மின் நூல்

Friday, April 1, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

ல்லாத சொர்க்கத்தில் இல்லாத நிச்சயங்கள் நிறைய. அதுக்கு நரகம் என்றாலும் மண்ணில் திருமணம் மேல்--

---  என்று சமீபத்தில் அப்பாதுரை அவர்களின் 'சொர்க்கத்தில் நிச்சயம்' கதைக்குப் பின்னூட்டம் போட்டிருந்தது நினைவுக்கு வந்து நினைவலைகளை மீட்டியது.  பல வருஷங்களுக்கு முன்னால் நடந்தது தான். இருந்தாலும் நடந்ததையெல்லாம் லேசில் மறக்க முடிகிறதா, என்ன?...

ராஜகோபால சர்மா எனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.  அடுத்த தெருவில் தான் வசிக்கிறார்.  அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  எங்கள் பேச்சின் ஊடே விதி வசத்தால் இந்த சொர்க்கம்-- நரகம் டாப்பிக் நுழைந்து விட்டது.    சொர்க்கத்தைப் பற்றி பிரஸ்தாபித்து மாட்டிக் கொண்டது நான் தான்.

சர்மா எப்போதும் பஞ்சக் கச்சம் தான் கட்டியிருப்பார்.  மேலுக்கு தோளைச் சுற்றிக் கொண்டு அங்கவஸ்திரம்.  நெற்றியில் எந்நேரத்தும் அழிந்தே நான் பார்த்திராத சந்தனக் கீற்று.  தூக்கத்தில்  கூட அழிந்திருக்காது போலிருக்கு.  மூன்று வேளை சந்தியாவந்தனத்தின் போதும்  புதுசாய்  தீற்றிக் கொள்வாரோ என்னவோ. இது பற்றி அவரிடம் கேட்டதில்லை. கேட்கக் கூடாது என்றில்லை,  இதெல்லாம் போய் கேட்பார்களா என்று ஒரு தயக்கம். அவ்வளவு தான்.  அதுக்காக கேட்க மாட்டேன் என்றில்லை. ஏதாவது சரியான சந்தர்ப்பம் வாய்த்ததென்றால் இது பற்றிக் கேட்காமலும் இருக்க மாட்டேன் என்பதற்காகச் சொன்னேன்

சரி, விஷயத்துக்கு வருவோம்.  நான் போன வேளைக்கு சர்மா அவர் வீட்டு நடுக்கூடத்தில் ஒரு கால் மடித்து  இன்னொரு காலைத் தொங்கப் போட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.  கையில் கையடக்கமான ஏதோ புஸ்தகம்.
நான் நுழைந்ததும் தலை நிமிர்ந்தவர் "வாப்பா.. ரொம்ப நாளாச்சே, உன்னைப் பார்த்துன்னு நேத்து  கூட நெனைச்சிண்டேன்.. வா.." என்று ஊஞ்சலில் கொஞ்சம்  நகர்ந்து  எனக்கும் உட்கார இடம் ஒதுக்கினார்.

"வேண்டாம்.   நான் இப்படியே உக்காந்துக்கறேன். வெளிக்காத்து இங்கே ஜில்லுன்னு வர்றது.. சொர்க்கம் தான்.." என்று அந்த ஜன்னலண்டை மடக்கு நாற்காலியை இழுத்துப் போட்டபடி அமர்ந்தேன்.

"கரெக்ட்டா சொன்னேடா.. சொர்க்கம்ங்கறது எங்கையோ வேறே லோகத்லே இருக்கற மாதிரி எல்லாரும் சொல்றா.. நீ இங்கையே அது  இருக்குன்னு சொன்னே பாரு,  அதான் சரி" என்று என்னைப் பார்த்துச் சிரித்தார்.

"அப்போ சொர்க்கம்ங்கறது தேவலோகத்லே இல்லையா, ஸ்வாமி.." என்று என்னைக்  கிண்டல் செய்கிறாரோ என்ற சம்சயத்தில்  ஆழம் தெரிந்து காலை விட வேண்டும் என்கிற ஜாக்கிரதையில்  கேட்டேன்.


"வேறே லோகத்லே கூட இருக்கலாம்.  இருக்கறதா புராணங்கள்லாம் கூடச் சொல்றது.. ஆனா நாம அங்கே இப்போ இல்லை தானே?.. இருக்கற இடத்லே இருக்கற சொர்க்கத்தைத் தானே சொல்லணும்?" என்று சொல்லி விட்டு என்னைக் கூர்மையாகப்  பார்த்தார்.

அப்படி அவர் பார்த்தால் எங்கிட்டேயிருந்து பதிலை எதிர்பார்க்கிறாரென்று அர்த்தம். அதைப்  புரிந்து  கொண்டு "நீங்க சொல்றது  சரி தான். ஆனா இது பூலோக சொர்க்கம் இல்லையா?.. அதனால் தான்.."

"அப்போ தேவலோக சொர்க்கங்கறது?..." என்று சர்மாவே மேலும் என்னிடம் வார்த்தையை வரவழைக்கவோ என்னவோ தூண்டில் போட்டார்.

"அங்கே இருக்கற சொர்க்கம் நித்யம்.. இங்கே இருக்கறது அநித்யம்.."

"எப்படிச் சொல்றே?"

"எல்லாம் படிச்சுத் தெரிஞ்சிக்கறது தான்.." என்று இழுத்தேன்.

"படிக்கறது  மட்டும் தான்.  படிக்கறதைத்  தெரிஞ்சிக்க வழி இல்லேங்கறதை  ஒத்துக்கோ.."

"நீங்க சொல்றதும்  சரிதான்.  படிக்கறதெல்லாம் இங்கே. அதாவது பூலோகத்திலே.  இங்கே படிக்கறதெல்லாம் சரியான்னு அங்கே போனாத் தானே தெரியும்?.." என்று லேசாக அவர் சொல்வதை ஏற்றுக்  கொள்கிற பாவனையில் தலையை அசைத்தேன்.

"அங்கே போனாலும் தெரியாது.." என்றார் சர்மா.  "அங்கே போனா அந்த  லோகத்துக்கு ஏத்த வாழ்க்கை.  இங்கே வந்தா இந்த  லோகத்துக்கு ஏத்த வாழ்க்கை..  எங்கே போனாத்தான் என்ன, எங்கே இருந்தாத் தான் என்ன, இருக்கற இடத்திலே சந்தோஷமா இருந்தா, சரி..  சோறு கண்ட இடம் சொர்க்கம், இல்லையா?" என்றார்.

சர்மா என்னவோ சர்வ சகஜமாய் பேசுவது போலத்தான் இருக்கும். உன்னிப்பாய் பார்த்தால் அவர் சாதாரணமாய்ப் பேசுவதில் நிறைய தத்துவங்கள் பொதிந்திருப்பது மாதிரித் தெரியும்.  மாதிரி தான்; அவர் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை.  இருந்தால் இந்த மாதிரியையே நிச்சயப் படுத்தலாம்.

"ஹாஹ்ஹா" என்று உரக்கச் சிரித்தேன்.  "நீங்க கூடத்தான் இப்போ சொர்க்கம்ன்னு  சொன்னேள்.." என்றேன்.                      

"பின்னே இல்லையா?.. எல்லாத்துக்கும் தலையான சொர்க்கம் சோறு தானேப்பா.. அது  இல்லாம இந்த சரீரம் என்ன செய்யும்? சொல்லு.  பசித்த வாய்க்கு ஒரு பிடி மோர் சாதம் போதும்.  பசிங்கறது  அக்னி  உபாதைப்பா. அதுக்கு சாதம் போட்டு அதோட வெப்பத்தைத் தணிக்கறதே ஒரு  ஹோமம் மாதிரி எனக்குத்  தோண்றது.." என்று சொல்லி விட்டு ஏதோ பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்ட மாதிரி மெளனமானார்.

பட்டினியின் சோர்வை அறியாதவர் யார் தான் இருப்பார், இந்த பூலோகத்திலே. காசிருந்தால் எல்லாம் கிடைக்கும் என்றில்லை.  காசிருந்தும் மருத்துவர் அறிவுரைப்படி பட்டினி கிடக்க வேண்டிய   கட்டாயம் எத்தனை பேருக்கு இருக்கு என்று என் நினைவு ஓடிற்று.

அன்னம் பற்றிய ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைச் சொன்னார் சர்மா.
"அவ்வள்வு பெருமை பெற்றதுப்பா, இந்த சாப்பாடு என்பது.. கண் கண்ட தெய்வம் " என்று உணர்ந்து சொன்ன வார்த்தையில் அவர் முகம் அந்த மாலை நேரத்திலும் பளபளத்தது போல எனக்குத் தோன்றியது.

"முக்காலும் உண்மை.." என்று அவர் சொன்னதை ஆமோதித்தேன். "ஆனா அந்த லோகத்லே இந்த அன்னம் சாப்பட வேண்டிய வேலையே  இருக்காது, போலிருக்கு..." என்று  இழுத்தேன்.
"எவன் கண்டான்?" என்று வெகுண்டார் சர்மா.."இது இல்லேனா, இன்னொண்ணு..  "வயித்துக்கு போடறது மட்டும் ரொம்ப  விசேஷமானது. இங்கே அன்னம்ங்கறது எந்த லோகத்துக்குப் போனாலும் இன்னொண்ணா இருக்குமோ என்னவோ?.. பேர் தான் மாறுமே தவிர அதுக்கான வேலை அதே தான் இருக்கும்ங்கறது வேதாந்தம்.  எது எது எதுக்காக எந்த காரணத்துக்காக படைக்கப்பட்டிருக்குங்கறது நமக்குத் தெரியாது.  எல்லாமே யூகம் தான்." என்ற சர்மா மோட்டுவளையைப் பார்த்தார். 

"எனக்கு என்னவோ அவனவனுக்கு அந்த நேரத்தில்  தேவையானதை அனுபவிக்கும் பொழுது அந்த அனுபவிப்பின் உச்சத்தில் 'ஆஹா. சொர்க்கம்" என்கிறான்.  தொட்டதெல்லாம் இங்கே சொர்க்கம்.  அங்கேனா..."

"அங்கேனா?.." என்று சர்மா சடாரென்று கொக்கி போட்டார்.

"அங்கே இருப்பதே வேறேன்னு தோண்றது..." என்று சொன்னேனே தவிர அதுக்கு விளக்கமா சர்மாக்கு என்ன சொல்லணும்ன்னு பிடிபடலே.  



(தொடரும்)  

  

11 comments:

ஸ்ரீராம். said...

தாக நேரத்தில் தண்ணீர்தான் சொர்க்கம். அகோர வெய்யிலில் நிழல் சொர்க்கம். கேள்விக்கு தக்க பதில் கிடைத்து விட்டால் சொர்க்கம். சொர்க்கம் என்ன, தனித் தீவாகவா இருக்கிறது? அவரவர் மனதில் இருக்கிறது. போதும் என்கிற மனம் படைத்தவர்கள் அடிக்கடி காண்பது அது!

கோமதி அரசு said...

//பின்னே இல்லையா?.. எல்லாத்துக்கும் தலையான சொர்க்கம் சோறு தானேப்பா.. அது இல்லாம இந்த சரீரம் என்ன செய்யும்? சொல்லு. பசித்த வாய்க்கு ஒரு பிடி மோர் சாதம் போதும். பசிங்கறது அக்னி உபாதைப்பா. அதுக்கு சாதம் போட்டு அதோட வெப்பத்தைத் தணிக்கறதே ஒரு ஹோமம் மாதிரி எனக்குத் தோண்றது.."//

வெகுநாள் உணவு கிடைக்காமல் பட்னியாக இருந்த ஒருவனுக்கு சாப்பாடு கிடைத்தால் அவனுக்கு அது சொர்க்கம் தான்.



வை.கோபாலகிருஷ்ணன் said...

//எங்கே போனாத்தான் என்ன, எங்கே இருந்தாத் தான் என்ன, இருக்கற இடத்திலே சந்தோஷமா இருந்தா, சரி.. சோறு கண்ட இடம் சொர்க்கம், இல்லையா?"//

சோறு கண்ட இடம் மட்டும்தான் சொர்க்கம். அது கிடைக்காதவர்களுக்கு மட்டுமே அந்த சொர்க்கத்தின் அருமை பெருமை நன்கு தெரியவரும். ஒருவேளை கிடைக்காது போனால் அதைவிட நரகம் ஏதுமில்லை.

//"பின்னே இல்லையா?.. எல்லாத்துக்கும் தலையான சொர்க்கம் சோறு தானேப்பா.. அது இல்லாம இந்த சரீரம் என்ன செய்யும்? சொல்லு. பசித்த வாய்க்கு ஒரு பிடி மோர் சாதம் போதும். பசிங்கறது அக்னி உபாதைப்பா. அதுக்கு சாதம் போட்டு அதோட வெப்பத்தைத் தணிக்கறதே ஒரு ஹோமம் மாதிரி எனக்குத் தோண்றது.."//

உயிருடன் உள்ளவருக்கு வயிறு ஓர் அக்னி குண்டமே தான். நம்மில் சிலர் சாப்பிடுவதற்கு முன்பு செய்யும் பரிசேஷன மந்திரமும் இதையேதான் சொல்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். பசி வந்து அவ்வப்போது அதற்கு நாம் போடும் ஆகாரங்கள் ஹோமம் மாதிரியேதான். சந்தேகமே இல்லை.

புரிந்த ஒன்றை மேலும் புரியும்படியாக மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறார்.

//பட்டினியின் சோர்வை அறியாதவர் யார் தான் இருப்பார், இந்த பூலோகத்திலே. காசிருந்தால் எல்லாம் கிடைக்கும் என்றில்லை. காசிருந்தும் மருத்துவர் அறிவுரைப்படி பட்டினி இருக்க வேண்டிய கட்டாயம் எத்தனை பேருக்கு இருக்கு என்று என் நினைவு ஓடிற்று.//

தாங்கள் இவ்வாறு நினைத்ததும் சரிதான். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

யோசிக்க வைக்கும் இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும் .....

Geetha Sambasivam said...

எங்கெல்லாமோ ஊர் சுற்றி விட்டுக் கடைசியில் நம்ம வீட்டுக்கு வரோமே அப்போத் தான் சொர்க்கமே கண்களில் படும்! :)

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பூலோக சொர்க்கங்கள் எல்லாம் நம் இச்சைப்படி தீர்மானிக்கப்படுகின்றன போலவும் தோன்றுகிறது. ஒருவருக்கு சொர்க்கமாயிருப்பதுவே இன்னொருவ்ருக்கு சொர்க்கம் இல்லாமலும் போகலாம்.

இதைப்பாருங்கள். கொளுத்தும் வெயிலில் நிழல் சொர்க்கம். சரி. நடுக்கும் குளிரில் வெயில் சொர்க்கம். இல்லையா?.. வெயிலும், குளிரும், நிழலும் மாறி மாறி வருவது. தற்காலிகமான சொர்க்கங்கள். என்றைக்கும் நீடித்த என்று அல்ல. அதனால் இவற்றை அநித்யம் என்கிறார்கள்.

இதற்கு மாற்றான நித்ய என்ன என்பது தான் கேள்வியாகிப் போகிறது. அந்த நித்ய இல்லை என்றால் அநித்யமும் இருந்திருக்காது. என்றென்றைக்கு சொர்க்கமானது எதுவோ அதுவே நித்ய சொர்க்கம். அந்த நித்ய சொர்க்கமும் மனத்தால் உணர்வது தானா இல்லை மனவெளிக்கு அப்பாற்பட்டதா அது என்று யோசியுங்கள்.

உண்ர்வதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

ஜீவி said...

@ கோமது அரசு

பசித்துப் புசி என்றார்கள் பெரியோர். அதுவே ஆரோக்கியமானது.

அப்படிப்பட்டோருக்கு ஒவ்வொரு வேளை உணவும் சொர்க்கம் தான்.

உணவு என்பது உடல் இயக்கத்திற்கு அடிப்படை தேவை. அஜ்த அர்த்தத்தில் பசி வந்திட பத்தும் பறந்து போம் என்றார்கள். உபநிஷத்துக்களில் உணவுக்கு தலையாய இடம் கொடுத்து நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது.

வருகைக்கும் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி, கோமதியம்மா.

ஜீவி said...

@ வை.கோ.

உயிர் கொண்டவருக்கு வயிறு ஓர் அக்னி குண்டம் என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். உணவு உள்ளே போனதும் வயிற்றில் நடக்கும் தொடர்ந்த வேலைக்கு, அந்த process-க்கு ஈடு இணை வேறெதும் இல்லை. உள்ளே போனது வெளியே வந்து அடுத்து உள்ளே வரப்போவதற்கு இடம் கொடுத்தாக வேண்டும். இந்த படைப்பு உருவாக்கம் ஒரு வினாடி நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பானது.

வருகைக்கு நன்றி கோபு சார்.

G.M Balasubramaniam said...

கடவுள் போல சொர்க்கம் நரகம் என்பதும் ஒரு கான்செப்ட்தான் கிடைக்காதது கிடைக்கும்போது சொர்க்கம் கிடைப்பதும் இல்லாமல் போகும் போது நரகம் . இவை எல்லாம் நாம் நினைக்கிறபடிதான் எதுவும் நித்யமில்லை.

ஜீவி said...

@ GMB

மனத்தால் உணர முடிந்தமைகள் எல்லாவற்றிற்கும் உண்டு---இல்லை என்கிற மாறுபாடுகள் உண்டு. அதாவது சொர்க்க-- நரகங்கள் உண்ர்வுகள் மாறுபடும்.

ஆனால் மனத்தால் உணர முடியாத எதுவும் இந்த எல்லைக்குள்ளேயே வராது. அதாவது அப்படியான சொர்க்கம்--நரகம் என்றவற்றைகளை உணரும் சாத்தியப்பாடே நமக்கு இல்லாமல் போகும்.

இதையே வேறுவிதத்தில் சொல்வதானால், சொர்க்க--நரக உணர்வுகள் ஏற்பட வேண்டுமானால் அவற்றை உணர்வதற்கு மனம் என்ற ஒன்று தேவை.

இதை வைத்துக் கொண்டு இதற்கு மேலானவ்பைகளை யோசிக்கலாம்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஸ்ரீராம் ரொமப சாதாரண வெயில்--நிழல் போன்ற விஷயகளுக்கு யதார்த்தமாக நாம் உபயோகப்படுத்தும் சொர்க்கம் நரகம் உதாரணங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் இறைவன் என்று வரும் பொழுது இந்த சொர்க்கம் என்கிற வார்த்தைப் பிரயோகமே மாறுப்பட்ட அர்த்தத்தைக் கொள்வதாக நம் புரிதல் இருக்கிறது. இறைவன் உறையும் இடத்தை சொர்க்கம் என்றும் அங்கு நாம் போய்ச் சேர்வதை சொர்க்கலோகம் அடைவது என்றும் சொல்கிறார்கள்.

அந்த அடிப்படையில் மேலுலக சொர்க்கம் நித்யம் என்றும் பூலோக சொர்க்கங்கள் அநித்யம் என்பதான கருத்தாக்கங்கள் ஏற்பட்டன.

நீங்கள் சொல்லும் கான்செப்ட்டை இப்படியாகப் பொறுத்திப் பார்த்தீர்களா, தெரியவில்லை.

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்.. ரொம்ப நாள் கழித்து இதனைப் படிக்கிறேன். யாராவது அந்தப் பழமொழியை முழுமையாக எழுதியிருக்கிறார்களா என்று பார்த்து ஏமாந்தேன். (சோறு கண்ட இடம் சொர்க்கம். கஞ்சி கண்ட இடம் கைலாசம்)

எனக்கு இனிப்பு என்று (அல்லது குறிப்பாக, ரசமலாய்) ஒன்றின் சுவை அறிந்து அந்த உணர்வு, எக்ஸ்பீரியன்ஸ் (மன்னிக்கவும். சமயத்தில் சரியான தமிழ் வார்த்தை வருவதில்லை) இருந்தால்தான், அதை நோக்கி என் ஆசை செல்லும். இனிப்பே அறியாத குழந்தையிடம், இனிப்பு தருகிறேன் என்று சொன்னால் அது எப்படி ஆசைகொள்ளும்?

சில சில உதவிகள் செய்யும்போது, நமக்கு மன'நிறைவு கிடைக்கும். அது அல்லது அந்த உணர்வு, மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டும். நான் சொல்வது தவறாகவே இருக்கலாம். இறைவனிடம் சேர்வதே வாழ்க்கையின் லட்சியம் என்பதை என்னால் visualize பண்ணிப் பார்க்க இயலவில்லை. ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர்வது. கடவுள், உதவும்படியான மனதும், அதற்கு ஏற்றார்ப்போல் பணமும் உடல் நலமும் கொடுத்தால், அதுவே சொர்க்கத்துக்கு இணையானதல்லவா? ஸ்ரீராம் சொல்லியிருக்கும்படி, நிழலின் அருமை வெயிலில் தெரியும். வெயிலில் அலைபவனுக்கு நிழல்தானே சொர்க்கம். இதில் நித்யம், அ'நித்யம் எங்கிருந்து வந்தது? நோயாளிக்கு, நோய் நீங்குவதோ அல்லது தாங்க இயலாமல் உயிர் நீங்குவதோதானே சொர்க்கம்?

நித்ய சொர்க்கம்-அது என்ன? அது எல்லாம் இருக்கிறது ஆனால் வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது என்பது போல் அல்லவா? எல்லாம் இருந்துவிட்டால் அது என்ன வாழ்க்கை? அதைவிட, ஸ்திதப்ப்ரஞனாக இருப்பது அல்லவா சொர்க்கம். அதாவது, சொர்க்கம் என்பது நம் மனத்திலல்லவா இருக்கிறது?

Related Posts with Thumbnails