மின் நூல்

Wednesday, November 6, 2019

மனம் உயிர் உடல்

17.   தன்னில் உணர்ந்த தான்


மூளை என்பதே ஒரு மர்மச் சுரங்கம்.  நிறைய கேள்விகள் அதற்கான தகுந்த விடை கிடைக்கக் காத்திருக்கின்றன என்பதே உண்மை.  உடல் சாத்திர ஆய்வுகளில் இன்னும் இன்னும் தெரிந்து  கொள்ள வேண்டியவைகள் நிரம்ப இருக்கின்றன என்பதே இன்றைய நிலை.

நரம்பியல் என்னும் ஆகப்பெரிய சாத்திரத்தின் ராஜா மூளையும்  மூளை சார்ந்த உடலியக்க உன்னதங்களும்.   இதையெல்லாம்  படைத்தவனைக்  கோயில் கட்டி கொண்டாடுவதில் எந்த  பிரமையும் இல்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.   உடலின் சகல பகுதி உறுப்புகளையும் இயக்கத்தில் வைத்திருப்பது உயிர்ப்புள்ள மூளையின் சாகசமே என்று சென்ற பதிவில் பார்த்தோம்.    உறுப்புகள் மட்டுமல்ல சகல உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டு அறையில் பொருத்தி  வைத்துக் கொண்டு லாக்கர் சாவியையும் தன் கைவசமே வைத்திருக்கும் மூளையின் உன்னத ஆற்றல் பற்றி நிறையவே சொல்லலாம்.

செம டிராஃபிக்.   இந்தக் குறுக்குப் பாதையைத் தவிர்த்திருக்கலாம்.  நுழைந்தது நுழைந்தாயிற்று.  இனி பின்வாங்கவும் முடியாது.   வண்டிகள் எறும்பு கூட்டம் போல ஊர்ந்து நகர்ந்தன என்ற நிலை.  திடீரென்று தேசலாய் கேட்டு,  கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதல் டெஸிபலில் (100 dB)  வீரிட்ட ஆம்புலன்ஸ்  சைரன் ஒலி அந்த ஊர்தலில் ஒரு பரபரப்பைத் தொற்ற வைத்தது.  சட்டென்று நம் வாகனத்தைக் ஆம்புலன்ஸ் கடந்து செல்லும் பொழுது 'பாவம்.. யாருக்கு என்னவோ' என்ற பரிதாப உணர்வு பீரிடல்..  கடவுளே!  அந்த சிக்னல் விழுவதற்குள் ஆம்புலன்ஸ்  இந்த நாற்சந்தியைக் கடந்து  விட வேண்டுமே என்ற எதிர்பார்ப்பின் தீவிரம் கூடக் கூட சைரனை லட்சியம் பண்ணாமல் குறுக்கே குறுக்கே முந்த   முயற்சிப்போரின் மீது எரிச்சல்..  அப்பாடி..  ஆம்புலன்ஸ் நாற்சந்தியைக் கடக்கவும், சிக்னல் விழவும் சரியாக இருக்க... மனசுக்கு ஒரு நிம்மதி..  கொஞ்ச நேரத்திற்கு முன்பு சலிப்பாய் இருந்த ஊர்தல் இப்பொழுது அப்படி இல்லை;  பரவாயில்லை.. பொறுத்துப் போகலாம் என்ற ஆசுவாசம்..

சலிப்பு, பரபரப்பு, பரிதாபம், எதிர்பார்ப்பு, எரிச்சல், நிம்மதி, ஆசுவாசம் என்று இரண்டே நிமிடங்களில் ஒன்று மாற்றி  ஒன்று என்று எத்தனை  உணர்வுகள்!  இத்தனைக்கும்  இடையே சைரன் ஒலி செவி வழியாய்  கடத்தப் பட்டு அதற்கான உணர்வைக்  கொடுத்து  (ஆம்புலன்ஸ், ஆபத்தான நிலையில்  நோயாளி, எவ்வளவு விரைவாக மருத்துவ மனை போக வேண்டுமோ அவ்வளவு விரைவாக என்றெல்லாம் நிகழ்வை உணர்த்தி) சொடுக்கு நேரத்தில் கொஞ்சம் கூட பிசிறில்லாமல் அத்தனையும் மூளை என்ற படைப்பின் உன்னதம் நிகழ்த்திய அற்புதம் தான்!  இந்த மாதிரி  ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகள்.  மூளையின்  மின் வேதியியல் (Electro chemical) சாத்தியப்பாடுகள் சாத்தியப்படுத்தும் சாகசங்கள்!

இப்பொழுது நான் யார் என்ற பழைய கேள்விக்கு வருவோம்.

நான் யார் என்றால் நான் இப்படியானவன் என்ற தன்னுடைய  குண நலன்களைக் குறிப்பிட்டு சிலர் சொல்லலாம்.

நான் கோபக்காரன் என்று ஒருவர் சொன்னால் தான் கொள்ளும் கோபம் அவருக்கே தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்.

தன்னைப் பற்றி தனக்கே தெரிந்திருப்பதை சுய விழிப்புணர்வு எனலாம்.     இந்த மாதிரியான தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்கள் தன்னை எந்த நேரத்தும் சரிப்படுத்திக் கொள்ள தயாராக இருப்பார்கள்.

அதாவது, தான்  இப்படி இருப்பது தவறு;  இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நினைத்தால் தான் நினைக்கிற படி தன்னை அமைத்துக் கொள்வது அவருக்கு எளிதான காரியமாக இருக்கும்.

கோப உணர்விற்கு ஆட்பட்ட ஒருவர் தனக்கு வாய்த்திருக்கிற கோபத்தை தனக்கான தகுதியாக எண்ணலாம்.  இல்லை, தகுதியின்மையாகவும் கருதலாம்.  அது அடுத்த கட்ட நிலை.

இந்த அடுத்த கட்ட நிலை பெரிய விஷயமில்லை.  அதை எந்த நேரத்தும் தனக்கேற்ற மாதிரி அவர் சரிப்படுத்திக் கொள்ளலாம்.  அதற்கான சுய பயிற்சிகள் எளிமையானவை.
அவை என்ன பயிற்சிகள் என்று பிறகு பார்க்கலாம்.

எந்த சார்பு நிலையும் இல்லாமல்,  தான் எப்படிப்பட்டவன் என்று தானே அப்பட்டமாக உணர்ந்து கொள்ளும் நிலை தான் முக்கியம்.   தன்னைப் பற்றி தன் சுய ரூபம் பற்றி தனக்கேத் தெரியாமல்  குழப்பமாக இருக்கக் கூடாது.  அப்படி இருப்பது மன வளர்ச்சியற்ற நிலை.  வாழ்க்கையில் நாம் எடுக்கும் பல முடிவுகளை அபத்தத்திற்கு அவை இட்டுச் செல்லும்.

நம்மைப் பற்றி நாமே கறாராக கணிக்கும் அறிவு நமக்கு  வாய்த்தல் ஒரு வரம்.   அந்த உயர்ந்த நிலை வாய்க்க நம்மை அர்ப்பணித்துக் கொள்வது தான் இந்த தியானத்தின் முதல் படி.   இதை சாத்தியப்படுத்த இரட்டை நிலை இல்லாத  வாழ்க்கை முறை சித்திக்க வேண்டும்.

அது என்ன இரட்டை நிலை?..

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(வளரும்)

12 comments:

ஸ்ரீராம். said...

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மூளை இறைவன் படைப்பின் உன்னதம். நீங்கள் சொன்ன அதே டிராஃபிக் ஜாம் போல பன்மடங்கு அதிக டிராஃபிக் மூளையில் ஒரு கணத்தில் ஏற்பட்டாலும் அதை அது மிக அழகாகச் சமாளித்து விடுகிறது!

ஸ்ரீராம். said...

நான் யார் என்கிறஉணர்வு எல்லோருக்குள்ளும் இருக்கும்.   என்ன, தனக்குத் தெரிந்த அந்த உண்மையை யாரும் முழு அளவில்  வெளிக்காட்டுவதில்லை!

G.M Balasubramaniam said...

/மனத்தில் பதித்துக் கொள்கிற மாதிரி படித்தால் நல்லது. ஏனென்றால்
அத்தனையும் உடல் சாத்திரம் சம்பந்தப்பட்டது. /உடலில் மூளை என்பதே ஒரு கம்ப்லெக்ஸ் சமாச்சாரம் கற்பனையில் கயிறு திரிப்பது அல்ல
நாள்பட நாள்பட மூளை தன் உயிர்ப்பை இழக்கலாம் அந்த மாதிரி நேரங்களில்நம்செயல்கள் நம்கட்டுப்பாட்டையும் .மீறலாம் atrophy எனலாமா சில மூளை செல்கள் செயலிழக்கின்றன அல்லதுசெயல் திறனை இழக்கின்றன இவை பற்றி தெரிய தெரிய நாம் நமக்கும் இதுவோ அதுவோ என்று தெரியாமல் ஹைபோகோண்ட்ரியாக் ஆக மாறும் நிலை ஏற்படலாம்
நீங்கள் எழுதும்போது brain dead என்றால் என்ன என்பதையும் விளக்கலாமே விஞ்ஞானம் வளரும் வேகத்தில் எதுவும் சாத்தியமகலாம் கற்பனை தேவைப்படாது

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

அதெல்லாம் தான் கைக்குட்டையை விரித்தாற்போன்ற அந்த சிறிய பிரதேசத்தில் நடக்கும் அற்புதங்கள். சொல்லப்போனால் மூளையின் செயல்பாட்டுத் திறமையில் 10% கூட நாம் உபயோகித்துக் கொள்வதில்லை என்ற அறிவுலகக் குற்றச்சாட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதும் சரியே. ஆனால் நமது இந்த தியானத்தில் தன்னைப் பற்றி சரியான கணிப்பு தனக்குத் தெரிந்திருந்தால் போதும் என்ற அளவில் இருந்தால் போதும்.

தன்னைப் பற்றிய தவறான கணிப்புகள் தனக்கே இருந்தால் தான் சங்கடம்.
எப்படி தன்னைப் பற்றித் தானே சரியாகப் புரிந்து கொள்வது என்பது கூட சிலருக்குக் குழப்பமாக இருக்கலாம். சிலருக்கு தன்னை சரியாகத் தானே வரையறுப்பது பிடிக்காமல் இருக்கலாம். காலம் இருக்கிற இருப்பில் இதெல்லாம் தேவையா என்று சிலருக்கு இருக்கலாம். தன்னைத் தானே தெரிந்து கொள்வதற்கு இடையூறாக இருக்கும் இப்படி பல லாம்'கள் உண்டு. தன்னைத் தானே தெரிந்து கொள்வதற்கு இந்தத் தடுப்புச் சுவர்களையெல்லாம் தாண்டி வர வேண்டும், ஸ்ரீராம்.

அப்படி தாண்டி வந்து விட்டவர்களுக்கு இந்தத் தியானம் ஆக்கபூர்வமான உதவிகள் செய்யும். அது மட்டும் நிச்சயம்.

ஜீவி said...

@ G.M.B.

//உடலில் மூளை என்பதே ஒரு கம்ப்லெக்ஸ் சமாச்சாரம். //

உண்மை தான். இருந்தாலும் உங்கள் விருப்பப்படி உங்கள் எண்ணங்களை அமைத்துக் கொள்ளலாம் என்ற ஆக்கபூர்வமான சலுகையை உடல் உறுப்புகளில் மூளை ஒன்று தான் நமக்கு அளித்திருக்கிறது.

நம் எண்ணங்கள் தான் நாம் என்பது இன்னொரு உண்மை. இந்த உண்மை ஒன்று தான் ஒருவர் தம் வாழ்க்கையை சீர்பட அமைத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய உருப்படியான சமாச்சாரம். இதை விட வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்..

//விஞ்ஞானம் வளரும் வேகத்தில் எதுவும் சாத்தியமகலாம் கற்பனை தேவைப்படாது.. //

கற்பனை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

கற்பனைகளின் தேவை இல்லாத காலம் சூன்யமானது. வரட்சியானது.
வரலாற்றுப் போக்கில் அப்படியான ஒரு காலம் நாம் கண்டிராதது.

ஆக்கபூர்வமான கற்பனைகள் தாம் விஞ்ஞான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றன என்பது இன்னொரு உண்மை.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றில் வேண்டிய மட்டும் இதற்கு நிறைய உதாரணங்களைப் பார்க்கலாம்.

Bhanumathy Venkateswaran said...

தொடர்கிறேன், கவனமாக.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அப்பட்டமாக தன்னைப் பற்றி தானே உணர்தல் என்பது சற்று சிரமமே. உணர்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளல் அதிலும் சிரமே. நம்மை தகவமைத்துக்கொள்வதற்காக நம்மை நாமே ஏமாற்றி பல சூழல்களில் நடிக்க ஆரம்பித்துவிடுகின்றோமோ என்று தோன்றுகிறதே?

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

தொடர்வதில் சந்தோஷம். கவனமாகத் தொடர்வதில் ஐயங்கள் அல்லது பற்றாக்குறை விவரங்கள் தோன்றலாம். அவற்றை அவ்வப்போது குறிப்பிட்டீர்களென்றால் வாசிப்பவர்களின் கருத்தறிந்து தொடரைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும். நன்றி, சகோதரி.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, Retd.Asst. Regtr.

தாங்கள் சொல்வது சரியே.

அந்த நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை களைவதற்குத் தான் இந்த தியாயனமே. ஏமாறுகிறோம் என்பதே நமக்குத் தெரிந்து இருப்பதால் களைவதும் சுலபமே. வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் நமக்குள் நாமே போராடி நம்மை தூய்மைபடுத்திக் கொள்கிறோம். இதனால் ஏற்படும் பலன் எக்கச்சக்கம். தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, ஐயா.

வே.நடனசபாபதி said...

நாம் யார் என அறிந்துகொள்ள தியானம் உதவும் என்பது புதிய தகவல். தொடர்கிறேன் இரட்டை நிலை இல்லாத வாழ்க்கை முறை பற்றி அறிய

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

விட்டுப் போன பகுதிகளையும் விட்டு விடாமல் தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி, ஐயா.

Related Posts with Thumbnails