மின் நூல்

Friday, August 16, 2019

வசந்த கால நினைவலைகள்..

                                                                        43


1967-ம்  வருடம்  ஜனவரி  12-ம் தேதி.

அன்று  இரவுப்  பணி  எனக்கு.   பவானி தொலைபேசி  நிலையம் மிகப்  பெரிதும் இல்லாத,  மிகச் சிறிதும்  இல்லாத நடுவாந்திர இணைப்புகள் கொண்ட தொலைபேசி நிலையம் என்பதினால்  இரவுப்  பணிக்கு ஒருவர் தான் இருப்பார்.  அந்த ஒருவனாக நான் மட்டும்.   டிரங்க் கால் மற்றும் உள்ளூர் அழைப்புகளை  கையாளும் பணியில் இருந்தேன்.  தொலைபேசி நிலையமும் வீடு  போலவான அமைப்பில் தெருவை ஒட்டியே இருக்கும்.

இரவு சுமார் பத்தரை மணி இருக்கும்.  தொலைபேசி நிலையத்தின் முன்னால் பெரும் இரைச்சலாக இருந்ததினால்,  அணிந்திருந்த  ஹெட் செட்டை கழற்றி மேஜை மீது வைத்து  விட்டு என்னவென்று ஜன்னல் வழியாகப் பார்த்தால் தொலைபேசி நிலையத்தின் முன்னால் தான்  பெரும் கூட்டம் கூடியிருந்தது.   தாமதிக்காமல் கதவைத்  திறந்து   என்னவென்று கேட்டேன்.

"சார்!  எம்ஜிஆரை  எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டுட்டாராம்.  ஊர் பூராவும் தகவல் பற்றி எரிகிறது.  உங்களுக்கு அது பற்றி  தகவல் ஏதாவது தெரியுமா, சார்?  எம்ஜிஆர் இப்போ எப்படி இருக்கார்?  சொல்ல முடியுமா?" என்று படபடவென்று கூட்டத்தின் முன்னால் இருந்த இளைஞன் என்னைக் கேட்டான்.

எம்ஜிஆர் சுடப்பட்டிருக்கிறார் என்ற அந்த செய்தியே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  "நீங்கள் சொல்லித் தான் இதுவே எனக்குத் தெரியும்.." என்று நானும் கவலையுடன் சொன்னேன்.
                                                                                                                   
"நீங்கள் மெட்ராஸுக்கு போன் பண்ணி தகவல் கேட்டுச் சொல்லுங்க, சார்.." என்றார் கூட்டத்தில் ஒருவர்.

'அப்படியெல்லாம் சுலபமாகப்  பேசி விட முடியாது..' என்று சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை என்று எனக்குப் புரிந்தது.  முதலில் அவர்கள்  பதட்டத்தைத் தணித்து அமைதிபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் "என்னால் முடிந்தவரை அதற்கு  முயற்சிக்கிறேன்.." என்று சொல்லி விட்டு  "நீங்கள் எல்லாரும் வெளியேயே இருங்கள்.. இவர் மட்டும் உள்ளே வரட்டும். நான் சென்னையில் பத்திரிகை ஆபிஸில் கேட்டுச் சொல்கிறேன்.." என்று அந்த இளைஞரை மட்டும் உள்பக்கம் அழைத்து  அங்கிருந்த நாற்காலியில் அமரச் சொன்னேன்.

அதற்குள் இதே செய்தி உள்ளூரில் பரபரப்பாகி ஒருவருக்கொருவர் செய்தியை பரிமாறிக் கொள்ளும் அவசரத்தில் லோக்கல் அழைப்புகள் பிஸியாகி விட்டது.   ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் காலத்தில் 'நம்பர் ப்ளீஸ்' சிஸ்டம்.  வீட்டில் தொலைபேசி மேல் குழலை ஒருவர்   எடுத்த அடுத்த வினாடி தொ.நிலைய இணைப்புப்  போர்டில்  அந்த  தொலைபேசி   எண்ணுக்கான சிறிய பல்பு ஒன்று எரியும்.  செங்குத்தான    இணைப்பு போர்டுக்கு  கீழ்ப்பகுதியில் படுக்கை வசத்தில்
மேஜைப் பலகை போன்ற    இடத்தில் எதிரும் புதிருமாக    இரண்டிரண்டாக இருபது துளைகள்   இருக்கும்.  இரண்டு  துளைக்கு இரண்டு கார்டுகள் (செப்பு முகப்பு பொருத்தப்பட்ட wire இணைப்புகள்)  நுழைக்கப்பட்டு கீழ்ப்பகுதியில் இருக்கும் Pully-யில் கோர்க்கப்பட்டிருக்கும். கார்டின் மேல் பகுதியில் பிடித்து மேலே தூக்கினால் மேலே வரும்;  விட்டால் கீழே வந்து விடும். ஒரு கார்டு  ஆன்ஸரிங் கார்டு  எனவும் மற்றது காலிங் கார்டு என்றும் அழைக்கப்படும்.  அந்த ஆன்ஸரின் கார்டை எடுத்து பல்ப் எரியும் இடத்தின் கீழே இருக்கும் துளையில் செருகி,  அதற்கு எதிரே மேஜை பலகையில் இருக்கும் சின்ன தகடை (அதை key என்று சொல்வோம்) முன் பக்கம்  நகர்த்தினால் தொலைபேசியை எடுத்தவருடன் நாம் பேசலாம். அவர் கேட்கும்
எண்ணுடன் தொடர்பு ஏற்படுத்த காலிங் கார்டை எடுத்து மேல் பகுதியில் நூறு நூறாகப்  பிரித்திருக்கும் எண்ணிட்ட  துளைகளில் அவர் விரும்பும் எண்ணிற்கான துளையில் செருகி,  key-யை  பழைய   நிலைக்குக் கொண்டு  வந்து பின் பக்கமாக சாய்த்தால் கூப்பிடப்படுகிறவர் போனில் மணி அடித்து அவர் தொலைபேசியை எடுத்தவுடன் key பகுதியில் இருக்கும் பல்ப் அணைந்து விடும்.  அணையவில்லை என்றால் அவர் லயனில் வரவில்லை என்று அர்த்தம்ம்.   பல்ப் அணைந்து விட்டால் இருவருக்கும் இணைப்பு கிடைத்து பேசிக் கொள்வார்கள் என்று அர்த்தம்..  அவர்கள் பேசி முடித்ததும் key பகுதியில் இருக்கும்  இரண்டு பல்புகள் ஒளிர  பேச்சை முடித்து விட்டார்கள் என்று தெரிந்து  காலிங், ஆன்ஸரிங் இரண்டு கார்டு இணைப்புகளையும் துளையிலிருந்து எடுத்து விட்டால் அவர்கள் இருவருக்குமான தொடர்பு துண்டிக்கப் படும்.   ஒரு நாளில் எத்தனை பேருடன் எத்தனை தடவை வேண்டுமானால் பேசலாம்.  கணக்கே கிடையாது.

எம்.ஜி.ஆர் சுடப்பட்டு விட்டார் என்று தெரிந்து  அந்த நேரத்தில் பிஸியான அத்தனை அழைப்புகளுக்கும்  இணைப்பு கொடுத்து விட்டு,  என் அதிகாரியுடன் பேசினேன்.  விஷயத்தை விளக்கினேன்.  அன்-அபிஷியலாக  சென்னை தினத்தந்தி பத்திரிகை அலுவலகத்துடன் பேச அனுமதி வாங்கினேன்.  அவரும் நிலைமையைப்  புரிந்து  கொண்டு யாரோட வேண்டுமானாலும் பேசி பொது மக்களுக்குத் தெரிவியுங்கள்.  பின்னால் ஆப்ஸர்வேஷனில் குறிப்பு வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.  நானும்  கொஞ்ச நேரத்தில் அலுவலகத்திற்கு வருகிறேன்..' என்று  சொன்னார்.

அந்நாட்களில் தினத்தந்தி பத்திரிகை தான் மிகவும் பிரபலமான மக்கள் பத்திரிகையாகத் திகழ்ந்தது.  தொலைபேசி  டைரக்டரி உதவியுடன்  தினத்தந்தி அலுவலக எண்ணை குறித்துக் கொண்டு  டிரங்க்  சர்க்யூட்டில் தொடர்பு கொண்டேன்.  எம்ஜிஆர் சுடப்பட்டது  உண்மை என்றும்  அவர்  உடனடி சிகித்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறார் என்றும் எம்.ஆர்.ராதாவும் அதே மருத்துவமனையில் சிகித்சைக்காக அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும்  தகவல் கிடைத்தது.  விஷயத்தைத் தெரிந்து கொண்டு அந்த இளைஞரிடம் சொல்லி வெளியே திரண்டிருக்கும் கூட்டத்திற்குச் சொல்லச் சொன்னேன்.

இளைஞர் அப்படியே கூட்டத்தினருக்குச்  சொன்னார்.  அவர்கள் நம்பவில்லை.  முரசொலி அலுவலகத்தில் கேட்டுச்  சொல்லுங்கள் என்று அப்பொழுது தான் உண்மையான தகவல் கிடைக்கும் என்று  சொன்னார்கள்.   தொலைபேசி டைரக்டரியில் முரசொலி அலுவலகத்தின் எண்ணைக் கண்டு பிடித்து தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.   கொஞ்ச நேரத்திற்கு தொலைபேசியை யாருமே எடுக்க வில்லை.   இடைவெளி விட்டு இரண்டு  மூன்று தடவைகள்  முயற்சித்து  ஒருவழியாக அங்கு தொலைபேசியை எடுத்தவரிடம் இதே தகவலைப் பெற்று வெளியே திரண்டிருப்போருக்கு அந்த இளைஞர் மூலமாகவே தெரிவிக்கப் பட்டது. 

அதற்குள் அதிகாரியும் வந்து விட்டார்.  அந்த அதிகாரியும் நானும் தொலைபேசி நிலையத்திற்கு அருகேயே ஒரு வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த நீண்ட அறையை வாடகைக்கு எடுத்து சேர்ந்தே தங்கியிருந்தோம்.  சேவியர் என்று அவர் பெயர்;  போன் இன்ஸ்பெக்டர்.  அறை நண்பரே அதிகாரியாகவும் இருந்த சூழ்நிலை.   அவர் வந்ததும் எனக்கும் ஒரு தெம்பு கிடைத்த மாதிரி இருந்தது.  தனி ஒருவனான  மாட்டிக் கொள்ளாமல் இன்னொருவரும்  கூடக் கிடைத்த தெம்பு.

அந்நாட்களில் அரசு சார்ந்த பணியிடங்கள்,  வியாபார கடைகள், வியாபாரிகள்,  செல்வந்தர்கள் -- இவர்கள் வீட்டில் தான் தொலைபேசி என்பதே இருக்கும்.  கார் வைத்திருக்கிற மாதிரி தொலைபேசியும் ஒருவரின் அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் விஷயம்.  இதற்குள் ஊரில் இருந்த பெருந்தனக்காரர்கள் தொலைபேசி நிலையம் மூலமாகவே டிரங்க் கால் போட்டு தகவல் தெரிந்து கொள்ள ஆரம்பித்து மற்றவர்களுக்கும்  செய்தி பரவ கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஊரில் பதட்டம் தணிந்தது. 

காலையில்  கடைகளுக்கு வந்த செய்தித்தாட்கள்  பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.

(வளரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி.



14 comments:

இராய செல்லப்பா said...

அடடே! அந்த நாளில் பி எஸ் என் எல் மக்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கிறது என்பதைக் கேட்கும்போது நம்பவே முடியவில்லை. பிறகு என்னதான் ஆயிற்று அதற்கு? மக்கள் சேவையில் அது ஏன் பின் தங்கிப் போனது?

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான சம்பவங்கள்.

Bhanumathy V. said...

இப்போது படிக்கும் பொழுது சுவாரஸ்யமாக இருக்கிறது. அப்போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது என்று தெரியவில்லை.

G.M Balasubramaniam said...

சிறு வயதில் காந்திஜி சுடப்பட்டதை ரேடியோவில் கேட்ட நினைவு வருகிறது

வல்லிசிம்ஹன் said...

அப்போது இருந்த மக்கள் சாத்வீகமாக இருந்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
இல்லாவிட்டால் கதவு ஜன்னலை எல்லாம் உடைத்திருப்பார்களோ.


எத்தனை பதட்டமான நிலை. அதைச் சாதுர்யமாகக்
கையாண்டு இருக்கிறிர்கள்.

நல்ல த்ரில் தான். பயம் கலந்த அட்வென்ச்சர்.
தொலைபேசி எக்ஸ்சேஞ் விளக்கம் சூப்பர்ப்.
நல்லதொரு பதிவு. ஜீவி சார்.

வே.நடனசபாபதி said...

நீங்கள் குறிப்பிடும் நிகழ்வு நடந்தபோது, நான் கர்நாடக மா நிலத்திலுள்ள (அப்போது மைசூர் மாநிலம்) கதக் என்ற ஊரில் இருந்தேன். அங்கு சென்று பத்து நாட்கள் தான் ஆகியிருந்தபடியால் கன்னடம் தெரியாததால்,. நாளிதழில் எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா படங்கள் வந்திருப்பதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்து தெரிந்துகொண்டேன். வெளிமாநிலத்தில் இருந்த எனக்கே ஆர்வம் இருந்ததென்றால், தமிழ் நாட்டில் அவரது எண்ணற்ற இரசிகர்களுக்கும் அவர் பொருளாளராக இருந்த தி.மு.க தொண்டர்களுக்கும் என்ன விதமான உணர்வு/ பற்றம் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்யமுடிக்றது.

அதுவும் அப்போது தொலைபேசிதான் இணைப்பு கருவியாக இருந்ததால், நிச்சயம் தொலைபேசி அலுவலகத்தை நாடித்தான் வந்திருப்பார்கள். அந்த நேரத்தில் வந்திருந்த கூட்டத்தினருக்கு அமைதியாக பதில் அளித்து ,அந்த கூட்டத்தில் இருந்த ஒருவரை உள்ளே அழைத்து,தகவலை உறுதி செய்து நிலமையை சமாளித்த தங்களின் சமயோசிதத்தை என்னவென்று சொல்ல. இவையெல்லாம் சொல்லிக் கொடுத்தோ அல்லது பயிற்சி அளித்தோ வருவதில்லை. பாராட்டுகள்!

ஜீவி said...

@ இராய. செல்லப்பா

அந்நாட்களில் Post and Telegraph Department-ன் ஒரு அங்கம், தொலைபேசி இலாகா.
போஸ்ட், டெலகிராப், தொலைபேசி இந்த மூன்றில் ஆரம்பத்திலிருந்தே வளப்பமுள்ள துறையாக இருந்தது, தொலைபேசி தான். பொன் முட்டையிட்ட வாத்து. எளிய மக்களின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தபால் துறையின் இயல்பான இழப்புகள் தொலைபேசித் துறையின் அபரிதமான வருமானத்தால் சரிக்கட்டப்பட்டன. இது யாரின் கண்ணை உறுத்தியதோ தெரியவில்லை.

சிங்கத்தை ஒற்றுமையுடன் எதிர்த்த காளைகள் கதை தான். P&T Dept. என்ற மூன்றாய் ஒன்றுப்பட்ட இலாகாவை தனித்தனியாகக் கூறு போட்டார்கள்.

தொலைபேசி இலாகாவை கபளீகரம் செய்யவே அரசு இலாகாவாக இருந்த அதை பொதுத்துறையாக்கி BSNL என்று பெயர் சூட்டினார்கள்.. இந்த சூது அப்பொழுது தெரியவில்லை. முதலில் தொலைபேசியோடு தந்தித் துறையை இணைத்து தந்தியை அசுர கால வேகச் சுழலில் காணாமல் போகச் செய்தார்கள். தனிக் காளையாய் இப்பொழுது களத்தில் தொலைபேசி மட்டுமே. இப்பொழுது பொன் முட்டையிடும் வாத்தை கீறுவது மிகவும் சுலபம்.

மற்ற திருவிளையாடல்கள் உங்களுக்கே தெரியும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஒருகாலத்து அதிர்ச்சிகள், திகில்கள் எல்லாம் அடுத்து வரும் கால கட்டத்தில் வாசிப்பதற்கு கதை போல சுவாரஸ்யமாக இருப்பதற்கு அவை நடந்த காலத்திற்கு பிற்காலத்திய நிகழ்வுகள் ஓரளவு நமக்குத் தெரிந்திருப்பதே காரணாம் என்று நினைக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: உங்களது பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும். எம்ஜிஆர் சுடப்பட்ட போது மிகவும் பரபரப்பாக இருந்திருக்குமே. எப்படியோ சமாளித்துவிட்டீர்களே கூட்டத்தை. கொஞ்சம் பதற்றமாகவே இருந்திருக்கும் இல்லையா? உங்களுக்குத்தான் எத்தனை அனுபவங்கள்? தொடர்கிறோம்

கீதா: பரவாயில்லையே அந்தச் சமயத்தில் மக்கள் நிலையத்திற்கும் அலுவலகத்திற்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்பதும் நீங்கள் தனியாகவே சமாளித்ததும் பெரிய விஷயம்தான்.

வித விதமான அனுபவங்கள் அதை நீங்கள் நினைவு வைத்திருந்து எழுதுவதும் சிறப்பு.

தொடர்கிறோம்

வெங்கட் நாகராஜ் said...

கூட்டம் கூட்டமாக வரும் மக்களைச் சமாளிப்பது ரொம்பவே கடினமான வேலை. ஒரு முறை இரவு எட்டு மணிக்கு மேல் இப்படி ஒரு பிரச்சனை எனக்கும் வந்தது. ஆனால் அது வேறு விதம். அலுவலகத்தில் மொத்தமாக நான்கு பேர் - அதில் ஒருவர் மட்டுமே அதிகாரி. காவல்துறையினர் சில ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்களை அழைத்து வந்து விட்டார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை, மேலதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் கட்டளைகள் பெற்று அன்றைய தினம் பிரச்சனையை சுமூகமாக முடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டோம். இரவு வீடு திரும்பும்போது மணி பன்னிரெண்டு. அடுத்த நாள் பகலில் அந்தப் பிரச்சனை மீண்டும் அதிகாரிகள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு நிலைமை சீரானது. இரவில் நாங்கள் செய்த வேலைகளுக்கு மூத்த அதிகாரி ஒருவரிடமிருந்து பாராட்டும் கிடைத்தது.

தொடரட்டும் நினைவலைகள்.

ஜீவி said...

@ Bhanumathy. V

அப்பொழுது அலுவலகத்தைச் சுற்றி நின்ரிருந்தோரை தனி ஒருவனாக சமாளிப்பதின் மேலான கவனம் தான் கூடியிருந்தது. என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வத் துடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு நடந்தவை தொடர்பான செய்தியை என்னால் தான் அந்த இக்கட்டான நேரத்தில் சென்னையுடன் தொடர்ப்பு கொண்டு சொல்ல முடியும் என்ற அளவில் எனது முக்கியத்துவம் அவர்களிடம் நட்பு ரீதியாத உணர்வை அதிகரித்திருந்தது. அதனால் அவர்களால் எனக்கோ அலுவலத்திற்கோ ஏதும் நேரிடாது என்ற நிச்சயம் என்னுள் பதட்டமில்லாமல் செயலாற்ற வைத்தது.

நல்ல வேளை. தினத்தந்தி பத்திரிகை அலுவலகத்தில் அந்த நேரத்தில் போற்றத் தக்க ஒத்துழைப்பு கிடைத்தது. அந்த மாதிரியான பதட்ட நேரத்தில் மிகுந்த பொறுப்புணர்வுடன் மக்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளை ஏனோ தானோ என்றில்லாது அசாத்திய புரிந்துணர்வுடன் அவர்கள் கையாண்ட நேர்த்தியைப் பாராட்ட வேண்டும்.
ஒரு பத்திரிகை அலுவலகம் தனியாக ஒரு நபரை அதற்கான பணியில் அமர்த்தி மக்கள் பதட்டத்தைத் தணிக்கும் செயலாக பொதுஜன தொடர்பை நிர்வகித்தது ஒரு பத்திரிகையின் அன்றாட செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவிஷயம். அதை நடத்திக் காட்டிய பெருமை தினத்தந்தியைச் சேரும்.

ஜீவி said...

@ ஜிஎம்பி

அப்படியா?..

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

நிகழ்வை வாசித்தவுடனேயே என்னிடத்தில் உங்களைப் பொருத்திப் பார்த்து சரியான அனுமானம் கொண்டிருக்கிறீர்கள். வாசிப்பின் நேர்த்தி இது தான்.

ஆப்ஸர்வேஷன் என்ற ஒரு விஷயம் குறித்து தயங்கி, அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அனுமதி வாங்கினேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?.. அது குறித்து விளக்கமாகச் சொல்லி அடுத்த பகுதியில் அந்நாளைய டிரங்க் எக்ஸ்சேஞ்ச் பணிகள் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதெல்லாம் வெகு சுவாரஸ்யமான விஷயத் தொகுப்புகள். காலத்தின் வேக ஓட்டம் தொலைபேசியைப் பொருத்த மட்டில் பிரமிக்கத் தக்க ஒன்று.

ஜீவி said...

@ நடன சபாபதி

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எளிய மக்களின் அன்பையும் செல்வாக்கையும் கொண்டது. அந்த தனது தனிப்பட்ட மேன்மையை தன்னில் தனிப்பெரும் செல்வமாகக் கொண்டவர் அவர். அந்த உன்னதத்தை அதற்கு எந்தவித பங்கமும் ஏற்பட்டு விடாமல் கடைசி வரை பாதுகாத்து வந்தவர் அவர்.

எம்ஜிஆரின் பெருமைகளைப் பற்றி நிறையச் சொல்லலாம். வார்த்தைகளில் அதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி, ஐயா.

Related Posts with Thumbnails