மின் நூல்

Thursday, February 9, 2012

பார்வை (பகுதி-26)

                  அத்தியாயம்--26       

ண்ணா சாலையில் மேம்பாலம் கடந்து கிரீம்ஸ் ரோடிற்குள் நுழைந்ததும் அஞ்சலகத்திற்கு முன்னாடியே ஒரு காம்ப்ளக்ஸூக்குள் இருந்தது அந்த பதிப்பகம்.  நாற்பதுக்கு இருபதில் கொஞ்சம் விசாலமாக இருந்த கட்டிடத்தில் முன்பகுதியில் அந்தப் பதிப்பகத்தில் பதிப்பித்திருந்த புத்தகங்களின் விற்பனைக் கூடத்தையும் அமைத்திருந்தார்கள்.   இந்த விற்பனைக் கூடத்தைத் தவிர்த்து வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சிறிதும், பெரிதுமாக புத்தக விற்பனை நிலையங்களையும் கொண்டிருந்தார்கள்.  அந்த வெளியூர் புத்தக நிலையங்களில் மற்ற பதிப்பகப் புத்தகங்களும், சாகித்ய அகாதமி, என்பிடி வெளியீடுகளும் ஏன் புத்தம் புதிய பிற மொழிப் புத்தகங்களும் கூட கிடைக்கிற மாதிரி புத்தக விற்பனையில் தனி கவனம் செலுத்துகிற அக்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  எல்லா புத்தக விற்பனைக் கூடத்திலும் தமிழகத்தில் வெளிவரும் சிற்றிதழ்களும் கிடைக்கும்.  இதுவே இந்தப் பதிப்பகத்தின் தனி முத்திரையாய்த் தெரியும்.

அண்ணா சாலையில் டிஎம்எஸ்ஸூக்கு முன்னாடியே டிராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு விட்டாள் ஊர்மிளா.  வழக்கமாக அலுவலகத்திற்கு வரும் நேரத்தைத் தாண்டி அரைமணி ஆகிவிட்டது. கிரீம்ஸ் ரோடில் கொஞ்சம் நெரிசல்.  சமாளித்து காம்ப்ளக்ஸின் பொது பார்க்கிங்கில் வண்டியை விட்டு விட்டு அலுவலத்திற்குள் நுழைகையில் முன் டெஸ்க்கில் அமர்ந்திருந்த கிருஷ்ணவேணி புன்முறுவலுடன் காலை வணக்கம் சொல்லி தன் அன்பைக் காட்டிக் கொண்டாள்.

பதில் வணக்கம் சொன்னாள். "ஸார் வந்திட்டாரா வேணீ?"

"பெரியவர் வந்திட்டார்.  சின்னவர் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாக வெளிலேந்து போன் பண்ணினார்" என்று சொன்ன படியே கணினியில் புத்தகப் பட்டியல்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த தன் வேலையைத் தொடர்ந்தாள் கிருஷ்ணவேணி.

தன் கேபினுக்குள் நுழைந்து சொந்த சமாச்சாரங்களை லாக்கரில் வைத்து விட்டு, வாஷ் பேசினில் கை நீட்டி சுத்தம் செய்தபடியே, மேல் நிலைக் கண்ணாடியில் முகம் பார்த்து, கொஞ்சம் கேசத்தைச் சீர் செய்து கொண்டு தன் இடத்திற்கு வந்தாள் ஊர்மிளா.

புதுசாகப் பதிப்பிக்க வேண்டிய புத்தகங்களுக்கான கையெழுத்துப் பிரதிகள் கணினிக் காப்பியாகக் காத்திருந்தன.  வழக்கமாக பத்திரிகைகளில் வெளிவரும் சமாச்சாரங்கள் தான் தமிழகத்தில் புத்தகங்களாக உருவாகும் என்கிற பழக்கத்தைத் தாண்டி இவர்களே முதல் ப்ரிட்ண்டாக பல புத்தகங்களை பல தலைப்புகளில் வெளியிடுவதால் அதற்கான வாசகர்கள் இந்தப் பதிப்பகத்தின் தனிப்பட்ட வாடிக்கையாளர்களாக உருவாகியிருந்தார் கள்.  அவர்களுக்கெல்லாம் இலவச மெம்பர்ஷிப் கார்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன.  புதுசாக எந்த வெளியீடு வெளிவந்தாலும் அவர்களுக்கு தனி அஞ்சலில் தெரிவிக்கிற பழக்கமும் இருந்தது.  இதைத் தவிர ஆன்-லைன் விற்பனை வேறு. இந்தப் பணிகளையெல்லாம் சமாளிக்கிற விதத்தில் இந்த தலைமை அலுவலகத்தில் மட்டுமே இருபதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் இருந்தார்கள்.  அவர்கள் அத்தனை பேரும் புத்தகம், அவற்றை வெளியிடுதல், அவற்றை சந்தையில் விற்பனைப்படுத்து வது போன்ற கல்வியைப் பெற்றிருந்தார்கள் என்பது தான் சிறப்பு.  அவ்வப்போது புத்தக விற்பனைத் தொடர்பான அவர்கள் அறிவை மேம்படுத்துவதற்காக புதுசு புதுசாக முளைக்கும் கல்வி என்னன்ன தேவையோ அதை அவர்களுக்குக் கற்பிப்பதில் அந்த நிறுவனமே பொறுப்பேற்றுக் கொண்டது தான் அந்த விற்பனை நிலையத்தின் கூடுதல் சிறப்பு.  ஊர்மிளா சமீபத்தில் எழுதிய பரிட்சை தொடர்பான முயற்சிகளை எடுத்தது கூட அவளது நிறுவனம் தான்.

பெரியவரும் சின்னவரும் அண்ணன் தம்பிகள்.  அவர்கள் அப்பா காலத்தில் டிரெடிலில் கல்யாணப் பத்திரிகை அச்சிடுவதற்காக ஆரம்பித்த அச்சாபீசை காலத்தின் வளர்ச்சிகளுக்கேற்ப வளைந்து கொடுத்தும் நிமிர்த்தியும் கதைப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகமாக இந்த அளவுக்கு மேம்படுத்தியிருக் கிறார்கள். இத்தனை வளர்ச்சியிலும் அப்பா வைத்த பிரஸ்ஸின் பெயரான குகன் அச்சகம் மட்டும் என்ற மாற்றமுமில்லாமல், அதே பெயரில் குகன் பிரசுரமாகத் தொடர்கிறது.    குகன் மட்டும் இராமாயண குகன் இல்லை; அப்பாவின் அப்பா பெயர் அது.

ஊர்மிளா இந்த பதிப்பகத்தின் சப்-எடிட்டர்.  அவள் பார்வையில் படாமல் பதிப்பக வேலை எதுவும் இறுதி ஷேப் அடையாது.  சின்னவர் எடிட்டர் என்றாலும் பெரும்பாலான வேலைகள் இவள் பார்த்து ஓக்கே செய்த பிறகு தான், இறுதிக்கட்ட அனுமதிக்காக சின்னவர் பார்வைக்கு வரும்; சின்னவரின் பெயரும் குகன் தான்.  தாத்தாவின் நினைவில் வைத்தது.

ஊர்மிளா அன்றைய வேலை சுவாரஸ்யத்தில் ஆழ்ந்து விட்டாள்.  அன்றாட வேலைச் சுழலே, அவளுக்கு தியானம் மாதிரி.  அந்தத் தியானத்தைக் கலைக்கிற மாதிரி அவள் காபின் கனெக்ஷன் சிணுசிணுத்தது.  லைனில் சின்னவர்.

"குட்மார்னிங்.. ஊர்மிளா சார்."

"குட்மார்னிங், ஊர்மிளா.  எக்ஸாம்லாம் எப்படி?"

"ஃபைன் சார்.  மனசுக்குத் திருப்தியா இருந்தது."

"அதான் வேணும்.  பை த பை டிஸ்க்கஷன் இருக்கு.  கொஞ்சம் வர்ற முடியுமா?"

"இதோ வர்றேன்.."

பார்த்துக் கொண்டிருந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு சின்னவர் அறையை அடைந்தாள்.  சின்னவர் அறையில் ஃபாரின் லாங்குவேஜ் செக்ஷன் சுந்தர வதனனும், விற்பனை செக்ஷன் சுலோச்சனாவும் இருந்தனர்.  இவள் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்ததும் அவளுக்குக்காகத் தான் காத்திருந்த மாதிரி ஏதோ பாதியில் விட்டிருந்த டிஸ்கஷனைத் தொடருகிற தோரணையில் சின்னவர் அடுத்து பிரசுரம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி சொன்னார்.  மொழிபெயர்ப்பு நூல்களில் பெரியவர் அபிப்ராயப் படுகிற சில மாற்றங்களைப் பற்றியும் பிராஸ்தாபித்தார்.  அதெல்லாம் எந்தளவுக்கு அமுல்படுத்துவதற்கு சாத்தியமாகும் என்பது பற்றி சுந்தரவதனன் தனது கருத்துக்களை விலாவாரியாக எடுத்து வைத்தார்.   இதுவரை பிரசுரமான பிரெஞ்சு மற்றும் ஆங்கில நாவல்கள் ஒவ்வொன்றும் எத்தனை பதிப்புகள் கண்டிருக்கின்றன,  அவற்றின் விற்பனைக்கான சந்தை எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு லிஸ்ட்டை வைத்துக் கொண்டு சுலோச்சனா ரிப்போர்ட் செய்த பொழுது இந்த இரண்டு மொழிகளிலும் விரைவில் ஓரிரண்டு மொழிபெயர்ப்புகளையாவது கொண்டு வரவேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு தான் தூக்கலாகத் தெரிந்தது.  ஆனால் எந்தந்த நூல்கள் என்று தீர்மானிக்க முடியாமல் இருந்தது.  பெரியவரிடம் கலந்து கொண்டு ஊர்மிளா இதற்கான முடிவான ப்ரொபோசலை இன்னும் இருவாரங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்று முடிவாயிற்று.

இந்த மாதிரியான டிஸ்க்கஷனுக்குப் போவதற்கு முன்பு செல்லை அணைத்து விடுவது ஊர்மிளாவின் வழக்கம்.  தனது கேபினுக்கு வந்து செல்லை உயிர்ப்பித்த பொழுது லஷ்மணனிடமிருந்து வந்திருந்த கால் மிஸ்ஸாகி இருப்பது தெரிந்தது.  அந்த அழைப்பைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நிமிஷங்களிலேயே அவன் அனுப்பியிருந்த மெஸேஜும் இன்பாக்ஸில் பளிச்சிட்டது: 'விஜி முகவரி கிடைத்து விட்டது.  மற்றவை நேரில்'.

இதான் அவளை லஷ்மணன் கவர்ந்ததில் தலையானது.  அவள் எதுசொன்னாலும் மறக்காமல் அதை நிறைவேற்றுவதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள்.

விஜியைப் பற்றி சின்னவரிடம் ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம் என்று இப்பொழுது அவளுக்குத் தோன்றியது.  மறுநிமிடமே லஷ்மணனிடம் இது பற்றி கலந்து கொண்டு செய்வதே உசிதம் என்று பட்டது.

பக்கத்து கேபின் அனுராதா லச்சுக்கு கிளம்பும் தோரணையில் லஞ்ச் பேக்கும் தோளுமாக அவளைப் பார்த்து 'கிளம்பலை?' என்று கேட்கிற விதமாய் ஜாடை காட்டினாள்.

"இதோ.." என்று ஊர்மிளாவும் எழுந்து கொண்டாள்.  அப்படி உடனே எழுந்து கொண்டது அனிச்சையாக அவளுக்கே பட்டது.   மனம் பூராவும் ஏதேதோ எண்ண அலைபாயலில் சிக்குண்டிருக்க நடக்கும் நிகழ்ச்சிகளில் மெளனமாக பங்கு கொள்வது போன்ற உணர்வு தான் அவளுக்கு இருந்தது.

சாப்பாடு முடிந்து வருவதற்காகவே காத்திருந்த மாதிரி கை துடைத்துக் கொண்டு அவள் இடத்திற்கு அவள் வருவதற்கும் சுந்தரவதனன் அவளை நாடி வருவதற்கும் சரியாக இருந்தது.

அதே சமயத்தில் கேபின் டெலிபோன் கிணுகிணுத்தது.  காலர் ஐடியில் பார்த்தால் பெரியவர்.

"ஊர்மிளா, சார்!"

"ஊர்மிளா.  கொஞ்சம் வர்றீங்களா.  வரும் பொழுது இந்த வருஷம் நாம போட்ட தமிழ் நாவல்கள் ஃபைலையும் எடுத்திண்டு வாங்க."

"சரி சார்.  இதோ வர்றேன்."

நகத்தைக் கடிக்கற பாவனையில் இருந்த சுந்தரவதனனிடம், "பெரியவர் கூப்பிடறார்.  கேட்டுட்டு வர்றேனே?" என்றாள்.

"அவர் கூப்பிடுவதற்குள் உங்கள் கிட்டே சொல்லிடணும்ன்னு தான் அவசரமா வந்தேன்.  அதற்குள் அவர் முந்திக் கொண்டு விட்டார்."

எதற்காக வதனன் அப்படிச் சொன்னார் என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது.  பெரியவர் அறைக்குப் போனால் அதற்கான காரணம் தெரிந்து விடும் என்கிற யோசனையில் பெரியவர் கேட்டதற்கான ஃபைலை ராக்கிலிருந்து எடுத்துக் கொண்டு நிமிரும் பொழுது அவள் செல் லேசாக சிணுங்கியது.  செல் திரையில் லஷ்மணனிடமிருந்து அழைப்பு என்று தெரிந்தது.

அவசர அவசரமாக எடுத்து "கொஞ்ச நேரத்தில் நானே பேசுகிறேன்.." என்று சொல்லி விட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் ஆஃப் செய்தாள்.

பெரியவர் அறையை நோக்கி அவள் நடக்கையில் 'என்னவாக இருக்கும்?' என்கிற கேள்வியே அவள் மனம் பூராவும் நிரம்பி இருந்தது.


(இன்னும் வரும்)













15 comments:

Geetha Sambasivam said...

முற்றிலும் புதிய திசையில் பயணிக்கும் கதை. ஆவலைத் தூண்டுகிறது. நல்ல வளமான, இயல்பான கற்பனைகளோடு தேவையான விஷயங்களைச் சேகரிக்கவும் உழைப்பு அதிகம் இருந்திருக்கும். பிரமிப்பாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

வேலை என்பது மனதுக்குகந்த துறையிலேயே அமைந்து விட்டால் யோகம்தான்! பெரியவர் எதற்காகக் கூப்பிடுகிறார்...சுந்தரவதனன் சொல்லவந்தது என்ன....விஜிக்கு நேரம் கூடி வருகிறதோ..?

ஜீவி said...

@ கீதாம்மா

ரசனைக்கு நன்றி, கீதாம்மா.
தொடர்கிறேன். தொடர்ந்து வர வேண்டுகிறென்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//வேலை என்பது மனதுக்குகந்த துறையிலேயே அமைந்து விட்டால் யோகம்தான்!//

நானும் இப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டதுண்டு. 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பதற்கு ஈடான ஒன்று இது.அப்படி அமைந்து விட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அதிலிருக்கும் திருப்தி சொல்லி மாளாது. அமைந்த வேலையையே மனத்துகந்ததாக மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், அது என்ன இருந்தாலும் இரண்டாம் பட்சம் தான்.
என்ன சொல்கிறீர்கள்?..

விஜியை குறிவைத்தே கதை நகர்வதைக் கொஞ்சம் மாற்றலாமா என்று தோன்றுகிறது. :)))

பாச மலர் / Paasa Malar said...

பதிப்பகம் சம்பதப்பட்ட விளக்கங்கள் நுணுக்கமாக இருக்கின்றன....
அலுவலக விஷயங்களும் கூட நுணுக்கமாகக் கையாளப்பட்டுள்ளன..

கதையின் திசைகள் மாறுகின்றன...பயணம் தொடர்வோம்...

G.M Balasubramaniam said...

சில விஷயங்கள் தெரிந்துகொள்ள உதவுகிறது.உதாரணத்துக்கு

//வழக்கமாக பத்திரிகைகளில் வெளிவரும் சமாச்சாரங்கள் தான் தமிழகத்தில் புத்தகங்களாக உருவாகும் என்கிற பழக்கத்தைத் தாண்டி இவர்களே முதல் ப்ரிட்ண்டாக பல புத்தகங்களை பல தலைப்புகளில் வெளியிடுவதால் அதற்கான வாசகர்கள் இந்தப் பதிப்பகத்தின் தனிப்பட்ட வாடிக்கையாளர்களாக உருவாகியிருந்தார்// என்னை மாதிரி இருப்பவர்கள் புத்தக வெளியீடு செய்யலாம் என்று தோன்றுகிறது.
தொடருகிறேன்.

கோமதி அரசு said...

ஊர்மிளா அன்றைய வேலை சுவாரஸ்யத்தில் ஆழ்ந்து விட்டாள். அன்றாட வேலைச் சுழலே, அவளுக்கு தியானம் மாதிரி. //

தான் செய்யும் வேலையை ஒரு தவமாய் செய்வதே பெரிய விஷயம் இல்லையா!
எத்தனை பேர் அப்படி செய்கிறார்கள்?
ஊர்மிளாவின் தியானத்திற்கு வெற்றி காத்து இருக்கிறது.

கோமதி அரசு said...

விஜி முகவரி கிடைத்து விட்டது. மற்றவை நேரில்'.

இதான் அவளை லஷ்மணன் கவர்ந்ததில் தலையானது. அவள் எதுசொன்னாலும் மறக்காமல் அதை நிறைவேற்றுவதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள்.

விஜியைப் பற்றி சின்னவரிடம் ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம் என்று இப்பொழுது அவளுக்குத் தோன்றியது. மறுநிமிடமே லஷ்மணனிடம் இது பற்றி கலந்து கொண்டு செய்வதே உசிதம் என்று பட்டது.//

மனம் ஒத்த கணவன் மனைவியின் நினைவுகள், ஒருவரிடம் ஒருவர் கலந்து கொண்டு செய்ய நினைக்கும் நினைப்புகள் எல்லாம் கணவன் , மனைவியின் உறவுகள் எப்படி இருந்தால் நல்லது என்று இளைய தலைமுறைக்கு சொல்வது போல் உள்ளது.

கதை நிறைய எதிர்பார்ப்புகளை தருகிறது.

கோமதி அரசு said...

ஜீவி சார், உங்களுக்கு விருது என் வலைத்தளத்தில்.

அன்புடன் பெற்றுக்கொள்ளுங்கள் சார்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

தொடர்ப்புடைய காட்சிகள் கோர்வையாக அலசியிருக்கிறீர்கள். சுவாரஸ்யம்.

ஜீவி said...

@ பாசமலர்

பதிப்பகம் தொடர்பாக சொந்த அனுபவங்களும் நிறைய உண்டு.
அலுவலகம்?.. கேட்கவே வேண்டாம்.

தொடர்ந்து வந்து கருத்துக்களைச் சொல்வதற்கு நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

புத்தகங்களைப் பதிப்பிப்பது வேறு;
சந்தைபடுத்துவது வேறு.இரண்டாவது சொன்னதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

இந்தக் கதை பதிப்புலகை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டும். இந்த யுகம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி யுகம். எதுவும் அனுபவமாவதற்கு முன் அதுபற்றி வாசித்துத் தெரிந்து கொள்வதற்கு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு துறையும் தெரியத் தெரிய அதுபற்றி மலைப்பே ஏற்படுத்தும் அளவுக்குத் தான் பிர்மாண்டமாய் வளர்ந்திருக்கின்றன.

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஊர்மிளாவுக்கு மட்டுமில்லை, வாழ்க்கையில் எல்லோருக்குமான வெற்றி தான் எழுத்தின் இலட்சியம் இல்லையா?அதற்குத் தான் இதெல்லாம்.

உங்கள் பயணக்கட்டுரைகளில் மற்றவர்களுக்கு உதவுகிற மாதிரி எவ்வளவு சிரமம எடுத்துக் கொள்கிறீர்கள்?.. சும்மாச் சொல்லவில்லை, கோமதிம்மா.
நானும் அந்தக் கால ஏ.கே.செட்டியாரிலிருந்து நிறையப் பேரின் பயணக்கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரதும்
ஒரு விதம் என்றால், உங்களுடைய கட்டுரைகளும் தனி விதம். தங்கள் சேவைக்கு நன்றி.

தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் அன்பான விருதுக்கு நன்றிம்மா.
பெற்றுக் கொண்ட அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

@ ஷக்தி

படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி, ஷக்தி.

Related Posts with Thumbnails