மின் நூல்

Saturday, March 12, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

பகுதி--4

ல்வழி நடப்பது என்பது கூட சுயநலனுக்காகத்தான். மனசின்  சுய ஆரோக்கியத்திற்காகத் தான்.  இந்த பரம இரகசியம் பற்றிய சரியான  புரிதல் இன்மையே இது பற்றிய அலட்சியத்திற்கு அடிகோலுகிறது.

ஆளுமை(Personality)  என்பது  புஜபலப் பராக்கிரமங்களுடன் வாட்ட சாட்டமாக இருப்பதோ அழகான புறத் தோற்றம் கொண்டிருப்பதோ அல்ல. வெளி அழகான புறத்தோற்ற அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் சிலர் தான். அந்த சிலர் தன் வெளி அழகைப் பேணிப் பராமரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர்களாய் இருப்பார்கள்.  தன்னையே போலவான இன்னொருவரின் தோற்றத்தை ரசிக்கிற மனோபாவம் இது.      

வெளி அழகு என்பது புற உடல் சம்பந்தபட்டது.  தன் தோற்றம் பிறருக்கு அழகாகத் தெரியவேண்டும் என்பதில் மட்டும் முக்கியத்துவம் கொண்டு தானே அதுவாகிப் போவது அல்லது அதுவே தான் எல்லாம் என்று நினைப்பது.  தோற்றம் சம்பந்தப்பட்ட புற உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்துப்  பேணுவதும், உடல் நலம் பேணுவதும் வேறுபட்ட இரு சமாசாரங்கள் என்கிற புரிதல் நமக்கு வேண்டும்.

உடல் நலம் பேணுதல் என்பது  உடலின்  உறுப்புகள் சீர்கெட்டுப் போய் விடாமல் எல்லா உறுப்புகளுக்கும்  முக்கியத்துவம் கொடுத்து அதன் ஆரோக்கியத்தைக் கட்டிக் காப்பாற்றுவது.  கண், காது, மூக்கு, பல் என்று புறத்தே தெரியும் உறுப்புகளின் சீரான பராமரிப்பும் இதில் அடக்கம்.  புற உடல் அழகு பேணுவது என்பது நமது தோற்றம் பிறருக்கு அழகாகத் தோன்ற வேண்டும் என்பதற்கு அளவுக்கு மீறிய அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிலே மட்டுமே கவனம் கொள்வது.

வெளி அழகுக்கும் வாழ்க்கையின்  தொடர்ந்த வெற்றிக்கும் நேரடியான சம்பந்தம் இல்லை என்பதை அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்டவர்கள்  உண்மையான அழகாம் நம் உள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பேணிப் பராமரிப்பதில் தனிக் கவனம் கொள்வர்.

அது என்ன உள் அழகு?...

உள் அழகு என்பது மனம் சம்பந்தப்பட்டது.    தினம் தினம் நாம் எதிர் கொள்ளும் வாழ்க்கை முறைக்கும் அது சம்பந்தமாக எழும் பிரச்னைனைகளுக்கும் தீர்வாகி  வாழும் வாழ்க்கையை சுலபமாக்கி அதுபற்றியதான  திருப்தியைக் கொடுப்பது.

சொல்லப்போனால் வாழ்க்கையின் திருப்திக்காகத் தான் நாம் வாழவே செய்கிறோம்.  இந்தத் திருப்திக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறோம்.  என்ன செய்வது என்று தெரியாததால் தான்  அதைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

திருப்தி என்பது காசு பணத்தினால் வந்து விடுவது அல்ல.  பல நேரங்களில் காசு பணமே திருப்தியின் எல்லைக் கோட்டை நீடித்து அதற்காக அலைந்து திரியக் காரணமாகி விடுகிறது.

சரியாகச் சொல்ல வேண்டுமானால் திருப்தி என்பது அவ்வப்போது நிறைவடைகிற சமாசாரமாய் இருக்கிறது.   இந்த நேரத்தில் இதில் திருப்தி என்றால் அடுத்த நேரத் திருப்திக்காக இன்னொன்று  காத்திருக்கிறது. இந்த நேரமோ அடுத்த நேரமோ எந்த நேரத்திலும் முழுத் திருப்தி என்பது கானல்நீராகவே இருக்கிறது.   திருப்தியை சுகிப்பதன்  அளவுகோலும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

பல வருடங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடனான என் முதல் சந்திப்பில் அவரை சந்தித்துப் பேசிய மகிழ்ச்சியில் எனது அந்தக்கால வழக்கமான ஆட்டோகிராப் புத்தகத்தை அவரிடம் நீட்டினேன்.

அதை வாங்கிக் கொண்டவர், கூர்ந்து என்னைப்  பார்த்து விட்டு, ஒருவித பரவசத்துடன்   "திருப்தி அடைந்து விட்டவனுக்கும் செத்துப் போனவனுக்கும் வித்தியாசம் இல்லை" என்று எழுதி த. ஜெயகாந்தன் எனக் கையெழுத்திட்டு என்னிடம் நீட்டினார்.

அவரது 'உன்னைப் போல் ஒருவன்' குறுநாவல் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியிருந்த காலம் அது.   அந்த நாள் அவரைச் சந்தித்துப் பேசினதும் 'உன்னைப் போல ஒருவன்'  கதையின் முடிவு பற்றி திருப்தியடையாத கேள்விகள் அவரிடம் கேட்டும் அவர் எனக்கு இணக்கமாகப்  பதில் அளித்ததுமே எனக்குத் திருப்தியாய் இருந்தது.  ஆனால் அவரோ, திருப்தி என்பது செத்துப் போகும் வரை அடைய முடியாத ஒன்று என்கிற அர்த்தத்தில் அல்லவா எழுதித் தந்திருக்கிறார் என்றிருந்தது.  அந்த அளவுக்கு திருப்தி என்பது தீராத தாகமாய் அவருக்கு இருந்திருக்கிறது. இலட்சிய புருஷர்களுக்கு அதுவே கூட  இலட்சணமாய் இருக்கலாம்.


யோசித்துப் பார்த்தால் எது செத்துப் போகும் வரை அடைய முடியாத ஒன்று என்று தீர்மானிக்கிறோமோ அதுவே செத்துப் போன பின்பும் அடைவதற்கு வழியில்லை என்று தெரிகிறது. ஏனெனில் அடைவது, அடையாதது என்று நாம் போடுகிற பட்டியல் எல்லாம் இந்த பூவுலகில் நாம் வாழும் காலத்தில் தான்.  மரித்த பிறகு அடைவது அடையாதது என்பன எல்லாமே அதற்கான அர்த்தத்தை இழந்து போகிறது.

அதனால் ஆழ்ந்து யோசிக்கும் பொழுது செத்துப்  போகும் முன் வாழ்க்கையில் திருப்தி அடைவது தான் நம் இலட்சியமாய் இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.  அதை அடைந்தால் வாழும் காலத்தில் தான் அடைய வேண்டும் என்பதினால் நம் வாழ்க்கை காலத்தில் அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் யோசனை நீள்கிறது...

திருப்தி என்பது நம் அனுபவிப்பில் பெறுகிற ஒன்று.  அனுபவிப்புகளின் ரசனைகள் அனைத்தும் நம் குணநலன்களை ஒட்டியவை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் திருப்தியை அடைவதும் அடையாததும்  நம் குணநலன்களைச் சார்ந்து  இருக்கிறது.  குணநலன்களை நேர் படுத்தினால் அல்லது அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தால்  திருப்தி அடைவதையும் அடையாததையும் தீர்மானித்து விடலாம்.

இந்த குணநலன்கள் தாம் உள்அழகைத் தீர்மானிக்கின்றன. நம் உடலின் உள் அச் ழகுகள் சீராக இருப்பதற்கு நம் குணநலன்கள் சீராக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.  உடலின் உள் ஆரோக்கியத்தை நம்  குணநலன்கள் தாம் தீர்மானிக்கின்றன என்றும்  புரிகிறது.

ஆக நம் குணநலன்களே நம் ஆளுமயைத் தீர்மானித்து நிர்ணயம் செய்கிறது என்றும் சொல்லலாம்.


(இந்தப் பகுதியின் தொடர்ச்சியை  எனது  'மனம் உயிர் உடல்' தொடர் பதிவில் தொடரலாம்.  கேள்வியை ஆரம்பித்து வைத்த மாலிஜி அவர்களுக்கும் வாசித்துப் பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் நன்றி.  'மனம் உயிர் உடல்' தொடரில் உயிர் பற்றிச் சொல்லும் பொழுது இதே மாதிரியான செய்திகள் அங்கு திரும்பச்  சொல்ல வேண்டாம் என்பதற்காக இந்த ஏற்பாடு.)



படங்கள் உதவியோருக்கு நன்றி.

   

18 comments:

G.M Balasubramaniam said...

CONTENTMENT ARRESTS improvement

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையான தத்துவத்தை சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

யோசிக்க வைக்கும் அருமையான செய்திகளுடன் கூடிய அழகான பதிவு. பாராட்டுகள். தொடரட்டும்.

//திருப்தி என்பது காசு பணத்தினால் வந்து விடுவது அல்ல. பல நேரங்களில் காசு பணமே திருப்தியின் எல்லைக் கோட்டை நீடித்து அதற்காக அலைந்து திரியக் காரணமாகி விடுகிறது.//

உண்மையே.

காசு பணம் இல்லாவிட்டால் நம் மனதிலும் நமக்கு ஓர் திருப்தியில்லாமல், பிறர் பார்வையிலும் நாம் செல்லாக் காசாகி விடுகிறோம்.

காசு பணம் மிதமிஞ்சி இருந்தாலோ .... அந்தக் காசு பணத்தாலேயே, அதைக் கட்டிக்காக்கவும், மேலும் பெருக்கிக்கொள்ளவும் வேண்டுமே என்பதற்காகவே, இப்போது இருக்கும் திருப்தியையும் நிம்மதியையும் இழந்து மீண்டும் கஷ்டப்படுகிறோம்.

ஜீவி said...

@ GMB

சகஜமாக எல்லோரும் நினைப்பது தான் நீங்கள் சொல்வது.

'மாத்தி யோசி'ங்கற காலம் இது. இந்தத் தொடர் பூராவும் இப்படி மாத்தி யோசிக்கற கருத்துக்கள் நிறைய வரப்போகிறது. எப்படி யோசித்தாலும் சரி, எடுத்துக் கொள்கிற விஷயத்திற்கேற்ப வாசகர்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அவர்கள் பின்னூட்டம் போடுவதில்லை என்பது மாறப்போவதில்லை.

கோமதி அரசு said...

நம் உடலின் உள் அழகுகள் சீராக இருப்பதற்கு நம் குணநலன்கள் சீராக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. உடலின் உள் ஆரோக்கியத்தை நம் குணநலன்கள் தாம் தீர்மானிக்கின்றன என்றும் புரிகிறது.//
உண்மை. கோபம், கவலை, பேராசை எல்லாம் உடல்நலத்தை கெடுக்கும் கருவிகள் ஆகி விடுகிறது. போதும் என்ற மனம் இருந்தால் வாழ்க்கை நலம்தான்.
திருப்தியும், இன்பமும் வாழ்வில் துலங்க தேவையெல்லாம் அடைய அம்மமா, பக்தி பெருகிட பாடி உருகிட என்று அம்பாளிடம் வரமாய் கேட்டு மகிழ்கிறோம்.


அறுகுணசீர்மைப்பு செய்தால், குணநல்பேறு கிடைக்கும், குணநலபேறு கிடைத்தால் முழுமைபேறு கிடைக்கும் என்கிறார். மகரிஷி.

ஜீவி said...

@ ரூபன்

ஹி..ஹி.. தத்துவம்லா இல்லை ரூபன். 'சிந்தனைகள்' என்கிற ஒளிவட்டமும் கிடையாது. மத்தபடி பகுத்தறிவாளனும் இல்லை; பெரியவங்க நம் முன்னோர் சொல்லியிருக்கறதை பகுத்துப்பார்த்து சொல்றேன். இன்ன காரணத்துக்காக இவங்க இப்படி மறைச்சு சொல்லியிருக்காங்கங்கறதை பகுத்துப் பார்த்து அறிஞ்சா யார் வேணுனாலும் இதையெல்லாம் சொல்லலாம், ரூபன்.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

மனசிலே எங்கையோ மூலைலே கிடந்ததை யோசிக்க வைச்சது, மாலிஜி தான். பெருமையெல்லாம் நம் முன்னோர்களுக்குத் தான் போய்ச் சேரணும். முடிஞ்சா ராகுல சாங்கிருத்தியாயன் எழுதின 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலைப் படித்துப்பாருங்கள், கோபு சார்!

கி.மு. 6000-த்தில் துவங்கி கி.பி. 1942 வரையான காலகட்டத்தை இந்த நூலில் அவர் அடைத்திருக்கிறார். பல மொழி கற்றவர்; நம் தமிழ் கூட அறிந்தவர். சிறந்த மார்க்சீய அறிஞர். தன்னை சிந்தனையாளன் என்று எந்த நேரத்தும் இவர் சொல்லிக் கொண்டதில்லை என்பது இவரின் இமாலய தன்னடக்கப் பண்பு. தமிழ்ப் புத்தகாலயம் தான் முதன் முதல் தமிழில் இந்த நூலைப் பதிப்பித்தார்கள் என்றாலும், எல்லா பதிப்பகங்களிலும் கிடைக்கும். முடிந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள், கோபு சார்!

V Mawley said...

வாசிப்பவனுடைய எண்ண அலைகளை பலவிதத்திலும் தூண்டிவிடும்
சக்தி படைத்தவையே , நல்ல இலக்கியம் என்று கொள்ளலாம் ..அவ்வாறே அமைத்திருக்கிறது .
Sri Jaggi Vasudev ஒரு வகுப்பு நடதிக்கொண்டிருக்கும்பொழுது
கடவுள் உன் எதிரில் வந்து நிற்கிறார் ஏதாவது ஏழு வரங்களை கேட்டுக்கொள் .என்று ஒரு exercise கொடுத்தார் ..எல்லோரும் வரிந்து
வரிந்து எழுதிக்கொண்டிருந்தார்கள் ..நான் ஒரு நிமிடத்திலேயே எழுதி முடித்து விட்டு அமர்ந்திருந்தேன் அவர் வினவியதிற்கு நான் சொன்னேன் " எனக்கு 3 வரனகள் போதும் ..ஓன்று -UNLIMITED
Money -Money will get you whatever you want..இரண்டு -Good Health ..மூன்று -peace of Mind (திருப்தி )- இரண்டும் , மூன்றும் பணத்தினால் கிடைப்பதில்லை ..அவன் அருளினால் மட்டுமே சாத்தியம் ..
மாலி

ஸ்ரீராம். said...

திருப்தி. போதும் என்று நினைக்கும் மனம். நினைத்ததை அடைந்து விட்டோம் என்று தோன்றும் கணம். அல்லது சிலவற்றை அடைய முடியாது என்னும் ஞானம் வந்து விட்ட நிலை.

மொத்தமாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே திருப்தியாய் கிடைத்து விடுமா? அது ஜீவாத்மா பரமாத்மா போல பெரிய நிலை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாய் திருப்தி அடையத் தோன்றுமா? சாப்பாட்டில், பண விஷயத்தில், உடல் நலத்தில், உறவு நிலைகளில்.. கேள்விகள் கேட்பதில்... பதில்கள் சொல்வதில்...

ஜீவி said...

@ Mawley

திருப்தி அடைவது என்பது எல்லையே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிற கூடிய ஒன்று. ஆயுசு காலத்துக்கும் முடியாத ஒன்று. அதை ஆயுசு காலத்திற்குள் முடிப்பதற்கு நாமே சில யுக்திகளைக் கையாளலாம். எதற்காக முடிக்க வேண்டும் என்றும் முடிப்பதற்கு என்னன்ன யுக்திகள் என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடர்ந்து வருவதற்கு நன்றி, மாலிஜி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//திருப்தி. போதும் என்று நினைக்கும் மனம். நினைத்ததை அடைந்து விட்டோம் என்று தோன்றும் கணம். அல்லது சிலவற்றை அடைய முடியாது என்னும் ஞானம் வந்து விட்ட நிலை.//

எஸ். எஸ். இதான். அந்த நிலைக்கு எதுக்குப் போகணும் என்றும் ஏன் போகணும் என்றும்
தெளிவு கிடைத்தால் தான் இது சாத்தியமாகும். தெளிவை மனசுக்கு எடுத்துச் சொன்னால் ஏற்றுக் கொள்ளும். அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு சில பயிற்சிகள் இருக்கு.

தனித்தனி திருப்திகளாய் கூறுகள் போட்டுக்கொண்டு க்ளோஸ் பண்ணினால் வேலை ஈஸியா முடிஞ்சுடும். எல்லாத்தையும் ஒண்ணா ஒரு கை பாக்கலாம்ன்னா அது நடக்கற வேலை இல்லை. அது விரிக்கும் வலையில் நாம் விழுந்து காணாமல் போய்விடுவோம்.

திருப்தி அடையற லிஸ்ட்டில் எது எதெல்லாம் அடங்காது என்று பிரித்துப் பார்க்க முடியாது

பெரிய பெரிய விஷயங்களிலும் திருப்தியை அடையச் செய்யலாம்..

கைலாஷ் யாத்திரை இந்தத் தடவையாவது போய்த் தான் தீர்வது என்று அடம் பிடிக்கிற மனசையும் நிலைமையை இதமாச் சொல்லி தெளிவு படுத்தினா கேட்டுக்கும். அந்தக் கைலாஷூம் இந்தக் கைலாஷூம் ஒண்ணு தான்னு காஞ்சீபுரத்திற்கு கூட்டிச் சென்று அந்தக் கைலாஷுக்குப் போன திருப்தியையே அதுக்கு ஏற்படுத்தலாம். இதில் வேடிக்கை என்னனா அடம் பிடிக்கறதும் ஒரு மனசு தான்; இதோபதேசம் பண்றதும் அதே மன்சு தான். ஒரே சீன்லே டபுள் ஆக்டிங். அடம் பிடிக்கறது மூட மனசு; இதோபதேசம் பண்றது விவேக மனசு.

இதை எப்படிச் செய்யலாம்ன்னு அடுத்த பகுதிலே சொல்றேன்.

கேள்வி கேட்டதற்கு நன்றி. தொடர்ந்து கேள்வி மழைகள் பொழியட்டும்!

மோகன்ஜி said...

திருப்தி என்பது ரெலேட்டிவ் டெர்ம்.தத்வார்த்த விளக்கங்களைத் தவிர்த்து பார்த்தோமெனில் சிறுசிறு திருப்திகளின் தொகுப்பாய் பகுக்கப் பட்டதே வாழ்க்கையில் திருப்தி எய்தியநிலை. ஒரு பொருள் முதல் நுகர்வில் அளிக்கும் திருப்தியை அடுத்தடுத்த நுகர்வுகள் அதே பரவசத்தோடு தருவதில்லை அல்லவா?
பொதுவாக, மனிதம் திருப்தியை அடைகிறது. திருப்தியில் நிலைப்பதில்லை. நெடுநேரம் வரிசையில் நின்று கர்ப்பக்ருகத்தை சமீபித்த ஒருவன், சுவாமி சிலையை கண்டதும் ஏற்ப்படும் பரவசம் திருப்தி தான். அவனையே 'ஜெரகண்டி'என்று துரத்தாமல் ஆண்டவன் எதிரிலேயே நாள்முழுதும் நிற்கவிட்டால், அடைந்த திருப்தியில் லயிப்பானா? சலிப்பானா?

இறையோ,இயற்கையோ அல்லது இலக்கியமோ அள்ளி அள்ளித்தான் தருகிறது. ஆனந்தத்தையும் அனுபவத்தையும் அருவியாய் பொழிகிறது. நாம் நமக்கு வாய்த்ததிற்கேற்ப அருவியில் பிடித்துக் கொள்கிறோம்... நான் சிறு அகலிலும், நீங்கள் கொஞ்சம் பெரிய பானையிலும்.. அளவில் தான் வித்தியாசம்!

V Mawley said...

peace of mind -ஐ த்ருப்தி
என்று தமிழ் படுத்தியதில் எனக்கே த்ருப்தி இல்லை !it is something far more than that ... "ஆத்ம ஸ்வரூபானந்த அனுசந்தானம் " என்று sri sankara baghvathpaathaaL குறிப்பிடுவது ..J K குறிப்பிடும்
"choiceless awareness " இதற்கு எல்லையே கிடையாது ..
மாலி

ஜீவி said...

@ மோகன்ஜி

//நான் சிறு அகலிலும், நீங்கள் கொஞ்சம் பெரிய பானையிலும்.. அளவில் தான் வித்தியாசம்!//

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அன்னியமாச்சு
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்;
போகும் நதியில் எது என் நீர்?

-- என்னும் சுகுமாரனின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது, மோகன்ஜி

திருப்தி அடைவது என்பது வெளியிலிருந்து பெறப்படுவதின் உள் நிகழ்வு.

சிறு அகலிலிருந்து பெரிய பானைக்கா, அல்லது பெரிய பானையிலிருந்து சிறு அகலுக்கா என்பது தான் கேள்வி.

நீடித்த திருப்தி தன்னுள்ளேயே அதற்கான குறுக்கலைக் கொண்டிருக்கிறது என்கிறீர்கள். இயல்பாகவே அப்படியிருந்தால் நிம்மதி. இயல்பு அப்படியில்லாது போயினும், குறுக்கிக் கொள்ளலை நம் இயல்பாகக் கொண்டால் இன்னும் நிம்மதி. ஜெயகாந்தன் சொன்ன, 'திருப்தி அடைந்தவனுக்கும் செத்துப் போனவனுக்கும் வித்தியாசமில்லை' என்பதை நம்முள் மாற்றிய அனுபவமாக மாற்றிக் கொள்ளலாம், இல்லையா?

எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் நியாயமான அடுத்த கேள்வி.

ஜீவி said...

@ Mawley

//peace of mind -ஐ த்ருப்தி
என்று தமிழ் படுத்தியதில் எனக்கே த்ருப்தி இல்லை//

ஹஹ்ஹஹ்ஹா.. உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள் என்பதைத் தாண்டி இந்த திருப்தி கொள்ளல் என்பது எப்படியெல்லாம் நம்மை அலைக்கழிக்கிறது, பார்த்தீர்களா.நீங்கள் பரவாயில்லை, மூலச்சொல்லின் அனுப்வம் உங்களுக்கு வாய்த்திருப்பினும், அதன் மொழிமாற்றம் தான் திருப்தி தரவில்லை என்கிறீர்கள், இல்லையா?..

இப்பொழுது awarenessக்கான சாய்ஸ்களை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். யாருக்கு வேண்டுமானலும் அவரவர் அனுபவத்தில் சாய்ஸ் இல்லாது போகலாம். அந்த அவர்களின் அனுபவத்தில் அதைச் சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டு நமக்கு என்னன்ன சாய்ஸ் இருக்குன்னு பார்க்கணும்.

கோமதி அரசு said...

"திருப்தி அடைந்து விட்டவனுக்கும் செத்துப் போனவனுக்கும் வித்தியாசம் இல்லை" என்று எழுதி த. ஜெயகாந்தன் எனக் கையெழுத்திட்டு என்னிடம் நீட்டினார்.//

போதும் என்று திருப்தி அடைந்து விட்டால் மேலும் மேலும் முன்னேறி செல்லமுடியாது என்று சொல்லி இருப்பார் ஜெயகாந்தன் அவர்கள்.
புதிதாக கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால், சிந்தனையை தூண்டி விட்டுக் கொண்டே இருந்தால் புத்தியை தீட்டிக் கொண்டே இருந்தால் உயிர்ப்புடன் இருக்க முடியும் என்று சொல்லி இருப்பார் இல்லையா?

ஜீவி said...

@ கோமதி அரசு

எழுத்துவதில் திருப்தி அடைதல் பற்றி அவர் சொல்லியிருக்கிறார். ஒரு நேரத்தில் எழுதுவதை தானாகவே அவர் நிறுத்திக் கொண்டார். அதனால் திருப்தி அடைந்து விட்டதால் அவர் நிறுத்திக் கொண்டார் என்று சொல்ல முடியுமா?.. இல்லை. நிச்சயமாக இல்லை. முன்னேறுவதையெல்லாம் பற்றி நினைக்கக் கூடிய வணிக எழுத்தாள்ரும் இல்லை அவர். எழுதுவதை நிறுத்திக் கொண்ட பொழுது என்ன எழுத வேண்டுமோ அதைப் பேசிக் கொண்டிருந்தார்.

காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்த வேகத்தில் பத்திரிகை எழுத்து என்பது எப்படி மாறியிருக்கிறது என்பது உங்களுக்கேத் தெரியவும். அதைத் தீர்க்கமாக நமக்கு முன்னாலேயே கணித்து விட்டவர் அவர். 'இது போதும்' என்று அதனால் தான் தானாகவே நிறுத்திக் கொண்டார். பேச்சாலும், செயலாலும், எழுத்தாலும் பாரதி வழி வந்தவர் அவர். அப்படிப்பட்டவர்களால் அப்படித்தான் இருக்க முடியும்.

கோமதி அரசு said...

உண்மைதான் நீங்கள் சொல்வது.

Related Posts with Thumbnails