மின் நூல்

Friday, June 14, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                               34


தொலைபேசி  இலாகாவைப் பொறுத்த மட்டில்  ஒவ்வொரு மாநிலமும் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.   ஒவ்வொரு கோட்டமும் பரந்து விரிந்த பகுதிகளைக் கொண்டிருந்தது.   சேலம் கோட்டம் என்பது  சிதம்பரம், கடலூர், விருத்தாசலம்,  விழுப்புரம் என்று   பாண்டிச்சேரி வரை நீண்டிருந்தது.    தொலைபேசி இலாகாவில் மாவட்டங்கள்   கோட்டங்களாக வரையறுக்கப் பட்டிருக்கவில்லை என்பது முக்கியமான விஷயம்.  இப்பொழுது இருக்கிற மாதிரி  மாவட்டங்களின்  நெரிசல்களும் இல்லாத காலம் அது.

மேற்பட்டப்  படிப்பு படித்து விட்டு தொலைபேசி இலாகாவில் அடிப்படை ஊழியராக பணியைத் தொடங்கி மிகப் பெரிய சேலம் கோட்டத்தை நிர்வகிக்கிற கோட்ட அதிகரியாக பொறுப்பேற்றிருந்தார் உழைப்பால் உயர்ந்த உத்தமர் ஒருவர்.  அவர் பெயர் ராமசாமி என்று நினைவு.  அவருடன் பேசியபடி தான் அவருக்கு  அருகில் அமர்ந்திருந்தார்  சேலம் மாவட்ட தலைமைத் தபால் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி.  ( தபாலும் தந்தியும் சகோதரத்துவ இலாகாவாக இருந்து தந்தியில் உள்ளடங்கிய தொலைபேசி  இன்று எல்லாவற்றையும் விழுங்கி விட்ட பகாசுரனாய் பொதுத்துறை இலாகாவாக ஆகியிருப்பது இன்றைய  நிலை)

தபாலும் தொலைபேசியும்  மத்தியில் ஒரே இலாகாவால் நிர்வகிக்கப்பட்டு  வந்தமையால் பரஸ்பரம் அதிகாரிகள் மத்தியில்  சில விஷயங்களில் கலந்த  செயல்பாடுகள் இருந்தன.  அந்த அணுகுமுறையில்  தான் சேலம் மாவட்ட தலைமைத் தபால் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி இந்த நேர்காணலிலும் ஒரு அதிகாரியாக அமர்ந்திருந்தார்.   இந்த நேர்காணலுக்கு அவரும் ஒரு அதிகரியாக செயல்படப் போவது அவருக்குத் தெரிந்திருந்தாலும் என்னிடம் அதை அவர் காட்டிக் கொள்ள வில்லை என்பதும் காட்டிக் கொள்ள அவசியம் இல்லை என்பதும்  இப்பொழுது புரிந்திருக்கும்.

என்னைப் பார்த்தும் கிருஷ்ணமூர்த்தி சார் "இந்தப் பையன் குமார பாளையத்தில் எங்கள் தபால் பகுதியில் வேலை செய்கிறான்.." என்று தொலைபேசி கோட்ட அதிகாரியிடம் சொன்னார்.

"அப்படியா?.." என்று ஆச்சரியப்பட்ட தொ.கோ. பொறியாளர்  ராமசாமி அவர்கள்  "அப்படியானால் ஏன் இந்த நேர்காணலுக்கு   வந்திருக்கிறீர்கள்?" என்று என்னிடம் கேட்டார்.

ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி சார் என்னிடம் கேட்ட இதே கேள்விக்கு சொன்ன அதே பதில் நினைவுக்கு வர, "டெக்னிக்னிக்கல் லயனில் வேலை செய்யாலாம்ன்னு ஆசை.." என்று நான் சொல்ல அவர்கள் இருவரும் கலகலத்தனர்.

"உண்மையான காரணத்தைச் சொல்லி  என்னிடம் லீவ் அனுமதி பெற்றுத் தான் இந்த நேர்காணலுக்கு இவன் வந்திருக்கிறான்.. அதற்காகவே இவனை பாராட்ட வேண்டும்.." என்று ஆங்கிலத்தில் தொலைபேசி அதிகாரியிடம் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி சார்.

அந்த நொடியே 'பொய்யான காரணம் எதையாவது சொல்லி,  இங்கு இவரைப் பார்க்க நேர்ந்திருந்தால் அது எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும்' என்று அந்த  நினைப்புக்கேற்பவான  காட்சி என் மனத்திரையில் படிந்தது.

எனக்கு எதிரேயே "இந்தப் பையனை நான் வேலைக்கு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடனே நீ அவனை அவன் பார்க்கும் பணியிலிருந்து விடுவிப்பாயா?" என்று ஆங்கிலத்தில் ராமசாமி சார், கிருஷ்ணமூர்த்தி சாரிடம் கேட்க "தாராளமாக.." என்று  அவர்   புன்னகையுடன் பதிலளித்தார்.

இதற்குள் என் சான்றிதழ்களை சரி பார்த்தவர்கள் அதை என்னிடமே திருப்பித்  தர அடுத்த அறைக்கு போகச் சொல்லி என்னை அனுப்பினர்.

அந்த அறையில் பளபளவென்று ஒரு தொலைபேசி இருந்தது.  அந்த தொலைபேசிக்கு   அருகில் இருந்த  அட்டையில் சில  தொலைபேசி எண்கள் எழுதியிருந்தன.   அவற்றில் ஏதாவது நான்கு எண்களை ரேண்டமாகத் தேர்ந்தெடுத்து  தொலைபேசியின் ரிஸீவர் பகுதியைக் கையில் எடுத்துக் கொண்டு  நாம் தேர்ந்தெடுக்கும் எண்ணை உச்சரிக்க வேண்டும் என்று  சொன்னார்கள்.

24886653    26364811    23456782     24000000    23363448                               

-- இதெல்லாம் கொடுக்கப்பட்டிருந்த எண்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அவற்றை மற்றவர்களுக்கு சுலபமாக புரிகிற மாதிரி எப்படி  உச்சரிக்க வேண்டும் என்பது தான் இந்தத்  தேர்வுக்கான நோக்கம்.  பெரும்பாலும் எண்களை மையமாக வைத்து  தொலைபேசி இலாகா  இயங்குவதால் இந்தத்  தேர்வு.

அ)   டூ ஃபோர்     டபுள் எயிட்    டபுள் சிக்ஸ்    பைஃவ்  த்ரி

ஆ)  டூ சிக்ஸ்    த்ரி சிக்ஸ்     ஃபோர்  எயிட்     டபுள் ஒன்

இ)   ட்டூ  த்ரி     ஃபோர்  ஃபைவ்      சிக்ஸ்  செவன்     எயிட்   டூ

ஈ)    ட்டு  ஃபோர்    டபுள்  ஸீரோ    டபுள்  ஸீரோ     டபுள்  ஸீரோ

உ)  ட்டூ  த்ரி      த்ரி  சிக்ஸ்    த்ரி  ஃபோர்   ஃபோர்  எயிட்

--- தொலைபேசியில் இப்படி  உச்சரிக்க உச்சரிக்க  அந்த ஒலி,  ஒலிபெருக்கி மூலமாக  ஓசையுடன் கேட்க ஏற்பாடு  செய்திருந்தார்கள்.

எண்களுக்கு அடுத்தபடி பெயர்கள்.   எண்களும் பெயர்களும்  தொலைபேசி இணைப்பகத்தை  (Telephone  Exchange)  பொறுத்த வரை  அதிகமாக    புழக்கத்தில்  இருக்கும் ஒன்று  என்பதினால்  இந்தத்  தேர்வு.

ஆங்கில எழுத்து ஒவ்வொன்றிற்கும்  பொனடிக் கோட்  என்று சொல்லப்படும்
விளக்க உச்சரிப்பு அந்நாட்களில் சர்வ தேச அளவில் வழக்கத்தில் இருந்தது.

A  --  Apple         

B --   Brother
                                                                                                   
C--   Cinema

D--  Doctor

---  நமக்கேற்றவாறு இப்படி...

கோவையில்  பயிற்சி வகுப்புகள் இருக்கும் என்றும் இன்னும் ஒரு வார காலத்தில் அதற்கான அறிவிப்புகள் வரும் பொழுது  பயிற்சியில் சேர தயாராக இருக்க வேண்டும் என்றும்  தெரிவித்து விட்டார்கள். 

சேலம் மாவட்ட தலைமை தபால்  அதிகாரி   கிருஷ்ண மூர்த்தி சார் சொன்னபடியே  செவ்வாய்க் கிழமை  குமாரபாளையம் அஞ்சல் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்..   தொலைபேசி இலாகா  பணியில் சேர்வதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால்  என்னை பணியிலிருந்து விடுவிக்கும்படி புதன் கிழமை மாலை   விருப்ப ராஜினாமா கடிதம் ஒன்றை தலைமைத் தபால் அதிகாரிக்கு முகவரியிட்டு  குமாரபாளையம் போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்தேன்.    (Through Proper Channel)

கடிதத்தைப் படித்து விட்டு "ஜமாய்டா, ராஜா!"  என்று வாழ்த்தினார்  போஸ்ட் மாஸ்டர்  சுலைமான்  சார்.

சனிக்கிழமை காலைத் தபாலில்  என் விருப்ப பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவித்து என்னை  பதவியிலிருந்து விடுவிப்புக் கடிதமும்   சேலம் தலைமைத் தபால் அதிகாரியிடமிருந்து வந்து விட்டது.

சனிக்கிழமை மாலையே குமார பாளையம் அஞ்சல் அலுவலகத்திலிருந்து பணியிலிருந்து விடுவிக்கப் பட்டேன்.  ஞாயிறு  அறை நண்பர்கள் சேர்ந்து ராமாஸ் கேப்பில்  எனக்கு விருந்து கொடுத்தார்கள்.  ராமாஸ் கேப் முதலாளி நண்பருக்கு விழிக்கடையில் லேசாக நீரே கசிந்து விட்டது.  "இந்தப் பக்கம் வந்தா மறக்காம ஓட்டலுக்கு வந்துடணும்.." என்று  கேட்டுக் கொண்டார்.

அன்று முன் இரவில் திருவள்ளுவர்  விரைவுப் பேருந்தில்  கோவை  வந்து சேர்ந்தேன்.


(வளரும்)


14 comments:

ஸ்ரீராம். said...

பழகிய நண்பர்களை பிரிவது என்பதும் கடினம்தான்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எல்லாமே பசுமை நிறைந்த நினைவுகள் தாம்.

ஒன்றின் கடைசிக் கண்ணி இன்னொன்றின் தொடக்கக் கண்ணியோடு தான் பின்னிக் கொண்டு தொடர்கிறது. நடபுத் தொடர்ச்சியும் அப்படித்தான்.

ஒரு காலத்தில் நேரடி பழக்கத்தில் தான் நட்பு வட்டம் இறுகியது. இன்றோ இந்த கணினி உலகில் முகங்காணாத நட்புகளே அதிகம். மன நெருக்கத்தின் வீச்சு சாத்தியப்படுத்தியிருக்கும் அற்புத மாற்றம் இது.

கோமதி அரசு said...

//ராமாஸ் கேப் முதலாளி நண்பருக்கு விழிக்கடையில் லேசாக நீரே கசிந்து விட்டது. //

நல்ல நட்பை பிரிவது கஷ்டமே! அப்புறம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா?

வல்லிசிம்ஹன் said...

என்ன அருமையான அதிகாரிகள்.
இளைஞர்கள் முன்னேறுவதில் எல்லோரும் அக்கறை காட்டிய விதம்
மனதை நெகிழ்த்துகிறது.

பழகினவர்களைப் பிரிவது கடினம் தான்.
கோவையில் இன்னும் நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது என்று
நம்புகிறேன்

என் தந்தையும் ஈடி பாக்கரிலிருந்து எல்லோருக்கும் நிறைய ஊக்கம் கொடுத்து படிக்கச்
சொல்லி தேர்வுகள் எழுத வைப்பார்.

ஒவ்வொரு இடத்திலிருந்து மாறி வரும்போது
வெள்ளித்தட்டோ, சந்தனக் கும்பாவோ அப்பா பெயர் பொறிக்கப்பட்டு
கொடுக்கப் படு. அப்பா அவைகளைக் கண்போலக் காத்து வந்தார்.
நீடூழி வாழ்க என்று பொறிக்கப் பட்ட வேலைப்பாடு செய்த தட்டு இங்கே மகள் வீட்டில் பூக்கள்
வைக்கும் தட்டாகப் பயன் படுகிறது.
அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

வசந்தகால நினைவலைகளொரு சுய சரிதை போல் தெரிவது ஆச்சரியமில்லை சுய சரிதை என்று சொன்னால்தானா ஆகும்

ஜீவி said...

@ ஜிஎம்பீ

மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு சுயசரிதை போலத் தெரியலாம். ஆனால் உன்னிப்பாகப் படிப்பவர்களுக்கு உள்ளார்ந்து சில விஷயங்களைக் கோடிட்டுச் சென்றிருந்தது தெரியும்.,
இந்தி எதிர்ப்பின் ஆரம்ப கால கட்டம், தமிழ் நாட்டில் பிறந்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அந்தணர்களை தமிழர்கள் என்றுக் கொள்ள தயங்கும் போக்கு போன்ற செய்திகள் ஊடும் பாவுமாகக் கலந்து வருகின்றன.

20 வயசு பையனின் அனுபவங்கள் அப்படித் தான் இருக்கும். அவனின் 40 வயசு கால கட்டத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அதைச் சொல்வதற்காகப் போடப்படும் அடித்தளங்கள் தாம் இதெல்லாம்.

என்ன அருமையான அதிகாரிகள்.
இளைஞர்கள் முன்னேறுவதில் எல்லோரும் அக்கறை காட்டிய விதம்
மனதை நெகிழ்த்துகிறது.-- என்று ஒரு பின்னூட்டம் வருகிறது.

எழுதுவது வாசிப்பவர் மனத்தில் உணர்வு பூர்வமாக வினையாற்றும் வித்தை இது தான்.

ஜீவி said...

@ கோமதி அரசு

31-ஆவது பகிதியில் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் அவரை சந்தித்தை மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறேன்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

ஏன் ஆசிரியர்களும் அதிகாரிகளும் இன்று அப்படி இல்லை என்று கேள்வி எழுகிறதல்லவா?

கோவை ஒரு டிரான்ஸிட் இடம் தான். பயிற்சிகாலம் இரண்டே மாதங்கள் தான்.

தங்கள் தந்தையாரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நல்ல உள்ளங்கள் நம் மரியாதைக்குரியவை.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அன்றைய உயர் அதிகாரிகள் ஜெண்டில்மேன்களாக இருந்திருக்கின்றனர். நட்பு பிரிவில் கண்ணீர் வரும் தானே! ராமாஸ் கேப் முதலாளியும் விதிவிலக்கல்ல! தொடர்கிறேன்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

காலத்தின் மாற்றத்தை வித்தியாசப்படுத்திக் காட்டவே அந்த மாதிரியான எனது அனுபவங்களைக் குறிப்பிடுகிறேன். நன்றி.

இன்னொன்று பாருங்கள். இளம் வயது நட்பில் நோக்கம் இருக்காது. அன்புக் கொடுத்து அன்பைத் திரும்பிப் பெறுவது அது. வயதாக ஆக நட்பிலும் நோக்கம் இருக்கும். அதையும் மீறி பலப்படும் நட்புகளே நினைவு கூறத் தக்கதாக இருக்கும்.

இனி வரப்போவதையும் வாசிக்கப் போகிறீர்கள் என்பதினால் இந்த முன்னோட்டம்.

Thulasidharan V Thillaiakathu said...

அந்தக்காலக்கட்டம் என்பது தனிதான் என்று தெரிகிறது. அப்படியான பொற்காலம் அதன் பின் இல்லாமல் போனது ஏன்? அதிகாரிகள் முதற்கொண்டு நல்ல உள்ளத்துடன் இருந்திருக்கின்றனர்.

நட்புகளும் கூட. இனிமையான காலம்.

துளசிதரன், கீதா

ஜீவி said...

@ தி. கீதா

அந்நாளைய பஞ்சக்கச்சம், டர்பன் பள்ளி ஆசிரியர்கள் போல இன்று இருக்கிறார்களா?

அதே மாதிரி தான் எல்லா துறைகளிலும்.

விட்டதையெல்லாம் ஒரு சேர படித்து வருவதற்கு நன்றி, சகோதரி!

வே.நடனசபாபதி said...

பொய் சொல்லியிருந்தால் மறந்திருப்பீர்கள். உண்மையைச் சொன்னதால் தான் மறக்காமல் அதையே சொல்லி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

‘பொனடிக் கோட்’ பற்றி பொதுமக்களுக்கு தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில் வங்கியில் பணிபுரியும்போது தந்தி மூலம் தகவல் அனுப்பும்போது ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் போல் A என்ற எழுத்துக்கு Apple என்றும் Ahmedabad என்றும் தொலைபேசி மூலம் சொல்வதுண்டு. தொலைபேசியில் பணிபுரிந்தோர் அவைகளை ஏற்றுக்கொண்டு தந்தி அனுப்பினார்கள்.

ஒரு இடத்திலிருந்து மாற்றலில் செல்லும்போதோ அல்லது பணியை விட்டு செல்லும்போதோ சக நண்பர்கள் நடத்தும் பிரிவு உபசார விழா பற்றிய நினைவுகள் என்றும் பசுமையாய் இருக்கும். உண்மையில் அப்போது நமக்கு ஏன் இந்த இடத்தை விட்டு போகிறோம் என்று எண்ணத்தோன்றும். தங்களுக்கும் அப்படி இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.


ஜீவி said...

@ வே. நடன சபாபதி

இப்பொழுது கூட தொலைபேசியில் நாம் சொல்லும் ஆங்கில வார்த்தை எதிர் முனையிலிருப்பவருக்கு சரிவர புரியவில்லை என்றால் இந்த மாதிரியான 'பொனடிக் கோட்' வழியில் அவரது புரிதலுக்கு முயற்சிப்பேன்.

பணியிட பிரியாவிடை விழாக்கள் அலாதி தான். தாங்கள் சொல்வது உண்மையே.

Related Posts with Thumbnails