மின் நூல்

Wednesday, May 4, 2016

அழகிய தமிழ் மொழி இது!..

பகுதி: 9

சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முன் தோன்றியது.  ஐந்து பெரும் காப்பிய குடும்பத்திற்கும் தலைமை தாங்குகின்ற தலைமகன் மாதிரி சகல இலட்சணங்களும் பொருந்திய படைப்பாக இது இருக்கிறது. அதுவும் தவிர ஒரு காப்பியம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று தன் மனத்திற்குள் வடித்துக் கொண்டு பார்த்துப் பார்த்து இழைத்த காவியமாய் பிற்கால நாவல் இலட்சணங்களையும் கொண்டு இளங்கோவடிகள் இந்தக் காப்பியத்தைப் படைத்திருப்பது அவரது அளப்பரிய புலமையின் சிறப்புகளை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது.

சிலப்பதிகாரமே முன் தோன்றிய முதல் காப்பியமாதலால், அந்தக் காப்பியத்தை வரையறைப்படுத்துவதற்கும் வழிகாட்டுவதற்கும் இதற்கு முன் தோன்றிய காப்பியங்கள் தமிழில் ஏதுமில்லை.  இருந்தாலும் இதற்கு பின் தோன்றும் இந்த மாதிரி படைப்புகளுக்கு வழிகாட்டுகிற சகல இலக்கியச் சிறப்புகளுடன் அடிகளார் இதைப் படைத்திருப்பது தான் இந்தக் காப்பியத்திற்கான சிறப்பாகிப் போகிறது.

இளங்கோ அடிகளுக்குப் பிடித்த எண் மூன்று  போலிருக்கிறது. 

முத்தான மூன்றாய் அமைந்த செய்திகள் இந்த சிலப்பதிகாரத்தில் நிறைய உண்டு. அந்நாளைய தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் மூன்றாக இருந்ததுவும் இந்த சிறப்புகளுக்குச் சிறப்பு சேர்க்கிறது. அடிகளார் சிலப்பதிகாரத்தை மூன்று காண்டங்களாகப் பிரித்திருக்கிறார் என்று முன்பே பார்த்தோம். அந்த மூன்று  காண்டங்களில் உள்ளடக்கப்பட்ட முப்பது காதைகள்.  காண்டம் என்பதைப் பெரும் பிரிவுகள் என்று கொண்டால் காதைகளை அவற்றுள் அடக்கப்பட்ட சிறு பிரிவுகள் என்று கொள்ளலாம்.  மூன்று பெரும் பகுதிகளுக்குள் அடக்கப்பட்ட முப்பது உள்  தலைப்புகளான சிறு பிரிவுகள்.

இந்த முப்பது காதைகளையும் காண்டத்திற்கு பத்து காதைகளாக அடிகளார் பிரிக்கவில்லை. புகார் காண்டத்தில் பத்து காதைகளும், மதுரைக் காண்டத்தில் பதின்மூன்று காதைகளும், வஞ்சிக் காண்டத்தில் ஏழு காதைகளுமாக முப்பது காதைகள். ஆக மதுரைக் காண்டத்திற்குத் தான் அதிக காதைகள்.  

புகார் காண்டம் கோவலன்—கண்ணாகி திருமணம், அவர்களது இல்லற வாழ்வின் சிறப்புகளும் என்று ஆரம்பமாகிறது.  மூன்றாவது காதையான அரங்கேற்றுக் காதையில் கணிகையர் குலத் தோன்றல் மாதரசி மாதவியின் அறிமுகம். சோழ மன்னன் முன்னிலையில் அவள் நாட்டிய அரங்கேற்றம். அந்த அரங்கேற்றத்தில் சோழன் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மதிப்புடைய ஒரு மாலையை மாதவியின் அரங்கேற்ற நாட்டியத்திற்கான பரிசாக அளிக்கிறான்.  

சிலப்பதிகாரத்திலும் ஒரு கூனி வருகிறாள். இவள்  ஆடலரசி மாதவியின் தோழி.  மாதவியின் தாய் சித்திராபதி, கூனியிடம் தன் மகளுக்கு அரசன் அளித்த மாலையைக் கொடுத்து ‘இந்த மாலையை வாங்குவதற்கு வசதி படைத்தவன் மாதவியை அடையட்டும்’ என்று  கூனியை ஆடவர் திரியும் வீதியில் மாலையும் கையுமாக நிறுத்தி வைக்கிறாள். 

விதி சதி செய்ய வீதியில் நின்ற கூனியிடம் அந்த மாலையை வாங்கி மாதவியை அடைகிறான் கோவலன்.  புதுக்கருக்கு கலையாத மண வாழ்க்கையில் இன்னொரு பெண் நுழைந்தது விதி வசத்தால் என்றாலும் மனைவி இருக்க கணிகையரையும் அவ்வப்போது நாடும் அக்கால காளையரின் காம இச்சைக்கு கோவல வண்டின் மலர் தாவுதல் சாட்சியம் கூறுகிறது.

ஆனால் மாதவி வித்தியாசமானவள் என்பது தான் இந்த காப்பியத்திற்கான எதிர்பாராத  ஆரம்ப முடிச்சாக அமைகிறது. நிலா முற்றத்தில் கோவலனுடன் கூடிக் களித்த மாதவி அவனையே தன் கணவனாக மனசில் வரிக்கிறாள். கூடலும் ஊடலுமாய் மாதவியுடன் நேர்ந்த சுகத்தொடக்கம், கோவலனுக்கு கண்ணகியை மறக்கும் அளவுக்கு பேரின்பமாய் இருக்கிறது. கணவனைப் பிரிந்த கண்ணகியின்  நிலையோ அனலின் அருகாமை கண்ட மெழுகின் நிலை.

இடையே இந்திரவிழா வந்து ஊரெல்லாம் விழாக்கோலம் பூணுகிறது. ஒரு நாவலில் ஊடாடிய நிகழ்வு கொண்டாடங்களை விவரிக்க அடிகளாருக்கும் அட்டகாசமான வாய்ப்பு கிடைக்கிறதுஇந்திர விழவூரெடுத்த காதை என்று இந்திர விழா நிகழ்ச்சிகளை விவரிப்பதற்காகவே ஒரு தனிக் காதை ஒதுக்கி சிறப்பு செய்கிறார் இளங்கோ


கடலாடு காதையை அடுத்த கானல்வரியில் மாதவியின் பிரிவு.  நிறைமதி நன்னாளில் புதுப்புனல் விழாவைக் கொண்டாடும் தலை நாளில் புகார் நகரத்து கடலில் விளையாடிக் களிக்கும் ஆசையில் மக்கள் கடற்பரப்பு நோக்கி விரைகின்றனர். மஞ்சத்தில் கோவலனுடன் கூடிக் களித்திருந்த மாதவி  கடலாடி வருவோம்என்ற தன் ஆசையைச் சொல்ல கோவலன் அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறான். அவர்களைத் தொடர்ந்து வரும் விதியும் அந்தக் கடற்பரப்பில் தன்  கைவரிசையைக் காட்டி விளையாடுகிறது.

கானல்வரிக் காதையை அழகான வரிப்பாட்டுகளால் நிரப்புகிறார் அடிகளார். கடல்காட்சியுடனான பின்னணியில் அந்தப் பின்னணி தந்த களிப்பில் மாதவி கோவலனிடம் யாழைத் தந்து, யாழிசைக்க வேண்டுகிறாள். அவள்  களிப்பு கோவலனுக்கு உன்மத்தமூட்டுகிறது. கோவலன் மகிழ்ச்சியுடன் யாழை வாங்கி அதை இசைக்கத் தொடங்குகிறான்.  

இங்கும் இளங்கோவுக்குப் பிடித்த அந்த மூன்று எண்ணிக்கை. காவிரியை  தலைமகளாகக் கொண்டு மூன்று ஆற்றுவரிப் பாடல்கள்.!  சிலப்பதிகாரத்தின் வாசிப்பு சுகத்திற்காக கோவலன் காவிரியை வாழ்த்திப் பாடும் இரு ஆற்றுவரிப் பாடல்களை மட்டும் இங்கு எடுத்தாளுகிறேன்:::

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சி  
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி!

மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழில் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி!

கற்பை அணிகலனாகக் கொண்ட பெண்கள் தங்கள் கணவர் பிற பெண்களுடன் கூடினாலும் தம் கணவனை வெறுக்க மாட்டார்கள். அப்படி வெறுக்காமல் இருப்பதும் அவர்களின் கற்பின் சிறப்பே!” என்ற அர்த்ததில் யாழிசைத்துப் பாடுகிறான்.  அவன் அப்படிப் பாடியதில் வேறு யாரோ பெண்ணை அவன விரும்புவது போல குறிப்பு இருப்பதாகக் கருதி மனச்சுணக்கம் கொள்கிறாள் மாதவி.

ஆனால் கோவலன் பாடிய அந்த ஆற்றுவரிப் பாடலில் அவன் மனச்சாட்சி அவனைக் குத்திக் காட்டுவதாக என் எண்ணம். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க கண்ணகியின் கற்பைத் துணைக்கழைக்கிறான் அவன்.. காதல் மனைவியைத் தனித்து விட்டுத் தான்  மாதவியுடன் உல்லாசத் தொடர்ப்பு கொண்டிருப்பினும் தன்னைக் காத்துக் கொண்டிருப்பது கண்ணகியின் கற்பே என்று கண்ணகியின் கற்பின் நிழலில் ஒதுங்குகிறான்.

---- இந்தக் கருத்து சிலப்பதிகாரத்திற்கு இதுவரை உரை எழுதிய எந்த ஆசிரியரும் சொல்லாத கருத்து.  ஆதலின் இதனை என் கருத்தாகவே கொண்டு உங்கள் எண்ணத்தையும் சொல்லுங்கள்.

(தொடரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
Related Posts with Thumbnails