மின் நூல்

Thursday, January 14, 2010

ஆத்மாவைத் தேடி…. 29 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


29. ஏழு ஜூவாலைகள்


ன்றைய அமர்வு நேரம் முடிவதற்குள்ளாகவே பிராணனைப் பற்றியச் செய்திகள் அத்தனையையும் தொகுத்துத் தந்து விட்டால், நாளைய அமர்வின் ஆரம்பமாய் கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்ன தேவதேவன் விட்ட இடத்திலிருந்து தனது உரையைத் தொடர்ந்தார்.

"உடலையும் மனத்தையும் உருவாக்குற பிராணன், பிரமிக்கத்தக்க ஒரு ஒழுங்கு முறையில், உடலில் செயல்படும் அதிசயத்தைச் சொல்கிறார், பிப்பலாத முனிவர்.

"யதா ஸ்ம்ராடேவ அதிக்ருதான் வினியுங்க்தே / ஏதான் க்ராமானேதான் க்ராமான் அதிதிஷ்ட்டஸ்வேதி ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத்க்ப்ருதகேவ ஸன்னிதத்தே"


"இந்த பிராணன் ஒரு மாமன்னன் எப்படி இராஜ்யபரிபாலன தேவைக்காக அலுவலர்களை நியமிக்கிறானோ அப்படி தலையாய பிராணனாக --தலைமை தாங்குபவனாக -- தான் இருந்து கொண்டு-- மற்ற தேவைகளுக்காக மற்ற பிராணன்களை நியமிக்கிறது.


"இருப்பது ஒரு பிராணன் தான். அது தன்னையே வெவ்வேறு விதங்களில் பகுத்துக் கொண்டு, உடலின் எந்த எந்த இடங்களில் செயல்படுகிறதோ அதற்கேற்பவான அந்த அந்தப் பெயர்களைப் பெறுகிறதாம்.


"பாயூபஸ்தேsபானம் சஷூ: ச்ரோத்ரே முகநாஸிகாப்யாம் ப் ராண: ஸ்வயம் ப்ராதிஷ்ட்டதே மத்யே து ஸமான: / ஏஷ ஹ்யேதத்துதமன்னம் ஸமம் நயதி தஸ்மாதேதா: ஸப்தார்ச்சிஷோ வந்தி"


"கண், காது, வாய், மூக்கு ஆகிய இடங்களை பிராணன் தன் ஆளுகையில் வைத்துக் கொள்கிறது. அதாவது பார்த்தல், கேட்டல், பேசுதல், சுவாசித்தல் ஆகிய காரியங்களைப் பிராணன் பார்த்துக் கொள்கிறது. கழிவுகளை வெளியேற்ற அபானன், உடம்பின் நடுப்பகுதியான வயிற்றில் செய்ல்பட சமானன் என்று வகுத்துக்கொள்கிறது. இது தவிர உடலின் எல்லா பாகங்களுக்கும் அந்தந்த பகுதிக்குத் தேவையான அளவு அர்ப்பிக்கப்பட்ட உணவை வழங்குவதும் சமானனின் வேலையாயிற்று. பிராணனிலிருந்து ஏழு ஜுவாலைகள் உண்டாகின்றன.


"இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். 'ஹூதம்'--'அர்ப்பிக்கப்பட்ட' என்று ஒரு பதத்தை உபயோகித்து, உணவை உண்ணும் செயலைச் சொல்கிறார், முனிவர். வழக்கமாக, யாகத்தில் படைக்கப்படுவதையே 'அர்ப்பிக்கப்படுதல்' என்பர். உண்ணும் செயலையே ஒரு வேள்வியாகக் காண்கிறது உபநிஷதம். ஜீரண காரியங்களுக்காக வயிற்றுப் பகுதியில் அக்னி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. வாய் வழியாக அன்னம் ஆஹூதிப் பொருளாக வயிற்றுக்கு, அந்த அக்னிக்கு அர்ப்பிக்கப்படுகிறதாம். மரணித்ததும் உடலையே ஆஹூதியாக அக்னிக்கு அர்ப்பித்ததும், தாய் வயிற்றில் தங்கிப் பின் இந்த உலகில் தலைகாட்டி, வாழ்ந்து முடித்த வேலை முடிந்ததாகக் கொள்ள வேண்டும்.


"இப்பொழுது பிராணனலிருந்து உண்டான ஏழு ஜுவாலைகளுக்கு விளக்கம் வருகிறது. வயிற்றில் ஜ்வலிக்கும் அக்னியிலிருந்து எழும்பும் ஏழு ஜுவாலைகள் தாம் இவையாம். கண், காது, நாசி துவாரம் என்று இரண்டு இரண்டாக ஆறு, வாய்க்கு ஒன்று என்று சேர்த்து மொத்தம் ஏழு. இந்த ஏழு பகுதிகளும் இந்த ஏழு ஜுவாலைகளிடமிருந்து தான் செயல்பட சக்தியினைப் பெறுகிறதாம்.


"அடுத்து வியானனைப் பற்றிச் சொல்லும் பொழுது நம்மை திகைக்க வைக்கும் நாடிக்கணக்கு வருகிறது. இது அதற்கான ஸ்லோகம்:


"ஹ்ருதி ஹ்யேஷ ஆத்மா / அத்ரைதத் ஏகதம் நாடீனாம் தாஸாம் தம் தமேகைகஸ்யாம் த்வாஸப்ததிர் த்வாஸப்ததி: ப்ரதிசாகா
நாடீ ஸகஸ்ராணி வந்த்யாஸூ வ்யானச்சரதி"


பிராணன் தங்கியிருக்கும் நடுமத்தி பிரதேசத்திலிருப்பது 101 நாடிகள்.அவற்றுள் 1000 கிளைநாடிகள் உள்ளன. இவை ஒன்வொன்றிற்கும் 72 கிளைநாடிகள் என்று ஆக 72000 கிளைநாடிகள் உண்டு. இவற்றில் வியானன் சஞ்சரிக்கிறது.


"ஆதித்யோ ஹ வை பாஹ்ய: ப்ராண உயத்யேஷ ஹ்யேனம் சாக்ஷூஷம் ப்ராணம் அனுக்ருஹ்ணான: ப்ருதிவ்யாம் யா தேவதாஸைஷா புருஷஸ்ய அபானம் அவஷ்டப்யந்தரா யதாகாச: ஸ ஸமானோ வாயுர்வ்யான:"


"புறப்பார்வைக்குத் தெரிகிற பிராணன் சூரியனே. அருள்கூர்ந்து கண்களில் பிராணனாய் அவன் சுடர்விடுகிறான். அபானன் உடலைத் தாங்குகிறது. பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையிலுள்ள வெளியாய் இருக்கும் சமானனே மனிதனுள் அகவெளியாய் அமைந்திருக்கிறது என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது" என்று சொல்லி விட்டுக் கொஞ்சம் நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன்.


"இந்த இடத்தில் இது தொடர்பான ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். மனிதன் உடல் பூராவும் இரத்த ஓட்டம் சுற்றிச் சுழன்று வந்து பிராண சக்தி சப்ளை ஆகிக் கொண்டிருக்கிறது -- ஒரு இடத்தைத் தவிர. அது மனிதனின் கண்களுக்குள்ளே இருக்கும் விழிவெண்படலம். இந்த விழிவெண் படலம் தனக்கானஆக்ஸிஜனை நேரிடையாக காற்றிலிருந்தே எடுத்துக் கொள்கிறது" என்று சொன்ன தேவதேவன், உரையை மேலும் தொடர்வதற்குத் த்யாராய் காகிதக் கத்தையின்
அடுத்த பக்கத்தைத் திருப்பினார்.


(தேடல் தொடரும்)

No comments:

Related Posts with Thumbnails