மின் நூல்

Saturday, September 14, 2024

இது ஒரு தொடர்கதை -- 19

குலச்சிறை நாயனார் சிலையிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளித் தான் 49-வது கற்சிலையாக நின்ற சீர் நெடுமாறன் நாயனாரின் சிலை இருந்தாலும் அவர் சிலை ஸ்தாபித்திருந்த இடம் குறிப்பாக ஏற்கனவே பாண்டியனுக்கு அத்துபடி  ஆகியிருந்ததினால் தன் நடையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியே பாண்டியன்


  தென்னாடுடைய சிவனே போற்றி!!  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

நடந்ததைப் பார்க்க முடிந்தது.  அவன் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு நடக்க முடியாவிட்டாலும் மங்கையும் தொடர்ந்து வரும் சிலைகளில் தன் பார்வையைச் சுழல விட்டபடியே பாண்டியனைத் தொடர்ந்தாள்.  மஙகையர்க்கரசியாரின் சிலையைப் பார்வையிலிருந்து தப்ப விட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு வேறு ஒரு பக்கம்!...

என்ன தான் நாயன்மாராய் இருந்தாலும் மன்னனாய் இருந்தவன் இல்லையா? அந்தக் கம்பீரம் அழியாமல்  நெடுமாற நாயனாரின் உடலிலும் திண் தோள்களிலும் முகத்திலும் படிந்திருந்தது.  நாயனாரின் சிலையை நெருங்கியதும் மங்கையைக் காணோமே என்று பாண்டியன்  திரும்பிப் பார்த்தான். நாலைந்து சிலைகளுக்குப் பின்னால் அவள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "ராணியும் ராஜாவுமாய் சேர்ந்து பார்ப்போம் என்று சொன்னே, இல்லையா.. வா.. ராஜா இங்கேயிருக்கிறார் பார்.." என்று நெடுமாற நாயனார் சிலையை பாண்டியன் சுட்டிக் காட்டினான்.  அவன் கண்கள் நாயனார் சிலையின் மேலேயே நிலைக்குத்தி இருந்தது.

நடையில்கொஞ்சம் வேகத்தைக் கூட்டி அருகில் வந்த மங்கை நெடுமாறனார் சிலையைப் பார்த்தபடி,  "சும்மா சொல்லக்கூடாது.. ராஜ களையோடத் தாங்க  இருக்கார்.." என்றாள்.  

"நான் நினைச்சதையே நீயும் சொல்லணும்ங்கற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.. அதையே நீயும் சொன்னதில் சந்தோஷம், மங்கை.." என்றான் பாண்டியன்.

"அதுக்குள்ளேயே அப்படி சொல்லிட்டா, எப்படி?" என்றாள் மங்கை.  

"எதுக்குள்ளேயே?" என்று புருவத்தை உயர்த்தினான் பாண்டியன்.

"நான் நினைக்கறதையே நீங்க சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?"

"புரிலே.."                                                                                                                            55

அரசியார் சிலையை இன்னும் நாம பாக்கலே.. அவங்களை நாம பாக்கறப்போ நான் நினைக்கிறதையே நீங்களும் சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?" என்று மங்கை சொன்ன பொழுது அவள் குறிப்பிட்டது புரிந்த மாதிரி கலகலவென்று சிரித்தான் பாண்டியன்.  "அதையும் பார்த்தாப் போச்சு.." என்றவாறே பக்கத்துச் சிலையைப் பார்த்தான் பாண்டியன்.  50- என்ற எண் போடப்பட்டு நேச நாயனார் என்று சுவரில் குறித்திருந்தார்கள்.

"ஐம்பது வந்திட்டோம்.. பக்கத்லே தான் அவங்களும் இருப்பாங்க..வா.. அதையும் பார்த்துடலாம்" என்றபடியே பிரிய மாட்டாமல் பிரிகிற மாதிரி நெடுமாற நாயனாரின் சிலையை மீண்டும் ஒருமுறை உன்னிப்பாக நோட்டமிட்டு விட்டு நடையை எட்டிப் போட்டான் பாண்டியன்.

பாண்டியன் சொன்னபடியே நின்ற சீர் நெடுமாறனனுக்கு ஆறு சிலைகள் தாண்டி 55- என்ற எண் போடப்பட்டு மங்கையர்கரசியார் சிலை இருந்தது. அறிவார்ந்த கூர்மையான நாசி, வட்ட விழிகள், கருங்கூந்தலைக் கொண்டையிட்டு முடிந்த விதமே அந்த வட்ட முகத்திற்கு மேலும் அழகூட்டியது. நெற்றியில் திரு நீறு,  தலைக் கொண்டையில் மல்லிகைச் சரம் சூட்டியிருந்தார்கள்.  கைகள் குவித்த நிலையில் அரசியாரின் சிலையைத் தத்ரூபமாக வடித்திருந்தார்கள்.  

அரசியாரின் சிலையை தீர்க்கமாகப் பார்க்கும் பொழுதே மங்கை ஆழ்ந்த யோசனையில் உணர்ச்சி வசப்பட்டாள்.  'இவர் முயற்சியால் தானே இவரது கணவரின் மனமாற்றப் போக்கைக் போக்கவும் அவருக்கு பீடித்த நோயைத் தீர்க்கவும் முடிந்தது?' என்று சிந்தனை ஓடியது.  மங்கைக்கு அவரைப் பார்க்கும் பொழுது டாம்பீகமான அரச குடும்பப் பெண்ணாகத் தோன்றவில்லை. எளிய  சாதாரண மக்களின் வீட்டுப்பெண் போன்ற குடும்பப் பொறுப்பும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து பாதிக்கப்பட்ட தன் கணவரின் நலன் காத்த வெற்றித் திருமகளாகவும் காட்சியளித்தாள். உடனே 'இறைவனே! எனக்கும் இந்த மாதிரியான திறமைகளைக் கொடுத்து எடுத்த காரியங்க்களில் வெற்றி பெற நீ அருள வேண்டும்' என்று மனமாற வேண்டிக்கொண்டாள்.

'என்ன, அப்படியே அவங்க சிலையோட நீயும் ஒரு சிலையா ஒன்றிப் போயிட்டே போலிருக்கு!" என்று பாண்டியன் சிரித்தான்.

"ஆமாங்க.. ராணியார் எவ்வளவு அழகா இருக்காங்க, பாத்தீங்களா?" என்று கொஞ்ச நேரத்திற்கு முன் தனக்கேற்பட்ட உணர்வுகள் கலையாமலேயே கேட்டாள் மங்கை.

"ஆமாம், மங்கை.. பொதுவாகவே தமக்கான பெண்களைத் தேர்வு செய்வதில் அரசர்கள் என்றும் சோடை போனதே இல்லை" என்று ரொம்ப அலட்சியமாக சொன்னான் பாண்டியன்.  

அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலாக இருந்தது மங்கைக்கு.  பெண்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள சக்தியற்றவர்களாகவே ஆண்டவன் இந்த ஆண்களைப் படைத்து விட்டானோ என்ற பொருமல் மனசில் தேங்கியது.  அல்லது தன் அரச வாழ்க்கையில் இந்த அரசியார் பட்ட மனக்கஷ்டங்களும் அவற்றைக் களைய இவர் மேற்கொண்ட அரிய செயல்களையும் தன் கணவன் அறிந்திருக்க மாட்டாரோ என்ற ஐயம் அவளுக்கேற்பட்டது.   அப்படி அதெல்லாம் அறியாத பட்சத்தில் பாண்டியன் நெடுமாறனிடம் இவர் பக்தி கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று மங்கைக்கு எரிச்சலாக இருந்தது.

"என்ன மங்கை?  அப்படி என்ன யோசனையில் மூழ்கிட்டே? அரசியார் இவ்வளவு அழகாய் இருக்கிறாரேன்னு தானே நினைத்து மலைச்சுப் போய் நிக்கறே?" என்று கேட்டான்.

சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, "ஆமாமாம்.. எப்படி நான் நினைப்பதை அப்படிக் கரெக்டாக கண்டு பிடிக்க முடிஞ்சது?" என்று சொல்லிச் சிரித்தாள் மங்கை.

"ஹே! இதெல்லாம் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன? பொதுவா பெண்கள்னாலே இன்னொரு பெண் அழகா இருந்தா அது அவங்களை ரொம்ப பாதிக்கும். அந்த சைக்காலாஜி அடிப்படைலே தான் சொன்னேன்" என்றான் பாண்டியன்.

அவன் சொன்னதைக் கேட்டு மேலும் எரிச்சல் கூடியது அவளுக்கு.  இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, "சரியாச் சொல்லிட்டீங்களே!" என்று போலியாகத் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள் மங்கை.

(தொடரும்)

 


9 comments:

Jayakumar Chandrasekaran said...

மங்கையர்க்கரசி சிலையை போட்டோ எடுக்கும்போது விழுந்திருக்கிற பிளாஷ் நிழல் ஆஞ்சநேயர் நிழல் போல் உள்ளதை கவனித்தீர்களா?

பாரதம் போன்று இந்ததொடர்கதையில் நிறைய கிளைக்கதைகள் முளைக்கும் போல் இருக்கிறதே! ஆகட்டும் அமெரிக்காவில் சிந்திக்கவும், எழுதவும் நிறைய நேரம் கிடைக்கும். அதுவும் ஒரு பொழுது போக்கு தான்.
Jayakumar

நெல்லைத் தமிழன் said...

இந்தப் பகுதி வித்தியாசமா இண்டெரெஸ்டிங் ஆக இருக்கு. தொடர் முடிந்தபிறகுதான் படிக்கணும் என்று நினைத்திருந்தேன்.

ஜீவி said...

நீங்க சொல்றதை இப்பத்தான் பார்த்தேன்.

அரை மணி நேரம் தான் ஆகும். முன் கதையை பார்த்திடுங்க. இப்படி குத்துமதிப்பா இல்லாம அப்போத்தான் கமெண்ட் போட்டா கரெக்டா இருக்கும். இனிமே வரப்போறதெல்லாம்
சுவாரஸ்யமா வேறே இருக்கும். ஆக, முன் கதைப்பகுதிகளை படிச்சிடுங்க. நிறைய சொல்லவும், நாம் நிறைய பேசவும் வேண்டியிருக்கு. ஓ.கே.?

சினிமா பாஷைலே சொல்வாங்களே, எழுதழறத்துக்கு ஏதோ ரூம் போடுவாங்கன்னு.. அந்த மாதிரி இல்லே அமெரிக்கா வந்தது.
நிறைய இடங்களுக்குக் கூட்டிப் போறாங்க.. கிடைச்ச இண்டு இடுக்கிலே தான், பெரும்பாலும் ராத்திரி பத்து மணிக்கு மேலே தான் எழுத்துப் பணி.

அடுத்த வாரம் அடுத்த பகுதி வெளிவர்றத்துக்குள்ளே முன்பகுதிகளைப் படிச்சிடுசுங்க.

ஜீவி said...

இந்த ஜோர்லேயே சென்ற பகுதிகளையும் பார்த்திடுங்க, நெல்லை. வாராவாரம் ஒரு பகுதின்னு தொடர்ந்திடலாம்.
அடுத்த ஞாயிறுலேந்து இந்த மாதிரி வித்தியாசங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அதனாலே தான் சொல்றேன்.

கோமதி அரசு said...

இறைவனே! எனக்கும் இந்த மாதிரியான திறமைகளைக் கொடுத்து எடுத்த காரியங்க்களில் வெற்றி பெற நீ அருள வேண்டும்' என்று மனமாற வேண்டிக்கொண்டாள்.//

மங்கை எல்லா பெண்களும் வேண்டி கொள்வது போல தான் எந்த காரியம் செய்யும் போது இறைவனை வேண்டிக் கொள்கிறார். தான் செய்யும் காரியங்களுக்கு இறைவன் உறுதுணையாக இருக்க கேட்கிறார். தனக்கும் மங்கையர்கரசி போல திறமைகள் வேண்டும் என்கிறார்.

அதை பாண்டியன் புரிந்து கொண்டு நீயும் அரசி போல எனக்கு உறுதுணையாக இருக்கிறாய் என்று சொல்லி இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.

ஜீவி said...

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு ஈஸியா என்ன?
அதுக்குத் தானே இந்தக் கதை Format?
புரிய வேண்டிய பல விஷயங்கள் தொடரப் போகின்றன.
தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடுவதற்கு நன்றி, சகோ.

ஸ்ரீராம். said...

ஏறத்தாழ கடவுளிடம் என் பிரார்த்தனை போலவே மங்கையின் பிரார்த்தனை இருக்கிறது.  JKC ஸார் சொன்ன பிறகு உற்றுப்பார்த்து ஆஞ்சியைப் பார்த்தேன்!

கோமதி அரசு said...

மங்கையர்க்கரசி சிலையை போட்டோ எடுக்கும்போது விழுந்திருக்கிற பிளாஷ் நிழல் ஆஞ்சநேயர் நிழல் போல் உள்ளதை கவனித்தீர்களா?//

கவனித்தேன் ஆஞ்சநேயர் தெரிந்தார்.

ஜீவி said...

இது தான் பொதுப்பார்வைக்கு உட்பட்ட பிரார்த்தனை போலும். நி.சீ. நெடுமாறன் அவன் சகதர்மிணி மங்கையர்கரசி பற்றித் தெரிந்து வைத்திருப்பதோடு முழுக் கதையையும் ஒரு பார்வை பார்த்து விடுங்கள். தொடரும் கதையில் மேலும் பேசலாம்.

Related Posts with Thumbnails