மின் நூல்

Wednesday, February 3, 2010

ஆத்மாவைத் தேடி....34 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


34. மேலும் ஐந்து வாயுக்கள்


ன்றைய அவைகூட்டத்திற்கும் கூட்டம் கூடுவதற்கான குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாலேயே வழக்கம்போல் அவையில் அத்தனைபேரும் கூடிவிட்டனர். தேவதேவனும் சரியான நேரத்திற்கு மெல்லிய புன்முறுவலுடன் மைக் பிடித்தார்.

"இன்றைக்கு காலை அமர்வை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். அவரே இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். ஒருகால், நமது இந்தக் கலந்துரையாடலைக் காலை அமர்வுக்குள் முடித்துக் கொள்ள முடியவில்லை என்றால், உணவுக்குப் பின் நாம் கூடும் மாலை அமர்விலும் அதை நீட்டித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதனால், நமக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. விவரமாக எல்லாவற்றை யும் அலசலாம். பிராணன் பற்றிய இந்த அடிப்படை நன்கு புரிந்த பின், அடுத்த பகுதியாக மனத்திற்குப் போகலாம்" என்று தேவதேவன் சொல்லிய பொழுது, எழுந்திருந்த தொல்பொருள் துறையைச் சார்ந்த சுகவனேசன்,"ரொம்ப நன்றி.." என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.

"இந்த அவையில் இதற்கு முன் நிகழ்த்திய உரைகளிலும் உள்ளில் பிராணனாக செயல்படுவது இது தானோ என்று இந்த காற்று பற்றி நிறையச் சொன்ன நிவேதிதா அவர்கள்,இதற்கு பிராணவாயு என்று பெயர் வைத்ததே மிகவும் பொருள் பொதிந்த ஒன்றே என்றும் சொன்னார்கள். வெளியில் இருக்கும் காற்றைத் தானே இழுத்து சுவாசிக்கிறோம்? உள்ளே செல்வது வெளிக் காற்று என்றாலும் அவை செயல்படுவதற்கேற்ப தனித்தனிப் பெயர்களைப் பெறுவதாகச் சொன்னீர்கள்.. இது தவிர இந்த வாயுக்களின் பிரிவுகள் பற்றி வேறு தகவல்கள் இருந்தால் அவற்றைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்" என்று கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

தேவதேவன் தோளில் தொங்கிய துண்டைச் சரிபடுத்திக் கொண்டு, சொல்ல ஆரம்பித்தார்."நல்லது நண்பரே!" என்று முகம் மலர்ந்து தொடர்ந்தார். "முதலில் வெளிக்காற்றைப் பற்றிப் பார்ப்போம். வெளிக்காற்றில் பெரும்பகுதி நைட்ரஜன் தான். அது 78% அளவில் என்றால், ஆக்ஸிஜன் 21%, மற்றும் மிகக் குறைந்த அளவில் ஆர்கன், கார்பன்-டை-ஆக்ஸடு, நியான், ஹைட்ரஜன் போன்றவை பாக்கியுள்ள 1%. இதெல்லாம் பிற்காலத்திய வேதியியல் பகுப்புகளும், அவற்றிற்கான பெயர்களும். ரொம்ப சரி. வெளிக்காற்று காற்றாக உள்ளே நுழைந்தாலும் அது உள்ளே பிராணனாக செயல்படுகையில் அங்கங்கே செயல்படும் விதங்களுக்கு ஏற்றவாறு பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் என்று பெயர் கொள்கின்றன என்று பார்த்தோம். இது உபநிஷத்துக்களில் நாம் கண்ட உண்மை" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தினார்.

பின் தொடர்ந்தார். "அதைத்தவிர, பிராணன் தொடர்ச்சியான மற்ற நான்கு வாயுக்களும் எங்கெங்கு நிலைபெறுகின்றன அவற்றின் செயல்பாடுகள் என்ன என்றும் பார்த்தோம். நமது பாரத பண்டைய வைத்திய முறையான ஆயுர்வேத வைத்தியம் மேலும் ஐந்து வாயுக்களைப் பற்றி கூறுகிறது. பிராண வாயு, அபான வாயு, வியான வாயு, உதான வாயு, சமான வாயு இவற்றைத் தவிர நாக, கூர்ம, துரகர, தேவதத்த, தனஞ்செய என்று இன்னும் ஐந்து வாயுக்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் சொல்கிறது. புதுசாகச் சொன்ன ஐந்து வாயுக்களில், நாக வாயு நாம் உண்ணும் உணவு எதிரெடுக்கையிலும், கண்களை இமைக்கையில் கூர்ம வாயுவும், தும்மல் ஏற்படுகையில் துரகர வாயுவும், கொட்டாவி விடுகையில் தேவதத்த வாயுவும் செயலாற்றுவதாகச் சொல்கிறார்கள்.

"கடைசியில் சொன்ன தனஞ்செய வாயு மட்டும் ஒரு தனிப்பட்டப் பணிக்காகக் காத்திருக்கிறது. மரணம் சம்பவித்ததும் இறந்துபட்ட உடலிலிருந்து எல்லா வாயுக்களும் வெளியேறிக் காணாமல் போக, தனஞ்செய வாயு மட்டும் உடலில் தங்கி தனது பணிக்காகக் காத்திருக்கும். இறந்த உடலை வீங்கச் செய்வதே அதன் வேலை. அந்தப்பணி முடிந்ததும், அதுவும் வெளியேறி விடும்"என்று தேவதேவன் சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்து நின்றார்.


(தேடல் தொடரும்)

2 comments:

கபீரன்பன் said...

//புதுசாகச் சொன்ன ஐந்து வாயுக்களில், நாக வாயு நாம் உண்ணும் உணவு எதிரெடுக்கையிலும், கண்களை இமைக்கையில் கூர்ம வாயுவும், தும்மல் ஏற்படுகையில் துரகர வாயுவும், கொட்டாவி விடுகையில் தேவதத்த வாயுவும் செயலாற்றுவதாகச் சொல்கிறார்கள்..//

புது தகவல்கள். சுவாரசியமான விஷயங்கள் அலசப்படுவது நன்றாக உள்ளது. நன்றி

ஜீவி said...

@ கபீரன்பன்

வாருங்கள், கபீரன்ப!
பகிர்தலுக்கும் பதிந்தமைக்கும் நன்றி.

Related Posts with Thumbnails