மின் நூல்

Monday, May 18, 2020

EVEN IF--ம் இந்திரர் அமிழ்தமும்

ரு பிரபலத் தொலைக்காட்சியில் பேராசிரியர் ஒருவர் ஆங்கில மொழிக்கான  இலக்கணப்பாட  வகுப்புகளைத்  தொடர்ச்சியாக   எடுத்துக் கொண்டிருந்தார்.   சென்னை  தி.நகரில்,   சுலபமாக ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி வகுப்புக்களைக் கொண்ட டூடோரியல் பள்ளி ஒன்றையும்  மிகப் பிரமாதமான முறையில் அந்தப் பேராசிரியர் நடத்தி வருகிறார்.

 அந்தப் பேராசிரியரின் பாடம் நடத்தும் ஆற்றலில் கவரப்பட்டு,  அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அவரது  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ----

If- என்னும் ஆங்கில Conjunction சொல்லின் தொடர்பாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை விவரமாக விளக்கப்புகுந்தவர்,  "EVEN IF" என்ற வார்த்தையை எந்த நேரத்து எப்படியெல்லாம்  உபயோகப்படுத்தலாம் என்பதைச்  சொல்லிக்  கொண்டிருந்தார்.

Even if it is thunder strom, I will attend the programme.
Even if you provide $1000, I will not do that job.

இடி இடித்துப் புயல் வீசினும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்.
ஆயிரம் டாலர் பணம் தந்தாலும், அந்தக் காரியத்தைச் செய்யமாட்டேன்.

'Even if' என்கிற வார்த்தையை  உபயோகப்படுத்துதலில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்லி   மிக அழகாக   அந்த நிகழ்ச்சியைப்  பார்க்கும் சிறார்களின் மனத்தில் படியும்படி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.          
தீர்மானமாக, உறுதிபட செயல்பட முடியாது என்று முடிவெடுக்கையில், இந்த 'Even if' வரும்;

அதே மாதிரி எதுவரினும் செயல்படுவேன் என்கிற இடத்தும் இந்த 'Even if' ஒட்டிக்கொண்டு ஓடோடி வரும்.

'EVEN IF'--ன்  மாறுபட்ட எதிர் எதிரான இரண்டு உபயோகிப்புக்கள் இவை.

இந்த 'Even if'-ஐ தொலைக்காட்சியில் அந்தப் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருக்கையில், கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, மனமோ தறிகெட்டு சங்க காலத்திற்குப் பறந்தது. கண்கள் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியை நினைத்துப் பனித்தன!

வழுதி என்கிற வழக்கிலேயே அவன் பாண்டிய மன்னனென்று தெரிகிறது. பெருவழுதி எப்படி இறந்திருப்பான்?.. எதிர்பாராத இறப்பு மாதிரி தான் தெரிகிறது, அவன் எந்தப் பெருவழுதி என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காக சுட்டப்படுவது, 'கடலுள் மாய்ந்த' என்னும் குறிப்புச் சொற்றொடர்!

கடல் கடந்து படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவது, அன்றைய தமிழக மன்னர்களுக்கு இயல்பான ஒரு செயலாக இருந்தது. "கடாரம் கொண்டான்" என்று கடல கடந்து சென்று கடார நாட்டை வெற்றி கொண்டதைக் குறித்துச் சொல்லும்படி இராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதிலிருந்து, இந்த மாதிரி கடல் தாண்டிய போருக்கெல்லாம், தாங்களே தலைமை தாங்கிப் படை நடத்திச் சென்று வென்றிருக்கிறார்கள் தமிழக மாவேந்தர்களென்று தெரிகிறது! அப்படி ஒரு படையெடுப்பின் பொழுதுதான் இந்த பெருவழுதி கடலுள் மரக்கலம் கவிழ்ந்து மாய்ந்து விட்டானோ?...கடலுள் மாய்ந்த இந்த பெருவழுதி, இளம் வயதுடையோன் என்றுக் குறிக்க இளம் பெருவழுதியோ?..

--என் நினைவுகள், பரிதாபச் சூழலில் முக்கித் தவித்தன.

எவ்வளவு புலமை?..எவ்வளவு சிந்தனைச் சிறப்பு?..எவ்வளவு குண மேன்மை?..இவன் யாத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல்தான் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கப்பெறினும், அந்த ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தங்களை நமக்குச் சொல்லி நானூற்றில் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது!...பண்டைய தமிழன் தலை நிமிர்ந்து நிற்க முற்றிலும் தகுதியுடையோன் என்று பறைசாற்றும் இப்படிப்பட்ட அட்டகாசமான பாடல்களை வாசிக்கும்
நேரத்து உள்ளம் விம்மி களிப்பெய்துகிறது!..

"உண்டால் அம்ம, இவ்வுலகம் -- இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின், உயிரும் கொடுகுவர்; பழியெனின்
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே"

(புறநானூறு--182)

திணை--பொதுவியல். துறை--பொருள்மொழிக்காஞ்சி

அமுது கிடைப்பினும் இனிது எனத்
தான் மட்டும் உண்ணார்; பிறரை வெறுத்தலும்
சோம்புதலும், மனச்சோர்வும் அறியார்
புகழ் என்றால் உயிரையே கொடுப்பர்
பழி என்றால் இந்த உலகையே
பரிசாகக் கொடுத்தாலும் பெறார்.
தனக்கென்றால், வலிந்து எந்த முயற்சியிலும் ஈடுபாடாதார்,
பிறர்க்கென்றால், எதையும் முயன்று செய்து கொடுக்கும் தன்மையுடையோர்.....

---'இப்படிப்பட்டவர் இருக்கையினால் தான், ஐயா, 'உண்டால் அம்ம இவ்வுலகம்'---இந்த உலகம் இருக்கிறது'  

---  என்று பிரகடனப்படுத்துகிற வகையில்,பாடலின் முழு அழுத்தத்தையும்
முதல் வரியில் கொண்டு போய்ச்சேர்த்து முடிக்கும் கவி அரசனின்  மாசுமறுவற்ற உள்ளமும்  மொழியை தான் சொல்ல வந்ததற்கேற்ப   வளைத்துக்  கையாண்ட அவனது மொழியாற்றலும்    சிலிர்ப்பேற்படுத்துகிறது!...

"இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே"-- என்கிற வரிக்கு, "Even if"--என்னும் ஆங்கில Conjunction- வார்த்தையைப் பொருத்திப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது.

அமிழ்தம் எப்படிப்பட்ட உச்சகட்டச் சிறப்பு உடைத்து என்பது தெரியும்; அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும்,  தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்!

"Even If"--என்ன அருமையாக இங்கே பொருந்துகிறது, பாருங்கள்!

18 comments:

நெல்லைத் தமிழன் said...

ஹப்பா... அந்த பழைய, நான் ரசித்த ஜீவி சாரின் தமிழ் இடுகை. இதைப் படிக்கப் புகுந்துதான் உங்கள் தளத்தால் கவரப்பட்டேன்.

நல்லா ரிலேட் பண்ணி எழுதியிருக்கீங்க. மிகவும் ரசித்தேன். (ஆனாலும் முன்னமே இதனைக் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு சந்தேகம்.. உண்டாலம்ம தொடரை).

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//ஹப்பா... அந்த பழைய, நான் ரசித்த ஜீவி சாரின் தமிழ் இடுகை..//

ஆறோ ஏழோ எழுதினேன். அப்புறம் வழக்கம் போல விட்டுப் போயிற்று. இந்தப் பகுதியில் சங்க நூல்களின் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற
புத்தம் புதிய ஆசை பிறந்திருக்கிறது. அதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறேன். அதற்கான ஆரம்பம் தான் இது.

ஒவ்வொரு சங்கச் செய்யுளுக்கும் கவிதை வடிவிலேயே அதற்கான பொருளைக் கொடுக்கப் போகிறேன். அது தான் இதுவரை யாரும் செய்திராத புதுமையாக அமையப் போகிறது. பேராசிரியர்கள்தனமாய் இல்லாமல் வழக்கமான பழக்கப்பட்ட எழுத்து நடை இருக்கவே இருக்கிறது. அது கைகொடுக்கும். எப்படி அமையப் போகிறது என்று பார்க்கலாம்.

//(ஆனாலும் முன்னமே இதனைக் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு சந்தேகம்.. உண்டாலம்ம தொடரை).//

மறந்து போனேன். என்ன சந்தேகம் சொல்லுங்கள். தீர்த்து வைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி, நெல்லை.

ஸ்ரீராம். said...

நல்ல ரசனை. நிகழ்ச்சியிலிருந்து பாடல் நினைவுக்கு வந்ததோ, பாடலிலிருந்து நிகழ்ச்சியை இணைத்தீர்களோ... ஒன்றைச் சொல்லப் புகுந்து அதனினும் சிறந்த ஒன்று கிடைத்தது சிறப்பு.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... தமிழமுது. எனக்கு நீண்ட நாள் ஆசை உண்டு - அகநானூறு, புறநானூறு பாடல்களை ஒவ்வொன்றாக விளக்கத்துடன் ரசிக்க வேண்டும் எனும் ஆசை.

உங்களுடைய பதிவினை ரசித்தேன். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

// நிகழ்ச்சியிலிருந்து பாடல் நினைவுக்கு வந்ததோ, பாடலிலிருந்து நிகழ்ச்சியை இணைத்தீர்களோ.//

கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடியசைந்ததா கதையோ எனில்,
நிகழ்ச்சிதான் என்றோ வாசித்த கவிதை பக்கம் இழுத்துச் சென்றது. இப்படி ஒன்றின் நினைவில் இன்னொன்று என்பது வரம். தட்டுப்பட்டால் விட்டு விடக்கூடாது என்பது சுய அனுபவம்.

இராய செல்லப்பா said...

தங்கள் இனிய வரிகளில் சங்கக் கவிதைகளின் மறுபிறப்பைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

அப்போ, தொடங்கியிருக்கும் இந்தப் பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து வாருங்கள், வெங்கட்.

வே.நடனசபாபதி said...

தொலைக்காட்சியில் Even if ஐ பயன்படுத்துவது பற்றி பாடம் நடத்திய அந்த ஆங்கில பேராசிரியருக்கு நன்றி சொல்லவேண்டும். இல்லாவிடில் ‘உண்டால் அம்ம, இவ்வுலகம்’ என்ற புறநானூற்று பாடலுக்கான அழகிய விளக்கத்தை பெற்றிருக்கமுடியுமா?

இதுபோல் இன்னும் பல சங்கப் பாடல்களை சுவைக்கக் காத்திருக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஒரு ஆங்கில ஆசிரியராக உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன். even if ஐ மிக அழகாகச் சங்கப்பாடல்களுடன் டக்கென்றுப் பொருத்திச் சென்ற விதம் அருமை. இது போன்று தொடர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அழகான பகுதி. அந்த ஆங்கிலப் பயிற்சி நிலையம் எதுவென்று புரிந்தது. அந்த ஆசிரியர் ஆங்கிலம் பயிற்றுவிப்பதை முன்பு பார்த்திருக்கிறேன்.

ரசித்துச் செய்திருக்கிறீர்கள். டக்கென்று பாடல் நினைவுக்கு வந்து இதோடு கோர்த்துச் சொன்னது ஒரு ஸ்வாரஸ்யமான சிறப்பான பதிவு.

கீதா

வல்லிசிம்ஹன் said...

மிக அருமை ஜீவீ சார்.

ஒரு ஆங்கிலச் சொற்றொடர்,
தமிழ்ப் பாடலைக் கொண்டு வரமுடியுமானால் உங்கள் சிந்தனை வளத்தை என்ன வென்று சொல்வது.
வழுதி,இளம் வழுதி, இளம் பெரிய வழுதி வாழ்க.
தமிழ் மக்களின் மேன்மை சொல்லித்தான் அடங்குமோ.
இன்னும் பாடல்கள் வரக் காத்திருப்போம். நன்றி சார்.

ஜீவி said...

@ இராய. செல்லப்பா

1957-ல் மர்ரே எஸ்.ராஜம் அவர்கள் பதிப்பித்த பதிப்பின் இரண்டாம் பதிப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1981-ல் இரண்டாம் பதிப்பாக பன்னிரண்டு தொகுதிகளாக சங்க இலக்கியம் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். முன் வெளியீட்டு திட்டத்தில் அப்பொழுதே வாங்கி வைத்திருந்தது தான் இப்பொழுது துணையாக இருக்கிறது.

சங்க இலக்கியத்தில் எந்தச் செய்யுளை எடுத்துக் கொள்கிறோமோ அதற்கு ஒத்து போகிற மாதிரியான ஒரு நிகழ்வை கற்பனையில் கதை போல எழுதி செய்யுளுக்கான பொருளை நவீன கவிதை வரிகளில் கொண்டு வந்து விட்டால் வேலை முடிந்த மாதிரி தான்.

விட்டதைத் தொட்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பார்க்கலாம், ஸார்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

காலம் போகிற போக்கில் சங்க இலக்கியங்களையே மறந்து போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. தமிழாயாந்த தமிழ் அறிஞர்களைப் பார்ப்பது அவர்கள் உரைகளைக் கேட்பது என்பனவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகையில் பழந்தமிழ்ச் செல்வங்கள் என்ன ஆகுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது. அந்த அச்சம் தான் அடிப்படை. அது தான் இப்படியான ஒரு உந்துதல் வேகத்தை மனத்திற்கு தந்திருக்கிறது. தங்கள் உற்சாகமூட்டல் அதற்கான சக்தியைத் தரும். பார்க்கலாம், ஐயா.

ஜீவி said...

@ துளசிதரன்

எப்படி இருக்கிறீர்கள், துளசிதரன்?.. தங்களை இங்கு பார்த்ததில் சந்தோஷம்.

தங்கள் உற்சாகம் எனக்கு எழுதுவதற்கான வலிமையைத் தருகிறது. இது போலவே பொருத்தமான செய்திகளோடு தொடர்கிறேன். நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ கீதா

ஜெயா டிவி என்று நினைக்கிறேன். அதில் தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. கரும்பலகை துணையுடன் ஆசிரியர் ராஜகோபால் அவர்கள் மாணவர்கள் எதிரே அமர்ந்திருக்கிற மாதிரி கற்பிதம் கொண்டு ஆங்கில வகுப்பெடுக்கும் அந்த நிகழ்ச்சி பிரமாதமாக இருக்கும். நீங்களும் அதை ரசித்திருப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம், சகோ.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

வாங்க வல்லிம்மா.

சங்கப்பாடல் -- அதற்குப் பொருத்தமான ஒரு கற்பனை நிகழ்வு -- சங்கப் பாடலான நிஜத்தின் நிழலான ஒரு புதுக்கவிதை.. பிரமாதப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு செய்யலாம் என்றிருக்கிறேன்.
தொடர்ந்து வந்து விடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும். நிறைய பேசலாம்.

Bhanumathy Venkateswaran said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த ஆங்கில பேராசிரியர் வழங்கும் நிகழ்ச்சியை நானும் விருப்பத்தோடு பார்ப்பேன். அதோடு சங்கப்பாடலை முடிச்சுப் போட்ட உங்கள் திறமைக்கு ஒரு வணக்கம். மேலும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 

கபீரன்பன் said...

இரசித்துப் படித்தேன்.
// அந்த அமிழ்தமே கிடைக்கப்பெறினும், தான்மட்டும் தனியே உண்ணமாட்டார்களாம்!//
சங்ககால பாடல் எடுத்துக்காட்டு அருமை.

"விருந்துப் புறத்ததாத் ..." குறளில் சாவாமருந்தெனும் அமிழ்தம் ஆனாலும் விருந்தினரை விட்டு உட்கொள்ளக் கூடாது என்னும் திருக்குறளை விட ஒருபடி மேலே சென்று யாரையாவது தேடிப்பிடித்து பகிர்ந்து கொள் என்று சொல்வது நம் தேசத்து நாகரீகத்தின் உச்சம். தமிழமுதம் பகிர்வுக்கு நன்றி

Related Posts with Thumbnails