மின் நூல்

Tuesday, May 31, 2016

அழகிய தமிழ் மொழி இது!....

பகுதி--12


நாடு காண் காதை புகார் காண்டத்தின் கடைசிக் காதை.  இந்தக் காதையில் கண்ணகியும்  கோவலனும் பூம்புகார் நகரை விட்டு நீங்கி அவர்கள் உறையூரை அடையும் வரை சொல்லப்படுகிறது. உறையூர் சோழ நாட்டில் தான் இருப்பதால் அவர்கள் இருவரும் இன்னும் சோழ நாட்டை விட்டு முழுதாக நீங்க வில்லை.

இந்தக் காண்ட முடிவில் இன்னொரு சிறப்பு. ** கவுந்தி அடிகள் என்னும் பெண் சமணத்துறவி அறிமுகமாகிறார்.  கோவலனும் கண்ணகியும் அவரைச் சந்தித்த யோகம் அவர்களுக்கு அவரின் நட்பு கிடைக்கிறது.  உருவும், உயர்பேர் ஒழுக்கமும் பெருமகன் அருகப் பெருமானின் திருமொழி பிறழா நோன்பும் உடையவர் கவுந்தி அடிகள். 

“எதன் பொருட்டு புகார் நீங்கி மதுரை செல்கிறீர்கள்?” என்று கோவலனிடம் கேட்கிறார் கவுந்தி அடிகளார்.. 

“அடிகளாரே! மன்னிக்க வேண்டும். எதையும் விவரமாகச் சொல்வதற்கான மன நிலையில் நான் இல்லை. இப்போதைக்கு மதுரை மாநகர் சென்று வாணிபம் செய்து பொருள் ஈட்டும் எண்ணத்தில் இருக்கிறேன்..” என்று அவருக்கு மறுமொழி சொல்கிறான் கோவலன். 

“ஓ! அப்படியா! நல்லது.  பெருமான் அருகனை வழிபடுவதற்காக நானும் தென் தமிழ்நாட்டு தீதுதீர் மதுரை நகர் செல்ல விருப்பம் உடையவனாய் இருக்கிறேன். ஆதலின்    நாம் சேர்ந்தே பயணப்படலாம்..” என்கிறார். கவுந்தி அடிகளார்.

அடுத்த நாள். கீழை வானில் ஞாயிறு கூட இன்னும் எழும்பி செக்கச் செவேலென்று சிவப்பு வண்ணம் தீட்டவில்லை. தோளில் உறி மாட்டி, ஒரு கையில் மயில் பீலியும் இன்னொரு கையில் பிச்சைப் பாத்திரமும் ஏந்தி அடிகளார் மதுரை கிளம்ப ஆயத்தமாகி விட்டார். தவப்பள்ளியை விட்டுக்  கிளம்பும் முன், ‘மொழிப்பொருள் தெய்வம் வழித்துணையாக அமைய வேண்டும்’ என்று பஞ்ச நமஸ்கார மந்திரம் துதிக்கிறார்.  கோவலனும் கண்ணகியும் அடிகளார் போலவே பஞ்ச பரமேஷ்ட்டிகளைத் துதித்து அடிகளாருடன் சேர்ந்து மதுரைப் பயணத்திற்கு தயாராகின்றனர்.

வழிபூராவும் இயற்கைக் காட்சிகள்.  சோலைகளும், பூத்துக்  குலுங்கும் மலர் வனங்களும்,, நீர்ச்சுனைகளும் மனசுக்கு தெம்பு கூட்டுவனவாய் வழி நெடுகிலும் வருகின்றன.  மெல்லிய இயல்புடைய கண்ணைகியின் பாதங்கள் நோகுமே என்று வழித்துன்பத்தை அவர்களுக்கு விளக்கி ஓரளவு துன்பம் குறைவாக இருக்கிற வழிப்பாதையில் மேற்கொண்டான பயணத்தைத் தொடர்ந்தால் நல்லது என்று கவுந்தி அடிகளார் நினைக்கிறார்.. 

காப்பியத்தை  இயற்றிய  இளங்கோ அடிகளோ, சமண மத ஈடுபாடுகளையும் வழிபாடுகளையும் காப்பியத்தில் சொல்லிச் செல்வதற்கு வசதியாக கவுந்தி அடிகளாரை உபயோகப்படுத்திக்  கொள்கிறார். அதைத் தவிர வயுதான அந்த மூதாட்டி, பெண் என்கிற கோணத்தில் எல்லாவிதங்களிலும் தன் காதல் மனைவிக்கு உதவியாக இருப்பார் என்றும் நினைக்கிறான்.

அவர்கள் வழியில் சமண மத சாரணர்களைச் சந்திக்கின்றனர். அவர்களிடம் கோவலனும், கண்ணகியும் ஆசி பெறுகின்றனர்.  ஓடம் கொண்டு காவிரி ஆற்றைக் கடக்கின்றனர்.  வழிப்பயண களைப்பு நீங்க வழியில் கண்ட சோலையில் சற்று இளைப்பாறுகின்றனர்.  அப்பொழுது  தான் தொழிலை மேற்கொண்டாள் போலத் தோற்றமளிக்கும் பரத்தை ஒருத்தியையும் அவளை நெருங்கி நின்ற காமுகன் ஒருவனையும் வழியில் எதிர் கொள்கின்றனர்.  அந்தப் பரத்தை, கோவலனையும் கண்ணகியையும் சுட்டி“காமனும் அவன் தேவிபோலவும் காணப்படுகிற இவர்கள் யார்?” என்று கவுந்தி அடிகளாரிடம்  கேட்கிறாள்.

“காமனும் இரதியும் அல்லர். மானிடர் தாம்; இவர்கள்  என் மக்கள். அவர்களை நெருங்காது விலகிச் செல்வீர்..” என்கிறார் அடிகளார்.

அவர் சொன்னது கேட்டு கலகலவென்று சிரிக்கிறாள் அந்தப் பரத்தை. “உம் மக்களா?.. ஒரு வயிற்றில் பிறந்தோர் கணவனும் மனைவியும் போலக் கூடியும் வாழ்க்கை நடத்துதல் கூடுமோ?” என்று கூறி மறுபடியும் எள்ளலாய் நகைக்கிறாள்.

அந்தத் தீமொழி கேட்டு  கண்ணகி செவிகள் பொத்திக் கண் கலங்குகிறாள். அதைப் பார்த்த கவுந்தி அடிகள், “எம் பூங்கோதை போன்ற பெண்ணை இகழ்ந்தனர் போலும்! மு;ள் நிறைந்த காட்டிலே நீவிர் முது நரியாகுக!” என்று சபிக்கிறார்.. தவப்பேறு  பெற்றவர் ஆதலின் அவர் இட்ட சாபம் உடனே பலித்தது. 

தம் அருகே கேட்ட நரி ஊளையைக்  கேட்ட கோவலனும் கண்ணகியும் மனம் இறங்கி அடிகளார் அவர்களுக்கு சாப விகோசனம் அளீக்க இறைஞ்சுகின்றனர்.  “தம் அறியாமையால் உளறிய இவர்கள் பன்னிரண்டு மாதங்கள் உறையூரின் புறத்தேயுள்ள காவற்காட்டில் திரிந்து பின் பழைய உரு அடைவர்!” என்று அவர்களுக்கு கவுந்தி அடிகளார் சாபவிடுதலை அளிக்கிறார். 

நாடுகாண் காதையோடு புகார்க் காண்டம் நிறைவுற்றாலும், மதுரை செல்லும் அவர்களின்  வழிப்பயணம் காடும் காடுசூழ்ந்த பகுதிகளில் தொடர்கிறது. அதனால் தொடரும் அப்பயணத்தின் தொடர்ச்சி அடுத்த மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையாக ஆரம்பிக்கிறது.

விடியற்காலையில்  மூவரும் உறையூரை விட்டு நீங்கி தெற்கு திசையில் செல்கின்றனர்.  வழி நெடுக சோலைகளும், வயல்களும் ஆதலால் பயணக்  களைப்பு  அவ்வளவாக தெரியாத சூழலில் எதிர்ப்பட்ட ஒரு மண்டபத்துள்  நுழைந்த போது அங்கு முதிர்ந்த மறையோன் அமர்ந்திருக்கக் காண்கின்றனர்.

“வேத முதல்வரே! மதுரை செல்லும் வழி யாது?” என்று கோவலன் அவரிடம் கேட்க, அந்த  மறையோனோ 'இந்த கடும் வேனிற்காலத்தில் இந்த பூம்பாவையுடன் பயணம் மேற்கொண்டீரே!” என்று கண்ணகியைப் பார்த்து நெகிழ்ந்து போகிரார். “இந்தப் பகுதி  தாண்டினீர்கள் என்றால் பாறைகளும், சிறு குன்றுகளும் கானல்நீர் வேலிகளைக் கடந்து காணப்படும். இந்த நீண்ட பாலை போன்ற பகுதி நீங்கினால் கொடும்பாளூர், நெடுங்குளம் என்று  இரு ஊர்களுக்குப் பொதுவாக இருக்கும் ஏரிக்கரையை அடைவீர்கள்.  அங்கு சிவபெருமானின் திரிசூலம் போல மூன்று வழிகள் பிரியும்..” என்று செல்லப் போகிற வழிப்பாதையை அவர்கள் நங்கு புரிந்து கொள்ளும்  விதத்தில் மேற்கொண்டு விளக்கிச் சொல்கிறார்:

தற்கால உறையூரிலிருந்து மதுரை செல்லும் வழிப்பாதைகளை நினைவில் கொண்டால், அந்த மாமுது மறையோன் சொன்ன வழிகளின் நேர்த்தியை நாமும் அனுமானித்து மகிழலாம். ஒரு நாவல் என்றால் கதை நிகழும் இடங்களின் தன்மைகளையும் அதற்கான இயற்கைச் சூழல்களையும் எப்படி உள்ளடக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை நமக்கும் சொல்லும் விதத்தில் இளங்கோ அடிகளார் தம் காப்பியத்தை நடத்திக் கொண்டு செல்கிறார்.  வாசிக்கும் நமக்கும் அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவற்றைப்  பற்றி விளக்கமாகவே பார்க்கலாம். 

“வலப்புற வழியாகச் செல்லத் துணிந்தால் வரிசை வரிசையாக கடம்ப மரங்களும், காய்ந்த ஓலையும் பெருத்த தாளினையும் கொண்ட வாகை மரங்களும், மூங்கிலும், நீரற்ற சுள்ளியும் வழிநெடுகக் காண்பீர்கள். நீர் வேட்கை மிகுந்து தடுமாறும் மான் கூட்டங்கள் நிறைந்த காட்டையும், எயினர் குடியிருப்புகளையும் கடந்து செல்வீர்கள் என்றால் தென்னவன் சிறுமலை கண்களுக்குத் தட்டுப்படும்.

ஐவன என்னும் நெல்லும் அறைக்கண் கரும்பும்
கொய்ப்பூ தினையும் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்க்கொடி கவலையும்
வாழையும் கம்பும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்..

--- அந்தச் சிறுமலையின் வலப்புறமாகச் செல்வீர்கள் என்றால் மாமதுரையை அடைவீர்கள்”  என்கிறார் மாமுது மறையோன்.

"அவ்வழி செல்லாது இடப்புற வழியாகச் செல்வோம் என்று எண்ணினீர்கள் என்றால்---" மாமுது மறையோன் லேசாகச் செருமிக் கொண்டு மேற்கொண்டு சொல்லத் தொடங்குகிறார்.

=============================================================================
**  கலைஞரின் கைவண்ணத்தில் சிலப்பதிகாரக் கதையே திரைக்கேற்ப 'பூம்புகார்' என்று திரைப்பட வடிவம் கொண்ட பொழுது அதில் கவுந்தி அடிகளாராகத் தோன்றியவர் கே.பி. சுந்திராம்பாள் அவர்கள். நடித்தார் என்று சொல்வதை விட கவுந்தி அடிகள் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று நம் மனம் தோயும் அளவுக்கு கவுந்தி அடிகளுக்கு உருவமும் அசைவும் கொடுத்தவர் அவர்..   அதே மாதிரி ஜெமினியின் ஒளவையார் திரைப்படத்தில் ஒளவையாராகத் தோன்றி நம் மனம் கவர்ந்தவர்.

கொடுமுடி பாலாம்பாள் சுந்திராம்பாள் அவர்கள் குரல் வளம் மிக்க ஏழிசை வல்லபி. தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னராக தமது எட்டுக்கட்டை சுருதியில் பாடலிசைத்து கலக்கிய எஸ்.ஜி. கிட்டப்பா அவர்களே இவருக்குக் கணவராக வாய்த்த பொழுது இரு இசைக்குயில்கள் தமிழ்த் திரையுலகை தம் கீதத்தால் வசப்படுத்தின.

பத்மஸ்ரீ கே.பி. சுந்திராம்பாள் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரரும் கூட.  
கதர் இயக்கம், வெள்ளை ஏகாதிபத்ய எதிர்ப்பு என்பதையெல்லாம் ஜீவ சக்தியாகக் கொண்டு நாட்டின் விடுதலைக்கான அரசியல் மேடைகளிலும் தம் குரலால் மக்களைத் திரட்டியவர். தோழர் ஜீவாவின் 'காலுக்குச் செருப்புமில்லை' என்ற மனதை உருக்கும் பாடலை இவர் மேடையில் பாடும் பொழுது, மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி மக்கள் விரும்பிக் கேட்பார்கள். 
============================================================================

(தொடரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.

19 comments:

sury siva said...

மாமதுரைக்கு நாமும் கூட பயணிப்பது போன்ற ஒரு மன நிலை
உங்கள் வர்ணனை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

பதிவு அருமையாக இருக்கிறது.

சுந்தராம்பாள் அவர்கள் பாடும் பாட்டு மிக நன்றாக இருக்கும் பூம்புகார் படத்தில்.
சுந்தராம்பள் அவர்கள் கச்சேரி கோவையில் இருக்கும் போது கேட்டு இருக்கிறேன்.
சினிமா பாடல்கள் பாட மாட்டேன் என்று உறுதியாக இருப்பார். யாராவது சீட்டு எழுதி சினிமா பாடல் கேட்டால் கண்டிப்பாய் மறுத்து விடுவார்.

”தளிர் சுரேஷ்” said...

மாமதுரை வழித்தடத்தில் உடன் பயணித்தது போன்ற ஓர் உணர்வு! அருமை!

sury siva said...

ஐவன என்னும் நெல்லும் அறைக்கண் கரும்பும்////


ஐவன என்னும் நெல்லும்

ஐவன என்றால் என்ன ?

( ஐ ஆர் 20 ஆக இருக்குமோ ? )


சுப்பு தாத்தா.

வே.நடனசபாபதி said...

மாமதுரைக்கு நானும் தங்களின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டே கோவலனோடும், கண்ணகியோடும்,கவுந்தி அடிகளோடும் பயணிக்கின்றேன்! மதுரைக்கு செல்லும் வழியில் என்னென்ன காணலாம் என்று அந்த மாமுது மறையோன் சொல்வதுபோல் இளங்கோ அடிகள் சொல்வது, இன்றைக்கு நாம் ஒருவருக்கு வழி சொல்லும்போது சொல்லுகின்ற அடையாளங்கள் (Landmark) போல், நேர்த்தியாக எளிய நடையில் இருக்கிறது. எல்லா பாடல்களும் இவ்வாறு இருக்குமா எனத் தெரியவில்லை.

எப்படி சிவாஜி கணேசனைப் பார்த்து இப்படித்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் இருந்திருப்பாரோ என எண்ணியதுபோல் திருமதி கே‌.பி சுந்தராம்பாள் அவர்களை பூம்புகார் திரைப்படத்தில் பார்த்தபோது கவுந்தி அடிகள் இப்படித்தான் இருந்திருப்பார் போலும் எண்ணத்தோன்றியது உண்மை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பகுதி-12 வழக்கம்போல நல்ல சுவாரஸ்யமாகச் சென்றுள்ளது.

நான் சொல்ல நினைத்ததையே திருவாளர். வே. நடனசபாபதி அவர்களும் மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள்.

பாராட்டுகள். சுவையான இந்தப் பதிவு மேலும் தொடரட்டும்.

ஜீவி said...

@ Sury Siva

மன்னிக்கவும். அடிகளாரின் வழியொற்றித் தான் பயண விவரம்.

உறையூரிலிருந்து வலப்பக்கப் பாதை சரி. இடது பக்க பாதை வழிக்கு வேறே இப்போதே முன்பதிவு செய்திருக்கிறாரே.. அதையும் அடுத்த பதிவில் பார்த்து விட்டு எந்தப் பக்கம் போகலாம் என்பதையும் தீர்மானித்து விடலாம்.

தோடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சுதாஜி!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நீங்கள் தொடர்கிறேன் என்று சொன்னால் தான் உங்கள் 'எங்கள் Blog'ல் 'நாங்கள் அடிக்கடி மேஉவது' பகுதியில் மேய வாய்ப்பு கிடைக்கிறது. இந்தப் பதிவு நான் பதிவு போட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு தான் 'மேயற லிஸ்டில்' தென்பட்டது. என்ன கோளாறோ தெரியவில்லை. எங்கள் பிளாக் மூலமாக இங்கு வருபவர்கள் அதிகம். அதனால் விரைவில் சரி செய்து விடுங்கள் என்று ஒரு கோரிக்கை வைக்கிறேன். அன்புடன் கவனித்து ஆவன செய்யுங்கள், ஸ்ரீ!

ஜீவி said...

@ கோமதி அரசு

'பூம்புகார்' நல்ல திரைப்படம். கோவலன் வேடத்திற்கு எஸ்.எஸ்.ஆர். வெகு பொருத்தம். துடிப்பான அவர் நடிப்பு எனக்குப் பிடிக்கும். கண்ணகி, விஜயகுமாரியோ வழக்கம் போல. மாதவி?.. ராஜ்யஸ்ரீ தானே!

காப்பியத்தில் வருவது போலவே காவிரி ஆற்றை அம்மூவரும் ஓடத்தில் கடக்கும் காட்சி திரைப்படத்திலும் உண்டு.. 'வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம், மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்' என்னும் தத்துவ பாட்டு அந்தக் காட்சியிலே வைத்திருப்பார்கள்.

கே.பி.எஸ். இரண்டு வஷயங்களில் உறுதியாக இருந்தார். கதராடை அணிவது, வீபூதி நெற்றியிலே அணிந்து கொள்வது. அதற்கு பங்க்ம் எனில், நடிப்பதையே தவிர்த்து விடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறென். இலட்சியப் பெண்மணி. அவரை நினைத்தாலே, 'பழனீயப்பா. ஞானப்பழம் நீ அப்பா' மனசில் ஓடுகிறது.

தோழர் ஜீவாவின் "காலுக்கு செருப்புமில்லை.." பாட்டு அரசு சாருக்கு நினைவிருக்கா என்று என் சார்பில் கேளூங்கள்.





ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

பயணத் திட்டம் எல்லாம் போட்டு சுதா சாருடன் நாமும் ஒரு நாள் மாமதுரை காணச் செல்வோம். சிறுமலை வழியாக போகலாம். சரியா?..

ஜீவி said...

@ Sury Siva (2)

சுதாஜி! உங்க வாய்க்கு சர்க்கரை தான் போடனூம்!

இப்படி நல்லா மாட்டி விட்டுட்டீங்களேன்னு தேடித் திரிந்து பார்த்தால், ஐவனம் என்பது மலைச்சாரலில் விளையும் நெல் என்று தெரிந்தது.

ஆக, அந்த ஐவனம் தான் ஐஆர் இருபதோன்னு ஒரு ஆராய்ச்சி, இல்லை, ஐஆர் இருபதுக்கு வேர்ச்சொல் ஐவனம் தானோ என்று...

எனக்கு ஐஆர் எட்டு தான் நினைவிருக்கிறது. அது அதர பழசு காலம் போலிருக்கு.

மண்ணச்சநல்லூரா, நெல்லூரா, ஆரணியான்னு மூணு விருப்பங்கள். மூணுலேயும் ஒரு கிலோ வாங்கி வடிச்சுப் பார்த்தோம். கடைசிலே நெல்லூர் தான் தேறித்து. கிலோ ரூ.50/- சாப்பாடு புழுங்கலுக்கு ஆரணி பரவாயில்லை.

வே.நடனசபாபதி said...

வணக்கம் திரு ஜீவி அவர்களே! ஐஆ்ர் 8 என்ற நெல் ரகம் மணிலா (பிலிப்பைன்ஸ்) வில் உள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (International Rice Research Institute) உருவாக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் சுருக்க பெயரான IRRI யிலிருந்து, அங்கு உருவாக்கப்பட்ட நெல் இரகங்களுக்கு IR என்று பெயரிடப்பட்டது. எனவே ஐ.ஆர் இருபதுக்கோ, எட்டுக்கோ வேர்ச்சொல் ஐவனம் இல்லை என்பது திண்ணம். .

sury siva said...

ஐவனம் என்ற சொல் மலையில் விளையும் நெல்லைத் தான் குறிக்கிறது
நோக்க:
http://silapathikaram.com/blog/?p=4307

இது தவிர குற்றாலக் குறிவஞ்சி யில் ஓரிடத்தில் ஐவனம் என்ற சொல் மலைப்பிரதேசத்தைக் குரிப்ப்பிடுவதாக உள்ளது.

மேலும்
திருக்குற்றாலப்புராணத்தில்
அள்ளீயீந்தனன் ஐவனமாதியா என்ற சொற்றடரும் ஐவனம் என்பது
மலை நெல்லைத் தான் குறிக்கிறது என்பதும் தெளிகிறது.

போதும் போதும் நெல் புராணம்.
நம்ம பேசிட்டே இருந்தா கண்ணகியும் கோவலனும் மதுரைக்குள்ளே புகுந்த காட்சியைக் காண முடியாது.

அந்த ஸீனை போடுங்க.

சுப்பு தாத்தா.

சுப்பு தாத்தா.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி (1)

அவர் கவுந்தி அடிகளார் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்த படக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கவுந்தி அடிகளாரை யாருமே பார்த்திராத போது, அவர் இப்படித் தான் இருப்பார் என்று கற்பனைக்கு ஒரு வடிவு கொடுத்து அதக்கு நமது ஒப்புதலையும் பெருகிறார்கள் பாருங்கள், இதான் அவர்கள் திறமை!

வருகைக்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ வை.கோ.

நீங்களும் வே.ந.-வை வழிமொழிந்ததில் சந்தோஷம்.

தொடர்ந்து வாசித்து வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தொடர்கிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி (2)

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ஐயா. சுதாஜிக்கு தெரியாததா?.. சும்மா வேடிக்கைக்காக் அவர் ஒரு கேள்வியைப் போட நானும் வேடிக்கைக்காக பதில் சொன்னேன். பின்னால் பாருங்கள், எத்தனை இலக்கியு குறிப்புகள் கொடுக்கிறார், பாருங்கள்!



ஜீவி said...

@ Sury Siva (3)

சுதாஜி! அந்தக் 'காடு' பக்கம் ஒரு நடை போயிட்டு வாங்க. 'தமிழில் நாவல் இலக்கியம்'ன்னு காட்டுக்குள்ளே ஒரு கச்சேரி ஆரம்பிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்ச கச்சேரி.

அதுக்குள்ளாற நானும் அடுத்த ஸீனைப் போட தயாரிப்பு வேலைகளை முடிச்சிடறேன்.

அப்புறம் இந்தக் காட்டுப் பாதையையும் கடந்திடலாம்.

பண்ணின ஹோம் ஒர்க்கைப் பார்த்து மலைச்சிருக்கேன்.

கோமதி அரசு said...


கோவையில் ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தின் போது தோழர் பாடிய பாட்டு என்பதால் சாருக்கு தெரியுமா என்று கேட்கிறீர்களா சார்?

Related Posts with Thumbnails