மின் நூல்

Thursday, February 18, 2010

ஆத்மாவைத் தேடி….37 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


37. தன்னை அறிதல்

"மனதைப் பற்றி மேலும் தகவல்கள் அளிக்க இருக்கின்ற இந்த உரையை ஒரு புதுக்கோணத்தில் அமைத்திருக்கிறோம்" என்று தொடர்ந்து உரையைத் தொடர்ந்தார் தேவதேவன். "இதுவரை இந்த அவையில் உரையாற்றியவர்கள் மனம் பற்றிக் குறிப்பிட நேரிட்ட பொழுதெல்லாம் மனம் பற்றியதான பல தகவல்களை அந்தந்த சமயத்தில் உரையாற்றுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் சார்ந்ததாக நிறையச் சொல்லி இருக்கிறார்கள். பூங்குழலி அவர்கள் உரையாற்றும் பொழுது கூட தைத்திரீய உபநிஷத்து சொல்லும் உடம்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது வரை இந்த அவையில் சொல்லியவற்றைத் தவிர்த்து, மற்றைய தகவல்களை ஒன்று திரட்டி 'ஆத்மாவைத் தேடுத'லில் மனம், புத்தியின் பங்களிப்பைப் பார்க்கிற மாதிரி உரையை அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இந்த விதத்தில், மனம்,புத்தி பற்றி இதுவரை குறிப் பிடாதவற்றை தொகுத்துச் சொல்லி விடலாமென்றும் தீர்மானித்தோம்.

"ஆக, ஏற்கனவே குறிப்பிட்டு விட்ட மனம் என்றால் என்ன என்பன போன்ற ஆரம்பக்கல்வியை விடுத்து, மனதைப் பற்றிய வேறுபட்ட தகவல்களைப் பார்க்கலாம்" என்று கூறி விட்டு அவையினரின் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொள்ள விரும்புகிறவர் போல் ஒருமுறை அவையைச் சுற்றிக் கூர்ந்து பார்த்தார். "இந்த உரையாற்றலுக்கு இடையே அவ்வப்போது உங்களுக்கு ஏதாவது ஐயம் ஏற்படுமாயின் அவற்றையும் அவ்வப்போது விவாதித்து நாம் தெளிவடையலாம் என்று நினைக்கிறேன்" என்று தேவதேவன் சொன்ன பொழுது, அவர் சொன்னதை தங்கள் கரவொலி மூலம் அவையினர் ஆமோதிக்க, மலர்ந்த முகத்துடன் உரையாடலைத் தொடர்ந்தார் தேவதேவன்.

"வரலாறு மிகவும் முக்கியமானது. நீண்ட நெடிய மனித வரலாற்றை தேசங்களின் வரலாற்றினூடே உற்று நோக்கினால், பாரத தேசத்தின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை பொதிந்திருப்பதைக் காணலாம். பண்டைய இந்திய மனத்தின் அத்தனை தேடல்களும் அகத்தைச் சார்ந்திருப்பதைப் பார்க்கலாம். தன்னில் தன்னை, அந்தத் தன்னில் உயர்ந்த அறிவை, உயர்ந்த அறிவின் உச்சவெளியாக இறைவனை என்று எல்லாத் தேடல்களிலும் தன்னையே நிலைக்களனாக்கிக் கொண்டது பண்டைய இந்திய மனம் என்பது புரியும்.

"சரி. இது என்ன அகத்தைச் சார்ந்திருத்தல்?.. அப்படிச் சார்வதால் என்ன பெற்றோம்? -- என்பவை போன்ற முக்கியமான கேள்விகள் இந்த நேரத்தில் நம்முள் எழலாம். இப்படியாக இந்தக் கேள்வி கேட்பதை நானே ஆரம்பித்து வைக்கிறேன்" என்று சொல்லி இயல்பாக லேசாகச் சிரித்தார் தேவதேவன்.

அவை அவர் மேலும் கூறப்போவதின் எதிர்பார்ப்பில் ஆர்வம் கூடி உன்னிப்பாய் கவனிக்கலாயிற்று.

"வெளியுலகில் புறப்பார்வைக்குத் தெரியும் செயல்களை, நடப்புகளைப் பார்த்து கண்டதே காட்சியாய் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளல் புறவயப் பார்வை. தன்னையே ஆஹூதி ஆக்கிக்கொண்டு தன்னுள் தீவிரமாய் சாதனைகள் செய்து அதை அனுபூதியாய் புலங்களின் உணர்வுகளைக் கடந்த உண்மை நிலையில் உணருதல் அகப்பார்வை. தன்னை அறியப்படுத்தும் தன்னை அறிதல் என்பதும் அகப்பார்வை ஒன்றினாலேயே சாத்தியப்படும் இல்லையா?.."என்று கேட்டு விட்டு ஒரு நிமிடம் நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன்.


"தன்னை அறிதலும், ஆத்மாவை அறிதலும் ஒன்றுதான். தன்னை அறிதல் என்பது தன்னில் இருக்கும் அழியாத ஒன்றை அறிவது. அந்த அழியாத அது, அழியக் கூடிய உடல் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்ட மனம்,பிராணன் இவற்றின் ஊடே, இவற்றிற் கெல்லாம் சம்பந்தப்படாது இருப்பது தான் இதன் சிறப்பு. இப்பிரபஞ்ச இயக்க சக்திகளிடையே அழியாத ஒன்று, அழியக்கூடியவற்றுடன் புலப்பார்வை க்குத் தட்டுப்படாமல் புதைந்திருப்பது தான் விந்தை. எல்லாம் அழிந்தும் மாற்றமும் கொண்ட பின் நடந்தவைகளுக்குச் சாட்சியாய் ஒன்று வேண்டுமல்லவா? அந்த சாட்சியே ஆத்மா என்றும் கொள்ளலாம்" என்று தேவதேவன் சொன்ன போது, கேட்டுக் கொண்டிருந்த அவையினர் தங்களை மறந்து தேவதேவனின் உரையில் தோய்ந்தனர்.

இந்த சமயத்தில் சித்ரசேனன் எழுந்திருந்தார். "மாற்றம் அடையக்கூடிய மனதைக் கொண்டு அழிதலற்ற ஆத்மாவை அறிவதா?..இதை விளக்கிச் சொல்லவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

"சொல்கிறேன்.." என்று தொடர்ந்தார், தேவதேவன்.


(தேடல் தொடரும்)

2 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

"கேட்டுக் கொண்டிருந்த அவையினர் தங்களை மறந்து தேவதேவனின் உரையில் தோய்ந்தனர்."
நாங்களும் தான்...

ஜீவி said...

தொடர்ந்து கூடவருவது குறித்து மிக்க நன்றி.

Related Posts with Thumbnails