மின் நூல்

Sunday, June 30, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                             37


ங்கிலேயரைப் போலவே  பிரஞ்சுக்காரர்களும் நம் நாட்டில்  சில  இடங்களைக் கைப்பற்றி தம் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். அப்படி 1674-ம் ஆண்டு  பாண்டிச்சேரி பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வந்த பொழுது புதுவையில் பிரஞ்சு ஆட்சி இருந்ததால் தான்  பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரஞ்சுப் பகுதியான புதுச்சேரியை தமது வாழும் இடமாகக் கொண்டனர்.  பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ்  சந்தரநாகூர்,   மாஹே,    ஏனாம், காரைக்கால்,  மசூலிப்பட்டணம், புதுவை ஆகிய இடங்கள் இருந்தன.  மசூலிப்பட்டணம் மட்டும் ஆந்திரப் பகுதியில் சேர மற்ற  நகரங்கள் புதுச்சேரியின் கட்டுப்பாட்டின்  கீழ் இயங்கி வந்தன.  தேசம் சுதந்திரம் பெற்றதும் 1954-ல் இந்தப் பகுதிகள் இந்திய யூனியனோடு  சேர்க்கப்பட்டன.    1956-லிருந்து புதுவை இந்திய யூனியன் பிரதேசமாக இயங்கி வந்தாலும்,  1963-- ஜூலையில் தான் சட்டசபை போன்ற அமைப்புகள் ஏற்பட்டன.   சரியாக அந்த கால கட்டத்தில் தான் நான் புதுவை போயிருக்கிறேன்.  புதுவை  யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் அமைச்சரவையின் முதல்  முதல்வர் எட்வர்ட் கூபெர்ட்.   எளிய மக்களால் குபேர்  என்ற  செல்லமாக அழைக்கப் பட்டவர்.  இவர் அந்நாட்களில் பாண்டிச்சேரி மேயராகவும் செயல்பட்டார்.   கிட்டத்தட்ட ஒரே ஒரு ஆண்டு தான் இவர் பதவியில் இருந்திருந்திருக்கிறார்.   இவரை பலமுறை சகஜமாக பார்த்திருக்கிறேன்.

புதுவையில் தபால் அலுவலகமும்,  தொலைபேசி இணைப்பகமும் பக்கத்துப் பக்க கட்டிடங்களாக ஒரே வளாகத்துள் இருக்கும்.   அதற்கு எதிரிலிருந்த  சர்க்கிள் டி பாண்டிச்சேரி என்ற  மேல்தட்டு வர்க்க கிளப் மாதிரியான இடத்திற்கு  குபேர்  வரும் சமயங்களில் கண்ணில் பட்டிருக்கிறார்.  பார்ப்பதற்கு மோதிலால் நேரு மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும்.  ஹவுஸ் சர்ஜன் கோட்டு மாதிரி போட்டிருப்பார்.  அந்த கோட்டின் கீழ் இரு பைகளிலும் எந்நேரமும் சில்லரைக் காசுகள் நிரம்பியிருக்கும்.  எளிய மக்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோட்டின் கீழ்ப்பைகளில் கைவிட்டு காசுகளை அள்ளி எடுத்துத் தருவார்.  குடிசையில் வாழும் மக்களின் வீட்டுக் கல்யாணங்களுக்கு அழைப்பு பத்திரிகை வந்திருந்தால் தவறாமல் போய் ஏதாவது பரிசுகள் வழங்கி விட்டு வருவார்.  அந்த மாதிரி எளிய மக்களுடன் அவருக்கு ஒரு நெருக்கம் இருந்ததை நேரடியாகவே பார்த்து ரசித்திருக்கிறேன்.

அந்தக் கால புதுவையில் இருந்தவை இரண்டே இரண்டு அரசியல் கட்சிகள் தாம்.  ஒன்று, காங்கிரஸ்.  மற்றொன்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்டு கட்சியின் தோழர் வ. சுப்பையா சுதந்திரப் போராட்ட வீரர்.   உப்பு
 சத்தியாகிரத்தில் பங்கு கொண்டவர்.  சுதந்திர சங்கு பத்திரிகை ஆசிரியர் சங்கு சுப்பிரமணியத்துடன்  ஏற்பட்ட நட்பு  டி.என். சொக்கலிங்கம்,  ச.து.சு. யோகியார்,  ஏ.என். சிவராமன் என்று நட்பு வட்டம் விரிந்தது.   தோழர் சுந்தரய்யாவுடனான பழக்கம்  தொழிற்சங்க ரீதியாகப் போராட்டத்திற்கான உத்வேகத்தை இவருக்கு அளித்தது.  புதுச்சேரி  பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு சங்கம் ஆரம்பித்து  பெரியளவில் பாடுபட்டார்.  நேருஜி இவரின் ஆற்றலைப் பார்த்து  புதுச்சேரியின் விடுதலைக்காக பிரஞ்சு  அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை  நடத்த சுப்பையாவை அனுப்பி வைத்தார்.   அந்த பேச்சு வார்த்தைகளின் வெற்றியாகத் தான் 1954-ல்  பிரஞ்சு இந்தியப் பகுதிகள்   இந்திய யூனியனோடு இணைக்கப் பட்டன.   வெளித்திண்ணையில் கூரை போட்ட ஒரு சிறிய வீட்டில் சுப்பையா வாழ்ந்து வந்தார்.  தோழர் சுப்பையா அவர்களை சந்திக்க முடிந்ததில்லை.  டாக்டர் ரங்கநாதன் என்று ஒரு  முன்னணித் தோழர்.  அவருடன் பழக்கம் உண்டு.

ஜிப்மரில் பணியாற்றிய என்  நண்பன்   ரகுராமனுக்கு  ஆஸ்பத்திரி   வளாகத்திலேயே  க்வார்ட்டர்ஸ்   அலாட் ஆகியிருந்தது.   அதனால் அவன்   அங்கு குடியேற வேண்டியிருந்தது.      புதுவை   பாரதி தெருவில் ஒரு பெரிய தனி வீடு வாடகைக்குக் கிடைத்தது.  தொலைபேசி, தபால், ஆசிரியர் ஒருவர் என்று பத்து  நண்பர்கள்.  எல்லோரும் சேர்ந்து அங்கு குடியேறினோம்.  சேது என்ற  அருமை நண்பர் வீட்டுக்காரரோடு ஒப்பந்தம் போட, ஆகும் மொத்த செலவுகளை  நாங்கள் அனைவரும்  பகிர்ந்து கொள்ளலாம் என்று தீர்மானம் ஆயிற்று.

இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞன் நான்.   அந்த பருவத்திற்குரிய மனத்திற்கிசைந்த அத்தனை ஈடுபாடுகளுக்கும்  வடிகால் தேடிய பருவம்.  எழுத்து, மேடைப்பேச்சு, கவியரங்கம்,  தொழிற்சங்கம்-- என்று அத்தனைக்கும் நேர் வழிகாட்டி  நெறிப்படுத்திய  கம்யூனிச சித்தாத்த போதத்திற்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.   அந்த  நெறிப்படுத்துதல் மட்டும் அந்த இளம் வயதில் கிடைத்திருக்கவில்லை என்றால் திராவிட மாயையில் சிக்கி மன விசாலம் குன்றிக் குறுகிப் போயிருப்பேன்.  என் ஈடுபாடுகள் அத்தனைக்கும் வழிகோலும் வசதி கொண்டதாய் பிரஞ்சு நாகரிகத்தின் அழகு குலையாமல்  இருந்த அந்த குட்டியூண்டு நகரமும் வசீகரமாக இருந்தது.

இலக்கிய ஆர்வலர்களின் தோழமையோடு தமிழ் அறிஞர்கள் கலந்து  கொள்ளும்
கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தோம்.   வேதபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்திலும் சில கூட்டங்கள் நடந்திருக்கின்றன.  டாக்டர் மா.  இராச மாணிக்கனார் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவரிடம் ஆட்டோகிராப் கையெழுத்து வாங்கும் பொழுது,  'தமிழே என் உயிர்'  என்று கையெழுத்திட்ட பொழுது, 'தமிழே நம் உயிர்'  என்று எழுத வேண்டாமோ என்று கேட்டேன். இது தான் மற்றவர்களையும் அணைத்துக் கொண்டு பேசும் நான் பெற்ற கம்யூனிசக் கல்வியாக எனக்கிருந்தது.    ஆனால் இராசமாணிக்கனாரோ, "அது எப்படி உன்னையும்  சேர்த்துக் கொண்டு நம் உயிர் என்று என்னால் சொல்ல முடியும்?" என்று ஒரேயடியாக மறுத்து விட்டார்.

ம.பொ.சி.யை அழைத்திருந்தோம்..  ஜமக்காளம் விரித்த தரையில் அவர் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.   பேச்சின் நடுவே "இவரைத் தெரியுமோ, உங்களுக்கு?" என்று தன் வலக்கையை உயர்த்தி  அருகில்  அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டினார்.  அப்படி அவர் கையைத் தூக்கும்  பொழுது அவர்
அணிந்திருந்த முழுக்கை சட்டை  கக்கப் பகுதியில்   கிழிந்திருந்தது  மனசை வாட்டி எடுத்து விட்டது..  "இவர் தான் கவிஞர் கா.மு. ஷெரிப்.." என்று அவரை எங்களுக்கு  ம.பொ.சி. அறிமுகப்படுத்தினார்.  தான் மட்டும் தலைவனாய் தலை நிமிர்த்தி கர்வத்தோடு நடக்க வேண்டும் என்ற மனக்கோளாறுகள் அந்நாளைய  தலைமைப் பண்பாய் இருந்திருக்கவில்லை என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்.   அண்ணா கூட  நெடுஞ்செழியனை, "தம்பீ, வா.. தலைமையேற்க வா..." என்று அழைத்து நெடுஞ்செழியன் தலைமை தாங்கிய கூட்டத்தில் கலந்து கொண்டவர் தான்.   இப்படியான தலைமைப் பண்புள்ள தலைவர்களை இன்று பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாகத் தான் இருக்கிறது.

(வளரும்)


17 comments:

வெங்கட் நாகராஜ் said...

நினைவலைகள்....

உங்கள் அனுபவங்களை சொல்லிச் செல்லும் விதம் சிறப்பு.. பாண்டிச்சேரி எனக்கும் பிடித்த ஊர். நெய்வேலி நகரிலிருந்து பலமுறை அங்கே சென்றது உண்டு. ஒவ்வொரு முறை வேலைக்கான தேர்வு எழுத அங்கே தான் செல்வார்கள் நெய்வேலி மக்கள். நானும் அப்படியே.

ஸ்ரீராம். said...

குபேர் அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லையா?

தலைக்கனம் இல்லாத தலைவர்களை இந்நாளில் காணவே முடியாதுதான். தலைக்கனம் மட்டுமா?

நெல்லைத்தமிழன் said...

நீங்கள் அந்தக்காலப் பெரியவர்களைப் பற்றி விவரித்து எழுதும்போது, 'காமராஜர் மாதிரி ஒருவர் வாழ்ந்திருக்கமுடியுமா?' என்ற சந்தேகம் எழுவதுபோல, ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்கள் மக்கள் நலனுக்காக தொண்டுசெய்ய வந்தவர்கள்.

நானும் ம.பொ.சி அவர்களிடமிருந்து ஓவியத்துக்காக இரண்டாம் பரிசு 1980ல் பெற்றிருக்கிறேன் (நெல்லையில்).

நெல்லைத்தமிழன் said...

ம.பொ.சி என்று சொன்னதும், நீங்கள் 'இராசமாணிக்கனார்' என்று எழுதியிருந்ததைப் பார்த்து ஒன்று நினைவுக்கு வந்தது.

அந்த மாதிரித் தலைவர்களை, 'சிவஞான கிராமணியார்' என்று எழுதுவதே அவர்களுக்குச் செய்யும் நன்றிகெட்டதனம் அல்லவா? மாபெரும் தலைவர்களை, அவரவர் சாதிச் சங்கங்கள் மட்டும் நினைகூறும்படியான காலகட்டமாகிவிட்டது கடந்த 40 -50 ஆண்டுகள்.

G.M Balasubramaniam said...

தோழர் ஜீவி ஆநந்தரங்கம்பிள்ளையின் டைரியை வாசித்து இருக்கிறீர்களா பெங்களூரில் 1957 1964 காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகள் என்று சந்தேகமிருந்தால் கிடைக்க வேண்டிய பலவும் கிடைக்காமல் போகும் வாய்ப்பிருந்தது

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

அந்நாளைய பாண்டிச்சேரியின் அழகே அழகு. தெரு அமைப்பு ஒன்றே போதும். பிரஞ்சு கட்டடக்கலையின் பிரதிகளைக் காட்டும் கட்டிடங்கள் கடற்கரைப் பகுதிக்கு அழகு சேர்க்கும்.

கடற்கரையில் மகாத்மா சிலை இன்று இருக்கும் இடத்தில் டூப்ளேயின் சிலை இருந்தது.
அதை அப்படியே அலாக்காக பெயர்த்தெடுத்து கிரேன் வைத்துத் தூக்கி கப்பலில் பாரீஸுக்கே கொண்டு போனார்கள். இப்பொழுது பாரீஸில் அந்தச் சிலை எங்கு இருக்கிறதோ தெரியவில்லை.

இன்னொன்று. தமிழ் நாட்டை விட சிறப்பாக தமிழ் மொழி புழக்கத்தில் இருக்கும் ஊர் பாண்டிச்சேரி. எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததைத் தான் சொல்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இந்தப் பகுதியின் தலைப்பில் இருக்கும் சிலை குபேர் அவர்களின் சிலை தான்.

தலைக்கனத் தலைவரகளைக் கேட்டால் "அப்படியில்லாவிட்டால் எங்களையே ஓரங்கட்டி விடுவார்கள்.." என்று சொல்வார்களோ?..

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (1)

நீங்கள் குறிப்பிட்டிருப்பதை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன். அந்நாளைய பெரியவர்கள், தலைவர்கள் சிறப்புகளை அவர்களைப் பற்றி குறிப்பிடும் நேரத்தில் அவர்களின் நாட்டுத் தொண்டைப் பற்றி நானறிந்த முழுக் குறிப்புகளைக் கொடுக்கிறேன்.

ம.பொ.சி.யின் கைகளால் பரிசு பெற்றது பெரும் பேறு. வாழ்த்துக்கள், நெல்லை.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

தி. நகரில் ம.பொ.சி.யின் நினைவில் அவர் வாழ்ந்த தெரு, சிவஞானம் தெரு என்றே அழைக்கப்படுகிறது. எத்தையோ சிவஞானங்களில் ஒருவர் போல.

1956-ல் மொழிவாரி மாகாணங்களாக நாடு பிரிக்கப்பட்ட பொழுது 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன் ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டு போராட்டத்தைத் துவக்கினர்.

வடசென்னை அந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை சென்னை மாகாணத்தின் தலை நகராகவும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அப்பொழுது சென்னையைக் காக்க தமிழகத்திலிருந்து போராட்டக் களத்திற்கு புறப்பட்ட ஒரே தலைவர் ம.பொ.சி. அவர்களே ஆவர். 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்பது அவர் தேர்ந்தெடுத்த கோஷம்.

சென்னையை தமிழ்நாட்டோடு சேர்க்கும் வரை அவர் போராட்டம் ஓயவில்லை. அதே போல குமரியும், திருத்தணியும் தமிழ் நாட்டோடு சேர்ந்த பெருமையும் அவரையே சாரும்.
சிலபதிகாரம் என்றாலே ம.பொ.சி. தான். அந்த அளவுக்கு சிலம்புக்கு அத்தாரிட்டி அவர்.
எட்டாவது வரையே பள்ளிக் கல்வி பெற்றவர். அச்சு ஈய எழுத்துக்களில் புழங்கிய அச்சகத் தொழிலாளி. வயிற்றுவலியால் அடிகடி அவஸ்தைப்பட்டவர்.

தமிழரசு கழகம் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தவர். சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்கள் அந்தக் கட்சிக் கொடியின் சின்னம். தமிழ் முரசு, செங்கோல் பத்திரிகைகளுக்கு ஆசிரியர். பாரதியை குருவாகக் கொண்டவர். அவர் மீசை, கார்டுனிஸ்டுகளுக்கு மிகவும் கைகொடுத்த ஒன்று. ராஜாஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். மொழிவாரி மாகாணப் பிரிவுகளுக்குப் பிறகு அவர் கண்ட தமிழரசு கழகம் அர்த்தபூர்வமான இயக்கமாக இப்பொழுது தோன்றுகிறது.

Bhanumathy Venkateswaran said...

வசந்த கால நினைவலைகள் என்ற பெயருக்கு ஏற்றார் போல் மனசுக்குள் சிலுசிலுவென்று காற்றடிப்பது போல் இனிய அனுபவங்கள்.

வல்லிசிம்ஹன் said...

எத்தனை அருமையான நாட்கள். தலைவர்கள் தங்களை முதலாளிகளாக
நினைக்காத நேரம். பெருந்தலைவர்களோடு உங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டதைக் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதுவும் உண்மையிலியே உயர்ந்த குணங்களைக்
கொண்டவர்களுடன் பழகுவது எத்தனை நலம் வாய்ந்த அதிர்ஷ்டம்.

மனம் நிஜமாகவே ஆவலுடன் இருக்கிறது அடுத்து வரும் அத்தியாயங்களைப் படிக்க.

கோமதி அரசு said...

//தான் மட்டும் தலைவனாய் தலை நிமிர்த்தி கர்வத்தோடு நடக்க வேண்டும் என்ற மனக்கோளாறுகள் அந்நாளைய தலைமைப் பண்பாய் இருந்திருக்கவில்லை என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்//

அருமையான மனம் படைத்த தலைவர்கள் அந்த காலத்தில் இருந்து இருக்கிறார்கள்.
உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொள்கிறேன்.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

ஆஹா.. மனசுக்குள் மத்தாப்பு என்று சொல்லும் அறியா உள்ளாங்களுக்கிடையே
சிலுசிலுவென்று.. என்னே, அழகான வர்ணணை!.. அந்த சிலுசிலுவை உச்சரிக்கும் பொழுதே மனசெல்லாம் ஜில்லிப்பு கொள்ளுதே!

தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சகோதரி!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

தோழர் ஜீவி!.. அர்த்தபூர்வமான அழைப்பு ஜிஎம்பீ சார்! நன்றி.

நான் புதுவையில் இருந்த பொழுதே ஆனந்தரங்கம் பிள்ளை டயரி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர வாசித்ததில்லை.. பிற்காலத்தில் தான் எவ்வளவு மதிப்பு வாய்ந்த 'வாசிப்புக் கருவூலம் இது!' என்ற விஷயமே பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கிறது. அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.

பெங்களூராவது பரவாயில்லை.. தமிழகம்?. தோழர் தஞ்சை சிவராமன் ஒருவர் போதும்!
தஞ்சை சிவராமன், களப்பால் குப்பு, இரண்யன் இந்த மூன்று தோழர்களைப் பற்றியும் அறிந்தவற்றை எழுதுகிறேன். தாங்கள் வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

அந்த நாட்களில் நாட்டுத் தொண்டு அரசியலாயிற்று. இந்நாட்களிலோ எல்லா வியாபார அமைப்புகள் போல அரசியலும் ஒரு வியாபாரமாய் இருப்பதால் தான் அந்த முதலாளி சாயல் அடிக்கிறது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

அப்படிப்பட்ட அருமையான தலைவர்கள் அமைந்ததால் தான் உலகுக்கே ஓர் உன்னத எடுத்துக் காட்டாய் நம் தேசப் போராட்டம் அமைந்தது?.. அடிமை விலங்கு சுக்கு நூறாக உடைக்கப் பட்டது.. அதனால் தானே நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு மக்கள் தங்கள் கடமை போல தேசப்போராட்ட வேள்வித் தீயில் குதித்தார்கள்?.

பரித்ராணாய ஸாதூனாம்
விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே...

கிருஷ்ணபகவான் எப்பொழுது தோன்றப்போகிறாரோ, தெரியவில்லை.

வே.நடனசபாபதி said...

சந்திரநாகூர் 2-5-1950 இல் மேற்கு வங்காளத்துடன் இணைந்துவிட்டது. ஆனால் மாஹே, ஏனாம் காரைக்கால்மற்றும் புதுவை ஆகியவை யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டு 2-10 -1954 இல் இந்தியாவில் இணைக்கப்பட்டன.

புதுவை உங்களுடைய அரசியல் பார்வையை வேறு கோணத்திற்கு எடுத்து சென்று விரிவாக்கவும் இலக்கிய ரசனையை அதிகப்படுத்தவும் உதவியிருக்கிறது என அறியும்போது , ஒருவர் இருக்கும் சூழ்நிலை தான் அவரது வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது என்பதை உணரமுடிகிறது.

அந்த நாளைய தலைவர்களின் தலைமைப்பண்புகளை தற்போதுள்ள நிலைமையோடு ஒப்பிடும்போது ஏக்கப் பெருமூக்சு தான் வருகிறது. அவையெல்லாம் இனி வரப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

தொடர்கிறேன்.

Related Posts with Thumbnails