மின் நூல்

Wednesday, March 30, 2016

அழகிய தமிழ் மொழி இது!

பகுதி--5

சைக்கு எப்படி சுப்புடு சாரோ,  அந்த மாதிரி இலக்கியத்திற்கு க.நா.சு. அவர்கள்.  இரண்டு பேருமே தில்லியில் நெடுங்காலம் வாழ்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கிடையான இன்னொரு ஒற்றுமை.

கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் இலக்கிய வட்டத்திற்கு க.நா.சு. ஆனார். நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று தமிழின் எல்லா வகைகளிலும் இவர் எழுதிப்பார்த்தவர்.  ஆனால் க,நா.சு. என்றதுமே பலருக்கு அவரது சமரசமேயில்லாத விமர்சனக் கட்டுரைகள் தாம் நினைவுக்கு வரும். மனிதர் விமரிசன சமாசாரத்தில்  மன்னர் என்றாலும் இந்தத் தொடரைப் பொறுத்த மட்டில் அவர் நாவல் உலகைப் பார்ப்போம்.

'சர்மாவின் உயில்' என்பது க.நா.சு--வின் முதல் நாவல்;  கடைசி நாவல்: பித்தப் பூ'.  இந்த இரண்டுக்கும் நடுவே 1946 வாக்கில் எழுதிய 'பொய்த்தேவு' அவரின் சிறந்த படைப்பாக பெயரைத்  தட்டிக்  கொண்டு போயிருக்கிறது.

'நாவல் என்பது வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவம்'  என்பார் ஜெயமோகன்.

"நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றி சுயநினைவோடு எழுதப்பட்ட தமிழின் முதல் நாவல் இது" என்பது 'பொய்த்தேவு' நாவலுக்கான ஜெயமோகனின் கூற்று.  நாவல் என்பதற்கு என்ன இலக்கணம் என்று ஜெயமோகன்  கொண்டிருக்கிறாரோ அந்த  இலக்கணத்திற்கு உருவம் கொடுத்த மாதிரி இந்த நாவல் அமைந்திருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  

தொடர்கதைகள் வேறு நாவல் என்பது  வேறு என்பது  இலக்கிய விமரிசனங்களில் ஆழ்ந்து தோய்ந்த நம் காலத்து தலைசிறந்த  படைப்பாளி ஜெயமோகனின் கருத்து.. அதாவது தொடர்கதைகள் நாவாலாகாது  என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார்.
அப்போ தொடர்கதைகளாய் பத்திரிகைகளில் வெளிவந்து வாராவாரம் படித்தவர் மனசை ஈர்த்த, என்றோ எழுதியது என்றாலும் இன்றும் வாசித்தவரின் மனசில் நீக்கற நிறைந்திருக்கும் பேற்றைப் பெற்றிருக்கும் அந்த தொடர்கதைகளெல்லாம் நாவல் இல்லையா என்றால் இல்லை என்று நிர்தாட்சண்யமாய் மறுக்கிறார் ஜெயமோகன்.

ஏனாம்?..

வாசகரின் ரசனைக்காகவும்  அவர்களின் ஆவலைத் தூண்டும் விதமாகவும் அடுத்த வாரப் பகுதியை எதிர்பார்க்கிற தூண்டுதலுக்காக சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் போட்டுத் தொடர்வது நாவலில்லை என்பது அவரது கட்சி.;   இலக்கியம் என்பது ரசனை  அடிப்படையில் அமைய வேண்டுமா அன்றி கோட்பாடு அடிப்படையிலா என்பதும் விவாதத்திற்குரிய பொருள் தான். கோட்பாடு அடிப்படையில் என்பதில் அவற்றை எவ்வளவு தான் நியாயப்படுத்தினாலும் கலாபூர்வ அழகுகள் கோட்பாடுகளின் கறாரான விதிகளின் நெரிசலில் சிக்கிப் பலியாவதும் தவிர்க்க முடியாத இழப்பாகவும் தெரிகிறது.

நாவல் என்பது துண்டு துண்டாக அத்தியாயம் அத்தியாயமாக ஒட்டுப் போடும் சமாசாரமில்லை.  வாசகரின் வாசக ரசனைக்காக அவர்களின் ரசனை அம்சங்களைத் தேடித் தேடிக் கோர்த்துக் கதை பண்ணும் வேலையும் அல்ல. மாறாக  நாவல் என்பது அதன் கருவைச் சார்ந்த அனைத்தையும் வாசகன் முன் தொகுத்து முன்வைக்க முயல்கிறது.  இதனால்  அனைத்தையும் ஆராய்ந்து வாசகன்  தன் நோக்கை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்கிறது என்கிறார்.

இந்த மாதிரி வரையறைகளுக்கு உட்பட்ட சட்டம் போட்ட இலக்கியம் என்பதில் எழுதுபவனின் கற்பனைச் சிறக்கடிப்பை ஒரு வரையறைக்கு உட்படுத்தி மழுங்கடிக்கும் ஆபத்தும் பதுங்கி இருப்பது  தெரிகிறது.  என்ன எழுதினாலும் அதை எழுதும் போதே கோட்பாடுகளை நினைவில் கொண்டே எழுத வேண்டும் என்பதும் எழுதுபவனுக்கு அவனது  கற்பனைச் சுதந்திரத்தைக் காவு கொடுக்கிற அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

எழுதுகிறவன் தான் எடுத்துக் கொண்ட நாவல் கருவை  நியாயப்படுத்துகிற பல விஷயங்களின் தொகுப்பில் அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வையை அளிப்பது நாவல் என்கிறார்கள்.  அப்போ கட்டுரை என்பதும் இது தானே என்று தோன்றுகிறது. அதனால் தான் இப்படியான போக்குள்ள நாவல்கள் கட்டுரைத்தன்மையைத் தவர்க்க முடியாமல் கொண்டிருக்கின்றன போலும்.

நாவலின் உள்ளடக்கமும் வடிவமும் மாறிக்கொண்டே இருப்பதினால் நாவல் என்பது  வடிவம் சார்ந்ததும் இல்லை, உள்ளடக்கம் சார்ந்ததும் இல்லை என்று நாவல் கோட்பாடுகளை வரையறுக்கும் ஜெமோ வாசகரின் எதிர்பார்ப்பையே நாவலின் வடிவமாக முன் வைக்கலாம் என்கிறார்.  வாசகர் எதிர்ப்பார்ப்பு மட்டும் என்றென்றும்  சாசுவதமா, மாறிக்கொண்டே இருக்காதா என்று கேட்கத் தோன்றுகிறது.

நாவலில் கதையோட்டம் தேவையில்லை; கதைப் பின்னல் தான் தேவை என்பது ஜெமோ சொல்லும் இன்னொரு கருத்து.  இதை தி.ஜானகிராமனின் மோகமுள்  கதை மூலமாக விளக்குகிறார்.  யமுனா--பாபு உறவையே பக்கம் பக்கமாக நீட்டிச் செல்கிறார் ஆசிரியர்.  வலுவான வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் மையக் கதையோட்டத்துடன்  கலந்து ஊடறுக்கவில்லை. என்கிறார்.  பாபுவின் தந்தையோ அல்லது ரங்கண்ணாவோ பாபு--யமுனா உறவுக்கிடையே நுழைந்து ஊடறுத்திருந்தால் மோகமுள் ஒரு நாவல் உருக்கொண்டிருக்கும் என்பது அவரது பார்வை.

இன்னொன்று.   'வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவலின் பின்னல், கயிறு முறுக்குவது  போல இருக்கக் கூடாது. கூடை முடைவது போல இருக்க வேண்டும் என்கிறார்.   ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது..  கதைகளும் கதைமாந்தர்களும் பெருகிப்  பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க வேண்டும்'.என்பது ஜெமோவின் கருத்து.  நாவலின் வடிவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதன் உள்ளடகத்தை விடப் பிரதானமாகிப் போயிருப்பதும் தெரிகிறது.

தன் கால சமுகத்தின்  மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு  உட்படுத்தி இத்தனை காலம் காவியங்கள் நிறுவி விட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர் கொள்ளும் தன்மை கொண்டது நாவல், சொல்லப் போனால் காவியத்தை முழுமையாகக் கழித்து விடும் எதிர் காவிய வடிவமே நாவல் என்று அவர் குண்டைத் தூக்கிப் போடும் பொழுது  நமக்கோ பகீர் என்றிருக்கிறது. சென்ற கால காவியங்கள் எல்லாம் கழிந்து போனவை போலத் தோற்றம் கொள்வது இதனால் தானோ என்கிற சம்சயம் வேறே.


(தொடரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி.

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வரையறைகளுக்கு உட்பட்ட சட்டம் போட்ட இலக்கியம் என்பதில் எழுதுபவனின் கற்பனைச் சிறக்கடிப்பை ஒரு வரையறைக்கு உட்படுத்தி மழுங்கடிக்கும் ஆபத்தும் பதுங்கி இருப்பது தெரிகிறது. என்ன எழுதினாலும் அதை எழுதும் போதே கோட்பாடுகளை நினைவில் கொண்டே எழுத வேண்டும் என்பதும் எழுதுபவனுக்கு அவனது கற்பனைச் சுதந்திரத்தைக் காவு கொடுக்கிற அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.//

ஆமாம். இதுபோன்ற தேவையில்லாத கட்டுப்பாடுகள், வரையறைகள் கோட்பாடுகள் எல்லாம் வைத்துக்கொண்டால், சுதந்திரமாக அவரவர்களின் கற்பனையில் இயல்பாக எழுதுவது என்பது நடக்காத காரியமாகிவிடும்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவலின் பின்னல், கயிறு முறுக்குவது போல இருக்கக் கூடாது. கூடை முடைவது போல இருக்க வேண்டும் ...... ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது.. கதைகளும் கதைமாந்தர்களும் பெருகிப் பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க வேண்டும்'//

இது ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது.

எழுத்தாளர்களையும், வாசகர்களையும் மிகவும் யோசிக்க வைக்கும் மாபெரும் அலசல் பதிவுக்குப் பாராட்டுகள் சார்.

ஜீவி said...

@ வை.கோ. (2)

ஒருபக்கம் கோட்பாடுகள். இன்னொரு பக்கம் நடைமுறை சாத்தியங்கள்.

நடைமுறை சாத்தியமில்லாத கோட்பாடுகள் எப்படி வலுவிழக்கின்றன என்று அடுத்த பக்கம்.

தொடர்ந்து வாருங்கள்.





G.M Balasubramaniam said...

கநாசுவிடம் பழகியதாகச் சொல்லி தஞ்சைக் கவிராயரும் சுந்தர்ஜியும் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது கநாசு ஒரு கறார் விமரிசனகர்த்தா என்று துவங்கி ஜெய மோகன் பற்றியே நிறைய எழுதி இருக்கிறீர்கள் நாவலுக்கும் தொடர்கதைக்கும் இருக்கும் வேறுபாடுகள் குறித்துக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் சிந்திக்க வைக்கிறது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கதாமாந்தர்களின் பின் புலத்திலேயே நாவலைக் கொண்டு செல்வது நாவலாசிரியரின் திறமை என்றே நினைக்கிறேன்

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடர்ந்து வாருங்கள், கோமதியம்மா. முடிந்தால் நேரமிருப்பின் அரசு சாரிடமும் சொல்லுங்கள்.

ஜீவி said...

@ GMB

தமிழின் முதல் நாவல் க.நா.சு.அவர்களின் 'பொய்த்தேவு' என்று ஜெயமோகன் சொல்வதால் க.நா.சு.பற்றி குறிப்பிட்டேன். எந்த வகையில் நாவலுக்கான கோட்ப்பாடுகளை ஜெயமோகன் வகுக்கிறார் என்பதற்காக ஜெயமோகனின் நாவல் கோட்பாடுகளில் முக்கியமானவற்றை எளிய தமிழில் குறிப்பிட்டிருக்கிறேன். (ஜெயமோகன் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு எனது சுகமான நடையில்) அடுத்து தான் 'பொய்த்தேவு'க்கு வரவேண்டும். பொய்த்தேவு கதையை நமது பார்வையில் விமரிசனம் செய்து ஜெமோவின் நாவல் கோட்பாடுகளுக்கு அந்த நாவல் உட்பட்டிருக்கிறதா என்பதை வாசகர்கள் தீர்மானிக்க வைக்க வேண்டும்.

//எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கதாமாந்தர்களின் பின் புலத்திலேயே நாவலைக் கொண்டு செல்வது நாவலாசிரியரின் திறமை என்றே நினைக்கிறேன். /

இந்த முறை இப்பொழுது அருகிப் போய் கதாமாந்தர்களின் உணர்வுகளைப் புறக்கணித்து விட்டோம். கதாசிரியரின் நிழல் தான் கதாமாதர்கள் என்பதால் கதாசிரியர் தன் உணர்வைக் கொட்டவும் இடமில்லாமல் போய் விட்டது. மொத்தத்தில் உணர்வு பூர்வமான எழுத்துக்களுக்கும் இப்பொழுது இடமில்லை என்று ஆகிவிட்டது.

சிறு குழந்தைகளுக்கு அந்தக் காலத்தில் பாட்டிமார்கள் சொன்ன கதை மாதிரி இப்பொழுது எழுத்தாள்ர்கள் எழுதிச் சொல்லும் கதைகளாகி விட்டன. அதனால் எழுத்தாளர்களின் பெயரும் கதைசொல்லி என்று இப்பொழுது மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் நாவல்கள் எப்படிப் படைக்கப்படுகின்றன என்பதை இந்தத் தொடரில் அலசப் போகிறோம். சென்ற பொற்காலத்தை எப்படி இழந்து போய் நிற்கிறோம் என்பதையும் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி, ஐயா!

Bhanumathy Venkateswaran said...

நல்ல அலசல்! மாறி வரும் காலச் சூழலில் ஐந்து நாட்கள் விஸ்தாரமாக ஆடப்பட்ட கிரிகெட் மேட்ச் இன்று ட்வென்டி ட்வென்டி என்று வந்து நிற்பது போல, நாவல் என்னும் வடிவமே வழக்கொழிந்து பொய் விடுமோ என்று கவலையாக இருக்கிறது.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். யார் விட்டார்கள்?.. வழக்கொழிந்து போய் விடுமோ என்ற கவலை வேண்டாம். தண்டவாளத்திலிருந்து இறங்கிய ரயிலை மீண்டும் அதன் பாதையில் ஏற்றி பழைய வேகத்திற்குக் கொண்டு வருவோம்.

தொடர்ந்து வாருங்கள்.

வே.நடனசபாபதி said...

//நாவலில் கதையோட்டம் தேவையில்லை; கதைப் பின்னல் தான் தேவை என்பது ஜெமோ சொல்லும் இன்னொரு கருத்து.//

// ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது.//

நாவலுக்கு கதைப் பின்னல் தேவை என்று சொன்ன திரு ஜெயமோகன் அவர்கள், கதையைப் பின்னிப்பின்னி சொல்லும்போது நாவல் பலவீனமாகிறது என்று சொல்லும்போது குழப்பமாக இருக்கிறது. விளக்குங்களேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

பல உள் கதைளின் ஒன்றிற்கொன்று தொடர்பு படுத்தும் பின்னல்களை உள்ளடக்கியது நாவல் என்கிறார்.

அப்படியாக உருவாகும் நாவல் கூடை முடைவது போல இருக்க வேண்டும் என்கிறார். அதே நேரத்து பல கதைகளை உள்ளடக்காமல் ஒரே கதையை நாவலாக்கி அதையே பின்னிப் பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது என்கிறார்.

அவர் சொல்வதில் எனக்குப் புரிந்தது இது.

தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி, வே.ந.சார்.

Related Posts with Thumbnails