மின் நூல்

Sunday, October 13, 2024

இது ஒரு தொடர்கதை -- 23

லேசான புன்னகையுடன்,  மோகன் வெளியே நின்று கொண்டிருப்பான் என்ற எதிர்பார்ப்பில் வித்யா கதவைத் திறந்தாள்.

வெளியே சிலிண்டருடன் Gகேஸ் கம்பெனி  ஆளைப் பார்த்து ஏமாற்றத்தில் அவள் முகம் கவிந்தது.  சமாளித்தபடி கதவை அகலத் திறந்து, "வாப்பா.." என்றபடி உள்பக்கம் போனாள். 

சிலிண்டர் டெலிவரி ஆள் உள்ளே வருவதைப் பார்த்து அவசர அவசரமாக ஜலஜா அவனுக்கு வழி காட்டியபடி சமையலறை உள்பக்கம் போனாள்.  அம்மாவுக்கு உதவுவதற்காக வித்யாவும் சமையலறை கதவின் உள்பக்கம் நின்று கொண்டாள்.

சிலிண்டர் காஸை செக் பண்ணி, அவன் காலி சிலிண்டரை எடுத்துக் கொண்டு வெளியே வந்ததும் பில் பார்த்து கையெழுத்திட்டு காசு கொடுத்து அனுப்பினார் புரந்தரதாசர்.   அந்த வீட்டில் இன்னாருக்கு இன்ன வேலை என்று அட்டவணையிட்டு குறித்த மாதிரி எல்லாம் நடந்தது.  இதை வெளி மனுஷர் ஒருத்தர் பார்த்தால் கூட ஆச்சரியப்படக்கூடியதாக இருக்கும் தான்.

"காலிங் பெல் அடிச்சதும் மோகன் தான் வந்து விட்டானோ என்று நினைத்தேன்" என்றார் புரந்தரதாசர்.

"ஆமாம்.. ஏன் அந்தப் பையனைக்  காணோம்?" என்றாள் ஜலஜா.

"என்னைக் கேட்டேனா?" என்று வித்யாவைப் பார்த்தவாறே சொன்னார் பு. தாசர். "சித்தே தலைசாய்க்கிறேன்... அந்தப் பையன் வந்தா சொல்லு.." என்று வீட்டின் உள்பக்கம் போனார்.

கால் மணி நேரம் ஆகியிருக்கும்.  மறுபடியும் காலிங் பெல் அழைத்தது. சட்டென்று வாசல் பக்கம் வித்யா போனாள்.  

கதவைத் திறந்ததும் பேப்பர்காரப் பையன் கத்தை வார இதழ்களைக் கொடுத்து விட்டுப் போனான்..  

அன்று வெள்ளிக்கிழமை அல்லவா?..  'மனவாசம்' அந்தக் கத்தையில் இருந்தது.

அதை மட்டும் எடுத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் நாற்காலியை இழுத்துப் போட்டபடி வித்யா அமர்ந்தாள்.  வேகவேகமாக 'இது ஒரு தொடர்கதை'ப் பகுதியைத் தேடி அவள் விரல்கள் புரட்டின.  

அந்த வார தொடர்கதைப் பகுதியும் கிடைத்தது.  தொடருக்கு ஓவியர்  போட்டிருந்த படமும் அவள் பார்வைக்கு அசப்பில் தன்னைப் போலவே இருந்ததில் அவளுக்கு லேசான சந்தோஷம். அவளுக்குத் தெரிந்த வினிதா போல ஏதாவது படம் இருக்கிறதா பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாள்.  நல்ல வேளை இல்லை. அதில் அவளுக்கு அடக்க முடியாத சந்தோஷம்.  தற்செயலாகத் தான் என்றாலும் இதெல்லாம் எப்படி அமைகிறது என்று வித்யாவிற்கு ஆச்சரியம். 

அந்த சமயத்தில் தான் "வரலாமா?.." என்று வாசல் பக்கமிருந்து ஒரு குரல். பழக்கப்பட்ட குரலாக இருக்கவே அனிச்சையாக வித்யா திரும்பிப் பார்த்தாள். ஓ... மோகன்!.. 

அவள் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் அம்மா,"வாங்க.. வாங்க.." என்று அழைத்தபடியே கதவுப் பக்கம் போனாள்.  நல்லவேளை, பேப்பர் பையன் வந்து வார இதழ்களைக் கொடுத்த பொழுது வாசல்கதவை சாத்தாமல் வந்திருக்கிறோம் என்று வித்யா நினைத்துக் கொண்டாள்.

மோகன் உள்ளே வந்ததும் டக்கென்று நாற்காலியிலிருந்து எழுந்த வித்யா, "வாங்க.." என்றாள்.  அவள் கையிலிருந்த மனவாசம் இதழைப் பார்த்து, "ஓ... படிச்சாச்சா?" என்று புன்னகையுடன் கேட்டான் மோகன்.

"உங்க பகுதி மட்டும்.." என்று வித்யா சொன்னதும் இருவருமே சிரித்தனர். "ஸாரை எங்கே காணோம்?" என்று சுற்றுமுற்றும் பார்த்தான் மோகன்.

"இத்தனை நேரம் இங்கே தான் இருந்தார்,, உள்ளே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போயிருப்பார்.." என்று ஜலஜா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே புரந்தரதாசர் வந்து விட்டார்.."என்ன மோகன்! ஒம்போது மணிக்கு வருவேன்னு சொன்னேயே என்று.." என்று சொல்ல வந்ததை முடிக்கக் கூட இல்லை, 'சாரி.. சார்.. இன்னிக்கு ஆபீஸ்லே எதிர்பாராத வேலை ஒண்ணு.. அதான், டிலே ஆயிட்டது.." என்று தழைந்த குரலில் மோகன் சொல்லும் பொழுதே "பரவாயில்லேபா.. ஜஸ்ட் வரேன்யே காணுமேன்னு நெனைச்சிண்டிருந்தேன்.." என்றார் புரந்தரதாசர்.  "உட்காரு, மோகன்.." என்று சோபாவைக் காட்டி தானும் பக்கத்து சோபாவில் அமர்ந்தார்.  மற்றவர்களும் பக்கத்து சோபாக்களில் அமர்ந்தனர். 

"என்ன சாப்பிடுறீங்க மோகன்? காப்பி?"

"சாரி, ஸார்..  இன்னிக்கு ரெண்டு காப்பி ஆச்சு.. வேணாம் சார்,,"

"அப்போ கூல் டிரிங்க்ஸ் ஏதாவது?.."

"இல்லே, ஸார்.. ஏற்கனவே ஓவர் லோட்.." என்று அவன் சொன்னதும் "இன்னிக்கு நம்ம வீட்லேயே சாப்பிட்டுடலாம்.." என்றாள் ஜலஜா.

'அட! வழக்கமா இவ்வளவு நெருங்கிப் பேசாத அம்மா கூடவா' என்று வித்யா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே  "சரிங்க.." என்று மோகன் சொன்னதில் எல்லோருக்கும் சந்தோஷம்.


"உங்க வீட்டு வெளிப்பக்கம் இருக்கே, ஒரு பெரிய இரும்பு கேட், அதைப் பகல்  நேரங்களில் உள் பக்கமா மூட மாட்டீங்களாக்கும்?" என்று மோகன் திடுதிப்பென்று கேட்ட பொழுது எதற்குக் கேட்கிறான் என்று தெரியாமல் திகைத்தார் புரந்தரதாசர்.

"ஆமாம். பகல் நேரங்களில் மூடுவதில்லை.. ராத்திரி மட்டும் நாதாங்கியை மாட்டி பூட்டு போட்டுடுவோம்"என்று ஜலஜா சொன்ன போது "ஓ.. அப்படியா?.. பகல் நேரங்களிலும் சும்மாவானும் நாதாங்கியை மட்டும் போட்டுட்டீங்கனா  இன்னும் சேஃப்டி தானே? இப்பப் பாருங்க, நான் வரும் பொழுது அந்த வெளி கிரில் கேட், உள் வாசல் மெயின் டோர் ரெண்டும் திறந்திருந்ததில்லையா? அந்த மாதிரி இருக்காம இருந்தா  நல்லது தானே! அதுக்காகத் தான் கேட்டேன்" என்றான்.

"நீங்க சொல்றதும் சரி தான்" என்றாள் ஜலஜா. "வர்றவங்க கை நுழைச்சு நாதாங்கியை திறந்திண்டு வந்தாலும் போறப்போ சாத்திண்டு போறதில்லை.. இங்கிருந்து கொஞ்சம் தூரமா கேட்டு இருக்கில்லியா, அதனாலே எங்களுக்கும் அப்பப்ப போய் சாத்த முடிலே.. அதனாலே இருக்கட்டும் போன்னு அப்படியே விட்டுடறோம்.  ஆனா இந்த வாசக்கதவை  நிச்சயம் சாத்தி தாழ் போட்டு மூடிடுவோம். காலிங் பெல் அடிச்சதுன்னாத்தான் திறக்கறது வழக்கம்."  

"மோகன்! இன்னிக்கு இந்தக் கதவு திறந்தபடி இருந்தது நான் பண்ணின தப்பு.." என்றாள் வித்யா. "பேப்பர்காரன் வரும் பொழுது கூட இந்தக் கதவு சாத்தித் தான் இருந்தது. கை நிறைய வார இதழ்களை வாங்கிக் கொண்டு வந்தவள் வெளிக்கதவை சாத்த மறந்திருக்கிறேன். அது என்னோட தப்பு தான்" என்றாள் வித்யா. 

"அப்படியா?  அப்படின்னா சரி.  நேத்து ராத்திரி நான் இங்கே வந்து விட்டுப் போனேன் இல்லியா? அப்போ அந்த வெளி கேட் பக்கம் தான் கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். அவ்வளவு பெரிய கேட்டுகளை பொதுவா நான் வீடுகளில் பார்த்ததில்லை.  இப்போ வர்றத்தே கூட அது பக்கம் கொஞ்சம் நின்னு அதன் உயரத்தையும் அகலத்தையும் பிரமிப்போடு பாத்துட்டுத்தான் வந்தேன். ஆக்சுவலி அரண்மனைக் கதவு மாதிரி அற்புதமாத் தான் இருக்கு.. ராத்திரி நேரங்களில் லோன்லியா தனிக்காட்டு ராஜா மாதிரி அது தனியா நிக்கறது இன்னும் அழகு.." என்றான் மோகன்.

அவன் அப்படிச் சொன்ன பொழுது நேற்று ராத்திரி 'மோகன், நாளைக்குப் பார்க்கலாமா?' என்று இவள் கேட்டதற்கு, 'பார்க்கலாம், வினிதா' என்று சொல்லி விட்டு 'சாரி, வித்யா' என்று அவன் திருத்திக் கொண்டது இப்பொழுது வித்யா ஞாபகத்திற்கு வந்தது..  இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மோகன்! உங்க எழுத்து மாதிரியே தான் இருக்கு, நீங்க கேஷூவலாப் பேசறதும்.." என்றாள், புன்னகைத்தபடி.

"பையா.. அந்த கேட் இந்த வீட்டிக்கு வந்ததே பெரிய கதை.." என்றார் புரந்தரதாசர்.

"ஹஹ்ஹா.. மோகன் தான் கதை எழுதறார்ன்னா, நீ வேறே கதை சொல்ல ஆரம்பிசிட்டையா, அப்பா?" என்று அவள் சிரித்த பொழுது மகளுடன் சேர்ந்து ஜலஜாவும் சிரித்தாள்.

"ஸார் சொல்லட்டும், நான் எழுதற கதைலே ஏதாவது இண்டு இடுக்கில் நுழைச்சிக்க உதவுமிலே.." என்றான் மோகன்.

"இண்டு இடுக்கு என்ன, மெயின் கதையாகவே எழுதிடுங்களேன்.." என்றாள் வித்யா.

"இப்போ அந்த கேட் பத்தி வேணாம், மோகன்.  நான் அது பத்திச் சொல்ல ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ, நீ வந்த வேலை கெட்டுடும்.  இன்னொரு சமயத்திலே சொல்றேன்..  ஆனா, நீ இதைப் பத்திக் கேட்டாத்தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும்.  சரியா?" என்றார் புரந்தரதாசர்.

"நிச்சயமா இன்னொரு சமயம் கேப்பேன்.. ஏன்னா, அந்தக் கேட்டின் வெளித் தோற்றம் அப்படியே என் மனசிலேயே நின்னுண்டிருக்கு.." என்றான் மோகன். அப்படிச் சொல்லும் பொழுது ஏனோ அவன் கண்கள் பளபளத்ததை வித்யா பார்க்கத் தவறவில்லை.

"அப்படியா?.." என்று புரந்தரதாசர் கேட்ட பொழுது அவர் குரலில் ஒரு படபடப்பு இருந்ததை வித்யா கவனிக்கவில்லை என்றாலும் மோகன் கவனத்திலிருந்து அது தப்பவில்லை. "நிச்சயம் அது பற்றி இவரிடம் கேட்டே ஆக வேண்டும் என்று மோகன் மனத்தில் குறித்துக் கொண்டான்.

(தொடரும்)

9 comments:

கோமதி அரசு said...

கதை நன்றாக போகிறது. கதை உரையாடல் நன்றாக இருக்கிறது இயல்பாய்.

//"நிச்சயமா இன்னொரு சமயம் கேப்பேன்.. ஏன்னா, அந்தக் கேட்டின் வெளித் தோற்றம் அப்படியே என் மனசிலேயே நின்னுண்டிருக்கு.." என்றான் மோகன். அப்படிச் சொல்லும் பொழுது ஏனோ அவன் கண்கள் பளபளத்ததை வித்யா பார்க்கத் தவறவில்லை.//

அந்த கேட்டுக்கு ஒரு முன் கதை இருக்கு போலவே! மோகன் வாயில் தவறி வரும் வினிதாவுக்கும் இந்த கேட்டுக்கும் சம்பந்தம் இருக்குமோ?

ஜீவி said...

உரையாடல் கதை நெடுக இருக்க இயல்பாக பார்த்துக் கொள்கிறேன். அதைக் குறிப்பிட்டுச் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி.

கேட்டுக்கு முன் கதை இருப்பது? நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னது சரியே, சகோதரி. அதுக்குத் தான் மனத்திற்குள் ஒரு ஷேப் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

சுய பாதுகாப்பு காரணங்களுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  சிலிண்டர் விநியோகிப்பவரை நாங்கள் வீட்டுக்குள் வரவிடுவதில்லை.  வாசலிலேயே நிறுத்தி செக் செய்து வாங்கி விடுவோம்.  தள்ளுவானில் பழைய சிலிண்டரைத் தள்ளிக்கொண்டு வந்தால், புதிய சிலிண்டரில் லீக் இருக்கிறதா என்று செக் செய்து புதிய சிலிண்டரை அவர் தள்ளுவானில் வைக்க, உள்ளே தள்ளிக் கொண்டு சென்று விடுவோம்.  தேவைப்படும் சமயம்.  நாங்கள்தான் மாற்றுவோம்.  இரண்டு மாடிகள் சுமந்து வருவதால் (லிஃப்ட் இல்லாததால்) சிலிண்டர் விலையுடன் ஐம்பது ரூபாய் அதிகம் வாங்குவார்.  

ஸ்ரீராம். said...

// "என்னைக் கேட்டேனா?" என்று வித்யாவைப் பார்த்தவாறே..

ஒரு 'ன்'  குறைகிறது.

ஸ்ரீராம். said...

தனித்தனி வாக்கியங்களாக அமையவேண்டியதை "கேட்டுக்கொண்டிருக்கும்போதே வந்த புராதரதாஸர்.....  என்று கேட்கும்போதே மோகன் வேலை இருந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே.."  என்பது போல இரண்டு மூன்று இடங்களில் வந்திருப்பது ஒற்றை விரல் டைப்பிங் சிரமத்தினாலா?  வாய்ஸ் டைப் செய்து எடிட் செய்யலாமே....

ஜீவி said...

சிலிண்டரைப் பொருத்தி அடுப்பை எரிய வைத்து செக் பண்ணுவதை முக்கியமாகக் கருதுவதால் அப்படியான பழக்கம் இல்லை. இவர்கள் கொண்டு வரும் சிலிண்டர்களில் காஸ் லீக் இப்பொழுதெல்லாம் அதிகம் இருக்கிறது. அப்படியான லீக் இருந்தால் (வாசனையில் தெரிந்து விடும்) உடனே சிலிண்டரில் வாஷர் மாற்றி சரி செய்து விடுவார்கள். கொண்டு வரும் சிலிண்டர் ஒரு மூலையில் அதற்காகவே இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டு காலி சிலிண்டரை எடுத்துச் செல்வர். உபயோகத்திலிருக்கும் சிலிண்டரில் காஸ் தீரும் போது நாங்களே மாற்றிக் கொண்டு விடுவோம். பைப் லைன் காஸ் வசதிக்கு ஆயத்த வேலைகள் நடந்து முடிந்திருக்கினறன.

ஜீவி said...

வாய்ஸ் டைப்பெல்லாம் பழக்கமில்லை! திருத்தினாலும் save பண்ண மறந்து போனவை இவை!

ஜீவி said...

கேட்டேன்னா என்பது உச்சரிப்பில் வரும் பொழுது 'ன்' மழுங்கி கேட்டேனா என்றாகி விடும். ஆக, இது தான் சரி.

ஜீவி said...

சில வார்த்தைகளை சேர்த்து எழுதுவது தான் வழக்கம்.
உதாரணத்திற்கு அங்கிங்கெனாதபடி (அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் -- தாயுமானவர்) என்ற வார்த்தை.
செய்யுள் நடையிலான வரிகள் தற்காலத்தில் பிரித்தெழுதுவது ஒரு சோகம். மணிப்பிரவாள நடையில் சேர்த்தெழுதும் வார்த்தைகள் துள்ளித்துள்ளி குதிப்பது போல அழகாக இருக்கும்.

Related Posts with Thumbnails