மின் நூல்

Friday, January 15, 2010

ஆத்மாவைத் தேடி …. 30 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....



30. உள்ளிருக்கும் நெருப்பு


தேவதேவன் பிராணன் பற்றி உரையாற்றுகையில் இந்த விஷயம் குறித்து எல்லாத் தகவல்களையும் கொடுத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் கிட்டத்தட்ட எல்லாச் செய்திகளையும் உள்ளடக்கியதாக அவரது உரை இருந்தது. இந்த உரை தொடர்பான தேவையான விவரங்களான விளக்கங்களை தேவையானோருக்கு பின்னால் கலந்துரையாடலிலும் சொல்வதாக இருந்தார். அதனால் தொடர்ச்சியாகக் கேட்போருக்கு அவர் ஆற்றும் உரையில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

"கடைசியில் உதானன் பற்றியும் பிப்பலாத முனிவர் சொல்வதை இன்று பார்ப்போம்" என்று மேற்கொண்டு தேவதேவன் தொடர்கையில் அவர் சொல்வதை அவையில் அமர்ந்திருந்தோர் கவனமாகக் கேட்கத் தொடங்கினர்.


"தேஜோ ஹ வா உதானஸ்தஸ்மாத் உப்சாந்ததேஜா: புனர்வம் இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யமானை:


"புறவுலகில் நெருப்பாக இருப்பதே உடலின் உட்பகுதியில் உதானனாக இருக்கிறது. இந்த நெருப்பு அணையப்பெற்றவனின் புலன்கள் மனத்தில் ஒடுங்குகின்றன். அவன் மீண்டும் பிறக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


"மனிதன் உடலின் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது இந்த உதானன். மனித உடலில் பரவியிருக்கும் உதானனாகிய இந்த வெப்பச்சூடு அவனிலிருந்து நீங்கி உடல் குளிர்ந்து விட்டால் அவன் உடலிலிருந்து பிராணன் விடுபட்டதாகக் கொள்கிறோம். பிராணனும், உதானனும் நீங்கி விட்ட உடல் இறந்து பட்டதாகக் கொள்ளப்படும். உடலுக்கு மட்டுமே மரணம் என்பதால் அவன் இறக்கிறான் என்பதையே அவன் மீண்டும் பிறக்கிறான் என்று சொல்லப் பட்டிருக்கிறது.


"யச்சித்தஸ்தேனைஷ ப்ராணயாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: ஸஹாத்மனா யதா ஸங்கல்பிதம் லோகம் நயதி"


"பிராணனும், உதானனும் உடலை விட்டு விட்டதினால், அந்த உடல் இறந்து விட்டதாகச் சொல்கிறோம். இப்பொழுது உடல் விட்டு நீங்கிய பிராணன் என்ன செய்கிறது என்று கேள்வி. நீங்கிய அந்தப் பிராணன் உதானனின் துணையுடன் அவனை அவன் விரும்பிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.


"இந்த ஸ்லோகத்தில் வரும் "'ஸங்கல்பிதம் லோகம்'--'அவன் விரும்பிய உலகிற்கு' என்னும் சொற்றொடருக்கு பல பாடபேதங்கள் உண்டு. அதாவது பல வியாக்கியானங்கள் உண்டு. மரணிக்கும் தருவாயில் அந்த இறுதி கணத்தில் இறப்பவன் என்ன எண்ணம் கொள்கிறானோ அதற்கேற்பவான உலகிற்கு கொண்டு செல்லப்படு கிறான் என்று சிலர் அர்த்தம் கொள்வர். வாழ்க்கை நெடுக எப்படிப்பட்ட எண்ணம் கொண்டவானாய் அவன் இருந்தானோ, அப்படிப் பட்ட எண்ணமே இறக்கும் தருவாயிலும் அவனைச் சூழ்ந்திருக்குமாதலால், என்னன்ன சமஸ்காரங்களின் பலனாகிய துணையுடன் எப்படிப் பட்டவனாய் ஒருவன் வாழ்ந்தானோ அதற்கேற்பவான உலகை அடைகிறான் என்று கொள்ளலாம்.


"பிராணனை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் ஆகிறான். அதன் வெளிப்பிரபஞ்ச இயக்கத்தையும், உள் உடல் செயல்பாடுகளையும் அறிந்தவன், இந்த ஞானத்தை மனத்தில் இருத்தி செயல்படுபவனும், அவனது சந்ததியும் எல்லா நலங்களையும் பெற்றவர்களாவர்...என்று சூட்சுமத்தை தான் உணர்ந்தவாறு உணர்த்துகிறார், பிப்பலாத முனிவர்.. அவருக்கு மீண்டும் நம் நமஸ்காரங்கள்" என்று அன்றைய உரையை முடித்தார் தேவதேவன்.


தேவதேவன் தனது உரையை முடித்தாரே தவிர, அந்த ஹால் முழுக்க அவர் குரல் நிறைந்திருக்கிற உணர்வே அவர் உரையை செவிமடுத்த அத்தனை பேருக்கும் இருந்தது. நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகளாகக் குறித்துக் கொண்டவர்கள், மீண்டும் அவற்றை ஒருதடவைத் திருப்பிப் பார்க்கின்ற செயலாய் மேலோட்டமாக அத்தனையையும் தம் நினைவில் மீண்டும் கொண்டு வந்த செய்கை வாழ்க்கை பூராவும் இதுபற்றிய எதையும் மறந்து விடலாகாது என்று அவர்கள் உறுதி பூணுவதே போலிருந்தது.


(தேடல் தொடரும்)

No comments:

Related Posts with Thumbnails