மின் நூல்

Tuesday, January 12, 2010

ஆத்மாவைத் தேடி….28 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த பக்கத்தை நோக்கி....


28. சுழற்காற்று


மதிய உணவிற்குப் பின் அவை சீக்கிரமாகவே நிரம்பி விட்டது. தேவதேவனும் அவைக்கு வந்து மேடைக்குப் போகாமல் அவர்களுடனேயே அமர்ந்து கொண்ட பொழுது, நிறையப் பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு, 'ஆஃப் தி ரெகார்ட்'டாய் கேள்விகள் கேட்டு, விஷயத் தெளிவு பெற்றனர். மாலை பயிற்சி வகுப்புகளுக்குப் போக வேண்டியிருந்ததினால், இந்த மதிய அமர்வை உணவு முடிந்தவுடன் கொஞ்சம் சீக்கிரமாகவே வைத்துக் கொள்வது அனைவருக்கும் பிடித்திருந்தது. சரியாக இரண்டு மணிக்கு தேவதேவன் மேடை ஏறினார்.


"பிப்பலாத முனிவர் சொன்னதாக இந்த அவையில் காலை சொல்லியவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.." என்று உரையை ஆரம்பித்தார் தேவதேவன். பிப்பலாத முனிவர் சொன்னதை--பிராணன் ஆத்மாவிலிருந்து தோன்றியது என்பதை--- ஆத்மா இருப்பதால் பிராணனும் இருக்கிறதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் என்று முதலிலேயே சொல்லி விட்டார். அடுத்து மனதின் செயல்பாடு களுக்கேற்ப இந்தப் பிராணன் உடலையும் வார்த்தெடுக்கிறது. இதற்குப் பொருள் ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிராணன் அவன் உடலை அமைக்கிறது என்கிறார். நம் வாழ்க்கை முறை, மனத்தில் உருவாகும் குணநல சேர்க்கைகள், எதிர்கொள்ளும் அனுபவங்கள், அதற்கான நமது நடவடிக்கைகள் இவற்றை யெல்லாம் வைத்து பிராணன் அந்த குறிப்பிட்ட மனிதனின் உடலையும் மனதையும் உருவாக்கும் என்கிறார்" என்று சொல்லி விட்டு, "இப்படி உருவாகும் இந்த உருவாக்கம் தான் மனிதன் அடிக்கடி சொல்லும் அந்த 'நான்' என்று நான் நினைக்கிறேன்" என்றார் தேவதேவன்.


அவையில் லேசான கலகலப்பு உடனே கிளம்பவே தேவதேவன் சடாரென்று, "மன்னிக்கவும். இது எங்கள் குழுவின் அபிப்ராயம் இல்லை; என் மனதில் தோன்றியதைச் சொல்லி விட்டேன்" என்றார்.


"பொருத்தமாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்" என்று சித்திரசேனன் சொன்னதும், தலைதாழ்த்தி, "மிக்க நன்றி" என்று சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தார் தேவதேவன்.


"இந்த விஷயத்தைக் கொஞ்சம் எளிமைபடுத்திச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து ஒருவன் செய்யும் காரியங்களான கர்மாக்களுக் கேற்ப அவன் உள்ளமும், உடலும் உருவாகின்றன. இப்படிப்பட்ட உருவாக்கம், பிராணனால் தான் நிகழ்கிறது. இந்த உருவாக்கம் தான் ஒருவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் செய்கின்றது. அவன் அழிந்தபின்பும் அவனுக்காக நிற்பது.


"இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும். சொல்லவில்லை என்றால் செய்நன்றி கொன்றவராவோம். பாரதத்தின் ஆன்மிக வெளிப்பாடுகளை உலக அரங்கில் எடுத்தோதி நம்மைத் தலைநிமிரச் செய்தவர் சுவாமி விவேகானந்தர். உபநிஷத்துக்கள் சொல்லும் உண்மைகளின் அழகில் சொக்கிப்போய் அவர் அவற்றை ரசித்த அழகு அவரது உரைகளில் காணக்கிடக்கிறது. பிராணனின் செயல்பாடுகளைச் சொல்கிற இந்த இடத்தில், சுழற்காற்றின் செயலுக்கு ஒப்புமைப்படுத்தி தமது 'ஞானதீப'த்தில் எவ்வளவு அற்புதமாக அதைச் சொல்கிறார், பாருங்கள்:


*"நமது ஒவ்வொரு செயலும், நினைப்பும் அவரவர் ஆழ்மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. மரணத்திற்குப் பிறகு, மனிதன் போகும் இடத்திற்கு வழிகாட்டுவது அவனது சமஸ்காரங்களே. மரணித்த உடல், பஞ்ச பூதங்களுடன் கலந்துவிடுகிறது. ஆனால், அவனின் செயலான சமஸ்காரங்கள் அழியாது அவன் மனத்துடன் ஐக்கியமாகியிருக்கும். மனத்தின் நுட்பமான செயலாற்றல், லேசில் அழியாத ஒரு திறனை அதற்குக் கொடுத்திருக்கிறது. சுழற்காற்று சுற்றி அடிக்கும் பொழுது நிகழ்வது போலத்தான். பல திசைகளிலிரு ந்து வரும் காற்றோட்டங்கள், ஓரிடத்தில் சந்தித்து, ஒன்று சேர்ந்து, சுழல ஆரம்பிக்கின்றன. இந்த சுழற்சியில், காகிதம், குப்பைக் கூளங்கள் போன்ற வற்றைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு சுழன்றடித்துச் செல்கிறது. வேறொரு இடத்தில் அவற்றை உதறிவிட்டு, வேறு பொருட்களை இழுத்துக் கொள்கின்றன. இதைப்போலவே, பிராணன் ஜடப்பொருளிலிருந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகிறது. பிறகு உடல் சாயும் வரை சுழன்று செல்கின்றன. சாய்ந்ததும், வேறு பொருட்களிலிருந்து வேறு உடலையும், மனத்தையும் உருவாக்குகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஜடப்பொருள் இல்லாமல், சக்தியால் பயணம் செய்ய முடியாது. எனவே, உடல் வீழ்ந்தவுடன் எஞ்சியிருக்கும் மனத்தின் மீது பிராணன் சமஸ்கார வடிவில் செயல்படுகிறது. பிறகு பிராணன் பிறிதோர் இடத்திற்குப் போய், புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாக்கிக் கொண்டு மறுபடியும் இதேபோல் செயல்படுகிறது. இப்படியே தனது சக்தி முழுவதும் தீரும் வரை, வெவ்வேறு இடங்களுக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. சக்தி முழுதும் தீர்ந்த பின்னால் தான் அது கீழே விழுகிறது.. அத்துடன் அதற்கான செயலும் முடிவடைகிறது" என்கிறார் அந்த ஞானச்செல்வர்.


"இப்பொழுது இதுவரை சொல்லியவற்றை ஒரு சேரப் பார்ப்போம். ஆத்மாவாக நம்முள் உறையும் இறைவனிடமிருந்து வெளிப்பட்டது பிராணன். மனசின் செயல்பாடுகளுக்கேற்ப அவனது உடலை உருவாக்கி அந்த உடல் செயல்பட சக்தியையும் அளிப்பது பிராணன். மரணித்ததும் உடல் மட்டுமே பஞ்சபூதங் களுடன் கலக்கிறது. பிராணன் மனத்தின் சமஸ்காரங்களைச் சுமந்து கொண்டுத் திரிகிறது. தனது சக்தி இருக்கும் வரை வெவ்வேறு ஜடங்களாகிய உடல்களில் சஞ்சரித்து சக்தி தீர்ந்ததும் விழுகின்றது" என்றார் தேவதேவன்.



* நன்றி: 'ஞானதீபம்'


(தேடல் தொடரும்)

அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்


No comments:

Related Posts with Thumbnails