மின் நூல்

Monday, February 15, 2016

அழகிய தமிழ் மொழி இது !...

'ஒரு மொழியின் வளர்ச்சிப் போக்கும் அதற்கான  உந்து சக்திகளும்'  என்று இந்தத் தொடருக்கு தலைப்பு வைக்கலாம் என்று தீர்மானம் செய்து தலைப்பாக தட்டச்சும் செய்து விட்டேன்.

ஒரு தலைப்பே அதன் உள்ளடக்கத்தைச் சொல்கிற மாதிரியான தலைப்பு அது. ஆனால் இன்றைய வாசக ஆர்வம் இதையெல்லாம் வாசிக்கக் கூடத் தயங்கும் கூட இல்லை, திரும்பியே பார்க்காது என்கிற அச்சத்தில் தலைப்பை மாற்றினேன்.   குறைந்தபட்சம் இந்த ஆள் என்ன எழுதியிருக்கிறான் என்று பதிவைத் திறந்தானும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த தலைப்பு ஏற்படுத்தும் என் கிற நினைப்பில் துணிந்தேன்!

--- ஜீவி  .


'ஷ'
=======================

இந்த வடமொழி எழுத்து 'ஷ'' என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. அது நம் கையில் சிக்கி படாதபாடு படுகிறது.  வேண்டும் மாமியார், வேண்டாத மாமியார் போல சில நேரங்களில் நமக்கு இந்த 'ஷ' வேண்டும்.  சில நேரங்களில் வேண்டாம் என்கிற போக்கும் உண்டு. பலர் இந்த 'ஷ'வை தீர்மானமாக எழுத்தில் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து விடுகின்றனர். நாளாவட்டத்தில் 'ஷ' எழுத்தே தமிழ் எழுத்து வடிவில் புழக்கத்தில் இராமல் போய்விடும் போலிருக்கிறது.

வடமொழி வெறுப்பா என்று நினைத்தால் அதுவும் இல்லை என்று தெரிகிறது. 'ஷ்'ஷைத் தவிர்ப்பவர்கள், 'ஷ்'க்கு பதில் 'ஸ்'ஸை உபயோகிப்பதால், 'ஸ்'ஸும் வடமொழி தானே என்று ஒரு பக்கம் நினைப்பு ஓடுகிறது.

(உதாரணம்:  நாகேஷ் -- நாகேஸ்,  ராஜேஷ் --ராஜேஸ்)  ,

இதில் இன்னொரு முரண்பாடான விநோதம் கூட.   பேச்சு வழக்கில் எங்கெல்லாம் 'ஸ', 'ச' வருகிறதோ அங்கெல்லாம் வெகு சரளமாக 'ஷ'வை நகர்ப்புறங்களில் பெரும்பாலோர் உபயோகப்படுத்துகின்றனர்.   ஷங்கவி, ஷங்கர், ஷக்தி, ஷம்யுக்தா  இப்ப்டி.

'ஷ'வைத் தவிரிக்கவே முடியாத சில சொற்கள் உண்டு.

உஷா, பாஷை, கோஷ்டி

தமிழ் எழுத்து  'க்'கைக் கண்டால் ஏகக் காதல் இந்த 'ஷ'வுக்கு.  என்ன கெமிஸ்ட்ரியோ தெரியலே,, அந்த 'க்'கை நெருங்கினாலே அதனுடன் ஒன்றரக் கலந்து ஈருயிர் ஓருடலாய் ஒன்றி விடுகிறது..

ரிக் ஷா -- ரிக்ஷா

சில ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது 'ஷ'வை உபயோகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாது போகும்.

ஷூ,  பாலீஷ், .மஷ்ரூம்,

இன்னொரு பக்கம் வடமொழி எழுத்துக்களை தமிழ் படுத்துகிறேன் பேர்வழி என்று அதற்கான தமிழ்ச் சொற்களே மறந்து விடும் அளவுக்கு பரவலாகிப் போயிருக்கிறது.

சில உதாரணங்கள்:                          
                                                            
இஷ்டம்' என்பதை இட்டம் என்று வலிந்து தமிழ் படுத்துவதை விட்டு, விருப்பம்' என்று அழகு தமிழில் எழுதலாம்.

வருஷம், என்பதனை வருடம் என்று எழுதாமல் ஆண்டு எனலாம்.

கஷ்டம், 'கட்டம்' ஆவதைத் தவிர்த்து துன்பமாகலாம்.

நஷ்டம், நட்டம் ஆகாமல் இழப்பு ஆகலாம்.

விஷயம் விடயம் என்றோ விதயம் என்றோ ஆகாமல்  செய்தி ஆகலாம.

பாஷை  எந்த  சிதைவும் இல்லாமல்  மொழி  ஆகலாம்.


இப்படி நிறைய அழகழகான தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வராமலேயே நாளாவட்டத்தில் மறக்கப்பட்டு விடுமோ என்று அயர்வாக இருக்கிறது.

தற்சமம், தற்பவம் என்கிற இலக்கண விதிகள் எல்லாம்  இருக்கட்டும். வடமொழி எழுத்தைத் தவிர்க்க முயற்சித்து அதற்கு தமிழ் மாற்று  எழுத்து எழுதுவது, பலநேரங்களில் நல்ல பல தமிழ்ச் சொற்களையே தவிர்த்ததாகி விடுகிறது.

அந்த வடமொழி சொல்லின் அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய தமிழ் சொற்கள் உபயோகத்திற்கு வராமலேயே மறக்கப்படுகின்றனவே என்று ஆதங்கமாக இருக்கிறது.
                                               
தமிழின் தனிச் செல்வம்,  ழ
=======================                                              

வடமொழி 'ஷ'வைப் போலவேயான நிலை 'ழ'க்கு நேராமல் இருக்க வேண்டும்.  'ழ'வை உச்சரிப்பதே பலருக்கு சோதனையாக இருக்கிறது. தொலைக்காட்சி போன்ற மக்கள் நேசிக்கும் ஊடகங்களில் கூட 'ழ'வைச் சரியாக மொழிய வேண்டும் என்றோ அதற்கான பயிற்சியும் பழக்கமும் பெறவேண்டும் என்பதிலோ அக்கறையோ ஆர்வமோ கொள்ளாத நிலையில் இருக்கிறது.  'ழ'  தான் இப்படி என்றால் சமீப  காலங்களில் 'ள'வும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

தமிழுக்கு சிறப்பு சேர்ப்பது 'ழ' எழுத்து.  ஆங்கிலத்தில் ''வை எழுதும் பொழுது,  பெரும்பாலும் ஆங்கில 'L' எழுத்தையே உபயோகிக்கிறோம். பத்திரிகைகளில் கூட  Tamil Weekly, Tamil Daily தான்.   தமிழை TAMIZH என்று எழுதுவோர் இல்லை.



புதுச்சொற்கள்
==============

காலத்தின் தேவைகளூக்கேற்ப எல்லா மொழிகளிலும் புதுச் சொற்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.  புதியன புழக்கத்திற்கு வருவதற்கு பழையன கழிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அடுத்த நாளுக்கு இன்றைய நாள் பழசு;  இன்றைய நாளுக்கு நேற்றைய நாள் பழசு என்பார்கள்.  புதுச் சொற்கள் வருகையைத் தவிர்க்க முடியாது.  அது காலத்தின் கட்டாயம்.  தலைக்கவசம்-- தவிர்க்க முடியுமா, நம்மால்?..

இன்னொன்று.  எந்த மொழியின் வளர்ச்சியும் அது எந்த அளவு வெகுதிரள் மக்களின் நாவினில் எழுத்தில் புழக்கத்தில் இருக்கிறது என்கிற தகுதி கொண்டே அந்தந்த சொற்களின் ஆயுசு காலமும் தீர்மானிக்கப்படும்.

மொழி ஒன்றும் கண்ணாடி சட்டத்திற்குள் அடைத்து அழகு பார்ப்பதல்ல. அழ்கு பார்ப்பதற்கும் அல்ல. அது அந்த மொழி பேசும் மக்களின் உபயோகத்தில் நீடித்து வாழ வேண்டும்.  எந்த மொழிக்கும் உயிர் கொடுத்து வாழையடி வாழையாக வளர்ப்பவர்கள் பண்டிதர்கள் அல்ல, அந்த மொழி பேசும் எளிய வெகுதிரள் மக்களே.

எழுத்தாளர் சுஜாதா சர்வசாதாரணமாக தன் எழுத்தில்  நிறைய புதுச் சொற்களை வெள்ளோட்டமிட்டுப் பார்த்திருக்கிறார்.  அவர் எழுதிய 'கிளிக்கினான்' என்கிற சொல் அவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும். ஒரு வினையின் காரணமாக அந்த வினைக்கான சொல் உருவாகலாம். சுஜாதா ஒரு வினையின் ஒலியை வைத்தே சொல்லை உருவாக்கியிருக்கிறார்.

நேற்று தினமலரில் 'அலம்பல்' என்ற சொல்லை வாசித்து விட்டு இதற்கு வேர்ச்சொல் என்னவாக இருக்கும் என்கிற யோசனையில் ஆழ்ந்தேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இன்று தொலைக்காட்சியில் 'கலாய்த்தான்' என்று கேட்ட சொல் எப்படி உருவாக்கம் பெற்றிருக்கும் என்று யோசனையாயிற்று.

இப்படி நிறைய சொற்கள்.  இதை வாசிக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புழக்கத்திற்கு வந்திருக்கும் புதுச்சொற்களைச் சொல்லுங்கள்.  அந்த சொல் எப்படியாக உருப்பெற்றிருக்கும் என்கிற கண்டுபிடிப்பையும் சேர்த்துச் சொல்வீர்கள் என்றால் நம்மால் முடிந்தது,  பின்னூட்டங்களில் கைத்தட்டலாம்.


(தொடரும்)


17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//குறைந்தபட்சம் இந்த ஆள் என்ன எழுதியிருக்கிறான் என்று பதிவைத் திறந்தானும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த தலைப்பு ஏற்படுத்தும் என்கிற நினைப்பில் துணிந்தேன்!//

நியாயமான ஆதங்கம். தலைப்புத் தேர்வு சரியான + நல்லதொரு முடிவு. ஒரு பதிவினை வெளியிடும்போது இதுபோல என்னெவெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது! :)

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழின் தனிச் செல்வமான ’ழ’ வரும் வார்த்தைகளிலெல்லாம் ஓர் தனி அழகு உள்ளதாகவும் அதுவே தமிழின் தனிச்சிறப்பாக உள்ளதாகவும், பலமொழிகள் அறிந்த ஞானி ஒருவர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

Please Ref: http://gopu1949.blogspot.in/2013/11/75-1-2.html

”இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு, இனிமை இவற்றைக் குறிப்பதாகவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார் நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்கள்.

இதனைக் கேட்டு ரஸித்தவர், தமிழில் மிகப்புலமை வாய்ந்த திரு. கி.வா. ஜகந்நாதன் அவர்கள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சுஜாதா அவர்கள் எழுதிய 'கிளிக்கினான்' என்கிற சொல், அவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும். //

நானும் இதுபோன்ற மேலும் சில சொற்களை அவர் உபயோகித்துள்ளதைப் பார்த்து வியந்துள்ளேன்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தத்தங்களின் பதிவு அலம்பலாக உள்ளது. :)

மேலும் யார் யார் வருகை தந்து, தங்களின் பின்னூட்ட வரிகளில், அலம்பலாக ஏதாவது சொல்லவோ அல்லது கலாய்க்கவோ போகிறார்களோ ..... ஆவலுடன் காத்திருக்கிறேன். :)

ஸ்ரீராம். said...

நல்ல தொடர்.

நிறைய ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் என்ன என்று தினமணியில் ஒரு தொடர் வாராவாரம் ஞாயிறில் வெளி வந்தது. நீதிபதி வெ. ராமசுப்ரமணியன் வாராவாரம் ஒரு சொல்லைக் கொடுத்து வாசகர்களைத் தூண்டி விடுவார். அதற்கான விவாதம் அடுத்த வாரம் நிகழும். வந்திருக்கும் பௌத்தமான சில அர்த்தப்படும் சொற்களிலிருந்து ஒரு சொல் முடிவாய்த் தேர்ந்தெடுக்கப்படும். சுவாரஸ்யமான தொடர்.

அந்தப் பகுதி இப்போது புத்தகமாய் வெளிவந்து, நேற்று வெளியிடப்பட்டது.

ழ, ல, ள போன்றவைகளையே தெளிவாய் உச்சரிக்க முடியாதவர்கள்தான் தமிள் தமிள் எண்டு முளங்குவார்கள்! :)))

Kavinaya said...

தலைப்பு அழகு, தமிழைப் போல. தமிழுக்கே சிறப்பான 'ழ' எனக்கும் மிகவும் பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டது போல முடிந்த வரை எழுதும் போதும் பேசும் போதும் முடிந்த (தெரிந்த) வரை நல்ல தமிழ் சொற்களைப் புழங்கினால் நன்றாக இருக்கும். வழக்கில் இருந்து மறைந்து வரும் சொற்கள் குறித்து முன்பொரு முறை தொடர் பதிவிட்டது நினைவு வருகிறது...

G.M Balasubramaniam said...

மலையாளம் ஒரு மொழி அல்லவா தமிழுக்கே உரிய எழுத்து ழ மலையாளத்திலும் உண்டு. விஷயம் என்பதை ஏற்க முடியாதவர்கள் விடயம் என்று ஏனோ எழுதுகிறார்கள் நீங்கள் சொல்லி இருப்பது போல் செய்தி என்று கூறலாமே தமிழூம் வேற்று மொழிச் சொற்களை தன்னுள் இணைத்ட்க்ஹ்புக் கொள்ள வேண்டுமெங்கும் தமிழ் எதிலும் தமிழ் போன்றவை வெறும் கோஷங்களே ( இல்லை கோடங்களே -வா.......!)

ஜீவி said...

@ வை.கோ.

நீங்கள் குறிப்பிட்டிருந்த சுட்டியை வாசித்துப் பார்க்கும் வாய்ப்ப கிடைத்தது அபூர்வம்.
'யாமா மாநீ யாமா மா'-- ஞானசம்பந்தரின் மாற்று மாலைப் பதிகம் கற்றேன். சமஸ்கிருதம் வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன். காளமேகப் புலவ்ரின் 'முக்கால், அரை, கால், இருமா என்று குறைந்து கொண்டே வரும் பாடல் அறிந்தேன். முக்கியமாக காஞ்சிப்பெரியவரின் அழகான விளக்கங்கள் எல்லாம் மனசை வருடிக் கொடுத்தது. ஒரு பதிவில் எத்தனை விஷயங்கள்?..

தங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி, கோபு சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அரிய முயற்சி. புத்தகம் பற்றி நல்ல தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் வாங்கிப் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஆங்கிலத்திலிருந்து அப்படியே தமிழுபடுத்திய வார்த்தைகளைப் பற்றி இந்தத் தொடரில் குறிப்பிட வேண்டும். செய்கிறேன்.


ஜீவி said...

@ கவிநயா

குறிஞ்சி மலரென தலைகாட்டியிருக்கிறீர்கள். நன்றியும் மகிழ்ச்சியும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! பிற மொழியைச் சிதைத்து எழுதுதல்; அதே நேரத்து தன் மொழிச் சொல்லைத் தவிர்த்தல் என்று இரண்டு செயல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம்..

நினைவு கொண்டதற்கும் நன்றி, கவிநயா!


ஜீவி said...

@ ஜி.எம்.பீ.

சொல்லப் போனால் தமிழை விட சிறப்பாக 'ழ'வின் ஆளுகை மலையாளத்தில் உண்டு. அறிவேன். இருப்பினும் மலையாளமும் தமிழிலிருந்து கிளைத்த மொழியாதலால் தமிழின் எல்லாப் பெருமையும் மலையாளத்திற்கும் உண்டு. மலையாளத்தின் சிறப்புகளும் தமிழின் சிறப்புகளீல் உள்ளடங்கியதே என்ற எண்ணத்தில் மலையாளத்தை தனித்த மொழியாக குறித்திட எண்ண வில்லை, ஜிஎம்பீ சார்!

இதைக் குறிக்கும் பொழுது, 'கன்னடமும் களிதெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன் உதிரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்னும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியப் பாடல் நினைவுக்கு வருகிறது. பேராசிரியர் பாடலின் அடுத்த இரண்டு வரிகள் தாம் உவப்பானதல்ல..எல்லா மொழிகளும் அததன் வழியில் சிறப்பானவையே.

உங்கள் சமீபத்திய பதிவில் கூட விஷ்யத்தை, விதயம் என்று பலதடவைகள் பதிவர் திரு. ஞானபிரகாசன் குறிப்பிடிட்டிருக்கிறார் பாருங்கள். இப்படி மாற்றி எழுதும் பொழுது, மாற்றி எழுதும் வார்த்தை தமிழில் இல்லாத பொழுது அது பொருளற்றுப் போகிறது.

மணிப்பிரவாள நடையை ஒதுக்கி தனித்தமிழில் எழுதும் ஆர்வம் ஏற்பட்ட பொழுது சப்தப்படாமல் ஆங்கில்ம் தமிழில் கலந்து 'தமிலிங்கிலீஷ்' ஆகிவிட்டது. திரைப்படப் பாடல்கள் இந்தக் கலப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. தென்னகத்தில் ஆங்கில வளர்ச்சி மாதிரி வடபுலத்தில் இல்லை. இங்கு ஆங்கிலம் தனிக்காட்டு ராஜாவாக வளர்ச்சி அடைஜ்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு.

Geetha Sambasivam said...

ந"ள்ள" பதிவு. தமில் மொலியில் உள்ள "சிரப்"புக்கலை ஜொள்ளும் பதிவு. :)

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தொடர்ந்து வாசித்து வர வேண்டும். வாசித்தால் தங்கள் மனத்தில் படும் கருத்துக்களைச் சொல்லாமல் இருக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும்.

தமிழில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் இந்தளவு ஏன்? --என்று யோசித்திருப்பீர்களே!

வே.நடனசபாபதி said...







அருமையான தலைப்புடன் கூடிய தொடர். வாழ்த்துக்கள்! வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த வேண்டியிருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். இல்லாவிடில் நீங்கள் சொல்லியிருபது போல் அதற்கு இணையான தமிழ் எழுத்துகள் உள்ள சொற்களை பயன்படுத்தலாம் என்பதே சரி. நமது தமிழ் ஆர்வத்தை எழுத்தை மாற்றுவதில் காண்பிக்கவேண்டாம் என்பதே என் கருத்தும்.

அலம்பல் என்பதற்கு ஆரவாரம் என பொருள் சொல்லலாம். கலாய்த்தல் என்பதற்கு கலகம் செய்தல் அல்லது சினத்தல் என படித்திருக்கிறேன். தாங்கள் தான் இது சரியா என சொல்லவேண்டும்.

நான் கோட்டயத்தில் வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது ஒரு மலையாளி நண்பர் சொன்னார். ‘தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் ‘ழ’ வை கொலை செய்கிறீர்கள். வாழைப்பழம் என்பதை வாளப்பளம் என்று சொல்கிறீர்கள்.’ என்று கிண்டல் செய்தார்.’

அதற்கு நான் சொன்னேன். நண்பரே! அவ்வாறு சொல்பவர்கள் தமிழ்நாட்டில் சில பகுதியை சேர்ந்தவர்கள் தான். அதுகூட இங்கு சேவை செய்ய வந்த அயல் நாட்டு பாதிரிமார்கள் தங்களுடைய ‘பணி’க்காக தமிழை கற்றனர். அவர்களுக்கு ‘ழ’ வராததால் ‘ள’ என்றே சொல்லத் தொடங்கினர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் உள்ளவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ‘ழ’ க்கு பதில் ‘ள’
என்றே சொல்லியிருக்கலாம். எனவே தமிழர்களுக்கு ‘ழ’ உச்சரிக்கத்தெரியாது என சொல்லாதீர்கள்.’ என சொன்னேன்.

எனவே முதலில் நாம் ‘ழ’ வை சரியாக உச்சரிக்க நம்து பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்த புதிய சொற்களை பின்னர் தெரிவிக்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

அலம்பல் என்றால் பிழை களைந்து சொல்லுதல் என்று எண்ணியிருந்தேன். காரணப்பெயரில் வந்த சொல் அது என்று எண்ணம்.
பின்னால் தான் அலட்டல் என்று அதற்கு அர்த்தம் கொள்கிறார்கள் என்று தெரிந்தது.
நீங்கள் சொல்லியிருக்கும் ஆரவாரம் நான் நினைத்ததை விட சிறப்பு. அலட்டலுக்கும் பொருந்தி வருகிறதே!

கலாய்த்தல் என்றால் கிண்டல், நக்கல் என்று சொல்கிறார்கள்.

கலாய்த்தல் என்பது நல்ல தமிழ்ச்சொல். கலந்து ஆலோசித்தல் என்ற அர்த்தம் கொடுக்கும் சொல் என்று என் நண்பர் ஒருவர் போட்டாரே, ஒரு போடு! அப்படி கூட இருக்கலாமோ என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?..

இப்பொழுது தொலைக்காட்சியில் தோன்றுபவர்களில் நன்றாக தமிழ் உச்சரிப்பு கொண்டவர்களைத் தான் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டாயம் சீக்கிரத்தில் வந்து விடும் போலிருக்கிறது. அந்தளவு 'ல' 'ள', 'ழ' மாற்றங்கள் அவர்கள் உச்சரிப்பில் மாறி வருகின்றன. மேடைப்பேச்சில்.. கேட்கவே வேண்டாம்!

இதெல்லாம் விட பெரிய கொடுமை, தமிழ் பேசத் தெரிந்தாலும் எழுதத் தெரியாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்! பள்ளி மாணவர்களில் பெரும்பகுதியினர் தமிழை வாசிக்கவும், எழுதவும் தெரியாது இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

தொடர்ந்து வாசித்துக் கருத்திடுவதற்கு நன்றி, ஐயா!

கீதமஞ்சரி said...

தமிழின் சிறப்பெழுத்தான ழகரத்தைப் பலரும் சரியாக உச்சரிப்பதில்லை என்ற தங்கள் ஆதங்கம் சரியே.. அப்படிப் பேசக் கேட்கும்போதெல்லாம் உள்ளுக்குள் பெரும் வருத்தமும் கோபமும் எழுவதுண்டு. ஆனால் இந்த வடமொழி வார்த்தைகள் பற்றிய தகவலை வாசிக்கையில் என்னையே நான் திருத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருப்பது புரிகிறது. முதலில் நம்மைத் திருத்திக்கொண்டுதானே பிறகு மற்றவர் குறையை சுட்டவேண்டும். நல்ல தமிழ் வார்த்தைகளைப் பயன்பாட்டில் கொண்டுவருவது ஒவ்வொரு படைப்பாளியின் கடமையும் எனலாம்.

அலம்பல் குறித்த என் கருத்து.. காய்களையோ பழங்களையோ நீரில் அலசுவதை அலம்புதல் என்று சொல்வோம். அப்போது நீரில் ஏற்படும் சலசலப்பைப் போல மனிதர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தும் செயலும் அலம்பல் என்று குறிப்பிடப்படுகிறதோ?

ஜீவி said...

@ கீத மஞ்சரி

அலம்பலுக்கு விநோத அர்த்தம். இருக்குமோ என்று கூட எண்ண வைக்கிறதே!

தொடர்ந்து உங்களை ஏன் பின்னூட்டத்தில் பார்க்க முடியவில்லை-- தெரியவில்லையே!

Related Posts with Thumbnails