




















Sunday, December 18, 2011

பார்வை (பகுதி-17)

                      அத்தியாயம்--17

வெளியே வாசல்பக்கம் கேட்ட சுசீலாவின் வரவேற்புக் குரலிலிருந்து வந்திருப்பது டாக்டர் சாந்தி தான் என்று தெரிந்து கொண்டேன்.

அந்த ஃபர்ப்யூம் வாசனை, டாக்டர் உள்ளே நுழைந்து ஹாலுக்கு வந்து விட்டதைச் சொன்னது. "எப்படியிருக்கீங்க, அங்கிள்?.." என்று டாக்டரின் குழைவான குரல் என் அருகில் கேட்கிறது.

வெகு நாட்கள் கழித்து டாக்டர் சாந்தியின் குரலைக் கேட்டதில், ரொம்ப சந்தோஷம்."டாக்டர்! நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?.. நீங்கள் என்னைப் பார்த்து ஒரு மாசத்திற்கு மேலிருக்குமா?.. ஜெர்மனி போயிருந்தீர்கள், இல்லையா? எப்போ திரும்பினீர்கள்?" என்று கேள்விகளை அடுக்குகிறேன்.

"ஜெர்மனி போயிருந்தது ரொம்பவும் உபயோகமாக இருந்தது அங்கிள்! அந்த உபயோகத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுக்குப் பார்வை திரும்புவதில் சில புது நம்பிக்கைகள் ஏற்பட்டிருக்கிறது. அங்கே ஒரு செமினாரில் கலந்து கொள்ற பாக்கியம் கிடைச்சது. அங்கு விவாதிச்ச விஷங்களிலிருந்து கிடைச்சது தான் இந்த நம்பிக்கை."

"அப்படியா, டாக்டர்! ரொம்ப சந்தோஷம். எங்கே போனாலும், எந்த புது வைத்தியம் உங்களுக்குத் தெரிய வந்தாலும், அதை எப்படி எனக்கு உபயோகப்படுத்தலாம்னு நீங்க யோசிக்கறதுக்கு பிரதி உபகாரமா இந்த எளியவனால் என்ன செய்ய முடியும்னு தான் தெரியலே.." என்று சொன்னதற்கு மேல் தொடர முடியாமல் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டு நன்றியில் பரிதவிக்கிறது.

"பார்வை கிடைச்சதும் பாருங்கள், இதற்கெல்லாம் சேர்த்து வைச்சு நிறையச் செய்யப் போகிறீங்க, பாருங்கள்!" என்று இரண்டு தடவைகள் தன்னை அறியாமலேயே அந்தப் 'பாருங்களை' டாக்டர் உச்சரித்த பொழுது, எல்லாவற்றையும் பழையபடி பார்க்க முடியுமா; அப்படி முடிய வேண்டுமே' என்கிற ஆசை மனசில் ஊற்றெடுத்துச் சுரந்தது.

மனசில் கொள்ளும் ஆசைகள் புதிய நம்பிக்கைகளை விதைக்கும் என்பது எவ்வளவு உண்மை? 'விஸ்வநாதன் வந்து சேர்வதற்கு முன்னிருந்த என் மனநிலை வேறே; இப்பொழுது இருக்கும் நிலை வேறே' என்று எனக்கே நன்றாகத் தெரிந்தது. முன்பெல்லாம் 'இப்படியே இன்னும் இருக்கிற காலத்தை கழித்தால் சரி'ன்னு இருந்தது. இப்போவோ நானே உணர்ற சில பொறுப்புகள் சேர்ந்த மாதிரி இருக்கு. மனசில் என்னன்ன செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு வைத்திருக்கிறேன். 'முதலில் சுசீலாவை அல்லாட வைத்து அவஸ்த்தைப்படுத்தாமல் உட்காரவைத்து இத்தனை காலம் அவள் எனக்குச் செஞ்சதற்கு சேர்த்து வைத்து செய்யணும்னு ஆசை. சங்கரிக்கு நல்லபடி திருமணத்தை முடிக்க வேண்டும். அப்புறம் டாக்டர் சாந்தி கொடுக்கற பணிகளை....'

"இவர் தான் உங்களுக்கு இந்த புதிய ட்ரீட்மெண்ட்டைச் செய்யப் போகிற புரொபசர் மித்ரா!" என்று டாக்டர் சொன்ன போது தான் என் சிந்தனை இழை அறுபட்டது. டாக்டர் சாந்தி இன்னொரு டாக்டருடன் வந்திருக்கும் விஷயமே அப்பொழுது தான் தெரிந்தது... காதில் கேட்ட செய்தி மனசில் தைத்ததும், "ஓ! சாரி.. புரொபசரும் கூட வந்திருப்பது தெரியாமலேயே இருந்திருக்கிறேன்.. ஓ, சாரி! டாக்டர் சார், இந்த எளியவனின் இல்லத்திற்கே வந்திருக்கிறீர்களே! ரொம்பவும் நன்றி, ஐயா" என்று நெகிழ்ந்து போனதில் என் குரல் எனக்கேக் கேட்காமல் தழைந்தது.

அந்த புரொபசர் தான் போலிருக்கு."நைஸ் டு மீட் யூ.." என்று என் கைப்பற்றிய கை அவரது குரலைப் போலவே மிகவும் மிருதுவாக இருந்தது. "உங்களைப் பற்றி டாக்டர் சாந்தி நிறைய சொன்னார். உங்கள் குடும்பமே இசைக் குடும்பம் இல்லையா?.. உங்க குடும்பத்தைப் பற்றியும் டாக்டர் சாந்தி எனக்கு டீடெயில்டாக நிறையச் சொல்லியிருக்கிறார். இந்த டீரீட்மெண்ட்டுக்கு இப்படிப் பட்ட குடும்ப சூழ்நிலை அமைவது ரொம்ப அரிதானது. அது நாம் எல்லோரும் சேர்ந்து 'ஒர்க்' பண்ணுவதற்கு ரொம்ப செளகரியமாக இருக்கும்" என்கிறார்.

புரொபசர் மித்ரா சொன்னது அரைகுறையாகத் தான் எனக்குப் புரிந்தது. எல்லோரும் சேர்ந்து 'ஒர்க்' பண்ணனுமா?.. அப்படின்னா என்னன்னு தெரியலே. பின்னாடி அது பற்றி கேட்டுக் கொள்ளலாம்-அவர்களே சொல்வார்கள் என்று பேசாமல் இருக்கிறேன்.

"அங்கிள், ஒண்ணு செய்யுங்கள். ஆறு மாதம் உங்களுக்கு லீவ். நீங்கள் ப்ரெயில் கிளாஸ் பக்கமே வரவேண்டாம். சுசீலாக்கும் அதே மாதிரித் தான். அவளும் சங்கீதப் பள்ளிக்குப் போகவேண்டாம். சமையல், உங்களைப் பார்த்துக் கொள்றதுன்னு இப்போ இருக்கற வேலைகள் மட்டுமில்லை, அவளுக்கு இன்னும் சில பொறுப்புகள் இப்போ சேர்ந்திருக்கு. சுசீலா மட்டுமில்லை, உங்கள் தம்பி, சங்கரி எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவையாயிருக்கிறது. ட்ரீட்மெண்ட் இந்த வீட்டில் தான். ஆஸ்பத்திரி இல்லை, வீடு தான் இதற்கு ரொம்ப செளகரியமானது. அதுவும் நீங்க புழங்குகிற வீடாயிருப்பதால் இன்னும் செளகரியமாக இருக்கப்போகிறது. புரொபசர் காலை பத்து மணி வாக்கில் இங்கு வந்தார் என்றால் சாயந்தரம் ஆறுக்கு கிளம்பிவிடுவார்.உங்க தம்பியும், அவர் பெண்ணும் அந்த நேரத்திற்கு இங்கு இருந்து ட்ரீட்மெண்ட்டுக்குத் துணையா இருக்கட்டும். ஆறு மணிக்கு மேலே அவர்கள் வீட்டுக்குப் போகட்டும். என்ன, நான் சொல்றது புரியறதா?" என்று டாக்டர் சாந்தி கேட்டபொழுது, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி என்று சொல்வார்களே, அந்த மாதிரி எனக்கு இருக்கிறது. என்ன, கண்ணைக் கட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதான் வித்தியாசம்.

நான் பேசாமல் இருப்பதைப் பார்த்தோ என்னவோ, "என்ன யோசனை? எஸ்ஸூன்னு சொல்லுங்க, அங்கிள்! ஜெர்மனியிலேயே நானும், புரொபசர் மித்ராவும் இந்த ட்ரீட்மெண்ட்டுக்கான பிளானெலாம் பண்ணிட்டோம். இதெல்லாம் அங்கேயே யோசிச்சு வைச்சது தான். உங்க கிட்டே சொல்றத்துக்காக இப்போ சொல்றேன். மற்றபடி, பிளான் படி தான் எல்லாம் நடக்கப்போறது; அதிலே எந்த மாறுதலும் இல்லை. என்ன சரியா?.. சுசீலா நீயும் கேட்டுண்ட்டியா?.. என்ன சொல்றே?" என்கிறார்.

"சொல்றதுக்கு என்ன இருக்கு, டாக்டர்?.. திருவையாறிலிருந்து என்னைக்கு சென்னைக்கு வந்தோமோ அன்னைக்கே, எங்க ரெண்டு பேரையும் உங்க கிட்ட ஒப்படைச்சிட்டோம். நாங்க ரெண்டு பேருமே உங்க கேர் ஆஃப் தான். தெய்வம் தான் சகல காரியங்களிலும் உங்களுக்குத் துணையா இருந்து வழிநடத்தறதுன்னு நான் பூரணமா நம்பறேன். அதனாலே நீங்க சொல்றது தான் வேதவாக்கு. நீங்க நினைக்கிறபடியே நடக்கட்டும்.." என்று தீர்மானமாகச் சொல்கிறாள்.
"அப்போ, நாளைக்கே டீரிட்மெண்ட்டை ஆரம்பிச்சிடலாம். இதிலே வேடிக்கை என்னன்னா, இதெல்லாம் உங்களைப் பொருத்த மட்டில் டீரிட்மெண்ட்டே இல்லை; குஷியாக எல்லாரும் சேர்ந்து கொட்டமடிக்கப் போகிறீர்கள், பாருங்கள்!" என்று சொல்லி 'கலகல'வென்று சிரிக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் அந்த 'பாருங்களை'ச் சொல்லும் பொழுது, அந்த வார்த்தை மற்றவர்களுக்காகச் சொல்கிறார் என்றும், எனக்கு சம்பந்தப்படாதது மாதிரியும் இருக்கிறது.

"அப்போ புரொபசர் நாளைக்கு இங்கே வந்திடுவார். சுசீலா! எல்லாருக்கும் மத்தியான சமையலுக்கும், ஈவினிங் சம் ஸ்நாக்ஸுக்கும், காப்பிக்கும் நீ அரேன்ஞ் பண்ணிடணும். எனக்கு செளகரியப்பட்ட பொழுதெல்லாம் நானும் வந்து கலந்துக்கறேன். ஆனா, புரொபசர் மித்ரா தான் இந்த ட்ரீட்மெண்ட்டை வெற்றிகரமா நடத்தி முடிக்கிறார், என்ன?" என்று கேட்ட பொழுது, "ஓ.கே. டாக்டர்! ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்வரிதிங்!" என்கிறார் புரொபசர்.

"அப்புறம். இன்னொண்ணு சொல்லணும். இந்த ட்ரீட்மெண்ட்டுக்கு ஆகும் அத்தனை செலவையும் 'இமைகள் மருத்துவமனை' ஏற்றுக் கொள்ளப் போகிறது. நாங்கள் நோயாளிகளின் அத்யாவசிய நலன்களுக்காக ஒரு ஜெனரல் ஃபண்ட் கிரியேட் பண்ணி வைச்சிருக்கோம்லாயா?.. அதிலேந்து மீட் பண்ணிக்கலாம். மற்றதெல்லாம் உனக்கு நான் சொல்றேன், சுசீலா! சரியா?"

சுசீலாவிடமிருந்து பதிலே காணோம். கண் கலங்கி நிற்கிறாள் போலும் என்று நினைத்துக் கொள்கிறேன்.

"ஏய்! என்ன இதெல்லாம்.. பீ, ச்சீர்! நான் யார்?.. வேற்று மனுஷியா?.. உனக்குச் செய்யாம யாருக்குச் செய்யப்போறேன்.. கண்ணைத் தொடச்சிக்கோ.. அங்கிளைப் பார்! இந்த டீரீட்மெண்ட்டோட எவ்வளவு இன்வால்வ் ஆகப்போறார், பார்! நீ மட்டும் என்ன?.. ஆறே மாசம் தான்; என்னல்லாம் நடக்கப்போறது, பார்!" என்று சுசீலாவை டாக்டர் தேற்றிக் கொண்டிருந்த பொழுது, அந்த 'பார்..பார்' என்கிற வார்த்தையே அதுவே எல்லாமுமாய் பிர்மாண்டமாய் எழுந்து என் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

வாசல் காலிங் பெல் மீண்டும் கணகணக்கிறது. தம்பி குடும்பத்தோடு வந்து விட்டான் போலிருக்கு என்று நினைத்துக் கொள்கிறேன்.


(இன்னும் வரும்)

Wednesday, December 14, 2011

பார்வை (பகுதி-16)

                      அத்தியாயம்--16
ன்னிக்கு விஸ்வநாதன்- தேவி தம்பதியினரின் திருமண நாளாம். அத்தனை பேரும் மரப்படிகள் தடதடக்க மாடிக்கு வந்திருந்தார்கள். "நீ சொல்லவே இல்லையே?" என்று தம்பியிடம் கேட்டேன்.

"இப்போ தானே அண்ணா எங்கள் கல்யாணத்தைப் பற்றியே சொன்னேன்.. பேச்சு சுவாரஸ்யத்திலே நல்ல நாள் கூட மறந்திடுத்து.." என்று இழுத்தான் விஸ்வநாதன்.

"டம்ளர்லே தேவி பாயசம் கொடுக்கறா... வாங்கிக்கோங்கோ.."ன்னு சுசீலா குரல் கேட்டது.

தம்பதியரை வாழ்த்தி விட்டு வாங்கிக் கொண்டேன். அவர்கள் திருமணத்து நாளன்று அங்குப் போயிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. பாயசம் கொழகொழவென்று தித்திப்பாக இருந்தது. அதுவரை அப்படியான ஒரு பாயசத்தை நான் சாப்பிட்டதில்லை. அதனால் பொதுவாக, "சுசீலா, என்ன பாயசம் இது?.. நீ இதுவரை இப்படிப் பண்ணியதில்லையே?"ன்னு கேட்டேன்.

"தேவி.. என்ன பாயசம்னு நீதான் சொல்லேன்.." என்றாள் சுசீலா.

"கேரட் பாயசம், அண்ணா.." என்றாள் தேவி. "அண்ணி தான் எப்படிச் செய்யறதுன்னு சொல்லித் தங்காங்க.." என்று மழலை மிழற்றுகிற மாதிரி குரல் வந்தது.

விஸ்வநாதன் வீட்டிற்கு நாங்கள் முதல் தடவை சென்ற பொழுது நடந்த இதெல்லாம் இப்பொழுதும் என் நினைவில் பசுமையாக இருக்கு. இப்போக்கூட சுசீலா கொடுத்த கேரட் கீரைக் குடிச்சப்போ அந்த நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. "ஓ.. நானும் மறந்து போய்ட்டேன், சுசீலா.. இன்றைக்கு ஜனவரி- இரண்டு இல்லையா?"ங்கறேன்.

"நினைவிருந்தால் சரி.." ங்கறா சுசீலா.

"மறக்கமுடியுமா?.. புதுவருஷம் பிறந்தாலே நினைவுக்கு வந்துடும். இந்த வருஷம் என்னாச்சுன்னு தெரியலே.. சுத்தமாக மறந்தே போயிட்டேன்.." ங்கறேன்..

"கேரட் கீரைக் குடிச்ச பின்னாடியாவது ஞாபகத்துக்கு வந்ததே.. "

"நாம முதல்தடவை விஸ்வநாதன் வீட்டிற்குப் போனப்போ, காரட் பாயசம் சாப்பிட்டோம் இல்லையா?.. ஸ்பெஷல் பாயசம் வைச்சத்துக்குக் காரணம் அன்னிக்கு அவங்க திருமண நாள்னு சொன்னது தான் இப்போ ஞாபகத்திற்கு வந்து, நீ கேரட் கீர் இன்னிக்கு பண்ணியிருக்கற ரகசியமும் தெரிஞ்சது.. கீர் அருமை."

"இன்னிக்கு சுவாமிக்கும் நைவேத்தியம் கேரட் கீர் தான்..."ன்னு சொன்ன சுசீலா, "வடை தட்டியிருக்கேன். உருளைக் கிழங்கு பொடிமாஸூம், பீன்ஸ் கரியும், வெள்ளரிக்காய் பச்சடியும் தொட்டுக்கப் பண்ணியிருக்கேன். முருங்கைக் காய் குழம்பு, பாகற்காய் பிட்லை, தக்காளி ரசம், இந்த கீர், தயிர்-- போதும் தானே! இருக்கவே இருக்கு மாவடு ஊறுகாய்.." என்றாள்.

"எதேஷ்ட்டம்.. சங்கரி கூட வர்றா இல்லையா?"

"ஆமாம். உங்க தம்பி, தேவி, தேவி அம்மா, சங்கரி அப்புறம் விவேகானந்தனையும் சேத்துக்கோங்கோ.. அஞ்சாச்சா? நாம ரெண்டு பேர்; ஏழு. எல்லாம் நெறையவே பண்ணியிருக்கேன். நல்ல நாளும் அதுவுமா தொட்டுக்கோ தொடைச்சிக்கோன்னு இருக்கக்கூடாது, பாருங்கள்."

"டாக்டர்?.."

"ஓ.. மறந்திட்டேன், பாத்தீங்களா.. சாந்தி கட்டாயம் வர்றேன்னு சொல்லியிருக்கா.. நான் விவேகானந்தன் கிட்டே பேசிட்டேன். சாந்திக்கிட்டேயும் ஜாடை மாடையா சொல்லியிருக்கேன். சாந்தி தான் இந்த மேட்டரை ஆரம்பிச்சு உங்க தம்பிக்குத் தெரியப்படுத்தற மாதிரி..."

"தெரியப்படுத்தற மாதிரின்னு நாம நினைக்கறோம். விஸ்வநாதனுக்கே தெரிஞ்சிருக்குமோ என்னவோ?"

"சொல்லியிருந்தா சங்கரிதான் சொல்லியிருக்கணும். பாவம்ன்னா, அந்தக் குழந்தை. யாரான்னும் பெரியவா அடிச்சுப் பேசி தன்னோட அப்பா-அம்மாகிட்டே விஷயத்தைச் சொல்ல மாட்டாளான்னு ஏங்கறது. நாம தான் முன்னின்று எல்லாத்தையும் நடத்தி வைக்கணும்.. எப்பவும் போல நீங்க பாட்டுக்கு சிவனேன்னு இனிமே இருக்கப்படாது. நம்ம பொண்ணு கல்யாணம், தெரிஞ்சதா?"ன்னு டீச்சர், தன் வகுப்பு மாணவனை அதட்டிக் கேக்கற மாதிரி கேக்கறா.

எனக்கு இப்பவே இந்த வீட்டிற்கு கல்யாணக்களை வந்த மாதிரி இருக்கு. தம்பி கல்யாணம் நடக்கறச்சே பக்கத்திலே இருந்து சந்தோஷப்பட முடியாம போயிடுத்து. சங்கரி கல்யாணத்தை தடபுடலா ஜமாய்ச்சிடணும்னு தீர்மானமா மனசிலே பட்றது.

"எல்லாரும் வந்திடப் போறா. வாசப்பக்கம் சோபாலே வந்து உக்காந்துக்கோங்கோ. அடுப்பங்கரைலே எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை பாக்க்கியிருக்கு.. எல்லாத்தையும் முடிச்சிட்டு மூஞ்சி அலம்பித் தொடைச்சிண்டு இதோ நானும் வந்திடறேன்.. வாங்கோ.."ன்னு என் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு வாசப்பக்கம் வர்றா.

முந்தில்லாம் கறிக்கு இது, குழம்புக்கு இதுன்னு அலம்பி கிண்ணத்திலே போட்டு எடுத்து வைச்சிடுவா சுசீலா. எல்லாத்தையும் வாகா வைச்சிண்டு நறுக்கி வைக்கறது என் வேலை. இந்த காய்கறி நறுக்கற காரியத்திலே நான் மன்னன். பீன்ஸ் நறுக்கறச்சே பாக்கணும். ஒரு நார் பிசிறு எனக்கு இருக்கக்கூடாது; கத்தியாலே வாகா கீறீண்டு நுனிலேந்து அடிவரை நரம்பை அவ்வளவு ஜோரா எடுத்திடுவேன். பொடிப்பொடியா கிண்ணத்திலே நறுக்கிப் போட்டிருக்கற பீன்ஸைப் பாத்தா மாணிக்கப் பரல் மாதிரி இருக்கும். கேரட் கோசுமல்லின்னு வைச்சிக்கோங்கோ, தோலில்லாம் நைஸா சீவி, துருவல்லே துருவி, உப்பு போட்டு எலும்பிச்சை பிழிந்து, ரெண்டு கருவேப்பலையும் தூவி ஒரு கிண்ணத்திலே எடுத்து மூடி வைச்சிடுவேன். சாப்படறச்சே எலும்பிச்சை சாறு நன்னா இறங்கி பதமா இருக்கும்.

இருந்த கண்ணும் ஒண்ணுமில்லாமப் போச்சா; பாக்கப்போனா, இப்போலாம் எனக்கு ஒரு வேலையும் இல்லே. ஓடியாடி அலைஞ்சு திரிஞ்ச காலம்லாம் போயாச்சு; ஆனா, சுசீலாக்கு எல்லாம் நான் தான் செய்யற மாதிரி; ஒப்புக்கு நான் கூட இருக்கேன்னு பேர் பண்ணினால் போதும். எட்டூருக்கு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுண்டு பாத்துப் பாத்துச் செஞ்சு ஓகோன்னு முடிச்சிடுவா. பாக்கறத்துக்கு விலுவிலுன்னு தான் இருப்பா; விஷயம்ன்னு வந்திட்டா அந்த யானை பலம் அவளுக்கு எங்கிருந்து தான் வருமோ, தெரிலே.

பாவம். அவளும் என்ன சுகத்தைக் கண்டான்னு நெனைச்சுப்பாக்கறேன். ஸ்கூல் வாத்தியார் பொண்ணு. ஐவேஜூன்னு அப்படி ஒண்ணும் இல்லே. அவ அப்பாக்கு மணல்மேட்லே பிதுராஜ்ஜித சொத்துன்னு கொஞ்சம் நெலம் இருந்ததா கேள்விப் பட்டிருக்கேன். போக்கியத்திற்கு விட்டிருந்தார். அதிலேந்து உருப்படியா ஒண்ணும் வந்ததாத் தெரியலே. சுசீலாவோட தமக்கை கல்யாணம் குதிர்ந்தப்போ செலவுக்கு அதையும் அதைப் பாத்திண்டிருந்த குடியானவனுக்கே விலைபேசி 'நீயே வைச்சிக்கோ'ன்னு கொடுத்திட்டு அவன் கொடுத்ததை வாங்கிண்டார்ன்னு கேள்வி.

எல்லாம் சுசீலா சொல்லித் தான் தெரியும். அவளா நெனைச்சிண்டா இப்படி ஒண்ணு ரெண்டு சொல்லுவா. எல்லாம் கதை மாதிரி இருக்கும். கோர்வையா சொல்லுவா. எச்சில் கூட்டி இழுத்து இழுத்து சொல்ல ஆரம்பிச்சாள்னா, இன்னிக்குப் பூரா கேட்டுண்டு இருக்கலாம். ஆரம்பிக்கறத்தே ஒரு கதையைச் சொல்ற மாதிரி தான் ஆரம்பிப்பா; ஆனா சொல்ற போக்குலே அதுபாட்டுக்க ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு எப்படி எப்படியெல்லாமோ கோத்திண்டு நீண்டு போகும்; லேசிலே முடியாது. பாதி சொல்லிண்டு இருக்கறச்சேயே திடீர்னு 'கைவேலை நிறைய அப்படியே கிடக்கு; பாக்கியை நாளைக்குச் சொல்றேன்'னு எழுந்திண்டுருவா.

ஒரு நாள் அவ கிட்டே கேட்டேன். "ஒவ்வொண்ணையும் இப்படி நேர்ல பாத்த மாதிரி சொல்றையே?.. எப்படி இப்படி அழகாச் சொல்ல கத்திண்டே?"ன்னேன்.

"சொல்றதுக்கு என்ன சாமர்த்தியம் வேண்டிருக்குங்கறேள்.. பாத்தலெல்லாம் ஞாபகத்லே அப்படி அப்படியே படிஞ்சு போய்ட்றது. மனசிலே படிஞ்சு இருக்கறது தானே?.. எங்கேயும் போயிடலையே?..அதை அதை அப்படியே பெயர்த்தெடுத்து சொல்றேன். இதிலென்ன அதிசயம் இருக்குன்னு பெரிசா சொல்றேள்?" ன்னா...

"பாத்தனுன்னா சரி; பாக்காததையும் பாத்த மாதிரியே சொல்றதுன்னா, அது எப்படி?.. அதான் எனக்கு யோசனையா இருக்கு."

"சும்மாவானும் என்னை வம்பிழுக்கச் சொல்லாதீங்கோ.. அப்படி பாக்காததை எதை நான் சொல்லிட்டேன்னு சொல்றேள்?"ன்னு முசுமுசுன்னு மூச்சுவிட்டுண்டு கேட்டாள்.

"நீ சொன்னதைத் தான் சொல்றேன்.. அதை நீ பாத்திருக்க முடியாதுன்னு நிச்சயமா எனக்குத் தெரியும்."

"எதை?"

"உங்க அப்பா-அம்மா கல்யாணத்தை.. சொல்லு. அதை நீ பாத்திருக்க முடியுமா?
எங்கப்பா-அம்மா கல்யாணம் உமையாள்புரத்லே அப்படி நடந்ததுன்னு முந்தாநாள் வர்ணிச்சுச் சொன்னையே! இப்போ, சொல்லு... "

"பாத்தாத் தான் சொல்ல முடியுமா?.. கேட்டாலும் நெனைவிலே பதிச்சிண்டு அப்படியே சொல்ல முடியும். தெரிஞ்சிக்கோங்கோ.." முதல்லே முகம், பின்னாடி மூக்கு நுனின்னு செவந்தது.

அவ சிணுங்கிக் கோப்படறப் பாத்தா எனக்கு குஷி பிறந்திடும்."பத்தையா, பத்தையா.. இப்போ மாத்தி சொல்றே, பார்த்தையா?"

"நான் ஒண்ணும் மாத்திச் சொல்லலே.. சிலது, நான் பாத்துத் தெரிஞ்சிண்டது; சிலது கேட்டுத் தெரிஞ்சிண்டது.. பாத்தாலும், கேட்டாலும் எல்லாமே அப்படி அப்படியே சித்திரம் வரைஞ்ச மாதிரி ஞாபகத்லே பதிஞ்சிடறது.. எங்கம்மா ஒரு நாள் கூடத்லே என்னை ஒக்காற வைச்சு தன் கல்யாண கலாட்டாக்களைப் பத்தி ஒண்ணு விடாம சிரிச்சிண்டே சொன்னா. அதெல்லாம் அப்படியே மனசிலே பதிஞ்சு போயிடுத்து.. அதைத் தான் உங்ககிட்டே சொன்னேன். நீங்க தான் வேணும்னு என்னை சீண்டிப் பாக்கறேள்.."

அழுதே விடுவாள் போலிருந்தது.. "சரி.. சரி.. இதுக்கெல்லாம் மூக்கைச் சிந்தாதே! பாக்கறது மட்டுமில்லே; கேக்கறதும் ஞாபகத்திலே பதிஞ்சிடும்னு என் ஞாபகத்திலே பதிச்சிக்கறேன்.." என்று சிரித்துக் கொண்டே சொன்னதும் தான் ஒருவழியாக சகஜ நிலைக்கு வந்தா..

ரொம்ப ரோஷக்காரி; அவ செய்யாதது எதுக்கானும் குத்தம் சாட்டி சொன்னாப் போதும், முகத்தை திருப்பிண்டு போயே போய்விடுவாள். ரெண்டு நாளான்னாலும் பேசமாட்டா. அப்புறம் தாஜால்லாம் பண்ணி, வழிக்குக் கொண்டு வர்றத்துக்குள்ளே உன்பாடு என்பாடுன்னு ஆயிடும். ஆனா, எனக்கு இந்தப் பார்வை போனத்துக்கு அப்புறம் அவளோட கோபம், ரோஷம் எல்லாம் எங்க போச்சுன்னே தெரியலே; போதாததுக்கு என் மேலே ரொம்ப கரிசனம் கூடிப்போச்சு. எந்த ஜென்மத்லே யாருக்கு யார் கடன் பட்டிருக்கோம்னு தெரியலே; எந்தக் கடனை நேர் செய்ய எங்களுக்குள் இந்த உறவு பூத்ததுன்னும் தெரியலே. இதுக்கெல்லாம் கைமாறா என்ன செய்யணும்னு தெரியலே. மத்தவங்க பார்வைக்கு வெறும் புருஷன்-பெண்டாட்டி தான். ஆனா என் மனசிலே தாயாய், தாதியாய், தெய்வமாய் எல்லாமுமாய்..

"சுவர் கடியாரத்லே மணி அடிச்சதே.. வழக்கமா எத்தனைன்னு எண்ணிச் சொல்லுவேளே? மணி என்னாச்சு தெரியுமா?"

"ஏதோ யோஜனை.. அது அடிச்சதுக் கூடக் கேக்கலே.."

"என்ன யோசனை? இன்னும் அவாள்ளாம் வரலேன்னா?.. பத்தாச்சு; இன்னும் சித்த நேரத்லே வந்திடுவான்னா.."

சுசிலா வாய்க்கு சர்க்கரை தான் போடணும். வாசல் காலிங் பெல் கிணுகிணுத்தது.


(இன்னும் வரும்)












Wednesday, December 7, 2011

பார்வை (பகுதி-15)

                    அத்தியாயம்--15

'நடந்தைவைகள் என்றும் நடந்தைவைகள் தாம்; நடக்கப் போவனவற்றின் நன்மை கருதியாவது நடந்தவைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நடக்கப் போகின்றவற்றை நல்லவையாக்குவ தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்' என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

என் தம்பி விஸ்வநாதன் ஜனக்தேவி மீது மூர்த்தண்யத்தோடு காதல் கொண்டு அவர்களுக்குள் திருமணம் முடிந்த விவரங்களைச் சொன்ன அன்று வெகு அமைதியாக நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் அந்தப் பொன்மொழியைத் தான் அப்பொழுதும் நினைத்துக் கொண்டேன்.

எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்து நடக்கப் போவதை அனுசரணையாக நடக்க வைத்தால் தான் எந்த ஒன்றையும் அடுத்த கட்டத்திற்கு உந்தித் தள்ளலாம் என்கிற உணர்வும் அப்பொழுது எனக்கு ஏற்பட்டது.

அந்தக் குழுவில் பியானோ வாசித்த ஐம்பது வயதுப் பெரியவர் ஒருவரின் பெண்ணாம் ஜனக்தேவி; பெரியவரிடம் விஸ்வநாதன் கொண்டிருந்த பரிவு, அவர் பெண்ணின் தனிமனித சுபாவங்களால் கவரப்பட்டு அவளிடம் காதலாக மலர்ந்திருக்கிறது. வேறு மாநில பழக்க வழக்கங்கள், வேற்று மொழி, வேறுபட்ட அணுகுமுறைகள் என்று எல்லாமே வேறாக இருக்க, மனம் மட்டும் வெவ்வேறாய் பிரிந்து போகாமல் ஒன்றுபட்டிருக்கிறது. சொல்லப்போனால், அந்த அத்தனை வேறுகளும் தான் வேற்றுமைகளில் ஒற்றுமையாய் இந்த இரண்டு பேரையும் ஒன்று படுத்தியிருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.

வாலிபமே தான் செய்வதெல்லாம் சரியென்று நினைக்கும் பருவம் தானே?.. விஸ்வநாதன் அந்தப் பெண் ஜனக்தேவியைத் திருமணம் செய்து கொண்ட பொழுது தனக்கிருந்த மனநிலையை அன்று அதைப்பற்றி சொல்கையில் மிகவும் நேர்மையாக எல்லாவற்றையும் என்னிடம் விவரித்தான்: "அண்ணா! நீங்களும் அண்ணியும் தான் என்னை வளர்த்தவர்கள். நீங்களிருவரும் தான் எனக்கிருக்கும் சொந்தங்கள் என்கிற ஆழ்ந்த உணர்வு என் மனசில் எப்பொழுதும் இருக்கிற மாதிரியே அப்பொழுதும் இருந்தது. அவர்களிடம் கூட அந்த சமயத்தில் அதைப் பற்றிச் சொன்னேன். எல்லோரையும் அழைத்துக் கொண்டு திருவையாறு வந்து அங்கு தான் திருமணத்தை உங்கள் ஆசியுடன் செய்து கொள்ள வேண்டுமென்று ஆரம்ப காலங்களில் எண்ணிக் கொண்டிருந்தேன். போகப்போக, இதுபற்றிய என் நினைப்பில் ஒரு மாறுதல் எனக்குத் தெரிந்தே ஏற்பட ஆரம்பித்தது. ஒருகால் இந்தத் திருமண ஏற்பாட்டை நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்றால், நான் ஜனக்தேவியை மறப்பதை விட, என்னையே நம்பியிருக்கும் அவள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகிவிடும் என்று பயந்தேன். அந்த பயம், நாளாக நாளாக என்னில் இறுகியது. 'முதலில் முடிவெடுத்ததை செயல்படுத்தி விடு; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஆயிற்று. எங்கள் இருவருக்கும் திருமணமான இரண்டே மாதங்களில் அவள் அப்பா திடீரென்று பரவிய விஷ ஜூரத்தால் பாதிக்கப்பட்டு காலமானார். திக்கற்று நின்ற ஜனக்தேவியின் தாயாருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கூடிய பொழுது இவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு திருவையாறு வந்து உங்களிடம் நடந்தவற்றையெல்லாம் விவரிக்கும் திராணியே இல்லாது போயிற்று. அதனால் தான் அண்ணா, கூடப்பிறந்த நம் இருவரிடையே இத்தனைக் காலமும் இப்படியொரு பந்தமற்ற பள்ளம் விழுந்து விட்டதற்குக் காரணம். எங்களை நீங்கள் மன்னித்து ஆசிர்வதிக்க வேண்டும்!" என்று கலங்கினான்.

கைநீட்டி அவன் தோளில் கைவைத்து ஆறுதல் கூறினேன். "விஸ்வநாதா! மனித மனம் என்பது விசித்திரமானது. அது எந்த எந்த நேரத்தில் யார் யார் இடத்தில் எந்த மாதிரியான நினைப்பை விதைக்கும் என்று சொல்ல முடியாது. நீ சொல்வது சரிதான். ஒரு பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் இந்த விஷயத்தில் இப்பொழுதிருக்கிற முதிர்ச்சி எனக்கு அப்பொழுது இருந்திருக்குமா என்று தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய நமது கணிப்பும் அது நடப்பதற்கு முன்னாடி ஒன்று, நடந்த பின்னாடி ஒன்று என்று தான் இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்வதில் நமக்கிருக்கும் பெரும் சிக்கல் இது. எந்த விஷயமும் நடப்பதற்கு முன்னாடி, நாம் நினைக்கிற மாதிரியே இது நடக்கும் என்று எண்ணுவதினால் தான் அதில் ஈடுபடுகிறோம். நடந்ததற்கு பின்னாடி, நம் எண்ணத்திற்கு மாறாக அது போனாலும் வேறு வழியின்றி அதற்கேற்றவாறு சரிபடுத்திக் கொண்டு வாழ முயற்சிக்கிறோம். ஏனென்றால், எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை. அதனால் நடந்த நன்மைகளுக்காக சந்தோஷப்படுவோம். இடையில் எத்தனை காலம் ஓடிப்போச்சு, பாத்தையா?.. சங்கரிக்கு இப்போ பதினாறு வயசாறதா?.. உனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சு அவ பிறந்ததா சொன்னே! அப்போ பதினெட்டு வருஷம். இந்த பதினெட்டு வருஷம் கழிச்சு பிரிஞ்சு போன நாம சந்திப்போம்ன்னு நெனைச்சுப் பார்த்திருப்போமா?.. அது நடந்திருக்கு; நடந்திருக்குன்னு ஒத்தை வார்த்தைலே சொல்லறதை விட 'அது எப்பொழுது நடக்க வேண்டியிருக்கோ, அப்போது நடந்திருக்கு'ன்னு சொல்றது பொருத்தமா இருக்கும்" என்று நான் சொன்ன போது, விஸ்வநாதன் மிகுந்த நன்றியுடன் என் இரு கரங்களையும் பற்றிக் கொண்டான்.

அவன் குரல் தழுதழுத்திருந்தது."அண்ணா! இதெல்லாம் அண்ணிக்கு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.. நீங்கள் தான் எல்லாவற்றையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

"இத்தனையையும் என்னிடம் சொல்வதற்குப் பதில் உன் அண்ணியிடம் நீ சொல்லியிருந்தால், இத்தனை நேரம் அவ தான் உன் சார்பாக என்னிடம் பேசி என்னை சரிக்கட்டப் பார்த்திருப்பாள். அதனால் அந்தக் கவலை உனக்கு வேண்டாம். அப்புறம் என்ன ஆச்சு, உங்க இலட்சியமெல்லாம்?.. சிவநேசன் இப்போ எங்கே இருக்கிறார்?" என்றேன்.

"சிவநேசன் தீவிரமாக எங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, நிறையப் பயிற்சிகள் கொடுத்தார். அவர் முயற்சிகள் எதுவும் வீண் போகவில்லை. ஆறே மாசத்தில் எங்கள் வாசிப்பில் நாங்கள் வெகுவாகத் திறமை பெற்றோம். எங்கள் பயிற்சிகள் பற்றி பத்திரிகைகளில் எழுதினார்கள். யாரோ ஸ்பான்ஸர் பண்ணி 'மிஷினா, மனிதனா?' என்று ஒரு கருத்தரங்கு கூட நடந்தது. அந்தக் கருத்தரங்கின் சிறப்பு நிகழ்ச்சியாக, மிஷினை ஒரு பக்கம் இயக்கி, எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களை ஒவ்வொரு வாத்தியமாக இசைக்க வைத்து நடுவர் குழு ஒன்றை வைத்து அலசி ஆராய்ந்தார்கள். கடைசியில் அந்த எலக்ட்ரானிக் மிஷினை விட நாங்கள் வாசித்தது இலய சுத்தமாக நாத சுகமாக இருந்தது என்று நடுவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அன்று எங்கள் குழுவைச் சேர்ந்த நூற்று ஐம்பது பேர் அடைந்த மகிழ்ச்சி விவரிக்க முடியாத ஒன்று. வானத்தில் பறந்தோம் என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் ஏதோ சேகரித்த விவரங்களைச் சொல்கிற மாதிரி இருக்கிறது.." என்று கைத்துப்போன குரலில் சொன்னான்.

ஏன் இவனுக்கு கைக்கெட்டிய இலட்சியத்தில் இவ்வளவு ஆயாசம் என்று எனக்குத் திகைப்பாக இருந்தது."அத்தனை பெருமையும் அந்த சிவநேசனுக்குப் போய்ச் சேர வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விட்டார் இல்லையா?" என்றேன்.

"இவ்வளவு காலம் கழித்து இந்த விஷயங்களைக் கேட்ட நீங்களே அப்படிச் சொல்லும் பொழுது, அதெல்லாம் நடந்த பொழுது அவரைப் பற்றி நாங்கள் எவ்வளவு பெருமைப் பட்டிருப்போம் என்பதை நினைத்தால் இப்பொழுது கூட எனக்கு நெஞ்செல்லாம் நிரம்பி வழிகிற மாதிரி இருக்கு, அண்ணா! அந்தக் கருத்தரங்கிலேயே அந்த இலட்சிய வெற்றியை நாங்கள் சிவநேசன் அவர்களுக்குக் காணிக்கையாக்கினோம். ஆனால், அவரோ அடக்கமாக அத்தனை சிறப்புகளையும் மறுத்து விட்டார்?"

"ஏன் என்னாச்சு?.. சிவநேசனுக்கு அந்த கருத்தரங்கு ஏற்பாடுகள் எதிலாவாது குறை இருந்ததா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

"அதெல்லாம் இல்லை. நிகழ்ச்சி பூராவும் அவர் ரொம்ப சந்தோஷத்துடன் வெற்றிக் களிப்பில் தான் இருந்தார். ஆனால் இந்த வெற்றி தன்னால் இல்லை என்று ஆணித்தரமாக அவர் கருத்தரங்கிலேயே மறுத்துச் சொன்னது தான் அதிசயமாக இருந்தது.."

"அப்படி என்ன சொன்னார்?" என்று ஆவலோடு கேட்டேன்.

"சிவநேசன் என்ன சொன்னார் தெரியுமா?.. எல்லா வெற்றிகளுக்கும் காரணம், அந்தந்த நேரத்தில் அடுத்து நடக்கவிருப்பதற்கு கனிந்து வரும் சூழ்நிலைகளும், அந்தக் கனிதலில் என்ன நடக்க வேண்டுமோ அது நடப்பதும் தான்; நூறு டிகிரி வெப்பத்தில் கொதிக்கற நீர் ஆவியாகிற மாதிரியான ஒன்று இது" என்று தன் மேல் கவியும் பெருமையெல்லாம் புறந்தள்ளி ரொம்ப சாதாரணமாகச் சொன்னார். "அந்த எலக்ட்ரானிக் மெஷின் வந்ததும், இத்தனை நாள் வாத்தியக்கருவிகள் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு ஆழ்ந்த சலனம் ஏற்பட்டது. இந்தக் கருத்தரங்குக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறீர்களே, அதான் நிதர்சனமான உண்மை! 'மிஷினா, மனிதனா?' என்ற கேள்வி அத்தனை பேர் மனசையும் குடைந்தது தான் வெற்றிக்கான திறவுகோல். என் மனசிலும் இதே கேள்வி எழுந்த பொழுது, எல்லாரையும் ஒன்று சேர்க்கிற ஒரு ஏற்பாட்டைச் செய்தேன்; அதோடு என் வேலை முடிந்தது. நான் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றால் இன்னொருத்தர் அதைச் செய்திருப்பார். அவ்வளவு தான். ஆக, எந்தப் பெருமையையும் என் மேல் கவிழ்த்து என்னை உங்கள் கூட்டத்திலிருந்து தனிமைபடுத்தி விடாதீர்கள்! நான் எந்த சக்திமானும் இல்லை; உங்களில் ஒருவன்' என்றார். இப்படி யாரால் சொல்ல முடியும், அண்ணா?.. அதான் சிவநேசன்" என்றான் தம்பி உணர்ச்சி வசப்பட்டு.

'யப்பா.. எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்! இப்படிப்பட்டவர்கள் இருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்?' என்று கொஞ்ச நேரம் எனக்கு பேச்சே வரவில்லை. என்னை சரிசெய்து கொண்டு, "இப்பொழுது சிவநேசன் எங்கே இருக்கிறார்?" என்று தம்பியிடம் கேட்டேன்.

"நாளாவட்டத்தில் இந்த எலக்ட்ரானிக் கருவிகளின் ஆக்கிரமிப்பு அதிகமானது. அவற்றின் வருகை, திரைப்பட இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலவகைகளில் செளகரியத்தைக் கொடுத்தது.. அவற்றைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை தகுதியானது. இத்தனை நாளும் வாத்தியங்களே கதி என்றிருந்தவர்கள் கூட, அந்த மிஷினைக் கையாளுவதில் தங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த சமயங்களில் படத்துறையிலிருந்து சற்று ஒதுங்கி நான் பம்பாய் சங்கீத சபாக்களில் வாசிக்க ஆரம்பித்தேன். எங்களுக்காக ரேடியோ ஸ்டேஷன் வாசல் கதவுகள் திறந்தே இருந்தன. அவர்கள் அந்த நேரத்தில் எங்களை ஆதரித்ததையும் இப்போ நன்றியோட நெனைச்சுப் பாக்கறேன்.." என்றான் விஸ்வநாதன்.

என்னால் சிவநேசனை மறக்க முடியாமலிருந்தது. சொல்லி வைத்தாற் போல தம்பியும் அதையே குறிப்பிட்டு, "சிவநேசனை தில்லி பல்கலைக் கழகத்தில் கூப்பிட்டு இசைத் துறையில் பேராசிரியர் வேலை கொடுத்தார்கள். அதற்கு பிறகு ரொம்ப காலம் நான் பம்பாயில் இல்லை. இரண்டே வருடங்களில் சென்னை வந்து விட்டேன். இங்கு வந்தவன், பண் ஆராய்சியில் ஈடுபட்டேன். அதையெல்லாம் பற்றி விவரமாக ஒருநாள் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.." என்று விஸ்வநாதன் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது, நாங்கள் இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்த மாடி அறையின் வெளிப்பக்கம் யாரோ வேகவேகமாக படியேறி வந்த அரவம் கேட்டது.


(இன்னும் வரும்)







Friday, December 2, 2011

பார்வை (பகுதி-14)

                       அத்தியாயம்--14

விஸ்வநாதனின் குரல் பழைய நினைவுகளில் தோய்ந்து வெளிப்படுகிற தோரணையில் இருந்தது.

"சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. அப்படி அவங்களுக்குப் பிடிக்கிற அது மாதிரியே இன்னொண்னு இருந்தால் அதுவும் அவங்களுக்குப் பிடிக்கத் தானே வேணும்? அதான் இல்லை.." என்று சொல்லி கலகலவென்று சிரித்தான் விஸ்வநாதன்.

"அப்படி ஏதாவது லாஜிக் இருக்குங்கறே?" என்றேன்.

"ம்.. என்ன சொல்றது?.. எந்த லாஜிக்குக்கும் அடங்காத ஒரு மனோபாவம். அவ்வளவு தான் சொல்றதுக்கு இருக்கு.." என்றான் விஸ்வநாதன்.

"அப்படின்னா ஓ.கே. இந்த மனசு சம்பந்தப்பட்ட எதுவொண்ணுக்கும் எந்த வரையறையும் கிடையாது. ஆளாளுக்கு வேறே வித்தியாசப்படறதா, இதுதான்னு நிச்சயமா எது ஒண்ணும் சொல்ல முடியாது. நீ சொல்ல வந்ததைச் சொல்லு. என்னமோ இலட்சியம்னு சொன்னயே, என்ன அது?"

"சொல்றேன். அதைச் சொல்றத்துக்கு முன்னாடி அதுக்கு முன்னோட்டமா சிலதைச் சொன்னாத்தான் அதுவும் சரியா புரிபடும். எனக்குக் கூட இந்தப் புரிதல்லாம் பின்னாடி ஏற்பட்டது தான். அதுனாலே சொல்றேன்."

"சொல்லு."

"தனக்குப் பிடிச்ச ஒண்ணு மாதிரியே இன்னொண்ணு இருக்கறச்சே, அந்த இன்னொண்ணு பிடிக்காமப் போறதுக்கு என்ன காரணம்?.. ம்?.. மனசு சம்பந்தப்பட்டதுன்னு ஒரேடியா விலகிடவும் முடியாது. இதுக்கெல்லாம் காரணம் கண்டுபிடிக்கறது ஒண்ணும் பிரம்ம பிரயத்தன வேலை இல்லை. ரொம்ப சுலபம்."

"உனக்குத் தெரிஞ்சா நீதான் சொல்லேன்." என்றேன்.

"எனக்கு ஒண்ணு தோண்றது. அந்த இன்னொண்ணு தனக்குப் பிடிச்ச ஒண்ணுக்குப் போட்டியா வந்திட்டதா நினைக்கிற நினைப்புதான் அந்த இன்னொண்ணு மேலே வெறுப்பா மனசிலே மண்டறது."

"குட்.. இப்படிக் கூட ஒரு பார்வை இருக்கா?.. விசித்திரமா இருக்கேப்பா.."

"மனுஷனே ஒரு விசித்திரம். அந்த விசித்திரத்துக்குள்ளே ஆயிரமாயிரம் விசித்திர கலவைகள்.. சிவநேசன் இத்தனையிலிருந்தும் விலகி நின்று பார்க்கற ஒரு விசித்திர ஜீனியஸ். தனக்குப் பிடிச்ச எதுஒண்ணு மாதிரியும் இன்னொண்ணு இருந்தா, அந்த இன்னொண்ணிலே இருக்கற சிறப்பை தன்னுள் வாங்கிக்க ஆசைபடற வித்தியாசமானமானவர். அவர் ஒரு நாள் என்ன செஞ்சார் தெரியுமா?" என்றவன் மிடறு விழுங்கறமாதிரி, தொண்டைலே ஒரு இழுப்பு இழுத்துவிட்டுச் சொன்னான்.." "பாலிவுட்டின் கியாதி பெற்ற ஒரு ஸ்டூடியோவிற்கு என்னைக் கூட்டிப் போய் கம்போஸிங் ரூமில் இருந்த ஒரு இசைக்கருவியைக் காட்டினார். இதுவரை நான் அதைப் பார்த்திராததால் "இதற்குப் பேர் என்ன?" என்று கேட்டேன்..

"இதுக்குப் பேரா?.. ம்.. குட்டிப் பிசாசுன்னு வைச்சுக்கோயேன்." என்றார்.

"குட்டிப் பிசாசா?.. ம்ஹூம்.. அப்படிக் கூடவா பேர் இருக்கும்?"

"ஒரிஜனல் பேர் எதுவாயிருந்தா என்ன?.. இதை இயக்கற அந்த இசைஅமைப்பாளர் இதைச் செல்லமா அப்படித்தான் அழைக்கிறார்" என்றார்.

"இது என்ன செய்யும்?"ன்னு கேட்டேன்.

"நீ வாசிக்கறச்சே உன் வயலின்லேந்து இசை கிளம்பறதில்லையா? அது மாதிரி இதிலேந்து ஓலி கிளம்பும்" என்றார்.

"வயலின் மாதிரி இதையும் வாசிக்கலாமா?"ன்னு கேட்டேன்.

"வாசிக்கறதுன்னு அதைச் சொல்லக்கூடாது. வேணும்னா இயக்கறதுன்னு சொல்லலாம்" என்றார்.

"அதையும் மனுஷா தானே செய்யணும்?"

"ஒண்ணு தெரிஞ்சிக்கோ.."ன்னு தீர்மானமாச் சொல்ல ஆரம்பித்தார் அவர். "மனுஷன் இல்லாம எதுவும் இல்ல. ஆனா ஒரு வித்தியாசம். மனுஷனை மாதிரியே எது ஒண்ணையும் பிரதி எடுக்க முடியாது. ஏன்னா, மனுஷன் செயல்படற ஒவ்வொண்ணுலேயும் அவன் ஆன்மா சம்பந்தப்பட்டிருக்கு. அதான் மனுஷனோட கீர்த்தியே.." என்றார்.

"நீங்க சொல்றது புரிஞ்சும் புரியாதமாதிரி இருக்கு"ன்னேன். "மனுஷன் செஞ்சது தானே இந்தக் கருவி?.. தனக்குத் திருப்தி ஏற்படற மாதிரி அவன் செஞ்ச ஒண்ணில் அவன் ஆன்மா சம்பந்தப்பட்டுத் தானே இருக்கும்?" என்றேன்.

கொஞ்ச நேரம் சிவநேசன் மெளனமாயிட்டார். நான் கேட்டதுக்கு என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கிறார் போலிருக்குன்னு நெனைச்சிண்டேன். நான் நெனைச்சமாதிரியே,"இப்படி சொன்னா உனக்குப் புரியும்"ன்னுட்டு சொல்ல ஆரம்பித்தார். "இவங்கள்லாம் ப்ளூட்ன்னு சொல்ற அந்தப் புல்லாங்குழலையே எடுத்துக்கோ. அது துளைகள் போட்ட சாதாரண மூங்கில் குழாய், இல்லையா?.. அந்தத் துளை ஒன்றின் மீது உதடு பொருத்தி மனுஷன் எவ்வளவு அற்புதமா கர்ணாமிர்தம் பொழியறான்?.. பாக்கறத்துக்கு அந்த மூங்கில் குழல் துளை மேலே அவன் உதடு பொருத்தியிருக்கிறது தான் தெரியும்; அதிலேந்து வெளிப்படற இசைக் கேக்கறவங்களுக்கு அவன் வாசிக்கறதெல்லாம் வர்ண ஜாலமா சொரியும். புல்லாங்குழல்லே வேணுகானம் இசைக்கத் தெரிஞ்ச அந்தக் கலைஞன், உதடு குவித்து உஷ்ணக்காற்றை அந்த மூங்கில் குழலின் முத்திரைத்துளை வழி செலுத்தி மற்றத் துளைகளை விரல் நுனியால் மூடித் திறந்து அவன் நினைக்கிற நாதத்தில் அதை வெளிப்படச் செய்கிறான். உள் செலுத்தி வெளிப்படும் காற்றில் அவன் ஆன்மாவே அடங்கியிருக்கிறது.. அவனில் வேர்விடும் விதவிதமான கற்பனை, காற்றில் வேணுகானமாய்த் தவழ்கிறது. இசைக்கும், இசைக்கலைஞனின் கற்பனைக்கும், அதன் வெளிப்படலுக்கும் இருக்கும் நேரடித் தொடர்பு இது. ஆனால், மிஷின் அப்படியில்லை. இதைத் தான் சொல்ல வந்தேன்.." என்றார்.

நான் ஒண்ணுமே சொல்லலே. சிவநேசன் சொல்றதெல்லாம் எனக்கு பிரமிப்பா இருந்தது. பேசாம அவர் சொல்றதைக் கேட்டிண்டிருந்தேன்.

"... இந்த மிஷின் இப்போ வெளிநாட்டிலேந்து கப்பல்லே வந்திருக்கிறத்துக்காகச் சொல்லலெ. உன் வயலின் கூட மேல்நாட்டுக் இசைக்கருவி தான். ஆனால் அந்தக் கருவியில் இசை கிளப்புகிறவன் நீ. வயலின் தந்திக் கம்பிகளுக்கும், அதன் மேல் நீ கைப்பிடித்து இப்படியும் அப்படியும் அசைக்கும் வில்லுக்கும், கற்பனையில் நீ காணும் தரிசனத்தை இசையில் நீ நிகழ்த்திக் காட்டும் லாகவத்திற்கும்--- ஓஹ்! இவை எல்லாத்துக்குமே ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தமிருக்கு. அதை வாசிக்கும் பொழுது இசையாய் நீ வெளிப்பட்டு, கேக்கறவங்க மெய்மறக்க அவங்களை நாத சாகரத்தில் ஆழ்த்தறே.. ஒரு இசைக்கலைஞன் தன் போக்கில் நிகழ்த்தும் அந்தக் கற்பனைக் களியாட்டம் இந்த மிஷினில் இல்லை என்பது தான் சோகம்.." என்றார்.

"ஐயா, இந்த மிஷின்லேந்து வெளிப்படறதும் இசை தானே?.. மனிதன் தானே இதையும் இயக்குகிறான்?.. அப்படியிருக்க...." என்று தயங்கித் தய்ங்கி இழுத்தேன்.

"கரெக்ட்! மனிதன் தான் இயக்கறான்; அதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.
இயக்கறது அவனே தவிர உள்ளிருந்து செயல்படறது வேறே! ஸிந்தஸைஸர் என்னும் ஜகத்ஜால சித்தன் உள்ளீடாக இதில் செலுத்தப்பட்டிருக்கிறான்! அந்த உள்ளீட்டை வெளியிலிருந்து இயக்கும் வேலை மட்டுமே அவன் செய்வது! குழலிலிருந்து வெளிப்படுவது நாதம் என்றால், இந்த ஸிந்தஸைஸரிலிருந்து வெளிப்படுவது அதன் உள்ளிட்டிருக்கும் சப்த அலை! இதன் பிர்மாண்டம் இசைக்கலைஞனை சாப்பிட்டு விடும்! நூறு பேரை வயலினோடு உட்கார்த்தி வைத்து எழுப்பும் நாதத்தை, இந்த மிஷினைக் கையாளும் விரல் அசைவில் ஒரே வினாடியில் நூறு வயலின் ஓசையை வெளிப்படுத்த முடியும். அதுக்காகச் சொல்ல வந்தேன். சுருக்கமாகச் சொன்னா, நூறு வயலின், நூறு கலைஞர்கள் தேவை இல்லை; அவர்களுக்குப் பதிலா இந்த மிஷின் ஒன்றே போதும். புரிந்ததா?"

அவர் சொல்றது ஒருமாதிரி புரிந்த மாதிரி இருந்தது எனக்கு."நாளாவட்டத்தில் நம் போன்ற இசைக்கலைஞர்களுக்கு இங்கு வேலையிருக்காது என்கிறீர்கள்.. அதானே?" என்று கேட்டேன்.

"விஷயம் அதுவல்ல.." என்றார் சிவநேசன். "இது ஒன்றே என்று கலைஞன் எது ஒன்றிலும் குறுகிப் போக மாட்டான்! இசையின் பன்முகப்பட்ட விரிவாக்கம் எல்லாம் அவன் விளையாடிப் பார்க்கவே! ஆனால், ஒன்றை நிச்சயமாகச் சொல்ல முடியும். திரைத் துறையினருக்குத் தோதானது இந்த மாதிரியான எலக்ட்ரானிக் கருவிகள் தாம். பாடலின் நடுநடுவே நாலு இடங்களில் புல்லாங்குழல் நாதம், வயலினின் இரண்டு மூன்று தீற்றல்கள், வீணையின் மீட்டல், கிளாரினட், கிடார் என்று இவை போதும் இவர்களுக்கு என்பதால் இந்த மிஷின் இவர்களுக்குப் போதும். ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல.." என்றார்.

அவரே ஒருநிமிட யோசனைக்குப் பிறகு தொடர்ந்தார்."நான் சொல்ல வந்தது என்னன்னா, இந்த மிஷினின் துல்லியம். சல்லடையில் வடிகட்டுகிற மாதிரி பிசிறுகளை வடிகட்டி ஒதுக்கித் தள்ளும் லாகவம்! இந்தத் துல்லியத்தை முதலில் நாம் சுவீகரிக்க வேண்டும்; அதைக் கைப்பற்ற வேண்டும். கொஞ்சம் கூட பிசிறு தட்டாத இதை விட பலமடங்கு சிறந்த துல்லியத்தைத் தர ஒவ்வொருவரும் அவரவர் இசைக் கருவியில் பயிற்சி பெற வேண்டும். இந்த மிஷினைத் தாண்டி நம் மேதமை மிளிர வேண்டும். அது தான் நம் இலட்சியம். அத்தனை பேரை வைத்து இங்கே அதற்காகத் தான் பயிற்சி. இந்த மிஷினிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடமும் அதுதான். தெரிந்ததா?" என்றார்.

"அப்பொழுது தான் அவர் சொல்ல வந்த இலட்சியம் முழுமையாக எனக்குப் புரிந்தது. அந்த ஷணமே அதற்கான வெற்றிக்காக சூளுரைத்துக் கொண்டேன்" என்று விஸ்வநாதன் சொன்ன போது எனக்கு அவனுக்குக் கிடைத்த அனுபவங்களை நினைத்துப் பெருமைப்படத் தோன்றியது. காசு கொடுத்து அங்கங்கே பெறும் வெறும் பயிற்சி அனுபவங்களைத் தாண்டியவை இவை என்றும் நினைத்துக் கொண்டேன்.

கூட்டுப்புழுவாய் திருவையாறிலேயே தேங்கிவிடாமல், எங்களை விட்டு அவன் விலகியிருந்தது எத்தனை அனுபவங்களை அவனுள் விதைத்திருக்கிறது என்று எண்ணி சந்தோஷப்பட்டேன்.


(இன்னும் வரும்)

Friday, November 25, 2011

பார்வை (பகுதி-13)

                    அத்தியாயம்--13

ரு பெரிய நீண்ட கதையைச் சொல்கிற மாதிரியான தோரணையுடன் விஸ்வநாதன் சொல்லிக் கொண்டுவந்ததைக் கேட்க எனக்கும் சுவாரஸ்யத்தைத் தாண்டி வெளியூர்களில் இவன் என்ன கஷ்டமெல்லாம் பட்டு வளர்ந்து வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. அதனால் இடையிடையே குறுக்கிடாமல் அவன் சொல்வதை மனசில் வாங்கிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தேன். சினிமா சம்பந்தப்பட்டு அவன் வாழ்க்கை அமைந்ததாலோ என்னவோ அந்த கதை சொல்லும் நேர்த்தி அவனிடம் ஆழப் பதிந்திருந்திருப்பது அவன் பேச ஆரம்பித்தாலே எனக்குத் தெரிந்தது.

"சினிமாவைப் பற்றி அதுவரை எதுவும் தெரியாத என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற போது பார்ப்பது எல்லாமே வேடிக்கையாக இருந்தது. பம்பாயின் பிரபல ஸ்டூடியோ ஒன்றின் எக்ஸ்டன்ஷன் மாதிரி இருந்த தனி இடத்திற்கு என்னைக் கூட்டிச்சென்றார் சிவநேசன். அந்த ஸ்டூடியோவின் எல்லா பகுதிகளிலும் இவர் வந்ததும் ஒதுங்கி நின்று வணக்கம் சொல்கிற மாதிரியான ஒரு மரியாதை மற்றவர்களுக்கு இவரிடம் இருந்தது அங்கு நுழைந்தவுடனேயே எனக்குப் புலப்பட்டது.." என்று அவன் சொன்ன போது திருவையாறை விட்டு அவன் போனது கூட ஒருவிதத்தில் நல்லதுக்குத் தான் என்று எனக்கு அந்தசமயத்தில் தோன்றியது. பல இடங்களுக்குப் போனால் தான் பல விஷயங்கள் தெரிய வருகிறது என்கிற அர்த்தத்தில் அப்படி நினைத்துக் கொண்டேன் போலிருக்கு.

"அந்தக் கட்டடத்திற்குள் போனதும் நடு ஹாலில் ஜமக்காளம் போட்டு ஏழெட்டுப் பேர் அமர்ந்திருந்தனர். நடுநாயகமாக இருந்தவர் ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். பிடிலைப் பிடித்திருந்தவனுக்கும் கிட்டத்தட்ட என் வயசு தான் இருக்கும். அப்புறம் புல்லாங்குழலுடன் இன்னொரு இளைஞன். மற்றும் தபலா, சாரங்கி போன்றவற்றுடன் இன்னும் இருவர். ஆர்மோனியப் பெட்டியுடன் இருந்தவர் சிவநேசனைப் பார்த்தவுடன் அவர் வந்ததை அங்கீகரித்த மாதிரி ஒரு புன்முறுவலுடன் உட்கார்வதற்கு தீண்டுகள் இருந்த பக்கம் கை காட்டினார்.

"அன்று தான் ஒரு திரைப்படப் பாடலுக்கு எப்படி இசை அமைக்கிறார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் அங்கு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்த அந்த இரண்டு மணி நேரமும் நேரம் போனதே தெரியவில்லை. ஆர்மோனியப் பெட்டியின் சுருதி கூட்டிய வாசிப்பிற்கேற்ப ஒவ்வொரு வாத்தியமும் தனித்துவமாய் இசைக்கப்படுவதைப் பார்ப்பதே தனி அனுபவமாய் இருந்தது. பாதியில் சடக்கென்று என்னைப் பார்த்து கிளம்பலாம் என்கிற மாதிரி சைகை செய்தார் சிவநேசன். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருக்கலாமே என்று தோன்றியது. இருந்தாலும் நான் விரும்புவதைச் சொன்னால் ஒருகால் சிவநேசனுக்கு அது பிடிக்காமலிருக்கலாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவராகவே இருந்தார். இடையில் என்னை ஏதாவது கேட்பது அவர் அடுத்து செய்யப் போவதைத் தெரியப்படுத்துகிறார் என்றே நான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே அவர் அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்திருந்ததும், நானும் அவருடன் கிளம்பி வெளியே வந்து விட்டேன்.

"வெளியே வந்ததும், "நன்றாகப் பார்த்துக் கொண்டாயா? நாளைக்கு நாம் இங்கு வருகிறோம். இந்த குரூப்பில் நீதான் வயலின் வாசிக்கிறாய்.." என்றார்.

"எனக்கு வயலினைத் தனியாக வாசித்துத் தானே பழக்கம்?.. ஒரு குருப்பில் அவர்கள் வாசிக்கிற மாதிரி துண்டு துண்டாக வாசிக்க.." என்று நான் சொல்லி முடிப்பதற்குள் "போகப்போக எல்லாம் பழக்கமாகி விடும்; நான் சொல்லித் தருகிறேன்" என்றார். எனக்கும் அப்படி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்ததால் "சரி" என்றேன்.

"அந்தக் குரூப்பில் வாசித்து பழகியது போக, காலையும் மாலையும் தனிப்பட்ட முறையில் சிவநேசன் எனக்கு பயிற்சியளித்தார். சில நேரங்களில் ஆர்மோனியப் பெட்டியை என்னிடம் தந்து விட்டு அவர் வயலின் வாசித்துச் சொல்லித்தருவார். என்னை இப்படியான முறையில் பயிற்றுவிப்பதில் என்னை விட அவர் அக்கறை கொண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. அதுவே எனக்கு ஆச்சரியத்தைத் தந்து அவரிடம் மதிப்பும் கூடியது.

ஒரு வாரம் போயிருக்கும். ஒரு நாள் காலை சிவநேசன் என்னை அருகில் அமர வைத்து நிறைய விஷயங்கள் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எனக்கு கேட்க ஆர்வமாக இருந்தது. "மொத்தம் பத்து குரூப்கள். ஒவ்வொரு குருப்புக்கும் பத்து பேர். ஆக, நூறு பேர். எக்ஸ்ட்ராவாக ஒன்றுக்கு மேற்பட்ட வாத்தியங்களை வாசிக்கத் திறமை பெற்றவர்கள் இருபத்தைந்து பேர். உன்னைச் சேர்த்து நூற்று இருபத்தைந்து பேர்கள். நான் திருவையாறு வந்திருந்த பொழுது உன்னைப் பார்த்தது, அந்த தியாகராஜ சுவாமிகள் கருணைன்னு தான் நெனைக்கிறேன். 'நீ தேடிண்டிருக்கற கலைஞன் இதோ இருக்கிறான், பார்'ன்னு அவரே எனக்குக் காட்டிக் கொடுத்த மாதிரி இருக்கு. இந்த பத்து குரூப்பிலும் வயலின் வாசிக்கத் தெரிந்தவர்கள்லே நீ தான் டாப். ஆர்மோனியத்தை அழகா வாசிக்க நான் கத்துக் கொடுத்திடறேன். நீ நன்னா வருவே பார்" என்றார்.

"எனக்கு ஒண்ணும் புரிலே. 'எதுக்கு இந்த க்ரூப்பெல்லாம்?.." என்று அவரிடம் கேட்டேன்.

"'ஒரு இலட்சியத்தை சாதிக்க'.. என்றார் சுருக்கமாக. 'பத்து க்ரூப்பைச் சேர்ந்த நூறு பேரும் நூறு வீரர்கள். வீணை, புல்லாங்குழல், கஞ்சிரா, வயலின்ன்னு ஒவ்வொருத்தர் கைலேயும் ஒவ்வொரு ஆயுதம். அத்தனை பேரும் இந்த இசைக்காக தங்களையே தத்தம் பண்ணினவங்க.. அதிலே நீயும் ஒருவங்கறதே உனக்குப் பெருமை. உனக்கிருக்கிற திறமைக்கு, இந்த இலட்சியப் பிடிப்பும் ஏற்பட்டுட்டா, நீ எல்லாருக்கும் தலைமை தாங்குவே" என்றார்.

"என்ன இலட்சியம்ன்னு நீங்க சொல்லவே இல்லையே?"ன்னு கேட்டேன்.

"சொல்றேன்னு சொல்லிட்டு நிதானமாச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக நானும் அந்த இலட்சியத்திற்கு இழுக்கப்படுவது எனக்கே நன்றாகத் தெரிந்தது.." என்றான் விஸ்வநாதன்.

பொறுமை இழந்து, "அது என்ன இலட்சியம்னு நீயும் சொல்லவே இல்லையே, விஸ்வநாதா?" என்று கேட்டேன்.

இப்பொழுது விஸ்வநாதன் எனக்குக் கைக்கெட்டும் தூரத்தில் நகர்ந்து வந்து உட்கார்ந்து கொண்ட மாதிரித் தெரிந்தது. கொஞ்சம் தீர்க்கமான குரலில் அழுத்தமாக, "சொல்றேன், அண்ணா" என்றான்.


(இன்னும் வரும்)


Friday, November 18, 2011

பார்வை (பகுதி-12)

                    அத்தியாயம்--12

குரு பக்திக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். விஸ்வநாதன் தன் குரு மீது கொண்டிருந்த அன்பு அத்தனையிலும் சேராமல் தனித்து தெரிவதாக எனக்குத் தோன்றியது. வயலினை எப்படிப் பிடிப்பது என்பதிலிருந்து விஸ்வநாதனுக்கு பாடத்தை ஆரம்பித்து வைத்தவர் அவர். குருகுல வாசம் மாதிரி அவருடனையே தங்கி, வேண்டிய பணிவிடைகள் செய்து தனயன் தந்தையைப் பார்த்துக் கொள்வது போல அவரைப் பார்த்துக் கொண்டவன் அவன். அவருக்காக தான் பிறந்த வீட்டையே மறந்து வித்தை கற்றுக் கொடுத்த அவரே தனக்கு சகலமும் என்று மனசார எண்ணியவன் அவன்.

அவர் இல்லாத உலகம் சூன்யமாக அவனுக்குப் பட்டதில் ஆச்சரியமில்லை. அவரது காரியம் முடியும் வரை இழுத்துப் போட்டுக்கொண்டு எல்லாமும் செய்திருக்கிறான். சகலமும் அவரே என்று எண்ணியவனுக்கு அவரது கடைசி காலத்தில் சகலமும் அவனே ஆனான். எல்லாமும் முடிந்த பிறகு தஞ்சை மாவட்ட பிரசித்திபெற்ற ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அவரின் நற்கதிக்காக இறைவனை வேண்டி உருகி உருகி வாசித்திருக்கிறான். எல்லாக் கோயிலிலும் அவன் பிரார்த்தனை முடிந்த பிறகு கடைசியில் தியாகையர் சமாதிக்கு வந்து, 'சகல வாத்தியக்காரர்களு க்கும் குருவான குருவே! இவன் குரு, இவன் இப்படி வாசிக்க என்ன பேறு பெற்றானோ என்று என் குருவிற்கு பெருமையளிக்கும்படி வாசிக்க அருள் பாலியும்" என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரை வணங்கியிருக்கிறான்.

எப்பொழுது எழுந்தானோ, எப்பொழுது தன் பிடிலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தானோ யாருக்கும் தெரியாது. தன் நினைவு மறந்து, தன் நிலை மறந்து ஆவேசம் வந்தவன் போல் அவன் வாசித்து முடித்து அவனுக்குள்ளேயே அந்த வாத்தியம் இசைத்த இசை அடங்கிய தருணம், "தம்பி.." என்று அன்போடு அவனை அழைத்த குரல் அரைகுறை நினைவில் அவனுக்குக் கேட்டிருக்கிறது.

மலங்க மலங்க விழித்தபடியே நிமிர்ந்து பார்த்தவன் ஆஜானுபாகுவாய் செக்கச் செவேலென்று முகம் நிறைய பூத்துக் குலுங்கும் சிரிப்புடன் தன் எதிரே நின்றிருந்த வரை நிமிர்ந்து பார்த்தான். அவருக்குத் தாராளமாய் ஐம்பது வயது இருக்கலாம். பஞ்சக்கச்சம், இடுப்பில் சுற்றிய அங்கவஸ்திரம், திறந்த மார்பு, நெற்றி நிறைய கோணல் மாணல் இல்லாமல் அளவெடுத்துப் பூசியதே போன்ற வீபூதிக் கீற்றுகள், தீர்க்கமான விழிகளின் துளைத்தெடுக்கும் பார்வை என்று ஒரே வினாடியில் உள்வாங்கிக் கொண்ட அவரின் தோற்றம் அவனுள் மிகுந்த மரியாதையைத் தோற்றுவித்திருக் கிறது.

'தாங்கள் யாரோ?' என்று அவன் கேட்க நினைத்ததை பார்வையிலேயே புரிந்து கொண்டவர் மாதிரி, "எனக்கு பம்பாய். ஆராதனைக்குத் தவறாமல் ஜனவரி மாதத்தில் இங்கு வந்து விடுவேன். இந்த முறை முதல் தடவையாகத் தப்பிப் போய்விட்டது. போகாமல் இருக்க மனசு கேட்கவில்லை. அதனால் தான் ஆராதனையெல்லாம் முடிந்து போனாலும் ஓடி வந்து இந்தக் கட்டையை இங்கே சேர்ப்பித்து விட்டேன்" என்றார்.

"அப்படியா?.. தங்கள் அறிமுகம் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்."

"தம்பீ! அற்புதமாக வாசித்தீர்கள். உங்கள் பிடில் பேசுகிறது. வழக்கமாக ஆராதனைக்கு இங்கு வரும் பொழுதெல்லாம் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை வித்வான்கள் எல்லாம் சேர்ந்து பாடும் பாக்யத்தை கண்ணால் பார்க்கவும், காதால் பருகவும் அதிர்ஷ்டம் கிடைக்கும். வித்யாசமாக இப்போ வந்த பொழுது உங்களின் தனிப் பிடில் வாசிப்பைக் கேட்டு புளகாங்கிதம் அடைய சந்தர்ப்பம் கிடைத்தது" என்றார்.

"எல்லாம் என் குருநாதர் அருள்" என்று பவ்யமாகச் சொன்ன விஸ்வநாதனை ரொம்பவும் பிடித்து விட்டது அவருக்கு.

அவர் பம்பாயில் திரைப்படத் துறையில் இருப்பவராம். இங்கு தஞ்சாவூரில் தான் பிறந்திருக்கிறார். சிறுவயதிலேயே அவருக்கு இசையில் மிகுந்த ஆர்வமாம். அந்த ஆர்வம் அவரைத் திரைப்படத்துறைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. கோடம்பாக்கம், கோவை பஷிராஜா ஸ்டூடியோ, சேலம் மார்டன் தியேட்டர்ஸ் என்று சுற்றித் திரிந்ததில் சேலத்தில் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஒரு வேலையாக மார்டன் தியேட்டர்ஸ் வந்த பம்பாயைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், திரும்பிப் போகும் பொழுது தன்னுடன் கூட்டிச் சென்று விட்டாராம். எல்லாம் அவர் சொல்லி விஸ்வநாதனுக்குத் தெரிந்தவை.

விஸ்வநாதனைப் பற்றியும் எல்லா விவரங்களையும் விசாரித்திருக்கிறார். எங்களைப் பற்றி, தன் குருவைப் பற்றி, அவர் காலமானதைப் பற்றி, அவர் அருகாமையை மறக்க முடியாத துயரத்தில் தான் அலைந்து திரிவது பற்றி என்று எல்லாவற்றையும் அவரிடம் சொல்லியிருக்கிறான். அத்தனையையும் கேட்ட அவர், "விஸ்வநாதா! ஒன்று கேட்பேன். மறுக்காமல் சரியென்று சொல்ல வேண்டும்" என்று கேட்டிருக்கிறார்.

இவன் தயங்கியபடியே, "என்ன சொல்லுங்கள்" என்று அவரிடம் கேட்டிருக்கிறான்.

"புதிதாக ஒன்றுமில்லை. இருபது வருடங்களுக்கு முன் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு அரங்கில், அந்த பம்பாய்க்காரர் என்னிடம் கேட்டது தான். நீ என்னுடன் பம்பாய் வந்து விட வேண்டும். அது தான் நான் உன்னிடம் கேட்கும் வரம்" என்றிருக்கிறார்.

"வந்து?..."

"ஹிஸ்ட்ரி ரிபீட்ஸ் என்று சொல்வார்கள். நான் உச்சாணிக்கொம்பில் ஏறிய கதை உனக்கு நடக்கப் போகிறது. உன்னிடம் இருக்கும் இந்த வாசிப்புத் திறமை தேசமெல்லாம் பவனி வர வேண்டும். அதற்கு நானாச்சு.." என்றிருக்கிறார்.

அந்த சமயத்தில், 'மறுக்காமல் அவருடன் போ!' என்று தன் உள்மனம் தனக்கு உத்திரவிட்டதாக விஸ்வநாதன் என்னிடம் சொன்னான்.

விஸ்வநாதன் இதைச் சொல்லும் பொழுது,"அந்த சமயத்தில் எங்கள் ஞாபகமே உனக்கு இல்லையா?.. வீட்டுக்கு வந்து அதை எங்களிடம் சொல்லிவிட்டுக் கூட அவருடன் நீ சென்றிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?" என்று கேட்டேன்.

அதற்கு விஸ்வநாதன் சொன்ன பதில் என்னையும் திகைக்கச் செய்தது. "நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் திருச்சியில் ப்ளைட்டைப் பிடிக்க உடனே கிளம்ப வேண்டும் என்று அவர் அவசரப்படுத்தினார். அதேசமயம், 'ஏன் தாமதிக்கிறாய், உடனே அவருடன் கிளம்பு' என்று தன்னில் ஒரு அறிவுறுத்தல் கிளர்ந்ததாக விஸ்வநாதன் என்னிடம் சொன்னான்.

இன்னொன்றும் சொன்னான். இப்பொழுது தான் அவர் பெயரைக் கேட்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியதாம். அந்த உணர்வு வந்ததும் அவர் பெயரைக் கேட்டிருக்கிறான்.

"சிவநேசன்.." என்று அவர் தன் பெயரைச் சொன்னதும், ஆச்சரியத்துடன் மறுபேச்சு பேசாமல் அவருடன் கிளம்பிவிட்டான். இறந்து போன அவனின் குருவின் பெயரும் சிவநேசன் தான். குருவே இன்னொருவர் உருவில் வந்து தன்னை அழைத்துப் போவதாக அவன் உணர்ந்ததாகச் சொன்னான். 'எதுக்காக போகிறோம்' என்பதெல்லாம் அவன் நினைவில் அவ்வளவு சரியாகப் படிந்ததாக அவனுக்குத் தெரியவில்லையாம். 'குரு கூப்பிடுகிறார்; மறுக்காமல் அவருடன் போகவேண்டும்' அது ஒன்றுதான் அவன் நினைவில் நித்யமாகி அவனை உந்தித் தள்ளித்தாம்.

அவனது அந்த நிலைலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தான் வேறு, தன் மனம் வேறு என்று இருக்க முடியாது. தன்னின் எல்லா செயல்களுக்கும் மனம் ஒத்துழைக்கும் என்றும் சொல்ல முடியாது. மனம் வழிகாட்டியாக செயல்படும் தருணங்களில், அந்த வேலை அற்புதமாக முடிந்து விடுவதைக் காணலாம். உடல், உள்ளம், செயல்பாடு என்று மூன்றும் ஒன்று குவியும் தருணங்கள் அவை. அப்படிப் பட்ட சமயங்களில் அது அதை அது அதன் போக்குக்கு விட்டுவிடுவதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து, "அப்புறம்?" என்றேன்.

'திருச்சி போகையில் வழியெல்லாம் நிறைய பேசிக் கொண்டே வந்தார். என் குரு மாதிரியான தீர்க்கமான பேச்சு இல்லை அவரது. அவர் பேசுவதில் நிறைய காரியார்தமான விவரங்கள் இருந்தது. அவர் பேசியதில் நிறைய எனக்குப் புரியவே இல்லை. இருந்தாலும், என் குரு என்னில் சொன்னதால் போகிறோம் என்கிற நினைப்பிலேயே இருந்தேன். அப்புறம் தான் உணர்ந்தேன். என் குரு அவரில் இல்லை; என்னில் இருந்து தான் என்னை வழிநடத்துகிறார் என்று. அந்த நினைப்பு வந்ததும் மானசீகமாக குருவை வணங்கினேன்' என்று விஸ்வநாதன் சொன்னான்.

தம்பி சொல்வதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டே வந்தவன், "அப்புறம்?.." என்றேன்.


(இன்னும் வரும்)









Tuesday, November 15, 2011

பார்வை (பகுதி-11)

                        அத்தியாயம்--11
ங்கு-- தம்பி வீட்டிற்கு-- வந்து நாலு நாளுக்கு மேலாகி விட்டது. கடந்து சென்ற இந்த நாலு நாளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி. எனக்குத் தான் கொட்டு கொட்டென்று உட்கார்ந்திருக்க மிகவும் சிரமமாக இருந்தது. போதாக்குறைக்கு என்னை மாதிரி வெறுமனே உட்கார்ந்திருக்கிற இன்னொரு ஜீவன் வேறே. தம்பி சம்சாரத்தின் அம்மாவைத் தான் சொல்கிறேன்.

'என்ன, ஏது'ன்னு எங்கிட்டே யாராவது கேட்டால் தான் என் மனசிலிருப்பதைப் பதிலாகச் சொல்வது என் வழக்கம். ஆனால் விஸ்வநாதனின் மாமியார் அப்படி இல்லை என்று தெரிந்தது. தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ வீட்டில் நடக்கிற அத்தனை விஷயங்களும் அவங்களுக்குத் தெரிஞ்சாகணும். 'என்னடி அம்மா, ஏது'ன்னு எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்ச்சிக்கலைன்னா அவங்க மண்டை வெடிச்சிடும். நேற்று பூரா சுசீலாவைப் பற்றி, எனக்குப் பார்வை போனது பற்றி என்று எல்லாவற்றையும் சுசீலாவிடம் கேட்டுத் தொணதொண த்துக் கொண்டே இருந்தார்கள். சிலருக்கு சில விஷயங்களை அனுதாபத்தோடு சொல்லவும் தெரியவில்லை, கேட்கவும் தெரியவில்லை என்று அவர்கள் பேசியதிலிருந்து புரிந்தது. எந்நேரமும் 'லொட்டு, லொட்டு'ன்னு சின்ன உரலில் பாக்கு இடிக்கற சப்தம் தான் அவங்க எங்கே இருக்காங்கன்னு காட்டிக் கொடுக்கும்.

வந்தவர்கள் விருந்தாளி மாதிரி உட்கார்ந்து கொண்டு, எல்லாருக்கும் பொங்கிப் போடும் வேலையை தேவியிடம் மட்டும் சுமத்த சுசீலாவால் முடியவில்லை. சுசீலா என்று மட்டும் இல்லை, எல்லாப் பெண்களின் இயல்பும் அது தான். சமையல் அறைங்கறது அவங்க இடம் மாதிரி; ஒண்டியாக ஒருத்தர் மட்டும் மல்லாடுவதற்கு விட்டு விடமாட்டார்கள். இது தெரிந்து சுசீலா கூட மாட தேவிக்கு ஒத்தாசை செய்வதை அங்கீகரிக்கற எண்ணமே என்னில் படிந்திருந்தது. அதனால் சுசீலாவை எதிர்ப்பார்ப்பதான எனது தேவைகள் பலவற்றைக் குறைத்துக் கொண்டேன். இதனால் தட்டுத்தடுமாறி எனக்கு நானே என்று ஆனதில் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கைக் கூடியது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

மாடியில் தான் விஸ்வநாதனின் தனி அறை இருந்தது. முந்தாநாள் கைபிடித்து மாடிக்கு அழைத்துப் போனான். நாலாபக்கமும் ஜன்னல்கள் போலிருக்கு. காத்து பிச்சிண்டு போனது. என்னை ஈஸிச்சேரில் அமர வைத்து தானும் என் காலடியில் அமர்ந்து கொண்டான். "முன்பெல்லாம் அடிக்கடி கால் வலிக்கிறது என்பீர்களே, அண்ணா? இப்போ எப்படியிருக்கு?" என்று கேட்டபடியே லேசாக அமுக்கிற மாதிரி என் காலைப் பிடித்து விட்டான். 'இப்போ அந்த வலி மார்புக்கு வந்து விட்டது' என்று சொல்லவில்லை; அதற்கு பதில், "இப்போ அதெல்லாம் போயே போச்சு. ஏன் கீழே உக்காந்துட்டே?.. ஒரு சேர் போட்டு பக்கத்தலே உக்காந்துக்கறது தானே?" என்றேன். "பரவாயில்லேண்ணா! இதான் வசதியாயிருக்கு.." என்று சொல்லிச் சிரித்தான். அவனை விட அஞ்சே வயசுப் பெரியவன் நான். எந்த நேரத்திலும் சரிசமமாக எனக்கு எதிர்த்தாற் போல் அவன் அமர்ந்து நான் பார்த்ததில்லை. நின்னுண்டே பேசுவான்; இல்லைனா 'படக்'னு தரைலே உக்காந்திடுவான்.

"அண்ணா.. திருவையாறிலே நாமல்லாம் ஒண்ணா இருக்கும் போது திடீர்ன்னு ஒரு நாள் ஊரை விட்டேப் போயிட்டேனே, எங்கே போனேன்னு நீங்க கேக்கவே இல்லையே?" என்றான்.

"நீயே சொல்லுவேன்னு இருந்தேன்" என்றேன்.

"ஆமாண்ணா.. நானேத் தான் சொல்லணும். ஆனா என்னாலே உங்களுக்கு இப்படி ஆன குற்ற உணர்ச்சியை என்னாலே தாங்கிக்கவே முடிலே, அண்ணா.. இப்படிலாம் நடக்கறத்துக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்னு தெரிலே அண்ணா.." என்றவன் குரல் தழுதழுத்தது.

அவன் கலங்குவதை உணர்ந்ததும் துடித்துப் போய்விட்டேன்.. "விஸ்வநாதா..
இதோ கொஞ்சம் என் பக்கத்தில் வா.." என்று அழைத்து கைநீட்டித் துளாவி அவன் தோள் பாகம் கைக்குப் பட்டதும் லேசாகத் தட்டி ஆறுதல் அளித்தேன். "இப்போ நான் ஒண்ணு சொல்லுவேன். அதை நன்னா மனசிலே வாங்கிக்கணும், என்ன?" என்றேன்.

"சரிண்ணா..."

"யாருக்கு எது நடக்கறத்தும் யாரும் காரணமில்லை. அதை முதல்லே நீ தெரிஞ்சிக்கணும். இப்படி நடக்கணும், கொஞ்ச காலத்தை இப்படிக் கழிக்கணும்னு எனக்கு இருந்திருக்கு. அதனால் அது நடந்திருக்கே தவிர, அதுக்கு நீ காரணமில்லை. நீ காரணம்னு நெனைச்சையானா, வாழ்நாள் பூரா அந்த குற்ற உணர்வு உன்னை உறுத்திண்ட்டே இருக்கும். அப்படியான ஒரு அவஸ்தை விலங்கை உனக்கு நீயே பூட்டிக்கக் கூடாது. அதுக்காகச் சொல்றேன்."

"அதுக்காகத் தானே சொல்றீங்க, அண்ணா.. ஆனா, நான் ஓடிப்போனதாலே தானே, என்னைத் தேடித் திரிய வேண்டியதாயிற்று உங்களுக்கு. என் மேலே அத்தனை பாசம் வைச்சிருந்ததாலே தானே, வேறே யாரோ விஸ்வநாதனை யாரோ கூப்பிடப் போக... ம்.. எல்லாத்தையும் அண்ணி சொல்லிக் கேட்க, எனக்குத் தாங்கலை."

கை நீட்டி அவன் வாயைப் பொத்தினேன். "திருப்பித் திருப்பி அதையே சொல்லாதே. இதெல்லாம் நடக்கணும்னுட்டு... நேத்திக்கு மத்தியானம் இதைப் பத்தித்தான் யோசிச்சிண்டிருந்தேன். எனக்குத் தோணினதைச் சொல்றேன், கேளு. கேட்டால் எதுக்கும் யாரும் காரணமில்லேன்னு நான் சொல்றது உனக்குப் புரியும்.."ன்னு சொல்லிட்டுக் கொஞ்சம் நிதானிச்சு நேற்று யோசித்துத் தெளிந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

"எதை நினைக்கறச்சே எது ஞாபகத்துக்கு வந்திருக்கு, பாரு! இது இராமயணத்திலே வர்ற ஒரு கிளைக் கதை தான். உனக்குக்கூடத் தெரிஞ்சிருக்கலாம்"ன்னு சொன்னவன் கொஞ்சம் நிதானிச்சுதுத் தொடர்ந்தேன். "எனக்கு இப்போலாம் காதுங்கற சமாச்சாரம் ரொம்ப தீட்சண்யமாயிடுத்து.. கண்ணுங்கறது நன்னா இருக்கறச்சே, ஒருத்தர் சொல்றதை இன்னொருத்தர் கேக்கறத்துக்கு மட்டும் தான் இறைவன் இந்தக் காதுகளை நமக்கு வழங்கியிருக்கிறான்ன்னு நெனைச்சிப்பேன். இப்போ என்னடான்னா, கண் பார்வை போன பிறகு அதன் வேலையையும் சேர்த்துக் காது செய்யறது புரிஞ்சது. எஸ். ஓரளவு பாத்துத் தெரிஞ்சிக்கற மாதிரி, இந்தக் காதால் கேட்டுத் தெரிஞ்சிக்கவும் முடியறது.." என்றவன் மூச்சை இழுத்து உள்வாங்கிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தேன். "விஸ்வநாதா.. இந்தக் காதுகளின் மகாத்மியத்தை நினைக்கறச்சே தான் அந்தக் கதையும் கூடவே ஞாபகத்துக்கு வந்தது. சிரவண குமாரன்னு ஒரு சின்னப் பையன். அவன் மூப்படைஞ்ச கண் போன தன் தாய்-தந்தையை காவடி மாதிரியான ஒரு ஏணையில் தூக்கிக்கிண்டுப் போறான். ஒரு ஆற்றங்கரை பக்கம் போகைலே குடிக்க தண்ணி கேட்ட பெத்தவங்களோட தாக சாந்திக்காக அவங்களைக் கீழே இறக்கிட்டு ஆத்திலே தண்ணீர் மொண்டு வர குவளை மாதிரி ஒரு பாத்திரத்தை எடுத்திண்டு நீர் இருக்கற இடத்துக்குப் போறான்.."ன்னு சொல்லிண்டு வந்தவன், "உனக்குக் கூட அந்தக் கதை தெரிஞ்சிருக்கலாம்" என்று சொல்லி நிறுத்தினேன்.

"தெரியும் அண்ணா. இருந்தாலும் நீங்க சொல்லி அதைக் கேக்கறது ஒரு அனுபவம். அதுவும் தவிர, இந்தக் கதையை எப்படி நீங்கள் காதைப் பத்திச் சொல்ல வந்த விஷயத்தோடு இணைக்கிறீர்கள்ன்னு தெரிஞ்சிக்க ஆசை"ன்னான் விஸ்வநாதன்.

தம்பி சொன்னதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சேன். "எது ஒண்ணையும் இன்னொருத்தர் சொல்லிக் கேக்கறதிலே சின்ன வயசிலேந்தே உனக்கு ரொம்ப இஷ்டம். விஸ்வநாதா! நீ கொஞ்சம் கூட மாறவே இல்லைடா.. அப்படியே இருக்கே.." என்று அவன் தோள் தொட்டுத் தட்டிப் பாராட்டி விட்டு,"இப்படி கதை சொல்லிக் கேட்க தயாரா இருக்கறவங்களைப் பாத்து யாருக்குத் தான் கதை சொல்லத் தோணாது?"ன்னு கேட்டுட்டுத் தொடர்ந்தேன்."சிரவண குமாரன் ஆற்றிலே நீர் மொள்ற சப்தத்தை அந்தப்பக்கம் வேட்டையாட வந்த தசரதன் கேட்டு, மான் தான் நீர் அருந்துகிறது போலும்ன்னு தவறா நினைச்சு அந்த மானை வீழ்த்த சப்தம் வந்த திசையை நோக்கி அம்பை எய்ய... விஸ்வநாதா! ஒண்ணு மட்டும் நிச்சயம்ப்பா.. தசரதன் கண்ணால்அந்தச் சிறுவனைப் பார்த்திருந்தா, நிச்சயம் அந்தச் சிறுவனுக்கு நீர் மொள்ள உதவி செஞ்சு, அவனோட பெற்றோரைத் தான் தூக்கிண்டு அவங்க சேருமிடம் கொண்டு போய் சேர்ப்பித்திருப்பான். ஆனா, அந்தக் கொடுப்பினை அவனுக்கு இல்லை. ஒண்ணு தெரியறது பாரு.. இந்தக் கதைலே தசரதனோட காதுங்க தான் அவனோட கண்களா செயல்பட்டிருக்கு.. சாதாரணமா கண்ணால பாத்துத்தானே குறி வைச்சு அம்பை எய்வாங்க? ஆனா தசரதனோ, அந்த ஒலியைக் கேட்ட வாக்கில் அம்பை எய்ய, சிரவண குமாரனின் மேல் அது பாய்ஞ்சு அவன் 'ஐயோ'ன்னு அலறப் பதறி அந்த இடத்துக்கு பாய்ஞ்சு போறான் தசரதன். எதுக்குச் சொல்ல வந்தேன்னா, தசரதன் மாதிரி, காதுங்க தான் எனக்குக் கண்ணாயிடுச்சோன்னு நினைச்சிண்டேன். அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம்.. தசரதன் தெரிஞ்சு எந்தப் பாவமும் செய்யலே; ஆனா மான்னு நெனைச்சு அவன் எஞ்ச அம்பு சிரவணக் குமரனின் உயிரை மாய்ச்சுடுத்து. அதே நேரத்திலே, அன்னிக்கு அந்தப் பெரியவங்க இட்ட சாபத்தினால, பின்னாடி மகனைப் பிரிஞ்சு காட்டுக்கு அனுப்ப வேண்டியதாச்சு.. அதனால எதனால எந்த காரியம் எதுக்காக நடக்கிறதுங்கறது தெரியலே.. நம்மளை அறியாம நடந்த எதுக்கும் இதனால தான் இது நடந்ததுன்னு நம்ம போக்கில் எதுவும் சொல்றத்துக்குமில்லே"ன்னு சொன்னேன்.

"நல்லக்கதை, நல்ல நீதி!" என்று பெருமூச்செறிந்தான் விஸ்வநாதன். கொஞ்ச நேரம் அவன் எதுவும் பேசவே இல்லை. எதையோ சொல்றத்துக்காகத் தான் தயங்கறான்னு எனக்குப் பட்டது.

பாவம், படார்னு எதையும் சொல்லித் தெரியாத பக்குவம். அதான் அவனை அவஸ்தைப்படுத்தறதுன்னு தெரிஞ்சிண்டேன். அவன் தயக்கத்தைப் போக்கறத்துக்காக "அப்புறம், நீ எங்கேலாம் போனே? என்னலாம் நடந்தது?"ன்னு நானே ஆரம்பிச்சு வைச்சேன்.

வாய்க்கால் வெட்டி வழிபண்ணினதும் தேங்கியிருக்கற தண்ணீர் குபுக்னு பாயற மாதிரி, விஸ்வநாதன் சொல்ல ஆரம்பித்தான்.


(இன்னும் வரும்)








Friday, November 11, 2011

பார்வை (பகுதி-10)

                       அத்தியாயம்--10
'சடக்'கென்று கார் நின்று விட்டது. தம்பியின் வீடு வந்து விட்டதாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

"போச்சுடா.. கூட்ஸ் ட்ரையின் போலிருக்கு.. எப்போ வந்து, எப்போ கேட்டைத் திறக்கப் போறானோ?" என்று டாக்டர் சாந்தி லேசான சலிப்பில் சொன்னதும், ரெயில்வே கேட் அடைத்திருப்பதால் கார் நின்றிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

"அங்கிள்! இன்னும் அஞ்சே நிமிஷம் தான். இந்த ரயில்வே கேட்டைத் தாண்டி வரும் மெயின் ரோடில் வலது பக்கம் திரும்பினால் நாலாவது வீடு என்று விஸ்வநாதன் சொல்லியிருக்கிறார்" என்றார் டாக்டர் சாந்தி.

"சரி. டாக்டர்.."

"இன்னொரு தடவை சொல்றத்துக்கு மன்னிக்கணும். அவரைப் பார்த்தவுடனே-- சாரி, உங்களை உங்க தம்பி பார்த்தவுடனே கொஞ்சம் நெர்வஸ் ஆகலாம். முன்னாடியே ஒரு தடவை உங்களை இப்படிப் பார்த்திட்டார் இல்லையா, இது இரண்டாவது தடவை.. இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே அவர் சஞ்சலப் படலாம். பட், நீங்க தம்பியின் நெருக்கத்தில் நெகிழ்ந்திடக் கூடாது. பல வருஷம் கழிச்சு தம்பியோட அருகாமை கிடைக்கப் போறது.. கட்டுப்படுத்த முடியாது; வாஸ்தவம் தான். இருந்தாலும் நீங்க எதுவும் உங்களைப் பாதிக்காத மாதிரி நடந்திக்கணும். என்ன, சரியா?"

எந்த சலனமும் இல்லாமல், "சரி, டாக்டர்.." என்றேன்.

'குட்.." என்று டாக்டர் சொல்லவும், 'கூ..' என்று கூவிக்கொண்டே கூட்ஸ் ட்ரையின் 'தடக், தடக்' என்று தடதடத்து கடக்கும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.

நிறைய போகிகள் போலிருக்கு... மனசுக்குள் ஒவ்வொரு 'தடக்'குக்கும் ஒன்றாக உத்தேசமாக எண்ணி கொண்டு வந்தேன். நாற்பதைத் தாண்டியது.

'கேட்' திறந்தாச்சு போலிருக்கு. இத்தனை நேரம் காத்துக் கிடந்த வண்டிகளுக்குக் கிளம்பும் அவசரம். ஹார்ன் ஒலிகள் கர்ண கடூரமாக இருந்தன.

டாக்டரும் வண்டியை எடுத்து விட்டார். லைன் தாண்டினதும் 'சில்'லென்ற காற்று மனசை லேசாக வருடியது. அந்த திருப்பம் வந்ததும், சுசீலா என் இடது கை மணிக் கட்டை இறுகப் பற்றினாள். "உங்களை நீங்க தான் பாத்துக்கணும்"ன்னு கிசுகிசுப்பாக அவள் சொன்னதும், "என்னைப் பாத்துக்க நீ தான் இருக்கையே!" என்று சொல்லிச் சிரித்தேன். தம்பியைப் பார்க்கப் போகிறோம் என்கிற குஷி மூட் கிளம்பும் போதே வந்து விட்டது என்று சுசீலாக்கும் தெரியும்.

அதற்குள் ஒரு திரும்பு திரும்பி லேசாகக் குலுங்கி வண்டி நின்று விட்டது. வீடு வந்தாச்சு போலிருக்கு.

கதவு திறந்து சுசீலா இறங்கி விட்டாள் என்று உணர்ந்தேன். தம்பி வீட்டில் டாக்டரை மரியாதையுடன் உபசரிக்க வேண்டுமே என்று திடீரென்று மனசில் ஒரு எதிர்பார்ப்பு!

அதற்குள்,"தேவி! தேவி! எங்கே போயிட்டே?.. அண்ணன்லாம் வந்தாச்சு, பாரு!" என்று தம்பியின் குரலும், தடதடத்து வாசல் கதவு திறக்கும் ஓசையும் இங்கு எனக்குக் கேட்டது. என் காதுகள் எப்படி இப்படி ஷார்ப் ஆனது என்று எனக்கே ஆச்சரியமாய் இருந்தது.

"வாங்க.. மெதுவா பாத்து இறங்குங்க.." என்று சுசீலா என் கைபற்றி வண்டியிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்தாள். "சுசீலா.. டாக்டர்.."

"அவங்க இறங்கி முன்னாடி போய்க்கிட்டு இருக்காங்க.."

அதற்குள், "வாங்க, டாக்டர்.. வரணும்.. வரணும்.."ன்னு தம்பியின் குரல் கேட்டது. அடுத்த வினாடியே, "அண்ணா.." என்று என்னை அணைத்துக் கொண்ட அவன் புஜத்தை இறுகப் பற்றிக் கொண்டேன். அஜானுபாகுவாக அவன் இருப்பதாக மனதுக்குப் பட்டது. "நல்லாயிருக்கையா, தம்பீ?" என்று கம்மிப் போன என் குரல், எனக்கே வேறே யாரோ அப்படிக் கேட்பது போல இருந்தது.

"நல்லாயிருக்கேன், அண்ணா.. வாங்க, வாங்க, வீட்டுக்குள்ளாறப் போகலாம்.. அண்ணி வாங்க, வாங்க..."

"வாங்க.. வாங்க.." என்று கீச்சுக் குரலாய் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. குரலில் மரியாதை தெரிந்தாலும் பேசியது வேற்று மொழிக்காரர்கள் உச்சரிப்பில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தம்பி சம்சாரம் போலும்.

"படிங்க.. பாத்து.." என்று சுசீலா என் கை பற்றி வெகு ஜாக்கிரதையாக வீட்டினுள் அழைத்துப் போனாள்.

விஸ்வநாதன் பரபரப்பில் இருப்பதாகப் பட்டது. 'டாக்டர்! அவனைக் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' என்று சொல்லலாம் போலிருந்தது.

"யாருங்க! மாப்பிளையோட அண்ணனுங்களா?" என்று இன்னொரு பெண் குரல். "ஆமாம்மா.. அவரோட அண்ணன் வந்திருக்காரு.." என்று முதலில் பேசிய கீச்சுக் குரல். ஆக, விஸ்வநாதனின் மாமியாரும் அவன் வீட்டிலேயே இருப்பதாகப் புரிந்து கொண்டேன்.

விஸ்வநாதன் உள்ளே நுழைந்த பொழுது பற்றிய என் கையை விடவே இல்லை. எனக்கும் அவன் கையை விட மனமில்லை. இரு நதியாய்ப் பிரிந்த ஒரு தாய் இரத்தத்திற்கு கனக்ட்டிவிட்டி கிடைத்த உணர்வு. என்னை அப்படியே தாங்கலாகக் கூட்டி வந்து ஒரு மர நாற்காலியில் விஸ்வநாதன் அமர வைத்தான். "டாக்டர், நின்று கொண்டே இருக்கிறீர்களே, நீங்களும் இப்படி உட்காருங்கள்!" என்று அவன் சொன்னது கேட்டது.

"தேவி, வா.. சங்கரி எங்கே?.. பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போயிருக்காளா? அவளைக் கூட்டிவா.. எல்லாரும் அண்ணனுக்கு நமஸ்காரம் செய்யணும்.." என்று விஸ்வநாதன் உத்திரவிட்டான்.

"இதோ.." என்று தேவியின் கீச்சுக்குரல் கேட்டது. பெண்ணைக் கூட்டி வரப் போகிறாள் போலும்.

"அண்ணி! இப்படிப் பாய்லே உட்காருங்க, அண்ணி.. ஒரு நிமிஷம்.. இதோ அவங்களும் வந்தாச்சு.. நீங்களும் இப்படி வந்து அண்ணன் பக்கத்லே நில்லுங்க, அண்ணி" என்று விஸ்வநாதன் ஏக குஷியில் இருந்தான். "இப்படி அண்ணி, இதான் கிழக்கு.. அண்ணா! தேவி, சங்கரி, நான் எல்லாம் நமஸ்காரம் செய்யறோம்.. ஆசிர்வதிங்க, அண்ணா!" என்று கேட்டுக் கொண்ட அடுத்த வினாடி, என் கால் விரல் பகுதியில் விஸ்வநாதன் கைவிரல்கள் பட்ட உணர்வில் உடல் சிலிர்த்தது.

"தீர்க்காயுசா, நோய் நொடியில்லாம எல்லாரும் ஆரோக்கியத்தோட இருங்க!" என்று ஆசிர்வதித்த பொழுது, " நம்ப அப்பாவும் இப்படித்தானே அண்ணாஆசிர்வதிப்பார்?" என்று விஸ்வநாதன் கேட்ட போது, அப்படியே கை நீட்டி அவனைத் தழுவத் துடித்தேன். டாக்டர் சாந்தியின் கட்டளை நினைவுக்கு வந்து உணர்வுகளை அடக்கிக் கொள்வதற்கு ரொம்ப சிரமப்பட்டுப் போனேன். விஸ்வநாதன் அவன் பெண் சங்கரியின் கையை என் கைக்குள் வைத்து, "என் பொண் சங்கரிண்ணா.." என்றான். "அப்படியா! ரொம்ப சந்தோஷம்.." என்று அவளை அணைத்துக் கொண்டேன். குழந்தையே இல்லாத எனக்கும் ஆண்டவன் இப்போ ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கிறானே என்று மனசு மலர்ந்தது.

ஒருவாறு என்னை சமனப்படுத்திக் கொண்டு, "விஸ்வநாதா! டாக்டர் அம்மா இல்லைன்னா நான் இல்லேப்பா.." என்று சுருக்கமாகச் சொன்னேன்.

"அவர் அப்படித்தான் சொல்வார்.. அதையெல்லாம் அப்படியே எடுத்துக்காதிங்க.." என்று சொன்ன டாக்டர் சாந்தி, "உங்க ரெண்டு பேர் பாசத்தைப் பார்த்தும் எனக்கு என் அண்ணன் ஞாபகம் வந்திட்டது.. சொல்லப்போனா, என் அண்ணனும் உங்க அண்ணன் ஜாடைலேயே இருப்பார்.." என்று டாக்டர் சாந்தி சொன்ன போது, "இத்தனை நாள் உங்க அண்ணன் பத்தி எனக்குச் சொல்லவே இல்லையே, டாக்டர்!" என்றேன்.

"டாக்டர் அம்மா எங்கிட்டே சொல்லியிருக்காங்க.." என்று சொன்னாள் சுசீலா.

(இன்னும் வரும்)








Thursday, November 10, 2011

பார்வை (பகுதி-9)

                     அத்தியாயம்--9

டாக்டர் சாந்தி தான் டிரைவர் சீட்டில். பின்னால் நானும் சுசீலாவும்.

நடுநடுவே டாக்டர் பேசிக்கொண்டு வந்தாலும், கார் செல்லும் வேகத்தில் பாதி காதில் விழலே. சுசீலா தான் பதில் சொல்லிக் கொண்டு வந்தாள். சுசீலா, டாக்டருக்கு பக்கத்திலேயே முன் சீட்டிலேயே உட்கார்ந்திருக்கலாம். நானும் அதைத்தான் சொன்னேன். டாக்டர் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் உடனே அதை கவனிப்பதற்கு வாகாக சுசீலா பின் சீட்டில் என்னுடன் அமர்ந்து கொள்வதே செளகரியமாக இருக்கும் என்று சொல்லி விட்டார்கள்.

டாக்டர் எது சொன்னாலும் அதற்கு வெளிப்படையா தெரியற காரணத்தைத் தாண்டி அதை விட முக்கியமானதா உள்ளார்ந்து வேறே ஏதாவது இருக்கும். இது இந்த நாலு வருஷப் பழக்கத்திலே நான் தெரிஞ்சிண்ட ஒண்ணு. அதனாலே பல விஷயங்கள்லே அவர் சொல்ற மாதிரியே இருக்கட்டும்னு நினைத்துக் கொள்வேன்.

அன்றைக்கு திடுதிப்புனு "நானும் சுசீலாவும் உங்க தம்பி விஸ்வநாதனைப் பாக்கப் போறோம். நீங்களும் வர்றீங்களா?"ன்னு டாக்டர் சாந்தி கேட்டப்போ திகைச்சுப் போயிட்டேன்.

அவர் சொன்னதை மனசில் கொஞ்சம் மீண்டும் ஓட்டிப் பார்த்து, "நல்ல கேள்வி கேட்டீங்க.. நான் வராமலையா?.. அதுக்குத் தானே இத்தனை நாளாக் காத்திருக்கேன்" என்றேன். 'எந்த தலைபோற காரியமா இருந்தாலும் பதட்டப்படக் கூடாது. அது உங்கள் உடல் நலனுக்கு ஆகாது..'ன்னு டாக்டர் படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தது பாடமா மனசில் தீர்க்கமா படிஞ்சிருந்தது. அதனாலே அவர் கேட்டதற்கு அப்படி அமைதியா பதில் சொல்லிவிட்டு, "நிஜமாவா சொல்றீங்க.. என் தம்பி எங்கே இருக்கான்? அவன் இருக்கற இடம் தெரிஞ்சிடுத்தா?" என்று கேட்டேன்.

"இந்த ஊர்லே தான் இருக்கார். நல்லா வசதி இருந்தும், நல்லவராக இருக்கிறார். அதான் முக்கியம்.. வயலின்லே அவர் ஒரு சாதனையாளர், தெரியுமோ?.." என்று சொல்லி நிறுத்தினார். மேற்கொண்டு அவரே சொல்லட்டும் என்று பேசாமலிருந்தேன்.

"எல்லாத்தையும் சொல்லிடறேன். ஆனா, அதுக்கு முன்னாடி என்னையும் சுசீலாவையும் நீங்க மன்னிக்கணும்" என்றார்.

"என்ன டாக்டர்! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?.. மனசளவிலே நான் ரொம்பவும் குன்றிப் போயிருந்தவன். எனக்குள்ளே தன்னம்பிக்கை விதையை விதைச்சு ஆளாக்கினவங்க நீங்க.. நீங்க போய் என்கிட்டே இப்படியெல்லாம் பேசலாமா?"

"இல்லே. அதெல்லாம் என் தொழில் தர்மம். ஒரு பேஷண்ட்டுக்கு என்னலாம் ட்ரீட்மெண்ட்ன்னு செய்யணுமோ அதெல்லாம் செஞ்சேன். அப்படிலாம் செய்யணும்னு எனக்கு விதிக்கப்பட்டிருக்கு. அவ்வளவு தான். இது உங்க தனிப்பட்ட சொந்த விஷயம். அது எனக்குத் தெரியவந்தும், ஒரு வார காலமா அதை உங்க கிட்டே மறைச்சிட்டேன். ஆனா, அது கூட..."

நான் ஒண்ணும் பேசலே. டாக்டரே தொடர்ந்தார்: "ஆனா அது கூட உங்கள் உடல் நலன் கருதித் தான். மெதுவா கொஞ்சம் கொஞ்சமா சொல்லலாம்ன்னு தீர்மானிச்சேன்" என்றார்.

"எல்லாம் தெய்வ அனுக்கிரகம் டாக்டர். எனக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு நன்னாத் தெரியும். அதனாலே நீங்க எது செஞ்சாலும் சரி. சொல்லுங்க.."

"எஸ். எதையும், குறிப்பா உங்க மனசைப் பாதிக்கற எதையும் இப்படி ஒரு தயார் நிலைக்கு நீங்க வந்ததும் தான் சொல்லணும். அதுக்குத் தான் காத்திருந்தேன்" என்றவர், "உங்க தம்பியை நானும் சுசீலாவும் பார்த்துப் பேசினோம். எப்போ தெரியுமா?.. போன வாரம் தான். சுசீலாவின் மேற்பார்வைலே இருக்கற மியூசிக் க்ளாஸ்லே ஒரு விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தோம் இல்லையா? அப்போத் தான்."

"அந்த விழாவுக்குத் தான் என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தீர்களே?"

"நீங்க வந்ததுக்கு முதல் நாள். மெயின் விழாவுக்கு முதல் நாள் ஒரு ரிகர்சல் மாதிரி வைத்திருந்தோம். எனக்கு வயலின் மேதை விஸ்வநாதனைத் தெரியும். ஆனா அவர் தான் உங்க தம்பி விஸ்வநாதன்னு தெரியாது; அது தெரியாமலேயே விழா அழைப்பிதழை அவருக்கும் அழைச்சிருந்தோம். அடுத்த நாள் அவர் மும்பாய் போக இருந்ததால், இன்னிக்கு வரட்டுமான்னு போன் போட்டுக் கேட்டு விட்டு வந்தார். ரிகர்சல் ஹாலுக்குள் நுழைந்ததும், சுசீலாவைப் பார்த்து திகைச்சுப் போயிட்டார். "அண்ணி.."ன்னு பாசத்தை அடக்க முடியாம தடுமாறினார். நட்ட நடு ஹாலில் நாலு பேருக்கு முன்னாலேயே காலில் விழுந்து நமஸ்கரித்தார்" என்றார்.

அதைக் கேட்டதும் எனக்குப் பெருமை பிடிபடவில்லை.. "டாக்டர், அவன் ரொம்ப.. என்ன சொல்றது.. ரொம்ப பிரமாதமானவன், டாக்டர்" என்று பெருமிதத்துடன் சொன்னேன்.

"ஆமாம். ஹி இஸ் ஜெம்! எல்லாக் கதையும் கேட்டு விக்கித்துப் போயிட்டார். ரிகர்சல் ஹாலில் இருக்கவே இருப்புக் கொள்ளவில்லை அவருக்கு. உடனே உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடியாச் துடிச்சார். எங்களுடன் வந்து இதே இடத்தில் உங்களைப் பார்த்ததும் தான் ஒரு நிலைக்கு வந்தார். உடனே உங்களையும் சுசீலாவையும் தன்னுடன் அழைத்துப் போக விரும்பினார்.
ஆனால், நான் தான் இப்போ வேண்டாம். நானே பக்குவமாக எல்லாவற்றையும் சொல்லி அவரைக் கூட்டி வருகிறேன், என்றேன். சுசீலாவிடமும் இதுபற்றி எதுவும் உங்களிடம் சொல்லக் கூடாதுன்னு ஒரு எச்சரிக்கை மாதிரி சொல்லி வைத்திருந்தேன். எல்லாம் ஒரு காரணத்திற்காகத் தான் என்றாலும், உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே தலையிட்டு விட்டதற்குத் தான் மன்னிப்பு கேட்டேன்," என்று டாக்டர் சொன்ன போது, எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"என் தம்பியை எனக்குக் காட்டி என் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு ஒன்றை எனக்கு அளித்திருக்கிறீர்கள், டாக்டர்!" என்றேன் உணர்ச்சி வயப்பட்டு.

"நோ.. டோண்ட் ஃபீல் டூ மச்.. பதட்டம் போலத் தான் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணறதும். வாழ்க்கைலே எல்லாம் தான் இருக்கும்" என்றவர், "வாங்க, உங்க தம்பி வீட்டிற்குப் போகலாம்" என்றார்.

"இதெற்கெல்லாம் உங்களுக்கு கைமாறாக என்ன செய்யப் போகிறேனோ, தெரியவில்லை.. வெறும் நன்றி மட்டும் தான்னா மனசு கேக்கலை" என்று சொன்னதற்கு டாக்டர் சிரித்தார்.

"என்ன சிரிக்கிறீர்கள்?.. சும்மாவானும் அப்பப்போ இப்படி உபசார வார்த்தை போலச் சொல்கிறேனே, என்றா?"

"நோ, அங்கிள்!" என்று சொன்னவர், "அங்கிள்! நாம ரெண்டு பேருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லையா?" என்று புதுசாகக் கேட்பது போல ஒரு கேள்வியைக் கேட்டார்.

"அதிலென்ன சந்தேகம்?"

"சந்தேகம்னு இல்லே. இதுக்கு அடுத்தாப்பலே அதுன்னு ஒரு ஆர்டரா ஒவ்வொண்ணும் நடக்கறது யாராலேன்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும், இல்லையா?" என்றார்.

"அவன் ஆட்டுவிக்கிறான், நாம் ஆடுகிறோம்.. அதைத் தானே சொல்ல வருகிறீர்கள்?" என்று நான் சொல்லி முடிப்பதற்குள், "அப்படி இருக்கறச்சே,நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லிக்கறது தான் புரியலை; என் போர்ஷன் இது; உங்கள் போர்ஷன் அது'ன்னு கொடுத்த போர்ஷனை ஒழுங்கா செஞ்சிட்டுப் போவோம்" என்றார் டாக்டர்.

"ஆனா எதற்காக இதெல்லாம்னுட்டுத் தான் தெரியலை!" என்றேன்.

"எதுக்காகவேனும் இருக்கட்டும். காரணம் பெரிசில்லை. இந்த ஆட்டம் தான் வாழ்க்கைன்னு எடுத்திண்டு போவோமே.. இன்னைக்கு இந்த சீன்; நாளைக்கு என்ன சீனோ? ஒழுங்கா ஆடிட்டு அவன் கொடுக்கற பரிசை ஏத்துப்போம்; என்ன சொல்றீங்க?" என்று டாக்டர் என்னையே மடக்கினார்.

"நான் என்ன சொல்றது, டாக்டர்?" என்று அப்பாவியாகக் கேட்டேன்... "தம்பியைப் பாக்கலாம்னுட்டுக் கூப்பிட்டீங்க.. அடுத்தப்பலே வர்றது அந்த சீன் தானே, டாக்டர்.. போலாமா, சுசீலா!" என்று சுசீலாவைக் கூப்பிட்டேன்.

"இதோ.." என்று என் கண்ணான துணைவி ஓடிவந்து என் கைப்பற்றினாள்.

அங்கே தான் போய்க் கொண்டிருந்தோம்.


(இன்னும் வரும்)






Tuesday, November 8, 2011

பார்வை (பகுதி-8)

                       அத்தியாயம்--8

வாழ்க்கையில் தான் எத்தனை விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன? ஒவ்வொரு விஷயமும் அதுவே ஒரு புது அனுபவமாய் தெரியவரும் பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. இத்தனை வயது வளர்ந்து விட்டோம், இப்போத் தானே இதுபற்றி தெரியறதுன்னு சில சமயம் அதெல்லாம் தெரியவர்ற போது வெக்கமாக் கூட இருக்கு. அப்படி ஒண்ணு தெரிய வர்றத்தையே இன்னும் இது போலத் தெரியாதது எத்தனை இருக்கோன்னு மலைப்பும் ஏற்படறது. எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாதுங்கறது உண்மைதான். அதுக்கேத்த சந்தர்ப்பம் வரும் போது தான் எதுபத்தியும் தெரிஞ்சிக்க முடியதுங்கறதும் தெரியறது..

'பிரெய்லி' எழுத்துக்களை பத்திக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, அப்படி அந்த எழுத்துக்களை தடவித் தடவி வாசிக்கக் கத்துக்க வேண்டிவரும்ன்னு நெனைச்சுக் கூடப்பார்த்ததில்லை. பாரதி பிரெய்லி முறை என்று சொன்னார்கள். நம் தேசக்கவி பாரதியார் பெயரைக் கேட்டவுடன் மனத்தில் இதைக் கற்றுத் தேர்வது என்று உறுதி தன்னாலே வந்தது. மொத்தம் ஆறு புள்ளிகள். ஒரு வரிசைக்கு இரண்டாக மொத்தம் மூன்று வரிசைக்கு ஆறு புள்ளிகள். ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருந்தது. கை வரிசையை விட்டு அடிக்கடி விலகியது. 'முதல் நாள் இந்தளவுக்கு எழுத்துக்களைச் சரியாகச் சொன்னது ஆச்சரியம் தான்' என்று கற்றுக் கொடுத்த ஆசிரியை சொன்ன பொழுது கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமாயிற்று. ஒரே வாரத்தில் தமிழ் எழுத்துக்களை வேகமாகப் படிக்கிற அளவுக்கு மனசில் படிந்து விட்டது.

'இமைகள் மருத்துவமனை'யின் அடுத்த கட்டிடம் தான் பிரெய்லி பள்ளி என்று சுசீலா சொன்னாள். இதுவும் பெரிய கட்டிடம் தான் என்று அவள் மூலமாகத் தெரிந்தது. நிறையப்பேராம்; வகுப்பு வகுப்பா பிரிச்சிருக்காங்களாம். எல்லாம் சுசீலா சொல்லித் தெரிந்தது தான். தொட்டுப்பாத்துத் தெரிஞ்சிக்கிறது தவிர பார்த்துத் தெரிஞ்சிக்கறது அத்தனையும் சுசீலா பார்த்துத் தெரிஞ்சிண்டு எனக்குச் சொல்றது தான். என் கண்களே இப்போ அவள் தானே. அவள் மூலமாத் தான் இப்போல்லாம் பாக்காமயே தெரிஞ்சிக்கறதுன்னு ஆயிடுச்சு. சுசீலா எதையும் எப்பவும் மேலோட்டமாத் தான் பார்ப்பா; அதான் அவ வழக்கம். இப்போ எனக்குச் சொல்லணும்ங்கறத்துக்காக எனக்கும் சேர்த்து எல்லாத்தையும் கொஞ்சம் ஆழமாப் பாத்து விவரமா சொல்றா. அப்படி அவ சொல்றது நான் பாத்துத் தெரிஞ்சிக்கற மாதிரியே திருப்தியா இருக்கு. நேரடியா எதையும் நான் பாக்கலையே தவிர, நானே எல்லாத்தையும் பாத்துப் புரிஞ்சிக்கற மாதிரி என் பார்வை சுசீலாக்கு வந்தாச்சு. கண்ணதாசன் சொன்னாரே, 'நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்' என்று; அதுபோல.

டாக்டர் சாந்தி ரொம்ப நல்லவங்க. அவங்க சம்பந்தப்பட்ட அந்த சங்கீதப் பள்ளிலேயே சுசீலாக்கும் ஒரு வேலை போட்டுத் தந்திட்டாங்க. சின்ன வயசில் தொடர்ச்சியா ஒரு நாள் தப்பாம கிளாஸுக்குப் போய் சங்கீதம் கத்துக்கிட்டது இப்போ உதவியா இருக்கு. என்னை பிரெயில் கிளாஸ்லே விட்டுட்டு, ஆஸ்பத்திரி வண்டிலேயே சங்கீத கிளாஸூக்கு சுசீலா போயிடுவா. மத்தியான சாப்பாடு எனக்கு இங்கே மெஸ்ஸிலேயே. என்னைப் போல நிறையப் பேர் சாப்படற பெரிய மெஸ்ஸூ! இப்போலாம் யார் உதவியும் இல்லாம தனியாச் சாப்பிடக்கூடப் பழகிண்டுட்டேன்.

சுசீலா அங்கேயே சாப்பிட்டுப்பா. அங்கே வகுப்பெல்லாம் முடிஞ்சு அவள் பிரெயில் கிளாஸுக்கு வர சாயந்திரம் ஆயிடும். அவள் வந்ததும், ஆசுபத்திரி வண்டிலேயே வீட்டிற்கு வந்திடுவோம். வீடு?.. 'சாந்தி நிலையத்திற்கு பக்கத்திலேயே தான்.எல்லா ஏற்பாடுகளையும் பாத்துப் பாத்து செளகரியமா செஞ்சி கொடுத்திருக்கறது சாந்தி டாக்டர் தான். சின்ன வயசில் சுசீலாவோட பழகின பழக்கத்தை அவங்க எதையும் மறக்கலே.. இப்போ அவங்க இருக்கிற இந்த வசதியான நிலைமைலேயும் அப்படியே இருக்கறது ரொம்ப அதிசயம்.

விளையாட்டு போல நாங்கள் சென்னை வந்து ஒன்றரை வருடத்திற்கு மேலாகி விட்டது. திருவையாறு வீடு, இருந்த கொஞ்ச நிலம் எல்லாத்தையும் வித்து இங்கேயே செட்டில் ஆயிட்டோம். எனக்கும் பிரெயில் பள்ளிலேயே வேலை. புதுசா அட்மிஷன் ஆகிறவர்களுக்கு பிரெயில் எழுத்துக்கள் மூலமா படிக்கக் கற்றுக் கொடுக்கிற வேலை. அதைத்தவிர ஆசுபத்திரி வளாகத்திலேயே தியாகராஜர் பெயரில் சின்னதா ஒரு சங்கீதக் குழுவை அமைச்சிருந்தேன். பாட, பாட்டுக் கற்றுக்கொள்ள, பாட பயிற்சி கொடுக்க என்று ரொம்பப்பேர் சந்தோஷத்தோட முன் வந்தாங்க. பார்வை பறிகொடுத்தவர்களுக்கு இந்த சங்கீத வகுப்புகள் அவர்களின் இழப்புணர்ச்சியை இட்டு நிரப்புவதாக இருந்தது. கற்பனா வளம் பெருகி மனோலயம் ஆக்கபூர்வமாக மீட்டப்பட்டது. இந்த மருத்துவமனை இதோட சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் மனச்சாந்தி கொடுக்கற இடமா மாறி வந்தது.

இங்கே எங்கிட்டே பிரெயில் கத்துக்கற மாணவர்களில் (!) ஒருத்தர் பேர் விஸ்வநாதன். என்னை விடப் பெரியவர். அவர் பெரியவர் என்கிறதாலேயே தம்பியா நினைக்கத் தோணாது. இருந்தாலும் அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் பொழுது மனசு கனக்கும். எந்தக் குறையும் இல்லாம எங்கிருந்தாலும் கால்-கை விளங்க அவன் நல்லா இருக்கட்டும்னு நினைச்சிப்பேன். நல்ல வேளை எல்லாருக்கும் நினைப்புன்னு ஒண்ணு இருக்கு. அதுமட்டும் இல்லேனா, அத்தனை பேரும் அம்போ; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்தின நினைப்பு, அவங்களாகவே நம்ம கூட இருக்கிற மாதிரி உணர்விலே படறது. மனுஷா மட்டுமில்லை, பழகின இடங்கள் கூட மனுஷா மாதிரியே ஒரு உறவோட மனசிலே எங்கையோ பதுங்கி இருக்கு. திடுதிப்புன்னு நெனைப்புக்கு வந்திட்டாப் போதும். அங்கே போக மாட்டோமான்னு தோணும். எங்க போய் என்னத்தைச் செய்யப் போறோம்னு எதார்த்த நிலை மனசிலே உறைச்சு ஆளையே அடிச்சுப் போட்டிடும். உடனே அந்த அடியை சமனப்படுத்தற மாதிரி 'போனாப் போறது, அடுத்த ஜென்மத்திலே பாத்துக்கலாம்'னு சில நேரங்கள்லே என்னையே சமாதானப் படுத்திப்பேன். சிரிக்கத்தான் வேணும்; எல்லாமே பேத்தல்!

பேத்தல்னாலும் இதுக்கெல்லாம் ஏதோ சக்தி இருக்கிற மாதிரி தான் இருக்கு. ஏன்னா, வேலையில்லாத சில பொழுதுகளில் சும்மா வெறிச்சிண்டு நான் உக்காந்திருக்கச்சே, ஏதேதோ நினைச்சிக்கறதெல்லாம், 'நடப்பா நிகழுமா என்ன?' ன்னு நெனைச்சிண்ட நெனைப்புக்கு முதல் அடி கிடைச்சது. ஏதோ என்னோட அஜாக்கிரதையாலே அந்த விபத்து நடந்தது; அதுக்கு எங்க தொழிற்சாலை முதலாளி என்ன செய்வார், பாவம்! மாசம் தப்பாம அஞ்சாயிரம் ஆசுபத்திரிக்கு பணம் அனுப்பிச்சிண்டிருந்தார். மாசம் பொறந்தா இரண்டு தேதிக்குள்ளே கரெக்டா அவர்கிட்டேயிருந்து செக் வந்திடும்னு டாக்டரம்மா சொல்லுவாங்க. எனக்கும் ஒரு வேலைன்னு கிடைச்சாச்சு; சுசிலாவும் வேலைக்குப் போறதாலே, 'ரொம்ப நன்றி, செக் இனிமே அனுப்ப வேண்டாம்'னு சுசிலாவை விட்டு அவருக்கு லெட்டர் போடச் சொன்னேன். லெட்டர் போய்ச் சேர்ந்தததோ இல்லையோன்னு நெனைக்க ஆரம்பிச்ச நெனைப்பு, எங்க முதலாளியைப் பத்தின நெனைப்பா நீண்டு, பாவம் அவர், சூது வாது தெரியாத எவ்வளவு தங்கமான மனுஷர்னு நெனைச்சிண்டிருக்கிறச்சேயே, நல்ல மத்தியான வேளை, முதலாளியே நேர்லே வந்திட்டார்ன்னு கேள்விப்பட்டு பதறிப் போயிட்டேன்.. சென்னைலே நினைச்ச நெனைப்போட சக்தி வேகம் திருவையாறு போய்த் தொட்டிருக்கு. சாந்தி டாக்டரும் ஊரிலே இல்லே. என்னோட கூட வேலை செய்யற ஒருத்தர் சுசீலாவுக்கு போன் போட்டு பிரெயில் பள்ளிக்கு அவளை வரவழைச்சார்! ஒரு ரெண்டு மணி நேரம் எங்களோட இருந்து, மனசார நிறைய பகிர்ந்திண்டு போனார். நாங்க ரெண்டு பேரும் நல்லபடி வாழ்க்கைலே எங்களுக்கு ஏத்த மாதிரி செட்டில் ஆகிட்டது குறிச்சு அவருக்கு ரொம்ப திருப்தி. போகறச்சே, பிரெயில் பள்ளி வளர்ச்சிக்கு ஒரு பெரிய தொகைக்கு செக் கொடுத்திட்டுப் போனார். என்ன சொல்றது, சொல்லுங்கோ.. இந்த மாதிரி நல்ல மனசு கொண்டவங்க இருக்கறதாலே தான் மழை பெய்யறது போலிருக்கு.

அவர் வந்து எங்களைப் பாத்திட்டுப் போனது தீவிரமான நெனைப்பா என்னுள் பத்திண்டிடுச்சு. டாக்டர் சாந்தி கிட்டே இந்த நினைப்புகளைப் பற்றி நான் யோசிச்சு வைச்சிருந்ததையெல்லாம் கொட்டின போது, அவரும் 'டெலிபதி'ன்னு இதுவரை எனக்குத் தெரிஞ்சிராத சில தகவல்களைச் சொன்னார். அதெல்லாம் கேட்டபோது எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! வெளிப்புலனுக்குத் தட்டுப்படாத நிறைய விஷயங்கள் இந்த பிரபஞ்ச மர்மங்களில் பொதிந்திருப்பதாக எனக்குப்பட்டது.

தினம் ஒரு தடவையாவது அதிகாலை தியானத்திற்குப் பிறகு என் தம்பி விஸ்வநாதனை பற்றி அவன் எங்கள் கூட இருந்த காலங்களில் நடந்ததையெல்லாம் பற்றி தீவிரமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மனத்தில் சூளூரைத்துக் கொண்டேன்.

அப்படியான நினைப்பு உளப்பூர்வமாக என்னில் நிகழ்ந்ததும், விரைவில் என்னைத் தேடி அவன் வந்து விடுவான் என்று மனசில் சந்தோஷம் பூத்தது.

(இன்னும் வரும்)










Related Posts with Thumbnails