மின் நூல்

Wednesday, April 20, 2011

ஆத்மாவைத் தேடி .... 6 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி ..


6. புறா, புறா, ஒரே புறா மயம்!


டுத்ததான அந்த அமர்வு ஆரம்பிக்கும் பொழுதே களை கட்டிவிட்டது.

தேவதேவன் தன் குழுவினருடன் வந்து மேடையேறியதும், கிருஷ்ண முர்த்தியும் எழுந்திருந்து முன்னால் வந்து மேடையேறினார். அவரைப் பார்த்து முறுவலித்த தேவதேவன், அவரைத் தன் பக்கத்தில் அமர செய்கை காட்டி விட்டு மைக் பற்றினார். "நேற்று கிருஷ்ணமூர்த்தி சாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் இப்படிச் செய்யலாமேன்னு இந்த எண்ணம் உதித்தது. கனவுகளைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிற உபநிஷத்துச் செய்திகளையும், அந்தக் கனவுகள் பற்றிய பலரின் அனுபவங்களையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் யதார்த்த உணர்வுடன் பலபேருடைய அனுபவம் சார்ந்து பலவற்றை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளலாமோ என்று தோன்றியது. அந்த வகையில் கிருஷ்ணமூர்த்தி சார் தனது அனுபவங்களைக் கூறி இன்றையத் தொடரைத் தொடங்கி வைப்பார்" என்றார்..

சென்ற அமர்வுக்குப் பின்னால் வெளி நடையில் ஒரு குழுவினருடன் கிருஷ்ணமூர்த்தி தனக்கு ஏற்பட்ட கனவு அனுபவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.. புராணக் கதைகளில் வரும் கனவுகளைப் பற்றியும் சொன்னார். அவர் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் அந்த இடத்தில் இருந்த தேவதேவன் அவர் சொன்னவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவர், "நீங்கள் சொல்லும் பல செய்திகள் கனவு பற்றி நாம் நடத்தும் விவாதத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்ல வெகுவாகத் துணையிருக்கும். அடுத்த அமர்வில் நாம் இது பற்றி விவாதிக்கையில் தங்கள் அனுபவங்களை அவையில் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்த சமயத்தில் "ஆஹா.. பேஷாய்ச் சொல்கிறேன்.." என்று கிருஷ்ணமூர்த்தியும் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தார்.

தேவதேவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இந்த அடுத்ததான அமர்வில் கிருஷ்ணமூர்த்தி தனது கனவு அனுபவங்களைச் சுவைபடச் சொல்ல ஆரம்பித்தார். "நாம நனவுலே காண்ற பல காட்சிகளோடப் பதிவுகள் தான் கனவுகளா வர்றதோன்னு எனக்கு அடிக்கடித் தோணும்" என்றார் கிருஷ்ணமூர்த்தி. "கண்ணால் கண்ட காட்சிகள்னு மட்டும் இல்லே; நம்ம நினைப்புலே எதையானும் படிச்சோ இல்லை யார் சொல்லியோ தேங்கிப் போன ஒண்ணைப் பத்தின நினைவுகளைக் கூட இந்தக் கனவு காண்ற லிஸ்டிலே சேத்துக்கலாம்னு நெனைக்கிறேன். அப்படிப்பட்ட நாமே நேரடியா அனுபவப்பூர்வமா அனுபவப்படாத விஷயங்கள் கூட கனவு காண்ற நேரத்திலே, அப்போ கண்ணு முன்னாடி நடக்கற மாதிரி தத்ரூபமா நிஜத்தில் நடக்கறதைப் பாக்கற மாதிரியே கனவுகளா வரும்" என்று சொன்ன கிருஷ்ணமூர்த்தி லேசாகத் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தார்:"ஆறு அல்லது ஏழு வயசு தான் அப்போ எனக்கிருக்கும். நாங்கள்லாம் அப்போ தஞ்சாவூர்லே இருந்தோம். ராணி வாய்க்கால் தெருன்னு நாங்க குடியிருந்த தெருக்குப் பேர். வீட்லே பெரிசு பெரிசா நாலு ஜன்னல் இருக்கும். ஒரு நா ராத்திரி பக்கவாட்டு சந்து பக்கம் இருந்த ஒருபெரிய ஜன்னலுக்கு பக்கத்லே, பாய் விரிச்சு, ஜன்னலுக்கு வெளியே தெரியற நிலாவைப் பாத்திண்டு படுத்திருக்கோம். அங்கே அந்த வயசிலே என்னோட மாமா பெண்--இங்கே இப்போ நம்மோட இருக்கற மாலு தான்-- சிபி சக்ரவர்த்தி கதையை எனக்கு அன்னைக்குச் சொன்னா. அப்போ தான் நான் சிபி சக்ரவர்த்தி கதையை முதல்முதலா கேக்கறேன். அந்தக் கதைலே ஒரு புறா வரும் இல்லையா?.. சிபி சக்ரவர்த்தி கூட இந்த புறாவைக் காப்பாத்தறத்துக்காக அதோட எடைக்கு எடை தன்னோட தொடை சதையை அரிந்து தராசுத் தட்டிலே வைப்பாரே.. உங்களுக்கெல்லாம் அந்தக் கதை தெரியும்னு நெனைக்கறேன்.. அந்தக் கதை தான்.

"ஒரு நா ராத்திரி. இந்த மஹாதேவ் நிவாஸூக்கு நான் வந்த புதுசில எனக்கு ஒதுக்கப்பட்ட அறைலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே, ஆறு வயசிலே மாலு சொல்லி நான் கேட்ட அந்த சிபியோட கதை, ராணி வாய்க்கால் தெரு வீட்லே மாலு சொல்லி நான் கேட்ட களம், காட்சிகளோட தத்ரூபமா இங்கே கனவா வந்தது.. இப்போ அதை நெனைச்சுப் பாத்தாலும் பிரமிப்பா இருக்கு. கனவுன்னே நம்ப முடியாம மாலு கதை சொல்லிண்டிருக்கற மாதிரியும் நான் பாய்லே படுத்திண்டு 'உம்' கொட்டிண்டு கேட்டிண்டிருக்கற மாதிரியும், அந்த ஜன்னல், நிலா எல்லாம் கூட அப்படி அப்படியே.. ஆறு வயசிலே கேட்டது, பாத்தது எல்லாம் இந்த வயசிலே அதுவும் இப்போ நடக்கறாப் போல அப்படியே படக் காட்சி மாதிரி நினைவுலே வந்திட்டுப் போறதுன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே.. இதுலே ஆச்சரியம் என்னன்னா அந்த வயசிலேந்து இந்த வயசு வரை இந்த இடைப்பட்ட காலத்லே ஒரு தடவை கூட இந்தக் கனவை நான் கண்டதில்லேங்கறது தான். ஆறு வயசிலே நடந்த ஒண்ணு இத்தனை வயசு கடந்து இப்போ கனவா காண்றத்துக்குத் தான் இத்தனை காலம் காத்திருந்ததோன்னு இதை நெனைச்சா எனக்கு பிரமிப்பாத் தான் இருக்கு..

"தொடர்ச்சியா வேறு சிலதையும் நெனைச்சுப் பாக்கறச்சே தான் இன்னும் இன்னும் ஆச்சரியம் கூடறது. என்னிக்கு அந்தக் கனவை இந்த மஹாதேவ் நிவாஸ்லே கண்டேனோ அன்னிக்குக் காலம்பறத் தான் நம்ம பேராசிரியர் பூங்குழலி முண்டக உபநிஷத்லே வர்ற, மரக்கிளைலே உட்கார்ந்திருக்கிற அந்த ரெண்டு புறாக்களைப் பத்தி சொன்னாங்க.. முண்டக உபநிஷத்துப் புறாக்களைப் பத்தியும் அப்பத்தான் நான் முதல் தடவையாக் கேக்கறேன். சிபி சக்ரவர்த்தி கதையைக் கனவுலே கண்டதுக்குத் தொடர்ச்சியா, பூங்குழலி அம்மா அன்னிக்கு இந்த சபைலே விவரிச்சதெல்லாம் கனவுலே வர்றது.. கனவுலே வர்றதுன்னா சாதாரணமா இல்லே; இங்கே அவங்க லெட்சர் கொடுப்பாங்களே, அந்த மாதிரியே அவங்க அந்த மேல் கீழ்க் கிளைப் புறாக்களைப் பத்திச் சொல்லிண்டிருக்கற மாதிரியே கனவு காட்சி காட்சியா மனசிலே ஓடறது.. அவங்க அதை சொல்லிண்டி ருகறச்சேயே, 'ஒரு புறா தான் ஆத்மா.. இன்னொரு புறா ஜீவனோ'ன்னு ஒரு நெனைப்பு வேறே என் மனசிலே பளிச்சின்னு தோண்றது.. பாக்கற நேரத்திலேயே அந்த மனசுக்கு ஒரு நினைப்பு வேறையா?..

"கண்ணை மூடிண்டு தானே தூங்கறோம். அதுனாலே கண் பாக்கலே. அப்போ நினைவுலே ஓடற கனவைப் பாக்கறது யாரு?.. ஒண்ணைப் பாக்கற சக்தி கண்ணுக்குத் தான் உண்டுன்னு நெனைச்சிண்டிருக்கோம். தூங்கறச்சே கனவுகளும் படம் பாக்கற மாதிரி மனசிலே படியறதினாலே கண்ணைத் தவிர பாக்கற உணர்வு வேறொண்ணுக்கும் இருக்குன்னு தோண்றது. அந்த வேறொண்ணு என்னங்கறனு தான் இப்போ கேள்வியா படறது..

கிருஷ்ணமூர்த்தி உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே தொடர்ந்தார்."கனவுலே அந்த நினைப்பு என் மனசிலே தோணின போது தான் 'டக்'குனு விழிப்பு வந்திடுத்து.. விழிப்பு வந்ததுமே, ஜன்னல் பக்கத்து வெளி மரக்கிளைலே ஒரு சலசலப்பை உணர்ந்தேன்.. எழுந்து பார்த்தா, கனவுலே பாத்த மாதிரியே நெஜமாலுமே ரெண்டு புறாக்களைப் பாக்கறேன்.. எந்தக் காலத்திலேயோ நடந்த நிகழ்ச்சியோட புறா நினைவு, அன்னிக்கு பூங்குழலி அம்மா சொல்லிக் கேட்ட முண்டக உபநிஷத்து புறா நினைவு, ஜன்னலுக்கு வெளிலே நிஜமாலுமே ரெண்டு புறா.. இதெல்லாம் எப்படி ஒண்ணாச் சேந்து கனவு--காட்சின்னு வந்தது எனக்கு இப்பவும் பிரமிப்பா இருக்கு.. எல்லாக் காட்சியையும் ஒண்ணு சேக்கற சரடா இரண்டு புறா இருக்கு.. இங்கே நிறைய சாஸ்திரங்களைப் படிச்சவா இருக்கா.. இதுக்கெல்லாம் விளக்கம் நிச்சயம் அவா படிச்ச படிப்பிலே இருக்கும்.. அவா தான் இன்னது இன்னதாலேன்னு எனக்குச் சொல்லணும்.."

அவையின் முன்வரிசையில் அமர்ந்திருந்த மாலு எழுந்திருந்து நிற்க, கிருஷ்ண மூர்த்தி தான் சொல்லிக் கொண்டு வருவதை நிறுத்தி அவளைப் பார்த்தார். "கிருஷ்ணா சொன்ன தோட இன்னொரு ஆச்சரியத்தையும் சேர்த்துக்கணும். அடுத்தாப்லே அரியலூர்லே இருந்த எங்கிட்டே இங்கேயிருந்து கிருஷ்ணா போன்லே பேசறச்சே, அதே மாதிரி புறாக் கூட்டம் ஒண்ணு அரியலூர்லே எங்க வீட்டு தாழ்வாரத்லே வந்து துவம்சம் பண்ணித்து.. 'ச்சூ..ச்சூ'ன்னு அதை நான் விரட்டற சப்தத்தை போன்லே கேட்டுட்டு, 'புறாக்களை விரட்டாதே.. அதெல்லாம் 'த்விஜப் பிறவிகள்'னு கிருஷ்ணா எங்கிட்டே சொன்னது ஞாபகத்துக்கு வர்றது.." என்று சொன்ன போது, சிவராமன் எழுத்திருந்து, "இது எல்லாத்தோடையும் இன்னொண்ணையும் சேர்த்துப் பாக்கணும்.. இது நடந்த சமயத்திலே நானும் அரியலூர்லே தான் இருந்தேன். புறா வளர்கற ஒருத்தர், குறிப்பிட்ட இந்த புறாக்களாம் வருஷத்துக்கொருமுறை டெல்லிலேந்து தான் அரியலூர் வர்றதா எனக்குச் சொன்னார்" என்றார்.

இந்த சமயத்தில் நிவேதிதாவிடம் பூங்குழலி ஏதோ சொன்ன பொழுது நிவேதிதாவின் முகம் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து பூங்குழலி இருக்கையிலிருந்து எழ, அவரை மேடைக்கு வந்து மைக்கில் பேசுமாறு அழைத்தார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)

2 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

உணர்வு பூர்வமா இருக்கு :)

ஜீவி said...

@ Sakthiprabha

நன்றி.

தொடர்ந்து வாருங்கள்.

Related Posts with Thumbnails