மின் நூல்

Saturday, January 25, 2020

மனம் உயிர் உடல்

29.   ஏகன்  அநேகன்  இறைவனடி வாழ்க!   

த்துவகுணம், இரஜோகுணம், தமோ குணம் என்று மூன்று குணங்களால் மூலப் பிரகிருதி முடையப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம்.

இந்த மூன்று குணங்கள் பற்றி ஒரு பருந்துப் பார்வை:                   

1.  சத்வம்  ஞான ஒளியையும் நன் மார்க்க விருப்பத்தையும் அளிக்கிறது.

2.  இரஜோவோ  --  பற்றுதல், அவா  குணங்களை அளித்து செயல்பாடுகளுக்குத் தூண்டுகிறது.

3.  தமோவோ  -- மயக்கம், சோம்பல், உறக்கம் இவற்றை அளிக்கிறது.

மனிதனுக்குள் இந்த மூன்று குணங்களும் அவ்வப்போது தலையெடுக்கும்.
இந்த  மூன்று குணங்களும் ஒன்றுக்கு ஒன்று முடிச்சுப் போட்டால் போல சம்பந்தப்பட்டது  கூட.  இந்த  மூன்று குணங்களும் இல்லாமல் எந்த செயல்பாடும் இல்லை.  எந்த  நேரத்தில் எந்தக் குணம் விஞ்சி இருக்கிறதோ அந்தக் குணம் பிரதானமாக அந்த நேரத்தில்  அவனுள் உயிர்ப்பு கொள்கிறது.

பிரபஞ்சத்தில் உயிர்ப்புள்ள அத்தனை பொருள்களிலும்  அவற்றிற்கு உரிய குணங்கள் அவற்றில் பொருந்தியிருக்கின்றன என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.

சைவ  சித்தாந்தமோ பதி - பசு - பாசம் பற்றிப் பேசுகிறது.

பதி -  இறைவன். 
பசு  --  உயிர்.                                                                         
பாசம் -  தளை

இயல்பாகவே ஆணவத்தால் கட்டப்பட்டுள்ள உயிரை  'பசு' என்பது சைவ சிந்தாந்த மெய்யிலல் வழக்கு.

பார்க்கப் போனால் பசு என்பது வடமொழிச் சொல்.  பச்+உ  பசு ஆயிற்று.  பச் என்றால் கட்டுவது.   உ -  செயப்படு பொருள்.   பாசத்தால் கட்டப்பட்டது என்று பொருள் கொள்ளலாம்.

உடலை அறிவற்ற ஜடம் என்னும் சைவ சிந்தாந்தம் உயிரை அறிவுப் பொருள் என்கிறது.   ஒரு வரையறைக்கு உட்பட்ட அறிவு இது.  அறிந்த செய்திகளில் மட்டிலுமே அறிவு கொண்டது இது.  தெரியாது இருந்து ஒவ்வொன்றையும் புதுத் தகவலாய் அறிய அறிய அறிவு கொள்ளும் அறிவுப் பொருள் இது என்று சிவஞான போதம் சொல்லும்.

எனவே தானே அறிந்தும்,  அறிவுற்றும் நிற்பதாகிய  பதி அல்ல பசு.  அறிவித்தாலும் அறிய மாட்டாத பாசமும் அன்று.  அறிவித்தால் அறியும் அறிவுடைய என்று நடுவான ஒரு இடைப்பட்ட பொருள் உயிர் என்பது என்பார் மெய்கண்டார்.

அறிவே வடிவாகிய முழுமுதற் கடவுள் 'சித்து'  எனக்கொண்டால் அறிவே இல்லாத  ஜடப்பொருட்களாகிய பாசங்கள், 'அசித்து' எனப்படும். 'சித்து'க்கும்
'அசித்து'க்கும் இடைப்பட்ட பசுவை, 'சித் சித்து' எனக் கொள்ளலாம்.

பதி என்னும் கடவுள் பொருள் ஒன்றே ஒன்றாகும்.  ஆயின்  உயிர்கள் அளவில் அடங்கா எண்ணிக்கை கொண்டவை.  அதனால்  இறையை  ஏகன் என்றும், உயிரை  அநேகன்  என்றும் சைவ சித்தாந்தம்  அழைக்கும்.

ஏகனையும்,  அநேகனையும்  ஒன்றாக்கி ---

'ஏகன்  அநேகன் இறைவன் அடி வாழ்க'   என்று சிவபுராணம் சொல்லும்.

 சிவபெருமான் கடவுள் தன்மையால் ஒன்றாகவும்,  அத்தனை உயிர்களிலும் உறைந்திருப்பதால்  அநேகனாயும் இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு பொருள் தன்னால் சாரப்பெற்ற தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்பதை சார்ந்ததன் வண்ணம் என்பார்கள்.

நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும்  மாந்தர்க்கு
இனத்தியல்ப  தாகும்  அறிவு

என்று பேராசானின் குறட்பா ஒன்றுண்டு.

சேர்ந்த நிலத்தின்  இயல்பாய் அந்த நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாய்  ஆவது போல மக்களின் அறிவும் தாங்கள் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையடையதாகும் என்பார் வள்ளுவனார்.

உமாபதி  சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் நூலில்

இருளில் இருளாகி எல்லிடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி  --  என்றொரு குறட்பா   உண்டு.

இருள் உள்ள பொழுது  இருளாகவும்,  ஒளி வந்த பொழுது ஒளியேயாகியும்
சார்ந்ததின் வண்ணம் ஆகிற பொருட்களை இவ்வுலகம் உடையதாய் உளதே என்பார் உமாபதி  சிவாச்சாரியார்.

உயிர் சிவத்தைச் சார்கிற பொழுது சிவத்தின் தன்மையைப் பெற்று  சிவமாகவே ஆகும் என்பதைச் சொல்ல வந்த பாடல் இது.

நம் தியானத்தின் மூலமாகப் பெற வேண்டிய பெருஞ்செல்வம் இது தான்.

அதைப் பெறும் பேற்றைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


(வளரும்)



Sunday, January 12, 2020

மனம் உயிர் உடல்

28.  இந்தியத் தத்துவ  ஞானம்


சென்ற பதிவு பின்னூட்டத்தில்----

 'தியானத்தின் காரணமாய் மனம் ஒருநிலைப்பட்டு அதனால் அமைதியாகச் சிந்திக்கும் பலம்  பெருகும் என்று நினைக்கிறேன்' என்று ஸ்ரீராம் சொல்லியிருந்தார்.

அன்பர் நடனசபாபதி  அவர்களோ  'மனதை ஒருமுகப்படுத்தி நல்ல விஷயங்களை  நினைத்தாலே நல்ல எண்ணங்கள் உருவாகும் என நினைக்கிறேன்.   அது  பற்றித்  தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்'  என்று கேட்டிருந்தார்.
                                                                                                                 
நம் இதிகாச புராணங்கள்  நம் பாரத தேசத்தின் பண்பாட்டுக் களஞ்சியங்கள். கதை போல எத்தனையோ அரிய விஷயங்களை விளக்கிச் சொல்லி நல்ல மனிதனை உருவாக்குவதில் தன் பங்கை செறிவாக ஆழப் பதிக்கின்றன.  அற நெறிகள் என்றால் என்ன என்பதனை இவர் வாழ்க்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்ற கோட்பாட்டிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் மகாபாரதத்து தரும புத்திரர்.   இருந்தும்  சூதாட்டம் என்ற பாவச்செயலிலிருந்து அவராலும் தப்ப முடியவில்லை.    மிகச் சிறந்த கிருஷ்ணதாசனாகத் திகழந்த  அக்ரூரர், சியமந்தகம் என்ற மணிக்காக கண்ணனுக்கே துரோகம் இழைக்கும் பாவச் செயலுக்கு ஆளானார்.  இப்படி நிறைய உதாரணங்கள்.

யோசித்துப் பார்த்தால் ஒன்று  நமக்குத் தெரியும்.   நம்மால் நடப்பன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அத்தனை காரியங்களும் நம்மில் படிந்திருக்கிற நம் குணங்களால் தான் நிகழ்த்தப்படுவது  நமக்குப் புரியும்.
'மனத்திலோ,  வாக்கிலோ, உடலிலோ நிகழுகின்ற எல்லாச் செயல்களும் மனிதனிடத்தில் பதிந்திருக்கிற அவனது  குணத்தால் தான் நடக்கின்றன' என்று அர்ஜூனனுக்கு  பகவான் கிருஷ்ணர் ஞானோபதேசம்  செய்வதாக பகவத்கீதையில் ஒரு  ஸ்லோகம் உண்டு.

சுவைஒளி ஊறுஓசை  நாற்றம் என்றனைந்தின்
வகைதெரிவான்  கட்டே உலகு

-- என்று  சொல்லுவார் பேராசான்.

இந்தியத் தத்துவ கோட்பாடுகளின்படி பார்த்தால் ----

சுவை, ஒளி, ஊறு,  ஓசை, நாற்றம்  இந்த ஐந்தையும் அறிந்து  அனுபவிக்கிறது  மனம்.  இதனைத்  தாண்டியவைகளையும்  சிந்தித்துச் செயல்பட அறிவு  இருக்கிறது.  அந்தந்த நேரத்து உணர்வில் துடிக்க  உணர்ச்சி என்னும் அகங்காரம் இருக்கிறது. 

இவற்றைக் கட்டி ஆள மூலப்பிரகிருதி என்னும்  படைப்பரசன்.

மண், வான், வளி, புனல், அனல்  -- என்னும் ஐம்பெரும் சக்திகள்.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் --  என்னும் அந்த சக்திகளின் குணங்கள்.

மெய், வாய், கண், மூக்கு, செவி  -- என்னும் உணரும்  ஐம்புலன்கள்.

உடலை உள்நின்று இயக்கும் பிராணவாயு, சமான வாயு, உதான வாயு, அபான வாயு, வியான வாயு என்று   ஐந்து வகை பிராண சக்திகள்

--  இவை எல்லாமே அந்த மூலப் பிரகிருதியிலிருந்து தோற்றம் கொண்டவை.

பூதங்கள் ஐந்து,   அந்த பூதங்களின் குணங்களும் ஐந்து,  குணங்களை அறிகின்ற புலன்கள் ஐந்து,  உடலை உள்நின்று இயக்குகிற பிராண சக்தி  ஐந்து --  ஆக இந்த இருபதும்,  அதோடு சேர்ந்த  அகங்காரம், புத்தி, மனம் என்னும் மூன்றும் சேர்ந்து இருபத்து மூன்றும் மூலப்பிரகிருதியினடமிருந்து தோன்றியவை.  மூலப்பிரகிருதியையும்  சேர்த்து 24 தத்துவங்கள் என்று சொல்வது மரபு.

நம்முடைய உயிர் என்ற இயக்கம் இந்தத் தத்துவக் கோட்பாடுகளில் சேராமல் தனித்த இயக்கமாக இருக்கிறது.

மூலப்பிரகிருதியிலிருந்து தான் மேற்சொன்ன இருபத்து மூன்றும் ஆக்கப்பட்டு இருப்பின் மூலப்பிரகிருதி எதனால் ஆக்கப்பட்டது  என்ற கேள்வி எழுகிறது.

சத்துவகுணம்,  இரஜோகுணம், தமோ குணம் என்ற மூன்று குணங்களல் மூலப்பிரகிருதி உருக்கொண்டிருப்பதாக  இந்திய தத்துவயியல்  இயம்பியிருக்கிறது.

சரிவிகித சம உணவு  நமக்குத் தெரியும்.  ஆரம்பக் கல்விக்கால பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.    அதே மாதிரி சத்துவகுணம்,  இரஜோகுணம், தமோ குணம் என்ற இந்த முப்பெருங்குணங்களும் சமமான அளவில் ஒன்றுபட்டிருப்பது தான்  மூலப்பிரகிருதியாம்.

இந்த முப்பெருங்குணங்கள் என்ன என்றும் அவை சமமான அளவில் ஒன்று பட்டு  மூலப்பிரகிருதி உரு எடுத்தால் என்ன நிலை ஏற்படும் என்பதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(வளரும்)

Monday, January 6, 2020

மனம் உயிர் உடல்

27.   எண்ணம்  போல  வாழ்க்கை

ரு மனிதனின் பெயர்,  அந்த மனிதன் இல்லை என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தான்.   அதாவது  ஒருவரின்  பெயர் என்பது அந்த நபரைக் குறிப்பதோடு சரி.  ஒரே பெயர் கொண்டிருக்கும் பலரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிற அளவில் பெயர் அவரவர் அளவில் சுருங்கிப் போய் விடுகிறது.

பின் ஒரு மனிதனைப் பிரநிதித்துவப்படுத்துவது எது என்ற கேள்வி எழுகிறது. மனிதனை மனிதனாக உலாவச் செய்வது அவனது எண்ணங்களும் அதையொட்டிய அவனது நடவடிக்கைகளும் தான்.  ஒவ்வொரு மனிதனும் அவன் குண நலன்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறான் என்று சொன்னால் அடிக்க வருவீர்களோ?

மாட்டீர்கள்.  ஏனென்றால் சில விஷயங்கள்  சீந்தப்படாதவைகளாக ஆகி விட்டன.  அவற்றில் தனி மனிதனின் குணங்கள் ஒன்று.   நல்ல குணவான் களுக்கு வாழத்தெரியாத ஆசாமி என்று பைத்தியக்கார பட்டம் சூட்ட தயாராக இருக்கும்  புண்ணிய பூமி இது.

தான் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.   A  to  Z  -- எல்லாவற்றையும் உயிர் போவதற்கு முன் அனுபவித்துப் பார்த்து விட வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கும் காலம் இது.    உடல் ஆரோக்கியத்தை ஃபோக்கஸ் பண்ணி எதைச் சொன்னாலும்  பெருவாரியான மக்கள் காது  கொடுத்து கேட்கிறார்கள், விழி பதித்து வாசிக்கிறார்கள் என்று  உலகளாவிய  புள்ளி விவரக் கணக்கொன்று பரிந்துரைக்கிறது.   இதனால் தான் நம்  வார, மாத பத்திரிகைகளில் பெரும் மாற்றங்கள்  ஏற்பட்டிருக்கின்றன. குடும்ப  மாதாந்திர பட்ஜெட்டில் அழகு சாதன செலவுகளுக்காக ஒதுக்கும் தொகை கணிசமான ஒன்றாய் இடம் பிடித்திருக்கும் காலம் இது.

உடல் நலனிலிருந்து  லேசாக கிளை பிரிந்து மன நலம் என்று போனால் கூட கொட்டாவி விடும் கூட்டம் தான் அதிகம்.   ஆண்களுக்கு  பெண்கள் விரும்புகிற மாதிரி என்ற ஒரே ஒரு  ஆப்ஷன் தான்.  பெண்களுக்கு அதே மாதிரி ஒரே ஒரு ஆப்ஷன் சொல்ல வேண்டுமென்றால்  உடல் சதை போட்டுப் பருமன் கொள்ளாமல் இடை சிறுத்து  ஒல்லியாக (லீனாக)  இருக்க வேண்டும் என்பது தான்.   உடுக்கை போலவான இடை என்று பழந்தமிழ்  இலக்கியங்களில் வரும்.   அந்த மாதிரி.

உடல் வெளி அழகு  கவர்ச்சிக்கு.  சரி.  உடல் உள் அழகு?..  அது  மன ஆரோக்கியத்திற்கு.   மன ஆரோக்கியத்திற்கும்  உடல் ஆரோக்கியத்திற்கும் பாலம் போட்டிருப்பது தான் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள்.   கடவுளை சாட்சியாக வைத்துக் கொண்டு மனப்பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்குத் தான் இந்த தியான  பயிற்சி முறை என்றால் இந்த தியான முறைக்கு இன்னும் கொஞ்சம் ஃபோக்கஸ்  கிடைக்கும் என்பது இன்றைய நிலை. 

வாழ நேர்ந்த வாழ்க்கையில் கீழ்க்கண்ட  உணர்வுகள்  மன ஆரோக்கியத்தை சிதைத்து  உடல் ஆரோக்கியத்தை  குலைக்கும் என்கிறார்கள்.

1.  கோபம்
2.  ஏமாற்றம்
3.   பதட்டம்
4.  பயம்
5.  பாசாங்கு                                                                         
6.  அதீத தயக்கம்
7.  வெறுப்பு
8.  சோம்பல்

--- என்று நிறையச்  சொல்லலாம். 

மேற்சொன்ன மாதிரியான  செயல்களுக்கு நாம் ஆட்படும் பொழுது  மூளைப் பகுதியில்  நடக்கும் நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள உடல் சாத்திர  அறிவியலில்  நிறைய ஆராய்ந்திருக்கிறார்கள்.   எஃப்.எம்.ஆர் (Functional Magnetic Resonance Imaging)  என்கிற தொழில் நுட்ப  ஆற்றலில் கணினி உதவியுடன்  மூளை இயக்கங்களை  அறிந்து கொள்ள வசதிகள்  கூடியிருக்கின்றன.  இந்தத் துறையில் ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ..   PET (Positron Emission Tomography)  என்ற நுண்ணிய கருவிகளின் பங்களிப்பு  அனந்தம்.

நம் உடல் இயக்கம் என்பது வெளிச் செயல்பாடுகளோடு சம்பந்தப்பட்டது.  நம் எண்ணங்கள் தாம் நம் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பது அடிப்படை உண்மை.   ஆக, நம்  நல்ல எண்ணங்களின் மூலம்  உடலின் உள் இயக்கத்தை நம் இஷ்டப்படி அமைத்துக் கொள்ளலாம் என்ற சூத்திரம் தான் இந்த தியானத்திற்கான ஆதார உண்மை.  கோயிலில் போய்  கடவுளை கும்பிட்டு விட்டு நமக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது போல  அல்ல இது.  இறை சக்தியை சாட்சியாக வைத்துக் கொண்டு    நம்மில் நல்ல  எண்ணங்களின் உருவாக்கலுக்காக  இந்த தியான முயற்சி என்று கொள்ளுங்கள்.  சாட்சி என்பது  நாம் கொள்ளும் உறுதிகளில் வழுவாமல் இருப்பதற்காக நமக்கு நாமே  விதித்துக் கொள்ளும் ஒரு கட்டுப்பாடு.   உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக  நீங்களே நம்பும் உங்கள் கடவுள் துணையாக இருந்து  வழி நடத்துவான் என்ற நம்பிக்கை ஆழ உங்கள் மனசில் படிய வேண்டும் என்பது அடிப்படையான உணர்வாக இந்தத் தியானத்தை மேற்கொள்பவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஆத்திரம்,  பொறாமை போன்ற உணர்வுகளில்  நீங்கள் சிக்கிக் கொள்ளும் பொழுது மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதி வேகத்தில் இரத்தம் பாய்கிறது.  அதை மாதிரி சாந்தமாக இருக்கும் பொழுது,  சந்தோஷமாக இருக்கும் பொழுது -- என்ற நேரங்களில் நம் மூளையில் ஏற்படும்  ஆரோக்கியமான மாற்றங்களையும்  நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இது தான் நம் எண்ணப்படி உடல் உள் உறுப்புகளின்  ஆரோக்கியத்தை அமைத்துக் கொள்வது.   இந்த தியானத்தின் மூலம் அதை எப்படி செயல்படுத்தலாம் என்று பார்ப்போம்.

(வளரும்)

Related Posts with Thumbnails