மின் நூல்

Monday, June 18, 2018

நான் சினிமாவுக்கு வரலே!......

ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது.

ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,"என்ன டிரைவர்?" என்று பின்சீட்டின் விளிம்புக்கு வந்தாள்.

"ஒன்றுமில்லையம்மா..ஒரு பொடிப்பயல்.." என்று சமாளித்துக்கொண்ட டிரைவர் காரைக்கிளப்பினார்.

"ஒன்றுமில்லையாவது?..பாவம், நீங்கள் தான் பார்த்து ஓட்டவேண்டும்.."என்று தலைநிமிர்ந்த வினிதா, அந்த ஒரு விநாடி இடைவெளியில்,எதிர்வரிசையில் பிர்மாண்டமாக நின்றுகொண்டிருந்த அந்தச் சினிமா விளம்பர பானரை கவனிக்கத் தவறவில்லை.

அவள் முகம் அருவருப்பால் சுருங்கியது.

ஆயில் பெயிண்ட்டால் தீட்டப்பட்டிருந்த அந்த விளம்பரக் கதாநாயகனின் உதடுகளில்தான் எத்தனைக் குறும்பு?..கண்களிலிருந்த குறுகுறுப்பு?..கைகள் அந்தப் பெண்ணை....சீ!

வினிதாவுக்கு நெஞ்செல்லாம் கசந்தது.

"இன்னிக்கு மாலை 'ஸ்பெஷல் கிளாஸ்' உண்டாம்மா? காரை எடுத்துக்கிட்டு எப்போ வரணும்?" என்று கேட்டார் டிரைவர்.

வினிதாவுக்கு டிரைவர் கேட்டது நினைவில் படியவில்லை. ஒரு நிமிட மெளனத்திற்குப் பிறகுதான் அவர் ஏதோ சொன்னார் என்ற உணர்வில் "என்ன கேட்டீங்க?.." என்றாள்.
டிரைவர் லேசாகச் சிரித்துக்கொண்டார். 'ம்..வயசுப்பொண்ணு' என்று நெஞ்சுக்குள் நினைத்துக் கொண்டவர், "சாயந்திரம் எப்போ காரை எடுத்திக்கிட்டு
வரணும்?" என்று இழுத்தார்.
"ஓ.." என்று உதட்டைக்குவித்த வினிதா, "இன்னிக்கு லாஸ்ட் பீரியட் கூட எனக்கு லீவுதான்..நாலு மணிகே வந்திடுங்க.." என்றாள்

காலேஜ் கேண்டீனில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு வந்த வினிதா, வலது கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 1-45. இன்னும் கால் மணி நேரத்தைப் போக்க வேண்டும்.

"என்ன செய்யலாம்?" என்று புருவத்தை நேர்கோடாக்கியவளுக்கு, தூரத்தில் ஆலமரத்தடியில் அந்நியோன்யமாகக் குலாவிக் கொண்டிருந்த அவள் தோழிகள் சுரேகா--ஸ்வேதா தட்டுப்பட்டார்கள்.

பின்னாடியே போய் அவர்களுக்குத் தெரியாமல் திடீரென்று அவர்கள் தோள்களைப் பிடித்துக் குலுக்கினால்?..திடுக்கிட்டுத் துள்ளப்போகும் சுரேகா--ஸ்வேதா முகங்களைக் கற்பனை பண்ணிப்பார்க்கவே வினிதாவுக்கு இன்பமாக இருந்தது.

அவள் தீர்மானித்து விட்டாள். இரண்டே வினாடிகள்.

நான்கு புளிய மரங்களைத் தாண்டி அந்த ஆலமரத்துக்குப் பின்னால் வந்துவிட்ட வினிதா கைக்கெட்டும் தூரத்தில் நின்று கொண்டு அவர்களை நோட்டம் விட்டாள்.

தோழிகளின் கிசுகிசுப்பு அவள் ஆர்வத்தை அதிகமாக்கியது. சுரேகவின் கையிலிருக்கிறதே, அது என்ன புத்தகம்?..ஸ்வேதா ஏன் அதைப் பிடுங்க முயற்சிக்கிறாள்?..

வினிதா ஒரு எம்பு எம்பி சப்தமிடாமல் அவர்களை உற்றுக் கவ்னித்தாள்.

அடேடே, சுரேகா கையிலிருக்கும் புத்தகத்தினுள் கையடக்கமான ஒரு போட்டோ அல்லவா இருக்கிற்து?..அந்தப் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும் சுரேகாவின் கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ளினாள் ஸ்வேதா.

இனம் புரியாத ஆர்வத்தோடு அந்தப் புகைப்படத்தை உற்றுக் கவனித்த வினிதாவின் முகம் வெளிறிவிட்டது. அவள் நெஞ்செல்லாம் எரிந்தது. உடல் குறுகியது.

அந்த போட்டோவில் இருந்தது, கலையில் ஜெமினி திருப்பத்தில் ஆயில் பெயிண்ட்டால் தீட்டப்பட்டு அவள் பார்த்த அந்த நடிகரின் உருவம்.

மாலை ஆறுமணியிருக்கும். வினிதாவின் அம்மா மேகலா, மகளின் தோளைத் தொட்டாள். தோட்டத்துப் பக்கம் வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்த வினிதா, திடுக்கிட்டுத் திரும்பினாள்.

"ஒன்றுமில்லை, அம்மா..அணில்கள் விளைல்யாடறதைப் பார்த்திண்டு இருந்தேன்."

"நல்ல பொண்ணுடி. சரி, சீக்கிரம் டிரஸ் பண்ணிக்கோ. நேரமாச்சு."

"எங்கேம்மா?.."

"இன்னிக்கு 'கன்னி உள்ளம்' 'ரிலீஸ் டே' இல்ல்லையா?..காலைலேயே போகணும்னு ஒங்கிட்ட சொன்னேனே?..மறந்திட்டியா?"

'கன்னி உள்ள'த்தைப் பற்றிய நினைவு அப்பொழுதுதான் வினிதாவுக்கு வந்தது.

"நான் வரலேம்மா...."என்று அவள் சிணுங்கினாள்.

"பிரத்தியேகக் காட்சியைக் கூட நாம பாக்கலையே?..பத்திரிகையிலே எல்லாம் இன்னிக்கு விளம்பரம் பாத்தியா? என்ன அழகா இருக்கு! சரி. கிளம்பு."

வினிதாவுக்கு எரிச்சலாக இருந்தது. காலை பேப்பர்களில் வந்த விளம்பரங்களை அவளும் தான் பார்த்தாள். 'இதைப் போய் ரசித்திருக்கிறாளே,இந்த அம்மா? எப்படி இதை இவளால் ரசிக்க முடிகிறது?'... "நீ போயிட்டு வாயேம்மா..எனக்கு ஒரே தலைவலியா இருக்கு" என்றாள்.

"உங்கப்பா நம்ம ரெண்டு பேரையும் எதிர்பார்த்திண்டு இருப்பார். டிரைவர் கிட்டே சொல்லிக் காரை அனுப்பிச்சிருக்கார்."

"ஏம்மா என்னோட மனசைப் புரிஞ்சிக்காம இப்படி 'கம்பெல்' பண்றே?...நான் வரலேன்னா வரலைதான்."

"சரி..எப்படியோ போ" என்று ஆத்திரத்துடன் வினிதாவைப் பெற்றவள் கிளம்பிவிட்டாள்.

வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்ற தியேட்டர் உரிமையாளர் பால்கனி ஸீட்வரை கொண்டு வந்து விட்டுப் போனார்.

அவர்கள் உள்ளே போனபொழுது 'எழுத்துக்கள்' போட்டுக் கொண்டிருந்தார்கள். படத்தின் பெயரைத் தொடர்ந்து, திரை பூராவும் அடைத்துக்கொள்கிற மாதிரி கதாநாயகனின் பெயரை 'சிருங்கார மன்னன் சந்திரகுமார்' என்று போட்ட பொழுது 'ஓகோ'வென்று தியேட்டரில் எழுந்ததே விசில் சப்தமும், கையொலிகளும்!..

வினிதாவின் அம்மா மேகலாவிற்கு நெஞ்செல்லாம் இனித்தது. தன் கணவனின் மேல் கொஞ்சம் சாய்ந்தபடியே உட்கார்ந்து கொண்டாள்.

ஆரம்பக்காட்சியிலேயே படம் களைகட்டி விட்டது. கல்லூரி மாணவர்கள்-மாணவிகளின் 'துணையோடு' பிக்னிக் கிளம்புகிறார்கள்; சாத்தனூர் போலும்.

கதாநாயகன் அந்த 'ஆம்னி பஸ்'ஸின் புட்போர்டில் மிக லாவகமாகத் தொற்றியபடி கைநீட்டி, பாடிக்கொண்டு வருகிறான். இடையே கதாநாயகியின் ஷெர்வானி மேல்துண்டு இவன கன்னங்களுக்கருகே பறக்கிறது. இவன் கை ஒருதடவை அவள் நெஞ்சில் படுகிறது.

தியேட்டர் பூராவும் ஒரே குஷி; 'ஜில்'லென்ற உணர்வு.

தலைக்கு மேலே அடர்த்தியாகப் புறப்பட்டு விரியும் அரைகுறை வெளிச்சத்தில் ரகசியமாகத் தன் கணவனை நோட்டமிட்டாள் மேகலா. 'எவ்வளவு களையான முகம்?..உதட்டுக்கு மேலே அந்த அளவான மீசைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது?..

இதோ, திரையில் பஸ்ஸை விட்டு இறங்கிய கல்லூரிக் காளைகள், ஆளுக்கொரு பெண்ணுடன் கை கோர்த்துக்கொண்டு வருகிறார்கள். அதைத் தொடர்ந்து கோரஸ் பாட்டு.. நடுநாயகமாக இருக்கும் கதாநாயகன் 'சிருங்கார மன்னன்', கதாநாயகியின் இடுப்பைப்பிடித்து நெஞ்சுக்கு மேலே லாவகமாகத் தூக்குகிறான். காமராவின் விளையாட்டு...தியேட்டரின் மூலையில் யாரோ தும்முகிறார்கள். அதைத் தொடர்ந்து
ஒரே சிரிப்பொலி.

அந்த சமயத்தில் மேகலாவுக்கு முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் தம் பக்கத்து நபரிடம் கிசுகிசுத்தக் குரலில் சொன்னது,தெளிவாகக் கேட்டது மேகலாவுக்கு. "கதாநாயகனைப் பாத்தீங்களா, சார்! இந்த ஆளுக்குக் காலேஜ் படிக்கிற ஒரு பொண்ணு இருக்கு..
இந்த வயசில் ஆசாமி எப்படிப் புகுந்து விளையாடுகிறான், பாத்தீங்களா?...அந்தப் பொண்ணு இதைப் பாத்தா, அதுக்கு எப்படி இருக்கும்?"..

சந்திரகுமாரின் முதுகின் பக்கம் அணைத்தபடி கிடந்த தனது கையைச் சடாரென்று எடுத்துக் கொண்டாள், வினிதாவின் அம்மா மேகலா.

தன் மகள் கூப்பிடக் கூப்பிட சினிமாவுக்கு ஏன் வரவில்லை?..

அவளுக்கு இப்போது புரிந்தது.

10 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஒருவாறு யூகிக்க முடிந்ததென்றாலும் நல்ல கதை (கதைதானே).. வாழ்விலும் திரையிலும் நடிக்கும் எத்தனையோ வாழ்க்கைகளின் வீட்டு வாசல்களிலும் எத்தனையோ உணர்ச்சிகள்... வாழ்த்துக்கள்.

ஜீவி said...

//ஒருவாறு யூகிக்க முடிந்ததென்றாலும் நல்ல கதை (கதைதானே).. வாழ்விலும் திரையிலும் நடிக்கும் எத்தனையோ வாழ்க்கைகளின் வீட்டு வாசல்களிலும் எத்தனையோ உணர்ச்சிகள்... வாழ்த்துக்கள்.//

ஆமாம, கதையேதான்! தந்தை,தாய்,
மகள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வைகள். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

திரைத்துறையினரின் சாபக்கேடுகளுள் இதுவும் ஒன்றுதானே..சில கோணங்களில் சில உறவுகளின் சில பார்வைகள்..

ஜீவி said...

//சில கோணங்களில் சில உறவுகளின் சில பார்வைகள்//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி, மலர்.

குமரன் (Kumaran) said...

நல்ல கதை ஜீவி ஐயா. என்னாலும் ஊகிக்க முடிந்தது. நானும் பல நேரங்களில் சில நடிகர்கள் நடிகைகள் நடிப்பதைப் பார்க்கும் போது நினைத்துக் கொள்வதுண்டு.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//நல்ல கதை ஜீவி ஐயா. என்னாலும் ஊகிக்க முடிந்தது. நானும் பல நேரங்களில் சில நடிகர்கள் நடிகைகள் நடிப்பதைப் பார்க்கும் போது நினைத்துக் கொள்வதுண்டு.//

அப்படியா?.. ஊகிக்க முடிந்தது, உங்கள் கற்பனை ஊற்றுக்குக் கிடைத்த வெற்றி.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி, குமரன்!

ஸ்ரீராம். said...

புரிகிறது.

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்... கதை நல்லா இருந்தது. நான் முதலில் படித்தபோது, வினிதாவின் அப்பாதான் டைரக்டர், அவரோடு அவரது 'கிளுகிளு' படத்தைப் பார்க்கத் தயங்குகிறாள் என்று நினைத்தேன்.

வித்தியாசமான கடை. உங்கள் நடையில் மிளிர்கிறது.

///தன் மகள் கூப்பிடக் கூப்பிட சினிமாவுக்கு ஏன் வரவில்லை?..//

ஆனா, இந்தக் காலத்துக்கு இந்த மாதிரி எண்ணம் இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். ரஜினியின் மகள்கள் தயாரிக்க/இயக்க, தந்தை தீபிகா படுகோன் போன்றவர்களுடன் நடிப்பது சகஜமாகத்தானே இருக்கு. இன்றைக்குத்தான் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, ரஜினியில் கையில் சிறு குழந்தையாக மீனா இருக்கும் படத்தைப் பார்த்தேன். பிறகு மனைவியாகவும் அவர் நடித்திருக்கிறார். (ஸ்ரீதேவி போன்று). சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் மீனாவைப் பார்த்தபோது, இப்போது திரையுலகிற்கு மீண்டும் நடிக்க வந்தால், ரஜினியின் அம்மா வேடத்திற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று தோன்றியது.

G.M Balasubramaniam said...

கற்க நினைத்தால் எங்கும் எவரிடமும் கற்கலாம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நிழலும் நிஜமும். வெளிப்படுத்தப்பட்ட விதம் அருமை.

Related Posts with Thumbnails