மின் நூல்

Wednesday, February 28, 2018

பாரதியார் கதை -- 12

                                             அத்தியாயம்-- 12

பாண்டிச்சேரியின் நகர அமைப்பே அற்புதமானது.  மிகப் பெரிய சதுரத்தில்  கொஞ்சம் கூட கோணலில்லாத குறுக்கும்  நெடுக்குமாக நேர்கோடுகள் போட்ட மாதிரியான  வீதி அமைப்பு.  குறுக்குக் கோட்டின் முடிவு கடற்கரையில் முடிகிற மாதிரி வடிவமைக்கப் பட்ட நேர்த்தி.

பாரதியை புதுவைக்கு அனுப்பி வைத்து விட்டு மண்டயம் சீனிவாச்சாரியாரும் பின்னாடியே புதுவைக்கு வந்து விட்டார்.  டூப்ளே வீதியில் (ரூ துய்ப்ளெக்ஸ்) இந்தியா பத்திரிகை வெளிவருவதற்காக பார்த்து வைத்திருந்த இடத்தில்  அச்சகமும், அலுவலகமும் அமைந்தன.  இந்த நேரத்தில் தான் அது நடந்தது.  பாரதி புதுவைக்கு தப்பிய விவரங்கள் அத்தனையும் தெரிந்திருந்தும்  பிரிட்டிஷ் இந்தியாவில் பாரதிக்கு வாரண்டு  பிறப்பிக்கப்  பட்டது.
                           1
பாரதி புதுவைக்குத் தப்பித்தது கூட தெரிந்திருந்தும் 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?  என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?' என்ற  கண்ணன் பாட்டில் வரும் வரிகள் தாம் பிரிட்டிஷாரின் கண்களை உறுத்தியிருக்கின்றன.  'எங்கள் அடிமையின் மோகம்'  என்ற வரிகள் பொது ஜனங்களுக்கும் கோபமேற்படுத்தியதாக வ.ரா. குறிப்பிடுவார்.   இந்தக் கோபத்திற்காக சாமர்த்தியமாக தூபம் போடப்பட்டதா என்று தெரியவில்லை.  எது எப்படியோ  ஜனங்களின்  அதிருப்தியும் கலந்து  கனிந்து வரும் சாதகமான  சூழ்நிலையில் பாரதிக்கும் பிரித்தானிய இந்தியாவில்
பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது.                                                                                    2                                             

இந்த சமயத்தில் பாரதியார்  புதுவையில்  தாம் குடியிருந்த  வீட்டை சில காரணங்களுக்காக காலி செய்து விட்டு, ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியில் இருந்த விளக்கெண்ணைய் செட்டியார் வீட்டுக்கு குடி  போகிறார்.   இந்த தங்கமான செட்டியாரைப்  பற்றி நிறைய சொல்ல வேண்டும்.

பாரதியாருடன் சேர்ந்து சில காலம் புதுவையில் வாசம் செய்த  வ.ரா. சொல்லித் தான் வி.செட்டியாரைப் பற்றியதான அறிமுகம் ஓரளவுக்காவது நமக்குக் கிடைக்கிறது.  வ.ரா. செட்டியார் பற்றிச் சொல்லியிருப்பதை என் வார்த்தைகளில் சொன்னால் செட்டியாரின்  குணாதிசியங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் வ.ரா. செட்டியார் பற்றிச்சொல்லியிருப்பதை வரி வரி மாற்றமில்லாமல் அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்:

* 'நானறிந்து செட்டியார் பாரதியாரை வாடகைப் பணம் கேட்டதே இல்லை. செட்டியார் வருவார், பாரதியார் பாடிக்  கொண்டிருக்கும் பாட்டைக்  கேட்பார்.   பிறகு மெளனமாக  வெளியே போவார்.  பாரதியார் பேச்சுக் கொடுத்தாலொழிய செட்டியார்  தாமாக ஒன்றும் பேச மாட்டார்.  செட்டியார் வருவார், நிற்பார், போவார்.   வீட்டுக்குச் சொந்தக்காரர் வடகைக்காக, அதுவும் ஆறுமாத வாடகைக்காக, கால் கடுக்க நின்று கொண்டிருப்பது அதிசயமல்லவா?..

'விளக்கெண்ணை  செட்டியார் வீடு சங்கப்பலகை. கான மந்திரம், அபய  விடுதி,  சுதந்திர உணர்ச்சிக் களஞ்சியம்,  அன்னதான சத்திரம்,  மோட்ச சாதன வீடு, ஞானோபதேச அரங்கம்.  இத்தனைக் காரியங்களும் அங்கே நடபெற்றன என்று சொல்வது மிகையாகாது.  இவைகள் நடைபெறும் காலங்களில், பாரதியார் எல்லாவற்றிற்கும் சாசுவதத் தலைவர்.  வோட் எடுத்து தலைமைப்  பதவி பெறவில்லை.  மணித்திரு நாட்டின் தவப்புதல்வர் அவர் என்ற உரிமை ஒன்றே போதாதா?'  என்று விளக்கெண்ணை செட்டியார் வீட்டில் நடக்கும் வைபவங்களை விவரிக்கிறார் வ.ரா.

இதற்கிடையில் பிரிட்டிஷ் இந்தியாவில் என்னன்ன நடந்தன என்பதையும் பார்த்து விடலாம்.
                                                                                                                                         4
பாரதியாரின் அருமை நண்பர்  சுரேந்திரநாத் ஆர்யாவைப் பற்றி ஏற்கனவே இந்தத் தொடரில் பிரஸ்தாபித்திருக்கிறோம்.  தனகோடி ராஜூ நாயுடு என்பாரின் திருமகனார்.   இவர் 1897-ல் வங்கம் சென்ற பொழுது வங்கத்து பிரபல புரட்சியாளர் சுரேந்திர நாத் பானர்ஜியின் தீவிர நடவடிக்கைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு  கொள்கை வயப்பட்ட அன்பால்  தன் பெயரை சுரேந்திர நாத் ஆர்யா என்று மாற்றிக்  கொள்கிறார்.  1906-வரை வங்கத்தில் பல புரட்சிகர நடவடிக்கைகளில் பயிற்சி பெற்று சென்னை திரும்பிய போது தான் பாரதியாரின் மேல் பேரன்பு கொண்டு அவர் நட்பு வட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார்.  15-8-1908-ல் எஸ்.என். திருமலாச்சாரியார் 'இந்தியா' பத்திரிகையின்  ஆசிரியராகவும் உரிமையாளராகவும் தம்மை பதிவு செய்து கொண்ட மூன்றே நாட்கள் கடந்த நிலையில்  18-8-1908-ல் சுரேந்திரநாத் ஆர்யா ராஜதுரோக வழக்கொன்றில் மாட்டப்பட்டு கைதாகிறார்.  ஆறு ஆண்டுகள் கடுங்காவல்  சிறைதண்டனை விதிக்கப்படுகிறார்.  இப்படியான ஒரு கைது பாரதிக்கும் நீடிக்கும் என்று தான் நண்பர்கள் கூடி பாரதியாரை பிரன்ஞ்  ஆதிக்கத்திலிருந்த புதுவைக்கு அனுப்பி  வைக்க  தீர்மானித்தனர்.    சென்னையிலிருந்து  கடையத்திற்குச் சென்று கருவுற்றிருந்த தன் மனைவியை  கடையத்தில் விட்டு விட்டு பாரதி  புதுவை மண்ணை 26-8-1908-ல் மிதிக்கிறான்.

பாரதியாரை  புதுவைக்கு அனுப்பி வைத்து  இக்கட்டான நேரத்தில் 'இந்தியா' பத்திரிகையின் சகல பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்வது ஒரு  புறம் இருக்கட்டும்,   எந்த நடவடிக்கை தன் மேல் பாய்ந்தாலும் அதை   எதிர்கொள்ள துணிச்சலாய் தயாராகிய திருமலாச்சாரியாரின் தைரியம் இந்திய பத்திரிகை வரலாற்றில் தன்னேரில்லாத தைரியம்.  அதுவும் பாரதியாரை பத்திரமாக புதுவைக்கு அனுப்பி வைத்த பின் தனியொருவராக சமாளித்த தைரியம்.                                                                                                              3

கல்கத்தாவில் பிறந்து லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் உயர் கல்வி பெற்ற ஸ்ரீஅரவிந்தர் தாயகம் திரும்பியதும் 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழக்கமிட்ட பாலகங்காதர திலகரின் போராட்ட யுக்திகளால் கவரப்பெற்று திலகருடன் கைகோர்த்து சுதந்திரப் போராட்டங்களில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்கிறார்.  குஜராத் மாநில வதோதராவில்      சுதந்திரத்திற்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்.  பின் கல்கத்தா திரும்பியவர் 'வந்தேமாதரம்' என்று பெயர் சூட்டிய நாளிதழைத் தோற்றுவிக்கிறார்.    நாட்டு சுதந்திரத்திற்கான வேள்வியில் அனல் கக்கும் அரவிந்தரின் கட்டுரைகள் பல பிரிட்டிஷாருக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
அரவிந்தரை ஒடுக்க வேண்டும் என்று தீர்மானித்த பிரித்தானிய அரசு அலிப்பூரில் நடந்த ஒரு வெடிகுண்டு வீசல் வழக்கில் அவரை இணைத்து ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையில் **அலிப்பூர் சிறைக்கு அனுப்புகிறது.
சிறைவாசத்தின் போது 'சுப்ராபாத்' என்னும் வங்க மொழிப் பத்திரிகையில் இவரது படைப்புகள் பல வெளியாயின.  சிறை வாழ்க்கையை ஓர் ஆசிரமம் போல உபயோகப்படுத்திக் கொண்ட அரவிந்தர் விடுதலையாகிற சமயத்தில்  தனது ஆன்ம ஒளி வழிகாட்டலில் புதுவைக்கு வருகிறார்.

1910 ஏப்ரல் நாலாம் தேதி அரவிந்தர் புதுவைக்கு வந்து சேருகிறார்.  கல்கத்தாவிலிருந்து புதுவைக்கு அவர் படகில் வந்ததாகச் சொல்வார்கள்.  அரவிந்தர் புதுவைக்கு வருகிறார் என்று  கசிந்த செய்தியை நம்பியும் நம்பாமலும் புதுவையிலிருந்த புரட்சியாளர் குழு  (பாரதி, கிருஷ்ணமாச்சாரியார், ஸ்ரீநிவாசாச்சாரியார்)   சர்க்கரை செட்டியார் வீட்டில் அரவிந்தர் தங்குவதற்காக முன் கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தனர்.

அரவிந்தரை  பாபு என்று  தான் பாரதியார்  அழைப்பார்.  அவர்களின் நட்பு வட்டாரத்தில் அரவிந்தரும் சேர்ந்து கொண்டதில் ஏக குஷி பாரதியாருக்கு.

"ஆதிசிவன் மேலிருக்கும் நாகப்பாம்பே  -- எங்கள்
அரவிந்தப் பேர் புனைந்த அன்புப்  பாம்பே
ஜோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய் - அந்த
சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்"

-- என்று மிகவும் நம்பிக்கையுடன் ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்.


ஆமாம், அரவிந்தரின் புதுவை வருகையும்,  நட்பும் பாரதியார் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது தான் வரலாறு சொல்லும் உண்மை.

=======================================================================

*வ.ராமஸ்வாமி:  தமது  மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு நூலில்.

வ.ரா.  சில காலம் பாரதியாரோடு கூடவே புதுவையில் இருந்து நெருக்கமாக பழகியவர்.  அக்கிரஹாரத்து அதிசய மனிதர் என்று அண்ணாவால் குறிப்பிடப்பட்டவர்.


**  சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிறைவாசத்திற்கு அலிப்பூர் சிறை பெயர் பெற்ற ஒன்று.  1910-ல் இதற்காகவே கட்டப்பட்டது போல பெருத்த பாதுகாப்புடன் கட்டப்பட்ட மிகப்பெரும் சிறை.  சுபாஷ் சந்திர போஸை இங்கு காவலில் வைத்தார்கள்.  1930ல் ராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில்  கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜரும் அலிப்பூர் சிறைவாசத்தை  அனுபவித்திருக்கிறார்.

1   புதுவையில் இந்தியா அச்சகமும் அலுவலகமும்

 பாரதி தங்கியிருந்த விளக்கெண்ணை செட்டியார் வீடு

3   கலவை சங்கர செட்டியார் வீட்டு மாடியில் அரவிந்தர் தங்கியிருந்தார்.

4   சுரேந்திரநாத் ஆர்யா. 

( படங்கள் 1-லிருந்து 4 வரை--   நன்றி:   திரு. ரா.அ. பத்மநாபன் அவர்களின் சித்திர பாரதி )


படங்கள் அளித்த அன்பர்களுக்கு நன்றி.

Sunday, February 25, 2018

நேரில் வந்த தெய்வம்

ன் மனைவிக்கு ஷேத்திராடனங்கள் செல்வதில்  ஆர்வம் மிகவும் அதிகம்.
இறை பக்தியும் அதிகம்.

தெற்கு பக்கம் நாங்கள் வந்தாலே ஏதாவது ஷேத்திராடனம் செய்ய
வேண்டும் என்று வற்புறுத்துவாள்.  எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.  அதற்காக நான் நாத்திகன் என்பது அல்ல.  பயணம் செய்வது என்பதே என்னை மிகவும் சோர்வு கொள்ள வைக்கும் விஷயம்.

என்னால் கூட்டங்களில் சிக்கிக் கொள்ள முடியாது.  முண்டியடித்து முன்னேறிச் செல்லும் சாமர்த்தியமும் கிடையாது.   வாயை வைத்துக் கொண்டு வெறுமனே மென்று கொண்டிருக்காமல்  எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது போன்ற விஷயங்களில் மட்டுமே ஆனந்தம் அடைபவன்  நான்.

அது 1944 என்று நினைக்கிறேன்.  எனக்கும் அப்படியொரு ஷேத்திராடனம் மேற்கொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது.  கூடவே, ஒரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. அது என் நண்பர் கிருஷ்ணமூர்த்தி சிலாக்கியமான ஆஞ்சநேய  உபாசகர். குருவாயூர், திருவனந்தபுரம் முதலிய ஷேத்திரங்களுக்கு அவருடன் நானும் என் மனைவியும் கிளம்பினோம்.

சரி.. மறப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். எங்களுடன் வருவதற்கு கிருஷ்ணமூர்த்தி முன் வந்ததற்கு முக்கியமான  காரணம் ஒன்று  இருந்தது.  அவர் ஆஞ்சநேய உபாசகர் என்று சொன்னேன், அல்லவா?..

என் மனைவியின் சொந்த  ஊர் தாராபுரம்  அருகிலிருக்கிறா கொளிஞ்சவாடி என்னும் கிராமம்.    அங்கு  ஒரு  ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தம்.  வனவாசத்தின் போது ராமபிரானும் சீதாபிராட்டியும் லஷ்மணனும் அங்கே வந்து தங்கியதாக ஐதிகம்.  எங்கள் ஷேத்திராடனத்தை முடித்ததும்  தாராபுரம் செல்வதாக எங்கள் திட்டம்.  அந்த ஊர் அஞ்சநேயர் கிருஷ்ண மூர்த்தியை இழுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

சரி,  மீண்டும் எங்கள் பயணத்திற்கு வருவோம்.  கன்யாகுமரியில்  அதி அற்புதமான தரிசனம்.  அதை  முடித்து திருவனந்தபுரம் செல்ல ஒரு வாடகை காரை அமர்த்திக்  கொண்டு மிகவும் ஆவலுடன் கிளம்பினோம்.   அந்த ஆவலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள தவறி விட்டோம்.

நாங்கள்  கிளம்பிய அன்று திருவனந்தபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மறியல் போராட்டம்.  கார் திருவனந்தபுரத்தில் நுழைந்தது. அங்கு பார்த்தால் மிகப்  பெரிய  கும்பல் ஒன்று கைகளில் சகலவிதமான ஆயுதங்களையும் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.  எங்கும் ஒரே களேபரம்.  அப்பாவிகளாக உள்ளே நுழைந்த எங்களைச் சூழ்ந்து  கொண்டது, அந்தக்  கும்பல்.  எங்கும் வெறிக்  கூச்சல்கள். கட்டைகளால் எங்களின் காரைத் தாக்க ஆரம்பித்தது, அந்தக் கும்பல்.  நாங்கள் நடுநடுங்கி விட்டோம்.  விவரிக்க முடியாத பதற்றம்.  உயிர் பயம்.

எந்த நேரமும் எங்களை வெளியே இழுத்துத் தாக்கத் தயாராக இருந்தது அந்தக் கூட்டம்.   எங்கள் ஓட்டுநர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.  மன்றாடிப் பார்த்தார்.  கேட்பதற்கு யாரும் அங்கு தயாராக இல்லை.  நான் நடிகணாகவும் (மேடைகளில் தான்!)  இருந்திருக்கிறேன், இல்லையா?.. மனதில் ஒரு  நல்ல யுக்தி  தோன்றியது.  கால்கள் ஊனமானவன் போன்ற பாவனையில் காரை விட்டு இறங்கினேன்.

அந்த  மறியல் கூட்டத் தலைவனின்  கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு "ஐயா!  நாங்கள் தெரியாமல்  இந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம்.  பத்மநாப சுவாமியை தரிசிக்கத் தான் நாங்கள் வந்தோம்.  நான் ஒரு பத்திரிகையாளன்.  இதோ, என்னுடைய அடையாள அட்டை.  எங்களுக்கு சுவாமி தரிசனம் கூட வேண்டாம்.  நாங்கள் திரும்பிச் செல்ல அனுமதியளித்தால் போதும்.." என்று அழாக்குறையாக மன்றாடினேன்.

கொஞ்ச நேரத்திற்கு நீண்ட அமைதி.  கோபமான பார்வைகள்.  அப்புறம் என்ன தோன்றியதோ தெரியவில்லை.. "போய்க்கோடா.." என்று வெறுப்புடன் சொல்லி நகர்ந்தான்.  தப்பித்தோம், பிழைத்தோம் என்று எங்கள் காரைக் கிளப்பிக் கொண்டு கிளம்பினோம்.  அடுத்து இன்னொரு ஆபத்தை நோக்கிப் போகிறோம் என்பது தெரியாமலேயே.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு பெட்ரோல் டாங்க்கர் சென்று கொண்டு  இருந்தது.  அதிலிருந்து எண்ணெய் வழியெங்கும் கசிந்து கொண்டே இருந்தது.  எங்கள் ஓட்டுநர் ஓட்டிய வேகத்தில், அந்த வழுக்கலில் சக்கரங்கள் சறுக்கி, நிலை  தடுமாறி, அருகில் மிகவும் ஆவேசத்துடன் ஓடிக்கொண்டு இருந்த காட்டாறு ஒன்றில் இறங்கி விட்டது எங்கள் கார்.

'இதோடு நம் ஆயுள் முடிந்தது' என்ற தீர்மானத்திற்கு வந்தோம்.  நடுங்கிய பயத்தில் கண்களை இறுக்க மூடிக் கொண்டோம்.  நண்பர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்புடன் ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விட்டார். எங்களுடன் ஒட்டியிருந்த கொஞ்சமான நல்ல நேரம் என்னவென்றால்,  எங்களுடைய கார் ஆற்றின் ஊடாகத் துருத்திக் கொண்டு, உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பிர்மாண்டமான கிளைகளின் இடையே சிக்கி இருந்தது.

ஓட்டுநர் தன்  பலத்தையெல்லாம் பிரயோகித்து, பிரேக்கை அழுத்திப்  பிடித்துக் கொண்டிருந்தார்.  விட்டால், அதோகதிதான்... ஆற்று வெள்ளாத்தின் வேகம் எங்கள் காரை இழுத்துக் கொண்டு போய்விடும்.  எங்கள் உயிர்கள் மீண்டும் எங்கள் கைகளில் இல்லை, .  நண்பர்  கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, நாங்கள் எல்லோரும் "ஆபத்து.. ஆபத்து" என்று உதவிக்காகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தோம்.  அவர், தன்னுடைய ஸ்தோத்திரத்தைத் தொடர்ந்து  கொண்டிருந்தார்.  யாரையும்  காணோம்  எங்கள் பதைப்பு இன்னும்  கூடியது.

திடீரென்று அந்தச் சாலையின் இடது புறத்தில், எங்கோ வெகுதொலைவு தள்ளி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சுமார் ஐம்பது பேர் ஓடோடி வந்தார்கள்.  எல்லோரும் சேர்ந்து காரை இந்தப்  பக்கம் இழுக்க முயற்சிதார்கள்.  பாதி நம்பிக்கை வந்தது.  ஆனால், மூச்.. கார் ஒரு இம்மி கூட நகரவில்லை!  கார் போட்ட ஆட்டத்தில் எங்களுக்குப் பாதி உயிர் போய்விட்டது.  மரணத்தின் நிழல் கொஞ்ச்சம் கொஞ்சமாக எங்களின் மீது படர ஆரம்பித்தது.

அப்பொழுது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது.  உதவிக்கு வந்த விவசாயத்  தொழிலாளர்கள், அந்த லாரியை வலுக்கட்டாயமாக மறித்து நிறுத்தி, நிலைமையை விளக்கினார்கள்.  அந்த லாரியின் ஓட்டுனர் தன்னுடைய லாரியை எங்கள் காருக்கு சரியாக நிறுத்தி, ஒரு கயிற்றைக் கட்டி மிகவும் சாதுர்யமாக எங்கள் காரை  இழுக்க ஆரம்பித்தார்.

கார் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வர ஆரம்பித்தது.  நாங்கள் ஒரு வழியாக மரணத்தை தூர விரட்டி விட்டு மேலே வந்தோம்.  கரணம் தப்பினால் மரணம் என்று சொன்னால் மிகையாகாது.  நன்றியுடன் பெருமூச்சு விட்டோம்.   நானும் என் மனைவியும் போட்டது வெறும் கூச்சல்.  கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தது ஆஞ்சநேய ஸ்தோத்திரம்.

அதன் சக்தி தான் இவர்களை இங்கு அனுப்பியதா?..

அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு எப்படி  நன்றி சொல்வது?.. ஆயிரம் ரூபாயை எடுத்துத் தந்து, அவர்களிடம் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.  அதில் ஒருவர், என் கண்களையே   உற்றுப் பார்த்து, "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?.. நீங்கள் பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள். எங்களுக்கு அது போதும்.." என்றார்.

என்ன ஒரு பண்பாடு!  என்ன ஒரு கருணை உள்ளம்!  ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.   நெக்குருகிப் போனேன்.  அந்தக் கருணை உள்ளங்களில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் என்னுடைய தெய்வத்தை நேரில் கைகூப்பித் தரிசித்தேன்!



                                                               


                                                                     
    ----  பிரபல இசை விமரிசகர்
                  சுப்புடு அவர்கள்
                                                                             











           நன்றி: ஆனந்த விகடன்
                                                                                                                    3--11--2002  இதழ்                                                                                                           
               
 




படங்கள் உதவிய அன்பர்களுக்கு மனம் கனிந்த நன்றி.


Wednesday, February 21, 2018

தமிழகக் கோயில்கள்


கோயில் கட்டிடக் கலை சோழ மன்னர்கள் காலத்து நாளும் வளர்ந்து, நாயக்க மன்னர்கள் காலத்து விரிந்து பின்னர் தேய்ந்திருக்கின்றன என்று சொல்லி காலவரையைக் கணக்கிட்டு விடலாம்.

தமிழ் நாட்டுக் கோயில்களின்  காலத்தை அங்குள்ள மண்டபங்களை, அந்த மண்டபங்களில் நிற்கும் தூண்களை, அத் தூண்களில் உள்ள போதிகைகளை வைத்தே நிர்ணயித்தல் கூடும்.  இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக இச் சுருங்கிய நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.  கோயில்  கட்டிட அமைப்பில் உள்ள உறுப்புகள் அதன்  பெயர்கள் எல்லாம் சாதாரண மக்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேணும் என்று ஆசைப்படுகிறவன் நான்.

நீண்டுயர்ந்த மலையைக்  கண்டு எப்படி கோபுரம் அமைக்க விரும்பினார்களோ அதுபோல மனிதனது உடல் அமைப்பைப் பார்த்தே கோயிலை நிர்மாணிக்க முனைந்திருக்கிறார்கள் சிற்பிகள்.  நீண்டு நிமிர்ந்த பெருங்கோயில் உறுப்புகள் நல்ல தமிழில் அடி, உடல், தோள், கழுத்து, தலை, முடி  என்று ஆறாகும்.  இதையே சிற்ப சாஸ்திரத்தில் அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி என்று நீட்டி முழக்கி வடமொழியில் சொல்வார்கள்.   நல்ல தரை  அமைப்பே அடியாகும்.  இதனையே அதிஷ்டானம், மசூரகம், ஆதாரம், தலம், பூமி என்றெல்லாம் கூறுவார்கள்.  இந்த அடி மேல் எழுந்த உடலே கருவறை.  இதனையே கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் என்று கூறுவார்கள்.
கருவறையை திரு உண்ணாழி என்று கல்வெட்டுகளில்  குறித்திருக்கும்.  இந்தக் கருவறையின் மேல் நிற்பதே தோள்  என்றும் பிரஸ்தரம்,  மஞ்சம், கபோதம் எல்லாம்.  அதற்கும் மேலே கண்டம், களம், கர்னம் எனப்படும் கழுத்து.  இதன் மேலே இருக்கும் ஸ்தூபியே முடி.  இவைகள் எல்லாம் என்ன என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு.



இன்னும் இந்த உறுப்புகளை  ஒட்டிய  பல பகுதிகள்  பல  பெயர்களில் விளங்கும்.  திருவுண்ணாழி என்னும் கருவறைச் சுவரின்  வெளிப்  பக்கத்திலே கோஷ்ட பஞ்சரம், கும்ப  பஞ்சரம் என்னும் மாடக்குழிகள் அமைக்கப்படும்.  கருவறை அர்த்த மண்டபம் இரண்டையும் சுற்றி  ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள்.  இவைகளில் கணபதி, தஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை உருவங்கள் இருத்தப்படும்.  கோஷ்ட பஞ்சரத்திலே இந்த தெய்வ உருவங்களை அமைக்கும் வழக்கம், சோழ மன்னர்கள் காலத்திலே தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.   கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையிடையே கும்ப பஞ்சரம், கும்ப  பஞ்சரம், அடியில் குடமும் மேலே சிற்ப  வேலையோடு கூடிய கொடியும் இருக்கும்.   தோள் என்னும் பிரஸ்தாரத்தின் மேலே  கர்ண கூடு, பஞ்சரம், சாலை என்னும் உறுப்புகள் இவைகளின் அமைப்பை எல்லாம் விவரிப்பதை விட கோயிலுக்குச் செல்லும் போது நேரே பார்த்துத் தெரிந்து  கொள்ளுதல் நலம்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற பரிவார ஆலயங்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள்.  பத்தாம் நூற்றாண்டில் சோழன் விஜயாலயன் காலத்திற்குப் பின் தான் சிவன் கோயில்களீல் அம்பிகைக்கென்று தனி ஆலயங்கள் கட்டப் பட்டிருக்கின்றன.  அதற்கு முந்திய காலத்தில் அம்பிகைக்கு என்று தனிக் கோயில்கள் இருக்கவில்லை.  காஞ்சியில் உள்ள அத்தனை சிவன்  கோயிலிலும் இன்றும் அம்பிகைக்கு சந்நிதி கிடையாது.  எல்லோருக்கும் சேர்த்து ஒரே அம்பிகையாய், ஒப்பற்ற அம்பிகையாய் தனிக் கோயிலில் இருப்பவள் தான் அன்னை காமாட்சி.  சோழ மன்னர்கள் காலத்தில் தான் அம்பிகைக்குத் தனி சந்நிதி அமைத்தார்கள்.  முதலில் பிரதான  கோயிலிலேயே ஒரு சிறு கோயில் கட்டி தெற்கே பார்க்க நிறுத்தினார்கள்.  அதன் பின் அம்பிகை கோயிலை இறைவன் வலப்பக்கத்திலே கட்டினார்கள்.
செய்த தவறை உணர்ந்து பின்னர் அநேகமாக எல்லாக் கோயில்களிலும்
இறைவனுக்கு இடப்பக்கத்திலேயே அம்பிகைக் கோயிலையும் கட்டி இருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில் இறைவனுக்கு இடப்பாகத்திலேயே அம்பிகை கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில்  இறைவனுக்கு இடப்பக்கத்திலிருந்த அம்பிகை நாயக்க மன்னர்கள் காலத்திலே திரும்பவும் வலப்பக்கத்திற்கே வந்து கோயில் கொண்டிருக்கிறாள்.  பெரிய சிவன்  கோயில்களிலே ஆதியிலே கணபதி, முருகன் முதலியவர்களுக்குத் தனித்தனி கோயில்கள் இல்லை.  பின்னர் தான் கோயிலின் தென்மேற்கு மூலையிலே சுப்பிரமணியரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  நடராஜருக்குத் தனி சந்நிதி என்பதெல்லாம் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்தது தான். தெய்வத் திருமுறைகளை எல்லாம் வகுத்த பின்பே, அடியார்கள், நாயன்மார்கள் எல்லாம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  நவகிரக வழிபாடு மிகவும் பிற்காலத்திலே தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிவன் கோயில்களைப் போலவே பெருமாள் கோயில்களிலும் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு தாயார் சந்நிதி இருந்ததில்லை.  இன்றும் ஒப்பிலியப்பன்,  நாச்சியார் கோயில் முதலிய இடங்களில் தனித்த தாயார் சந்நிதி இல்லை என்பது பிரச்சித்தம்.  கருவறைக்குள்ளேயே இருந்த தாயாரைப் பிரித்து அவளைத் தனிக் கோயிலில் இருத்தியதெல்லாம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தான்.  ஆழ்வார்களும்,  ஆச்சாரியார்களும் மற்றும் ராமன், கண்ணன், விஸ்வக்சேனர் எல்லாம் தனிக் கோயில்களில் அமர்ந்தது  இன்னும் பிந்திய காலத்திலேயே. 


சமுதாய வாழ்வினை வளர்க்க இக்கோயில்கள்  எப்படி  உதவியிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் இந்தப் பேச்சு பூரணம் அடைந்ததாகாது. நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்கிய ஸ்தானம்
வகித்திருக்கின்றன.  எந்த ஊரிலும் ஊருக்கு நடுவில் தான்  கோயில். அதைச் சுற்றிச் சுற்றித் தான் தெருக்கள், கடைவீதிகள், வீடுகள் எல்லாம். மதுரையைப் பாருங்களேன்.    நகர நிர்மாணத்திற்கே சிறந்த  எடுத்துக்காட்டு என்றல்லவா மேல் நாட்டு அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். கோயிலின் நான்கு  திசைகளிலும் நான்கு  வாயில்கள். வாயில் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடமாக அல்லவா கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள், தமிழர்கள்?..

கோயில்களைச் சுற்றிய வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக்கின்றன. 
வியாபாரம் பெருகப் பெருக நாட்டின் வளம் பெருகியிருக்கிறது.  பல நாடுகளிலிருந்து வியாபாரிகள் தங்கள் தங்கள் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப்  போயிருக்கிறார்கள்.  இப்படி வருகிறவர்களது வசதிகளைத் தெரிந்தே கோயிலை ஒட்டிய சந்தைகள், உத்சவங்கள், திருவிழாக்கள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.  நல்ல பொருளாதாரக் கண்கொண்டு நோக்கினால் ஒவ்வொரு திருவிழாவுமே ஒரு பெரிய சந்தை தான்.. கூட்டுறவு சம்மேளனம் தான்.

பல பக்கத்திலிருந்தும் மக்கள் இப்படி வந்து கூடக்கூட நாட்டின் வளம்,
நகரத்தின் வளம் பெருகியிருக்கிறது.  வந்தவர்களுக்கு உணவளிக்க அன்னச் சத்திரம் தோன்றியிருக்கின்றன.  கோயிலை ஒட்டிக் குளங்கள், குளங்களை ஒட்டி நந்தவனங்கள் உருவாகியிருக்கின்றன.  இவைகளை நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாக நடக்க நிலங்களை, செல்வங்களை மானியமாக வழங்கியிருக்கிறார்கள். இப்படித் தான் தேவதானங்கள், தேவபோகங்கள் எல்லாம் எழுந்திருக்கின்றன.

கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கிறது. கைத்தொழில் பெருகியிருக்கிறது.   கட்டிட நிர்மாணத்தில் கைதேர்ந்த தச்சர்கள், சிற்பிகள், வர்ண வேலைக்காரர்களுக்கு எல்லாம் கோயில்கள் தக்க ஆதரவாய் இருந்திருக்கின்றன.  கோயில்கள் கலாநிலையங்களாக, கலைக் கூடங்களாக வளர்ந்திருக்கின்றன.  இசையும் நடனமும் கோயில்களின் நித்யோத்சவத்தில் பங்கு பெற்றிருக்கின்றன.  கல்விச் சாலைகள், பொருட்காட்சி சாலைகள் எல்லாம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கின்றன.  வியாக்யான மண்டபம்,  வியாகர்ண மண்டபம், சரஸ்வதி பண்டாரங்கள் முதலியன கோயில்களுக்குள்ளேயே நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன.   தென்னார்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும்,  செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக்கூடலிலும்  பெரிய  பெரிய கலாசாலைகளே கோயில்கள் ஆதரவில் நடந்திருக்கின்றன.  எண்ணாயிரம் கோயிலில் ஒரு சமஸ்கிருத பாடசாலை நடத்த முன்னூறு ஏக்கர் நிலம் மான்யமாக விடப்பட்டிருக்கிறது.  340 மாணவர்களுக்கு  தங்க இடமும், உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

மக்களது அறிவு  விருத்திக்குக் கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே மக்கள் உடல் நலத்தைப் பாதுக்காக்க மருத்துவ சாலைகளும் கோயில்களுக்கு உள்ளேயே இருந்திருக்கின்றன.  பதினோராம் நூற்றாண்டில் உள்ள ஒரு சோழனது கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்துவர், ஒரு ரண சிகித்சை வைத்தியர்,   இரண்டு தாதியர் கொண்ட ஒரு மருத்துவ சாலையே நடந்திருக்கிறது ஒரு கோயிலில் என்று அறிகிறோம்.    கால்நடை மருத்துவ சாலைகள் கூட கோயில் ஆதரவில் நடந்திருக்கின்றன.

கோயிலை ஒட்டி எழுந்த இந்த ஸ்தாபனங்களையும் நிர்வகிக்க ஸ்தானீர்களும்  காரியஸ்தர்களும் இருந்திருக்கிறார்கள்.  பொருளைக் காவல்  காக்க பண்டாரிகள், பூசைகள் எல்லாம் சரியாய் நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், இவர்களுக்கெல்லாம் மேலே அதிகார புருஷர்கள், அவர்களுக்கு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.  இப்படி மக்களை எல்லாம் சமுதாய வாழ்விலும், கலை ஆர்வத்திலும், பொருளாதார துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இக்கோயில்கள்  உருவாகியிருக்கின்றன?..  இப்படிப்பட்ட ஒரு கலா நிலையத்தை நடு நாயகமாகக் கொண்டே மக்கள் வாழ்வு சிறந்திருக்கிறது என்பது தெரிகிறது.


-- தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ரேடியோ உரை.
    திருச்சி வானொலி நிலையத்தார்  ஒலிபரப்பு.                 


தொ,மு. பாஸ்கரத் தொண்டைமானின்  சில வானொலி உரைகள் புத்தக வடிவில்:

  தமிழ்க் கோயில்கள் தமிழர் பண்பாடு

 நிவேதிதா பதிப்பகம்,  அசோக் நகர், சென்னை-83











நெல்லையம்பதி தரணிக்களித்த தவச்செல்வன்
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.  இவரது இளவல் தான்  பிரபல பொதுவுடமைவாதியும் நெசவாளர்களின் வாழ்வு நிலையை உருக்கமுடன் படம் பிடித்துக் காட்டும்  'பஞ்சும் பசியும்' என்ற அற்புத தமிழ் நாவலின் படைப்பாளியுமான  தொ.மு.சி. ரகுநாதன்.

பாஸ்கரன் இளமையில் நெல்லை'மதுரை திரவியம்  தாயுமானவர் இந்துக் கல்லூரி 'கல்விச்சாலையில் கல்வி பயின்றார்.  சாதாரண எழுத்தராக அரசுப் பணியில் சேர்ந்த இவர் மாவட்ட ஆட்சித் தலைவராக தமது குன்றாத ஆற்றலால் பதவி  உயர்வு பெற்றவர்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாதரின் புகழ்பெற்ற 'வட்டத்தொட்டி'  நண்பர்களில் இவரும் ஒருவர்.   கோயில்கள் இவருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்.   பிரபல 'வேங்கடம் முதல் தென்குமரி வரை' நூல்
இவரின் படைப்பு தான்.  அதே மாதிரி 'வேங்கடத்துக்கு அப்பால்' என்ற அருமையான நூலும் இவரது தான்.  நம் கையைப்  பிடித்துக் கொண்டு கோயில் கோயிலாக படியேறி இறங்கும் உணர்வு இவரது நூல்களை வாசிப்போருக்கு ஏற்படுவது உறுதி.   பாஸ்கர தொண்டைமான்  தஞ்சைக் கலைக்கூடம்  அமைவதற்குப் பாடுபட்டவர்களில் ஒருவர்.

Monday, February 19, 2018

கடவுள்.. மறுபிறவி.. ஊழிக்காலம்

டாக்டர்!  உயிர், மரணம், ஆத்மா, மறுபிறவி.. போன்ற விஷயங்களைப் பற்றி அறிவியல் உலகம் என்ன மாதிரியான கருத்துக்களை முன் வைக்கிறது?..


மறுக்க முடியாத நிலையான உண்மைகள் (concret facts)  என்று உண்டு.  உங்கள் கேள்விகளில் உள்ள விஷயங்கள் எல்லாம் அரூபமான -- அப்ஸ்ட்ராக்ட் -- விஷயங்கள்.  இவற்றுக்கான விளக்கமும் அப்ஸ்ட்ராக்டாகத் தான் இருக்க முடியும்.  ஓரளவு தர்க்கத்தோடு உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும் நாம் சொல்வதே இறுதி  முடிவல்ல. விவாதத்துக்கு உரியது தான்.

பிரபஞ்சம் (Universal) என்பது ஒன்று தான் என்கிற கருத்து முன்பு நிலவி வந்தது.  இப்போது குறைந்தது பத்துப் பிரபஞ்சங்களாவது இருந்தால் தான் நமது அரிய சூரிய குடும்பம் இவ்வளவு ஒழுங்காக இயங்க முடியும்' என்று கூறுகிறது நவீன பெளதீகம்.

இங்கே தான்  'கடவுள்'  என்கிற கருத்து (கான்செப்ட்)  வருகிறது.

பத்துப் பிரபஞ்சங்கள் என்கிற பிரமாண்டத்தின் முன்னால், பூமி என்கிற சிறு கிரகத்தில் உயிரினங்கள் வந்தது எப்படி?..

வேறு ஏதோ கிரகத்திலிருந்து நம்மை விடச் சக்தி வாய்ந்த சூப்பர் உயிரினம் வந்து தான் பூமியை உருவாக்கியதா?..
                                                                                                                   
'நெபுலா'விலிருந்து சூரியன் பிரிந்து, சூரியனிலிருந்து பூமி பிரிந்தது.  உஷ்ணக் கோளமாக இருந்த பூமி பிறகு வெறும் நீர்ப்பரப்பாக மாறியது.  தொடர்ந்து எல்லாமே ஜடமாக இருந்த நிலையில் ஏதோ ஒரு மூலக்கூறுக்கு மட்டும் உயிர் வந்தது.  அதிலிருந்து நீர்வாழ் உயிரினங்கள் பரிணாமம் கொண்டன.  நீர் அளவு குறைந்து தரைப்பகுதி உருவானவுடன் நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை போன்ற உயிர்கள் தோன்றின.  பிறகு நிலத்தில் வாழும் உயிர்களுக்கு பழம் பறித்துத் தின்ன கைகள் வளர்ந்தன.  பிற உயிர்களைக் கொன்றாவது தன்னைக் காத்துக் கொள்ள 'தந்திரங்கள்' வந்தன.  இது தான் இன்றைய அறிவியல் கண்ணோட்டம்.

'அந்த முதல் மூலக்கூறுக்கு உயிர் கொடுத்த 'சக்தி' எது?  அதைக் 'கடவுள்' என்று சொல்லலாம்' என்று விஞ்ஞானிகளே ஒப்புக்  கொள்கிறார்கள்.

எலெக்ட்ரான் மிகச் சிறியது.  கண்களால் பார்க்க முடியாதது.  அந்த எலெக்ட்ரான் பல க்வார்க்குகளை உள்ளடக்கியது.  இந்த கிவார்க்கின்  உள்ளே பல க்ளுவான்ஸ் இருக்கின்றன. அவை  தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.  அந்த க்ளுவான்ஸிடம் போய் 'மனிதன் என்று ஒருவன்  இருக்கிறான் என்று சொன்னால் அது ஒப்புக்கொள்ளுமா?..

இதேபோல் நம்மை விட பெரிதான் ஒரு சக்தி இருக்கலாம்.  'தீமை செய்யாதே' என்று பயமுறுத்துவதற்காகவும், 'நன்மை நினை' என்று உபதேசிக்கவும்  அந்த  சக்திக்கு மதவாதிகள் 'கடவுள்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

உலகில் சுமார் 3,50,00 உயிர் வகைகள் இருக்கும் சூழலில் மறுபிறவி என்கிற சிந்தனையை மனிதன் வளர்த்துக்  கொண்டதற்கும் இதே 'நன்மை--தீமை' தான் காரணமாக இருக்க முடியும்.

அறிவியல் பிரகாரம் 'மரணம்' என்பது உயிரின் நிறுத்தம்!

எனில், உயிர் என்பது சூழலை உள்வாங்கிக் கொள்ளுதல், அதற்கேற்ப நடந்து கொள்ளல்,  உயிரோடு இருக்க நடத்துகிற போராட்டம் (Survival Instinct)   தன்னைப் போன்ற உயிரினத்தை உருவாக்குதல் --- இத்தனை தான்.

மேலே சொன்ன நான்கு தவிர சில மனித உயிர்களுக்கு சில அதிகபட்ச சக்திகள் கிடைக்கின்றன.   உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால்  'Psycho Kinesis'  என்கிற அதீத மனோசக்தி.  இதை  வைத்துக்  கொண்டு தான் மாயமான, புதிரான காரியங்களைச் சிலர் செய்கிறார்கள்.  பிக்பென் கடிகாரத்தை ஒரு பெண்  முறைத்துப் பார்த்தே நிறுத்தியது இந்த அடிப்படையில் தான்.

இது போன்ற அதீத சக்திகள் அல்லாமல் சாதாரணமான மனித செயல்பாடுகளையும் மூளை தான் கட்டுப்படுத்துகிறது.  மனிதன்  கம்ப்யூட்டர் என்றால் மூளை தான் ஹார்டுவேர்.  மனம் தான் சாஃப்ட்வேர்.

மூளை அப்படிச் செய்கிற பணி நியாயமானதா என்று பார்ப்பது மனசாட்சி.

இதெற்கெல்லாம் பின்புலமாக இருக்கும் ஈகோவின் உயர்ந்த வடிவத்தை ஆன்மா என்று சொல்லலாம்.   மனித உயிரின் அறிவியல் பெயர் 'ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ்'!..  'எனக்குத் தெரியும், எனக்கு தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்' என்பது இதற்குப் பெயர்!  இந்த உணர்வு இல்லாத மூளை நோய் நிலை தான்  'ஸ்கீஸோஃப்ரீனியா!  நினைவுத் திறன், அறிவுத் திறன், தீர்மானிக்கும் அறிவு, பிரக்ஞை  இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஆன்மா என்று அழைக்கலாம் என்றால். அந்த ஆன்மா இருக்குமிடம் நம் மூளையின் 'லிம்பிக் சிஸ்டம்'.

மனம் என்பது உடல் சாராதது என்றும் அது மருத்துவ அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த கருத்துகள் மெல்ல மெல்ல காலாவதியாகி வருகின்றன.  'குறிப்பிட்ட வகை மனநோய் இருந்தால் மூளையின், குறிப்பிட்ட இடத்தில் பாதிப்பு இருக்கிறது' என்று சொல்வது வரை அறிவியல் முன்னேறியிருக்கிறது.  சி.டி.ஸ்கான் யுகத்திலிருந்து எம்.ஆர்.ஐ. ஸ்கான், பெட் ஸ்கான்,  ஸ்பெக்ட்,  எம்.ஆர்.ஸ்பெக்ட்ரோஸ்கோபி, அல்ட்ரா ஸ்ட்ரக்சுரல்  ஸ்டடீஸ்  என்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  இன்னும் ஐம்பது வருடங்களுக்குள்  சைக்கியாட்ரி என்ற ஒரு சிறப்புப் பிரிவே  வழக்கொழிந்து போகப்  போகிறது. சைக்காலஜியையும் நரம்பியலோடு சேர்த்து 'காக்னிட்டிவ் நியூராலஜி' என்றே படிப்பு வந்து விட்டது.

எல்லாவற்றையுமே சாதுரியமான  விஞ்ஞான  தர்க்கத்துக்குள் அடக்கி விடலாம் என்று சொன்னால் 'ஊழிக்காலம் வந்து உலகம் அழிந்து விடும்' என்ற கருத்தைக் கூட விளக்க முடியும். 

முழுப்  பிரபஞ்சமும் விரிவடைந்து கொண்டிருப்பதாக அறிவியல் நம்புகிறது.  ஒரு நாளில் எல்லாமே வெடித்துச் சிதறி விடலாம்!..

சூரியக்  கதிர்களின் தீமையை வடிகட்டிக் கொடுக்கும் 'ஓஸோன் படலம்' அங்கங்கே கிழிந்து வருகிறது.  இது ஒரு நாள் ஒட்டு மொத்தமாக உலகை அழித்து விடலாம்.

பூமிக் கிரகம் தனது இயல்பான வெப்பநிலையிலிருந்து குறைந்து வருகிறது. உலகமே அண்டார்டிகா போல பனி மயமாகி, உயிர்கள் வாழ முடியாமல் போய் விடலாம்!..

ஜப்பானில் இப்போது முதியவர்களின் ஜனத்தொகை அதிகமாகவும் குழந்தைப் பிறப்பு குறைவாகவும் இருப்பதாகக்  கணக்கு எடுத்திருக்கிறார்கள்.  அப்படியே மெள்ள மெள்ள இனப்பெருக்கமே நின்று போய் விடலாம்.

இது மாதிரி ஏதாவது ஒன்று தான் ஊழிக்காலம்!  கல்கி அவதாரம்!  யுக முடிவு!


       
              ---  டாக்டர் கே. லோகமுத்துக்கிருஷ்ணன்                      பிரபல நரம்பியல் அறுவை சிகித்சை நிபுணர்

நன்றி:  ஆனந்த விகடன்  பிரசுரம், 'உச்சி  முதல் உள்ளங்கால் வரை' நூல்.









படம் அளித்த அன்பர்களுக்கு நன்றி.

Saturday, February 17, 2018

ஆன்மீக அரசியல்

ரசியல் என்கிற வார்த்தை அரசின் சகல தன்மைகளைப் பற்றியும் அவற்றின் இயல்பு பற்றியும் இலக்கணம் வகுத்தாற் போல சொல்லும் சொற்றொடராக பொருள் கொள்ளும் காலம் ஒன்றிருந்தது.

ஆனால் எது பற்றியும் விவரிக்கும் வார்த்தையாக 'அரசியல்' என்ற வார்த்தை சமீபகாலமாக மாறிப் போயிருக்கிறது.   உணவு அரசியல், வியாபார அரசியல்,  வாழ்க்கை அரசியல்,  பொழுது போக்கு அரசியல், நடைமுறை அரசியல் என்று வழக்கத்தில் அரசியல் வார்த்தை உபயோகப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்தில் ஆன்மிக வாழ்க்கை முறையின் சகல அம்சங்களையும் அலசி ஆராய்வதின் வெளிப்பாட்டையும் ஆன்மிக அரசியல்  என்று சொல்லலாம்.

நேரடியான அர்த்தத்தில் ஆன்மிகம் என்பது அரசியலா என்பது அடுத்த கேள்வி.

ஆன்மிகம் அரசியலோ இல்லையோ ஆன்மிகத்திற்கு எதிராக நிறுத்தப்படும் ஒன்று இருந்து அந்த எதிரான ஒன்று அரசியலாக உபயோகபடுத்தப்பட்டால் இயல்பாகவே ஆன்மிகவும் அரசியலாக உபயோகமாகிப் போவது நேரிடும்.

ஆன்மிகத்திற்கு எதிர் நாத்திகம் என்றால் ஆன்மிகம் அரசியலாவதைத் தவிர்க்க அல்லது தடுக்க நாத்திகமும் அரசியலாகக் கூடாது.  நாத்திகம் மட்டும் அரசியலாகும் ஆனால் ஆன்மிகம் அரசியலாகக்கூடாது என்றால் நாளடைவில் நாத்திகம் அரசியல் ஆவதில் எந்தப் பயனும் இன்றிப்  போகும்.

அதாவது பாம்பில்லாமல் கீரி இல்லை;   கீரி இல்லாமல் பாம்பில்லை என்கிற நிலை இது.  இன்னொரு விதத்தில் இதையே சொல்லப்  போனால் பாம்புக்கு எதிராக கீரியை நாம் நிறுத்தும் வரை பாம்பும் கீரியும் எதிர் எதிர் நிலையில் நிற்கும். 

கீரியை மட்டும் நிறுத்துவோம்,  பாம்புக்கு இங்கு வேலையே இல்லை என்றால்  கீரிக்கும் வேலை இல்லாது போவதைத் தவிர்க்க இயலாது போகும்.

வெளிச்சமும் நிழலும் போல ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை என்பது  போல ஆன்மிகமும் நாத்திகமும் ஒரு  நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒன்றிலேயே ஒன்றாக இருந்து கொண்டு இரண்டு போல நமக்குக்  காட்சி அளிப்பது.

வெகு எளிமையாகச் சொல்ல வேண்டும் எனில், ஆன்மிகம் என்பது அகவயமானது என்ற புரிதலில் நாத்திகத்தை புறவயமானது என்று புரிந்து கொள்ளலாம்.

அகவயமான உணர்வுகளை புறவயமான நிரூபிப்புகளைக் கொண்டு நிரூபிக்கவும் முடியாது,  புறவயமான நிரூபிப்புகளை வரிசைபடுத்திக் கொண்டு அகவயமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் முடியாது.
புறவய அளவுகோல்களைக் கொண்டு அகவய உணர்வுகளை அறிந்து கொள்ளவும் முடியாது.

அகவய உணர்வுகளை சுயபரிசோதனைகளின் மூலம் அதற்கான முயற்சிகளில் ஆட்பட்டுத்தான் அறிய முடியும்.   அதனால் ஆன்மீகம் என்பது சுய அனுபவங்களின் மூலமாகவே அறிய வேண்டிய ஒன்றாகிறது.  அதாவது ஆன்மிகத்தை அறிவுபூர்வமாக அணுக வேண்டுமெனில் ஆன்மீக உணர்வுகளில் தன்னை நிலைக்களனாக வைத்துக் கொண்டு தன் அறிவு சார்ந்து அகவயமாக  ஆராய வேண்டியிருக்கிறது.  சரியாகச் சொல்ல வேண்டுமானால் உணர வேண்டியிருக்கிறது.

அறிவியல் உண்மைகளோ புறவயமானது.  அதாவது அகவய உணர்வுகளுக்கு நேர் மாறானது.   அதனால் அறிவியல் இயல்பாகவே நாத்திகத்தைச் சார்ந்து நிற்பது.    புறவய ஆய்வுகளின் மூலம் அறிவுலகம் நாள்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.   புதுப்புது நிரூபணங்கள் அறிவுலக வெளிச்சத்தில் அறிமுகமாகி உண்மைகளாகின்றன.  அப்படி உண்மையானவைகளை மட்டுமே அறிவுலகம் ஏற்றுக்  கொள்ளும்.  உண்மையாகாதவைகள் அறிவுலக எல்லைக்குள்ளேயே வராது வெளியேயே நின்று விடும்.  அல்லது நாளைய அறிதலுக்காகக் காத்திருக்கும்.  இதான் அறிவுலக விதி.

இதைப் புரிந்து கொள்ளாது ஆன்மிகத்தை அறிவியலோடு கலந்து அவியலாக்குவதோ,  அறிவியல் உண்மைகளை அடுக்கிக் கொண்டு ஆன்மிகத்தை உரசிப்  பார்ப்பதோ  சரிப்பட்டு வராது.

அதே மாதிரி உளவியலும் இன்று அறிவியல் சார்ந்த ஒரு  ஞானமாகிப் போன  நிலையில் உளவியல் சோதனைகளில் ஈடுபடாமல் ஆன்மிகத்தைப் புறந்தள்ளும் நாத்திக வாதங்களும் எடுபடாது.

அதனால் அகவயப் பார்வை கொண்ட ஆத்திகமும்,  புறவயப்  பார்வை கொண்ட நாத்திகமும் இன்றைய தேவையாகிப் போகிறது.

யோகா என்ற வார்த்தை சர்வ சாதாரணமான புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக  இன்று மாறிப்  போயிருக்கிறது.  யோக நிலைகள் ஆன்மிக உணர்வுகளைத் திறக்கும் வாசல் என்ற உண்மைகள் மறக்கப்பட்டு நாத்திக, ஆத்திக வித்தியாசமில்லாமல் அனைவர் வாழ்க்கையிலும் ஒன்றிப் போயிருக்கிறது.

யோகா மாதிரியான, ஆன்மிகம் என்று ஒதுக்கி விடாத, மனதையும் உடலையும் செம்மை படுத்துகின்ற வாழ்க்கைக் கல்வி நிறைய மக்களுக்கு அறிமுகமாக வேண்டும்.

ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் வழிபாடு  மட்டுமில்லை.  அதே மாதிரியாக நாத்திகம் என்பது வெற்று கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமில்லை. 

உண்மையான நாத்திகம் என்பது மார்க்ஸீய சிந்தனையில் புடம் போடப்பட்டு ஜொலிக்க வேண்டும்.   கடவுள் வழிபாடு என்பதும் ஆரம்பப் பள்ளி வகுப்புப் பாடம் மாதிரி தான்.  உண்மையான ஆன்மிகம் என்பதும் கடவுள் வழிபாட்டைத் தாண்டி கடவுள் வழிபாடு மேலும் இட்டுச் செல்கின்ற மகத்தான நல்லுணர்வுகளுக்கு நல்ல செயல்பாடுகளுக்கு வழி நடத்தக் கூடியதாக அமைய வேண்டும்.

ஆன்மிகமும்,  நாத்திகமும் செழுமையான வளர்ச்சி காணும் போது தான் இரண்டையும் ஒன்று சேர்க்கிற  மனித நேயம் என்கிற  ஒற்றைப் புள்ளியை நம்மால் இனம் காண முடியும். 

அறிவார்ந்த ஆன்மிகப் பார்வையும்,  அறிவார்ந்த நாத்திகமுமே இன்றைய தேவையாகிப் போய் அதுவே மனித குல மேன்மைகளுக்கும்,  உன்னதங்களுக்கும்  வழிநடத்திச் செல்கிற உண்மையான அர்த்தமும் ஆகிறது.


Friday, February 16, 2018

பாரதியார் கதை --11

                                             அத்தியாயம்-- 11


த்திரிகைகளின் பதிவு பற்றிய விவரங்களை  (Particulars of Registration of Newspapers)  சம்பந்தப்பட்ட பத்திரிகையிலேயே  அரசாங்கத்திற்குத் தெரிவிக்கும் முறையில் வெளியிட வேண்டுமென்று பிரிட்டிஷார் ஆட்சி காலத்திலேயே 1867-ல் சட்டமியற்றப் பட்டிருக்கிறது.   அவ்வப்போது பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாற்றம் இருந்தாலும் அப்படியான தகவல்களை வெளியிட வேண்டும்.   அதன் அடிப்படையில் தான் இந்தியா பத்திரிகையில் அதன் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன.

3-6-1907 அரசு வெளியிட்ட பத்திரிகை சட்டக் குறிப்புகளின் படி பத்திரிகைகளில் பிரசுரமாகும் கட்டுரைகளில் ராஜதுரோகமான தகவல்கள் இருக்குமெனில் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மாநிலம் சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.   மேல் மட்ட அளவில் இருந்த அதிகாரம் கீழ் மட்டங்களுக்கு பரவலாக விரிவாக்கம் கொண்டதும்  பத்திரிகைகளின் மீது  போடப்படும் வழக்குகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக  அதிகமாயிற்று.    அதனால் தான் 'இந்தியா' பத்திரிகை சம்பந்தப்பட்ட எந்த வழக்கு வந்தாலும் தானே எதிர்கொள்ளலாம் என்ற  துணிவில் தான்  15-8-1908-ல்  எஸ்.என். திருமலாச்சாரியாரே பத்திரிகையின்  உரிமையாளர், ஆசிரியர் என்று  முழுப் பொறுப்புக்களையும் ஏற்றுக்   கொண்டிருக்கிறார்.   திலகர் கைது, அவர் பர்மாவிற்கு  நாடு  கடத்தப்படுதல் என்ற பல அரசியல் பரபரப்புகளுக்கு உள்ளான கால கட்டம் அது.
                                                                                                                                     
'இந்தியா'   பத்திரிகையின் திருமலாச்சாரியாருக்கும், சீனிவாசனுக்கும் வாரண்ட் வந்தவுடனேயே அடுத்து  பிரிட்டிஷாரின் நடவடிக்கைகள் பாரதி மேல் தான் பாயும் என்று நண்பர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.  சொல்லப் போனால் பாரதி தான்    அவர்களின் குறி என்று அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பத்திரிகையின் உரிமையாளர், ஆசிரியர் என்று கைது ஆரம்பித்து பாரதியில் தான் அது முடியும் என்பது அவர்களின் தீர்மானமான முடிவாயிற்று.

'என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்; பார்த்து விடலாம்' என்பது பாரதிக்கு திலகரை சந்தித்த பின் ஏற்பட்ட துணிவு.   வாரண்டிற்குப் பிறகு பாரதி சென்னையில் தான் இருந்தார்.   பாரதி சென்னையில் இருந்தால் அது பேராபத்தில் முடியும் என்று தீர்மானித்த நண்பர்கள்,  சென்னை மட்டுமல்ல பிரிட்டிஷ் இந்தியாவின் எந்தப் பூபாகத்தில் அவர் இருந்தாலும் பிரிட்ஷாரின் அடக்குமுறைகளுக்கு  காவு கொடுத்த பரிதாபத்தைச் செய்து விட்டவர்கள் ஆவோம் என்று தீர்மானிக்கிறார்கள்.

சென்னைக்கு வெகு அருகில் பிரன்ச் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி தான் அவர்களுக்கு  பாரதியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு தகுந்த இடமாக புலப்பட்டது.   அதனால் புதுவைக்கு  செல்ல பாரதியை  அறிவுறுத்தினர்.

முதலில் பாரதி இந்த ஏற்பாட்டிற்கு இணங்கவில்லை.  தம் எழுத்து வன்மைக்கு சூலாயுதமாய் கிடைத்த இந்தியா பத்திரிகையை  இழந்து விட்டு நிற்பது அவரைப்  பெரும் வேதனைக்குள்ளாகியது.   'இந்தியா' தானே,   அதை புதுவைக்கே உங்களிடமே கொண்டு வந்து சேர்த்து விடுகிறோம்'  என்று நண்பர்கள் அளித்த உறுதியின் பேரில் பாரதியார் புதுவைக்கு 'தப்ப'
உடன்படுகிறார்.

ஆனால் பாரதி சென்னையிலிருந்து நேராக புதுவை செல்லவில்லை என்று தெரிகிறது.   கருவுற்றிருந்த தனது மனைவி செல்லம்மாவை கடையத்தில் சொந்தக்காரர்களின் பாதுகாப்பில் விட்டு விட்டு புதுவை செல்கிறான்.   புதுவை மண்ணை பாரதி 26-8-1908-ல்  மிதிக்கிறான். ** 28-8-1908 தேதியிட்ட 'This individual left Madras with his family for his native place in Tinnelvely (Police Archives Vol.xxx 1908)  என்ற ஸி.ஐ.டி. குறிப்புகளிலிருந்து இத்தனையும் போலிசுக்குத் தெரிந்து தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.


அடுத்து 'இந்தியா' பத்திரிகை புதுவையிலிருந்து வெளிவருகிற ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.  எப்படியும் இந்தியா வெளிவந்தாக வேண்டும் என்று பத்திரிகையின் நிறுவனர்  எஸ்.என்.திருமலாச்சாரியார் உறுதியுடன்  இருந்தார்.  அதற்கு என்ன செய்யலாம் என்று வெகு சாமர்த்தியமாக திட்டம் தீட்டப்படுகிறது.

'தண்ணீர் விட்டா வளர்த்தோம்?-- சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ'                                     

--என்ற பாரதியாரின் வரிகள் தாம் என் நினைவில் இந்த சமயத்தில் நிழலாடுகிறது.  தங்கள் உயிரினும் பெரிதாக அந்தப் பத்திரிகையை ஓம்பியவர்கள்  பாரதியாரை வைத்துக்  கொண்டு புதுவையில் பத்திரிகையை வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்தியா பத்திரிகையின் நிறுவனர்  எஸ்.என். திருமலாசாரியாரின் சித்தப்பா பிள்ளை   *  எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரியார்.  இவர் சென்னையில் அச்சு இயந்திரங்கள் விற்பனை வியாபாரத்திலும் இருந்தது ரொம்பவும் செளகரியமாகப் போய்விட்டது.  ஸ்ரீனிவாச்சாரியாரின் தகப்பனார் புதுவையில் வாழ்ந்தவர் மட்டுமில்லை,  அங்கு 'இந்தியன்  ரிபப்ளிக்' என்ற ஆங்கில ஏட்டை நடத்தியவர்.  புதுவையில் இந்தக் குடும்பத்திற்கு  சில சொத்துக்களும் உண்டு.   ஸ்ரீநிவாச்சாரியார் புதுவையிலிருந்த  சிட்டி குப்புஸ்வாமி ஐயங்கார் என்ற தமது உறவினருக்கு கடிதம் கொடுத்து  பாரதி புதுவையில் யாரைச் சந்திக்க வேண்டும், பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் ஏற்பாடுகள் செய்கிறார்.

'இந்தியா' பத்திரிகை சம்பந்தப்பட்ட  அச்சு இயந்திரம் உட்பட எல்லாவற்றையும்  புதுவையில் இருந்த 'யாருக்கோ' விற்று விடுவது போல ஏற்பாடு.    பாரதி புதுவை போய்ச் சேர்ந்த சில நாட்களில் 'இந்தியா' பத்திரிகையை  புதுவையில்  'ரிஸீவ்' செய்வதற்கு தயார் என்று செய்தி  சென்னைக்கு வருகிறது.   'இந்தியா'வின் அச்சு இயந்திரம்,  அச்சக சமான்கள்,   அலுவலக ரிஜிஸ்டர்கள் உட்பட அத்தனையையும் மூட்டை  கட்டி புதுவைக்கு இங்கிருப்போர் அனுப்பி வைக்கின்றனர்.  இப்படியாக 'இந்தியா' சம்பந்தப்பட்ட அத்தனையும் சப்ஜாடாக பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் போக்குக் காட்டி விட்டு புதுவை போய்ச் சேருகிறது.   அத்தனையும் போய்ச் சேர்ந்த சில வாரங்களில்  புதுவையில் பதிவு செய்யப்பட்டப் பத்திரிகையாக 'இந்தியா'  தனது வழக்கமான கியாதிகளுடன் வெளிவரத் தொடங்குகிறது.

ஆனால் 'இந்தியா' பத்திரிகையின் அச்சுக்கூடம் புதுவைக்கு இடம் பெயர்ந்ததும்,  பிரிட்டிஷ் காவல் துறையினருக்கு நன்கு தெரிந்து தான் இருந்திருக்கிறது...**   'These individuals has removed all the plant from INDIA  office in Madras and have opened  an office at Pondicherry in  72, Ambulataru Aiyar Street.  The press has been set up and a staff engaged.  (Police Archive Vol.XXI, 1908.  Page  754) என்று பிரிட்டிஷ்
ஸி.ஐ.டி போலிசாரின் குறிப்புகள் தெரியப்படுத்துகின்றன.

எனக்கென்னடாவென்றால்,  சென்னையில் பிரசுரமான  'இந்தியா' பத்திரிகையின் ஆரம்ப இதழிலேயே,  பிரஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான 'சுதந்திரம்,  சமத்துவம்,  சகோதரத்துவம்' என்ற வார்த்தைகள் எப்படிப் பொருத்தமாக பத்திரிகையின் குறிக்கோளாகப் பதிக்கப்பட்டது என்பது.                                                                                                               

நம்மைக் கேட்டுக் கொண்டு எதுவும் நடப்பதில்லை..  இந்தப் பத்திரிகை பிற்காலத்தில் பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் பிரசுரமாகப் போவது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டது போலும்.

பகவத் கீதையின் இதய வாசகங்கள் தாம் நினைவுக்கு வருகின்றன.

" எது நடந்ததோ,  அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ,  அது நன்றாகவே நடக்கிறது.."


===================================================================

 எஸ். ஸ்ரீநிவாசாச்சாரியார் --  'S'  stands for  Sri Ranga Pattinam.   மண்டயம் ஸ்ரீனிவாசாச் சாரியாரும் இவரே.   மண்டயா என்ற ஊர் மைசூரில் ஸ்ரீரங்கப்  பட்டினம் அருகில் உள்ளது.   சென்னையில் இருந்த மைசூர் ஐயங்கார்களை அந்நாட்களில் மண்டயத்தார் என்று சொல்வது வழக்கம்.


**  டாக்டர் ஜி. கேசவன் அவர்கள் தொகுத்த "Bharathi and Imperialism --  A Documentation" என்ற  தொகுப்பில் காணப்படுபவை.  -- சிவகெங்கை பாரதி மண்டலம் வெளியீடு.

திரு. சீனி விசுவநாதன் (திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களின் ஹரிசுவடி கட்டுரையிலிருந்து)


படங்கள் உதவியோருக்கு நன்றி.

Tuesday, February 13, 2018

பாரதியார் கதை -- 10


                                               அத்தியாயம்-- 10

பால பாரத சங்கம் என்ற அமைப்பை பாரதியார் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு நிறுவினார்.   இந்த சங்கத்தின் சார்பில் சுதேசி இயக்கத்தை  பலப்படுத்த பல  கலந்துரையாடல்களும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன.   பாரதி விஜயவாடாவில் இருந்த விபின் சந்திர பாலரைச் சந்தித்து பால பாரத சங்க திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் பேச அழைத்து வருகிறார்.

1907 செப்டம்பரின் விபின் சந்திர பாலர் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப் படுகிறார்.  அவருக்கு ஆறு மாத கால காராகிரக தண்டனை. இந்த  அநியாயக் கைதையும் தண்டனையையும் எதிர்த்து  பால பாரத சங்கம் சார்பில் பொதுக் கூட்டம் போட்டு பாரதி முழங்கினார்.  பாரதி தலைமையில் கண்டன ஊர்வலமும் சென்னையில் நடக்கிறது.  இந்த கால கட்டத்தில் பாரதி
சூரத் காகிரஸுக்கான தமிழகப் பிரதிநிதிகளைத் திரட்டும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

கலகத்தா  காங்கிரஸூக்கு அடுத்த காங்கிரஸ் மாநாடு நாக்பூரில் நடப்பதாகத்  தான் இருந்தது.   ஆனால் திலகர் வழியில் தீவிரமாக செயல்படுவோரை உள்ளடக்கிய பிரதேசம் என்ற கருத்தில்  நாகபுரியில் நடப்பதாக இருந்த காங்கிரஸ் மாநாட்டை அந்நாட்களில் மிதவாத கோட்டையாக இருந்த சூரத்திற்கு மாற்றி விட்டனர்.

1907-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி  இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு சூரத்தில் தொடங்கியது.   600-க்கு மேற்பட்ட பிரதிநிதி நாட்டின்  பல பாகங்களிலிருந்தும் வந்திருந்தனர். மாநாட்டிற்குத் தலைவராக ராஷ் பிகாரி கோஷ் செயல்பட்டார்.  கோஷின் தலைமையை நேரு ஆதரித்தார்.

 இந்த காங்கிரஸ் மாநாடே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை அனுசரித்துப் போவதான மிதவாத போக்குக்கும்,  அவர்களை எதிர்த்து தீவிர போராட்டங்களை நிகழ்த்த வேண்டும் என்று துடித்த தீவிரவாத போக்குக்குமான வாக்குவாதங்களைக் கண்ட மாநாடாக அமைந்தது.   திலகர் இரண்டு பிரிவும் ஒத்துக் கொள்கிற ஒரு சமரசப் போக்கினை நிலைநாட்ட ஆன மட்டும் முயற்சி செய்தார்.                                   

சூரத் மாநாட்டில்  திலகரின் ஆதரவாளர்களாக  வ.உ.சிதம்பரம்  பிள்ளை, சுப்பிரமணிய சிவா,  பாரதியார் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட தமிழகப் 
பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர்.   சூரத்  காங்கிரஸில் ஏற்பட்டப் பிளவுக்குக் காரணம் தமிழ் நாட்டுப்  பிரதிநிதிகளின் முரட்டுத்தனத்தால் தான் என்று அந்தக்  காலத்தில் பரவலான ஒரு குற்றச்சாட்டு வலம் வந்தது.

சூரத் மாநாட்டிலிருந்து சென்னை திரும்பியதும்  பாரதியார் மேள தாள முழக்கங்களுடன் மக்கள் அணி திரள பொதுக்கூட்டம்  ஒன்றை நடத்தினார்.
மக்களிடம் சுதேசிய பொருட்களையே உபயோகிப்போம் என்ற உணர்வு ஓங்கியது.   'பாரத் பந்தர்' என்ற பெயரில் சுதேசிய பொருட்கள் விற்கும் கடையொன்று  திறக்கப்பட்டது.   பாரதியாரும், வ.உ.சியும் சுதேசிய  பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

சூரத் மாநாடு பற்றிய  முழு விவரங்களை பாரதி 'இந்தியா' பத்திரிகையிலும் எழுதினார்.  பின்னர் அதைத் தொகுத்து  'எங்கள் காங்கிரஸ் யாத்திரை' என்ற பெயரில் 2 அணா  விலையுள்ள புத்தகமாக வெளியிட்டார்.   'இந்தியா' பத்திரிகையில் பாரதி வாராவாரம் 'ஞானரதம்'  என்ற தலைப்பில் எழுதி வந்த கட்டுரைத் தொடர்  அந்நாளைய பத்திரிகை வாசிக்கும் பழக்கமுடைய தமிழர்களால் மறக்க முடியாத் ஒன்று.  பாரதியின் வசீகரமான நடை,  தமிழ் மொழியின் மயக்கும் அழகை தன் எழுத்துக்களில் கையாண்ட பாங்கு, தேசச் செய்திகளைத் தொகுத்தளித்த திறமை எல்லாம் இந்தியா பத்திரிகைக்கு திலகம் வைத்த அழகு போல மிளிர்ந்தன.  பின்னால் எட்டணா விலையில் 'ஞானரதம்' பகுதி  தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தது.

எதைச் செய்தாலும் அதற்கு மேலாக என்ன செய்ய வேண்டும் என்று எந்நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் குணம் தான் பாரதியாரை இயக்கிக் கொண்டே இருந்தது போலும்.

'இந்தியா'  பத்திரிகை கிட்டத்தட்ட நாலாயிரம் பிரதிகள் விற்பனையை நிச்சயப்படுத்தியது.   பிரம்மவாதின் என்று பெயரிடப்பட்ட அச்சுக்கூடத்திலிருந்து பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.  ஆங்கிலம் அறிந்த தமிழரிடையே சுதந்தர உணர்வை பற்றச் செய்வதற்காக 'பால பாரத்' என்ற ஆங்கில பத்திரிகையும் அதே அச்சகத்திலிருந்து 'இந்தியா' பத்திரிகையின் இணை இதழ் போல வெளிவர பாரதியார் அந்தப் பத்திரிகையிலும் எழுதினார்.

&&  'இந்தியா' பத்திரிகையின் முதல் பதிவு (Registration) 4-5-1906 அன்று எஸ்.என். திருமலாச்சாரியை உரிமையாளரகாவும் ஆசிரியராகவும் கொண்டு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.  31-5-1907-ல் எம். ஸ்ரீனிவாசனை உரிமையாளராகவும் பாரதியை
 ஆசிரியராகவும் கொண்டு பத்திரிகை வெளிவருவதாக அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பதிவுத் தகவல்கள் சொல்கின்றன.  பிறகு 7-8-1907 பதிவுத் தகவல்களின்படி  எம்.பி. திருமலாச் சாரியாரை  உரிமையாளராகவும், அவரே ஆசிரியாராகவும் பதிவுத் தகவல்கள் மாறியிருக்கின்றன.  ஆக பாரதியார் 31-5-1907-லிருந்து 6-8-1907 வரை மட்டுமே அரசாங்கத்திற்கு அனுப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 'இந்தியா' பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.   மீண்டும் 18-11-1907-ல் பதிவுத் தகவல்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இப்பொழுது எம்.ஸ்ரீனிவாசன் பத்திரிகை உரிமையாளராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார்.    15-8-1908-ல்  எஸ்.என். திருமலாச்சாரியார் இந்தியா பத்திரிகையின் உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்புக்களை ஏற்றுக்  கொண்டிருக்கிறார்.  இந்தத் தகவல்களிலிருந்து  எந்த அளவுக்கு அரசாங்கத்தின் கழுகுப் பார்வை 'இந்தியா' பத்திரிகையின் மீது உக்கிரமாக  படிந்திருந்தது என்று அனுமானிக்கலாம்.  அந்த உக்கிரத்தை மழுங்கடிக்கவே  இந்தியா பத்திரிகை நிர்வாகிகள் பத்திரிகை சம்பந்தப்பட்ட பதிவுத்   தகவல்களை அடிக்கடி மாற்றி எப்படியெல்லாம் வெகு சாமர்த்தியமாக போராடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

கடைசியில் இந்தியா பத்திரிகை வெளியீட்டார்கள் எதிர்பார்த்தது நடந்தே விட்டது.  பத்திரிகை கக்கிய எழுத்து வெப்பத்தை சகித்துக்  கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு இந்தியா  பத்திரிகை உரிமையாளர் திருமலாச்சாரியாருக்கும் பத்திரிகை  ஆசிரியர் சீனிவாசனுக்கும் வாரண்ட் பிறப்பித்தது.  அவசர அவசரமாகக்  கூடிய பத்திரிகையின் முக்கிய  குழுவும், நெருங்கிய நண்பர்களும்      பாரதியாரை அவர்கள் நெருங்குவதற்குள்  காப்பாற்றி விட வேண்டும் என்று பரபரத்தனர்.

(வளரும்)



&&   திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் 'ஓடிப்போனானா?' கட்டுரைத் தொடர்,    தமிழோவியத்தில் வெளிவந்த தொடர்.


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Tuesday, February 6, 2018

பாரதியார் கதை --9

                                                       அத்தியாயம்--9


1906  கல்கத்தா காங்கிரஸில் மிதவாத--தீவிரவாத கருத்து மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது.    1886-ல் இதே கல்கத்தாவில்  கூடிய இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய தாதாபாய் நெளரோஜியே 1906 காங்கிரஸூக்கும் தலைமை தாங்கினார்.

ஒவ்வொரு மாநாட்டிற்கும் அரைத்த மாவையே அரைக்கும் போக்கு மாறவில்லை எனில் காங்கிரஸின் தீவிரவாதிகளின் கை ஓங்கும் என்ற நிலையில் மாநாட்டிற்குத் தலைமை  தாங்கிய  மிதவாதி தாதாபாய்ஜியே நாட்டிற்கு  'சுயராஜ்யம் வேண்டும்'  என்ற தீர்மானத்தை  முன் மொழிந்து தீர்மானம் ஏகோபித்த ஆதரவுடன்  நிறைவேறியது.

அந்த கல்கத்தா மாநாடு பாரதியாரின் உணர்வுகளின் போக்குக்கு பெரும் வடிகாலாய் அமைந்து அவர் வாழ்க்கையிலும் 'அடுத்துச் செய்ய வேண்டியது என்ன?' என்பதற்கு வழிகாட்டுவதாய் அமைந்தது.  'சுயராஜ்யம் எமது பிறப்புரிமை; அதனை  அடைந்தே தீருவோம்' என்று கல்கத்தா காங்கிரஸில்  கர்ஜித்த பாலகங்காதர திலகரின் வீராவேச உரைகள் பாரதியாரை வழி நடத்துவதற்கான பாதையைப் போட்டது.   மனசுக்குள் உருவாகிய நிறைய வேலை திட்டங்களுடன்  உற்சாகமாய் சென்னைக்குத் திரும்பினார் பாரதி.

பாரதிக்குத் தெளிவாகத் தெரிந்தது.   ஜி.எஸ்.அய்யரின்  'சுதேசமித்திரன்'  புத்தம் புதிதாய் பூத்திருக்கும் தனது திலகர் வழி புரட்சிகர இலட்சியவாத கருத்துக்களை பதிப்பிப்பதற்குத் தாங்காது என்று தெரிந்தது. 'மித்திரன்' அந்நாளைய வெகுஜன  பத்திரிகையாக உலா வந்தது.  அதன் வாசகர்கள் மிதவாத--தீவிரவாத இரண்டும்  கலந்த ஆசாமிகள்.   பத்திரிகை என்று வரும் பொழுது பத்திரிகை அதிபர்  சில ரிஸ்குகளை எடுத்தாலும் வாசகர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப பத்திரிகை இல்லை எனில், பத்திரிகையின்  சர்குலேஷனுக்கு ஆபத்து ஏற்படலாம்.  அந்த விதத்தில் அய்யரை பலிகடா ஆக்குவதில் பாரதிக்கு விருப்பமில்லை.    மாதர் முன்னேற்றப்  பத்திரிகை மாதிரி தோற்றமளிக்கும் 'சர்க்கரவர்த்தினி'யும் சரிப்பட்டு வராது.  ஆங்கில மொழியில் வெளிவந்த முழு அரசியல் பத்திரிகைகளுக்கு ஈடாக தமிழிலும் ஒன்று வேண்டும் என்று பாரதியார் துடிதுடியாய் துடித்தார்.  ஆயிரம் கோட்டைகள் கட்டலாமே தவிர புதிதாய் ஒரு  பத்திரிகை ஆரம்பிப்பது என்பது பாரதியின் சக்திக்கு மீறிய செயல்.  பத்திரிகை என்பது முற்றிலும் பாரதியின்  நிலைமைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம்.   இந்த நிலையில் என்ன செய்வது என்று அவர் யோசித்த பொழுது தான் ஆபத்பாந்தவனாய் அனாதரட்சகனாய் மண்டயம் திருமலாச்சாரியார், 'நானிருக்கக் கவலையேன்?' என்று பாரதிக்குத் துணையாய் வந்தார்.

மண்டயம் திருமலாச்சாரியாருக்கு தேசப்பற்று இருந்தது.  புரட்சிகர சிந்தனைகள் இருந்தது.  வேண்டிய அளவு செல்வமும் இருந்தது.  பாரதி மேல் அளப்பரிய பக்தியும்  தேசவிடுதலைக்கு தன் அளவில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேகமும் இருந்தது.  இத்தனையும் திருமலாச்சாரியாரிடம் கூடி வந்து இருக்கையில்  தமிழுக்கென்று ஒரு முழு அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பதில் தடையென்ன இருந்து விடப் போகிறது?...


ஒரு சுபயோக சுபதினத்தில்  இந்திய சுதந்திர வேள்வியை வளர்ப்பதற்காக 'இந்தியா'  பத்திரிகை ஜனனம் நிகழ்ந்தது.  9-5-1906  அன்று இந்திய தேசத்தின்  பெயரிலேயே 'இந்தியா'  குழந்தை  பிறந்தது.  பத்திரிகையின் ஆசிரியர் பாரதியார் தான்  என்றாலும் மண்டயம் திருமலாச் சாரியாரின் உறவினரான  சீனிவாசன் என்பவர் பெயர் ஆசிரியராகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  எல்லாம் காரணமாகத் தான்.  எல்லா அடக்குமுறைகளையும் எதிர்பார்த்தே திருமலாச்சாரியார் பத்திரிகையின் வெளியீட்டைத் தீர்மானித்திருந்தார்.  எந்த இக்கட்டிலும் பாரதியார் சிக்காமல் தப்பித்து விட வேண்டும் என்பதற்கான எல்லா யோசனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பாரதி  கையை வைத்தால் எதுவும் தவறாகப்  போனதில்லை.  இதழியலில் பல புதுமைகளைப்  புகுத்தியவர் அவர்.   அது வரை வாரப்பத்திரிகை அளவில் இருந்த  வழக்கத்தை  மாற்றி 'இந்தியா' பத்திரிகையை முழு செய்தித்தாள் அளவில் கொண்டு வந்தார்.  பத்திரிகை வெளிவரும் நாளைக் குறிப்பிட  ஆண்டு, மாதம், நாள் இவற்றை தமிழில் குறிப்பிட்டார்.  பக்க எண்களையும் தமிழில் குறித்தார்.  தமிழ் இதழியலில் இந்தப் புரட்சியை முதன்  முதல் செய்தவர் பாரதியாரே.

பத்திரிகை சந்தா கட்டணத்திலும் உலகிலேயே இல்லாத அளவுக்கு ஒரு புரட்சியைச் செய்தவர் பாரதி.

ரூ.200/-க்கு குறைவாக மாத வருமானம் உள்ளோருக்கு ஆண்டு சந்தா ரூ.3/-
ரூ.200/-க்கு அதிகமாக மாத வருமானம் உள்ளோருக்கு ஆண்டு சந்தா  ரூ.10/-
ஜமீன் தார்கள், பிரபுக்கள் போன்ற வசதி  படைத்தோருக்கு  ஆ.சந்தா ரூ.30/-

பாரதியார் எந்தவிதமான ஆதாரத்தை சமர்பிக்கச் சொல்லி இப்படியான புதுமையான சந்தா முறையைப் நடைமுறைப் படுத்தினார் என்று தெரியவில்லை. இருந்தாலும் இதழியல் துறையில் பாரதிக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, பத்திரிகை சந்தா விஷயத்தில் இப்படி ஒரு  முறையைக் கைக்கொண்டவர் வேறு யாருமில்லை என்ற பெருமை பாரதிக்குச் சொந்தமாகிறது.

இந்தியா இதழ் வார ஏடாக சனிக்கிழமை தோறும் வெளிவந்தது.  16 பக்கங்கள்.  பத்திரிகையின் குறிக்கோள்  'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்று பிரகடனப்படுத்தியிருந்தார் பாரதியார்.  பிரஞ்சு  புரட்சி உலகத்திற்கு வழங்கிய  மனித குலத்திற்கான மூன்று வார்த்தை மந்திரங்கள் இந்தியா பத்திரிகையின் குறிக்கோளாக முழங்கப் பட்டது.

தமிழ் இதழியல் துறையில் அரசியல் கார்டூன் (கருத்துப்படம்) போடுவதை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் பாரதியாரே.  'இந்தியா' பத்திரிகையின் முதல் பக்கத்தில்  கருத்துப்படம்  பிரசுரித்து அவர் ஆரம்பித்து வைத்த முறை  இன்றும் தொடர்கிறது.  செய்திகளுக்குத்  துணைத் தலைப்புகள் கொடுத்து அந்த துணைத்தலைப்பினை செய்திகளிலிருந்து  பிரித்துக் காட்டும்படி ஃபாண்ட் (Font) சைஸ் மாற்றி வெளியிட்டிருக்கிறார்.

பத்திரிகையில் எழுதும் சில விஷயங்களை எழுதியது தான் தான் என்று  காட்டிக் கொள்ளாமலிருக்க வேண்டிய நிர்பந்தம்  பாரதிக்கு பல காலங்களிலும் ஒரு சுமையாகவே இருந்திருக்கிறது.  வேதாந்தி, ராமதாஸன், தேசாபிமானி, காளிதாசன், ஷெல்லிதாசன்,  சக்திதாசன், சாவித்திரி என்ற புனைப்பெயர்களில் ஒளிந்து கொண்டு  எழுதும் நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.  அது தவிர அன்பின் அடிப்படையில் தன்  மனைவி செல்லம்மாள் பெயரிலும் பாரதி எழுதியிருக்கிறார்.  பாரதியாரின் இந்த  பாதிப்பில்  வ.வே.சு. ஐயர், மீனாட்சியம்மாளாகவும்,  நீலகண்ட  பிரம்மச்சாரி, கமலநாயகியாகவும்  மாறியிருக்கின்றனர்.  பாரதி ஆரம்பித்து வைத்த  மனைவி பெயரில் எழுதுவது சுஜாதா வரை  தொடர்ந்திருப்பதும் ஒரு வரலாறு தான்.


(வளரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி.

Related Posts with Thumbnails