மின் நூல்

Monday, February 22, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

(பகுதி9--3)
         
"மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?   ஒருவொருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் அது.  அவ்வளவு தானே?" என்று கேட்டார் என் நண்பர்  ஒருவர்.

என்னால் அவ்வளவு எளிதாக அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் (tool) மட்டும் தானா மொழி என்பது?..

நிச்சயமாக இல்லை.    ரொம்பவும் பாமரத்தனமான புரிதலாக இது எனக்குப்  பட்டது.

மொழி பற்றி,  ஒருவனில் அந்த மொழியின்  ஆளுகை பற்றி எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள்.    கருத்துப் பரிமாற்றம் கொள்வதற்கு மொழியை விட்டால் வேறு வழி இல்லை.  உண்மை தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு மொழியில் புலமை பெறும் பொழுது அது நம்மை ஆட்கொள்ளும் நேர்த்தியில் எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக புரிதல் ஏற்படுகிறது.

முக்கியமாக அந்த மொழியின் இலக்கிய செல்வங்கள்.

எந்த மொழியும் தன்னில் ஞானம் கொண்டவனுக்கு இதில் வஞ்சனை செய்ததில்லை.  உலக மொழிகளில் எல்லா மொழிகளும் இந்த செல்வத்தை தன்னை அறிந்தோனுக்கு வாரி வழங்குவதில்  பாகுபாடு கொண்டதில்லை.

 ஒரு  மொழியில் புலமை பெற்றவன்   அந்த மொழியின் கருவூலமான இலக்கிய இன்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதில் ஆழ அமிழும் பொழுது இகவுலக சுகங்களை தாண்டியதான விவரிக்க இயலாத இன்பத்தை ஓர்ந்து உண்ர்ந்து கொள்பவனாகிறான்.

 திவ்ய பிரபந்த நாலாயிரத்தில் ஒரு பாடல் அது.

அச்சுதனின் அரங்கனின் பெருமைகளை  நா புரட்டி உச்சரிக்கும் புல்லரிக்கும் உணர்வை விட்டு விட்டு இந்திரலோகம் ஆளும் பெருமையையும் வேண்டேன் என்று இச்சுவை-- அச்சுவை  வேறுபாடு காட்டி நெகிழ்ந்திருப்பார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

மொழி என்பது ஒரு லாகிரி வஸ்து போல போதை தருவது.
.
எந்த மொழியாக இருக்கட்டுமே, அநத மொழியின் படைப்புகளில் ஆழ்ந்த தோய்தல் ஏற்படும் பொழுது அந்த ரசனை ஒருவித கிறக்க உணர்வை ஏற்படுத்தாமல் விடாது.

தாய் மொழி-- பிற மொழி என்றெல்லாம் இதில் பாகுபாடு ஏதுமில்லை. தாய்மொழி என்றால் இரட்டை மடங்கு கிறக்கம்.  அவ்வளவு  தான்.

அது ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காலம்.   பல நல்லது -- கெட்டதுகள் நமக்கு அறிமுகமான காலம்.

ஆங்கில மொழியறிவுக் கள்ளைப் பருகியதின் பாதிப்பில் அது போலவே தமிழில் எழுத வேண்டுமென்ற அளப்பரிய ஆசையின் போதை வயப்பட்டவர் பல பேர்.

'அது  போலவே'என்ற வார்த்தையை அட்சரம் பிசகாமல் தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்டு வந்த சிலரை மறக்கவே முடியாது.  இவர்கள் துணிந்து,பேண்ட், சட்டை, டை கட்டிய கதா பாத்திரங்களுக்கு வேஷ்டி, சட்டை தங்க பித்தான் கோர்த்த கோட், அங்கவஸ்திரம் உடுத்தி அழகு பார்த்தனர்.   சட்டை என்றால் அந்தக் காலத்தில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான். முழுக்கை சட்டையில் மணிக்கட்டு இடத்தில் கஃப் பட்டன் போட்டு, புஜப்பிரதேத்தில் கால் செ.மீ. அளவுக்கு வட்டமாய் துணியை மடித்துத் தைத்த கோலத்தில் அட்டகாசமாய் இருக்கும்.

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜூ (நம்ம ரா.கி.ரங்கராஜன் இல்லை; இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜனும் அறவே இல்லை!)  போன்றவர்களை மறக்கவே முடியாது.  ஆங்கில நாவலகளை தமிழ் படுத்தியதில் பயங்கர இலக்கிய மாற்று பங்களித்தவர்கள் இவர்கள்!   கதைகள் வாசிக்கம்  பழக்கம் இவர்களால் தான் அக்காலத்தில் படித்த வர்க்கத்தினரிடையே வழக்கமாகவும் மாறியது

இரத்தினபுரி இரகசியம்,  சொர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம், அபூர்வ சிந்தாமணி, மதன பூஷணம் அல்லது இறந்தவன்  பிழைத்தது போன்ற ஆரணி குப்புசாமி முதலியார் அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாவலகளை மறக்கவே முடியாது.

ஆரணியாரின் நாவல்களில் ஆங்கில கதாபாத்திரங்களும்  இங்கிலாந்து இடங்களும் தமிழ்ப் பெயர் பூணுவதை ரசித்து படிப்பதே ஒரு  தனி இன்பம் பயக்கும்.   எழுதிய மாத்திரத்தில் இவர் எழுத்தில் லண்டன்  இரத்தின புரியாகும்; வாட்ஸன் விஸ்வநாதன்  ஆவார்; ஆர்ஸின் லூயின் அரசூர் லஷ்மணனாவார்.


ஆரணி குப்புசாமி முதலியார் சிலகாலம் 'ஆனந்த போதினி' என்னும் பத்திரிகைக்கு ஆசிரியாராக வேறு இருந்தார்.  ஆ.கு.மு. காலத்திற்கு பிறகு நாரண துரைக்கண்ணன் (இவர் ஜீவா என்று புனைப்பெயர் கொண்டிருந்தார். பொதுவுடமைக் கட்சி ஜீவா இல்லை)  'ஆனந்த போதினி'யின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.  இந்த நாரண  துரைக்கண்ணன் அவர்கள் 'கலைமகள்'
பத்திரியகையில் தனக்கு முன்னோடியான  ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் ரக்சியம் பற்றி  ரசித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  அந்தக் கட்டுரையின்  சில வரிகளை என் குறிப்புப் புத்தகத்திலிருந்து  எடுத்து இங்கு எழுதுகிறேன்:

"ரெயினால்ஸ், வால்டர் ஸ்காட்,  அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின்  நாவல்களை மொழிபெயர்த்து தமிழர்களுக்குத் தர விரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ்நாட்டுப் பண்பாடுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும்  கதை மாந்தர்களின் பெயர்களையும்  நடை உடை பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார்.   அத்துடன் கதைகளுக்கு இடையிடையே நீதி போதனைகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச் சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

-- என்று நாரண துரைக்கண்ணன் ஆரணியாரைப்  பற்றி ரசனையுடன் எழுதியிருக்கிறார்.

ஆரணியார் இப்படி  என்றால் வடுவூரார் கதையே தனி.  துப்பறியும்  பாணி கதைகளை தனிக்குத்தகைக்கே எடுத்தவர் இவர்.   தமிழ்வாணனில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர் வரை அத்தனை மர்மக்கதை மன்னர்களுக்கும் இவர் தான் முன்னோடி!  இவர் எழுதுவதற்காகவே தான் பணியாற்றிய  தாசில்தார் வேலையைத் துறந்தார்.  அந்தக்காலத்தில் 'அல்லது'  இடையிட்டு நாவல் தலைப்பை எழுதுவது பிராபல்யம் அடைந்தவர்களின் ஒரு பழக்கமாகவும் இருந்தது!

கல்யாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த  விந்தை

மரண புரத்தின்  மர்மம் அல்லது லீலாவதியின் மூடு மந்திரம்

இரு மன  மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி!

--என்று வடூவூரானின் 'அல்லது' போட்ட சில நாவல் தலைப்புகள் இன்னும் நினைவுகளில் நிழலாடுகிறது!

இவரது ''கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்' பயங்கர பிரபல நாவல்!  திகம்பரம்  (ஐயே!)  என்றால் அர்த்தம் தெரியும் தானே!  'திகம்பர சாமியார்' திரைப்படமாகவும் வந்திருக்கிறது.  எம்.என்.நம்பியார் தி.சாமியாராய் நடித்து அசத்தியிருப்பார்!  மயிலாப்பூர்  அல்லையன்ஸ் பதிப்பகத்தார்  இவரது நாவல்களின் வரிசை ஒன்றை சில ஆண்டுகள் முன்பு பதிப்பித்திருக்கிறார்கள்!  வேண்டுகிறவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்!



(தொடரும்)

                                               
                                       

16 comments:

ஸ்ரீராம். said...

ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்கள் கிடைத்தால் வாசிக்க வேண்டும். வடுவூராரின் படைப்புகளையும்!

மொழி என்பது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் சாதனம் என்பதை மீறி அதில் உள்ள இலக்கியச்சுவையை ரசிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு.

sury siva said...

சுவையான தகவல்கள்.

தமிழ் அவையில் மூத்தவரை முத்தானவரை
கண் முன்னே கொண்டு வந்து ,
பார் ! இவர்கள் தான் உன் பிதாமகர்கள் என்று
தெளிவு தந்து இருக்கிறீர்கள் .

உடை, நடை, மட்டும் அன்றி இவர்கள் விரித்த
கடைகள் இன்று காணாமல் போயிற்றோ ??

சுப்பு தாத்தா.

G.M Balasubramaniam said...

அழகிய தமிழ் மொழி என்று எழுதுவதில் உங்களுக்குப் பிடித்த கதைகள் கதாசிரியர்கள் என்று புகுந்து விளையாடுகிறீர்கள் நானும் சிலவற்றைப் படித்ட்கிருக்கிறேன் என்றாலும் இவ்வளவு ஆழமாகபடிக்கும் ardent வாசகனோ avid reader ஓ அல்ல. ரசிக்கிறேன்

அப்பாதுரை said...

மொழி தொடர்பு சாதனமா? ம்ம்ம்ம்..

நானறிந்த மட்டில் ஆங்கிலக் கள் சற்றே போதை மிகுந்தது.

அப்பாதுரை said...

இலக்கிய மாற்று - ரசித்தேன். (இன்னொரு சமயம் நான் உபயோகித்துக் கொள்கிறேன் :-)

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வடுவூராரின் படைப்புகள் அல்லையன்ஸில் கிடைக்கிறது. மைலாப்பூர் டேங்க் பஸ் நிறுத்தம் பகுதியில் பதிப்பகம் இருந்தது.

நாற்பது வருடங்களுக்கு முன் மொழி ஒரு சாதனம் என்று சொல்லி விட்டால் அடிக்க வருவார்கள். பெரிதாக இதெல்லாம் பற்றி பட்டிமன்றம் நடைபெற்ற காலம் அது.

சுயமரியாதை உள்ளவன் இன்னொருவர் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்க மாட்டான். அதே மாதிரி ஒரு மொழியை நேசிப்பவன் இன்னொரு மொழியை வெறுக்க மாட்டான்.
இதெல்லாம் அடிப்படை உணர்வுகள்.

அதற்கும் மீறி செயல்பட்டால் எங்கோ ஓட்டை இருக்கிறது என்று அர்த்தம். சுயலாபங்கள் அந்த ஓட்டையை ஏற்படுத்தியிருக்கலாம்.

தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ Sury Siva

எதற்காக எதை எழுதுகிறார்கள் என்று கண்டுபிடிப்பதில் அசகாய சூரர் நீப்கள்.

விரித்த கடைகள் எப்படியெல்லாம் வெவ்வேறு ரூபத்தில் வேறு பெயர் பூண்டிருக்கின்றன என்று தெரிவிப்பது இந்த தொடரின் நோக்கம்.

தொடர்ந்து வந்து கருத்திட வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

@ ஜீஎம்பீ

பிடித்தவர்கள் என்று சிலரைக் குறிப்பிட்டு எழுதுகிற மாதிரி இல்லை.

தேச சுதந்திரத்திற்கு முன்னான காலகட்டம் + தமிழில் நாவல்களின் தொடக்க காலம் என்று ஆரம்பித்து இடைப்பட்ட காலத்தில் எப்படி, இன்று நாவல் உலகம் என்னவாக இருக்கிறது என்று சொல்ல முனைந்த தொடர் இது.

தொடர்ந்து வாசித்து கருத்துச் சொல்ல விழைகிறேன்.

அன்புடன்,
ஜீவி

V Mawley said...

சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..

மாலி

ஜீவி said...

@ V. Mawley

நலமா, சார்?.. உங்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.

ஏன் இந்த நேரத்தில் இந்த குறிப்பு என்று திகைத்தாலும், இது பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று தெரிந்தது. எழுதுஅதற்கு பொருள் கொடுத்ததற்கு நன்றி.

விரைவில் முயற்சிக்கிறேன். தங்கள் அன்புக்கு நன்றி.













வை.கோபாலகிருஷ்ணன் said...

எவ்வளவோ மிகச்சிறந்த எழுத்தாளர்களைப்பற்றியும், அவர்களின் மிகச்சிறப்பான எழுத்துக்கள் பற்றியும் மிகத்துல்லியமாக அறிந்து வைத்துள்ளீர்கள்!

அவை ஒவ்வொன்றையும் பற்றி தங்கள் பாணியில் சிலாகித்துச் சொல்வதைக் கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

மிகவும் வித்யாசமான இதுபோன்ற பகிர்வுக்கு நன்றிகள், சார்.

ஏதோ ப்ளாக்கரின் ஒத்துழைப்பாலும், என் தீவிர தொடர் முயற்சிகளாலும், இன்றுதான் தங்களின் இந்தப்பதிவு திறந்து, நான் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படித்துப் பின்னூட்டம் இடுவதற்குள், மீண்டும் ப்ளாக்கர் காலைவாரி விட்டாலும் ஆச்சர்யம் இல்லை. நல்லபடியாக இந்தப் பின்னூட்டமாவது தங்களுக்குப் போய்ச்சேரணுமே என்ற கவலையுடன் அனுப்பியுள்ளேன்.

அன்புடன் கோபு

V Mawley said...

இந்த subject -ல் எழுத எல்லோராலும் முடியாது .post -mortem -status
பற்றி என்ன எழுதினாலும் , அது speculation -ஆக தான் இருக்கும் ..ஆழ்ந்த சிந்தனை பலம் மிக்கவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கும் என பது என் எண்ணம் ஆகவே ..தான்
தங்களை அணுகினேன் ...ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

மாலி

V Mawley said...

இந்த subject -ல் எழுத எல்லோராலும் முடியாது .post -mortem -status
பற்றி என்ன எழுதினாலும் , அது speculation -ஆக தான் இருக்கும் ..ஆழ்ந்த சிந்தனை பலம் மிக்கவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கும் என பது என் எண்ணம் ஆகவே ..தான்
தங்களை அணுகினேன் ...ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

மாலி

V Mawley said...

இந்த subject -ல் எழுத எல்லோராலும் முடியாது ;மேலும் இந்த subject -ல் எது எழுதப்பட்டாலும் அது வெறும் speculation -ஆகத்தான் இருக்கும் ...தங்களைப்போல் நல்ல சிந்தனைப் பலம் உள்ளவர்கள்
கூறும் கருத்துக்கள ஏற்புடையவையாக அமையும் என்பது என் எண்ணம் ..தங்கள் கருத்துக்களை அறிய , ஆவலுடன் காத்திருக்கிறேன்

மாலி

ஜீவி said...

@ Mawley

//சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..//

சார்! எழுதத் தொடங்கியாச்சு.. இங்கு வந்து தொடர்லாம்.

http://jeeveesblog.blogspot.in

வே.நடனசபாபதி said...


பள்ளியில் படிக்கும்போது வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் ஒன்றை படித்திருக்கிறேன். பெயர் நினைவில் இல்லை. திரும்பவும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் மற்றும் ஆரணி குப்புசாமி முதலியார், ஆகியோரது நாவல்களைப் படிக்க ஆசை. அல்லயன்சில் கிடைத்தால் வாங்க உத்தேசம்.



// எந்த மொழியாக இருக்கட்டுமே, அநத மொழியின் படைப்புகளில் ஆழ்ந்த தோய்தல் ஏற்படும் பொழுது அந்த ரசனை ஒருவித கிறக்க உணர்வை ஏற்படுத்தாமல் விடாது./

உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் அந்த உணர்வு ஏற்பட்டது உண்மை.

Related Posts with Thumbnails