மின் நூல்

Sunday, April 7, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                                             8



நான் நான்காவது வகுப்பு முடிக்கையிலேயே, காமாட்சிபுர அக்கிரஹார வாடகை வீட்டைக் காலி பண்ணிவிட்டு, தானப்ப முதலித்தெருவில் ஒரு வீட்டுக்கு மாறி விட்டோம். தானப்ப முதலித்தெருவிலிருந்து சிம்மக்கல் வழியாகத் தான் தினமும் நடந்து ஆதிமூலம் பிள்ளைத்தெரு ஆரம்பப்பள்ளிக்குப் போவேன். சிம்மக்கல் ஜங்ஷனில் ஓவல் சைசில் ஒரு பெரிய நீர்த்தொட்டி இருக்கும். அந்தத்தொட்டி அருகில் நிறைய வண்டிக் குதிரைகளைக் கட்டியிருப்பார்கள். குதிரைகளைக் குளிப்பாட்டுவதெல்லாம் அந்த தொட்டி நீரைக் கொண்டுதான். அந்த ஜங்ஷனில் சின்ன பிள்ளையார் கோயில் இருந்த ஞாபகம். சரியாக நினைவில்லை. அந்த இடத்தில் கட்சி கொடிக்கம்பங்கள் காட்சியளிக்கும். தோழர்கள் டாங்கே, பி.இராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி  கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தட்டிகளை இங்கே பார்த்ததாக ஏற்கனவே "இழந்த சொர்க்கம்" என்னும் என் பதிவொன்றில் பதிந்திருக்கேன்.   அந்நாட்களில் மதுரையிலிருந்த ஹார்வி மில் என்ற பஞ்சாலை,  தொழிற்சங்கங்கள் மதுரையில் மலர்ந்திட ஒரு காரணியாக இருந்தது.


பால்ய வயதில் கோடி காட்டப்படுவது போல லேசாக நம்மைக் குறுக்கிடும் சில நிகழ்வுகள் பிற்காலத்தில் நமது பெரிதான பங்களிப்புடன்  நம் வாழ்க்கையின் முக்கிய அம்சமாய்  திகழும்.   இதையெல்லாம் பற்றி எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?..  என் வாழ்க்கையில் இப்படி நிறைய..   அவற்றைப் பின்னால் பார்க்கலாம்.

இந்த சிம்மக்கல் ஜங்ஷன் பகுதியில் ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய  நிறையத் தட்டிகளைப் பார்க்கலாம். மற்றும் மாட்டு வண்டிகளில் அலங்காரம் செய்து பொது   நிகழ்ச்சிகளை ஊதுகுழல்களில் அறிவித்தபடி,   பிட்நோட்டீஸ்களை வீசிவீசி எறிந்தபடியும்  அந்நாளைய   அறிவிப்புகள் உண்டு.

அப்படி ஊரே இதை விட்டால் வேறு வேலை இல்லை என்று பேசும்படியான மல்யுத்தப்போர் நிகழ்ச்சிகள் அந்தக்காலத்தில்   மதுரையில் நடந்தன.  தாராசிங், கிங்காங்,   ரெட் ஸ்கார்ப்பியன், வாங்க் பெக்லி -- இவர்களெல்லாம்  மறக்கமுடியாத மல்யுத்த ஹீரோக்கள். இந்த வீரர்களுக்குப் பட்டப்பெயர்களும் உண்டு. இந்திய செஞ்சிங்கம்--தாராசிங். மாமிச மலை--கிங்காங். செந்தேள்--ரெட் ஸ்கார்ப்பியன். பறக்கும் வீரன்--வாங்க் பெக்லி.

வாங்க்பெக்லி, ரெப்ரி.    இரண்டு மல்யுத்த வீரர்கள் கிடுக்கிப்பிடி போட்டு பிணைந்து முட்டிக்கொள்கையில், மல்யுத்த கோதாவில் பறந்து வந்து அவர்கள் புஜங்களுக்கிடையில் இறங்கி அவர்களைப் பிரித்து விடும் ரெப்ரி வாங்க்பெக்லியின் பாணி பிரசித்தம்!இத்தனை வீரர்களுக்குமிடையே, நம் இந்திய செஞ்சிங்கம் தாராசிங் தான் இராணுவ முடி வெட்டலோடு நரம்புகள் புடைத்துத் தெரியும் புஜபல பராக்கிரமத்தோடு வெகு இளமையாகத் தோற்றமளிப்பார். அத்தனை பேர் அனுதாபமும், நம்மவர் என்று அவர் மேல்தான் படிந்திருக்கும். இவரோடு மாமிசபர்வமாக கிங்காங் மோதுவார்.

இவர்கள் இரண்டு பேரின் இணை பிரசித்திபெற்றது. குஸ்திகோதாவில் விஸில் பறக்கும். கிங்காங் ஹங்கேரிக்காரர். உண்மையிலேயே அவர் நடக்கையில் மலை அசைந்து வருவது போலிருக்கும். (கம்பனின் நினைவு வருகிறது) ரெட் ஸ்கார்ப்பியன் கையைக் கத்திபோல் வைத்துக்கொண்டு வெட்டுவதில் கைதேர்ந்தவர். வாங்க்பெக்லி விஷயம் தெரியும். மாலை போய்தான் மல்யுத்தம் ஆரம்பிக்கும். அத்தனையும் தமுக்கம் மைதானத்தில் நடந்தாக நினைவு. சில காலைநேரங்களில், இந்த மல்யுத்த வீரர்கள் திறந்த வேன்களில் நின்றுகொண்டு, தெருக்களில் அணிவகுப்பு நடத்துவது போல
வரிசைவரிசையாக கையசைத்து வருவார்கள். அடடா! அடடாவோ! அந்த நேரங்களில் தெருவோரங்களில் இவர்களைப் பார்க்கக் கூட்டம் சொல்லி மாளாது. மதுரை மக்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அத்தனைக் கூட்டமும் மாலை தமுக்கம் மைதானத்தில் அலை மோதும்.

பின்னாட்களில், எழுத்தாளர் சாவி அவர்கள் ('வாஷிங்டனில் திருமணம்' சாவி தான்) தான் ஆசிரியரராய் இருந்த "சாவி" வார இதழில், இந்த மதுரை மல்யுத்த போட்டிகளைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பொழுது தான், இவரும், சின்ன அண்ணாமலையும் சேர்ந்து அந்தக்கால அந்த மல்யுத்தப் போட்டிகளை
நடத்தினார்கள் என்கிற விவரம் அறிந்தேன். அந்தக் கட்டுரைகளில், இவரும் சின்ன அண்ணாமலையும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டு, விதவிதமான யுக்திகளைக் கையாண்டு, அலுப்புத் தட்டாமல் நிகழ்ச்சிகளை அமைத்துக் கூட்டத்தைத் திரட்டினார்கள் என்கின்ற விவரங்களை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார். சின்ன அண்ணாமலையும் அருமையான நகைச்சுவை எழுத்தாளர். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஒரு அண்ணாமலை முதலிலேயே பத்திரிகை உலகில் இருந்தமையால், இன்னொரு அண்ணாமலையான இவர் சின்ன அண்ணாமலை என்று அழைக்கப்பட்டார். கல்கி, சாவி, சின்ன அண்ணாமலை, தேவன், நாடோடி -- கூட்டு சேர்ந்து, தமிழ்பத்திரிகை உலகில் தம் நகைச்சுவை எழுத்தால், ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.ஓ! 'அந்த நாளும் வந்திடாதோ...' என்று ஏக்கத்துடன் நினைக்கத் தான் தோன்றுகிறது.

(வளரும்)


11 comments:

G.M Balasubramaniam said...

பல நேரங்களில் இம்மாதிரியான மல் யுத்தங்கள் ஃபேக் என்று கூறப்பட்டு கேட்டிருக்கிறேன்

வே.நடனசபாபதி said...

இளம் வயதில் நம்மை வசீகரித்த நிகழ்வுகள் பின்னர் அவை நம்மைவிட்டு அகலாது தொடர்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். தங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்ட நிகழ்வுகள் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

திரு G.M பாலசுப்பிரமணியம் அவர்கள் சொன்னதுபோல் இந்த குஸ்தி சண்டைகள் எல்லாம் இரசிகர்களை/வாடிக்கையாளர்களை கவர்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையா எனத்தெரியவில்லை.
குஸ்திவீரர் தாராசிங் பின்னர் இந்தி திரையுலகில் நுழைந்து பிரபலமானர் என்பது தெரியும் என நினைக்கிறேன்.

காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு.

வெங்கட் நாகராஜ் said...

மதுரையில் மல்யுத்தம் - அதுவும் அந்தக் காலத்தில்...

இது போல நடந்ததாக நான் அறிந்திருக்கவில்லை. தட்டிகளில் நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள்!

நெய்வேலி நாட்களில் ஆட்டோவில் சென்றபடியே நிகழ்வுகள், சினிமா பற்றிய தகவல்களைச் சொல்லிக் கொண்டு செல்வார்கள். மாட்டு வண்டிகளின் பின் புறம் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சி/சினிமா பற்றிய தகவல்களை பிட் நோட்டீஸ்களாக வினியோகித்துச் செல்வார்கள். மாட்டு வண்டியின் பின்னே ஓடி நோட்டீஸ்களை எடுத்ததாக நினைவு! :)

நினைவலைகள் தொடரட்டும். தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

குஸ்திவீரர் தாராசிங் அவர்கள் நடித்த பழைய இந்தி, பஞ்சபி படங்களில் நடித்தார்.
பழைய சினிமாக்களில் குஸ்தி போட்டிகளை கதாநாயகர், நாயகி பார்ப்பது போல் வரும் காட்சிகள் பெரும்பாலும் இடம் பெறும். நாடகம், நடனம், பாட்டு கச்சேரி போன்ற காட்சிகளை பார்ப்பது போல் காட்சிகள் வரும்.

அப்படி படங்களில் தாராசிங்கை பார்த்து இருக்கிறேன்.

கோமதி அரசு said...

சிம்மகல்லில் பிள்ளையார் கோவில் இருக்கிறது.
உங்கள் வசந்த கால நினைவலைகள் நன்றாக இருக்கிறது.

ஜீவி said...

@ G.M.B

அதனாலென்ன?.. சினிமா கூட ஃபேக் தானே சார்?

சினிமா பார்த்து அழறோம், சிரிக்கறோம் எல்லாம் செய்கிறோம் இல்லையா?
யாரோ பின்னணி பாடகர் பாடுவதை அந்த நடிகரே பாடுவதாகச் சொல்கிறோம் இல்லையா?
சண்டைக் காட்சிகளில் டூப்பை சுத்தமாக மறந்து விட்டு கதாநாயகனே சண்டை போடுவதாக நினைக்கிறோம் இல்லையா?

வாழ்க்கையில் ஃபேக்-கள் அதிகம். உங்களுக்குத் தெரியாததா?


ஜீவி said...

@ வே. நடன சபாபதி

தாராசிங் என்பது கூட இயற்பெயர் இல்லை போலிருக்கு.

சாங்டில் என்ற ஹிந்திப் படம் இவர் நடித்த முதல் படம் என்று தெரிய வருகிறது. திரைத்துறையில் பன்முகம் கொண்டவராய் திகழ்ந்திருக்கிறார்.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

அந்தக் காலத்தில்?.. 1952-53 வாக்கில் என்று நினைவு.

அந்தக் காலத்தில் தட்டி போஸ்டர்கள் சர்வ சகஜம்.

குதிரை வண்டி, மாட்டு வண்டி விளம்பர சாதனங்கள் இப்போ ஆட்டோக்கு மாறியிருக்கு. அவ்வளவு தான்.

பிரிட்டிஷ் காலத்து பழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன, பாருங்கள். வெள்ள அபாயம்,
ஏதாவது மக்களுக்கு உடனடியாகச் சொல்ல வேண்டியவை எல்லாம் கிராமப் புறங்களில் தண்டோரா போட்டுச் சொல்கிறார்கள் பாருங்கள்.

தாலுக்கா ஆபிஸ் ஜமாபந்தி கூட்டங்கள், புயல் காலங்களில் ஹரிக்கேன் விளக்கு எல்லாம் பிரிட்டிஷார் காலத்தது.

ஜீவி said...

@ கோமதி அரசு

அந்த மல்யுத்த வீரர்கள் கூட்டத்திலேயே தாராசிங் தான் ஆணழகர். அதனால் சிறுவயதில் ஹீரோ மாதிரியான நினைப்பில் அவரைப் பிடிக்கும். அதுவும் இந்தியர் வேறே. கிரிக்கெட் ஆட்ட குஷி போலத்தான். நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொண்டு மல்யுத்தங்களைப் பார்த்தால் தான்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தாராசிங் பற்றிய உங்கள் நினைவுகள் பிரமாதம். தொடர்ந்து வாசித்து வாருங்கள். நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

சிம்மக்கல்லில் பிள்ளையார் கோயில் இப்பொழுதும் இருக்கும் தகவல் மகிழ்ச்சியேற்படுத்தியது. தகவலுக்கு நன்றி.

ஆதிமூலம் பிள்ளைத் தெருவில் ரேஷன் கடையும் இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆங்கிலேய காலத்திலிருந்து பல விஷயங்கள் அது அது அப்படி அப்படியே தொடர்கின்றன.





Related Posts with Thumbnails