மின் நூல்

Sunday, March 24, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                4


விக்கிரமன் சார் வந்ததும்  அனிச்சையாக எழுந்து கொண்டேன்.  கையில் பிடித்திருந்த அமுதசுரபி அப்படியே இருந்தது.

"உட்காருங்க, ஜீவி....." என்று சொன்னபடியே அவரும் இன்னொரு ஆசனத்தில் அமர்ந்தார்.  "என்ன இந்தப் பக்கம்?"

நான் வந்த வேலையே மறந்து போனது.  அந்த விளம்பரத்தைச் சுட்டிக் காட்டி, "இந்த இடம் எப்படி? உங்களுக்கு ஏதாவது இது பற்றித் தெரியுமா?"  என்று கேட்டேன்.

"ஏன் வாங்கற உத்தேசம் உண்டா?  நான் கூட ஒரு அப்பார்ட்மெண்ட் புக் பண்ணற யோசனை இருக்கு.." என்று  ஒரே போடாகப் போட்டார்.

"அப்படியா?.." என்று ஆச்சரியத்தில் மலர்ந்தேன்.

"எடம் தெரியுமோல்யோ?.. இப்படியே ஆர்ய கவுடர் ரோடிற்குப் போய் இடது பக்கம் திரும்பி நேரேப் போனா, லேக் வ்யூ ரோடெல்லாம் தாண்டி... நேராப் போகணும்.  நாயக்கமார் தெரு வந்தவுடன் அந்தத் தெருவில் போய் இடது பக்கம் திரும்பினேன்னா கன்ஸ்ட்ரக்ஷன் இடத்தின்  பின்புறம் வரும். கட்ட்டம் முன் பக்கம் பத்தாவது அவென்யூ மெயின் ரோடிலேயே இருக்கு.." என்று கட்டடம் எழும்பப் போகும் இடத்தை அடையாளம் காட்டினார்.

"ரேட்டெல்லாம் எப்படி, சார்?" என்று இதெல்லாம் நாம் இருக்கும் நிலைக்கு சரிப்பட்டு வருமா என்ற பயத்தோடையே கேட்டேன்.

"அதெல்லாம் அவா ஆபிள்லே தான் கேக்கணும்..  ஆபீஸ் பாண்டிபஜார்லே இருக்கு.  மணிமேகலை பிரசுரம்.. தணிகாசலம் தெரு தாண்டி.. விளம்பரத்திலேயே அட்ரஸ் இருக்கு, பாரு. குறிச்சிக்கோ.. நீ என்ன செய்யறேனா,  கட்டடம் எழும்பப் போற இடத்தை மொதல்லே போய்ப் பாரு.  அஸ்திவாரம் போட இப்போத்தான் தோண்டிண்டு இருக்கான்னு கேள்விப்பட்டேன்.  இடம் உனக்குப் பிடிச்சிருந்தா, அவா ஆபிஸ்லே போய் பேசிப் பாரு.."

"சரி.. அப்படியே செய்யறேன்.." என்ற பொழுது தான் கைப்பையில் வைத்திருந்த கதை ஞாபகம் வந்தது.  பழுப்பு நிற உரையிலிட்டிருந்த கதையின்  கையெழுத்துப்  பிரதியை எடுத்துக் கொடுத்தேன்.  "உங்க பரிசீலனைக்கு.." என்று இழுத்தேன்.

"கதையா?" என்றவர் "சரி.. நாளைக்குத் தான்  போறேன்.. ஆபீஸ்லே கொடுத்திடறேன்.." என்று வாங்கிக் கொண்டார்.

நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

அந்தக் கதை என்னவோ அமுதசுரபிலே பிரசுரம் ஆகாம,  ஒரு  மாசம் கழித்து  என்னோட காஞ்சீபுரம் முகவரிக்கே திரும்பி வந்து விட்டது.   அதேக் கதையை இன்னொரு பிரதி எடுத்து, 'வாஷிங் மெஷின்' என்றிருந்த கதைத் தலைப்பை  'இன்று செருப்பு;  நாளை சேலை' என்று மாற்றி,  குமுதத்திற்கு அனுப்பி வைத்து அது   குமுதத்தில் அட்டகாசமாக பிரசுரமானது இன்னொரு கதை.   ஆக, எந்தப் பத்திரிகைக்கு எந்த மாதிரி கதையை அனுப்பணும்ன்னு தெரிஞ்சிக்கிறதே கதைப்  பிரசுரங்களின் பாலபாடம்.  நிறைய அனுபவப்பட்டுத் தான் இந்தக் கல்வியும்
நாளாவட்டத்தில் எனக்கு வசமாச்சு.  பிரபல எழுத்தாளர் அகிலன் சொல்லுவார்:  'ஆரம்ப கால எழுத்தனுபவம்ங்கறது பரிதாபம். பத்திரிகை ஆபிஸூக்கு அனுப்பற கதைகள், ஒண்ணு கிணத்லே போட்ட கல் மாதிரி எந்தத் தகவலும் தெரியாம இருக்கும்;  இல்லேனா, சுவத்திலே அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்துடும்'ன்னு.  இந்த உபதேசம்லாம் முக்காலும் உண்மை.

விக்கிரமன் சார் வழி காட்டின மாதிரி கட்டடம் கட்டப் போற இடத்துக்குப் போய்ப் பார்த்தேன்.  மெயின் ரோடிலேயே அசோக் பில்லருக்கு அருகிலேயே இருப்பது மிகவும் பிடித்துப் போனது.  பாண்டி  பஜார் போகலே.  மாம்பலத்தில் பஸ் பிடித்து பாரீஸ் கார்னர் போய் காஞ்சீபுரம் திரும்பி விட்டேன்.

ஊர் போய்ச் சேர்ந்து எல்லாவற்றையும் மனைவியிடம் சொன்னேன்.  அடுத்த வாரம் இரண்டு பேரும் சென்னை வந்தோம்.  கட்டிடம் எழும்பப் போகிற இடத்தைப் பார்த்ததும் அவளுக்கும் பிடித்துப் போயிற்று.  அன்றே அவளையும் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் பாண்டிபஜார் போய் ஸ்ரீராம் கேபிடல் டிரஸ்ட் இருந்த  காம்ப்ளைக்ஸைக் கண்டு பிடித்து விட்டோம்.   அவர்கள் அலுவலகம் 3-வது மாடியில் இருந்தது..

இன்னொன்றையும் இந்த இடத்தில் சொல்ல வேண்டும்.  பத்திரிகைகளுக்கு ஏற்ற கதை மாதிரி,  எந்த விஷயத்தையும் செயல்படுத்துவதற்கு நமக்கு ஏற்ற மாதிரியான நபர்கள் தேவைப்படுகிறது.  அந்த மாதிரி அமைந்தவர் அந்த நிறுவனத்தில் பொதுஜனத் தொடர்பில் இருந்தவரில் ஒருவர்.. அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  அவருடன்   பிளாட் தொடர்பாக எல்லா விஷயங்களையும் பேசி முடித்து விட்டோம்.   கையோடு காசோலை புத்தகம் கொண்டு  போனது நல்லதாயிற்று.  இரண்டு பக்கமும் அதற்கேற்பவான  கடிதங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் கேட்ட தொகையைக் குறிப்பிட்டு  (இன்றைக்கு அந்தத் தொகையைக் கேட்டீர்கள் என்றால் சிரிப்பீர்கள் என்பதால் சொல்ல வில்லை)  காசோலையும் கொடுத்தாயிற்று.

பாக்கி பணத்தை 10 தவணைகளில் கொடுக்க வேண்டும். 10 தவணைகள் என்றாலும் பாக்கிப் பணம் அன்றைக்குப் பெருந்தொகை.  அந்த பெருந்தொகைக்கு இந்த ஷணமே கடன் பட்ட மாதிரி ஒரு கவலை வந்து சேர்ந்தது.  அதற்கெல்லாம் எப்படி ஏற்பாடு பண்ணப் போறோம் என்று குழப்பமாக இருந்தது.

"அந்தச் சீட்டுக் கம்பெனியும் இவங்களோடது தானே?.. கேட்டா கடனாத் தர மாட்டார்களா?" என்றாள்  மனைவி.  இன்னும் இரண்டு மாதத்தில் அடுத்த தவணை பணத்திற்கே என்ன ஏற்பாடு செய்வது என்ற கவலை அவளுக்கு.

"சீட்டுக் கம்பெனிலே கடன் தர மாட்டாங்க.. சீட்டு தான் கட்டச் சொல்லுவாங்க.. அது வேறே ஆரம்பிச்சிட்டோம்னா  மாசா மாசாம் கசிறு போகத் தவணைத் தொகை கட்ட வேண்டியதாகி விடும்.." என்றேன்.

"நான் எது சொன்னாலும் அதுக்கு ஒரு பதிலை  ரெடியா வைச்சிருப்பீங்களே..  ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். கேட்டுத் தான் பார்ப்போமே.." என்றாள்.

எல்டா ம்ஸ் ரோடில் இருந்த உறவினர் ஒருவரை பார்க்க வந்து அப்போது தேனாம்பேட்டை ஜங்ஷன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.  மூகாம்பிகா காம்ப்ளெக்ஸ் என்று சர். சி.பி. ராமசாமி ஐயர் ரோடின் ஆரம்பத்தில் இருக்கிறது.  அந்த காம்ளக்ஸில் ஸ்ரீராம் சிட்ஸின் ஒரு அலுவலகம் இருப்பது எனக்குத் தெரியும். 

"உன் ஆசையைத் தான் கெடுப்பானேன்.." என்று அந்த அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றேன்.  எங்கள் பணத்தேவையைப் பற்றி அந்த அலுவலக தலைமை அதிகாரியிடம் சொன்னோம்.

"ஒண்ணு வேணா நீங்க செய்யலாம்.." என்றார் அவர்.  "இப்போத்தான் ஒரு லட்ச ரூபாய் சீட்டு க்ரூப் ஒண்ணு இந்த மாசம் ஆரம்பிச்சிருக்கு.  மொத்தம் 60 இன்ஸ்டால்மெண்ட்.  முதல் தவணையில் குலுக்கல் கிடையாது. அடுத்த தவணையிலிருந்து  அடுத்த மாசத்திலிருந்து குலுக்கல். அந்த  சீட்டில் இரண்டு பேர் இடம் காலியாயிருக்க்கு.. நீங்க வேணா அந்த சீட்டில் சேர்ந்துக்கங்க..
சீட்டு  விழுந்திடுத்துன்னா பிடித்தம் போக மொத்தமா பணம் கிடைக்கும். உங்க தேவைக்கு அது உபயோகப்படலாம்.." என்றார்.

நான் பேசாமலிருந்தேன்.

"அதுலே நாங்க சேரணும்ன்னா என்ன செய்யணும்?" என்றாள் என் மனைவி.

"முதல் தவணை பணத்தை கேஷா கட்டணும்.. "

"எவ்வளவு?"

அவர் தொகையைச் சொன்னார்.

அந்தத் தொகை கைவசம் இருக்கிறதா என்று  தெரிந்து கொள்ள மனைவி என்னைப்  பார்த்தாள்.  "இருக்கு.." என்றேன்.

"அப்போ கட்டிடுங்கோ.." என்றாள்.

முதல் சீட்டுத் தவணை கட்டி விட்டு அதற்கான  ரசீது,  பாஸ் புக்குடன் வெளியே வந்தோம்.  எங்கள் சீட்டு எண் 67 என்று கொட்டை எழுத்தில் பாஸ்புக்கில் குறித்திருந்தது.

"இனிமே மாசாமாசம் சீட்டுப் பணத் தவணை கட்டணும்.  இரண்டு மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கான தவணை பாக்கியும் கட்டணும்.." என்றேன்.

"பார்க்கலாம்.." என்றாள் அவள்.

'காமராஜர் சொல்கிற மாதிரி இருக்கே!' என்று நினைப்பில் தோன்றியதைச் சொல்லவில்லை.

ஊர் வந்து சேர்ந்தோம். 

அடுத்த மாதம் முதல் வாரம்.  தேதி 7 என்று நினைக்கிறேன்.

நாங்கள் சீட்டில் சேர்ந்திருந்த க்ரூப் புரசைவாக்கம் கிளை சம்பந்தப்பட்டது என்று  சொல்லியிருந்தார்கள்.   இந்த மாதிரி சீட்டு விஷயங்களில் இதற்கு முன் எனக்கு எந்த அனுபவமும் இல்லை.  அதனால் நேரிடையாகவே அனுபவப்பட்டு விடலாமே என்று என் மகனுடன் புரசைவாக்கம்  சென்றிருந்தேன்.  வேறு ஏதேதோ க்ரூப் சீட்டுகளுக்கான குலுக்கல்கள் நடந்து கொண்டிருந்தன.  எங்கள் சீட்டுக்கான குலுக்கல் 6 மணிக்கு என்று போர்டில் போட்டிருந்தது.

மணி 5.30.  அரை மணி நேரம் இருக்கிறதே என்று எதிர்புறத்திலிருந்த ஹோட்டலில் காபி சாப்பிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

ஹோட்டல் பெயரும் ஸ்ரீராம் கபே என்றிருந்தது  சூசகமாக மனசில் எதையோ பரிமாறிக் கொண்ட மாதிரி இருந்தது.

நாங்கள் திரும்பி வருவதற்குள் எங்கள் குரூப்  சீட்டில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் குலுக்கல் நடக்கும் அந்த அறைக்குள் அடைந்து விட்டார்கள்.

அந்த ரூமுக்குள் நாங்களும் நுழைந்து கிடைத்த இடத்தில் அருகருகே அமர்ந்தோம்.

சீட்டுக் குலுக்கலைப் பற்றி பொதுவான அறிவிப்பு செய்தார்கள்.  அந்த குரூப்புக்கான சீட்டு எண்கள் பூராவும் டோக்கன் எண்களாக பிளாஸ்டிக் டப்பாவில் இருப்பதாகச் சொல்லி அந்த டப்பாவைக் குலுக்கிக் காட்டினர்கள்.

யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், தங்கள் சீட்டு எண்  கொண்ட டோக்கன் அந்த டப்பாவில் இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள்.  யாரோ எழுந்து போய் தன் எண் டோக்கன் இருப்பதை சோதித்து விட்டு வந்து புன்னகையுடன் தன்  இருக்கையில் அமர்ந்தார். என் சீட்டு எண் 67 என்பது என் நினைவில் பளிச்சிட்டுப் போனது.

யாரோ எதற்கோ சிரித்தார்கள்.

எனக்கோ ஒரு நிமிடம் போவது ஒரு யுகம் போலிருந்தது.  சீக்கிரமாக குலுக்கி யாருக்கு என்று அறிவியுங்களேன் என்று மனம் கூப்பாடு  போட்டது.

அந்த  டப்பாவை கேட்பவர் கையில் எல்லாம் கொடுத்து அவர்கள் திருப்திக்கு குலுக்கச் சொன்னார்கள்.  நடப்பதையெல்லாம் ஒரு பார்வையாளர் போல பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வே என்னிடம் எஞ்சியிருந்தது.

இப்பொழுது அந்த டப்பா ஒரு மேஜையின்  மீது  இருந்தது. " யாராவது வந்து இந்த டப்பாவிலிருந்து ஒரு டோக்கன் மட்டும் எடுங்கள்" என்று  அறிவித்த பொழுது எனக்கு இரண்டு  நாற்காலிகள் முன்னிருந்தவர் சென்று ஒரு டோக்கனை எடுத்து அறிவிப்பாளர் கையில் கொடுத்தார்...

அவர் எடுத்துக் கொடுத்த டோக்கன் எண்  67  என்று அறிவித்த பொழுது  "ராமா..." என்று அனிச்சையாக என் உதடுகள் முணுமுணுத்தது  இத்தனை வருஷங்கள் கழித்தும்  இன்னும் என் நினைவில் தேங்கியிருக்கிறது.

(தொடரும்)


7 comments:

வெங்கட் நாகராஜ் said...

குலுக்கி எசுக்கப் போகும் டோக்கன் எண் 67-ஆக இருக்கும் என் உள்ளுணர்வு சொன்னது.

வீட்டைக் கட்டிப்பார் என சும்மாவா சொன்னார்கள். இந்தச் சீட்டு விஷயம் எனக்குப் பிடிபடாத விஷயங்களில் ஒன்று. தில்லியில் இதற்கு கமிட்டி எனப் பெயர். பலர் கமிட்டி போடுவார்கள். இதுவரை அதில் நான் சேர்ந்ததே இல்லை.

அனுபவங்களை மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

சுவையான அனுபவங்கள். வீடு வாங்குவது என்று சட்டென ஒரு முடிவுக்கு வரவும் ஒருதுணிவு வேண்டும். என்னிடம் இல்லாதது.

நெல்லைத்தமிழன் said...

வீடு வாங்குவது என்பது அவரவருக்கு அமையணும். இல்லைனா வாங்க முடியாது. இப்போ தோணுது, எப்பயோ எத்தனையோ வீட்டை சென்னையில் (எனக்கு சென்னைனா திநகர், இல்லைனா கேகே நகர், மைலாப்பூர்) வாங்கியிருக்கலாமே...

வீடு வாங்கணும்னா, சட்னு வாங்கணும். யோசிக்கவே கூடாது.

வே.நடனசபாபதி said...

நான் நினைத்தது போல் அந்த விளம்பரம் தான் உங்களை வீடு வாங்கத் தூண்டியிருக்கிறது.1970 பொங்கலன்று ஆரம்பித்த ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் பலபேருக்கு உதவியதுமல்லாமல் தற்போது காப்பீட்டுத் துறை, பொறியியல் துறை, மென்பொருள் துறை என பல்வேறு துறைகளில் கால்பதித்து ஒரு பெரிய குழுமமாக வளர்ந்துள்ளது. அந்த ராசியான நிறுவனத்தில் சீட்டு எடுக்து அதே நிறுவன்ம் கட்டிய வீட்டை வாங்கியது எல்லாமே நீங்கள் சொன்ன அந்த 'ராம்' காட்டிய வழி என எண்ணுகிறேன்.

திரும்பி வந்த கதைகள் பற்றி எனது அண்ணனும் சொல்லியிருக்கிறார். அவருக்கும் இதுபோல் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. ஒரு கதையை ஒரு இதழ் நிராகரித்ததை இன்னொரு இதழ் வெளியிட்டது பற்றி சொல்லும்போது, ஒவ்வொரு இதழுக்கும் ஆசிரியருக்கும் சில அளவுகோல்கள் இருக்கலாம்.அதை நாம் குறை சொல்ல இயலாது என சொல்லியிருக்கிறார்.

தங்களின் 'வசந்தகால நினைவுகள்' என்னையும் நினைத்துப்பார்க்க தூண்டுகிறது!

கோமதி அரசு said...

//ஹோட்டல் பெயரும் ஸ்ரீராம் கபே என்றிருந்தது சூசகமாக மனசில் எதையோ பரிமாறிக் கொண்ட மாதிரி இருந்தது.//

முன்பே ராம் சொல்லிவிட்டார் சூசகமாக.

கோமதி அரசு said...

//அதேக் கதையை இன்னொரு பிரதி எடுத்து, 'வாஷிங் மெஷின்' என்றிருந்த கதைத் தலைப்பை 'இன்று செருப்பு; நாளை சேலை' என்று மாற்றி, குமுதத்திற்கு அனுப்பி வைத்து அது குமுதத்தில் அட்டகாசமாக பிரசுரமானது இன்னொரு கதை.//

உங்கள் அனுபவங்கள் மிக அருமையாக இருக்கிறது.

ஜீவி said...

தங்கள் கருத்துக்களைப் பதித்த நண்பர்களுக்கு நன்றி.

நீண்ட பதிவாக 'அந்த' நேரத்து என் உணர்வுகளைக் கொட்டி இப்பொழுது இதையெல்லாம் எழுதுவதற்கு காரணம் இது தான்.

வீடு வாங்கினோம் என்பது முக்கியமே இல்லை. அது ஒரு நிகழ்வு. அவ்வளவு தான். வீடு போல எது வேணா இருக்கலாம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாடும் ஒரு நிகழ்வு தான். இப்படியான நிகழ்வுகளால் கோர்க்கப்பட்டது தான் நம் வாழ்க்கையே.

ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பூரணத்துவத்திற்கு படிப்படியாக நம்மை இட்டுச் செல்வதை கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

பல நேரங்களில் நமது நினைப்புகளை நிறைவேற்றித் தர பூடகமான ஒரு சக்தி நம்மை வழி நடத்திச் செல்ல உதவுகிறது என்பதைத் தெரியப்படுத்தத் தான் இத்தனை எழுதினது.
'நம் நினைப்பு' என்று கூட எதுவும் இல்லை. எல்லாமே அந்த சக்தியின் ஏற்பாடு தான்.

'பத்திரிகை ஒன்றில் விளம்பரம் பாத்து சீட்டுக் கட்டி பணம் ஏற்பாடு பண்ணினேன். அப்படி தான் இந்த வீடு எனக்குச் சொந்தமானது' என்று வெறுமையாக நினைப்பவர்களுக்கு நுண்ணிய உணர்வுகளை அனுபவித்துப் பார்க்க வாய்ப்பே இல்லை.

அந்த அனுபவிப்பைத் தான் கண்ணதாசன் 'அனுபவமே நான் என்றான்' என்று ரொம்ப சுலபமாக அனுபவித்து சொல்லி விடுகிறார்.

நம்மில் நாமாகவே இருந்து ஒவ்வொரு நிமிடமும் நம்மை செயல்படுத்துவதே இறைவன் தான் என்று நான் நினைக்கிறேன்.

நமது செயல்களில் நல்லது மட்டுமல்ல தீயதும் கலந்திருக்கிறது. இது இயற்கை. உலக இயக்க செயல்பாட்டுக்கு நாம் ஒரு டூல். ஒரு கருவி. அவ்வளவு தான்.

செயல்கள் வெறும் செயல்களாகவே இருந்து விடுவதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் அந்தந்த நேரத்திற்கான விளைவுகள் உண்டு. விளைவுகளில் இன்பம், துன்பம் எல்லாமே கலந்து தான் இருக்கின்றன. அதற்கேற்ப வாழ்க்கை அடுத்த அடுத்த நிகழ்வுகளாக தொடர்கதை போல அமைந்து கொண்டே போகிறது. வேட்கை, வெறுமை, சந்தோஷம், சந்தேகம், ஆத்திரம், அதிகாரம், அன்பு, பண்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அத்தனையும் கலந்த சுவையான கலவை தான் இந்த வாழ்க்கை.

செயலுக்கு ஏற்ப விளைவு என்பது சயின்ஸ். இந்த சயின்ஸ் தான் இந்துத்வாவின் இதய பாகம். இந்துத்வா என்றால் அரசியல் ஆகிவிடும் அல்லது ஆக்கப்பட்டு விட்டது என்றால் இந்திய தத்துவம் என்று அந்த வார்த்தையை அர்த்தம் கொண்டாலும் சரி தான்.

நம் இந்திய இதிகாசங்கள் இந்த தத்துவத்தைத் தான் எடுத்தோதுகின்றன. அல்லது இந்த தத்துவங்களை எடுத்தோதத்தான் இதிகாசங்கள் பிறப்பெடுத்தன.

இந்தத் தொடரை வாசித்து வருபவர்களுக்கு நன்றி. அருள் கூர்ந்து தங்கள் வாசிப்பு அனுபவத்தைத் தொடர வேண்டுகிறேன். நன்றி.

Related Posts with Thumbnails