மின் நூல்

Friday, August 16, 2019

வசந்த கால நினைவலைகள்..

                                                                        43


1967-ம்  வருடம்  ஜனவரி  12-ம் தேதி.

அன்று  இரவுப்  பணி  எனக்கு.   பவானி தொலைபேசி  நிலையம் மிகப்  பெரிதும் இல்லாத,  மிகச் சிறிதும்  இல்லாத நடுவாந்திர இணைப்புகள் கொண்ட தொலைபேசி நிலையம் என்பதினால்  இரவுப்  பணிக்கு ஒருவர் தான் இருப்பார்.  அந்த ஒருவனாக நான் மட்டும்.   டிரங்க் கால் மற்றும் உள்ளூர் அழைப்புகளை  கையாளும் பணியில் இருந்தேன்.  தொலைபேசி நிலையமும் வீடு  போலவான அமைப்பில் தெருவை ஒட்டியே இருக்கும்.

இரவு சுமார் பத்தரை மணி இருக்கும்.  தொலைபேசி நிலையத்தின் முன்னால் பெரும் இரைச்சலாக இருந்ததினால்,  அணிந்திருந்த  ஹெட் செட்டை கழற்றி மேஜை மீது வைத்து  விட்டு என்னவென்று ஜன்னல் வழியாகப் பார்த்தால் தொலைபேசி நிலையத்தின் முன்னால் தான்  பெரும் கூட்டம் கூடியிருந்தது.   தாமதிக்காமல் கதவைத்  திறந்து   என்னவென்று கேட்டேன்.

"சார்!  எம்ஜிஆரை  எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டுட்டாராம்.  ஊர் பூராவும் தகவல் பற்றி எரிகிறது.  உங்களுக்கு அது பற்றி  தகவல் ஏதாவது தெரியுமா, சார்?  எம்ஜிஆர் இப்போ எப்படி இருக்கார்?  சொல்ல முடியுமா?" என்று படபடவென்று கூட்டத்தின் முன்னால் இருந்த இளைஞன் என்னைக் கேட்டான்.

எம்ஜிஆர் சுடப்பட்டிருக்கிறார் என்ற அந்த செய்தியே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  "நீங்கள் சொல்லித் தான் இதுவே எனக்குத் தெரியும்.." என்று நானும் கவலையுடன் சொன்னேன்.
                                                                                                                   
"நீங்கள் மெட்ராஸுக்கு போன் பண்ணி தகவல் கேட்டுச் சொல்லுங்க, சார்.." என்றார் கூட்டத்தில் ஒருவர்.

'அப்படியெல்லாம் சுலபமாகப்  பேசி விட முடியாது..' என்று சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை என்று எனக்குப் புரிந்தது.  முதலில் அவர்கள்  பதட்டத்தைத் தணித்து அமைதிபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் "என்னால் முடிந்தவரை அதற்கு  முயற்சிக்கிறேன்.." என்று சொல்லி விட்டு  "நீங்கள் எல்லாரும் வெளியேயே இருங்கள்.. இவர் மட்டும் உள்ளே வரட்டும். நான் சென்னையில் பத்திரிகை ஆபிஸில் கேட்டுச் சொல்கிறேன்.." என்று அந்த இளைஞரை மட்டும் உள்பக்கம் அழைத்து  அங்கிருந்த நாற்காலியில் அமரச் சொன்னேன்.

அதற்குள் இதே செய்தி உள்ளூரில் பரபரப்பாகி ஒருவருக்கொருவர் செய்தியை பரிமாறிக் கொள்ளும் அவசரத்தில் லோக்கல் அழைப்புகள் பிஸியாகி விட்டது.   ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் காலத்தில் 'நம்பர் ப்ளீஸ்' சிஸ்டம்.  வீட்டில் தொலைபேசி மேல் குழலை ஒருவர்   எடுத்த அடுத்த வினாடி தொ.நிலைய இணைப்புப்  போர்டில்  அந்த  தொலைபேசி   எண்ணுக்கான சிறிய பல்பு ஒன்று எரியும்.  செங்குத்தான    இணைப்பு போர்டுக்கு  கீழ்ப்பகுதியில் படுக்கை வசத்தில்
மேஜைப் பலகை போன்ற    இடத்தில் எதிரும் புதிருமாக    இரண்டிரண்டாக இருபது துளைகள்   இருக்கும்.  இரண்டு  துளைக்கு இரண்டு கார்டுகள் (செப்பு முகப்பு பொருத்தப்பட்ட wire இணைப்புகள்)  நுழைக்கப்பட்டு கீழ்ப்பகுதியில் இருக்கும் Pully-யில் கோர்க்கப்பட்டிருக்கும். கார்டின் மேல் பகுதியில் பிடித்து மேலே தூக்கினால் மேலே வரும்;  விட்டால் கீழே வந்து விடும். ஒரு கார்டு  ஆன்ஸரிங் கார்டு  எனவும் மற்றது காலிங் கார்டு என்றும் அழைக்கப்படும்.  அந்த ஆன்ஸரின் கார்டை எடுத்து பல்ப் எரியும் இடத்தின் கீழே இருக்கும் துளையில் செருகி,  அதற்கு எதிரே மேஜை பலகையில் இருக்கும் சின்ன தகடை (அதை key என்று சொல்வோம்) முன் பக்கம்  நகர்த்தினால் தொலைபேசியை எடுத்தவருடன் நாம் பேசலாம். அவர் கேட்கும்
எண்ணுடன் தொடர்பு ஏற்படுத்த காலிங் கார்டை எடுத்து மேல் பகுதியில் நூறு நூறாகப்  பிரித்திருக்கும் எண்ணிட்ட  துளைகளில் அவர் விரும்பும் எண்ணிற்கான துளையில் செருகி,  key-யை  பழைய   நிலைக்குக் கொண்டு  வந்து பின் பக்கமாக சாய்த்தால் கூப்பிடப்படுகிறவர் போனில் மணி அடித்து அவர் தொலைபேசியை எடுத்தவுடன் key பகுதியில் இருக்கும் பல்ப் அணைந்து விடும்.  அணையவில்லை என்றால் அவர் லயனில் வரவில்லை என்று அர்த்தம்ம்.   பல்ப் அணைந்து விட்டால் இருவருக்கும் இணைப்பு கிடைத்து பேசிக் கொள்வார்கள் என்று அர்த்தம்..  அவர்கள் பேசி முடித்ததும் key பகுதியில் இருக்கும்  இரண்டு பல்புகள் ஒளிர  பேச்சை முடித்து விட்டார்கள் என்று தெரிந்து  காலிங், ஆன்ஸரிங் இரண்டு கார்டு இணைப்புகளையும் துளையிலிருந்து எடுத்து விட்டால் அவர்கள் இருவருக்குமான தொடர்பு துண்டிக்கப் படும்.   ஒரு நாளில் எத்தனை பேருடன் எத்தனை தடவை வேண்டுமானால் பேசலாம்.  கணக்கே கிடையாது.

எம்.ஜி.ஆர் சுடப்பட்டு விட்டார் என்று தெரிந்து  அந்த நேரத்தில் பிஸியான அத்தனை அழைப்புகளுக்கும்  இணைப்பு கொடுத்து விட்டு,  என் அதிகாரியுடன் பேசினேன்.  விஷயத்தை விளக்கினேன்.  அன்-அபிஷியலாக  சென்னை தினத்தந்தி பத்திரிகை அலுவலகத்துடன் பேச அனுமதி வாங்கினேன்.  அவரும் நிலைமையைப்  புரிந்து  கொண்டு யாரோட வேண்டுமானாலும் பேசி பொது மக்களுக்குத் தெரிவியுங்கள்.  பின்னால் ஆப்ஸர்வேஷனில் குறிப்பு வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.  நானும்  கொஞ்ச நேரத்தில் அலுவலகத்திற்கு வருகிறேன்..' என்று  சொன்னார்.

அந்நாட்களில் தினத்தந்தி பத்திரிகை தான் மிகவும் பிரபலமான மக்கள் பத்திரிகையாகத் திகழ்ந்தது.  தொலைபேசி  டைரக்டரி உதவியுடன்  தினத்தந்தி அலுவலக எண்ணை குறித்துக் கொண்டு  டிரங்க்  சர்க்யூட்டில் தொடர்பு கொண்டேன்.  எம்ஜிஆர் சுடப்பட்டது  உண்மை என்றும்  அவர்  உடனடி சிகித்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறார் என்றும் எம்.ஆர்.ராதாவும் அதே மருத்துவமனையில் சிகித்சைக்காக அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும்  தகவல் கிடைத்தது.  விஷயத்தைத் தெரிந்து கொண்டு அந்த இளைஞரிடம் சொல்லி வெளியே திரண்டிருக்கும் கூட்டத்திற்குச் சொல்லச் சொன்னேன்.

இளைஞர் அப்படியே கூட்டத்தினருக்குச்  சொன்னார்.  அவர்கள் நம்பவில்லை.  முரசொலி அலுவலகத்தில் கேட்டுச்  சொல்லுங்கள் என்று அப்பொழுது தான் உண்மையான தகவல் கிடைக்கும் என்று  சொன்னார்கள்.   தொலைபேசி டைரக்டரியில் முரசொலி அலுவலகத்தின் எண்ணைக் கண்டு பிடித்து தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.   கொஞ்ச நேரத்திற்கு தொலைபேசியை யாருமே எடுக்க வில்லை.   இடைவெளி விட்டு இரண்டு  மூன்று தடவைகள்  முயற்சித்து  ஒருவழியாக அங்கு தொலைபேசியை எடுத்தவரிடம் இதே தகவலைப் பெற்று வெளியே திரண்டிருப்போருக்கு அந்த இளைஞர் மூலமாகவே தெரிவிக்கப் பட்டது. 

அதற்குள் அதிகாரியும் வந்து விட்டார்.  அந்த அதிகாரியும் நானும் தொலைபேசி நிலையத்திற்கு அருகேயே ஒரு வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த நீண்ட அறையை வாடகைக்கு எடுத்து சேர்ந்தே தங்கியிருந்தோம்.  சேவியர் என்று அவர் பெயர்;  போன் இன்ஸ்பெக்டர்.  அறை நண்பரே அதிகாரியாகவும் இருந்த சூழ்நிலை.   அவர் வந்ததும் எனக்கும் ஒரு தெம்பு கிடைத்த மாதிரி இருந்தது.  தனி ஒருவனான  மாட்டிக் கொள்ளாமல் இன்னொருவரும்  கூடக் கிடைத்த தெம்பு.

அந்நாட்களில் அரசு சார்ந்த பணியிடங்கள்,  வியாபார கடைகள், வியாபாரிகள்,  செல்வந்தர்கள் -- இவர்கள் வீட்டில் தான் தொலைபேசி என்பதே இருக்கும்.  கார் வைத்திருக்கிற மாதிரி தொலைபேசியும் ஒருவரின் அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் விஷயம்.  இதற்குள் ஊரில் இருந்த பெருந்தனக்காரர்கள் தொலைபேசி நிலையம் மூலமாகவே டிரங்க் கால் போட்டு தகவல் தெரிந்து கொள்ள ஆரம்பித்து மற்றவர்களுக்கும்  செய்தி பரவ கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஊரில் பதட்டம் தணிந்தது. 

காலையில்  கடைகளுக்கு வந்த செய்தித்தாட்கள்  பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.

(வளரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி.



Related Posts with Thumbnails