மின் நூல்

Monday, September 19, 2011

இதோ நிஜ சுஜாதா


எழுத்தாளர் சுஜாதாவை முதன் முதல் நேரில் பார்த்தது அன்றைய வடஆற்காடு மாவட்ட திருப்பத்தூரில். அப்பவும் எப்பவும் மாதிரி தான். அதே மழமழ முகம். வழவழ பேண்ட்டில் தொளதொள சட்டை நுழைத்து, கூச்சமுடன் கூடிய லேசான உதடு விரியும் புன்னகையில்... அந்த உயரமும், கார்ப்பொரேட் அதிகாரி களைப் போன்ற சாயலில் தமிழ் எழுத்தாளர் களை இதுமாதிரி இதுவரைப் பார்த்திருந்திராத வாசகர்களுக்கு அதுவும் ஒரு ஆச்சரியமாகவே இருந்தது.. அது ஒரு இலக்கிய சம்பந்தமான கூட்டம். உள்ளூர் இலக்கிய மன்றம் அழைத்திருந்தது. எழுத்தாளர் உஷா சுப்ரமணியமும் கூட வந்திருந்தார்.

"எனக்கு அவ்வளவாக கோர்வையாக பேச வராது; கேள்வி-பதில் மாதிரி வைத்துக் கொள்ளலாமா?" என்று நெளிந்தவர், வாசகக் கூட்டத்தினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து, பதிலாக கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அருமையான விளக்கச் சொற்பொழிவு ஆற்றிவிட்டார். மைக் முன் நின்று கொண்டு இந்த மாதிரி இவ்வளவு நேரம் இதுவரை பேசிய அனுபவமே எனக்கில்லை என்று அவரே திகைக்கும் அளவுக்கு அந்தக் கூட்டம் அமைந்து விட்டது. கூட்ட முடிவில் சுஜாதாவைச் சந்தித்து கைகுலுக்கி, 'விண்வெளிப் பயணம்' சம்பந்தப்பட்ட சோவியத் யூனியன் வெளியீடான ஒரு என்.சி.பி.எச். புத்தகத்தை அவருக்கு பரிசளித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பிற்காலத்தில் 'எனக்கு யாரும் புத்தகம் அனுப்ப வேண்டாம்' என்று வேண்டிக் கொண்ட அவர் அன்று ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறுகுழந்தை மாதிரி திருப்பித் திருப்பி அதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை மறப்பதிற்கில்லை.. இதெல்லாம் நடந்து 42 வருடங்களுக்கு மேலிருக்கும்.

உண்மையில் 'நைலான் கயிறு'தான் அவரது ஓபனிங் என்று சொல்ல வேண்டும். குமுதத்தில் அது தொடராக வந்த பொழுது, யார் இந்த சுஜாதா என்கிற நினைப்பு க்குப் பதில், குமுதத்தின் துணையாசிரியர்களில் ஒருவர் எடுத்த அவதாரமாக இருக்குமென்கிற நினைப்பே மேலோங்கியது. போதாக்குறைக்கு எனக்கு அவர்களில் ஒருவரின் மேல் 'அவர் தான் இவர்' என்று பலமான சந்தேகம். யூகத்தைத் தெரியப்படுத்திக் குமுதத்திற்கே எழுதிக் கேட்டதில், 'தங்கள் ஆர்வத்திற்கும், கடிதமெழுதி அதை வெளிப்படுத்தியத்திற்கும் நன்றி' என்று ஆசிரியருக்காக கையெழுத்திட்டு, ரா.கி. ரங்கராஜனிடமிருந்து கடிதம் வந்தது. அப்படியும் அவர் யார் என்று சொல்லாத சாமர்த்திய பதிலாக அது இருந்தது. 'கணையாழி'யில் கடைசிப் பக்கம் எழுதிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் குமுதத்திற்கும் ஒரு கதை அனுப்பி வைக்க, 'நிறைய எழுதுங்கள்' என்று அவருக்கு அனுப்பி வைத்திருந்த செக்கின் இணைப்புக் கடிதத்தின் மூலையில் ஆசிரியர் எஸ்.ஏ.பி. நுணுக்கி எழுதிய எழுத்துக்கள் ஆக்ஸிஜனாக செயல்பட சுஜாதாவின் பிர்மாண்டத்திற்கு அன்றைக்கே கால்கோள் விழா நடந்து விட்டது!

இவர் விகடனில் எழுதிய முதல் கதை 'ஜன்னல் மலர்'. பின்னால் அதே விகடனில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' வருவதற்குள் நன்றாகவே தமிழ் எழுத்துலகில் சுஜாதா தன் ஸ்தானத்தை நிலைநிறுத்திக் கொண்டு விட்டார். பூப்போன்ற அந்தக் கவிதைத் தலைப்பு, கதையின் இடையிட்ட நாடோடிப் பாடல்கள், கிராமம் கிராமம் சார்ந்த மக்கள், நாடோடிப் பாடல்கள்பற்றி ஆராயும் நோக்குடன் வந்திருக்கும் வாலிபன் கல்யாணராமன், சென்னை வாலிபி சிநேகலதா, ஜமீன், அமானுஷ்யம், மர்மம் என்று கலந்து கட்டி சுஜாதா விளையாடியிருந்தார். அந்த நாடோடிப் பாடல்கள் மிக்ஸிங் அவருக்கு ஒரு இலக்கிய மேதைமையை அளிக்க, ஜெயராஜ் ஓவியம், ஆனந்த விகடன் பிரசுரம் என்று சுஜாதா வெகுஜன வாசகர்கள் கவனிக்கப்படும் எழுத்தாளரானார்...

கணேஷ், முதல் நாவல் நைலான் கயிறு என்னும் சீட்டு மாளிகையிலேயே வந்து விட்டாலும், வசந்த்தின் என்டிரி பின்னால் தான். சுஜாதாவின் எழுத்துலக அனுபவத்தில் வெகுஜன பத்திரிகை வாசகரின் ரசனைக்குத் தீனி போட என்று ஆரம்பித்தது சுஜாதாவின் எழுத்துத் திறமையைத் தின்று தீர்த்தது தான் என்று ஆயிற்று. யார் வேண்டுமானாலும் சுஜாதா மாதிரி நகல் எழுத்தாளர் ஆகலாம் என்று சுஜாதா இறங்கிப் போனதும் இந்த கணேஷ்-வசந்த் ஆக்கிரமிப்புக்குப் பின் தான்.

சிறுபத்திரிகையிலிருந்து ஆரம்பித்த சுஜாதா அங்கேயே தேங்கிவிடாது தமிழ்கூறு நல்லுலகத்து பகாசுரப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. நாளாவட்டத்தில் அந்த பெரும் பேனர் பத்திரிகைகளின் பசிக்கு பரிமாறுவதே அவர் வேலையாயிற்று. மனுஷன் மிஷின் அல்ல. எழுதிக்குவிக்க வேண்டியிருந்தது. அந்தக் குவித்தலே அவருக்காக எழுத முடியாமல் போய், பத்திரிகையின் விருப்பதிற்கேற்ப அவர் எழுத வேண்டியதாயிற்று. அப்போது அவர் கற்பனையில் ஆபத்பாந்தவர்களாக வந்தவர்கள் தாம் கணேஷும், வசந்த்தும். தன் முன்னோர்களான எர்ள் ஸ்டான்லி கார்டனரின் பெரிமேசன்--டெல்லா ஸ்ட்ரீட், தமிழ்வாணனின் சங்கர்லால்-இந்திரா மாதிரி-- அவர்கள் ஆணும், பெண்ணும் என்றால் இவர் ஆணும், ஆணுமாக அவர்களை உலவ விட்டார். அந்தக் கால இளசுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற மாதிரியானாலும், கணேஷை கொஞ்சம் மன முதிர்ச்சியுடைய லாயராகவும், அவனுக்குக் கிடைத்த விடலைத்தன உதவியாளனாக வசந்தையும் உருவாக்கியதில் சுஜாதாவின் பாதிப்பங்கு வேலை கச்சிதமாக முடிந்தது. மீதிப் பாதியைக் கவர்ச்சி வரிகளும், அவர் எழுத்து ஸ்டைலும் பங்குப் போட்டுக் கொண்டன. அப்போ கதை?.. அதைப் பண்ணுவதற்குத் தான் நேரமில்லாமல் மட்டுமில்லை, மனமுமில்லாமல் போயிற்று. இப்படியாகப் பெரும் பத்திரிகையில் எழுதிப் பிரபலமாகும் எல்லா எழுத்தாளர்களுக்கும் நேர்வது அவருக்கும் நேர்ந்தது. அத்தனை அழுத்தங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு சுஜாதா எழுந்து வந்தது தான் ஆச்சரியமான கதை. சொல்லப்போனால், அதுவே அவரின் கதையும் கூட.

"சார்! இந்த வார தொடர்கதைப் பகுதி கிடைச்சது.. எட்டுப் பக்கத்திற்கு ஒரு 'மார்' கூட இல்லையே.. "

"இல்லாட்டி என்னா?"

"இல்லாம இருக்கும், இல்லையா?"

"அப்படீன்னு நெனைக்கிறீங்க?.. இல்லாம இருந்தாத்தான் என்ன?.. வேணுன்னா, நீங்களே எங்கங்கே உங்களுக்குத் தோண்றதோ அங்கங்கே ஒண்ணு ரெண்டு போட்டுக்கங்க.."

"அது கூட நீங்க செஞ்சாத்தாங்க நல்லா இருக்கும்.. அனுப்ச்சி வைக்கிறோம்.. நீங்களே போட்டு திருப்பி அனுப்பிச்சுடுங்க.. தேங்க்ஸ்.."

இதுக்குத் தான் பேனாவைப் பிடிச்சோமான்னு நொந்து போய் அவரையே யோசிக்க வைத்திருக்கும். அந்த வேகத்தில் பிறந்தது தான் அவரது பெயர் சொல்லும் நிறைய கதைகள். ஒவ்வொன்றாய் இல்லாவிட்டாலும் சிலதைப் பார்ப்போம்.

'இருள் வரும் நேரம்'ன்னு ஒரு நாவல்.. '88 வாக்கில் 'கல்கி'யில் தொடராக வந்தது. பல்கலைக் கழக சைக்காலஜி புரொபசர் ராம்பிரகாஷின் அழகான மனைவி அம்ருதா. ஒரு கல்யாண ரிசப்ஷனுக்காக காரில் கிளம்பியவர்கள், கார் நடுவழியில் ரிப்பேராகி நின்றுவிட வேறு வழியின்றி பஸ் பிடித்து வீடு செல்ல பக்கத்து பஸ் ஸ்டாப்பை நாடுகிறார்கள். திமுதிமு கூட்டத்துடன் வந்த பஸ்ஸில் ராம்பிரகாஷ் மட்டுமே திணிக்கப் பட்டு பின்னால் நின்றிருந்த அவர் மனைவி பஸ் ஸ்டாப்பிலேயே தேங்கி விடுகிறாள். ஆட்டோ ஒன்றை செலுத்திக் கொண்டு அந்த வழியே வந்த பாபுவும் அவன் நண்பன் பால்குண்டுவும் இதைப் பார்த்து அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸைப் பிடித்து விடலாம் என்று அம்ருதாவை நம்ப வைத்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கின்றனர். கபன் பார்க் பக்க இருட்டு அவர்களுக்கு வசதியாக அம்ருதா அபலையாய் அவர்கள் பசிக்கு இலக்காகிறாள்.

இப்படிக் கதையை ஆரம்பித்து, புரொபசர்- அந்த 'விபத்தி'ற்குப் பிறகு மனம் நலம் பாதித்துப் போன அவர் மனைவி அம்ருதா, புரொபசர்-அவர் மாணவி வர்ஷா, வர்ஷா- வர்ஷாவின் புரொபசர் மீதான கிரேஸ்-- வர்ஷா-- புரொபசர் பழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து மனம் பேதலிக்கும் அம்ருதா-- ஆட்டோ பாபு-அவன் அம்மா லஷ்மி, சிக்பேட்டை விவகாரங்கள் என்று தொட்டுக் கொள்ள நிறைய ஐட்டங்களுடன் பரிமாறுகிறார் சுஜாதா. இப்படியோ அப்படியோ என்று எல்லா சாத்திய கூறுகளையும் அலசும் வேகத்தில் மனித மனத்தின் அத்தனை அடிமன ஆழ விகற்பங்களும் வெளிச்சம் போடப்பட்டு வெக்கங்கெட்டுத் திரிகின்றன. சைக்யாரிஸ்ட்டுகள் புழங்கும் வார்த்தைகள் புதினத்திற்கு தனி யதார்த்தைத்தைக் கொடுக்க தமிழுக்குப் புதுசான சூழ்நிலை விவரிப்புகள் என்று எடுத்துக் கொண்ட விஷயத்தில் படிப்பவரின் ஈடுபாடு கூட அதை அர்ப்ணிப்பு உணர்வுடன் சொல்லும் சுஜாதாவின் அதீத திறமை வெளிப்படும் நாவல் இது.

'கம்ப்யூட்டர் கிராமம்' என்று.. 'பிரிவோம் சந்திப்போம்' ன்னு.. அதெல்லாம் இருக்கட்டும்.. அதுக்கு முன்னாடி, அந்த 'குருபிரசாத்தின் கடைசி தினம்' குறுநாவலைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் பாவம். சுஜாதாவின் பலமான பலம் என்னவெனில், அவரது புத்தகம் எடுத்துப் படிப்பவர்களை அவர்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம் என்று உணர்வதற்கு லவலேசமும் இடம் கொடுக்காமல் கதை நடக்கும் நட்ட நடு ஸ்பாட்டில் அவர்களையும் கொண்டு போய் இறக்கிவிடுவது. கண்ணுக்கு முன்னாடி நடக்கும் அத்தனையிலும் நாமும் பங்கு கொள்கிறமாதிரி, அல்லது நேரடியாக பார்க்கிற மாதிரி எத்தனை விதம் உண்டோ அத்தனை வித சொக்குப்பொடியையும் தூவி விட்டு விட்டு, தான் தேமேன்னென்று இருப்பது தெரியாது அப்ஸ்காண்ட் ஆகிவிடுவார். நடக்கும் நிகழ்ச்சிகள், நாம் என்று எல்லாமே நேரடிப் பரிச்சயத்தில் அவரவர் கொள்ளும் உணர்விற்கேற்ப அவரவர் அனுபவம் கொள்ள வேண்டியது தான். குருபிரசாத்தின் கடைசி தினத்திலும் இந்தக் காரியம் தான் சப்தப்படாமல் நடக்கிறது.

குருபிரசாத்தின் ஸ்டாப் நம்பர் 17163. அசெம்ளி செக்ஷன் சீனியர் மெக்கானிக். ரத்த அழுத்த உச்சத்தில் மயங்கி விழுந்தவனை சக தொழிலாளிகள் பார்த்து தொழிற்சாலை ஆசுபத்திரிக்கு தூக்கி வர, அங்கிருந்து இ.எஸ்.ஐ. அட்மிஷனுக்கு அவன் பரிந்துரைக்கப்பட, சட்டதிட்டங்களினால் சட்டமிடப்பட்ட சில சம்பிராதாய நடவடிக்கைகளும், தனிமனித அலட்சிய காலதாமதங்களும் எப்படி ஒரு சாதாரண மனிதனின் காப்பாற்றப்பட வேண்டிய உயிரை கைகழுவுகின்றன என்பது தான் கதை. சுஜாதாவின் அசாத்திய சாமர்த்தியத்தில் படிப்பவரைக் குமைய வைக்கும் அற்புத படைப்பு இது. 'எந்தக் கதையும் முடிவதில்லை; ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி, ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறுத்தி விடுகிறோம். அவ்வளவே" என்று 'ஏறக்குறைய சொர்க்கம்' நாவலின் முன்னுரையில் சொல்லியிருப்பார். எவ்வளவு உண்மை!

'சாவி'யில் ஐந்து வாரங்கள் தொடராக வந்து குறுநாவல் என்கிற பெயரில் படிப்பவரைக் குலுக்கி எடுத்த கதை,'காகிதச் சங்கிலி'கள். சிறுநீரகம் பாதிப்படை ந்து படுத்த படுக்கையாகிப் போன ஒருவனின் அவஸ்த்தைகளுக்கிடையே மாற்று சிறுநீரகத்திற்கான ஏற்பாடு என்று வருகையில் அவனது நெருங்கிய உறவுகளிடையே ஏற்படும் மனகிலேசங்களைப் படம் பிடித்துக் காட்டி பாடமாகிப் போகும் கதை. இந்தக் கதையை சினிமாவாக எடுக்க முனைகையில் ஏற்பட்ட அனுபவங்களை பின்னொரு காலத்தில் சிரிக்கச் சிரிக்க சுஜாதா எழுதியவற்றைப் படித்த ஞாபகம். அந்த சிரிப்பு, பிற்காலத்தும் நினைவிருந்த அந்த கதையின் சோகத்திற்கு ஒரு மாற்றாக இருந்தது வாஸ்தவம் தான்.

அவருக்கென்று அமைந்து போன எத்தனையோ கதைகள் உண்டு. 'ஜெனோ, மீண்டும் ஜெனோ, என் இனிய இயந்திரா என்று நிறைய உண்டு. நிறையப் பேர் அவை எல்லாவற்றையும் படித்து மகிழ்ந்திருப்பதால் அவை பற்றி எழுதுவது அநாவசியம். ஆனால் தான் எழுதிய சைன்ஸ் ஃபிக்ஷன்ஸ் பற்றி அவர் என்ன எண்ணம் கொண்டிருந்தார் என்பதைச் சொல்ல வேண்டும். 'பெல்'லிருந்து பணி ஓய்வு பெற்று பெங்களூரு நீங்கி சென்னையில் செட்டில் ஆகவிருந்த தருணத்தில் ஒரு பேட்டியில் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 'எலக்ரானிக்ஸ்-கம்ப்யூட்டர் ஃபீல்டுலே என் அலுவலகப் பணி அமைந்தது போன விதம் தான் இந்த மாதிரியான என் கதைகளின் வெற்றிக்குக் காரணம். இந்த துறையிலேயே பணியாற்றுகிறதனாலே எனக்குக் கிடைக்கிற தொடர்புகள், அதன் மூலமா தெரிய வர்ற செய்திகள், நாளைய டெக்னாலஜி பற்றின முன் கூட்டிய தகவல்கள் இதெல்லாம் தான் என் எழுத்து சுவாரஸ்யத்திற்குக் காரணம்னு நெனைக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார். வாழ்க்கையின் பலவிஷயங்களை பிரித்து வைத்து பாத்தி போடாமல், எல்லாவற்றையும் ஒருசேர பார்க்கும் பார்வை பெற்றிருந்தார். எல்லாவற்றிலும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், அவற்றை நேசிக்க அவர் கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் அவற்றை பலரிடம் பகிர்ந்து கொள்ள அவர் கொண்டிருந்த துடிப்புமே அவரிடமிருந்து பெற வேண்டிய செய்தியாக நமக்குத் தெரிகிறது.

'கல்கி'யில் '90 வாக்கில், 'மத்தியமர்' என்று தலைப்பிட்டு எழுதினார். அது என்ன 'மத்தியமர்'?.. சுஜாதா வார்த்தைகளிலே சொல்ல வேண்டுமானால் அவர்கள் இவர்கள் தாம்: "இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள். பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகரியங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும் அவசரத்திற்கும் ஏற்பச் சற்று மாற்றிக் கொள்கிறவர்கள்.. சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள். இந்த மெளனப் பெரும்பான்மை யினருக்கு ஒரு பெயர் உண்டென்றால், அந்தப் பெயரே மத்யமர்"-- என்ற அவரது அறிமுகமே போதும். அந்த 'மத்யமர்' வரிசையில் மொத்தம் பன்னிரண்டு கதைகள். முதல் கதையான 'ஒரு கல்யாண ஏற்பாடு' கதையில் ஒரு வரி வரும். 'நரசிம்மன் கூடத்து அலமாரியில் இருந்த ஹெரால்டு ராபின்ஸ் புத்தகங்களை நீக்கி ஜே. கிருஷ்ண முர்த்திகளை அடுக்கினார்' என்று நேற்று மறுவாசிப்பில் இந்த வரியைப் படித்து 'குபுக்'கென்று சிரித்து விட்டேன். பதினைந்து வரிகள் எழுதி ஒரு ஆளை இப்படி என்று சொல்வதற்கு அவஸ்தைபடுவோரிடையே ஒரே வரியில் 'இந்த நேரத்து நரசிம்மன் இவர் தான்' என்று அவரை அச்சாக வார்த்தெடுத்துத் தந்துவிட்டார்! இந்த வித்தைக்குப் பெயர் தான் சுஜாதா என்று சொல்லத் தோன்றுகிறது!

'தேடாதே'ன்னு இன்னொரு குறுநாவல். கணபதி சுப்ரமணியம் என்கிற ஜி யெஸ். எம்.ஏ. லிட். சமூக அலைக்கழிப்பில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு கவர்ச்சிப் படங்கள் சப்ளை செய்யும் போட்டோகிராபர்.. தொழில்முறையில் நிறைய பெண்களோடு பரிச்சயம் என்றாலும் எல்லாரும் அவன் நிக்கானின் வ்யூ ஃபைண்டரில் தெரியும் எஸ்.எல்.ஆர். பிம்பங்கள் தாம். அன்னிக்கு தியாகராஜன் என்பவர் சொல்லி ஒரு குட்டி நடிகையை ஒரு சில போட்டோக்களில் சிறைப்படுத்த அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவளோ பி.ஏ. லிட். அவள் வீட்டு புத்தக அலமாரியில் Zen and the art of Motor cycle Maintenance என்னும் புத்தகம் பார்த்து திடுக்கிடுதலில் அவளின் மீதான மதிப்பு அவனுக்குக் கூடி, அறிவுலக பிரஜைகளாய் இருவரும் பிணைக்கப் பட்ட சடுதியில் அவர்களிக்கிடையே காதல் மலர்ந்து, நிறைய மல்லாந்து... என்று கதை போகும். 'கரையெல்லாம் செண்பகப்பூவி'ன் விட்ட குறை தொட்ட குறையாக இந்தக் கதையில் ஆரம்பத்தில் புவியரசுவின் கவிதையில் ஆரம்பித்து, மு. மேத்தாவையும் தொட்டு, சேரும் முகவரி சரியில்லை; அனுப்பிய முகவரியும் அதில் இல்லை; ஒரு கடிதம் அனாதையாகி விட்டது' என்கிற புதுக்கவிதையைச் சொல்லி அதை யார் எழுதியது என்று யோசிக்க வைத்து, ராபர்ட் ஃப்ராஸ்ட், எரிக்கா யாங், ஈஸாப் கதைகள், ஜென் கதைகள்,அலைஸ், எலிஸபெதன் டிராமா, Image Processing , கம்ப்யூட்டர் டிஜிட்டைஸர் என்று நிறைய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு இடத்தில், "எனக்கு பேசற விஷம் பெரிசல்ல ஜி.யெஸ்! பேசற முகம், அதனுடைய சலனங்கள், கண்கள், கைவிரல்கள்.. பேசுங்க" என்று சொல்லி அயர வைப்பார்.

அதே மாதிரி தான் 'வண்ணத்துப் பூச்சி வேட்டை'யிலும். கதை என்னவோ ஜில்லுன்னு ராஜபாட்டையில் போகிற சப்ஜெக்ட்தான். வேறு யார் எழுதினும் (அ) வழக்கமான மாவரைப்பாக இருந்திருக்கும் (ஆ) சவசவக்க வைத்து சொதப்பி இருப்பார்கள் (இ) அத்தியாயம் அத்தியாயமாக கட்டுரை எழுதி கதை என்று பெயரிட்டு கொட்டாவி விட வைத்திருப்பார்கள்.. இதுவோ, சுஜாதாவின் கைபட்டு சும்மா சிட்டுப் போல சிறகடிக்கிறது. இதிலும், எலிசா பிஷப், வாலஸ் ஸ்டீவன்ஸ் எமிலி டிக்கின்ஸன், தாவ் தே சிங், டெரக் வால்காட் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லி அதற்கிடையில் ஆத்மாநாமையும், இளம்பிறையையும் நினைவு கொண்டு அவர்களின் துணுக்குக் கவிதைகளைத் தூக்கிப் பிடித்திருப்பார். இந்த புதினத்தில் தான் சுகுமாரனின் 'அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர், நதிக்கு அந்நியமாச்சு. இது நிச்சலனம்- ஆகாயம் அலைபுரளும் அதில். கை நீரைக் கவிழ்த்தேன், போகும் நதியில் எது என் நீர்?' என்னும் கவிதை வரிகளை அங்கலாய்ப்புடன் சொல்லியிருப் பார். அதுமட்டுமில்லை, 'Bend and you will be whole- Curl and you will be straight- Keep empty and you will be filled- Grow old and you will be renewed..' என்னும் லாவ்ட்ஸூ வின் வரிகளை அழகாக அதற்கான இடத்தில் அற்புதமாக எடுத்தாண்டிருப்பார். இதெல்லாம் தமிழுக்குப் புதுசு. இதையெல்லாம் சொல்லாமல் அவரால் கதையை வெறும் கதையாக எழுத முடியாது; தான் படித்து பரவசப்பட்டதை யெல்லாம் சொல்வதற்காகத்தான் கதை-கட்டுரை என்று அந்தந்த நேரத்து மனசில் பட்ட வாகனத்து சவாரி ஏற்று பயணம் மேற்கொண்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. அச்சு அசலான நிஜ சுஜாதா ஒளிந்து கொண்டிருப்பதும் இங்கே தான்! இங்கேயே தான்!..

'அடுத்த நூற்றாண்டு' என்று தலைப்பிட்டு அவர் 'கல்கி'யில் எழுதிய கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சுஜாதா எதையும் மேம்போக்காகத்தான் மேய்வார் என்கிற வாதத்தைத் தவிடு பொடியாக்கக் கூடியவை அவை. டெலிபோன், கம்ப்யூட்டர், பிரபஞ்சம், விண்வெளி காலனி, மனித மனம் என்று ஒரு நீண்ட வட்டம் போட்டுக் கொண்டு அடுத்த நூற்றாண்டுக்குள் அவற்றின் வளர்ச்சிப் போக்கில் என்னன்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அனுமானித்துச் சொல்கிறார். அவர் சொன்னதில் பாதியளவு இப்பொழுதே ஏற்பட்டு விட்டது. கிடைச்ச இடுக்கில் ஆல்வின் டாஃப்ளரின் 'ஃப்யூச்சர் ஷாக்' பற்றியும் 'தர்ட் வேவ்' பற்றியும் குறிப்பிட மறக்க மாட்டார். விவசாயப் புரட்சி, தொழிற்புரட்சி போலவே சிலிக்கான் புரட்சியை மூன்றாவது புரட்சியாகக் கொள்ள வேண்டும் என்பார். இன்றைய அத்தனை டெக்னாலஜி மாறுதல்களுக்கும் காரணமான வித்து, தனிமத்தில் செய்யப்பட்ட 'சிப்' என்னும் சில்லு தான் என்பார். இந்த 'சிப்'பைப் பற்றித் தமிழில் விவரமாக எழுதிய முதல் நபர் சுஜாதாவே. பின்னால், 'கற்றதும் பெற்றதும்' அத்தியாயத்திற்கு அத்தியாயம், தான் கற்றதினால் பெற்ற பயனை படிக்கத் தெரிந்த அத்தனை பேருக்கும் பந்தி போட்டுப் பறிமாறினதாகவே ஆயிற்று.

தமிழில் அவர் எழுத ஆரம்பித்த ஆரம்ப காலங்களிலேயே, 'தினமணி'யின் வெளியீடான 'சிலிக்கான் சில்லுப் புரட்சி' என்னும் நூல், அறிவு யுகத்தின் பல வாசல்களைத் திறந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று. ஏ.என்.சிவராமனின் 'கணக்கன் கட்டுரை' மாதிரி இந்த சி.சி.புரட்சியையும் பின்னாடி தனிப்புத்தமாகப் போட்டார்கள். பெண்பிள்ளைகள் பாண்டி விளையாடுகையில் கட்டங்களில் எடுத்துப் போடும் தகடு மாதிரியான கல்லைச் சில்லு என்று சொல்வார்கள். அந்த சாதாரண சில்லை இந்த அசாதாரண 'சிப்'புக்கு உதாரணமாக்கி அற்புதமான விளக்கங்களுடன் எழுதியிருந்தார் சுஜாதா.

படித்த அல்லது தனக்குப் பரிச்சயப்பட்ட எந்த விஷயத்தையும் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் அவரால் இருக்க முடியாது என்பது அவர் எழுத்துக்களிலிருந்து நன்கு தெரியும். புதுமைப்பித்தனை மனசார ரசித்துக் களித்திருக்கிறார். தொல்காப்பியத்தை ஆழ்ந்து மனதிற்கு இசைந்தபடி படித்திருக்கிறார். புதுக்கவிதைகளா?.. கேட்கவே வேண்டாம். ஆத்மாநாமும், மனுஷ்யபுத்திரனும் அவர் அடிக்கடி எடுத்தாளக்கூடியவர்கள். உண்மையில் இவர் அவர்களைப் பற்றி எழுதியதும் தான், அவர்கள் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்தது. பெரும் பத்திரிகைகளில் தனக்கு எழுதக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக உபயோகித்து பரந்து பட்ட வாசகர்களுக்கு புதுப்பாதை காட்டி தன் கைப்பிடித்துக் கூட்டிப் போனவர் சுஜாதா என்பதை மறப்பதற்கில்லை.

ஆர்.கே. கரன்ஞ்சியாவின் 'பிளிட்ஸ்' ஏட்டில் அந்தக் காலத்தில் கே.ஏ.அப்பாஸ் அவர்கள் 'கடைசிப் பக்கத்தை' எழுதுவார்கள். 'கணையாழி'யில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு சுஜாதா எழுத முற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படியான ஒரு முயற்சியே. சிறுபத்திரிகையில் எழுதத் துவங்கியவருக்கு, பெரும் பத்திரிகைகளின் வாசல் கதவுகள் திறந்ததும், முதலில் தனக்குக் கிடைக்கப்போகும் பெரும் வாசகர் வட்டத்தை எப்படி வளைத்துப் போடலாம் என்கிற எண்ணமே முதலில் தோன்றும். அப்படி வளைத்துப் போட அவர் கையாண்ட வழிமுறைகளே அவர் அல்ல. அந்த வழிமுறைகள் 'ஒருமாதிரி' இருக்கலாம். எதுமாதிரி இருந்தாலும், அதிலேயே அமுங்கிப் போய்விடாமல் அவர் என்ன சாதித்தார் என்பது காலத்தின் கணக்கீடாகப் போய்விட்டது.

சென்னை எம்.ஐ.டி.யில் இஞ்ஜினீயரிங் படித்து பெங்களூரு 'பெல்'லில் வேலையில் சேருவதற்கு முன்னால் மத்திய அரசுப் பணியில் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கழித்தவர் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. 'பெல்'லுக்கு வருவதற்கு முன்னாலேயே எழுத ஆரம்பித்து விட்டார். தி.ஜானகிராமன் சொன்ன 'எழுதறவனுக்கு ஊற்று சுரந்துகிட்டே இருக்கணும்'ங்கற தைச் சொல்லி, 'எழுத்து தொழிலாப் போச்சுன்னா அந்த 'ஊற்று' இல்லாமப் போயிடும்'னு சொன்னவர் அவர்! அதனால் தான் எல்லாத்தையும் தொழில்னு நினைக்காம தான் படிச்சு ரசிச்சதையெல்லாம் பகிர்ந்துக்கற வடிகாலா எழுத கிடைச்ச வாய்ப்பை நினைச்சிருக்கார். அதனால் தான், கட்டுரையோ-கதையோ எதுவானாலும் அப்பப்போ படிச்சதில் தனக்குப் பிடிச்சதையெல்லாம் சாகசமாய் ஊடும் பாவுமாய் தான் எழுதியவற்றில் நுழைத்து படிக்கறவங்களையும் தான் அனுபவிச்ச உணர்வுகளைப் பகிர்ந்துக்க வைச்சிருக்கிறார். அப்படிப் படிச்சதிலும் கதைக்குன்னா எவ்வளவு டோஸ் கலக்க வேண்டும், கட்டுரைக்குன்னா எவ்வளவுன்னு அளவு தெரிஞ்ச கலைஞனாய் அவர் இருந்த அதிசயம் தான் அவரையும் அவர் எழுதினதையும் அவர் படிச்சதையும் தனிதனியாய் பிரிச்சுப் பார்க்க முடியாத ரசவாத வித்தையாய் அமைந்து போய் விட்டது.

எதைச் சொன்னாலும் அதை சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்ற கலையைக் கற்றவர் அவர்; அதுவே அவர் அடைந்த வெற்றியின் சூட்சுமமாகத் தெரிகிறது.





















46 comments:

Nagasubramanian said...

//'கற்றதும் பெற்றதும்' அத்தியாயத்திற்கு அத்தியாயம், தான் கற்றதினால் பெற்ற பயனை படிக்கத் தெரிந்த அத்தனை பேருக்கும் பந்தி போட்டுப் பரிமாறினதாகவே ஆயிற்று.//
உண்மை!

ஸ்ரீராம். said...

ரொம்ப சுவாரஸ்யமாகப் படித்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்த எழுத்தாளர். பின்னாளில் புத்தகங்கள் தனக்கு அனுப்ப வேண்டாம் என்று சொன்னாலும் மற்றவர்கள் எழுத்தை வெளிப்படையாகப் பாராட்டத் தயங்காதவர். வசந்திடம் ஒரு விடலைப் பயன் தனம் இருந்தாலும் கணேஷுக்கு சம அறிவு வைத்தவன் அவன் என்று தோன்றும் வண்ணம் எழுதுவார். கணேஷ் சுஜாதாவின் சீரியஸ் முகமாகவும், வசந்த் அவரின் லைட்டர் சைடாகவும் ஆனால் அதே அறிவு ஜீவித்தனத்துடன் என்று தோன்றும் வண்ணம் செதுக்குவார். போன் காலை பொய் சொல்லி (சுப்ரமணிய பாரதி பேசறேன் என்று சொல்லி கட் பண்ணிடறேன் பாஸ் என்பது போல) தவிர்க்கப் போவதைச் சொல்லும் போது, கணேஷ்'அடே பாவி...அவர் பெரிய கவிஞர்டா...அவர் பெயரைக் கெடுக்கறியே..' என்று சொல்லும்போது வசந்து குறுக்கிட்டு 'மெல்லிய மேகத்திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே னி மேனியழகு மிகைபடக் காணுது வெண்ணிலாவே' என்று சொல்லிப் போவான் என்பார்.

ஸ்ரீராம். said...

சிலிகான் சில்லுப் புரட்சி பற்றி சொன்னீர்கள். தலைமைச் செயலகம் பற்றி சொல்ல விட்டு விட்டீர்களே...அது கூட அவர் எழுத்தின் இன்னொரு வித்தியாசமான முயற்சி.

ஸ்ரீராம். said...

அதே போல வரலாற்றுக் கதைகளில் அவர் கை வண்ணம். காந்தளூர் வசந்த குமாரன் கதையை விடுங்கள். ரத்தம் ஒரே நிறம். கருப்பு சிவப்பு வெளுப்பு என்று தொடங்கி வந்த எதிர்ப்பை மீறி கதை நிறுத்தப் பட்டதும் எழுதுவாரா மாட்டாரா என்று பார்த்த போது எதிர்ப்பாளர்களுக்கு தலைப்பிலேயே பதில் சொல்லி ஆரம்பித்த கதை.

ஸ்ரீராம். said...

முதலில் அவர் கதைகளை ரசிக்கத் தொடங்கினாலும் பின்னர் அவர் கட்டுரைகளை அதிகம் ரசிக்க முடிந்தது. கணையாழியின் கடிசிப் பக்கங்களை எவ்வளவு வேண்டுமானாலும் ரசிக்கலாம். கற்றதும் பெற்றதும் அது போலவே....திடீரென ஒரு இதழில் ஒரு முறை உடம்பு சரியில்லாமல் போய் எழுந்து வந்த பிறகு அவர் சொல்லியிருந்த progressive compromise வாசகர்களை தூக்கி வாரப் போட வைத்தது. ஆழ்வார் பாசுரங்கள் மேல் அவருக்கிருந்த பற்று, அதைப் பற்றி அவ்வப்போதும், கல்கியிலும் அவர் எழுதியவை....அறுபதுகளிலிருந்தே அவர் எழுதிக் கொண்டிருந்தாலும் இரண்டாயிரத்திலும் அவர் எழுத்தில் இருந்த கவர்ச்சி, இளமை குறையாதிருந்ததற்கு அவர் மாறி வரும் கால கட்டங்களுக்கு தகுந்தாற்போலவும் அரவணைத்தும் எழுதியது. சினிமாவிலும் அவர் கை வண்ணம், ஏன் எதற்கு எப்படி விஞ்ஞானக் கேள்வி பதில்.... இன்னொரு சுஜாதா வர மாட்டார்.

Geetha Sambasivam said...

அருமையானதொரு அலசல். இதிலே எதை விட, எதைச் சொல்ல! எனக்கு சுஜாதா அறிமுகம் ஆனது முதல்முதல் கணையாழியின் கடைசிப்பக்கம் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று தான். அதன்பின்னர் அவரது நைலான் கயிறு ஒரு சின்னஞ்சிறு கதையாகக்குமுதத்தில் வந்து பின்னர் அதுவே தொடராகப் பரிமளித்தது. அதன் கையெழுத்துப் பிரதியைப் பார்த்த நினைவு.

எழுத்து நடையை வைத்து சுஜாதாவும், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். இரண்டு பேரும் ஒருத்தர் தானே எனச் சித்தப்பாவிடம் கேட்டதும், அவர் என் கவனிப்பைப் பாராட்டியதும் நினைவில் இருக்கிறது. எனக்கு சுஜாதாவின் நாவல்களில் மிகவும் பாதித்தவை எனில் இருபத்துநாலு ரூபாய் தீவு என்னும் நாவல் தான். இன்றளவும் அந்தக் கதையையும் அதன் ரிப்போர்ட்டர் கதாநாயகனும், அவன் தங்கைக்கு நேர்ந்த கொடுமையும்...........அழுதிருக்கிறேன். :((((

என்ன தான் ஹாஸ்யமாக எழுதினாலும், கவர்ச்சிகரமான வார்த்தைப் பிரயோகங்கள் காணப்பட்டாலும் உள்ளார்ந்த சோகம் இழையோடுவதையும் உணர முடியும். அவர் தந்தையின் கடைசிக்காலத்தைக் குறித்து எழுதி இருந்தவையும் மனதைத் தொட்டது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

"கற்றதும்பெற்றதும்" அவரின் மாஸ்டர் பீஸ் எனலாம். அவர் ஏற்படுத்திய தாக்கம் அன்றும், இன்றும், என்றும் மறையாது; மறக்காது.

Geetha Sambasivam said...

எரர் வருது; கமெண்ட் போயிருக்கா தெரியலை! :( மறுபடி கொடுக்கிறேன்.

Geetha Sambasivam said...

அருமையானதொரு அலசல். இதிலே எதை விட, எதைச் சொல்ல! எனக்கு சுஜாதா அறிமுகம் ஆனது முதல்முதல் கணையாழியின் கடைசிப்பக்கம் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று தான். அதன்பின்னர் அவரது நைலான் கயிறு ஒரு சின்னஞ்சிறு கதையாகக்குமுதத்தில் வந்து பின்னர் அதுவே தொடராகப் பரிமளித்தது. அதன் கையெழுத்துப் பிரதியைப் பார்த்த நினைவு.

எழுத்து நடையை வைத்து சுஜாதாவும், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். இரண்டு பேரும் ஒருத்தர் தானே எனச் சித்தப்பாவிடம் கேட்டதும், அவர் என் கவனிப்பைப் பாராட்டியதும் நினைவில் இருக்கிறது. எனக்கு சுஜாதாவின் நாவல்களில் மிகவும் பாதித்தவை எனில் இருபத்துநாலு ரூபாய் தீவு என்னும் நாவல் தான். இன்றளவும் அந்தக் கதையையும் அதன் ரிப்போர்ட்டர் கதாநாயகனும், அவன் தங்கைக்கு நேர்ந்த கொடுமையும்...........அழுதிருக்கிறேன். :((((

என்ன தான் ஹாஸ்யமாக எழுதினாலும், கவர்ச்சிகரமான வார்த்தைப் பிரயோகங்கள் காணப்பட்டாலும் உள்ளார்ந்த சோகம் இழையோடுவதையும் உணர முடியும். அவர் தந்தையின் கடைசிக்காலத்தைக் குறித்து எழுதி இருந்தவையும் மனதைத் தொட்டது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

"கற்றதும்பெற்றதும்" அவரின் மாஸ்டர் பீஸ் எனலாம். அவர் ஏற்படுத்திய தாக்கம் அன்றும், இன்றும், என்றும் மறையாது; மறக்காது.

ராம்ஜி_யாஹூ said...

ஒரு முழுமையான அலசல், நல்ல ஞாபக சக்தி
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

Kavinaya said...

நிறைய புத்தகங்கள் படித்த காலத்தில் சுஜாதா அவர்களின் எழுத்துகள்தான் அதிகம் படித்தவை என்று நினைக்கிறேன். பிரமிப்பூட்டும் எழுத்தாளர்/மனிதர். அவரைப் பற்றி, மிக அழகாக, நுணுக்கமாக, ரசனையுடன் தந்திருக்கிறீர்கள். அனுபவித்து வாசித்தேன். மிக்க நன்றி ஜீவி ஐயா.

rajasundararajan said...

சுஜாதாவைப் பற்றி எழுதப்பட்டவற்றிலேயே மிகச் சரியான கணிப்புள்ள எழுத்து, நான் வாசித்த வரையில், இதுதான்.

//கட்டுரையோ-கதையோ எதுவானாலும் அப்பப்போ படிச்சதில் தனக்குப் பிடிச்சதையெல்லாம் சாகசமாய் ஊடும் பாவுமாய் தான் எழுதியவற்றில் நுழைத்து படிக்கறவங்களையும் தான் அனுபவிச்ச உணர்வுகளைப் பகிர்ந்துக்க வைச்சிருக்கிறார். அப்படிப் படிச்சதிலும் கதைக்குன்னா எவ்வளவு டோஸ் கலக்க வேண்டும், கட்டுரைக்குன்னா எவ்வளவுன்னு அளவு தெரிஞ்ச கலைஞனாய் அவர் இருந்த அதிசயம் தான் அவரையும் அவர் எழுதினதையும் அவர் படிச்சதையும் தனிதனியாய் பிரிச்சுப் பார்க்க முடியாத ரசவாத வித்தையாய் அமைந்து போய் விட்டது.//

இதில் தெரிகிறது உங்கள் ஈடுபாடு. இவ்வளவு நீண்ட கட்டுரை எழுதிய நீங்கள் அவருடைய சிறுகதைகளைப் பற்றி இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம். தன் நாவல்களால்/ கட்டுரைகளால் அல்ல சிறுகதைகளால்தான் அவர் இலக்கிய பீடம் ஏறுகிறார். சிறுகதை ஆசிரியராக அவர் கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் ஆகியோரைத் தொட்டடுத்து நிற்பவர்.

சுஜாதா தமிழில் ஒரு trend setter. அதாவது அவரைப் பின்பற்றிப் பலர் எழுத விழையும் விளைவுக்கு வித்தானவர். என்றால், அவர் ஓர் இலக்கணகர்த்தா - இல்லையா?

('உயிர்மை'யில் இக் கட்டுரையை வெளியிடச் செய்யலாமே? மனுஷ்யபுத்திரன் செய்வார் என்னும் உணர்வுள்ளவனாக இது.)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீண்டும் ஒருமுறை நிறுத்தி நிதானமாகப் படித்து விட்டு வருகிறேன். பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள்.vgk

sathya sundaram said...

அருமையானதொரு அலசல். இன்னொரு சுஜாதா கிடைக்கமாட்டாரா என மனமின்னும் ஏங்குகிறது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டுமென பாரதி சொன்னதை செயல்படுத்திதில் முழுப்பங்கையும் முடித்துக்காட்டியுள்ளார் என்று சொல்லலாம். 12 ஆம் வகுப்பு படிக்கும் போது படிக்காமல் விட்ட எலக்ட்ரானியல் பாடத்தை படிக்கும் ஆர்வம் சுஜாதாவால் வந்தது. பிறகு இயற்பியல் படிக்கும் ஆர்வம் வந்து முதுகலை வரைக்கும் அவராலே படித்தேன் எனலாம். புதிய அறிவியல் வார்த்தைகளை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என கூறியிருப்பார். தமிழ் இலக்கியம் சமூகம் அறிவியல் அனைத்திலும் சிறந்தவர் என அறியப்பட்டவர். வைரங்கள் வான்க்ண்டேன் திசைகண்டேன் கடவுள் வந்திருந்தார் மீண்டும் ஜீனோ உள்ளடங்கிய குறைந்த நூல்கள் எனக்குப்பிடித்தவை. எழுத்தாளர் சுபா கூட தன் எழுத்துகளில் கரையெல்லாம் செண்பகப்பு பற்றி கூறியிருப்பார். ஆனால் புத்தகத்தில் படிப்பதற்கும் படத்தில் பார்ப்பதற்கும் உள்ள கற்பனையிலுள்ள பாதிப்பை அவரே விளக்கி இருப்பார். அலட்டாத எழுத்து . கர்வமில்லாதவர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். இதைப்போன்ற எழுததாளர் ஏதேனும் உளரா? சொன்னால் அவரை தொடராலாம் என்றுதான்.

sathya sundaram said...

அருமையானதொரு அலசல். இன்னொரு சுஜாதா கிடைக்கமாட்டாரா என மனமின்னும் ஏங்குகிறது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டுமென பாரதி சொன்னதை செயல்படுத்திதில் முழுப்பங்கையும் முடித்துக்காட்டியுள்ளார் என்று சொல்லலாம். 12 ஆம் வகுப்பு படிக்கும் போது படிக்காமல் விட்ட எலக்ட்ரானியல் பாடத்தை படிக்கும் ஆர்வம் சுஜாதாவால் வந்தது. பிறகு இயற்பியல் படிக்கும் ஆர்வம் வந்து முதுகலை வரைக்கும் அவராலே படித்தேன் எனலாம். புதிய அறிவியல் வார்த்தைகளை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என கூறியிருப்பார். தமிழ் இலக்கியம் சமூகம் அறிவியல் அனைத்திலும் சிறந்தவர் என அறியப்பட்டவர். வைரங்கள் வான்க்ண்டேன் திசைகண்டேன் கடவுள் வந்திருந்தார் மீண்டும் ஜீனோ உள்ளடங்கிய குறைந்த நூல்கள் எனக்குப்பிடித்தவை. எழுத்தாளர் சுபா கூட தன் எழுத்துகளில் கரையெல்லாம் செண்பகப்பு பற்றி கூறியிருப்பார். ஆனால் புத்தகத்தில் படிப்பதற்கும் படத்தில் பார்ப்பதற்கும் உள்ள கற்பனையிலுள்ள பாதிப்பை அவரே விளக்கி இருப்பார். அலட்டாத எழுத்து . கர்வமில்லாதவர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். இதைப்போன்ற எழுததாளர் ஏதேனும் உளரா? சொன்னால் அவரை தொடராலாம் என்றுதான்.

ஜீவி said...

@ Nagasubramanian

வாருங்கள், நாகசுப்ரமணியன்!

'கற்றதனால் ஆய பயனென் கொல்?' என்று கேள்வியாகக் கேட்டு, பதிலை யும் அந்த வள்ளுவரே சொல்வார்.

கற்றது பெரிசில்லை; கற்றதைப் பெற்றதும் பெரிசில்லை; கற்றுப் பெற்றதைப் பிறரிடமும் பகிர்ந்து மகிழ்ந்தலே பெரிசு என்று அருமை சுஜாதாவினால் தெரிந்து கொண்டோம்.

உண்மை என்று உரக்கச் சொல்லிய தங்கள் உள்ளத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

புத்தக மலையே வீட்டில் குவிந்ததும், அனுப்பி விட்டு அதைப் பற்றி நீங்கள் எதிலும் குறிப்பிடவில்லையே என்கிற 'நை நை' பொறுக்க முடியாது அவரால் சமாளிக்கமுடியாத நிலையில் தான் அருள் கூர்ந்து அனுப்ப வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்தார்.

கணேஷ்-வசந்தை நன்றாக மட்டுமில்லை கூர்மையாகவும் ரசித்திருக்கிறீர்கள்! தலைமைச் செயலகம் மட்டும் என்றால் நானோ டெக்னாலஜி என்ன பாவம் செய்தது?
இன்னும் நிறைய நிறைய.. எழுத எழுத அது பாட்டுக்க போய்க் கொண்டே இருந்தது! மூன்று நான்கு தடவைகள், சேமிக்க முடியாதென்றும், வலையேற்ற முடியாது என்றும் அறிவிப்பு வந்தும் அதையெல்லாம் அலட்சியம் செய்து தொடர்ந்தேன்.

தனது பால்ய வயது நினைவுகளை அவர் சேமித்த ஸ்ரீரங்கக் கதைகளைக் கூட இவர்கள் ஒரு கிக்குக்காக ஸ்ரீரங்க தேவதைகளாக்கி விட்டார்கள்!

குமுதம் 'பக்தி'யில் 'பிரம்ம சூத்திரம்- ஓர் எளிய அறிமுகம்' என்று எழுதினார் அல்லவா?.. அந்த சமயத்து நினைவுகளை, தனிப் பதிவாகத் தான் போடவேண்டும். வாய்ப்பு வரும் பொழுது செய்கிறேன்.

தங்களின் தொடர் பின்னூட்டம் அவரின் மீது நீங்கள் கொண்டிருந்த அன்பைச் சொல்கிறது. மிக்க நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

அந்த சோகத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். அந்த சோகத்தை மறைத்து திரை போட்ட மாதிரி அவரின் எழுத்து அமைந்திருப்பதும் உள்ளீடாகத் தெரியும். அது தான் அவரின் குறிப்பிட்ட சில சிறுகதைளை உன்னதத்திற்கு இட்டுச் சென்றது என்கிற நினைப்பு மேலோங்கும்.

ஆமாம், அந்த 24 ரூபாய் தீவைப் பற்றி நானும் சொல்லியிருக்க வேண்டும். அந்த வயதில் என்னை மிகவும் பாதித்தக் கதை அது!

வருகைக்கு மிக்க நன்றி, கீதாம்மா..

ஜீவி said...

@ ராம்ஜி_யாஹூ

சில விஷயங்கள் அப்படியே நினைவில் பதிந்து போய் விடுகின்றன. அவ்வளவு தான். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, ராம்ஜி! அடிக்கடி வரவேண்டும்.

ஜீவி said...

@ கவிநயா

தங்கள் ரசனைக்கும் மனத்திற்குப் பிடித்ததான வாசிப்புக்கும் மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

@ Rajasundararajan

நான் என்ன உணர்ந்து எழுதினேனோ, அதையே நீங்களும் உணர்ந்திருப்பதி னால், எப்படி இருக்க வேண்டுமென்று எண்ணி எழுதினேனோ, அப்படியே அதே எண்ண வரிகளைக் கொண்டு கணித்து விட்டீர்கள்!

அவர் சிறுகதைகளைப் பற்றி எடுத்துக் காட்டுகளுடன் குறிப்பிட்டிருக்க வேண்டும். அது குறையாகத் தான் தெரிகிறது. பெரும்பாலும் அவரின் தொடர்கதைகள் கூட பல ஒன் லைன் கதைகளாததால், சிறுகதைகளில் அதைப் பளிச்சென்று சொல்லி மிளிர்வது அவருக்குக் கைவந்த கலையாக இருந்தது. அந்த சின்னச் சிறுகதைகளிலும், பு.பி. மாதிரி யதார்த்தத்தின் ஜீவனை அப்படியே பிரதிபலித்தது, சொல்லவந்ததை வழக்கம் போல அழகாகச் சொன்னது, மனித மனத்தின் உணர்வுகளை மனம் குழைய விண்டு வைத்தது போன்ற + பாயிண்ட்டுகளில் அவர் ஈடு இணையற்றுத் திகழ்ந்தார்.

இன்னொன்று. எங்கே ஆரம்பிப்பது- எங்கே முடிப்பது, அனாவசிய வார்த்தைகளைக் குறைத்து சொல்ல வந்ததை நோக்கி விறுவிறுவென்று முன்னேறுவது என்று எல்லா விஷயங்களிலும் அசர வைக்கும் ஒரு பாணியை ரொம்ப இயல்பாக அவர் கொண்டிருந்தது பிரமிக்க வைக்கிறது.

தங்கள் வருகைக்கும் கறாரான கணிப்பிற்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, ஐயா!

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

வாருங்கள், கோபு சார்!

நீண்ட பதிவாகையில் மனதில் வாங்கிக் கொண்டு படித்துப் பார்க்க நேரம் தான் ஆகும். நிதானமாக வாருங்கள். அவசரமில்லை.

வந்து சொன்னமைக்கு நன்றி.

ஜீவி said...

@ Satya Sundaram

தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

தாங்கள் சொல்லியிருக்கும் செய்திகள் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. அவர் எழுத்துக்களைப் படித்து அதனால் விளைந்த ஆர்வம் கிரியா ஊக்கியாக உங்களில் செயல்பட்டு எவ்வளவு நன்மைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிய மிகுந்த சந்தோஷம்.

'திசை கண்டேன் வான் கண்டேன்' அல்லவோ? எந்தக் காலத்திலோ படித்தது. தேசலாக நினைவிருக்கிறது.
அன்பின் வலிமையே அலாதிதான். இப்பூவுலகம் தாண்டி வேற்றுகிரக வாசிகளிடம் அந்த அன்பின் ஆகர்ஷணம் படிந்திருப்பின்.. என்று யோசிக்கும் கதை என்று நினைவு.

கதைக்கு சுஜாதா தேர்வு செய்யும் தலைப்புகள் எப்பொழுதுமே அட்டகாசம் தான். இந்தக் கதைக்கான தலைப்பாகிப் போன கவிதை வரி--

பாவேந்தர் பாரதிதாசனின் அந்தக் கவிதை வரிகளை மறக்கவே முடியாது:

திசை கண்டேன் வான் கண்டேன் உட்புறத்துச்
செரிந்தவெலாம் பலப்பலவும் கண்டேன் யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன் மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல்லின்பம் கண்டேன்

அவரையும் தாண்டி அவர் போல் நிறைய படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பவராக சுஜாதா தெரிகிறார்.

தங்கள் வருகைக்கும் பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கும் மிக்க நன்றி,

G.M Balasubramaniam said...

உங்களைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன் ஜீவி. நானும் சுஜாதாவின் ரசிகன். அவர் எழுதியது நிறையவே வாசித்திருக்கிறேன். ஆனாலும் உங்களை மாதிரி அனுபவித்து நினைவு படுத்த முடிவதில்லை. உங்களை மாதிரி ரசிகர்கள்தான் எழுத்தாளனின் பலம். அதனால்தான் , நினைவிருக்கிறதா , உங்களிடம் என் சிறு கதையை விமரிசிக்க வேண்டினேன். உங்கள் குப்புசாமி கதையை வெகுவாகவே ரசித்தேன். உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு டானிக் மாதிரி. வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ G.M. Balasubramanian

ஜி.எம்.பி. சார்! தங்கள் வருகைக்கும் அன்பான பகிர்ந்தலுக்கும் மிக்க நன்றி.
முற்றிலும் நினைவுகளிலிருந்து திரட்டுவதில்லை. எந்த எந்த எழுத்தாளர்களைப் பற்றி எழுதுகிறோமோ அவர்களது சில நூல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறேன். அதனால் தான் அந்த வயதில் படித்த அந்த வயது ரசனையைத் தாண்டியதான இந்த வயது ரசனையில் தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியதைக் கொண்டு எழுத முடிகிறது.

ஆனால் நிஜ சுஜாதாவைப் பார்த்த இந்தப் பார்வை, தமிழுக்குப் புதுசு.
இப்பொழுது மீண்டும் அவரைப் படிக்கையில், அவரின் மனசைப் படிக்க முடிந்தது. அவருக்கு உரிய இலக்கிய அந்தஸ்த்தைக் கொடுக்க உள்ளம் துடித்தது. அதன் அடிப்படையிலேயே இப்படி ஒரு பார்வை அமைந்தது.

தங்களின் விருப்பப்படி உங்களின் கதையையும் விமரிசிக்க முயற்சித்தது நினைவு இருக்கிறது.

ஓ! அந்த குப்புசாமி கதை! நிஜத்திற்கு இருக்கும் பிடிப்பே அலாதி தான். உண்மை நிகழ்வு அதுவாதலால் ஒன்றிய நினைவில் எழுத முடிந்தது. ஆமாம், ராமசாமியை மறந்தாலும் குப்புசாமி மறக்கவே முடியாத நபர் தான்.

தங்கள் அன்பான வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி, ஐயா!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கு என்னவோ அவரது ‘ நில்லுங்கள் ராஜாவே’ தான் பிடிக்கும்!

ஜீவி said...

@ 'ஆரண்ய நிவாஸ்' ஆர்.ஆர்.மூர்த்தி

இது கூட தொடரின் தலைப்பு அட்டகாசம், இல்லையா? அவர் என்னைக்குமே தலைப்பு வைப்பதில் சோடை போனதில்லை. முதலில் அதிகம் யோசித்து தலைப்பு; அதற்கப்புறம் இருக்கவே இருக்கு; கைவந்த கதை சொல்லல். இல்லையா?

தங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!

BalHanuman said...

அன்புள்ள ஜீவி,

மிக அருமையான அலசல். அவருடைய சிறுகதைகள் பற்றியும் அவசியம் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.

உங்கள் அனுமதியுடன் இதை எனது தளத்தில் மறுபதிவு செய்ய விரும்புகிறேன்.

அவரது மிகப் பிரபலமான 'என் இனிய இயந்திரா' வில் இருந்து...

2020 களில் நடக்கும் கதையை 1980 களில் எழுதியிருக்கிறார். 2022 இல் எங்கும் இயந்திர மயம். கதை என்ன கதை? சுஜாதாவின் கற்பனையும் வார்த்தைகளும் தான் விசேஷம். சிபி-நிலா ஒரு இளம் தம்பதி. இவர்கள் வாழும் அப்போதைய இந்தியா, ஜீவா என்னும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் உள்ளது. ரவி, மனோ என்று மற்றொரு அணி. நாட்டின் அதிகாரத்துடன் விளையாடும் அணி. ரவியுடன் இருந்த ஜீனோ என்ற இயந்திர நாய், நிலாவுடன் இணைந்து போடும் ஆட்டம்தான், இக்கதையின் ஸ்பெஷல். இந்த கதையை, கதை எழுதிய காலக்கட்டத்தில் படித்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் கூடிய சுவாரஸ்யமாக, சரியாக இருந்திருக்கும். இப்போது படித்தால் கிடைப்பது, இன்னொரு வகையான அனுபவம்.

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சுஜாதா, இரு எழுத்தில் பெயர் வைத்துள்ளார். நாயை விட்டே ஷெல்லியின் கவிதையை பேச விடுகிறார். வருங்காலத்தில் என்ன மாதிரியான இயந்திரங்கள் இருக்கும், மனித மனம் எப்படி மாறுப்பட்டிருக்கும் என தனக்கே உரிய பாணியில் கதையெங்கும் தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்.

——

நிலா சிபிக்கு போன் செய்ய போகிறாள்.

“பேசுபவரைப் பார்க்கவும் வேண்டுமெனில் ஒரு ரூபாய் அதிகமாகப் போடவும்” என்றது குரல், இயந்திர முட்டாளாக.

‘என் இனிய இயந்திரா… நிச்சயம் உனக்கு நான் பணிந்து ஒரு ரூபாய் போடத்தான் போகிறேன். இன்று என் கணவனிடம் அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவன் முகம் மாறுவதைப் பார்த்தே ஆகவேண்டும்.’

“சிபி! நிலா பேசறேன்.”

“நிலா! எங்கருக்கே?”

“மால் பக்கத்தில் பூத்தில. சிபி, ஒரு சுபச் செய்தி!”

——

எட்டாவது தெருவில் டிக்கெட் வாங்கிக் கொண்டு ‘மானோ’ பிடித்தாள். அதன் காந்தத் தண்டு காற்று மெத்தையில் வழுக்கிக் கொண்டு செல்ல, ‘சின்த்’ இயந்திரக் குரலில்-பல்லாவரம், மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி என்று அறிவிக்க, பத்தாவதில் இறங்கி பூமியடி ரயில் பிடித்து எட்டாவது குறுக்குத் தெருவில் இறங்கிக் கொண்டாள். சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு வாரத்துக்கு உண்டான காய்கறி வகைகள் ஆர்டர் செய்தாள்.

——

ஜீனோ மேசை விளக்கைத் தன்பால் பொருத்திக் கொண்டு கொட்டாவி விட்டது நிலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்தைப் படித்தது போல் ஜீனோ, “கொட்டாவி விடுவது என்னுடைய மேம்போக்கான செயல்களில் ஒன்று. நிஜ நாய் போல இருக்கவேண்டும் என்று என் கம்பேனிக்காரர்கள் கற்றுத் தந்த அசிங்கம்!”.

——-

“டில்லிக்கு எப்படிப் போவது?”

“அரை மணிக்கு ஒரு தரம் ஷட்டில் விமானம் இருக்கிறது. வார நாட்களில் போனால் பாதி விலைதான் டிக்கெட். காற்று சுவாச பிளேனில் அரை மணி பயணம்!” என்றது ஜீனோ.

——-

”ஜீனோ, இது என்ன வம்பு? வேண்டாம்! உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்.”

“என் மெமரியைக் காப்பி பண்ணிக் கொண்டு விட்டால் சுட்டுப் பொசுக்கினாலும் இன்னொரு மாடல் வாங்கிக் கொள்ளலாமில்லையா? எனக்கு என்ன உயிரா இருக்கிறது?”

——-

“ஐயோ! இது சிபி இல்லை. இது யார்? இது யார்?” என்று நிலா புலம்ப,

“’யார்’ இல்லை, இது அஃறிணை” என்ற ஜீனோ, “எனக்கு இருக்கிற படிப்பறிவுகூடக் கிடையாது, மனித சாதியில்லை. என்ன சக யந்திரமே, உனக்கு சித்தர் பாடல் தெரியுமா?”

——-

நாய் தேநீரை சாஸரில் ஊற்றி ‘ப்ளக் ப்ளக்’ என்று நக்கிக் குடித்தது. “இதில் உள்ள க்ளுகோஸ் மட்டும்தான் என் ஸெல்லுக்கு உபயோகம்! மற்றவை யாவும் விரயம். ரவி, தித்திப்பு என்றால் என்ன?”

“உன் நாக்குக்கு அது தெரிவதில்லையா ஜீனோ?”

“என் நாக்கில் ஒரு தெர்மோகப்பிள் மட்டும்தான் இருக்கிறது. ருசி என்பதே எங்கள் மாடலுக்குக் கிடையாது. நானூறு கொடுத்தால் நாக்கு மாற்றித் தருகிறார்கள்.”

“நாக்கு போல வேறு அவயவங்கள்?”

“ஷட் அப்!” என்றது ஜீனோ.

——–

ஜீனோ போன்ற சிறிய இயந்திர நாயைக் கைது செய்ய மூன்று காவலர்கள் அதிகப்படிதான். மேலும், சக்தி வாய்ந்த லேசர் துப்பாக்கிகளை ‘பயம்’, ‘மரணம்’ போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமில்லாத அந்த மெஷின் ஜென்மத்திடம் காட்டுவது அபத்தமாக இருந்தது.

——-

“பாட்டரி இணைப்பை எடுத்து விட்டால் போதுமே… நான் செத்துப் போய் விடுவேனே? புறப்படு. தப்பித்து விடலாம்” என்றது ஜீனோ, தீர்மானத்துடன்.

”ஏன் ஜீனோ?”

“பயம்! அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது. என் ஞாபகம், என் செயல்பாடுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டால் நான் என்கிற நான் என்ன ஆவேன்?”

”ஜீனோ, நீ மனிதர்கள் போல் சிந்திக்கத் துவங்கி விட்டாய்.”

——

“ஜீனோ, வர வர நீ பேசுவது எதுவுமே புரியவில்லை எனக்கு.”

“மனுஷத்தன்மையின் அடையாளம்!”

BalHanuman said...

சுஜாதாவின் கதைகள் சொல்லப்பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மனநிலையை அளித்தன.

வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம்.

வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றோரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ், வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலீஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார்.

ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the Obvious என்பதே கணேஷின் அடிப்படையாக இருக்கும்.

ஜீவி said...

@ Siliconshelf

அன்புள்ள ஆர்வி,

இன்னொரு தடவை படித்துப் பாருங்கள்.
இதுவரை சுஜாதாவைப் பற்றி எழுதியிருப்போர்களின் எழுத்துக்களையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். மறுவாசிப்பில் இன்னும் புதிய விஷயங்கள் புலப்படும். BalHanuman-பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் பொழுது இன்னும் விவரமாகச் சொல்கிறேன்.

அன்புடன்,
ஜீவி

BalHanuman said...

சுஜாதா பதில்கள் – பாகம் 1 (உயிர்மை பதிப்பகம்)

பஞ்சவர்ணம், போளூர்.
நிறைய எழுதுவது — அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?

நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.

வெங்கடாசலம்.
நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து ஃபீல்டில் இருக்க முடிகிறது ?
தொடர்ந்து படிப்பதால்.

ஆர். கே. குமாரி, சென்னை.
சுஜாதாவின் (ரங்கராஜன் இல்லை ஸார்!) இளமையின் ரகசியம் என்ன ?

யாண்டு பலவாகியும் நரையிலன் ஆகுதல் மீண்டும் மீண்டும் dye அடித்துக்கொள்வதால்.

ஜெ. ஜானகிசந்திரன், தம்மம்பட்டி.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?

கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.

ஆவடி த, தரணிதரன், சென்னை.
தங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் ?

விடா முயற்சி என்கிற என் நண்பர்.

ஆர். பி. ஜெயச்சந்திரன், திருச்சி.
ஒரு மனிதன் எந்த வயது வரை இளைஞனாக வாழ முடியும் ?

இறக்கும் வரை.

எழிலரசி, கோவில்பட்டி.
வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே மிக முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

கற்றது போதாது என்பதை.

டி. சுப்பிரமணியன், மேலையூர்.
இலக்கியத் துறையில் உங்களது இமாலய இலக்கு எது ?

கடைசி வரை எழுதிக் கொண்டிருப்பது.

விவேக்.
எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் ?

முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.

கே. அரவிந்த்.
நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்க பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?

1962 -லிருந்து எழுதி வருகிறேனே, இந்தத் தகுதிகூட இல்லையேல் வெட்கம்.

கல்யாண்.
உங்கள் மூளை இன்ஷூர் செய்யப்பட்டுவிட்டதா ?

இல்லை. அதை மதிப்பிடுவதில் சிக்கல்.

ஸ்ரீப்ரியா.
உங்களை ஒரு க்ளோன் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன். ஒத்துழைப்பீர்களா ?

எந்த விதத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிய வேண்டும்.

ஸ்ரீராம்.
ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள், எத்தனை மணி நேரம் படிக்கிறீர்கள் ?
நான்கு மணி நேரம். ஒரு மணி நேரம்.

ஷீலாமதி.
உங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத ஆசை! அனுமதிப்பீர்களா ?

என் எழுத்தைப் பற்றி எழுதுவதானால் சம்மதம். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.

BalHanuman said...

.. எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல – திரும்பத் திரும்ப எழுதுவது – மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது…. மீண்டும் எழுதுவது.

சுஜாதா, சின்னச் சின்னக் கட்டுரைகள், 1985

BalHanuman said...

சுஜாதா சொன்ன இரண்டு முக்கியமான விஷயங்கள்.

1. நிறைய படிக்கவேண்டும். படிப்பது என்றால் நாம் எழுதியது, அடுத்தவர் எழுதியது என்றெல்லாம் வகை தொகையில்லாமல் படிக்கவேண்டும்

2. காட்டமான விமர்சனங்களுக்கான பதிலடியை படைப்புகளின் மூலமாகத்தான் சொல்லவேண்டும்; பகிரங்கமாக அல்ல.

BalHanuman said...

“என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டியிருக்கிறாள். “ஆ” கதையைப் படித்துவிட்டு, “என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்” என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!“

சுஜாதா ஒரு பேட்டியில்…….

BalHanuman said...

எழுத்தில் எந்த அளவுக்கு அந்தரங்க விஷயங்கள் கலக்க வேண்டும்; எந்த விகிதத்தில் உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும் என்பது பற்றி கருத்துக்கள் வேறுபடுகின்றன. என்னைக்கேட்டால் முழு உண்மையை அப்படியே எழுதக்கூடாது. எப்படியும் நான் எழுத மாட்டேன். தின வாழ்க்கையில் உள்ள சம்பவங்கள் இலக்கிய அந்தஸ்து பெற, அவற்றில் ஒரு காலம் கடந்த உண்மை பொதிந்திருக்கவேண்டும். இல்லையேல் அது ஒரு சாதாரண சிறுவனின் நாட்குறிப்பு போல, காலை எழுந்தேன், பல் தேய்த்தேன், குப்பை பொறுக்கினேன் என்று அற்பமாக முடிந்துவிடும். முழுக்க முழுக்க கற்பனையாகவும் எழுத முடியாது. அப்படி எழுதினால் அது கதையல்ல fairy tale, fantasy. உண்மையும் பொய்யும் கலக்க வேண்டும். இந்த கலக்கல், ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் ஒரு கடையில் மட்டும் கிடைக்கும் நன்னாரி சர்பத் போல தனிப்பட்டது. இந்த விகிதாச்சாரம் ஆளுக்காள் மாறுபடுவதைக் கவனிக்க, கோபிகிருஷ்ணன், தி. ஜானகிராமன், ஆதவன் இம்மூவரின் கதைகளைப் படித்துப் பாருங்கள்.

சுஜாதா – பார்வை 360

அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.

ஜீவி said...

@ BalHanuman

சுஜாதாவைப் பற்றி, அவர் எழுத்தைப் பற்றி, அவர் எழுத்தைப் பற்றி அவர்-- என்று நிறையவே விவரங்களை கொடுத்திருக்கிறீர்கள்.அவர் எழுத்து உங்களை ஆகர்ஷித்த வேகம் புரிகிறது. பின்னூட்டப் பெட்டியையே இது ஆக்கிரமித்துக் கொண்டு விடுமே என்று முதலில் நினைத்தாலும், அவர் பற்றிய சுவையான செய்திகள் ஆகையால் அவரைப் பற்றியதான ஒரு கட்டுரையிலேயே ஒரு பிற்சேர்க்கையாக இருக்கட்டுமென்று நினைத்துச் சேர்த்தேன்.

கேரளம் மாதிரி இல்லை, தமிழகம். எழுத்து ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பெரிய வாசகர் வட்டத்தைப் பெறுவது என்பது குதிரைக் கொம்பான விஷயம் இங்கு.
அதற்கு சில பக்கத்துணைகள் வேண்டும். சுஜாதாவுக்கு அப்படி சினிமா உண்டெனினும், அவரது அச்சடித்த எழுத்து தான் அங்கேயும் டாமினேட் பண்ணீயிருக்கிறது; பல பிரபலங்களைக் கவர்ந்து அவரது ரசிகராக்கியது. அங்கு கற்றதையும் பெற்றதையும் பற்றி அவரே நிறையச் சொல்லி விட்டார்.

எப்படி சுற்றி சுற்றி வந்தாலும் சுஜாதா பிர்மாண்டமாக தமிழ் எழுத்துலக்கில் நின்றதற்கு அடித்தளம் அவர் எழுத்தின் வசீகரம் ஒன்றே. அதில் ஒரு புதுமை இருந்தது. எழுதும் முறைகளில் புதுமையாக சில போக்குகளை அவர் ரொம்ப சாதாரணமாகப் புகுத்தியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அது அவரை அடையாளப்படுத்தியதைத் தாண்டி புத்தகம் படிக்கும் வாசகர் வட்டத்தில் அவருக்கென்று ஒரு அடையாளமாகி பரந்துபட்ட வாசகர்களை நன்றாக இருக்கிறதே என்று ரசிக்க வைத்திருக்கிறது; யார் இவர் என்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இன்றைக்கும் 'க்ளிக்'கினான் என்று எழுதினால் எனக்கு சுஜாதா நினைவு வரும்.

பெரும்பாலும் துப்பறியும் கதைகளாகப் போனது அதிக வாசகர்களை கவர்ந்தது எனினும் இலக்கிய சன்னிதானத்தில் அவறிற்கு இருக்கும் மதிப்பு என்னவோ அதுவே அவருக்கும் ஆக முன்னிற்கும். அதற்கு அவரின் பிரிய வாசகர்கள் விட்டு விடலாகாது. திரு. ராஜ சுந்தரராஜன் குறிப்பிட்டிருப்பது உண்மை. அவரின் பிரமாதமான சிறுகதைகள் பல உண்டு. அவற்றில் இருக்கும் அன்னியப்படாத இயல்புத்தன்மையும், தான் நினைப்பதை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டிய பெருமையும், சாதாரணமாக நாம் பார்க்கிற காட்சிகளில் இருக்கிற சத்தியத்தை எளிமையாக, மிக இயல்பாக அவர் சொன்னதை மறப்பதிற்கில்லை. அவர் சிறுகதைகளில் அவர் வாழ்கிறார் என்பது உண்மைதான். பூதுமைப் பித்தனின் சிறுகதைகளை இப்பவும் நினைத்துக் கொள்கிற மாதிரி, எதிர்காலத்தில் இவரின் சிறுகதை களும் பேசப்படும் என்பது காலத்தின் தீர்ப்பாக இருக்கும்.

அவருக்கே கைவந்த சிறப்புகளான ஜெனோ மாதிரியான சப்ஜெக்ட்டுகள்
எதிர்கால உண்மைகளானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாலைந்து தலைமுறை தாண்டி நிகழப் போகிறவை, இப்பொழுதிய பார்வைக்கு மறைத்துக் கொண்டு மாயமாக இருக்கிறது எனினும் அந்த எதிர்கால வரலாற்றின் வித்து இப்பொழுதே கண்ணுக்குத் தட்டுப்படுவதும் உண்மை. விஞ்ஞான
விஷயங்களில் தனக்கிருந்த ஆளுமையையும், பிரியத்தையும், பிடித்தத்தையும் கதைகளுக்குள் சிறைபிடித்து அவர் கொண்டு வந்திருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

ஒன்று தெரிகிறது. கணேஷ்-வசந்த் சமாச்சாரங்கள், சில அங்கத கூற்றுகள், விரசமான வார்த்தைப் பிரயோகங்கள் இவையெல்லாம் குறுக்கே வந்து அவருக்கான இலக்கிய அந்தஸ்தை தட்டிப் பறித்திடலாகாது. எதிர்காலத்திலும் தேர்ந்து நிற்கக்கூடிய அவரது சிறுகதைகள், குறுநாவல்களில் காணப்படும் அற்புதங்கள் பேசப்பட வேண்டும். சுஜாதா வாசகர்கள் அவற்றை பயிலவும் பேசவும் வேண்டும். இலக்கிய தளங்களில் அவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

மிகவும் நீண்டுவிட்டது. இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

தங்கள் ஆர்வத்திற்கும், அன்பான தொடர் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி, BalHanuman.

R. Jagannathan said...

பாலஹநுமான் அவர்கள் மூலமாக உங்களின் இந்த ப்ளாகை முழுதும் படித்தேன், எல்லா பின்னூட்டங்கள், அவற்றிற்கு உங்கள் மறுமொழி உட்பட. நானும் தமிழ் படித்ததன் ஒரே பலன், சுஜாதா, கல்கி, தேவன் போன்றோரை வாசிக்கும் வரம் கிடைத்ததும், உங்களைப் போன்ற அனுபவித்து எழுதும் விமர்சகர்களைப் படிப்பதும் தான். சுஜாதாவின் எழுத்துக்கள் வசீகரம் என்றால், உங்கள் / மற்றோரின் கருத்துக்கள், விமர்சனங்கள் தெரிவிக்கும் ஆழ்ந்த வாசிப்பும் அதை தெளிவாகக் கூறும் திறமையும் வியக்க வைக்கின்றன. சகலருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும். - ஜெகன்னாதன்

ஜீவி said...

@ R. Jagannathan

ரொம்ப நன்றி ஜெகன்நாதன் சார்!
ஒரு ரசனை மனோபாவதுடன் அத்தனையையும் படித்துக் களித்ததற்கு மிக்க நன்றி, சார்!

எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் ஆக மூன்று வகைத்தாருக்குமான மையப்புள்ளி ஒன்றே. அதுதான் இப்படிப்பட்ட இந்த ஜன்மங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிற அந்த ரசனை!
எதையும் ரசிக்கிற மனோபாவம்!
அது மட்டும் இல்லையென்றால் இவர்கள் வேறு என்னவெல்லாமோ ஆகியிருப்பார்கள். வேறு என்னவெல்லாமோ ஆகாமல் தடுத்தாட்கொண்டிருப்பதும் இதே தான்! மனிதனுக்கு இறைவன் அளித்த ஆகப்பெரிய கொடை இந்த ரசனை! அது தான் உடலுக்கு வயசாகிறது என்னும் மூப்பெனினும், மனதிற்கு அது இல்லையெனக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆற்றுப்படுத்திய பாலஹனுமானுக்கு நாம் இருவரும் சேர்ந்து நன்றி சொல்வோம். அவருக்கு மட்டும் எவ்வளவு ஆர்வம் இருந்தால், அடுத்தடுத்து இத்தனை பின்னூட்டங்களை பதிவு செய்து, அமரர் சுஜாதாவின் பன்முக தரிசனத்தை நமக்குத் தந்திருப்பார்!
அவருக்கும் நம் நன்றி.

அன்புடன்,
ஜீவி

வல்லிசிம்ஹன் said...

மனமெல்லாம் சுஜாதா வாசம் வீச வைத்துவிட்டீர்கள். நீங்கள் அவரை விவரித்திருப்பது நேரில் மீண்டும் பார்ப்பது போல இருந்தது.
ஒரு கோஇன்சிடென்ஸ் இப்பத்தான்
சுஜாதாவின் குறுநாவல்கள்'' மீண்டும் கையில் எடுத்தேன். அதே ஜீயெஸ், குருபிரசாதின் கடைசிநாள்,ஜெயிலிலிருந்து வந்த சோமு....நன்றி ஜீவி சார்.
அருமை.அருமை.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்.

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி, வல்லிம்மா.

பூம்புகார் பதிப்பகம்ன்னு நெனைக்கிறேன். குருபிரசாத்தையும், தேடாதேயையும் சேர்த்து ஒரே தொகுப்பா போட்டிருக்கிற ஞாபகம்.
'கல்கி'லே வந்த அவரது எல்லாத் தொடர்களுமே அவர் பெயரைச் சொல்லும் தான். உங்களுக்குத் தெரியாததா?.. கதைன்னா, எதுலே வந்த கதை, அதுக்கு யார் சித்திரம் வரைந்தது எல்லாமே உங்களுக்கு அத்துப்படி ஆச்சே..

தங்கள் வருகைக்கும், நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றிம்மா.

கோமதி அரசு said...

படித்த அல்லது தனக்குப் பரிச்சயப்பட்ட எந்த விஷயத்தையும் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் அவரால் இருக்க முடியாது என்பது அவர் எழுத்துக்களிலிருந்து நன்கு தெரியும். புதுமைப்பித்தனை மனசார ரசித்துக் களித்திருக்கிறார். தொல்காப்பியத்தை ஆழ்ந்து மனதிற்கு இசைந்தபடி படித்திருக்கிறார். புதுக்கவிதைகளா?.. கேட்கவே வேண்டாம். ஆத்மாநாமும், மனுஷ்யபுத்திரனும் அவர் அடிக்கடி எடுத்தாளக்கூடியவர்கள். உண்மையில் இவர் அவர்களைப் பற்றி எழுதியதும் தான், அவர்கள் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்தது. பெரும் பத்திரிகைகளில் தனக்கு எழுதக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக உபயோகித்து பரந்து பட்ட வாசகர்களுக்கு புதுப்பாதை காட்டி தன் கைப்பிடித்துக் கூட்டிப் போனவர் சுஜாதா என்பதை மறப்பதற்கில்லை.//

சுஜாதாவைப் பற்றி அருமையாக , சரியாக சொன்னீர்கள்.

அவருக்கு நிகர் அவர்தான்.

அவோரட கதைகள் நிறைய படித்து இருக்கிறேன். விகடனிலில்,கல்கியில் வந்த கதைகள் பைண்ட் செய்யப்பட்டு என் வீட்டு புத்தக அலமாரியை அழகு செய்கிறது.

அவர்கதைகளை பூரணவிஸ்வநாதான் அவர்கள் நாடகமாய் போட்டு அது டிவியில் வந்து இருக்கிறது.

அருமையான எழுத்தாளார் அவர்களை பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஐயா, இன்று தான் இதை மீண்டும் பொறுமையாக வாசித்து மனதில் ஏற்றிக்கொள்ள முடிந்த்து.

வெகு அருமையாக பொறுமையாக திறமையாக ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

சுஜாதா அவர்களின் ஒரு சிலவற்றை மட்டுமே நான் இதுவரை வாசித்துள்ளேன்.

பகிர்வுக்கு நனறிகள், ஐயா.

Ranjani Narayanan said...

அன்புள்ள ஜீவி,

சுஜாதாவின் எழுத்துக்களைப் போலவே உங்கள் 'இதோ நிஜ சுஜாதா' வும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எப்படி இத்தனை நாவல்களையும் நினைவில் வைத்துக் கொண்டு எழுத முடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. திரு பால ஹனுமானின் பின்னூட்டங்கள் உங்கள் எழுத்துக் களுக்கு மகுடம் சூட்டியது என்றால் மிகையில்லை.

பலதளங்களிலும் உங்களின் பின்னூட்டம் - குறிப்பாக திரு அப்பாதுரை அவர்களின் தளத்தில் - படித்து வியந்திருக்கிறேன். இதைப்போல எனக்கு அலசி ஆராயத் தெரியாவிட்டாலும், உங்களது எழுத்துக்களை வாசிக்கும் அனுபவம் கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப் படுகிறேன்.

தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைப் படிக்கிறேன்.

அன்புடன்,
ரஞ்சனி


ஜீவி said...

அன்புள்ள ரஞ்சனி நாராயணன்,

இந்தக் கட்டுரையை சுவாரஸ்யமாக ரசித்து அதைச் சொன்னமைக்கு ரொம்பவும் நன்றி, மேடம்.

அமரர் சுஜாதாவின் எழுத்துத் திறமை தான் அந்த சுவாரஸ்யத்தின் உள்ளீடாக காணக்கிடைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சில பேரின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும்போது அப்படிச் சொல்வதும் சிறப்புத் தன்மையைப் பூண்டு விடுவதாக விடுவதாக நினைக்கிறேன்.

//உங்களது எழுத்துக்களை வாசிக்கும் அனுபவம் கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப் படுகிறேன்.

தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைப் படிக்கிறேன்.//

ரொம்ப நன்றிங்க. தங்கள் பின்னூட்ட சுவாரஸ்யமும் அதன் நுண்ணிய பார்வையும் நான் அறிந்ததே.

நான் தற்போது எழுதிக் கொண்டிருக் கும் 'இனி..' தொடர்கதைக்கு உங்களை அழைக்கிறேன். தங்கள் கருத்துக்கள் அந்தப் பகுதியை செழுமையூட்டும்.

அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

@ கோமதி அரசு

படித்து தங்கள் கருத்துக்களைச் சொன்னமைக்கு நன்றி.

பூர்ணம் விசுவநாதன், சுஜாதாவின் கதைகளின் தொலைக்காட்சி வடிவம் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறீர்களே! நல்ல நினைவாற்றல். எனக்கு இப்பொழுது சட்டென்று அப்படியான ஒரு நாடகம் நினைவுக்கு வருகிறது. தலைப்பைத் தான் தேடிப் பார்க்க வேண்டும்.
நன்றி, கோமதிம்மா.



ஜீவி said...

பாசமிகு வை.கோ.சார்!

தாமதமாக பதிலளிப்பதற்கு வருந்துகிறேன்.

பொன்விளக்கை எடுத்து துடைத்து வைத்திருக்கிறேன். அவ்வளவு தான்.
துடைத்தவனுக்கு எப்படி பெருமை போய்ச் சேரும்? நீங்களே சொல்லுங்கள்.

இருந்தாலும் பெரியவர் நீங்கள். நீங்கள் பாராட்டுவதை பாக்யமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப் பெற்றதில் பெருமை. ரொம்ப நன்றி, கோபு சார்!

Related Posts with Thumbnails