மின் நூல்

Wednesday, April 22, 2009

ஆத்மாவைத் தேடி....41

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

41. மனம் என்பது மாயையா?

மனவியல் அறிஞர் மேகநாதன் மேடையேறும் போது படு உற்சாகத்தோடு காணப்பட்டார். 'உலகம் பிறந்தது எனக்காக' என்று உரத்த குரலில் முழக்கமிடுவது போலிருந்தது அவரது ஒவ்வொரு அசைவும். மைக்கைச் சரிபடுத்திக்கொண்டு அவர் பேச ஆரம்பிக்கையில் எல்லோரிடமும் அவரது உற்சாக்ம் தொற்றிக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். லேசாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார் அவர்.

" 'இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம் கேட்கின்றேன்..' என்பார் கவியரசர் கண்ணதாசன். இரண்டு மட்டுமல்லை; ஒவ்வொருவருக்கும் மேலும் கூடுதலாக ஒரு மனமும் சேர்த்து மூன்று மனமே இருகின்றன என்பது அதிசயமான ஓர் உண்மை.



மனம் என்பது உடலின் ஓர் உறுப்பு அல்ல. பரிசோதனைகளிலோ அல்லது பார்வையிலோ தட்டுபடும் ஒரு உறுப்பாய் இருப்பின் உயிரியல் அறிஞர்
உலகநாதன் அவர்கள் அந்த மனத்தைப் பற்றிய நிறைய தகவல்களையும் அதன் அமைப்பு பற்றிய விவரங்களையும் சொல்லியிருப்பார்.


"மனம் என்பது உருவமில்லாத அருவமா அதாவது கண்ணுக்குப் புலப்படாமலிருக்கும் உருவமற்ற ஒரு வஸ்துவா என்றால் இதில் எதுவுமில்லை.


"கண் என்கிற உறுப்பு இருப்பதினால் பார்ப்பது என்கிற செயலும், காது என்கிற உறுப்பினால் கேட்பதான ஒரு காரியமும், மூக்கு இருப்பதினால் நுகர்வது என்கிற செயலும் செயலாற்ற முடிவதாகச் சொல்கிறோம். இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் காரியார்த்தமாக ஒரு விளக்கம் கொடுக்கலாம்.


"பொதுவாக்ச் சொல்கிற வழக்கின்படி நினைத்தல், சிந்தித்தல் போன்ற செயல்களை மனத்தின் செயல்பாடுகளாகச் சொல்கிறோம். உயிரியல் சாத்திரப்படி மனம் என்கிற ஒரு உறுப்பு உடலின் உள்ளேயோ அல்லது வெளியேயோ இல்லாவிடினும், 'நினைத்தல்' 'சிந்தித்தல்' போன்றவற்றை மனத்தின் வேலையாகச் சொல்கிறோம்.


"தமிழில் 'மனம்' என்றும், ஆங்கிலத்தில் 'MIND' என்றும் புறப்பார்வைக்குத் தட்டுப்படாத ஒரு உறுப்பிற்குப் பெயரும் கொடுத்திருக்கிறோம்! 'MIND' என்று தனிப்பெயர் கொடுத்து அழைத்தாலும், 'MIND'ன் செயல்களான 'சிந்தித்தல்' 'நினைத்தல்' போனற காரியங்களை ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடாக உயிரியல் விஞ்ஞானத்தில் கொண்டுள்ளோம்.



இந்த இடத்தில், "நான் சொல்வது சரிதானே?" என்று நிச்சயித்துக் கொள்ளும் நோக்கில் உளவியல் பேராசிரியர் உலகநாதனை நோக்கி, மனவியல் அறிஞர் மேகநாதன் கேட்க, "மிகவும் சரியே" என்றார் உலகநாதன்.


"மிக்க நன்றி---" என்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார் மேகநாதன்.


"மூளையின் மூன்று பகுதிகளைப் பற்றி உலகநாதன் அவர்கள் குறிப்புகள் கொடுக்கும் பொழுது மிக உன்னிப்பாக உங்களைப் போலவே நானும் கவனித்துக் கொண்டிருந்தேன். மூளையைக் குறிப்பிடும் வார்த்தையான 'CEREBELLUM' என்கிற சொல் இலத்தின் மொழிச் சொல். 'CEREBELLUM' என்று அழைக்கப்படுகின்ற சிறுமூளை குறித்தும், 'MEDULLA OBLONGATA' என்கிற முகுளத்தைப் பற்றியும் உயிரியல் அறிஞர் உலகநாதன் அவர்கள் நிறையவே குறிப்பிட்டார்கள்.


"தறியில் நெயத மாதிரி பூரா உடம்பிலும் நரம்புக்கற்றைகள் வேண்டுகிற இடங்களில் விதம்விதமாக நீண்டும், கிளைப்பரப்பியும், முடிச்சிட்டும் விரவிக்கிடக்கின்றன. இந்த நரம்புப் போக்குகளின் ஒருபுற முனை உடல் உறுப்புகளைச் சுற்றி பிணைக்கப்பட்டிருக்கின்றன என்றால் அவற்றின் மறுமுனை மூளையோடு தொடர்பாய் இருக்கிறது. இது மனமும் உடலும் 'தேமே'னென்று இருக்கும் நிலை.

"ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். நாம் பயணிக்க வேண்டிய பேருந்து வந்ததும் பாய்ந்து செல்வது செயல்படும் நிலை. சும்மா இருந்தவனை செயல்பட வைத்த சக்தி எது?..

"தேவையான பேருந்தின் இலக்கத்தைப் பார்த்தது கண்கள். பார்த்ததைப் படித்து மூளைக்குத் தெரிவித்ததை கூட விட்டுவிடுங்கள், இதுதான் பயணிக்க வேண்டிய பேருந்து என்று 'நினைவில்' உறைக்க வைத்த இந்த 'நினைவை' மனம் என்று சொல்லலாமா?..

"போட்டியில் வென்று பெற்ற பரிசுக் கோப்பையை பெருமையுடன் காட்டிய மகனைத் தடவிக்கொடுத்து மகிழ்ந்தது, 'மனத்தின் மகிழ்வு' என்று கொள்ளலாமா?..


"துன்பத்தில் துவண்டு போன அவலத்தை, அந்த அவஸ்த்தையை மனத்தின் பரிதவிப்பு என்று புரிந்து கொள்ளலாமா?...

"உயிரியலாளர்கள் எவ்வளவோ சொல்லலாம்.. தண்டுவட, கபால நரம்புகளில் உணர்வு இழைகள், தண்டுவட--தலாமஸ் வழிப்போக்கு, பசிகுலஸ் கிரசிலிஸ் மற்றும் பசிகுலஸ க்யூனியேடஸ் அங்கிருக்கும் நூக்ளியஸ்கள் என்று உடம்புக்குள்ளே ஏகப்பட்ட சமாசாரங்கள் இருக்கின்றன.

"ஆயிரம் இருந்தும், உடம்புக்குள் தட்டுப்படும் இவற்றையெல்லாம் இயக்குவது 'மனம்' என்னும் மாயசக்தியா?.. இல்லை, அப்படி ஒன்று இருப்பதாக 'நினைத்து'க்கொள்வதே மாயையா?..

"இந்த அடிப்படை கேள்விகள்தாம் மனவியலைப் படித்துக் கற்க வேண்டும் என்னும் அடங்கா ஆவலை என்னுள் ஏற்படுத்தியது. அந்த ஆவலின் தூண்டுதலின் பிரம்பிப்பில் நான் பரவசப்பட்டதையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்" என்று அவையை ஒருமுறை சுற்றிப்பார்த்து மேலும் தொடர யத்தனித்தார் மனவியல் அறிஞர் மேகநாதன்.

(தேடல் தொடரும்)


Tuesday, April 14, 2009

ஆத்மாவைத் தேடி....40



ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

40. இறைவனின் கருணை

சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடில் ஒரு பேராசிரியர் இருந்தார்; தங்கமானவர். அதிரப் பேசத் தெரியாதவர். மாலை 7 மணிக்கு மேல் ஒரு மணிநேரம் அவரிடம் சிவராமன் பாடம் கேட்டான். காலை ஆறிலிருந்து ஏழு வரை தி.நகரில் கிருஷ்ணவேணி தியேட்டர் பின்புறச் சந்தில் இன்னொரு பேராசிரியாரிடம் எலெக்ட்ரானிக்ஸ் வகுப்பு.


மற்றபடி மவுண்ட் ரோடு பிரிட்டிஷ் லெப்ரரியும் தரமணி கல்விச்சாலைகளின் நூலகங்களும் தாம் சிவராமனின் அறிவு தாகத்திற்கு அட்சய பாத்திரங்களா யிருந்தன.

விவேகானந்தரின் உற்சாகமூட்டும் எழுத்துக்கள், Body Power, லீடர்ஷிப் குவாலிட்டிஸ், Mind Power, காம்பெடிட்டிவ் சக்ஸஸ் ரெவ்யூ -- என்று புரட்டிப் போட்டமாதிரி அசுர வேகத்தில் அவனது சிந்தனையோட்டமும், வாழ்க்கை முறையும் நிர்ணயித்த குறிக்கோளை நோக்கிய லட்சியப் பயணமாயிற்று. சாந்தி தியேட்டர் அருகில் மிகக்குறைந்த கட்டணத்தில் ஜெராக்ஸ் எடுத்துத் தருவார்கள். சந்தா கட்டி வாங்கி வரும் லைப்ரரி எலெக்ட்ரானிக்ஸ் புத்தகங்களின் அதிமுக்கிய பகுதிகள் பலவற்றை அங்கு ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வான். பிறகு பகுதிபகுதியாக பைண்டிங். எல்லாம் முடிகையில் நேர்த்தியான புத்தகக் கருவூலமாகியிருக்கும். நாளாவட்டத்தில் இவனைப் போலவே பலரை அங்கு சந்தித்து நட்பு வட்டம் பெரிதாகியது. எல்லாருக்குமே ஒரே மாதிரியான இலட்சிய வெறி.


நாலே வருடங்கள்; ஓடிப்போனதே தெரியவில்லை. அரியர்ஸ் வைக்காமல் ஒவ்வொரு வருடத்தையும் தாண்டி வந்ததின் அருமை இறுதி ஆண்டில் தெரிந்தது.

முதலில் AMIE; அப்புறம் IETE என்று இரண்டிலும் பறித்த வெற்றிக்கனி சிவராமனின் மடியில் வந்து விழுந்தது. ஒன்றுக்கு இரண்டாக இரண்டு பொறியாளர் பட்டங்கள்!


AMIE தேர்வு முடிவு தெரிந்த அன்று பறந்து வந்து வீடு சேர்ந்த உணர்வு இருந்தது. சுவாமி படத்திற்கு பக்கத்தில் அம்மாவையும் அப்பாவையும் நிறுத்தி வைத்து, விழுந்து நமஸ்கரிக்கையில், அவர்கள் கால்களைக் கட்டிக்கொண்டு கதறத் தோன்றியது; கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டதில் கண்ணீர் பெருகியது. கால் நனைந்த ஜில்லிப்பில் திடுக்குற்று மைந்தனைக் குனிந்து வாரி எடுத்து அணைத்துக் கொண்ட தந்தையின் நெஞ்சில் பெருமிதம் பொங்கியது.


இரண்டு பொறியாளர் தேர்வுகளுக்குமே, எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங் பாடம் தான் எடுத்திருந்தான். ஒரே பாடத் தேர்வு, இரண்டு பொறியாளர் தேர்வுகளையும் மிகப்பிரமாதமாக சமாளிக்க சக்தி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். "தனித்தனியே ஒரே பொறியாளர் பட்டத்திற்கு வெவ்வேறான இரண்டு தேர்வுகள் ஏன் எழுதுகிறாய்?" என்று கேட்டவர்களுக்குப் படிக்கிற காலத்தில் சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.


காரண காரியம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை, அல்லவா?... இரண்டு தேர்வுகள் என்று இறைவன் வகுத்த ஏற்பாட்டின் சூட்சுமம் பின்னால் தெரிகையில் சிவராமன் நெகிழ்ந்து போய் விட்டான்.


பொறியாளர் மேற்படிப்புக்கான ME படிப்பிற்காக சிவராமன் விண்ணப்பித்திருந்தான். பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான பொழுது சிவராமன் வானத்தில் மிதந்தான். அவன் விண்ணப்பித்திருந்த ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படிப்பிற்கே அவனுக்குத் தேர்வாகியிருந்தது. 'உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ?' என்று யாரோ வந்து அவன் காதில் கிசுகிசுப்பது போலிருந்தது.


ஒரே மாதத்தில் கவுன்சிலிங்! பட்டப்படிப்பின் தகுதி சான்றிதழ் சமர்ப்பித்து பட்ட மேற்படிப்புக்காக அத்தாட்சிக் கடிதம் பெறவேண்டியது தான்!.. பட்டப்படிப்பின் சான்றிதழ்?..


AMIE தேர்வுகளின் சென்னைப்பிரிவு அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததில் தற்காலிக சான்றிதழ் வருவதற்கே இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலாகும் என்கிற சேதி கேட்டு இடிந்து போய்விட்டான் சிவராமன்... நுழைவுத் தேர்வின் வெற்றி வெறும் கானல் நீராகி விடுமோ என்று கண்கள் கலங்கின.


கவுன்சிலிங் நாள் நெருங்க நெருங்க சிவராமன் தளர்ந்து போய்விட்டான். கைத்துப் போன வறட்சியில் எதுவும் பிடிக்கவில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தானானால், கண்கள் எழுத்துக்களில் படியுமே தவிர நெஞ்சம் தேற்றுவார் அற்று பரிதவிக்கும். "இறைவா, இதுக்கு ஒரு வழி சொல்லு" என்று முறையிடுகையில் மனசு ஒடிந்து போய்விடும்.


கதவு தட்டிய ஒலி அவனுக்குக் கேட்டிருக்க வேண்டும். அதனால் தான் கிழக்கு வானில் கீறித்தெறித்த விண்மீனாய் அந்த அதிசயம் நடந்தது.
அடுத்த நாள் ரிஜிஸ்டர் தபாலில் தில்லியிலிருந்து IETE -யின் Provisional Certificate வந்த உறையை தபால்காரரிடம் பெற்றுக் கொள்கையில் கைகள் நடுங்கின. கையெழுத்திடுகையில் கண்கள் குளமாயின.


வாங்கிய கவரை பூஜை அறைக்கு எடுத்து வந்து கணபதியின் பாதக் கமலங்களில் வைத்து மனசார விழுந்து நமஸ்கரித்தான். புது உற்சாகத்தோடு எழுந்தவனுக்கு வானமே வசப்பட்ட மாதிரி இருந்தது. 'இதுக்குத் தான் இரண்டு பட்ட படிப்புகளுக்குத் தேர்வுகள் எழுதினேனோ? இறைவா, என்னே உன் கருணை?' என்று குழந்தையாய் குழறினான்.


குரோம்பேட்டை M.I.T.--யில் M.E. படிக்க சிவராமன் ராமசுப்புவுக்கு மேற்பட்டப் படிப்பு கவுன்சிலிங் அனுமதிக் கடிதம் வழங்கியது.

(தேடல் தொடரும்)


Wednesday, April 1, 2009

ஆத்மாவைத் தேடி....39

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

39. நினைக்க நினைக்க ஆச்சரியம்.

திய உணவு இடைவெளிக்குப் பிறகு வெகு சீக்கிரத்தில் அரங்கம் நிறைந்து விட்டது. சிறு சிணுங்கல் கூட பெரிய ஓசையாகக் கேட்கும் அளவில் அரங்கே நிசப்பதமாக இருந்தது.

அந்த அமைதியில் உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதனின் குரல் மிகத் தெளிவாக ஒருவகையான இலயத்துடன் வெளிப்பட்டது.

"நரம்பு மண்டலத்தின் முக்கியமான பகுதி தண்டுவடம். தென்னை மட்டை ஒன்றை குப்புறப் போட்டால் இருக்கும் தோற்றத்தில் தண்டுவடம் முதுகின் பின்பக்கம் அமைந்துள்ளது. உங்கள் சுண்டுவிரலை நிமிர்த்திப் பாருங்கள்; அந்த அளவே உங்கள் தண்டுவடத்தின் கனம் இருக்கும்.

"தலைப்பகுதி முகுளத்துடன் தொடர்பு கொண்டதாய், வால்பகுதி இரண்டாவது கீழ் முதுகு முள்ளெலும்பின் மேற்பரப்பில் முடிகிறது. தண்டுவடத்தின் முன்புறமும் சரி, பின்புறமும் சரி மேலிருந்து கீழ்வரை இருக்கும் பிளவு அதை இரண்டு பிரிவுகளாய்ப் பிரிக்கிறது. மத்தியில் கால்வாய் போன்ற அமைப்பு. காலவாயைச் சுற்றி சாம்பல் நிறத்திலும், வெளிப்புறம் வெண்மை நிறத்திலும் படர்ந்து காணப்படும். சாம்பல் நிறத்திற்குப் பொறுப்பு நியூரோன்கள் என்றால், வெண்மைக்கு அக்ஸன்கள். உணர்ச்சி நரம்புகளின் நியோரோன்கள், தண்டுவடத்தின் வெண்மைப் பகுதியில் இணையும். சாம்பல் நிற நியூரோன்களிலிருந்து செய்கை நரம்புகள் வெளிப்படும்.

"மூளையிலிருந்து தசைகளுக்கு ஆணைகள், உடற்பகுதிகளிலிருந்து மூளைக்கு உணர்ச்சிக் கடத்தல்கள் என்று தண்டுவடம் மூளைக்கும் தசைப்பகுதிகளுக்கும் இணைப்புப் பாலமாக இருந்து செயல்படுகிறது. இன்னொன்று. தண்டுவடத்தில் நரம்பு ஸெல்களின் அமைப்பு உண்டு. நமது யத்தனமில்லாமல் நடக்கும் அனிச்சை செயல்களுக்கு இந்த நரம்பு ஸெல்களே ஆதாரமாக இருக்கிறது.

"தண்டுவடம் மூளைப் பகுதியில் முடியும் இடத்தில் தான் முகுளத்தின் ராஜாங்கம் நடக்கிறது. இதயம், நுரையீரல், இரைப்பை, குடல்கள்--இவற்றின் இயக்கம், அந்த இயக்கங்களுக்கான உத்திரவுகள் என்று சகலமும் முகுளப் பகுதியைச் சார்ந்துள்ளன. ஆக முகுளம் சேதம் அடைந்தாலும் கேம் ஓவர்.

"முகுளத்திற்கு மேலே பான்ஸ் என்று ஒரு சமாசாரம். முகுளத்திலும், பான்ஸிலும் தண்டுவடத்தைப் போன்றே சாம்பல், வெண்மை பொருட்கள். இவற்றில் நூக்ளியஸ் என்னும் ஸெல்களின் திரட்சி உண்டு. இந்த ஸெல்களின் துணுக்குகள் மூளையிலிருந்து வெளிப்போந்து, கபால நரம்புகளாக மாற்றம் கொள்கின்றன. கபால நரம்புகளின் நூக்ளியஸ்களை, மூளையோடும் தண்டுவடத்தோடும் இணைக்கும் நரம்பு இழைகளை இங்கே பார்க்கலாம். நரம்பு உந்துதலுக்கான கடத்துதலையும் அனிச்சைப் பணிகளையும் கொண்டுள்ள முகுளத்தின் நீட்சியே தண்டுவடம் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

"இதய நடவடிக்கை, மூச்சுவிடுதல் போன்ற ஜீவாதார முக்கியத்துவம் கொண்ட கேந்திரங்கள் முகுளத்தில் உள்ளன. இதய நடவடிக்கை கேந்திரம், வேகஸ் நரம்பு வழியாக உந்துதல்களை இதயத்துக்கு அனுப்பி, இதயத்தின் மீது மட்டுப்படுத்தும் விளைவை ஏற்படுத்துகிறது. பரிவு நரம்பு வழியாக இதயத்துக்கு கடத்தப்பட்ட உந்துதல்கள் இதயப்பணிகளைத் துரிதப் படுத்துகின்றன. முகுளமும், பான்ஸும் நேரடியாகவும், தண்டுவட கேந்திரங்கள் மூலமும் உயிரினத்தின் பல பணிகளை ஒருங்கிணைந்து கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வாத பொருட்கள் குடலினுள்ளே போய்விட்டால் ஏற்படும் 'உவ்வே' இது மிகச் சரியாக செரிமானப் பாதையில் செயல்படும் வேகத்தினால் தான்.

"இன்பம், துன்பம் எல்லாமே கோடிக்கணக்கான நியூரோன்கள் ஒத்த ஏற்பாட்டுடன் செயல்படுதலின் விளைவு என்று கூட ஒரு சாராரின் அபிப்ராயம. யோக சாஸ்திர செய்திகளைச் சொல்லிப் பின்னர் உரையாற்ற இருக்கின்ற மேகநாதன் அவர்கள், முதுகெலும்பினுள் நடுவில் செல்லும் ஸூஷூம்னா நாடி பற்றியும், ஆக்ஞா சக்கரங்களைப் பற்றியும் சொல்ல இருப்பதாகவும், 'நீங்கள் முகுளம், தண்டுவட உயிரியல் குறிப்புகளை உங்கள் உரையில் கொடுத்தால் நலமாக இருக்கும்' என்று கேட்டுக் கொண்டார். அதன்படி ஓரளவு அவர் சொன்னதைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.

இறைவன் இருக்கின்றான்

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

உடலின் ஒவ்வொரு உறுப்பும், சிறு தசைமடிப்பு கூட நமது தேவைக்கு ஈடுகொடுக்கிற மாதிரி அல்லது அதன் உபயோகத்தைக் கருத்தில் கொண்டு பார்த்துப் பார்த்து இறைவன் படைத்த மாதிரி இருக்கிறது. முழுசாக முதல் மனித உருவம் தலையெடுத்து இத்தனை காலம் கழித்து இப்பொழுது வேண்டுமானால் என்னைப் போன்ற உயிரியல் படித்தவர்கள் இதே கருத்தை வேறுமாதிரி சொல்லலாம். அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி உடல் உறுப்புகள் உருவாகியிருக்கின்றன என்று.

அதாவது தேவை முதலில்; அதற்கேற்ப உறுப்பு வடிவமெடுத்தது பின்னால் என்று. உழைப்பின் தேவைக்கான பரிணாம வளர்ச்சியே உடல் உறுப்புகள் என்று வரையறுத்த மாதிரி சொல்வார்கள்.

ஆனால் அறிவியலின் இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொரு உறுப்பின் படைப்பு நேர்த்தியையும், ரகசியத்தையும், அதன் மகத்துவத்தையும் மனிதன் புரிந்து கொண்டு விட்டான். படைத்தவன் படைத்த அறிவின் துணை கொண்டு என்றாலும் சரியே.

ஒரு உறுப்பு தவிர. அந்த மகத்தான உடல் உறுப்பின் பெயர் குடல்வால். ( Vermiform Appendix) பெருங்குடல் துவக்கத்தில், சீகத்தின் அடியில் இருக்கும் வால் போன்ற பகுதி. உத்தேசமாக 7 செ.மீ. நீளம் 1 செ.மீ. தடிமன் இருக்கலாம். இந்த உறுப்பு எதற்காக வயிற்றில் இருக்கிறது, இதனால் என்ன உபயோகம் என்று இதுவரை யாருக்கும் கண்டுபிடித்துச் சொல்ல தெரியவில்லை. இந்த வாலினுள் ஏதாவது குடல் பூச்சியோ, கால்சியம் துகளோ தப்பித் தவறி நுழைந்து விடின், வந்தது ஆபத்து!

வலியும் வேதனையும் புரட்டி எடுத்து, குடல்வால் அழற்சி (Appendicitis) ஏற்பட்டு அறுவை சிகித்சை வரை கொண்டு போய் விட்டுவிடலாம்!

மருத்துவ உலகின் இப்போதைய கணிப்பு, இந்த உறுப்பு தேவையே இல்லாத ஒரு சமாசாரம் என்பது தான். அதாவது இதன் தேவை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்பது தான். இதனால் தேவைக்கேற்பவான உறுப்பு வளர்ச்சி என்கிற வாதம் பொய்த்துப் போகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வாலின் அவசியத்தை கண்டறிந்து இது படைக்கப்பட்டதின் ரகசியத்தை நிரூபிப்பவர்க்கு உயிரியல் உலகின் மிக உயரிய மரியாதை நிச்சயம் என்பது மட்டும் நிச்சயம்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails