மின் நூல்

Saturday, September 22, 2012

பார்வை (பகுதி-60)

கீழ்த்தளம் வாடகைக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  அதுவும், வீட்டுக்குப் பக்கத்திலே மெயின் ரோடிலேயே என்பது பல விஷயங்களுக்கு ரொம்ப செளகரியமாகப் போயிற்று.

ஒரு வாரமாக வித்யாவும் உஷாவும் யோசித்து யோசித்து எடுத்த முடிவு.  முடிவு எடுத்தவுடன் அடுத்து செய்ய வேண்டியவைகளை விவரமாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டனர்.  குறித்துக் கொண்ட விஷயங்களில் தகுந்த இடம் கிடைப்பது தான் முக்கியமாகப் பட்டது. வல்லப கணபதி கோயிலுக்கு தரிசனத்திற்காகப் போயிருந்த பொழுது தான் புதுசாகக் கட்டிய அந்த கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் 'வாடகைக்காக' என்று போட்டிருந்த அறிவிப்பை வித்யா பார்த்தாள்.  அறிவிப்போடேயே தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பரும் இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் உஷாவிடம் முதல் வேலையாக விஷயத்தைச் சொன்ன பொழுது வேறு யாரும் முந்திக் கொள்வதற்குள் விஷயத்தை முடித்து விட வேண்டும் என்று அவள் துடியாய்த் துடித்தாள்.  அவள் கணவர் ஆபிஸூக்கு அன்று விடுப்பு போட்டிருந்தது நல்லதாகப் போயிற்று.  அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் அவருக்குத் தெரிந்தவராய் இருந்தது, அடுத்த நல்லதாய் அவர்களுக்கு ஆயிற்று..  வித்யா ரிஷிக்கு போன் போட்டுச் சொன்னாள்.  ரிஷி, உஷாவின் கணவரிடம் பேசினான். அடுத்து உஷாவின் கணவர், இடத்திற்குச் சொந்தக்கார நண்பரிடம் பேச கிட்டத்தட்ட அந்த விஷயம் முடிந்த மாதிரியே ஆகிவிட்டது. அன்று மாலை எல்லோரும் உட்கார்ந்து பேசும் போது வாடகை விஷயமும் முடிவாகி அலுவலகத்தைத் தொடங்க நாளும் குறித்து விட்டார்கள்.;

'அ' முதல் 'ஒள' வரை-- என்று முதலிலேயே தீர்மானித்திருந்த பெயரில் எந்த மாற்றமும் இல்லாமல், போர்ட் எழுத ஆர்டிஸ்ட்டிடம் ஆர்டர் கொடுத்தார்கள்.  ஆர்டிஸ்ட் மிகவும் பழக்கப்பட்டவர்.  இரண்டே நாட்களில் அற்புதமாக வேலையை முடித்துத் தந்தார்.  தன்னையும் அவர்கள் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள விண்ணபித்தார். "நீங்களில்லாமலா?" என்று உஷா சொன்னதே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

இந்த வியாபாரத்திற்கான நெட் ஒர்க்கை வித்யாவும் உஷாவும் சேர்ந்தே தயாரித்தார்கள்.  நகர்ப்புறங்களில் வாழ்பவர்களின் பல சங்கடங்கள் விசித்திரமானவை.  ஒரு பக்கம் தேவைகள், மறுபக்கம் அந்தத் தேவைகளுக்கு தரமான முறையில் உடனடித் தீர்வுகள் காணமுடியாத தவிப்பு. அப்படியான அவர்களின் தேவைகளைக்க் குறிவைத்து ஒரு பெரிய பட்டியலையே அவர்கள் தயாரித்திருந்தார்கள்.  ப்ளம்பர் வேலையிலிருந்து கல்யாண ஏற்பாடுகள் வரை எதையும் விட்டு வைக்கவில்லை..  இன்னொரு பக்கம் அப்படியான தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யக் கூடிய நம்பகமான நபர்களைக் கொண்ட நிறுவனங்கள்.  கணக்கெடுத்ததில் அப்படியான நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாக இருநூறுக்கும் மேலே தேறிற்று.  நிறுவன உரிமையாளர்களிடம் பேசிப்பார்த்த பொழுது தான், அவர்களின் முயற்சி மிகப் பெரிய அளவில் வெற்றியடைவதற்கான வெளிச்சம் தெரிந்தது.  நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கும் தங்களுக்கும் இடையே இவர்கள் தொடங்கியிருக்கிற மாதிரியான ஒரு கம்பெனி இருந்தால் தங்கள் வேலை மிகச் சுலபமாக முடியும் என்று அபிப்ராயப் பட்டார்கள்.  ஒரு வேலைக்கு குறைந்த பட்சம் மூன்று நிறுவனங்கள் என்கிற விகிதாச்சாரத்தில் பட்டியலிட்டு முடித்த பொழுது முக்கால் வாசி வேலை முடிந்த மாதிரி இருந்தது.

வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க வேண்டுமா, தண்ணீர் குழாய் ரிப்பேரா, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டதா, எலெக்டிரிக் வேலையா இல்லை எலெக்ட்ரானிக் வேலையா, கல்யாணத்திற்கு சத்திரம் ஏற்படா, சமையல் வேலையா எதுவென்றாலும் உடனடியான தீர்வுக்கு 'அ' முதல் 'ஒள'வைத் தொடர்பு கொண்டால் போதும், இரண்டு மணி நேரத்திற்குள் அட்டண்ட் செய்யப்படும் என்று விளம்பர நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

"நமக்குன்னு வாடிக்கையாளர்கள் அமைய வேண்டும்.  அதற்கு என்ன செய்யலாம்?" என்று உஷா தவித்தாள்.

"பேசாமல் உறுப்பினர் அட்டை வழங்கி விடலாம்.  அது வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும்" என்றாள் வித்யா.

"உறுப்பினர் அட்டை இலவசமாகக் கொடுத்தால், அதில் சுவாரஸ்யம் இருக்காது.  குறைந்தபட்சமாக ஒரு தொகையை உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாக வசூலித்து விடலாம்" என்றான் ரிஷி.  "அது எளிய மக்களும் உறுப்பினராக சேருவதற்கு வசதியாக மிகக் குறைந்த தொகையாக இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் அவர்களாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகப்படுத்திக் கொள்ள விருப்பமின்றி விலகும் பொழுது, அவர்கள் செலுத்தியிருக்கும் உறுப்பினர் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்" என்றான் அவன்.

உறுப்பினர் சேர்க்கைக் கட்டணத்தை ரூ.100/- ஆகத் தீர்மானித்தனர். பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்களுக்கு 30% கமிஷன் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்.  சிறிய நிறுவனங்கள் 15% கொடுக்க சம்மதித்தார்கள்.  பெரிய வேலைகளுக்கு பெரிய நிறுவனங்களையும் சிறு சிறு வேலைகளுக்கு சிறிய நிறுவனங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானமாயிற்று.  பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைக்கு 20%-ம், சிறிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைகளுக்கு 10%-ம் தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்குத் தந்து விட வேண்டுமென்று கொள்கை ரீதியாகவே முடிவெடுத்தார்கள்.   பெரிசோ, சிறிசோ செய்கிற வேலை நறுவிசாக இருக்க வேண்டுமென்றும், குறித்த காலத்தில் கொடுக்கப்பட்ட பணியை முடித்துக் கொடுப்பதில் இரண்டாவது கருத்து இருக்கக் கூடாது என்பதிலும் கறாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் உஷாவின் கணவர்.  ஒவ்வொரு கட்ட ஆலோசனையிலும் வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதிலும் அதில் எந்த சறுக்கலுக்கும் இடமில்லை என்பதில் மிக மிக கவனமாக இருந்தார்கள்.

நேரிலும் தொலைபேசி மூலமாகவும் உறுப்பினர்கள் 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப் பட்டது.  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பணி தொடங்கும் நாளில் மொத்த செலவில் 50% பட்டுவாடாவும், பணி முடிந்தவுடன் பாக்கி பணத்தில் அவர்களுக்கான தள்ளுபடி கழித்துக் கொண்டு செலுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.  எந்தப் பணியிலும் பணி முடிந்த பிறகு எந்தக் குறைபாடும் இருந்தால் அந்த குறைபாடு நிறுவனத்தின் செலவில் களையப்பட்டு வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்கிற உறுதிமொழி, உறுப்பினர் விண்ணப்பப் படிவத்திலேயே கொட்டை எழுத்துக்களில் அச்சடித்து அதை உறுதிபட வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


ரு சுபயோக சுபதினத்தில் 'அ' முதல் 'ஒள' வரை நிறுவனத்தின் தொடக்க நாள் விழா, களைகட்டியது.

சந்தனப் பேலா நீட்டி பன்னீர் தெளித்து என்று வெளி போர்டு பார்த்து உள்ளே நுழைந்தவர்கள், கிடைத்த வரவேற்பில் நனைந்தனர்.  புதுமாதிரியான உபசரிப்பு, புது மாதிரியான அனுபவம், புது மாதிரியான உற்சாகம் என்று கலந்து கட்டி எல்லாவற்றிலும் திட்டமிட்டு கலக்கியிருந்தாள் உஷா.

ஆரம்ப நாளன்றே அந்த அதிசயம் நடந்தது.  காலையிலேயே பதினோறு மணியளவிலேயே முன்யோசனையாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை சுகிக்க உறுப்பினர் ஆனவர்கள் எண்ணிக்கை எழுபதைத் தாண்டியது.

"இது என்னங்க, புது மாதிரி கடை?"

"கடை இல்லை.  பதிவு அலுவலகம்.. சொல்லப்போனால் சேவை நிறுவனம்"

"என்ன பதிவு பண்ணுவாங்க?"

"எல்லாம். தினம் பொழுது விடிந்தால் எத்தனை தேவை இல்லை நமக்கு?.. நியாயமான உங்களோட அனைத்துத் தேவைகளின் தீர்வுகளுக்கும் இங்கே அணுகலாம். நல்ல தரமான சேவை.  விரைவான சேவை.  குறைவான தொகையில். மொத்த கட்டணத் தொகையில் நிறுவனம் தன் அன்பளிப்பாகக் கொடுக்கும் தள்ளுபடியும் உண்டு."

"மெய்யாலுமேவா?  இல்லை, சும்மாக்காச்சுமா?.."

"சும்மா இல்லை, நிஜமாவே!  வீட்டிற்கு கலர் வாஷ்-- பளபள பெயிண்ட்! இவ்வளவுக்கும் எவ்வளவு ஆகும் என்று நினைக்கிறீர்கள்?.. உள்ளே வந்து விசாரியுங்கள். உறுப்பினர் ஆகுங்கள்.  உங்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் உண்மையான தள்ளுபடி உண்டு."

"அதுசரி, அது என்னங்க,  புது மாதிரி பேரு?  'அ' முதல் 'ஒள' வரைன்னா"

"இங்கிலீஷ்லே சொல்லலையா,  A to Zன்னு?..  அந்த மாதிரி தமிழ்லே! தமிழ் உயிரெழுத்திலே! அ முதல் ஒள வரைன்னு!  உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் தீர்வு, ஒரே கூரையின் கீழே!  வருக! வருக!"

ஓர் ஆணும், பெண்ணும் மாற்றி மாற்றி கேள்வியும் பதிலுமாய் பேசுவதை புதுவகை விளம்பரமாய் 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக வாயிலில் கட்டியிருந்த லவுட் ஸ்பீக்கர் சொல்லிக் கொண்டிருந்தது....  வாசகங்களை மாற்றி வெவ்வேறான வகையில் இப்படி நிறைய தயாரித்து வைத்திருந்தார்கள்.  கேட்பவர்களுக்கு சலிப்பேற்படுத்தாமல், ஆவலைத் தூண்டும் வகையில் அந்த தயாரிப்புகள் இருந்தன.  மொத்தத்தில் தெருவில் சென்றவர்களின் முக்கால் வாசிப்பேர் கவனத்தை அந்த 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக விளம்பரம் கவர்ந்து கொண்டிருக்கையில்....

அந்த சமயத்தில் இரண்டு வாழைமர லோடோடு வாசல் பக்கம் டயர் வண்டி.  ஒன்று வந்து நின்றது.   வண்டிக்கு முன்னால் பைக்கில் வந்தவர், "சீட்டு வாங்கியாந்துடறேன். வெயிட் பண்ணு.." என்று வண்டியோட்டியிடம் சொல்லிவிட்டு, 'அ' முதல் 'ஒள' வரை அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

முன் அறையில் வித்யா கிடைத்தாள்.  வாழைமரங்கள் போய்ச்சேர வேண்டிய விலாச அட்டை கொடுத்து விளக்கினாள். "மேட்லி பிரிட்ஜ்ஜாண்டே திரும்பி கொஞ்ச தூரம் உள்ளார போனா கல்யாண சத்திரம் தெரியும்"  என்று சத்திரத்தின் பெயரைச் சொன்னாள்.  சத்திர வாசல்லே பெரிய டிஜிட்டல் போர்ட்லே, திருவளர் செல்வி லஷ்மி - திருவளர் செல்வன் நாராயணன்-ன்னு பெயர்கள் பளபளக்கும். அதான் அடையாளம்.  பெரியசாமி இல்லத் திருமணம்ன்னு பெரிசா வளைவு கூட கட்டியிருப்பாங்க..

"சத்திரம் தெரியும்மா.  சேர்த்திடறேன்."

"மணமகனுக்கு அப்பா பெரியசாமி.  அவர் அங்கே தான் இருக்கார்.  அவர் கிட்டே கேட்டுகிட்டு, அவங்க சொல்றபடி வாழைமரங்களைக் கட்டிட்டு வாங்க..  கையோட மொபைல்லே அம்சமா ஒரு போட்டோவும் எடுத்திட்டு வாங்க" என்றாள். "பில் செட்டில்மெண்ட்லாம் இங்கே தான்.  அவங்க கிட்டே ஒண்ணும் கேட்கப்படாது.  சரியா?.."

"சரிம்மா.."

அலுவலகம் ஆரம்பித்து முதல் பணியாக ஒரு கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளுமாக, அதுவும் நாராயணன்-லஷ்மி கல்யாண ஏற்பாடாக இருந்ததில் வித்யாவிற்கு ஏக குஷி.

அந்தக் கல்யாண சத்திரத்தில் தான் எழுத்துப்பட்டறையின் போது தான் பையன் ஜாதகத் தேவை பற்றி ஊர்மிளா வித்யாவிடம் பிரஸ்தாபித்தாள். அவள் கேட்டதற்கு அடுத்த நாளே நாராயணனின் ஜாதகத்தை வித்யா அந்த கல்யாணச் சத்திரத்தில் தான் ஊர்மிளாவிடம் கொடுத்தாள்.  எழுத்துப் பட்டறைக்குப் போகும் போது இந்த மணமகன் நாராயணனின் தந்தை பெரியசாமி தான் தன் ஆட்டோவில் இந்த கல்யாண சத்திரத்தில் தான் உஷாவையும் அவளையும் இறக்கி விட்டார்.  அப்பொழுது கூட, 'கல்யாண பேச்சு பேசிக் கொண்டே கல்யாண சத்திரத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.. உங்க பையனின் கல்யாணமும் இனிதே நடக்கட்டும்' என்று வித்யா பெரியசாமியிடம் சொன்னாள்.

இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட இந்தக் கல்யாண சத்திரத்திலேயே இவர்கள் கல்யாணமும்! என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்?  உம்?..

எது தான் முன் கூட்டியே தெரிகிறது?..

பின்னால் எல்லாம் நடந்த பிறகு தான், முன்னால் நடந்ததெல்லாம் வரிசை வரிசையாக நினைவுக்கு வந்து 'அட, இதெல்லாம் முன்கூட்டியே தெரியாம போச்சே'ங்கற நினைப்பும் வர்றது.

நிகழ்வுகளின் வரிசைப்படுத்துதலில் இருக்கும் சூட்சுமமே அது தானோ என்று வித்யா நினைத்தாள்.




                                           (நிறைவுற்றது)



    






Wednesday, September 19, 2012

பார்வை (பகுதி-59)

மைலாப்பூர் தேர்நிலை தாண்டி ஒரு குறுக்குச் சந்தில் இருந்தது, வராஹமிஹிரரின் வீடு.  வீட்டு இலக்கங்களை சரிபார்த்துக் கொண்டே வீட்டை நெருங்குகையிலேயே, வாசல் பக்கம் வாலைத் தூக்கிக் கொண்டு ரெடியான மாடு போட்டு முடிக்கட்டும் என்று காத்திருந்து, முடித்ததும்
அதற்கு இடைஞ்சல் இல்லாமல் சுற்றிக்கொண்டு படியேறினார்கள் ரிஷியும், வித்யாவும்.

கடப்பைக் கல் பாவிய திண்ணையும் ஓட்டுவில்லைக் கூரைகளுமாய் வால் மாதிரி நீண்ட ஒற்றைச் சார்பு குடித்தனங்கள்.  வாசல் பக்கம் 'ஹோ'வென்றிருந்தது. இந்த ஏகப்பட்ட பொந்துகளில் எந்தப் பொந்திலோ வராஹமிஹிரர் வசிக்கிறார் என்று நினைத்துப் பார்ப்பதற்கே கழிவிரக்கமாய் இருந்தது.  'எதற்காகவோ தான் இதெல்லாம்; இதற்கப்புறம் பொன் மாளிகையாகக் கூட இருக்கலாம்; யார் கண்டார்கள்?' என்கிற நினைப்பு வந்ததும் வித்யாவிற்கு மனசு தெளிவடைந்தது.   'மண் குடிசை வாசலென்றால், தென்றல் வர வெறுத்திடுமா?' என்று இராகத்துடன் முணுமுணுத்தப்படி உள்பக்கம் முன்னேறிய ரிஷியைத் தொடர்ந்தாள் வித்யா.

வருவதற்கு முன்பே தொலைபேசியில் கேட்டு,"பேஷாய், வாருங்கள். வீட்டில் தான் இருப்பேன்" என்று அவர் சொன்னவுடன் தான் வந்திருந்தார்கள்.  மொபைல் மவுசில் இந்த மாதிரி சின்னஞ்சிறு குடித்தனங்களில் கூட தொலைபேசி இருக்கிறதே என்று வித்யா நினைத்துக் கொண்டாள்.

வெளிப்பக்கம் துள்ளிக் குதித்து வந்த ஒரு தாவணி சிறுசை வழிமறித்து ரிஷி கேட்டதும், அவள் பயந்தே போய்விட்டாள் போலத் தெரிந்தது.  பின்னாடி வித்யாவும் நிற்பதைப் பார்த்துத் தான், தெளிவடைந்து, "யாரைப் பாக்கணும்?.." என்று ஈனஸ்வரத்தில் குரல் வந்தது.

"மிஸ்டர் வராஹமிஹிரரை.. இங்கே தானே?.."

"தாத்தாவையா?.. வாங்கோ.." என்று திரும்பி முன்னேறியவளை புன்னகையு டன் தொடர்ந்தார்கள்.

நாலு குடித்தனங்கள் தாண்டி அடுத்ததில் நுழைந்தாள்.  குட்டி வாசல் பக்கம் போட்டிருந்த கோலத்தை மிதித்து விடாமல் ஒதுங்கி நின்றாள் வித்யா.

"உள்ளே வாங்கோ..." என்று அவர்களை உள்ளே அழைத்து விட்டு, "தாத்தா.. உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கா.." என்று அறிவித்து விட்டு, இவர்கள் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு 'வாங்கோ'.

"யாரு.." என்று கேட்டபடியே யக்ஞோபவீதம் தரித்த மார்புக் கூட்டில் ஒரு காசித்துண்டு தொங்க வெளிப்பக்கம் வந்தவர், "யாரு.. தெரிலேயே!.." என்று திகைத்து, ஒரு நிமிடத்தில் புரண்ட ஞாபகச் சிதறலில் நினைவு வந்து, "ஓ.. நீங்க தானே போன்லே பேசினது? வாங்கோ.. வாங்கோ.." என்று தட்டி மறைப்பைத் தாண்டி உள்ளே கூட்டிக்கொண்டு போனார்.

சின்ன ஹால், பூஜை மாடத்தோடு இருந்தது.  மாடத்திற்கு கீழே கோலம் போட்டு கேரள குத்து விளக்கு.  தேய்த்த மினுமினுப்பில் தீப ஒளிக்குப் போட்டி போட்டுக் கொண்டு ஜ்வலித்தது.

அதற்குள் வலது பக்க மூலை ரூமிலிருந்து மடிசார் கட்டுடன் வந்த பெண், அவர்களைப் பார்த்து, "வாங்கோ.." என்று முகமலர்ந்தாள்.  மடித்து வைத்திருந்த இரண்டு ஸ்டீல் சேர்களைப் பிரிக்கப் போனாள்.  அதற்குள் "இப்படி வர்றேளா?" என்று பக்கத்து ரூம் பக்கமிருந்து குரல் வந்தது.  வராஹ மிஹிரரின் ஆஸ்தான அறை அதுவென்று தெரிந்து, மடிசார் பெண் பக்கம் பார்த்து முறுவலித்து விட்டு ரிஷியைத் தொடர்ந்து உள்ளே போனாள் வித்யா.

ரூமுக்குள் போனதும் பெரிய ஜன்னல் பக்கம் பின்பக்கத் தெரு தெரிந்தது.  அங்கேயும் ஒரு மாடு....

"உட்காருங்கோ.." என்று வராஹமிஹிரர் தயாராக இருந்த நாற்காலிகளைக் காட்டினார். "என்ன, சாப்பிடறேள்?"

"இப்போத் தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க போஜனம், ஆயாச்சா?"

"ஓ.. ஒம்பதுக்கெல்லாம் முடிச்சிடுவேன்.. சொல்லுங்கோ.."

"உங்களைப் பாத்து பேசணும்ன்னு ரொம்ப நாள் ஆசை.. ஊர்மிளா தான் உங்க நம்பர் கொடுத்தா.." என்று ஆரம்பித்தாள் வித்யா.

"ஊர்மிளாவா?.. லஷ்மணன் சம்சாரம் இல்லையா?" என்று சொல்லி, அவரே தொடர்ந்தார். "இராமயண லஷ்மணன் இல்லை, எழுத்தாளர் லஷ்மணன்.  நல்ல ஆத்மா.." என்று கைதூக்கி, எதிரில் லஷ்மணன் இருப்பது போலவே நினைவில் கொண்ட மாதிரி, "நன்னா இருக்கட்டும்.." என்று ஆசிர்வாதம் பண்ணினார்.  "செந்தாமரைன்னு ஒரு பத்திரிகை இருக்கில்லியோ.. அதிலே வாராவாரம் ராசிபலன் எழுத லஷ்மணன் தான் ரெகமண்ட் பண்ணினான். அப்புறம் தான் நான் எழுதறதே சூடு பிடிச்சது.. நன்னா இருக்கட்டும்.." என்று மறுபடியும் கைதூக்கி காற்றில் ஆசிர்வாதம் பண்ணினார்.

ரிஷியின் உடல் சிலிர்த்தது. "அவர் சொல்லித் தான் எனக்குக் கூட நிறைய எழுத வாய்ப்பு கிடைச்சது.." என்றான்.

"ஓ.. நீங்க கூட எழுத்தாளரா?"

"லஷ்மணன் சார் மாதிரி முழுநேர எழுத்தாளர் இல்லே.  எல்.ஐ.சி.லே வேலை செய்யறேன். ஒழிஞ்ச போது எழுதறது.."

"அப்படியா?" என்று யோசனையுடன் இழுத்தவர், "நீங்க தான் எனக்குப் போன் பண்ணினது.  இல்லையா?" என்று சட்டென்று திரும்பி வித்யாவைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமாம். நான் தான். என் ப்ரண்ட் ஊர்மிளாகிட்டே கொஞ்ச நாளைக்கு மின்னாடி பேசிண்டிருக்கறச்சே, நம்மைச் சுத்தி நடக்கற நிகழ்ச்சிகளைப் பத்தி பேச்சு வந்தது.  பேசறத்தையே எனக்கு நிறைய சந்தேகங்கள்.  அவங்க தான் சொன்னாங்க. உங்கள் டெலிபோன் நம்பரைக் குடுத்து, 'இதெல்லாம் பத்தி அவருக்குத் தான் தெரியும்.  போன் பண்ணிட்டு, அவருக்கு செளகரியம்ன்னா போய்ப் பாருங்கோ'ன்னா. இப்போ ரெண்டு நாளா இவருக்கும் இதிலே ஈடுபாடு வந்திருக்கு.  நடக்கற நிகழ்வுப் போக்குகளை மெயினா வெச்சு ஒரு நாவல் எழுதணும்ன்னு ஆசையா இருக்குன்னார்.  சரின்னு வந்திட்டோம்.  எங்க சந்தேகங்கள் குழந்தைத்தனமானவை. நீங்கப் பெரியவா, அதையெல்லாம் சகிச்சிண்டு எங்களுக்கு நிறைவேற்படுத்தினா ரொம்ப சந்தோஷப்படுவோம்" என்று சொல்லி முடித்தும்,  தான் நினைக்கறதைச் சரியாச் சொன்னோமா என்று வித்யாவிற்கு சந்தேகமாக இருந்தது.  இருந்தாலும் அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தலையை லேசாக அசைத்த வராஹமிஹிரரைப் பார்த்து ஓரளவு அவருக்குப் புரிகிற மாதிரி தான் தெரியப்படுத்தி விட்டோம் என்று வித்யா நினைத்தாள்.

"நான் இதுக்கெல்லாம் அத்தாரிட்டி இல்லே.  இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச்சதைச் சொல்றேன். என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்று லேசாகக் கையுயர்த்தி தலையைத் தடவி விட்டுக் கொண்டார் வராஹமிஹிரர்.

"ஒரு நிகழ்ச்சி நடக்கறதுக்கும், மனுஷங்களோட பங்களிப்பு நடக்கற அந்த நிகழ்ச்சிலே இருக்கறதுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?" என்று வித்யா தலை நிமிர்ந்து அவரைப் பார்த்துக் கேட்ட போது, என்ன கேட்கணும்ங்கறதை முதலிலேயே தீர்மானிச்சு கேக்க வேண்டியதைக் கேள்விகள் ரூபத்திலே உருவாக்கி பலதடவை அவற்றை நினைச்சு நினைச்சு மனசில் உருவேற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

"என்ன அப்படிக் கேட்டுட்டேள்?..  நிச்சயம் உண்டும்மா" என்றார் வராஹமிஹிரர். "எந்த நிகழ்ச்சியும் தானா நடக்கறதில்லே.  அப்படி நடக்கறதுக்கு சில சேர்க்கைகள் வேண்டும். புரியற மாதிரிச் சொல்லணும்னா, சின்ன சின்ன சில நிகழ்வுகளின் ஒண்ணாச் சேர்ந்த வெளிப்பாடு தான் ஒரு நிகழ்ச்சி.  நிகழ்வு, நிகழ்ச்சி-- இந்த வார்த்தைகள்லே ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லே.  உங்களுக்குப் புரியறதுக்காகச் சொன்னேன். இப்பவும் புரியறத்துக்கு கஷ்டமா இருந்தா, சின்னச் சின்ன கூறுகள்ன்னு வேணா வெச்சிக்கோ.  பல சிறு சிறு கூறுகளான நிகழ்வுகளின் சேர்க்கை தான் ஒரு நிகழ்ச்சி.  பல வித நிகழ்வுகளின் சேர்க்கைலே ஒரு திருமணம் நடக்கறது.  இதிலே ஆணும் பெண்ணும் தம்பதிகளானாங்கங்கற நிகழ்ச்சி தான் மேலோட்டமா பாக்கறச்சே தெரியும்.  அப்படி அவங்க தம்பதிகளான நிகழ்ச்சியின் தொடர்ச்சியா அதுக்குப் பிந்தி ஒரு வரலாறே அவங்களை வைச்சுத் தொடரும். ரெண்டு நிலை.  ஒரு நிகழ்வுக்கு நிகழ்வை நோக்கி நகர்ற ஒரு நிலை, அந்த நிகழ்வுக்கு அப்புறம் அந்த நிகழ்வின் பலனான இன்னொரு நிலை.  ஒரு மாணவன் தேர்வுக்கு படிக்கிறான்னு வைச்சுக்கோங்கோ. இது தேர்வுங்கற மைய நிகழ்வுக்கு முன்னான அதை எதிர்பார்த்து எதிர்கொள்வதான ஒரு நிலை.  தேர்வுங்கற நிகழ்வு நடந்தபிறகு அந்தத் தேர்வில் வெற்றி அல்லது தோல்வி அவன் அடையறதை வைச்சு அந்த நிகழ்வின் பலனாக அடுத்து வரும் நிலை.  இப்படி ரெண்டு நிலை. நிறைய இப்படி இருக்கு.  இந்த நிறையங்கறது நிறைய நிறையத் தொடர்ந்து ஏற்படறதுனாலே, பலது ரொம்ப சாதாரணமா ஆயிடுத்து.   இயற்கையாகவே பலது நம்ம யோசனைக்கு அப்பாற்பட்டு நடக்கறது.  அதெல்லாம் பத்தி யோசிக்காமயே நாம போயிட்டோம்ங்கறது தான் அதிசயம்.  ஒண்ணுமில்லே; புஷ்பங்கள்லே தேனை உறிஞ்சறத்துக்காக உக்கார்ற வண்ணத்துப் பூச்சி, வண்டுகள் மாதிரி சின்னஞ்சிறு பூச்சிகளோட கால்கள்லே அந்தப் பூக்களின் மகரந்தங்கள் ஒட்டிண்டு இன்னொரு பூவுக்கு கடத்தப்பட்டு மகரந்த சேர்க்கை எப்படி நடக்கறது, பாருங்கோ.. இதில் தன் மகரந்த சேர்க்கை, அயல் மகரந்த சேர்க்கைன்னு ரெண்டா வேறே.  எத்தனையோ ஜீவராசிகள்.  கடலோட அடி ஆழத்திலே இருக்கற பாசிலேந்து எத்தனையோ; தெரிஞ்சது கொஞ்சம் தான்;  தெரியாதது தான் அதிகம்.  இயற்கையோட கருணையான ஏற்பாடுகள் நம் எண்ண வேகத்திற்கும் புரிஞ்சிண்டதற்கும் அப்பாற்பட்டவை.  கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு ரெடி.  இப்படி பல விஷயங்கள் புரியாதவை.   அந்த மாதிரி ஓரளவு தான் நடக்கும் விஷயங்களின் தாத்பரியங்களை, எதுக்காக எதுன்னு உத்தேசமா தெரிஞ்சிக்க முடியறது.  எதையெதையோ கூட்டியும் கழிச்சும் கணக்குப் போட்டு வானிலை அறிக்கை சொல்றதில்லையா, அந்த மாதிரி,"  என்று சொன்னவர் மூச்சு வாங்கி லேசாக ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"ஜலமானும் சாப்டுங்கோ.."என்று ஒரு செம்பில் ஜலத்தைக் கொண்டு வந்து ரிஷிக்கும் வித்யாவுக்கும் இடையில் ஒரு ஸ்டூல் போட்டு டம்பளருடன் வைத்தார் அந்த மடிசார்ப் பெண்.  அவர் தலை மறைந்ததும், "என் மருமகள்" என்றார் வராஹமிஹிரர்.

"அப்படியா?" என்று கேட்டு விட்டு, பேச்சு வேறு திசையில் போய்விடப் போகிறதே என்கிற கவனத்தில் அவசரமாகக் குறுக்கிட்டாள் வித்யா. "நமம விருப்பத்திற்கு ஏற்ப நடக்கற நிகழ்ச்சிகளை அமைச்சிக்க முடியுமா?"

"நாம் மட்டுமே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாமேன்னு நாம நினைக்கலாம். ஆனால் அதுக்குக் கூட காலம், சமயம் போன்ற புறக்காரணங்களின் ஒத்துழைப்பு தேவை. ஆடிப் பட்டம் தேடி விதை என்கிறார்களே, அதுமாதிரி.  இதைத் தான் ரொம்ப அழகா, 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்'ன்னு வள்ளுவப் பெருமான் சொல்றார். அதுவும் தவிர ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொடர்ந்த விளைவு உண்டு.  அந்த விளைவுகளையெல்லாம் ஒருங்கிணைத்து நாம் விரும்புற பூர்த்திக்கேற்ப வழி நடத்த வேண்டும்.  கர்ம பலன் இருந்தால் தான் அந்த வழிநடத்தற சக்தி கிடைக்கும்.  நம் செயல்பாடுகள் தான் நமக்கான கர்மபலனைத் தீர்மானிக்கறதாலே, நல்ல விளைவுகளை ஏற்படுத்தற கர்மபலனைச் சேர்த்துக் கொள்ளக் கூடிய செயல்பாடுகள் தேவை."

"கர்ம பலன்னா என்ன,  எதைச் சொல்கிறீர்கள்?"

"'திருப்பியும் திருவள்ளுவர் தான். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'ன்னு அவர் சொல்லியிருக்கிறார் இல்லையா, அந்த கருமத்தை.  அநுதினமும் செயல்படுகிற நம் செயல்பாட்டை. செயல்பாடுக ளின் குணாம்சங்களில் ப்ளஸும் உண்டு; மைனஸும் உண்டு.  ப்ளஸ் அதிகமாகற மாதிரி செயல்பாடுகளை அமைச்சிக்கறது, அதற்கான நற்பலன்களை அதிகமாக் கொடுக்கும்"

"ப்ளஸ்ன்னா, நமக்கு நன்மை கொடுக்கறது. மைனஸுன்னா நமக்குத் தீமை கொடுக்கறதா?"

"நமக்கில்லை.  சமூகத்திற்கு.  இந்த நமக்கு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத் தான்.  அப்புறம் நமக்கு என்பதே நம்முள் அருகிப் போயிடும். நற்காரியங்களில் நாம் ஈடுபட ஈடுபட நாமும் சமூகமும் ஒரே நேர்கோட்டில் ஒண்ணாயிடுவோம்.  ஒரு ஸ்டேஜில் நமக்கு நன்மைங்கறது சமூகத்தின் நன்மையாயிடும். 'பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின்'ங்கற நிலை."

"புரியறது.  மனசிலே பதியற மாதிரி ரொம்ப எளிமையா சொல்றீங்க. அப்படிப் பதியறதெல்லாம் அப்படியே எங்களை நடந்துக்க வைக்கும்" என்று ஏதோ உறுதி தன்னுள் பிறந்த மாதிரி சொன்னாள் வித்யா.  "நடந்துக்கறதுன்னதும் இப்போ மனுஷாளோட பங்களிப்பைப் பத்தி நினைக்க வைக்கிறது..  இந்த மனுஷப் பங்களிப்புங்கறது ஒரு நிகழ்வு நிகழ்வதற்கான நிகழ்வுக்கூறா, இல்லை இப்படி பங்களிப்பு செய்யறதுன்னு ஒருபக்கம் நாம நினைக்கறது தான், இன்னொரு பக்கம் ஒவ்வொரு மனுஷனோட வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறதா?"

"குட்.." என்று வித்யா கேட்ட கேள்வியை சிலாகித்து நிமிர்ந்து உட்கார்ந்தார் வராஹமிஹிரர்.  "குழந்தை! உன்னோட பேசிண்டிருக்கறதே ஒரு நிறைஞ்ச அனுபவத்தை ஏற்படுத்தும் போலிருக்கு..  ரொம்ப நாளா என் மனசிலே பாசிப்பிடிச்சு படிஞ்சு கிடக்கிற எண்ணங்களை எடுத்துத் துலக்கற மாதிரி இருக்கு.. நீ கேட்ட கேள்விக்கு எனக்குத் தெரிஞ்சதைச் சொல்ல முயற்சிக்கிறேன்.." என்று சொன்னவர் ஒரு நிமிடம் மெளனத்தில் ஆழ்ந்தார்.  அவர் கண்கள் மேல் சுவரின் மூலையில் நிலைக்குத்தியிருக்க சொல்ல ஆரம்பித்தார்.  அவர் சொல்லச் சொல்ல ரிஷியும் வித்யாவும் புறவுலகம் மறந்து அவர் பேசும் கருத்துக்களில் கட்டுண்டு கிடந்தனர்.

நேரம் போனதே தெரியவில்லை.  இன்று பொதுவிடுமுறை நாளாக இருந்தது ரொம்ப செளகரியமாகப் போயிற்று. கெளதம் மொட்டை மாடி குரூப் ஸ்டடிக்குப் போயிருந்தான். மதியம் சாப்பிடுவதற்குள் வந்து விடுவதாக அவனிடம் சொல்லி விட்டுக் கிளம்பி வந்திருந்தார்கள். மாலை பெரியசாமி வேறு வந்து விடுவார். அவர் வீட்டு 'பெண் பார்க்கும் நிகழ்ச்சி'க்குப் போக வேண்டும்.  வராஹமிஹிரரிடம் பேசிய பிறகு நிகழ்ச்சி என்கிற வார்த்தையே ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாக அவளுக்குப் பட்டது.

அவர்கள் கிளம்பும் பொழுது, "அடிக்கடி வாருங்கள்.."என்று வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் வராஹமிஹிரர்.  அவர் தந்திருந்த 'நடக்கும் என்பார் நடக்கும்' புத்தகம் சுகச்சுமையாக இருந்தது வித்யாவிற்கு.


 (இன்னும் வரும்)




































Friday, September 14, 2012

பார்வை (பகுதி-58)


ன்றைக்கு என்னவோ ரிஷி சீக்கரமே அலுவலகத்திலிருந்து வந்து விட்டான்.

"என்னங்க?.. மழை வரப்போகுதா?" என்று வித்யா கேட்டதற்கு, "ஒரு மாறுதலுக்காகத் தான்.." என்று புன்முறுவலுடன் பதிலளித்தான்.

"என்னவோ போங்க, காலைலேந்து இந்த மாறுதல் பைத்தியம் உங்களுக்குப் பிடிச்சிருக்கு.  என்ன விஷயம்?." என்று கொஞ்சம் கவலையைக் குரலில் குழைத்துக் கேட்டாள் வித்யா.

"பயந்திடாதே.  யோசனைலே என்னை ஆட்டிப் படைச்சிண்டு இருக்கறது தான் தறிகெட்டு அப்பப்போ வார்த்தைலே வந்திடுது.. ஆட்சுவ்லி என்னன்னா,  'காதல் தேசம்' நாலாவது அத்தியாயத்திலே ஒரு பெரிய மாறுதல் செய்ய யோசிச்சு வைச்சிருக்கேன்.  அதை எழுதறதுக்குள்ளே இப்ப யோசிச்சு வைச்சிக்கறதை விட சிறப்பா வேறே ஏதானும் கிடைக்கலேனா, இப்ப யோசிச்சு வைச்சிருக்கறதையே நாலாவது அத்தியாயமா இன்னிக்கு உக்காந்து எழுதிடலாம்ன்னு இருக்கேன்.    சீக்கிரம் வீட்டுக்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.." என்று ரிஷி சொல்லிக் கொண்டு இருக்கையில் கெளதம் தன் பிரோகரஸ் ரிப்போர்ட்டை கொண்டு வந்து அப்பா கையில் தந்தான்.

ரிப்போர்ட்டைப் பிரித்துப் பார்த்த ரிஷிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பையனை அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டான். "ஃபைன்டா கண்ணு.. கீப் இட் அப்."

"வெறும் 'கீப் இட் அப்'ன்னா எப்படி?.. இன்னிக்கு வெளிலே போய் செலிபரேட் பண்ணப்போறதா கெளதம் கிட்டே சொல்லியிருக்கேன்.  டின்னர் கூட வெளிலே தான்.  சரியா?.."

"ஓ.." என்று உதடு குவித்தான் ரிஷி. "அப்ப ஒண்ணு செய்யலாமா?.. அந்த நாலாவது அத்தியாயம் இந்த நிமிடத்லேந்து தான் ஆரம்பமாகப் போகுது.  இன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு வந்து சேர்ற வரைக்கும் என்னலாம் நடக்கறதோ அதிலேந்து தேர்ந்தெடுத்தெல்லாம் அந்த நாலாவது அத்தியாயத்திலே வந்துடும்.  ஓக்கே வா?"

"பக்கா சுயநலம். என்ன பேசினாலும், செஞ்சாலும் உங்க வேலைலே தான் குறி. இல்லையா?" என்று நொடித்தாள் வித்யா.

"அதுக்காக இப்படி மூஞ்சியைத் தூக்கி வைச்சிண்டா எப்படி?.. நீ என்ன சொல்றையோ அதையும் கேட்டிண்டு, அதுக்கேத்த மாதிரி என் வேலையையும் மாத்திக்கிறேன். இது கூட சுயநலமா?"

"அதுக்குச் சொல்லலீங்க..  எதையும் உங்களைச் சுத்தியே யோசிக்கறீங்க, பாருங்க, அதுக்குச் சொன்னேன்.  அதுலே எதுக்காக எதுங்கறதெல்லாம் மறைஞ்சு போய் உங்களைப் பத்தினதே முக்கியமா போய்ட்றது இல்லையா, அதுக்காகச் சொன்னேன்.  இப்போ அந்தக் கதையை எப்படிக் கொண்டு போர்றதுங்கறதே உங்களுக்கு ஞாபகமா இருக்கறச்சே, செலிபரேஷன், குழந்தையோட சந்தோஷம் இதெல்லாம் அதிலே அமுங்கிப் போய்டும். அதான்."

"சீச்சீ.. இப்படிச் சொன்னா எப்படி?.. ரெண்டும் தான்.முக்கியம்.  ஏன்,  ரெண்டும் ஒரே நேரத்லே நடக்கக் கூடாதா, என்ன?" என்று அந்த நான்காம் அத்தியாய போக்கிலே இந்த கான்வர்சேஷனை எப்படி நுழைக்கலாம் என்கிற கவனத்திலேயே கேட்டான் ரிஷி.

"ஒண்ணுக்கு ஒண்ணு இடைஞ்சல் இல்லாமல் இருந்தால், சரி தான்." என்று சட்டென்று வித்யா இறங்கி வந்தாள்.

"நாட் அட் ஆல் இடைஞ்சல்.  பாக்கறையா, ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்துழைக்கப் போறது. இது தான் அதுவாகப் போறது.  அதான் சொல்லிட்டேனே?.. இப்போ நாம பேசிண்டிருக்கறது, இனிமே நடக்கப் போறது இதெல்லாம் தான் அந்த நாலாவது அத்தியாயமாகி கதையாகப் போறது.."

"அதாங்க வேணும்.." என்று சோபாவில் ரிஷிக்கு எதிரா உட்கார்ந்திருந்த வித்யா எழுந்திருந்து அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். "உங்க கற்பனையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மறந்து இருங்க.. நடக்கற விஷயங்களை உன்னிப்பா கவனிச்சாலே ஒரு ஆச்சரியம் தன்னாலே வரும்.  விஷயம் என்னன்னா, ஏதோ நடக்கறதுன்னு பலதை இயல்பா எடுத்திக்கறதாலே, அதிலே நம்ம முழுக்கவனம் செல்லலேங்கறது தான்.   கண்ணுக்கு முன்னாடி நடக்கற காரியங்கள்லே இருக்கற நறுவிசும், அழகும், அப்பாடி அந்தக் கோர்வையும் இருக்கே.. அப்பப்பா.  அதோட மகாத்மியத்தைச் சொல்லிண்டே இருக்கலாம் போலிருக்கு."

"ஒண்ணு ரெண்டு சொல்லேன்.  நானும் கேட்டுக்கறேன்.." என்று ரிஷியின் உதடுகள் ஜபிக்க, அவன் உள் மனசோ 'அவள் சொல்றதையெல்லாம் தீர்க்கமா கேட்டுக்கோ..  கேட்டுண்டு அந்த நாலாவது அத்தியாயத்லே அதையெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்றது உன் சாமர்த்தியம்' என்றது.

இடைஞ்சலாய் நெற்றிப்பக்கம் வந்து விழுந்து தொந்தரவு செய்த கூந்தல் சுருளை வித்யா ஒதுக்கி விட்டுக் கொண்டாள் "அந்த ஆட்டோக்காரர் பையன் விஷயம் என்னாச்சுன்னு நீங்க கேக்கலையே?.. நாளைக்கு அவங்கள்லாம் அந்தப் பையனுக்கு பொண் பாக்கப் போறாளாம்.  காலம்பற அவரோட சம்சாரத்தோடு லட்சணமா வெத்தலை, பாக்கு, பழத்தோட வந்து எங்கட்டே சொல்லிட்டு, நீங்களும் வரணும்மான்னு கூப்பிட்டுப் போறார்.நல்லவங்களுக் கும், நல்லதுக்கும் இந்தக் காலத்லே மதிப்பில்லேன்னு சொல்றாங்களே, என்ன நடந்திருக்கு பாருங்க!  இப்போ, நேத்திக்கு நடந்த மாதிரி இருக்குங்க.. அந்த எழுத்துப் பட்டறைக்குப் போனோமே, அப்ப ஊர்மிளா 'யாராவது நல்ல பையன் உனக்குத் தெரிஞ்சு கல்யாணத்துக்கு இருந்தா சொல்லு, வித்யா'ன்னு எங்கிட்டே சொன்னது தான் சொன்னாங்க,  அந்த ஆட்டோக்காரர் ஆட்டோலே தான் நான் எழுத்துப்பட்டறைக்குப் போகணும்ன்னு இருந்திருக்கு பாருங்க.  அவரா தன் பையன் கல்யாணத்திற்காக வரன் பாத்திண்டிருக்கறதா எங்கிட்டே சொல்லப் போக, ஊர்மிளா எங்கிட்டே கேட்டது நினைப்புக்கு வந்து, அவர் கிட்டே பையன் ஜாதகத்தை வாங்கி நான் கொடுக்க, எல்லாம் டேலியாகி பொண்ணு பாக்கற வரைக்கும் கூட்டிண்டு வந்தாச்சு..  இதையே, ஒரு கதைன்னா உங்க கற்பனைலே எத்தனை குழறுபடி பண்ணியிருப்பீங்க, நெனைச்சுப் பாருங்க..  என்ன பண்ணியிருப்பீங்கன்னு சொல்லிடுவேன்.  ஆனா, வேணாம்.  உஷா கிட்டே கேட்டா இந்தக் கதைகளைப் பத்தி இன்னும் நிறைய வண்டி வண்டியா சொல்லுவா.  ஒரு கதைலேயானும் பாஸிடிவா படிக்கறவங்களுக்கு ஆறுதலா, நம்பிக்கை அளிக்கற மாதிரி ஏதாவது ஆலோசனை சொல்லுவாங்களாக்கும் ன்னு நானும் பார்த்திட்டேன்.  செய்ய மாட்டீங்களே.."

"வித்யா! நெகட்டிவ் அப்ரோச்லே ஒரு த்ரில் இருக்கும்.  மசமசன்னு கதை போகாது. திருப்பம் வந்து வந்து சுவாரஸ்யம் பத்திக்கும்..  அதானே படிக்கறவங்களுக்கு வேணும்?.. நல்லதைச் சொல்ற மாதிரியே கெட்டதையும் சொல்லணும். சொல்லப்போனா, கெட்டதைக் கொஞ்சம் தூக்கலா சொல்லி படிக்கறவங்களை வசீகரிச்சு, வலைலே போட்டுண்டு கபால்ன்னு நல்லதுக்குத் தாவி கதையை முடிச்சிடணும். இதான் காலதிகாலமா இருக்கற ஃபார்முலா."

"அப்போ நல்லதையே சொன்னா வசீகரிக்க முடியாதுன்னு சொல்றீங்க, அப்படித்தானே?"

"முடியாதுன்னு சொல்லலே.. திகட்டும்ன்னு சொல்றேன்.  ஸ்வீட்டுக்கு நடுவே சுரீர்ன்னு காரம் வேணும்.  அந்தக் காரம் தான், இன்னும் ரெண்டு துண்டு ஸ்வீட்டை எடுத்து வாயிலே போட்டுக்கச் சொல்லும்.  கற்பனைங்கறது என்ன, ஜரிகை அலங்காரம் மாதிரி.  இப்படி நடந்தா எப்படியிருக்கும், அப்படி நடந்தா எப்படியிருக்கும்ன்னு படிக்கறவங்களை எதையெல்லாமோ நெனைக்க வைச்சு மலைக்க வைக்கறது, இல்லையா? "

"உங்களுக்கு என்ன, எழுத்திலே எழுதிட்டாலே போதும், அதெல்லாம் நடந்து முடிஞ்சிட்ட மாதிரி..  'அவன் எவெரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறித் திரும்பிப் பார்த்த பொழுது காலை மணி எட்டே கால்'ன்னு எழுதிட்டாலே போதும். அந்த  காரியமே நடந்திட்ட மாதிரி ஆகிடும்! ஆனா, அதை நடைமுறைப்படுத்தணும் னா எவ்வளவு சிரமம்?  இப்படி ஒரு விஷயத்தைப் பத்தி எழுதித் தீர்த்தவுடனேயே அந்த விஷயம் நடந்துட்டதா பொய்யாவானும் நினைக்கறதை விட நிஜத்திலேயே நடக்கற ஒரு நிகழ்விலே நம்ம பங்களிப்பும் இருக்கற மாதிரி செயல்படறது இன்னும் உசத்தி இல்லையா?"

"எது உசத்திங்கறது விஷயமில்லே.  பலன் தான் முக்கியம். நமக்குன்னு இல்லே; யாருக்கு வேணும்னாலும். பல பலன்கள் கண்ணுக்குத் தெரியாது. அதனாலே அதெல்லாம் கணக்கிலேயே வராதாக்கும்."

"கண்ணுக்குத் தெரியறதைத் தான் பாப்போமே! ஷேர் மார்க்கெட்லே நான் ஷேர் வாங்கினதையே எடுத்துக்கங்க.. முதல் நாள் அந்த சிமிண்ட் பங்கை வாங்கணும்ன்னு டெலிபோனைக் கூட எடுத்திட்டேன்.  அந்த சமயம் பாத்து பங்குச் சந்தை பரிவர்த்தனை நேரம் முடிஞ்சி வாங்க முடியாம போச்சு.  அடுத்த நாள் என்ன நடந்தது பாருங்க, பங்கு விலை இன்னும் இறங்கிப் போனப்போ கூட வாங்கலாமா, வேண்டாமான்னு குழப்பத்திலே சட்டுனு என்னாலே முடிவெடுக்க முடியாமப் போச்சு.  ஆனா அன்னிக்கே கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் இறங்கிப்போய் என்னை வாங்க வைச்சது.  நான் வாங்கறத்துக்காகத் தான் அப்படி இறங்கித்தோன்னு நான் இப்போ நினைக்கிற மாதிரி, நான் வாங்கின அடுத்த நிமிஷத்லேந்து ஒரே ஏறுமுகம் தான். இன்னிக்கு வரைக்கும் நிக்காம ஏறிண்டு இருக்கு.  இப்போ கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ்லே வணிக நிர்வாகப் படிப்பு படிச்சிண்டிருக்கேன் இல்லையோ, இது கூட ஏதோ காரணத்துக்காகத்தான்னு மனசு கிடந்து அடிச்சிக்குது.  பின்னாடி வளரப்போற மரத்துக்காக, முன்னாடி விதை ஊன்ற மாதிரி..  இல்லேனா, முன்னாடி லேசுபாசா நடக்கற அத்தனையும் பின்னாடி அழுத்தமா நடக்கப் போற ஒண்ணுக்கான வழி நடத்தலோ, ஒத்திகையோன்னு அடிக்கடி தோண்றது. எனக்கு இப்போலாம் என்ன ஆச்சரியம்ன்னா, இது இது இப்படித்தான் நடக்கணும்ன்னு ஒவ்வொரு விஷயமும் நடக்கறதுக்கு முன்னாடியே தீர்மானமாயிட்ட மாதிரி தோண்றது.  ஒரு செயல், அதற்கு ஏத்த விளைவுன்னு ஒண்ணுக்கு ஒண்ணு பிணைஞ்சு சங்கிலித் தொடர் மாதிரி ஒரு அர்த்ததோட வாழ்க்கை பூரா போயிட்டிருக்கற மாதிரி தோண்றது. என்ன நடக்கப் போறதுன்னு நமக்கு முன்கூட்டியே தெரிஞ்சா நிம்மதி போய்டும். அதான் எப்பப்போ எது நடக்கணுமோ, அப்பப்போ அதெல்லாம் நடக்கற மாதிரி..."

"மனம் ஒரு அற்புதமான.. அற்புதமான?.. வஸ்துங்கறதா என்ன சொல்றதுன்னு தெரிலே, வித்யா.." என்று ரிஷி உள்பக்கம் திரும்பிப் பார்த்தான்.  உள் ரூமில் உட்கார்ந்து கெளதம் சுடோகு புத்தகத்தில் கட்டங்களை முகத்தில் ஆர்வம் பொங்க நிரப்பிக் கொண்டிருந்தது இங்கிருந்தே தெரிந்தது.


மாலை மங்கிய தருணம் குளுமையான காற்றில் இதமாக இருந்தது.

முதலில் துணிக்கடை.  வெளியில் போனால் போட்டுக் கொள்ள நன்றாக இருக்கிற மாதிரி அவனுக்குப் பிடித்த கலரில் ஒரு ஜோடி பேண்ட் சட்டை கெளதமுக்கு வாங்கித் தர வேண்டும் என்றிருந்தாள் வித்யா.

அந்த பிர்மாண்ட துணிக்கடையில் அவர்கள் நுழைகையிலேயே, ஏக வரவேற்பு.  அங்கு நின்றிருந்த வாலிபன் ரிஷியின் கையைக் குலுக்கி, "தொந்தரவுக்கு மன்னிக்கணும்.  ஒரு நிமிஷம்.  இப்படிக் கொஞ்சம் வர முடியுமா?" என்று முன்பக்கமிருந்த தனி அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

அந்த அறையில் அவர்கள் நுழைந்ததும், "வாங்க.. வாங்க.." என்று உள்ளே அமர்ந்திருந்தவர் எழுந்து வந்து அவர்களை வரவேற்றார்.  கெளதமிடம் அவர் பார்வை பதிந்தது.  "உங்க பையனா?" என்று கேட்டுக் கொண்டே அவர்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

ரிஷி பக்கம் திரும்பி, "ஒரு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கறதா இருக்கோம். தயவுசெஞ்சு ஏத்துக்கணும்.." என்று அவர்களை வேண்டிக்கொண்டு அவர்களை சோபாவில் அமர்ந்தி தான் நின்று கொண்டார்.

"ஒரு சந்தோஷமான விஷயம்.  அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தெரிஞ்ச சந்தோஷம்.   ஹாஸ்பிடல்லேந்து தம்பி போன் பேசினான்.  தம்பி சம்சாரத்திற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.  எங்க தலைமுறைக்கு முதல் குழந்தை.  சந்தோஷம் பிடிபடலை.  உடனே அதைக் கொண்டாடத் தீர்மானிச்சோம்.  இந்த நிமிஷத்திலே இந்தக் கடைக்குள்ளாற நுழையற முதல் சிறுவன் அல்லது சிறுமிக்கு---"

மொத்த கடைக்குச் சொந்தக்காரர்களே அவரும் அவர் தம்பியும் தானாம். அண்ணனுக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாச்சாம்.  குழந்தை இல்லை. தம்பிக்கும் திருமணமாகி நாலு வருஷத்துக்கு அப்புறம் குழந்தை பாக்கியம்.  அதான் சந்தோஷத்துக் காரணம்.

"பையனுக்கு பிடிச்சது பத்தாயிரத்துக்கு எது வேணாலும் இங்கே எடுத்துக்கட்டும்.   அது எங்க பரிசு உங்க பையனுக்கு.  இந்த சிறுவன் சந்தோஷம் எங்கள் சந்தோஷம்" என்றார்கள்.

வித்யாவிற்கு கனவு மாதிரி இருந்தது.  ரிஷிக்கோ நடக்கற நிஜம், தான் எழுதும் கதைகளையே மிஞ்சி விடும் போலிருக்கே என்றிருந்தது.  'அடிசக்கை! நாலாவது அத்தியாயத்திற்கு நீ எதிர்பார்க்காமலேயே நல்ல மேட்டர் தான்' என்றது உள் மனசு.


(இன்னும் வரும்)





























Sunday, September 9, 2012

பார்வை (பகுதி-57)

நாராயணனுக்கு கிரீம்ஸ் ரோடு பதிப்பக தலைமை அலுவலகத்தில் வேலை இருந்தது. அப்படியே பெரியவரைப் பார்த்து விட்டு மறுநாள் பெண் பார்க்கப் போவதை ஊர்மிளா மேடத்திடம் சொல்லி விட்டுப் போகலாம் என்று வந்திருந்தான். ஊர்மிளாவின் மூலம் தானே இந்தப் பெண் பற்றியே தெரிய வந்தது?.. அதனால் அவர்களுக்கு செளகரியப்பட்டால் அவர்களையும் வரச்சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது அவன் எண்ணம்.

நாராயணன் அழைத்த பொழுது, வேணிக்காகப் போக வேண்டும் என்ற எண்ணம் ஊர்மிளாவுக்கு இருந்தாலும் நிறையப் பேர் போவது வேணி குடும்பத்தினருக்கு அசெளகரியமாக இருந்து விடப்போகிறது என்கிற ஒரு தயக்கம் இருந்தது.  ஆனால், நாராயணன் வருவதற்கு முன்பே ஊர்மிளாவின் வருகைக்கான வேணி கேட்டுக் கொண்ட போது, 'எங்களுக்கு வேறு மனுஷா, இல்லை அக்கா' என்று வேணி முன்பு ஒரு முறை பரிதாபமாய்ச் சொன்னது நினைவுக்கு வந்து நிச்சயம் வருகிறேன் என்று சொல்லியிருந்தாள்.  அதனால், நாராயணன் இப்பொழுது கேட்ட பொழுது, 'அனேகமா நீங்க அங்கே வர்றத்துக்கு முன்னாடியே நான் அங்கிருப்பேன் என்று நினைக்கிறேன்' என்றாள்.

"ஓ! பெண் வீட்டாரை உங்களுக்கு முன்னாடியே தெரியும் இல்லையா?" என்று கேட்டான் நாராயணன்.

"வீட்டார் என்று எல்லாரையும் சொல்ல முடியாது.  சொல்லப் போனா, கல்யாணப் பெண் அந்த லஷ்மியைக் கூட நான் பார்த்தது கிடையாது.  ஆனா, அந்த லஷ்மியோட தங்கையை நன்னாத் தெரியும்.." என்று சொன்ன போது 'அந்த தங்கை யார் என்று இப்பொழுது நான் சொன்னால், உனக்குக் கூட அவளைத் தெரியும்' என்று சொல்ல நினைத்ததை ஊர்மிளா கஷ்டப்பட்டு சொல்லாமல் தவிர்த்தாள்...

"ரொம்ப நல்லதாப் போச்சு.." என்றான் நாராயணன். "எனக்கும் தெரிஞ்சவங்களா, அந்த குடும்பத்துக்கும் ஓரளவு தெரிஞ்சவங்களாய் நீங்க இருக்கறது ரொம்ப செளகரியமாய் போச்சு.." என்றான்.

ஊர்மிளா புன்னகைத்தாள். "ஆமாம், இதில் ஒரு செளகரியம். அவங்களுக்கு வேண்டியதை உங்க கிட்டேயும், உங்களுக்கு வேண்டியதை அவங்க கிட்டேயும் கேட்டுச் சொல்லலாம்.. இல்லையா?"

"அட!.." என்று வியந்தான் நாராயணன். "சட்டுனு இது என் நினைப்புக்கு வரலை, பாருங்கள்!" என்று கொஞ்சம் சாய்ந்து சாய்மானமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "எனக்கு ஒரு கேள்வி இருக்கு.  கல்யாணப்பெண் லஷ்மிகிட்டேயே கேக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்யணுமே!" என்றான்.

"பொண்ணைப் பாக்கறத்துக்கு முன்னாடியே, அந்த லஷ்மியைத் தான் கட்டிக்கறதுன்னு தீர்மானிச்சிட்ட மாதிரி இருக்கு!"

"அது என் ஜாதகத்தை அப்பா அந்த மாம்பலத்துக்காரங்க கிட்டே கொடுக்கறச்சேயே தீர்மானமான ஒண்ணுங்க.. எல்லாத்துக்கும் அடிப்படை எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற அந்தப் பெயர்ப் பொருத்தமும், எங்கப்பா தனக்குத் தானே புரிஞ்சிக்கிட்டதாச் சொல்ற சில சகுன அறிகுறிகளும் தாங்க.." என்றான்.

"இந்தளவுக்கு உங்க குடும்பத்திலே இந்த வரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதாலே, ஒண்ணு உங்க கிட்டே நான் கேட்டா தப்பில்லைன்னு நெனைக்கிறேன்.." என்று ஒரு நிமிடம் தாமதித்து, 'வேணி குடும்பம் கொஞ்சம் வசதியில்லாத குடும்பமாச்சே, அவர்களோட அந்த ஏழ்மை நிலமை, பொருந்தி வர்ற இந்தத் திருமணத்திற்கு குறுக்கே நின்று மறித்து விடப் போகிறதே' என்கிற ஆதங்கத்தில், "உங்க பக்கத்து மத்த எதிர்பார்ப்பெல்லாம் எப்படி இருக்குமோ?" என்று தயங்கியபடியே ஆரம்பித்தாள் ஊர்மிளா.  அவள் தயக்கமே மிகுந்த அர்த்தம் கொண்டதாகத் தெரிந்தது.

"எதிர்பார்ப்பா?.. என்னன்னு புரியலே.."

 "அதான் நாராயணன்.  சீர் செனத்தி இதெல்லாம்.  உங்க அப்பாகிட்டே தான் அதெல்லாம் கேக்கணும், இல்லையா?"

" அதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் இல்லீங்க.." என்று பட்டென்று சொன்னான் நாராயணன்.  "அவங்க கிட்டேயிருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது ங்கறதிலே அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்பத் தீர்மானமா இருக்காங்க.. நேத்து கூட என்னை வைச்சிகிட்டுப் பேசிகிட்டு இருந்தாங்க.. பெண்ணுக்கும் பையனுக்கும் பிடிச்சிருந்தா அதுவே போதுமாம், அவங்களுக்கு.. மத்தபடி வீட்டுக்கு வர்ற மருமகள் எப்படியிருக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கற மாதிரி தான்.." என்றான்.  

"அப்படீன்னா?.."

"அதாங்க, அதான் முக்கியமான விஷயம்.  அதான் அந்தப் பொண்ணு கிட்டே நேரடியாக் கேட்டுடறதுன்னு தவியா தவிச்சிக்கிட்டிருக்கேன்.. எங்க அப்பாரு கவலையும் அந்த ஒரு விஷயத்லே தான், மேடம்!  எனக்குன்னா.. ஆல்ரைட்.. உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன இருக்கு?..  சொல்லிடறேன்.  என்னை படிக்க வைச்சு ஆளாக்கினதுக்கு எங்க அப்பா பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும்.  அவங்க வேதனைப்படற அளவுக்கு எதுவும் நடந்திடக் கூடாதுன்னு இருக்கு.."

"என்ன சொல்றீங்க, நாராயணன்?.. எனக்குப் புரியலையே?"

"நாம புஸ்தகமா போட்ற கதைன்னா ரசிக்க முடியறது.  சிரிக்க முடியறது.. ஆனா, வாழ்க்கைன்னா அப்படி இல்லேதானுங்களே.. நாலும் இருக்கும், இல்லையா?"

"இந்த நாலும் கூட கதை புஸ்தகம் படிச்சிட்டு தெரிஞ்சிகிட்டது தானா, நாராயணன்?"

"தெரிஞ்சிக்கற மாதிரி என்னத்தை எழுதறாங்க, போங்க..  எல்லாம் நாலு பேரைப் பாத்துத் தெரிஞ்சிக்கறது தான்..  ஊர்லே உலகத்திலே நடக்கறதை, நாம பாக்கறதை.. நான் சொல்லியா உங்களுக்குத் தெரியணும்?.. அதான் என் கவலை."

"அலை ஓஞ்சு என்னிக்கு குளிக்கறது, நாராயணன்?..  அலையோட அலையா குளிச்சா, ஒரு அலை இழுத்திண்டு போனாலும் இன்னொரு அலை திருப்பி பிடிச்சு கரைக்குத் தள்ளிடும், இல்லையா?"

"சரிதான், நீங்க சொல்றது.. நானும் குளிக்கத் தான் போறேன்.  குளிக்கறத்துக்கு முன்னாடி, ஜாக்கிரதையா பாத்துக் குளிக்கணும்னுட்டு எண்ணம்.  அவ்வளவு தான்."

"என்ன ஜாக்கிரதை?.. சொல்லுங்க.."

"என்னோட விருப்பம்லாம் ரொம்ப சிம்பிள் மேடம்.  கல்யாணம் ஆனதும் நாம தனி, உன்னைப் பெத்தவங்க தனின்னு வரப்போர்ற மகாராணி என்னைப் பெத்தவங்களைக் கட் பண்ணாம இருக்கணும்.  அவ்வளவு தான்."

"அவங்க அப்படி 'கட்' பண்ணிட்டு வராங்கள்லே.. அதனாலே சில பேர் அப்படி நெனைப்பாங்க போலிருக்கு."

"ஓகோகோ.. அப்படி ஒரு நியாயம் இருக்கா.. இதுக்குத் தான் எது ஒண்ணையும் விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே கேக்கணும்ங்கறது.. அப்போ எதுக்கு மேடம், பெண்களுக்கு மட்டும் 'பிறந்த வீடு, புகுந்த வீடு'ன்னு ரெண்டு வீடு இருக்கறதா சொல்றாங்க?.."

"கேட்டா, யாரோ அப்படிச் சொன்னா அதுக்கு நாங்களா பிணைம்பாங்க..  நாராயணன்! அவங்க சொல்றதெல்லாம் நியாயம்னுட்டு நான் சொல்லலே.. அப்படில்லாம் சொல்றவங்க இருக்காங்கங்கறதுக்காகச் சொன்னேன்."

"அதுசரி.. அலை ஓஞ்சு என்னிக்குக் குளிக்கறதுன்னு நீங்க சாதாரணமா கேட்டுட்டீங்க.. யம்மாடி... எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ?.. பயங்கரமாலே இருக்குது.."

"இப்படில்லாம் பயந்தா வேலைக்கு ஆகாது.  உங்க மனசிலே இருக்கறதைச் சொன்னாத் தானே நீங்க என்ன நினைக்கிறீங்கன்னுட்டுத் தெரியும்?"

"அதான் சொன்னேனே, மேடம்.  பெத்தவங்களை 'கட்' பண்ணாம இருக்கணும்ன்னா, நான் சொல்றது, அவங்களை மாதிரி பெத்தவங்களை விட்டுட்டு வர்ற 'கட்' இல்லே;  ஒரேடியா 'கட்' பண்ணிர்றது.  என்னிக்கு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சோ, அன்னிலேந்து நாங்க ரெண்டு பேரும் தனி.  உங்க சங்காத்தமே வேண்டாம்ன்னு புருஷனைப் பெத்தவங்களை ஒதுக்கிடறது.."

"தனக்குன்னு ஒரு குடும்பம்ன்னு ஆனதும் தான், தன் புருஷன், தன் குடும்பம்ன்னு தனி அக்கறை கொள்றதுக்காக அப்படி நினைக்கிறாங்களோ, என்னவோ?"

"நினைக்கட்டும்.  அந்த மாதிரி அக்கறையோட குடும்பம் நடத்தட்டும். யார் வேணாம்னாங்க..  அதுக்காக?..  அவங்களுக்கும் சரி, எனக்கும் சரி, பெத்தவங்கன்னா அவங்களை எது ஒண்ணுக்கும் நோகாம வைச்சிக்கற கடமை இருக்கில்லையா?..  கல்யாணம் ஆச்சுன்னா, துண்டை உதறித் தட்டித் தோள்லே போட்டுகிட்டுக் கிளம்பறதுக்கு இது என்ன ரயில்ப் பயணமா?  சொல்லுங்க.."

"நிச்சயம் இது ரயில் பயணம் இல்லை; வாழ்க்கைப் பயணம். அதுவும் ரயில் மாதிரி யாரோ வண்டியை ஓட்டறாங்கன்னு அக்கடான்னு உக்காந்து போகக்கூடியதில்லே;  நாம் ஓட்டற வண்டி; நேக்கா ஓட்டிப் பயணம் செய்யணும்.  அதனாலே ஓட்றதிலே இருக்கற அக்கறைங்கற பொறுப்பும் கூடிப் போகுது. அதுக்கு மேலே என்ன, நீங்களே சொல்லுங்க.."

"அதாங்க.. என்னைப் பெத்தவங்களை எப்படி நான் அன்போட மரியாதை கொடுத்து மதிச்சு நடந்திக்கிறோனோ, அதே மாதிரி அவங்களைப் பெத்தவங்களுக்கும் அதே அன்பையும் மரியாதையையும் கொடுத்து மதிச்சு நடந்திப்பேன்.   அந்த மாதிரி இருக்கறவங்களா எனக்கு மனைவியா வர்றப் போறவங்க இருக்கணும்.  அவ்வளவு தான்."

"அதுசரி.  நியாயமான விருப்பம் தான்.  ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் எப்படி தெரிஞ்சிக்கறது?..  சொல்லுங்க, நாராயணன்."

"அன்-கண்டிஷனலா உறுதிமொழி மாதிரி எதையும் நான் கேக்கலே, மேடம்.. சீராட்டி, வளத்து ஆளாக்கின தாய் தகப்பன் மேலே வளர்ந்த பிள்ளைங்களுக்கு பிரியமும் பாசமும் இருக்குமில்லையா?.. என்னைக் கல்யாணம் செஞ்சிக்கப் போறவங்களுக்கும் அப்படியான ஒரு நேசம் அவங்களைப் பெத்தவங்க மேலே இருக்குமில்லையா?.. அதை அவங்களும் உணர்வு பூர்வமா உணர்ந்திருப்பாங்க,  இல்லையா?.. அதே மாதிரி எனக்கும் இருக்குங்கறதைப் புரிஞ்சிண்டு என் உணர்வுகளை மதிச்சு என்னைப் பெத்தவங்ககிட்டே அன்பு காட்டணும்.  அவ்வளவு தான் நான் எதிர்பாக்கறது.  நானும் அவங்களைப் பெத்தவங்க கிட்டே அதே அன்பையும் மரியாதையும் காட்டுவேன்.  ஜஸ்ட் மனுஷங்க மேலே நாம வைச்சிருக்கிற பிரியம். அதுவும் வயசானவங்க மேலே. இதான் என் எதிர்ப்பார்ப்பு.  ஊர்லே உலகத்திலே இல்லாததை நான் கேக்கலே. நான் என்ன எதிர்ப்பார்க்கறேங்கறது உங்களுக்கானும் புரியறதா, மேடம்?"

ஊர்மிளாவுக்குப் புரிந்தது.   வளர்ந்த ஆண்பிள்ளையாய் தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் நாராயணனின் குழந்தை மனசு அவளுக்குப் புரிந்தது. இவனுக்கு புரிகிற மாதிரி எப்படி எடுத்துச் சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் மெளனித்த பொழுது, நாராயணனே கேட்டான்."மேடம்! இப்படியானும் சொல்லுங்க.. உதாரணத்திற்கு உங்களையே எடுத்திக்கங்க.  உங்களுக்கும் இப்படியான அனுபவம் உங்களுக்குத் திருமணம் ஆன போது ஏற்பட்டிருக்கும்.  அன்புங்கறது கொடுத்து வாங்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஸாருக்கும் என்னை மாதிரி எதிர்பார்ப்பு நிச்சயம் இருந்திருக்கும்.ஸாரோட அப்பா- அம்மா அவங்களை மாதிரிப் பெரியவங்க கிட்டே எப்படி அன்பைச் சம்பாதிச்சிங்க?..  அதைச் சொல்லுங்க.." என்றான்.

கேட்ட கேள்வி தங்கிட்டையே திருப்பப்படும் என்று ஊர்மிளா எதிர் பார்க்கவில்லை.  அதனால் சட்டென்று பதில் சொல்ல கொஞ்சம் தாமதித்தாள்.

ஊர்மிளாவுக்கு அந்த நினைப்பு புதுசாக இருந்தது.  இத்தனை நாள் இப்படியான ஒரு கோணத்தில் நினைத்துப் பார்த்திராத புதுசு.

"கல்யாணமாகி புகுந்த வீட்டிற்கு நா வர்றச்சே, மாமியார் மட்டும் தான் இருந்தாங்க.  மாமனார் இவர் வேலைக்குப் போகும் பொழுது காலமாகியிருக்கிறார்.  இவர் முதலில் ஐ.ஓ.ஸி.யில் வேலையில் இருந்தார்ங்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். அப்புறம் இவரோட எழுத்து வேலை அரசாங்க வேலையைச் சாப்பாடறதாகி, இதுவா, அதுவான்னு முடிவெடுக்க நேரிட்டப்போ, எழுதறதே இனி என் வேலைன்னு தீர்மானமாகி முழு நேர எழுத்தாளராயிட்டார்.     என் மாமியாரும் ஒரு எழுத்தாளர் தான் என்பது உங்களுக்குப் புதுத் தகவலா இருக்கும்.  அவர் அம்மாவின் தொடர்ச்சி தான் இவர்." என்று ஒரு நிமிடம் நிறுத்தித் தொடர்ந்தாள் ஊர்மிளா.

"கல்யாணமான புதுசிலே புகுந்த வீடு தான் புதுசுன்னா, பெண்களுக்கு அந்த நேரத்திலே பழக நேர்ந்த ஆட்கள், உறவு முறைன்னு எல்லாமே புதுசா இருக்கும்.  கிடைச்ச ஒரே துணை கணவன்; அந்தத் துணைவன் துணையில் தான் அத்தனையையும் தெரிச்சிக்கணும்ன்னு ஆகிப்போகும். இருப்பத்திரண்டு, இருபத்தைஞ்சு வயசு வரை பிறந்த வீட்லே ராஜ்யம் பண்ணின ஆட்ட பாட்டத்தையெல்லாம் அடக்கிண்டு, பழக்கமில்லாத புதுசுகளோடு தனக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திண்டு செட்டில் ஆகணும்ன்னா, அதுக்கு ஒரு தனித் திறமை தான் வேணும்.  என் விஷயத்தில் எந்த ஜென்மத்லே நான் பண்ணின புண்ணியமோ தெரிலே, அப்படி ஒரு மாமியார் எனக்குக் கிடைச்சார். அவர் தான் எனக்கு பிலாசபர், வழிகாட்டி, ஆசான் அத்தனையும். என் அம்மா சும்மா. மாமியாரோ இன்னொருத்தர் மனசைப் படிக்கத் தெரிஞ்சவர்.   ரொம்ப மென்மையானவர். பேசிறத்தே கூட அடுத்தவர் மனசு நோகக்கூடாதுங்கற ஜாக்கிரதை உணர்வு உள்ளவர்.  அவர் பழக்கப்படுத்தினது தான் எல்லாம்.  கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சு, பிறந்த வீட்டுக்குப் போனப்போ, 'என்னடி, ஆளே மாறிட்டேயே'ன்னு என் அம்மா ஆச்சரியப்பட்டுப் போனா" என்று சொன்ன போது லேசாக ஊர்மிளாவிற்குக் குரல் தழைந்தது.  தொண்டையைச் செருமி சரிப்படுத்திக் கொண்டாள்.

"என் அம்மா கூட அதிரப் பேசத் தெரியாதவங்க தான், மேடம்.  ரொம்ப அட்ஜெஸ்ட்மெண்ட் டைப்.  வரப்போற பெண் அதைப் புரிஞ்சிண்டு நடந்தாங்கன்னா, உங்களை மாதிரி அவங்களும் மாமியாரைப் பத்தி உயர்வா பேசலாம்.."

"இப்போச் சொன்னீங்களே, இது கரெக்ட்..  பெண்ணுக்குப் பெண் அந்த புரிதல் இருக்கணும்.  இருந்தா, ஒரு கோணலும் வராது, நாராயணன்.  நல்லவங்களு க்கு நல்லது தான் நடக்கும். கவலையே படாதீங்க.." என்றாள் ஊர்மிளா. "எங்க மாமியார் சொல்வார், ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கல்யாணங்கறது கிருகஸ்தாஸ்ரம தர்மத்தைக் கட்டிக் காப்பாத்தறத்துக்காக விதிச்ச விதிம்பாங்க.  உங்க ரெண்டு பேர் கர்ம பலன்களுக்கு ஏற்ப நடக்கறதை முகஞ்சுளிக்காம ஏத்துண்டு ஒவ்வொண்ணையும் கடந்து நம்மாலே முடிஞ்ச நல்லதைச் செஞ்சு மீள்றது தான் அடுத்த ஜென்மத்துக்கான பூஜாபலன்ம்பாங்க.  அவங்க சொல்லி இதெல்லாம் கேக்கறத்தே, எனக்குக்கூட ஆரம்ப காலத்லே ஏதோ பெரியவங்க சொல்ற இதோபதேசம் மாதிரித் தான் இருந்தது.  நாளாவட்டத்திலே வாழ்க்கைலே அடிப்பட்டப்போத்தான், இதெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லே, ஒருத்தர் அடைஞ்சு பாத்துத் தெரிஞ்சிண்ட அனுபவச் செறிவுன்னு தெரிஞ்சது.  எல்லாமே அப்படித்தான் நாராயணன்.  எதுவும் சொந்தமா அனுபவப்படாத வரைக்கும் அதது நம்ம கிட்டேயிருந்து விலகி அந்நியப்பட்டு நிற்கற மாதிரித் தெரியறது.  என்னைக் கேட்டா, அனுபவப் புரிதல் தான் ஆசான்ம்பேன்.  அது ஏற்படாத வரைக்கும், மனசு ஆயிரம் குறுக்கு விசாரணை நடத்தி தர்க்கித்து முரண்டு பண்ணிண்டு நிக்கும்.  நமக்கே எது ஒண்ணும் அனுபவமாகும் போது, அதை நல்லபடி சமாளித்து மீள்ற பக்குவம் கிடைக்கும்" என்றாள்.

"உங்க கிட்டே பேசின பிறகு இப்போ எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு, மேடம்!  எனக்கென்னனா, ஒவ்வொண்ணா இதுக்கு அடுத்தது அது, அதுக்கு அடுத்தது இதுன்னு வரிசைப்படுத்தின மாதிரி ஒண்ணு முடிஞ்சா அடுத்ததுக்குன்னு என் திருமணத்தை நோக்கி சீரா இட்டுகிட்டுப் போற அந்த நிகழ்வுகளின் நேர்த்தியை நினைச்சா ஆச்சரியமா இருக்கு.  அதான் ஒரே நம்பிக்கை. யாரோ எல்லாத்தையும் முன்னாடியே தீர்மானிச்சு நல்லதுக்குத் தான் கைப்பிடிச்சு வழிகாட்டி கூட்டிட்டுப் போற மாதிரி இருக்கு.  அதுனாலே, இனிமே நடக்கப்போறதும் நல்லதுக்காகத் தான் இருக்கும்ன்னு நான் நம்பறேன்" என்று நாராயணன் சொன்னதைக் கேட்டதும், இவனது நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடி நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)























Tuesday, September 4, 2012

பார்வை (பகுதி-56)

ரியாக காலை ஒன்பதே காலுக்கு டி.வி.யில் ஷேர் சேனலில் மணியடித்து பங்கு பரிவர்த்தனை தொடங்கி விட்டது.

ஒன்பதுக்கே இதற்காக ரெடியாகி விட்டாள் வித்யா.  காலையில் படுக்கையிலிருந்து எழும் பொழுதே அவள் குறித்து வைத்திருந்த பங்குகளின் விற்பனை விலை இன்று எப்படிப் போகும் என்கிற ஆவல் வந்து விட்டது.  அதற்காக கொஞ்சம் சீக்கிரமாகவே இன்று எழுந்திருந்தாள். காலை டிபன், சாப்பாடு எல்லாம் எட்டுக்கே தயாராகி விட்டது.

வழக்கமாக ரிஷி டிபன் சாப்பிட்டு விட்டு மதியத்திற்கான சாப்பாடை சின்ன கேரியரில் சாதம் தனி, மத்ததெல்லாம் தனித் தனியாக என்று எடுத்துச் செல்வான்.   இன்று ஏனோ சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு மதியதிற்காக டிபனை எடுத்துச் சென்றிருந்தான்.  கேட்டதற்கு ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்று சொல்லிச் சிரித்தான்.  'எதிலெல்லாம் மனம் மாறுதலை விரும்புகிறது, பார்' என்று அவளுக்கும் புன்னகை விரிந்தது.  அவன் பொழுது சாய்ந்து வீட்டுக்கு வருகையில் திகைக்கிற மாதிரி வீட்டில் தானும் ஏதாவது மாறுதலைச் செய்து வைத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

கெளதமும் ஸ்கூலுக்கு கிளம்பி போயாச்சு.   பன்னிரண்டரைக்கெல்லாம் கரெக்டாக மதிய சாப்பாட்டு இடைவேளையில் வீட்டிற்கு வந்து விடுவான். அவன் வருவதற்குள்----

நினைவுகளுக்கிடையில், டி.வி. திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த பங்குகளின் பெயர்களுக்கிடையே அந்த சிமிண்ட் கம்பெனி ஷேரின் அன்றைய விலையைப் பார்த்து மனம் அலைபாய்ந்தது.  நேற்றைய விலைக்கு அதற்குள் நாற்பது ரூபாய்கள் விழ்ச்சி.  ஸ்டீலும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு விலை குறைந்திருந்தது.  தனியாக நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்த குறிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தில் ஒன்று தெரிந்தது..  கடந்த இரண்டு நாட்களில் நல்ல வீழ்ச்சி.  அவள் ஆவல் கூடியது.  நல்ல வேளை, நேற்று எந்த ஷேரும் வாங்க முடியாமல் போனது நல்லதுக்கே என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நினைப்பு, இதற்காகத் தான் அதற்காக முயற்சித்தும் வாங்க முடியாமல் நேற்று நடந்த நிகழ்வுகளின் சேர்க்கை தனக்குச் சாதகமாக அமைந்து விட்டதோ என்று.  தாங்க் காட்!  இந்த நிமிடம் வாங்கினால் கூட நேற்றைக்கும் இன்றைக்குமான விலையில் மொத்தத்தில் ஆறாயிரம் குறைந்திருந்தது.  வாங்குவது தான் வாங்கப் போகிறோம், அந்த ஆறாயிரம் வித்தியாசம் இன்னும் அதிகப்படுகிறதா என்று பார்க்கலாம் என்று யோசனை தீட்சண்யப்பட்ட பொழுது ---

அதற்குள் நாற்பது ரூபாய் இறக்கம் எழுபது ஆகியிருந்தது.  அதைப் பார்த்த வாக்கிலேயே மனம் பரபரத்தது.  கால்குலேட்டரை எடுத்து அந்த சிமெண்ட் ஷேர் அப்போதைய விலையில் ஐம்பது ஷேர்கள் வாங்கினால் எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும் என்று கணக்கு போட்டுப் பார்த்தாள்.  அறுபதாயிரம் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தது.  ஸ்டீல் வேறு வாங்க வேண்டும்.  இல்லை, சிமிண்டிலும் ஸ்டீலிலும் தலைக்கு இப்பொழுது இருபது வாங்கி விட்டு, நாளைக்கு இன்னும் குறைந்தால் வாங்கிக் கொள்ளலாமா?..  நோட்டுப்புத்தகம், கால்குலேட்டர், கணக்கு என்றிருக்கும் நிலையில் டி.வி.யைப் பார்த்த பொழுது, அப்பொழுது தான் ஒரு ரவுண்டு முடிந்து 'A'-யிலிருந்து பங்கின் பெயர்கள் வரிசையாக நகர ஆரம்பித்திருந்தன.  அவள் நினைத்திருந்த சிமிண்ட் கம்பெனியின் பெயர் திரையில் தெரிவதற்குக் கொஞ்சம் பொறுக்க வேண்டும்.  அதற்குள் ஸ்டீல் விலையும் ஏறாதிருக்க வேண்டும். இல்லை, ஸ்டீல் ஏறினால், சிமிண்ட் மட்டும் இன்று வாங்கிக் கொண்டு ஸ்டீலை பிறகு பார்த்துக் கொள்ளலாமா?.. நாளைக்கு எப்படி இருக்குமோ, ஆகிறது ஆகட்டும் இரண்டையும் இன்றைக்கே வாங்கி விடலாமென்று நினைத்த பொழுது சிமிண்ட் பங்கின் விலை லேசாக ஏற ஆரம்பித்திருந்ததை வித்யா கவனிக்கத் தவறவில்லை. இன்றைய இறக்கம் அவ்வளவு தானா?  நாளையிலிருந்து ஏற்றமோ?.. சரி, இந்த விலையிலேயே வாங்கி விடலாமா? அடுத்த சுற்று வந்து சிமிண்ட் விலை டி.வி. திரையில் தெரியப் போகிற மூன்று வினாடிக்குள் ஏறி இருக்குமா, இல்லை இன்னும் இறங்கியிருக்குமா என்று மனம் தவித்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்த வினாடியியே, பட்டென்று டிவியை வித்யா ஆஃப் செய்தாள்.  பேசாமல் எழுந்து போய் வாசல் பக்க ஜன்னல் வழி ரோடைப் பார்த்தாள்.  எதிர் வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி, காய்கறி தள்ளு வண்டியில் ஜரூரான விற்பனை நடந்து கொண்டிருந்தது.   நேற்று தான் மார்க்கெட்டுக்குப் போயிருந்தாள். வீட்டு பிரிட்ஜில் இன்னும் நாலு நாட்கள் தாங்கற அளவுக்கு வேண்டியது இருந்தது.

வாசல் தாளிட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு பின்பக்கம் போய் கதவு திறந்தாள்.  குட்டியூண்டு தோட்டம்.  வாழை குலை தள்ளியிருந்தது. மல்லிகைக் கொடி அரும்பு விட்டிருந்தது.  பக்கத்தில் அரளி.  கொஞ்சமாய் கலர்க் கலர் மலர்ச் செடிகள்.  பூவாளியில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு
வார்த்தாள்.  வாழை பக்கம் வந்து கொஞ்சமே கொத்தி விட்டு குளிக்கும் அறையிலிருந்து வந்து லேசாகத் தேங்கியிருந்த நீருக்கு போக்கு கொடுத்தாள்.  சகதியை வாரி அணையிட்டாள்.  கையலம்பி, பின்பக்கக் கதவைச் சாத்தி தாழ்ப்போட்டு விட்டு ஹாலுக்கு வந்த பொழுது சுவர்க் கடியாரத்தில் பத்தே கால்.

கை ரிமோட்டை நாடியது.  நிதானமாக திரையில் ஓடிய பங்கு வரிசை ஓட்டத்தை நோட்டமிட்டாள்.  அவள் வாங்க நினைத்திருந்த சிமெண்ட் பங்கு விலை இன்னும் முப்பது ரூபாய் இறங்கி, இன்றைய பரிவர்த்தனையில் மொத்தமாக நூறு ரூபாய் இறங்கியிருந்தது.  ஸ்டீலிலும் கணிசமான இறக்கம்.

தொலைபேசி எடுத்து பொறுமையாக எண்களை அழுத்தினாள்.  மறு பக்கத்தில் தொடர்பு கிடைத்ததும் தன் பெயரைச் சொல்லி தனக்கான வாடிக்கையாளர் எண்ணையும் சொன்னாள்.   சிமிண்டில் நூறு ஷேர்களுக்கும், ஸ்டீலில் ஐம்பது ஷேர்களுக்கும் ஆர்டர் கொடுத்தாள்.  அவள் டி.வி.திரையில் பார்த்த விலையில் இன்னும் ஐந்து ரூபாய் அளவில் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை ஆர்டர் கொடுக்கையில் குறைந்திருந்தது.   அடுத்த வினாடியில் அவளுக்காக ஷேர்கள் வாங்கி விட்டதாக தரகர் அலுவலகத்தில் நிச்சயப்படுத்தினர்.  ஒருவழியாக நினைத்த வேலை முடிந்து விட்டது.

நிம்மதியாக தொலைபேசியை வைத்து விட்டு வித்யா டி.வி.யை நிறுத்தினாள்.

சமையலறை சென்று பாத்திரங்களை ஒழித்து வைத்து விட்டு, அவற்றில் கொஞ்சமே தண்ணீர் பிடித்து ஸிங்க்கில் தேய்க்கப் போட்டாள்.  வாஷிங் மெஷினை பாத்ரூம் பக்கம் நகர்த்தி வைத்து கூடையில் சேர்ந்திருந்த துணிகளை எடுத்துப் போட்டு ட்யூப் செருகி தண்ணீர் பிடித்தாள்.  வாஷிங் பெளடர் டப்பாவை எடுத்துப் பார்த்த பொழுது இன்றைய உபயோகத்திற்கான தூள் மட்டும் இருப்பது தெரிந்தது.  'நல்ல வேளை. அதுவானும் இருக்கிறதே' என்று நினைத்துக் கொண்டு, டேபிள் பக்கம் தொங்கிக் கொண்டிருந்த பேப்பர் பேடை எடுத்து, வாஷிங் பெளடர் வாங்க வேண்டுமென்று வாங்க வேண்டிய பொருள்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டாள்.  அதற்குள் மெஷினில் துணிகள் முழுகும் அளவுக்கு தண்ணீர் நிறைந்திருந்தது.  குழாய்த் தண்ணீரை நிறுத்தி விட்டு, வாஷிங் பெளடர் போட்டு மிஷினை நாற்பது நிமிட டைமிங்கில் வைத்து ஸ்விட்சை ஆன் செய்தாள்.

ஸிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களை சேர்ந்து போவதற்குள் தேய்த்து விட்டால் ஒரு வேலை முடியுமே என்றிருந்தது.  அதைச் செய்து முடித்த பொழுது, தான் வாங்கிய பங்குகளின் விலை இப்பொழுது எப்படியிருக்கும் என்று பார்க்க மனம் அலைபாய்ந்தது.  அலம்பி வைத்த பாத்திரங்களை ஸிங்க்கின் மேல் சிமிண்ட் பலகையில் அடுக்கி வைத்து விட்டு டி.வி. பக்கம் வந்து ரிமோட்டை எடுத்தாள்.

ஐந்து வினாடிகள் காத்திருப்பில் சிமிண்ட் பங்கின் விலை திரையில் ஓடிய பொழுது அவள் வாங்கிய விலையை விட அறுபது ரூபாய்கள் ஏறியிருப்பது தெரிந்தது.  அறுபது ரூபாய் என்றால், ஆறாயிரம் என்று மனம் கணக்குப் போட்டது.  ஸ்டீலில் ஐம்பது ரூபாய் ஏற்றம்.  ஆக, அதில் இரண்டாயிரத்து ஐநூறு.  அந்த நேரத்தில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சந்தோஷம் மனசில் கொப்பளித்தது.  ரொம்ப அவசரப்பட வேண்டாம், க்ளோசிங் டைமில் என்ன நிலமை என்று பார்த்துக் கொள்ளலாம் என்று டி.வி.யை ஆஃப் செய்தாள்.

டீப்பாயின் மீது கத்தை பத்திரிகைகள் கிடந்தன. அவற்றைப் பார்க்கையிலேயே மனம் கசந்தது. சமீப காலமாக அவை எதையும் புரட்டிப் பார்க்கக் கூட அவளுக்கு ஆர்வம் இல்லாதிருந்தது.  நிஜத்தை எதிர்கொள்ளும் சாதனையில் மலரும் களிப்பு, கற்பனைக் கதைகள் கொடுக்கும் சந்தோஷத்தை விட மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர முடிந்தது.

ஒரு பிரபல பல்கலைக் கழகம் சார்ந்த தொலைக்கல்வி மையத்தில் வணிக நிர்வாகம் சம்பந்தப்பட்ட வகுப்பில் வித்யா சேர்ந்திருந்தாள்.   நேற்று இரவு உட்கார்ந்து எழுதிய பதில் பேப்பர்களை தொலைக்கல்வி மையத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது.  பங்குகள் வாங்கிய தொகைக்கான செக்கை மாலை கூரியர் தபாலில் அனுப்பும் பொழுது, அப்படியே கூரியரில் அவற்றையும் அனுப்பி விடலாம் என்று தீர்மானித்து அந்த பேப்பர்களை எடுத்து உறையில் இட்டு முகவரி எழுதி வைத்தாள்.  இன்னொரு கவர் எடுத்து காசோலை அனுப்புவதற்காக அதில் பங்குத் தரகர் முகவரியையும் எழுதி வைத்துக் கொண்டாள்.

வாஷிங் மெஷின் ஒலியெழுப்பிக் கூப்பிட்டது.  தண்ணீரை எடுத்து விட்டு அலசுவதற்காக நிரப்பி முடிக்கையில் வாசல் அழைப்பு மணியின் ரீங்கரிப்பு.  விட்டு விட்டான அதன் ஓசையிலேயே, கெளதம் தான் என்று தெரிந்து விட்டது.  வாஷிங் மெஷினை அலசுவதற்காக ஆன் செய்து விட்டு, போய் கதவு திறந்தாள்.

தலை நிமிர்ந்து அம்மாவைப் பார்த்து முறுவலித்தபடியே கெளதம் உள்ளே வந்தான்.

"என்ன, ஆஃப் இயர்லி ப்ரோகரஸ் ரிப்போர்ட் கொடுத்திருங்களா?..  நீ சிரிச்ச சிரிப்பிலேயே தெரிஞ்சிடுத்தே?" என்று பையனின் தோள் பக்கம் கை போட்டு அணைத்தாள்.

"க்குங்.." என்று கெளதம் சிணுங்கினான். "கண்ணை மூடிக்கோ.. கைலே தர்றேன்"

"இதோ, மூடிண்டாச்சு.." என்று விழி இமைகளை அரைகுறையாக மூடிக்கொண்டு, இரு கைகளையும் பரக்க விரித்தாள் வித்யா.

"ஐசலக்கா.. இப்படித்தான் கண்ணை மூடிப்பாளாக்கும்?.." என்று அவனே குட்டி விரல்களால் அவள் கண் பொத்தியபோது தாயுள்ளம் பொங்கி வழிந்தது.

"எவ்வளவு நேரம்டா, இப்படியே இருக்கறது?" என்று சிணுங்கினாள்.

"இந்தா.." என்று பிள்ளை கையில் வைத்ததும் தெரிந்து விட்டது, அவள் சொன்னது சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று.

"என்னடா, கெளதம்! இப்போ அம்மா கண்ணைத் தொறக்கலாமா?" என்று பிள்ளையிடம் அனுமதி கேட்ட பொழுது அந்த 'அம்மா'வில் இருந்த கொஞ்சல் அலாதியாக இருந்தது.

"ஓ. எஸ்.. இப்போ திறக்கலாம்.." என்று பிள்ளை அனுமதித்ததும், கண் திறந்து பார்த்தாள்.

ஆமாம், அந்த ரோஸ் நிற அட்டை, அவனது ப்ரோகரஸ் ரிப்போர்ட் தான்.  "என்ன, ரேங்க் டா.." என்று மடித்திருந்திருந்த அட்டையைப் பிரித்துப் பார்த்தவள், மலைத்தாள்..  மகிழ்ந்தாள்.

"பர்ஸ்ட் ரேங்காடா, செல்லக்குட்டி.." என்று வாரி அணைத்துக் கொண்டாள் வித்யா.

"அப்பா வந்ததும், வீட்லே, இல்லே, வெளிலே, ஹோட்டல்லே இதை செலிபரேட் பண்ணலாம்.. ஒரு மாறுதலா இருக்கட்டுமே.." என்று சொன்ன போது வேறேதோ நினைப்பு வந்து சிரிப்பு வந்தது அவளுக்கு.

(இன்னும் வரும்)

Sunday, August 26, 2012

பார்வை (பகுதி-55)

ர்மிளாவின் சந்தோஷத்தில் மிதக்கும் குரல் தொலைபேசியில் வழிந்த பொழுது அவள் மகிழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்ப்பது போலிருந்தது வித்யாவிற்கு. "இப்போத் தான் ரெண்டு நிமிஷத்திற்கு முன்னாடி போனில் வேணி கூப்பிட்டுச் சொன்னபோது தெரிந்தது.  உடனே உங்க கிட்டேதான் அதைச் சொல்லிப் பகிர்ந்துக்கணும் போல இருந்தது. அதான் உடனே கூப்பிட்டேன்" என்றாள் ஊர்மிளா.

"வேணியா?.. எந்த வேணி?"

"ஓ! வேணியை உங்களுக்குத் தெரியாதில்லையா?.. நான் வேலை செய்றேன்ல்லியோ, அந்தப் பதிப்பகத்தின் ரிஷப்ஷனிஸ்ட்!  நீங்க கூட நான் கேட்டேன்னு ஒரு ஆட்டோக்காரரின் பையனின் ஜாதகத்தை வாங்கித் தந்தீங்களே, அந்த ஜாதகம், பெண்ணோட ஜாதகத்தோட ரொம்பப் பொருந்தியிருக்காம்!  பொண்ணு பேரு லஷ்மி; வேணியோட சொந்த அக்கா. இப்போ புரியறதா?"

"ஓ--" என்று ஆச்சரியப்பட்டாள் வித்யா. "இப்போ ஞாபகம் வந்திடுத்து, ஊர்மிளா!" என்று சொன்ன போது, பார்த்த திரைப்படத்தின் காட்சி போல, ஆட்டோ பெரியசாமியின் ஆட்டோவில் எழுத்துப் பட்டறைக்குப் போகும் பொழுது லஷ்மி தெருவில் ஆட்டோ நுழைகையில், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் பெண்ணின் பெயரும் லஷ்மி என்று தெரிந்து 'இதைத் தாங்க சூசகமா தெரிவிக்கறதுன்னு சொல்வாங்க போலிருக்கு; சாதகப் பொருத்தம் கூட அவிங்க பாத்தா சரி;  எங்களுக்குப் பாக்கணும்ன்னு இல்லீங்க' என்று பெரியசாமி சொன்னதெல்லாம் அவள் நினைவுக்கு வந்தது.

"எனக்கு ரொம்ப சந்தோஷம், ஊர்மிளா.. சொல்லப்போனா எதிர்பார்க்கிறது கூடி வர்றத்தே அந்த சந்தோஷம் ரெட்டிப்பாகிறதுங்கறது உண்மைதான்.." என்றாள்.

"கூடி வர்றதுன்னு சொன்னீங்களே, அதுவும் எப்படி கூடி வந்ததுங்கறீங்க?.. பையன் தங்கமானவன்; உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னுக்கு வரத் துடிக்கறவன்; மட்டு மரியாதை தெரிஞ்சவன்... ரொம்ப சூட்டிகையான பையன்"

"ஒரு நிமிஷம்.. இவ்வளவு சொல்றீங்களே?.. கல்யாணப் பையனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?"

"அதான் வித்யா, அதைத்தான் சொல்ல வர்றேன்..  அதான், அந்த கூடி வந்ததோட மகத்துவம். இவ்வளவுக்கும் அந்தப் பையன் எங்க பதிப்பகத்து அம்பத்தூர் அச்சகத்திலேயே மேனேஜரா இருக்கான். வாரத்துக்கு ஒரு தடவையாவது நாங்கலாம் பாக்கற பையன் தான்.  இங்கே வந்தான்னா, ரெண்டு நிமிஷமாவது எங்கிட்டே பேசிட்டுப் போகாமா இருக்க மாட்டான்! நமக்கு நன்னாத் தெரிஞ்சிருந்தும் பலது நமக்குன்னு தோணி நடக்க மாட்டேங்கறது பாருங்க, அதைச் சொல்ல வந்தேன்!  ஒவ்வொண்ணுக்கும் அதுக்குன்னு ஸ்பெஷலா ஒரு ப்ராஸஸ் தேவையா இருக்கு! எங்கேயிருந்து எங்கே பாருங்க!  எப்படிக் கொண்டு வந்து சேக்கறது பாருங்க! அதான் எனக்கு நினைக்க நினைக்க ஆச்சரியமா இருக்கு.. உங்க மூலமா வந்த ஜாதகம் இல்லையா, அதான் எனக்குத் தெரிஞ்சதும் முதல்லே உங்களுக்குத் தான் சொல்லணும்ன்னு கூப்பிட்டேன்."

"என் மூலம்ன்னு இதிலே ஒண்ணும் இல்லே, ஊர்மிளா!  இன்ஃபாக்ட் எனக்கும் பொண்ணைத் தெரியாது; பையனையும் தெரியாது.  இருந்தும் இடைலே நம்ம பங்குன்னு ஒரு இன்வால்வ்மெண்ட்.  அந்த ஆட்டோக்காரப் பெரியவர் தன் பையனுக்கு பெண் பாத்திண்டிருக்கறதா சொல்லப்போக, அதே சமயத்தில் நீங்களும் பையன் ஜாதகத்தைப் பத்தி எங்கிட்டே சொன்னது ஞாபகத்துக்கு வர..." என்று ஒரு நிமிடம் தாமதித்து வித்யா தொடர்ந்தாள்.  "இதான் எனக்குக் கூட பிரமிப்பா இருக்கு, ஊர்மிளா! ஒரு நிகழ்ச்சி நடக்கறத்திலே இருக்கற சூட்சுமத்தைப் பாத்தா.. அப்படி நடந்த நிகழ்வுகள்லே பலது கூட,  பாக்கறதுக்கு ரொம்ப சாதாரணமாத் தெரிஞ்சு இப்படி முக்கியத்துவம் கொடுத்து நெனைச்சு பாக்கக் கூட நமக்குத் தெரியாம போயிட்றது;  இப்போ கொஞ்ச நாளா இதைப் பத்தித் தான் யோசிச்சிண்டு இருக்கேன்.. யோசிக்க யோசிக்க எனக்குப் பிரமிப்பா இருக்கு.." என்றாள்.

"வித்யா! நீங்க கூட என்ன, வராஹமிஹிரர் மாதிரி சொல்றீங்க?"

"வராஹமிஹிரர்?..  எங்கேயோ கேள்விப்பட்டப் பேரா இருக்கே, அது யார் ஊர்மிளா?.. யாரானும் ரிஷியா?"

"இல்லே. இவர் வேறே.  ஜோதிட நிபுணர்.  சரித்திர கால வராஹமிஹிரர் தான் இவரோட இன்ஸ்பிரேஷன்..  அவரும் ஜோதிட விற்பனர் ஆனதினாலே, அந்த ப்ரியத்லே அவர் பேரையே வைச்சிண்டிருக்கார். உங்களுக்குக் கூட அவரைத் தெரிஞ்சிருக்கலாம்."

"ஓஹோ.. 'செந்தாமரை' பத்திரிகைலே ராசிபலன்லாம் எழுதுவாரே, அந்த வராஹமிஹிரரா?.."

"அவரே தான்.  எங்க பதிப்பக ஓனர் பெரியவருக்கு ஆதிகால நண்பர்.  'நடக்கும் என்பார் நடக்கும்'ங்கற அவர் நாவல் ஒண்ணு எங்க பதிப்பகம் மூலமா பிரசுரம் காணப் போறது.  அது தொடர்பா பதிப்பகத்துக்கு வந்திருந்தார்.  அப்போ அவரோட பேசிண்டிருந்தப்போ அவர் சொன்னது மாதிரியே இருந்தது, நீங்க இப்போ சொன்னது.." என்று ஊர்மிளா சொன்ன போது வராஹமிஹிரர் அப்படி என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்வதில் வித்யாவின் ஆர்வம் இன்னும் கூடியது.

"ஈஸ் இட்?.. இன்ட்ரஸ்டிங்..  அவர் என்ன சொன்னார்?.. அதைச் சொல்லுங்க.." என்று பரபரத்தாள்.

"ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பிராஸஸ் இருக்குன்னார்.  ஒரு நிகழ்வு பூர்த்தியாகறதுக்கு, அந்த முழு பூர்த்திக்கான பல சேர்க்கைகள் இருக்காம்.  அந்த சேர்க்கைகளின் பூர்த்தி தான் அந்த நிகழ்வுங்கறார். அந்தச் சேர்க்கைகள் பூர்த்தி ஆகலைன்னா அந்த நிகழ்வு இல்லையாம். எனக்கென்னனா, அவர் சொல்றது பலது அவர் சொல்லிண்டே வர்றத்தே ஃபாலோ பண்ற ஜோர்லே நிறைய புரியற மாதிரி இருந்தது.  அப்புறம் நிறைய அது தொடர்பா கேள்வி எழறச்சே, அதுக்கெல்லாம் அவர் சொல்லித் தான் பதில் தெரிஞ்சிக்கணும் போலிருக்கு. கொஞ்சம் ட்ஃப்பான சப்ஜெக்ட்.  நிறைய யோசிக்கணும் போலிருக்கு."

"என்னோட சில சமீப கால அனுபவங்கள்னாலே இதெல்லாம் ஓரளவு புரியற மாதிரி இருக்கு,  ஊர்மிளா.  இதிலே ஒரு இடத்திலே தான் எனக்கு சந்தேகம்.  மனித யத்தனத்துக்கு மீறின சில நிகழ்வுகள்-- மொட்டவிழ்ந்து பூ பூக்கறது, கொட்டோ கொட்டுன்னு மழை பெய்யறது, வெயில் சுட்டெரிக்கறது-- இதெல்லாத்துக்கும் கூட இப்படியான இந்த சேர்க்கைகளோட பூர்த்தி அவசியம்ன்னு பட்றது.  அதே மாதிரி சாதாரணமா மனுஷ முயற்சிகளுக்கு உட்பட்ட நெறைய விஷயங்கள்.  அதிலெல்லாம் மனுஷனோட பங்களிப்பு இயல்பா எப்படி ஏற்பட்டு அந்த விஷய பூர்த்திக்கு அனுசரணையாப் போறதுன்னும் தெரிஞ்சிக்கணும்."

"நல்ல சந்தேகம்.  ரொம்ப யோசிச்சிருங்கீங்க, போலிருக்கு. வராஹமிஹிரர் கிட்டே தான் கேக்கணும். அவர் அட்ரஸ் இருக்கு. போய்ப் பாக்கிறீங்களா?"

"நிச்சயமா." என்று ஊர்மிளா கொடுத்த விலாசத்தை வித்யா குறித்துக் கொண்டாள்.  தொலைபேசி எண்ணும் கிடைத்தது செளகரியமாப் போயிற்று.

"போன் பண்ணிட்டு எப்போ வரச்சொல்றாரோ அப்போப் போய்ப் பாக்கறேன், ஊர்மிளா."

"அதான் சரி." என்று ஊர்மிளா சொன்ன போது, வாசலில் "அம்மா.." என்று குரல் கேட்டது.

"ஒரு நிமிஷம், ஊர்மிளா! வாசல்லே யாரோ கூப்பிடறாப்பலே இருக்கு.." என்று ஊர்மிளாவிடம் சொல்லி விட்டு, "கெளதம்! யார் கூப்பிடறா, பார்!" என்று வித்யா மகனிடம் சொன்னாள்.

ஒரே நிமிடத்தில் திரும்பி வந்த கெளதம், "அம்மா! அந்த ஆட்டோக்காரத் தாத்தா வந்திருக்கிறார்ம்மா.." என்றான்.

"ஓ.. ஊர்மிளா! பெரியசாமி தான் வந்திருக்கிறார்.  என்னன்னு விசாரிச்சிட்டு வந்திடவா?"

"ஜாதகம் பொருந்தியிருக்கற விஷயத்தைத் தான் சொல்ல வந்திருக்கார், போலிருக்கு.. நான் அப்புறம் பேசறேன்.. வைச்சிடட்டுமா?"

"சரி, ஊர்மிளா.." என்று போனை வைத்த வித்யாவிற்கு, இந்தத் திருமண விழா நிகழ்வில் இன்னும் தன் பங்கு மிச்சம் இருந்து பூர்த்தியடையாமல் இருக்கிறது போலிருக்கு என்று நினைத்த பொழுது, அந்தப் பூர்த்திக்காக மனம் விழைந்தது.   வாசலுக்கு விரைந்தாள்.

வெளி வாசலில் நின்றிருந்த பெரியசாமியின் முகத்தில் சந்தோஷம் மலர்ந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. "வாங்க.. வாங்க.. உள்ளே வாங்களேன்.." என்று வித்யா அவரை உள்ளே அழைத்த பொழுது, அவர் கொஞ்சம் விலகி, "நீ போ.. நான் பின்னாடி வர்றேன்.." என்று சற்று ஒதுங்கி நின்ற பொழுது தான் பின் பக்கம் கையில் ஒரு பையுடன் இத்தனை நேரம் பார்வைக்குப் படாமல் நின்றிருந்த அந்த அம்மாள் தெரிந்தாள்.

பெரியசாமி தன் மனைவியுடன் சந்தோஷ விஷயத்தைச் சொல்ல வந்திருக்கிறார் என்று சட்டென்று புரிந்ததும், வித்யா நெகிழ்ந்து போய்விட்டாள்.

"வாங்கம்மா.. உள்ளே வாங்க.." என்று அவள் அழைத்ததும், அந்த அம்மாளும் மலர்ந்த முகத்துடன் உள்ளே வந்தார்.

"உட்காருங்கம்மா... நீங்களும் உட்காருங்க.."

"இருக்கட்டும்மா.. "

"இல்லே.. உட்காருங்க.." என்று வித்யா அந்த அம்மாளின் கைபற்றினாள். "உட்காறத்துக்குத் தானே சேர்-சோபாலாம் போட்டிருக்கு.. உட்காருங்க..." என்ற வற்புறுத்தலுக்கு அப்புறம் உட்கார்ந்தார்கள்.

"நீங்க மட்டும் நின்னுகிட்டிருந்தா எப்படி? நீங்களும் உட்காருங்க.." என்று பெரியசாமி சொன்னதும் சிரித்துக் கொண்டே ஒரு நாற்காலியை நகர்த்திப் போட்டுக் கொண்டு அந்த அம்மாளின் அருகில் அமர்ந்தாள் வித்யா.

"என் பையன் நாராயணனோட ஜாதகத்தை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தீங்கள்லே,   அந்தப் பொண்ணு பேர் கூட லஷ்மிம்மா,  ஞாபகம் இருக்கா?.. இன்னிக்கு அவங்க வீட்லே கூப்பிட்டுச் சொன்னாங்கம்மா.. அவங்க பாத்த அளவிலே ரெண்டு ஜாதகங்களுக்கும் நெறைய பொருத்தங்கள் பொருந்தி வர்றதாம்.  அதைக் கேட்டு ரொம்ப சந்தோசப்பட்டோம். அவங்க சொன்னதே போதும்.  நாங்க வேறே தனியா எதுக்குங்க ஜோசியர் கிட்டே போகணும்? அதுனாலே போகப் போறதில்லே.  கடவுளா பாத்து கை காட்டியிருக்கிறார். அவரா பாத்து இந்தக் கல்யாணத்தையும் முடிச்சு வைக்கட்டும்.  பையன்-பெண் திருப்திக்கு பொண்ணு பாக்கப் போகணும். அதான் உங்க கிட்டேயும் சொல்லணும்ன்னு வந்தோம்.."

"நல்ல சமாச்சாரத்தைச் சொல்லியிருக்கீங்க.. எனக்கும் ரொம்ப சந்தோஷம்" என்று வித்யா எழுந்திருந்தாள்.  சமையறை அலமாரித் தட்டில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாங்கியபடியே டப்பாவில் இருந்தது.  எழுந்து போய் அதை எடுத்துக் கொண்டு வந்து, "நீங்களும் ஸ்வீட் எடுத்துக்கங்க.." என்று அவர்களிடம் டப்பா திறந்து நீட்டிய போது அவர்கள் முகத்தில் ஆனந்தம் பொங்கியது.  ஆளுக்கு ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்ட போது வயசான அந்த தம்பதிகளின் மகிழ்ச்சி முகத்தில் பளீரிட்டுப் போனது.

அந்த அம்மாள் வித்யாவிடம் ஒரு தட்டு கேட்டு வாங்கி, பையிலிருந்து சில பழங்களையும் பூவையும் எடுத்து வைத்தாள்.  "நாளைக்கு மத்தா நாள், நல்ல நாளாயிருக்காம்மா..  பொண்ணு பாக்கப் போறோம்.  நீங்களும் உங்க வீட்டு அய்யாவைக் கூட்டிகிட்டு எங்க கூட வரணும்மா.." என்று தட்டை வித்யாவிடம் நீட்டினாள்.

"அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்மா.." என்று தட்டை வாங்கிக் கொண்டு பூஜை அறையில் கொண்டு போய் வைத்தாள் வித்யா. 'மனுஷங்க, வெறும் டூல் தான். மனுஷங்க கலந்துக்கற மாதிரி ஒரு பொம்மை விளையாட்டு' என்று அவள் மனசில் சட்டென்று ஒரு நினைப்பு வந்து போயிற்று.

"நாளைக்கு மறுநாள் தானே?.. எப்போ பொண்ணு பாக்கப் போறதா இருக்கீங்க?.."

"மாலை நாலு மணிக்கு மேலே போலாம்ன்னு இருக்கோம்.  கார் ஏற்பாடு செஞ்சிருக்கேன்.  நாலரைக்கு இங்கே வந்திடறேன்.." என்றார் பெரியசாமி.

"எங்க வீட்டிலே அவருக்கு எப்படி செளகரியம்ன்னு தெரிலே.  எப்படியும் நான் வந்திடறேன்.. போய்ட்டு வந்திடலாம்" என்று ரொம்ப இயல்பாக தான் அவர்களுக்கு பதில் சொன்னது வித்யாவிற்கே வியப்பாக இருந்தது.

"ரொம்ப சந்தோசம்ம்மா.  உங்க கூட அன்னிக்கு ஆட்டோலே வந்தாங்களே, அந்தம்மாவுக்கும் வர்றதுக்கு செளகரியப்படுமான்னு தெரிலே. இங்கே தானே அவங்களும் குடித்தனம் இருக்காங்க.. கேட்டுடலாம்னுட்டு.." என்று பெரியசாமி தயங்கினார்.

"ஓ.. அவங்க உஷா..  காலைலே தான் புரசைவாக்கத்திற்கு, அவங்க அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க.. வந்திடுவாங்க.. நான் கேட்டு வைக்கிறேன். வருவாங்க.  அவங்களையும் கூட்டிகிட்டுப் போகலாம்" என்று சொன்னாள் வித்யா.

எல்லாம் சேர்ந்து வருவதற்கு எந்த குந்தகமும் ஏற்பட்டுவிடாமல் அதன் போக்கிலேயே எந்த எதிர்மறையுமில்லாமல் பேச்சு, செயல் எல்லாம் இருக்க வேண்டும் என்று இத்தனைக்கும் நடுவே வித்யாவின் மனசு அவளுக்கு அறிவுறுத்துகிற மாதிரியான உணர்வும் அவளுக்கிருந்தது.

"ரொம்ப சந்தோசம்மா.. அப்ப நாங்க வர்றோம்.." என்று பெரியசாமியும் அவர் மனைவியும் விடைபெற்றுப் புறப்பட்ட பொழுது மனுஷப் பிறவி ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாக வித்யாவிற்குப் பட்டது.


(இன்னும் வரும்)










 

Wednesday, July 11, 2012

பார்வை (பகுதி-54)

வித்யாவின் விழிகள் டி.வி. திரையில் நிலைகொள்ளாது தவித்தன.  ஆங்கில அகர வரிசைப்படி திரையில் நகர்ந்து கொண்டிருந்த நிறுவனங்களின் பெயர்களுடன் காணப்பட்ட அந்த நொடியிலான பங்கின் மதிப்பு விலையை அவள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்தாள்.  அவள் குறிவைத்திருந்தது ஐந்து நிறுவனங்கள்.  அந்த ஐந்து நிறுவனங்களின் அப்பொழுதிய பங்கு விலை மிகவும் இறங்கித் தான் இருந்தது. இந்த இறக்கம் எந்த அளவுக்கு இறங்கப் போகிறது என்பது தான் கேள்வி.  எவ்வளவு குறைவான விலைக்கு வாங்குகிறோமோ அந்த அளவுக்கு அந்தப் பங்குகளின் விலை ஏறும் போது லாபம்.  இன்றைய ஷேர் மார்க்கெட்டின் இந்த இறக்கம் தனக்காகவே இறங்கியது போலிருந்தது அவளுக்கு.

'இதற்குத் தானே காத்திருந்தேன்- தாங்க் காட்' என்று முணுமுணுத்தபடி வித்யா தொலைபேசியை நெருங்கினாள்.  ஷேர்களின் ஏற்ற இறக்க விவரங்களை எழுதி வைத்திருந்த அந்த நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ஸ்டாக் புரோக்கரின் அலுவலக தொலைபேசி எண்களை கொட்டை எழுத்துக்களில் குறித்து வைத்திருந்தது நல்லதாகப் போயிற்று.

மொத்தம் மூன்று எண்கள்.  முதல் எண்ணை அழைத்த பொழுது அந்தத் தொலைபேசி எங்கேஜ்டாக இருப்பது தெரிந்தது.  ஒரு கண் டி.வி. திரையில் பதிந்திருக்க, அவசரமாக ஹூக் ஸ்விட்சை அழுத்தி டயல்டோன் ஏற்படுத்திக் கொண்டு அடுத்த எண்ணை அழைத்த பொழுது கிடைத்த வாய்ஸ், லயனில் காத்திருக்கச் சொன்னது.  காத்திருக்க அவளுக்குப் பொறுமை இல்லை. இன்னொரு பக்கம் டி.வி. திரையில் மிகமிகக் குறைந்திருந்த அந்த சிமிண்ட் கம்பெனியின் ஷேர் மதிப்புத் தொகை கொஞ்சம் கொஞ்சமாக ஏறுவதைப் போலிருந்தது. ஸ்டீல் நிறுவனத்தின் பங்கும் இறங்கிய விலையிலிருந்து ஏற ஆரம்பிக்க.. ஆக, இந்த வீழ்ந்த விலை தான் நிறைய பேரை வாங்கத் தூண்டி ஏறத் தொடங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.  பார்த்துக் கொண்டே இருக்கையில் நான்கு ரூபாய்கள் ஏறியிருந்தது ஏழாகி ஏற...  சரசரவென்று அந்தப் பங்குவிலை இன்னும் ஏறுவதற்குள் வாங்கி விட வேண்டும் என்கிற துடிப்பில், தொலைபேசியில்  மூன்றாவது எண்ணைத் தேர்ந்து அழைப்பதற்குள்  டி.வி. திரையில் மார்க்கெட் நேரம் முடிந்து விட்டதைத் தெரிவிக்கும் மணியோசை கிணுகிணுத்து திரையின் இடது பக்க மேல் மூலையில் பூஜை மணி மாதிரி சின்னம் தோன்றி குலுங்கிக் கொண்டிருந்தது.  கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள்.  சரியாக மூன்றரை! இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டின் வர்த்தக நேரம் முடிந்து விட்டது;  அவ்வளவு தான். இனி நாளை தான்.

'ச்சை'என்று மனம் கசந்தது.  கைக்கெட்டும் வரை வந்ததைக் கோட்டை விட்டாயிற்று. இந்த இழப்பு உணர்வு அவளுக்கு புது அனுபவம்.  முதன் முதல் நிஜமாக ஷேர் வாங்கலாம் என்று உட்கார்ந்த பொழுது ஏற்பட்ட அனுபவம் கசந்தது.  கெளதம் விளையாடுகிற டிரேட் விளையாட்டு மாதிரி தான்.  விளையாட்டு மாதிரி கற்பனையில் கோட்டை கட்டும் பொழுது எல்லாம் நடந்து விடுகிற மாதிரி சுலபமாகத் தான் இருக்கிறது.  நிஜம் என்று வருகிற பொழுது நிறைய யோசனைகள் வந்து சடாரென்று துணிந்து இறங்க முடியாத தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டாள்.  'அவ்வளவு நேரம் ஏன் யோசித்தாய்; வாங்கியிருக்கலாமில்லையா' என்று மனசின் இன்னொரு மூலையிலிருந்து அவளைப் பழித்துக் காட்டி கேள்வி எழுந்தது.  பத்து நிமிஷம் போலிருக்கும்.  டி.வி. திரையைப் பார்த்தபடி சோர்ந்து உட்கார்ந்திருந்தவள், ஒரே நாள் அனுபவத்திற்கு, அதுவும் எதுவுமே நிகழாத ஒன்றுக்கு இவ்வளவு குமைச்சல் கூடாதென்று ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தாள்.

லேசாகத் தலையைக் கோதிவிட்டபடி சீப்பெடுத்து வாரிக் கொண்டாள். சோப் போட்டு முகம் அலம்பி டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டிருக்கையில் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.  ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் கண்ணாடி பார்த்து அழுத்திக் கொண்ட பொழுது அம்மாவின் நினைவு வந்தது.  'எங்காலத்தில் எல்லாம் சாந்து தாண்டிம்மா.. கொட்டாங்கச்சி யில் குழைச்சு வைச்சிருப்போம்.  நீ கூட குழந்தையாய் இருக்கறச்சே உனக்கு இட்டிருக்கேன்' என்பாள்.  நடுவயிறு பெருத்து மீன் மாதிரி இருக்கும் சின்ன சிமிழிலிருந்து பிளாஸ்டிக் குச்சியில் மை எடுத்து விழிக்கடையில், நீட்டி விட்ட மாதிரி அம்மா தீட்டி விட்ட நினைவு கூட இருக்கிறது.  அப்படி கண் மை தீட்டும் பொழுதெல்லாம் கண்ணசைத்து விடாமல் இவள் கவனத்தைக் குவிக்க அம்மா கீழ் உதடை உட்புறமாகக் குவித்து 'களக்,களக்' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புவாள்.  பாவம், அம்மா.  அவள் மேல் ரொம்பவும் பிரியம். என்ன அடம் பிடித்தாலும் துளிக் கோபம் வர வேண்டுமே! சாதாரணமாய் இருக்கும் பொழுதே சந்தோஷமாய் இருக்கிறது மாதிரியான முகம். சிரித்துக் கொண்டே பார்த்துப் பார்த்து எல்லாம் செய்வாள்.  கல்யாணம் ஆன பிறகு, பொதுவாக வீட்டில் இருக்கும் பொழுது பவுடர் போடும் பழக்கம் வித்யாவுக்கு இல்லை.  எங்காவது வெளியில் கிளம்பும் பொழுது முகத்தில் எண்ணைய் வழிகிற மாதிரி டல்லடிக்கற உணர்வு வந்தால், முகம் அலம்பியவுடன் லேசாகத் தீற்றிக் கொள்வாள்.  வீட்டில் பெளடர் டப்பா இருக்கிறது தான்; ஆலிலை கிருஷ்ணன் டி.எஸ்.ஆர். சாண்டல் டப்பா.  தினமும் பள்ளிக்கூடத்திற்குக் கிளப்புகையில் கெளதமிற்கு அதைப் பூசி விடுவதோடு சரி.  ரிஷிக்கானால் ஹேர் ஆயில், பெளடர், செண்ட் என்று அத்தனை சமாச்சாரங்களும் அலர்ஜி. மொத்தத்தில் இந்த காஸ்மடிக் சமாச்சாரங்களுக்கு செலவு செய்வது தன் வீட்டில் ரொம்பவும் குறைச்சல் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

கெளதம் ஸ்கூல் விட்டு வருவதற்குள் சாயந்தர டிபனுக்கு ஏதாவது பண்ணலாமா என்று தோன்றியது.  காய்கறிக் கூடையைத் திறந்து பார்த்ததில்  வெங்காயம் இருந்தது தெரிந்தது. சிவப்பாய் நான்கு எடுத்துக் கொண்டாள்.  நல்லவேளை, கடலைமாவும் இருந்தது. எடுத்துக் கரைத்து வைத்துக் கொண்டாள்.  கால்மணியில் வெங்காய பஜ்ஜி ரெடியாவதற்கும் கெளதம் வருவதற்கும் சரியாக இருந்தது.

வந்தவன் ஸ்கூல் பையை முன் அறையில் போட்டிருந்த அவனது குட்டி ஸ்டடி டேபிளின் மேல் வைத்து விட்டு, கைகால் அலம்பித் துடைத்துக் கொண்டு வந்தான்.  ஷெல்ப் மாதிரி தடுத்துக் கட்டியிருந்த பூஜை இடத்திற்குப் போய் சம்புடத்திலிருந்து விபூதி இட்டுக் கொண்டு வந்தவன், அவள் பக்கத்தில் நெருங்கி வந்து வாசனை பிடித்தபடி, "என்னம்மா?.. வெங்காய பஜ்ஜியா?" என்றான்.

"ஆமாண்டா.  தட்லே உனக்கு வைச்சிருக்கேன், பாரு. எடுத்துக்கோ.." என்று அவனுக்குச் சொன்னவாறே காப்பி கலந்தாள்.

பஜ்ஜித் தட்டை எடுத்துக் கொண்டு சோபா பக்கம்  போனதும், "என்னம்மா.. வானவில் வந்தாச்சா?" என்று ஆச்சரியப்பட்டவன், "ஹை! அப்பா கதை.." என்று குதித்தான். பத்திரிகை அட்டை பார்த்து 'காதல் தேசம் - தொடர்கதை - இந்த இதழில் தொடக்கம்' என்று கட்டம் கட்டி போட்டிருப்பதை ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டிப் படித்தான்.  "அப்பா தொடர்கதை ஆரம்பிச்சாச்சு, அம்மா! பாத்தியா?"

அவளுக்குக் கூட இப்பொழுது தான் நினைவுக்கு வந்தது.  வரும் பொழுதே போஸ்ட் பாக்ஸில் கிடந்த பத்திரிகையை எடுத்து வந்து சோபாவின் மேல் போட்டவள், டி.வி.யில் ஷேர் மார்க்கெட் நிலவரத்தைப் பார்த்த ஜோரில் மறந்தே போய் விட்டாள்!  'காதல் தேசம்' ஆரம்பித்து விட்டதா?'..  என்று மனம் கூப்பாடு போட்டது.  அடுத்த நிமிடமே, தொய்ந்து போய், 'எது ஆரம்பித்து என்ன?.. கதைன்னா எல்லாமே வெறும் கற்பனை தானே! கற்பனையில் மனம் போன போக்கில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.  ஆனால் நிஜம் வேறு.  இப்போ ஷேர் வாங்க முடியாமல் போச்சே! அந்த மாதிரி நிஜம் வேறு' என்று நினைத்துக் கொண்டாள்.  'இதற்குள் உஷா ஆரம்ப அத்தியாயத்தைப் படித்திருப்பாள். இதோ கொஞ்ச நேரத்தில் நிச்சயம் வருவாள்.  வந்து கதையின் ஆரம்பம் பற்றி என்ன சொல்லப் போகிறாளோ?.. அவளுக்கு பதில் சொல்வதற்காவது படித்து வைக்க வேண்டும்' என்று நினைப்பு மண்ணுளிப் பாம்பாய் சுருக்கிச் சுருக்கி நீண்டது..

பத்திரிகையோடு சில தபால்களையும் கொண்டு வந்து வைத்த ஞாபகம் வந்தது.  எல்லாவற்றையும் ரிஷியின் அறைக்குப் போய் அவன் டேபிளின் மேல் வைத்தாள்.  வெளி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி அழைத்தது. வேகமாய்ப் போய் எடுத்தாள்.

"ஹலோ..."

"ஹலோ, வித்யா.. நான் ஊர்மிளா பேசறேன்."

"ஓ!.. எப்படியிருக்கீங்க?.. " என்று கேட்ட பொழுது புதுமனுஷியாய் சந்தோஷம் குரலில் வழிந்தது.

"நாங்க ஃபைன்.  'காதல் தேசம்' தொடங்கியிருக்கே?.. பாத்தீங்களா.. தொடக்கம் லாம் நல்லாத்தான் இருக்கு..  படம்லாம் தூள் கிளப்பியிருக்காங்கள்லே?.."

"வெளிலே போயிருந்தேன், ஊர்மிளா.. 'வானவில்' வந்திருக்கு.. ஆனா, இன்னும் பிரிச்சுப் பாக்கலை.." என்று பொய் சொல்ல விரும்பாமல் தவித்தாள். "ரொம்ப தேங்க்ஸ். ஊர்மிளா.. இவர் இன்னும் ஆபிஸ்லேந்து வரலே.. லஷ்மணன் சார் நல்லா இருக்காரா?"

"ஓ.. நல்லா இருக்கார்..  அப்புறம், எதுக்குக் கூப்பிட்டேன்னா.. இன்னொரு சந்தோஷத்தையும் உங்க கிட்டே பகிர்ந்துக்கறத்துக்காக.."

"அப்படியா?" என்று கேட்ட ஆவலில் வித்யாவின் குரல் குழைந்தது.


(இன்னும் வரும்)

Friday, July 6, 2012

பார்வை (பகுதி-53)

பெரியவரின் அறையில் பெரியவரின் வயசை ஒத்த இன்னொரு பெரியவரைப் பார்ப்போம் என்று ஊர்மிளா நினைத்தே பார்க்கவில்லை.

பெரியவர் அவரை ஊர்மிளாவிற்கு அறிமுகப்படுத்திய பொழுது அவர் தான் வராகமிஹிரர் என்று தெரிந்து ஊர்மிளாவின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. பெரியவரின் நண்பராம்.  நெடுங்காலம் ஜோதிட சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவரை பெரியவர் தான் அவரது அனுபவங்களை வைத்து ஒரு நாவல் எழுதித் தரக் கேட்டுக் கொண்டதின் விளைவு தான் 'நடக்குமென்பார் நடக்குமாம்'.    எல்லாவற்றையும் பெரியவரின் வாய் மொழியாகக் கேட்ட போது ஊர்மிளாவிற்கே அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளின் போக்கில் இருக்கும் விசேஷத்தன்மையை உணர்ந்து கொண்ட மாதிரி இருந்தது.

சாதாரணமாக நாம் மகிழ்ச்சி என்று சொல்வோமே அதைத் தாண்டிய ஒரு வசீகரப் பளபளப்பு நாராயணனின் முகத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவனது அந்த பளபளப்புக்குக் காரணம் என்னவென்று ஊர்மிளாவால் ஊகிக்க முடிந்தது. புத்தகத்தைத் தேடினால் அந்த புத்தகத்தை எழுதிய நபரே நேரிலேயே வந்து நாராயணனுக்கு 'நடக்க வேண்டும் என்று நீ நினைத்திருப்ப தெல்லாம் நடக்கப் போகிறது, பார்' என்று நிச்சயப்படுத்திய பளபளப்பு அது.  கோடை வெப்பத்தில் மேகமாவது திரண்டு வெயிலின் சூட்டைக் குறைக்கட்டுமே என்று நினைத்தால், திரண்ட மேகம் வானத்தைப் பொத்துக் கொண்டு மழையாகவே பொழிந்த மாதிரி அவன் சந்தோஷம் வெளிப்படத் தெரிந்தது.

"ஊர்மிளா! இந்தாங்க.  புஸ்தகத்தை எழுதின ஆசிரியரைப் பற்றிய குறிப்பு.  இதை இவர் புஸ்தகத்தின் பின் அட்டையில் இவர் போட்டோவோட போட்டுடலாம்.  இந்த குறிப்புகளை நானே எழுதி வைச்சிருந்தேன்.  அகஸ்மாத்தாக இவரும் வந்து விடவே விட்டுப் போன ஓரிரண்டு விஷயங்களை சேர்த்துக்கவும் செளகரியமா போச்சு." என்றார் பெரியவர்.

"சரி. சார்." என்று அவர் கொடுத்த குறிப்புகளை வாங்கிக் கொண்டாள் ஊர்மிளா.

"இவங்க ஊர்மிளா.. யார் தெரியுமோ?"என்று அந்தப் பெரியவரிடம் கேட்டார் இந்தப் பெரியவர்.

"சொல்லுங்கோ. கேட்டுக்கறேன்" என்றார் வராகமிஹிரர்.

"அபராஜிதன்ங்கற பேர்லே கதையெல்லாம் எழுறாரே லஷ்மணன்,
தெரியுமோ?"

"பேஷாய்த் தெரியும்."

"அந்த லஷ்மணன் சார் மனைவி தான் இவங்க."

 சட்டென்று ஊர்மிளா இருந்த பக்கம் திரும்பி "அப்படியா, குழந்தை?.. உன்னைப் பாத்ததிலே ரொம்ப சந்தோஷம்" என்று மலர்ந்தார் வராஹமிஹிரர். 

"நமஸ்காரம்" என்று அவரைப் பார்த்துக் கைகுவித்தாள் ஊர்மிளா.

"உன் பேர் ஊர்மிளா, இல்லையா?.." என்று யோசனையுடன் இழுத்த வராஹமிஹிரர், ஒரு நிமிடம் தாமதித்துச் சொன்னார். "இந்த மாதிரி பெயர்ப் பொருத்தம் இருந்தாலே, மத்தப் பொருத்தம்லாம் தன்னாலே கூட வரும்." என்று சொன்ன போது வேறொன்றை நினைத்துக் கொண்ட நினைவில் நாராயணன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "ஒண்ணு தெரியுமா, குழந்தை?" என்று ஊர்மிளாவிடம் எதையோ சுவாரஸ்யமாகச் சொல்லத் தொடங்கினார் வராஹமிஹிரர். "உனக்கெப்படி தெரியும்? தான் மத்தவாளுக்குச் செஞ்சது எதைப் பத்தியும் இன்னொருத்தர் கிட்டே சொல்லத் தெரியாத உத்தமன், உன் புருஷன்! அப்படியிருக்க எப்படித் தெரிஞ்சிருக்கும், உனக்கு? நான் சொன்னாத்தான் இது கூடத் தெரியும்" என்றவர் தொண்டையைச் செருமிக் கொண்டார். 'செந்தாமரை' பத்திரிகை இருக்கில்லையா? அதுலே வாராவாரம் ராசிபலன் எழுத லஷ்மணன் என்னை அறிமுகப்படுத்தி வைச்சான்.  அப்படித்தான் அந்தப் பத்திரிகையோட என் தொடர்பு ஆரம்பிச்சது. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சின்னா கேட்க வேண்டாம்.  என் வேலை களைகட்டிடும். எல்லா ராசிக்கும் பலனை எழுதி வாங்கிண்டு புஸ்தகமா வேறே போடுவாங்க. ஆரம்பத்திலே மாச சம்பளம் மாதிரி ஆயிரம் ரூபா கொடுத்தாங்க.. போகப் போக அது அஞ்சாயிரம் வரை போச்சு.  என்ன சம்பாதிச்சு என்ன பலன்? அதுக்குன்னே ஏதாவது மருந்துச் செலவு காத்திருக்கும். என் ராசி அப்படி.." என்றவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

"அப்போ இந்த ராசிபலன் எழுதிச் சம்பாதிக்கலேனா, மருந்துச் செலவும் இருந்திருக்காதுன்னு சொல்றையா?" என்றார் பெரியவர்.

"பாத்தையா? எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே, பாத்தையா?" என்று கோபப்படுகிற மாதிரி காட்டிக் கொண்டார் வராஹமிஹிரர்.  "ஒரு பக்கம் வந்ததுன்னா, இன்னொரு பக்கம் போயிடறது பார்ங்கறத்துக்காகச் சொன்னேன்.  காரணம் இல்லாம எந்தக் காரியமும் இல்லே.  நிகழ்வா நடக்கற ஒவ்வொரு காரியமும் சயின்ஸ்.  ஒண்ணைப் பாத்தையா?.. தன்னாலே எந்தக் காரியமும் நடக்காது.  ஒண்ணோட ஒண்ணு சேந்து தான் இன்னொண்ணுன்னு எல்லாத்துக்கும் ஒரு ப்ராஸஸ் இருக்கும். இந்தக் கணக்கைப் பத்திச் சொல்லப்போனா ஆரியபட்டரிலிருந்து ஆரம்பித்து ஐயின்ஸ்டின் வரைப் போகும்.  அதனாலே தான் இயற்கையா நடக்கற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு இந்த 'நடக்குமென்பார் நடக்கும்' நாவல்லே கூட என் வாழ்க்கையிலே எனக்கு அனுபவப்பட்ட விஷயங்களுக்கு கதை ரூபம் கொடுத்திருக்கிறேனே, தவிர செயற்கையா கற்பனையா எதையும் எழுதலே" என்றார்.

பேசாமல் கைகட்டி உட்கார்ந்து கொண்டு, வராஹமிஹிரர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது, நாராயணனுக்கு.

தேனாம்பேட்டையில் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் அவர்களது அலுவலகம் இருந்தது. தனித்தனியாக பான் கார்டும், பேங்க் அக்கெளண்ட்டும் இரண்டு பேருக்கும் இருந்ததினால், ஷேர் அக்கெளண்ட்டை இரண்டு பேருக்கும் சேர்ந்த கணக்காக ஆரம்பிப்பது எளிதாகப் போயிற்று. கிட்டத்தட்ட இருபது பக்கத்திற்கான ஒப்பந்த காகிதங்களின் கீழ்ப்பகுதியில் வித்யாவும், ரிஷியும் கையொப்பம் இட்டனர். அங்கங்கே விண்ணப்ப படிவத்தில் ஒட்ட போட்டோக்கள் வேறு. ஷேர் ப்ரோக்கர் அலுவலகத்தில் அவர்களை அறிமுகப்படுத்த உஷாவின் கணவரும் கூட வந்திருந்தது மிகவும் செளகரியமாகப் போயிற்று..

ஷேர் ப்ரோக்கர் அலுவலகத்தில் அவர்களுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. உஷாவின் கணவருக்கு அங்கு ஏகப்பட்ட மரியாதை. இந்தத் துறையில் அவர் விஷயம் தெரிந்தவர் என்கிற விஷயம் தான் அந்த மரியாதைக்குக் காரணம் என்று வித்யாவிற்குப் புரிந்தது.

அவள் ஒப்பந்தப் படிவங்களில் கையெழுதிட்டுக் கொண்டிருந்த பொழுது, யாரோ சொன்னார்கள்.  "மேடம்! நீங்கள் பங்குச் சந்தையில் பங்கு பெற எடுத்த முடிவு புத்திசாலித்தனமான ஒண்ணு.  ஏன்னா, இங்கு அள்ள அள்ளப் பணம், மேடம்!" என்றார்.

புன்முறுவலுடன் தலை நிமிர்ந்த வித்யா, "அப்படியா சொல்றீங்க.. அள்ள அள்ள பணம்ங்கற பேராசை எனக்கில்லை.  அப்புறம் அது அதல பாதாளத்தில் தள்ளி விட்டுதுன்னா, எழுந்திருக்க முடியாம போயிடுமே, சார்!" என்றாள்.

அவள் முகத்தில் அடித்த மாதிரி அப்படிச் சொன்னது உஷாவின் கணவருக்குக் கூட ஒரு மாதிரி இருந்தது. ஏனென்றால்,வித்யாவிடம் அப்படிச் சொன்னவர் இந்த சந்தையில் ரொம்பவும் அனுபவம் வாய்ந்த மனிதர். இருந்தாலும் அவரும் அப்படி அப்பாவிகளுக்கு பேராசை காட்டி இழுக்கற மாதிரி அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.

அவரும் விடுவதாயில்லை. "பின்னே எப்படி மேடம்?.. பணம் சம்பாதிக்கணும்ன்னு தானே பங்குச் சந்தைக்கு வந்தீங்க?.. கொட்டோ கொட்டென்று கொட்டித்துன்னா, வேணான்னா சொல்லிடுவீங்க?" என்றார்.

"எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்ன்னு எனக்கு ஆர்வம் உண்டு சார். அந்த ஆர்வம் இந்த சந்தை விளையாட்டிலும் எனக்கு ஏற்பட்டது.  ஆனா இது பணத்தோட விளையாடற விளையாட்டுனாலே ஒரு ஜாக்கிரதை உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கு," என்று வார்த்தை வார்த்தையாக நிறுத்தி நிறுத்திச் சொன்னாள்.

"சரிதான் நீங்க சொல்றது. ஆனா, விளையாட விளையாடத் தான் இந்த விளையாட்டின் நுணுக்கம் அத்துப்படியாகும்." என்றார் அவர்.

"நிஜ விளையாட்டுக்குக் களத்திலே இறங்கறத்துக்கு முன்னாடி நான் கூட ஒரு பொய் விளையாட்டுலே இறங்கியிருக்கேன். அந்த பொய் விளையாட்டுலே நாலு மடங்கு லாபம் வந்ததாலே தான் இப்போ நிஜ விளையாட்டுக்கே துணிஞ்சு வந்திருக்கேன்" என்றாள் அவள்.

"அப்படியா?.. வேடிக்கையாய் இருக்கே, நீங்க சொல்றது? அது என்ன பொய் விளையாட்டுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"

"சொல்றேன்.  நீங்க பாத்திருக்கீங்களா? குத்துச்சண்டை போட பயிற்சி பெறவங்க, பயிற்சிக்காக ஒரு பஞ்சுப் பொதியில் குத்திக்கிட்டு இருப்பாங்கள்லே?.. அந்த மாதிரி.."

"அந்த மாதிரி?"

"கொஞ்ச நாட்களா இதான் வேலை.  பொய்யாவானும் பங்குகள் வாங்கறதாவும், விற்கறதாவும், வித்து வாங்கறதாவும் ஒரு விளையாட்டு வீட்லே விளையாடிண்டு இருக்கேன்.  இன்னித் தேதிக்கு அந்த பொய் விளையாட்டின் நிகர லாபம் நாலு லட்சம்.  இனிமே களத்துக்கு வர நான் ரெடி.  நிஜ விளையாட்டை நின்னு நிதானிச்சு விளையாடப் போறேன்.  இதான் இந்த விளையாட்லே நான் கத்துகிட்ட பாடம்" என்று தன்னம்பிக்கையோடு அவள் சொன்னது ஏதோ பங்கு சந்தை ஞானாசிரியனே சொன்ன மாதிரி இருந்தது அவருக்கு.

"வெல்கம் மேடம்.. இன்னிலேந்தே நீங்க பங்குகளை வாங்கத் தொடங்கலாம்.  . குட் லக்.." என்று அவள் வீட்டிலிருந்தே போன் மூலம் சொல்லி எப்படி பங்குகளை வாங்குவது, அதற்கான காசோலை அனுப்புவது போன்ற அடிப்படை விவரங்களைச் சொன்னார்.

வித்யா முதலீடாகக் கருதி பிரிமியம் கட்டிக் கொண்டு வந்திருந்த ஒரு LIC பாலிஸி முதிர்வடைந்து போனவாரம் இரண்டு லட்சம் கைக்கு வந்திருந்தது. அடுத்த மாதம் ரிஷியின் பாலிஸி ஒன்று முதிர்வடையப் போகிறது.  மொத்த பணத்தை டைவர்ஸிஃபைடு முதலீடாக பல இனங்களில் பிரித்துப் போடலாம் என்று வித்யா நினைத்திருந்தாள்.  அப்படிப் பிரிப்பதில் பங்குச் சந்தை முதலீடும் ஒன்று.  அவ்வளவு தான். அதில் இருவருமே தீர்மானமாக இருந்தனர்.

ஏற்கனவே உஷாவின் கணவர் பங்குகளை எப்படி வாங்குவது, விற்பது, வாங்கிய பங்குகளுக்குப் பணம் அனுப்புவது எப்படி, விற்ற பங்குகளுக்கு பணம் பெறுவது எப்படி என்று எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லித் தந்திருந்திருந்ததினால் அவர் சொன்னதெல்லாம் சுலபமாக அவளுக்குப் புரிந்தது. சொல்லப் போனால், கடந்த ஒரு வாரமாக வித்யாவிற்கு இதான் வேலை.  டி.வி. திரையில் ஓடும் என்எஸ்ஸி, பிஎஸ்ஸி மார்க்கெட்டுகளில் பங்குகளின் நிலவரம், காலை, மதியம், பங்குசந்தை முடிவடையும் நேரம் என்று எப்படியெல்லாம் பங்குகளின் விலை ஏறி இறங்குகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் குறித்துக் கொண்டிருந்தாள்.

அது எதனால் என்று தெரியவில்லை.  தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் மேலேயே அவள் கவனம் நிலைத்திருந்தது.  சிமிண்ட், ஸ்டீல் என்று வகைப்படுத்தி பங்குகளின் அன்றாட விலைகளைக் குறித்துக் கொள்வதற்கே ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் மேலிருந்து கீழாக வரிசையாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையும், அவற்றிற்கு நேர் எதிரே இடமிருந்து வலமாக தான் பார்க்கும் பல நேரங்களில் அந்தந்த பங்குகளின் விலையையும் குறித்துக் கொண்டு வந்திருந்தாள்.  கடந்த ஒரு வாரமாக இப்படியாக ஒரு அட்டவணையைத் தயாரித்திருந்தது பங்குகளின் அன்றாட ஏற்ற தாழ்வு விலைகளைக் கணிப்பதற்கு அவள் மனசிற்கு ஒரு செளகரியத்தைக் கொடுத்தது.  தான் குறித்திருந்த நிறுவனப் பங்குகளின் 52 வார தாழ்ந்த, உச்ச விலைகளையும் தனியே ஒரு பக்கத்தில் குறித்து வைத்திருந்தாள்.    என்றைக்கு 52 வார தாழ்ந்த நிலைக்கு விலை வருகிறதோ அன்று கணிசமாக அந்த நிறுவனப் பங்கை வாங்கி விடுவதாக இருந்தாள்.அது தான் கைவசப்படாமல் அவளுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் டி.வி. ரிமோட்டைக் கை நாடியது.  டி.வி.யை இயக்கி ஷேர் சேனலில் நிலை கொண்ட பொழுது, வர்த்தக மார்க்கெட்டைப் பாதிக்கிற அளவுக்கு உலகலளாவிய விஷயம் என்ன நடந்தது என்று தெரியவில்லை, மொத்த ஷேர்களும் இறங்கு முகத்தில் சிவப்பாய் தெரிந்தன. நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்த்த பொழுது தான் எவ்வளவு பெரிய இறக்கம் இது என்று அவளால் கணிக்க முடிந்தது.

அதிர்ஷ்ட தேவதை சிறகு விரித்து டி.வி. பக்கம் நின்று கொண்டிருப்பது போல வித்யாவின் கண்ணுக்குப் பட்டது.


(இன்னும் வரும்)







Sunday, July 1, 2012

பார்வை (பகுதி-52)

நாராயணனைப் போல் அந்த நாவலின் பெயரை ஊர்மிளாவால் ரசிக்க முடியவில்லை.  'நடக்கும் என்பார் நடக்கும்'-- என்ன தலைப்பு இது என்று நினைத்துக் கொண்டாள். 'நிச்சயம் ஒரு நாவலுக்கான தலைப்பு இது இல்லை; ஏதோ ஜோதிடப் புத்தகத்தின் தலைப்பு மாதிரி' என்று நினைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் முன்பு வரை உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த நாராயணன், அந்த நாவலைக் காணோம் என்றவுடனேயே எந்த அளவுக்கு சோர்ந்து போய் விட்டான் என்பதைப் பார்த்து எந்த அளவுக்கு அந்த நாவலின் தலைப்பு இவனை வசீகரித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். எல்லா வசீகரிப்புக்கும் என்ன காரணமோ, அந்தக் காரணமே இப்போது இவனுக்கும் காரணம் ஆயிற்று என்று அவள் உள்ளுணர்வு கூறியது. அந்தந்த நேரத்தில் எதை நாம் விரும்புகிறோமோ அதற்கு ஆதரவாக உணரும் எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் நாம் நேசிப்போம் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

"எங்கே போயிடப்போறது?.. இங்க தான் எங்காச்சும் இருக்கும். அந்தப் புத்தகக் குவியலுக்குள்ளாறத் தேடிப் பார்த்தா கிடைச்சிடும்ன்னு நெனைக்கறேன்" என்றான் நாராயணன்.

"எஸ்.  ஆனா, காலைலே நான் வந்த உடனே செக் பண்ணினப்போ இருந்ததே! நீங்க சொல்ற மாதிரி இங்க தான் எங்கேயானும் கலந்து போயிருகும்.. நான் பார்க்கிறேன்" என்று ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கேபின் போன் சிணுங்கி அவளை அழைத்தது.

"எஸ். சார்.  ஆமாம், இங்கே தான் இருக்கார்.  சரி, நான் சொல்றேன்,சார்!" என்று சொல்லி போனை வைத்தாள்.

"நாராயணன்! பெரியவர் உங்களைக் கூப்பிட்டார். நீங்க அவரைப் பாத்திட்டு வாங்க. அதுக்குள்ளாற நான் அந்த ஃபோல்டரைத் தேடி எடுத்து வைக்கிறேன்.  நீங்க அதை வாங்கிண்டே, டெலிவரி சிலிப்லே சைன் பண்ணலாம்.  ஓ.கே.வா?"

"நடக்கற காரியத் தொடர்ச்சிலே எங்கையோ பிரேக் ஆயிருக்கு, மேடம். அது சரியாச்சுனா, அந்த ஃபோல்டரும் கிடைச்சிடும், பாருங்க" என்று அவன் சொன்னது ஊர்மிளாவிற்கு வினோதமாக இருந்தது.  அவன் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை த்வனி அவளை அசர அடித்தாலும், அப்படியான தலைப்பு கொண்ட அந்த நாவலுக்கான கணினிப் பிரதி காணாமல் போனதில் தான் இவன் ரொம்பவும் பாதித்துப் போய் ஏதேதோ சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

அவன் பெரியவரைப் பார்த்து விட்டு கிளம்புவதற்குள் காணாமல் போயிருப்பதைத் தேடி எடுத்துக் கொடுத்தால் தான் அவன் எதற்காக இங்கு வந்திருக்கிறானோ அந்த வேலையும் பூர்த்தியாகும் என்கிற அவசர உணர்வும் அவளுக்கு இருந்தது.  'இத்தனை வருஷ சர்வீஸில் இப்படி ஏற்பட்டதில்லை யே!  என் வேலையில் அவ்வளவு அசிரத்தையாகவா நான் இருக்கிறேன்?' என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து அவளை அவஸ்த்தைப் படுத்தியது.

அந்த சமயத்தில் தான் நாராயணன் சொல்லி விட்டுப் போனதும் அப்படியும் இருக்குமோ என்று அவளை நம்ப வைத்தது.. 'நடக்கற காரியத் தொடர்ச்சிலே எங்கையோ பிரேக் ஆயிருக்குன்னா'..  எவ்வளவு தெளிவாச் சொல்றான்!எதைத் தெரிந்து இப்படியெல்லாம் சொல்றான்.?. நடக்கப் போறதையெல்லாம் அந்தளவுக்கு முன்னாடியே தெரிஞ்சிக்கவும் முடியுமா?.. அவன் பார்வைக்குத் தெரியற மாதிரின்னா, சொல்றான்' என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே, சட்டென்று வேணியிடம் நாராயணனின் ஜாதகத்தைத் தான் இன்னும் சேர்ப்பிக்கவில்லை என்பது அவளது நினைவுக்கு வந்தது.  பெரியவரைப் பார்த்து விட்டு நாராயணன் வருவதற்குள் அதை வேணியிடம் கொடுத்து விட்டு வந்து விடலாம் என்கிற எண்ணத்துடன் கைப்பையைத் திறந்து ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வேணியிடத்திற்குப் போனாள்.

வேணி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.  ஊர்மிளா தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "சரிம்மா.. வேறே ஒண்ணுமில்லே.  வைச்சிடறேன்" என்று அவசரமாக போனை வைத்து விட்டு அவளைப் பார்த்து முறுவலித்தாள்.  "என்னை வரச் சொல்லியிருந்தீங்கள்லே.. நானே வர்றத்தான் இருந்தேன்ங்க்கா.. பிரஸ் மேனேஜரோட பேசிக்கிட்டு இருந்தீங்களா.. அதுனாலே, அவர் பேசிட்டுப் போன பின்னாடி வரலாம்ன்னு..."

"பரவாயில்லை. இந்தா, இதுக்குத் தான் உன்னைக் கூப்பிட்டிருந்தேன்" என்று ஊர்மிளா தன் கையிலிருந்த கவரை அவளிடம் கொடுத்தாள். "வேணி! எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர். அவரோட ஜாதகம் இதிலே இருக்கு. உங்க அக்காவுக்காக பொருத்தம் பார்க்க கேட்டு வாங்கியிருந்தேன். கொண்டு போய் அம்மா கிட்டே கொடு. எவ்வளவு சீக்கிரம் பொருத்தம் பார்த்துச் சொல்றீங்களோ,  அவ்வளவு க்கு நல்லது.  மத்ததையெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். சரியா?"

வேணியோட முகம் குப்பென்று மலர்ந்து, விழியோர ஈரம் பளபளத்தது. "இப்போ நீங்க வரச்சொல்ல போன்லே அம்மா தான் எங்கிட்டே பேசிக்கிட்டிருந் தாங்க...  கோயிலுக்குப் போயிருந்தாங்களாம்..  அக்காவும் கூடப் போயிருக்கு. அக்காக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் வேண்டிட்டு வந்தாங்களாம்.. வர்ற வழிலே டெலிபோன் பூத்தைப் பாத்ததும் என் நினைப்பு வந்து பேசினாங்களாம்" என்றாள்.

"அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்.. கோயில்ன்னா வீட்டாண்ட இருக்கற கோயிலா?"

"இல்லக்கா.. கொஞ்சம் தொலைவாப் போவணும்.  பெருமாள் கோயில்.."

"ஓ.. பெருமாள்ன்னா?"

"லஷ்மி நாராயண பெருமாள் அக்கா.  எங்க குல தெய்வம்.  அதான் எங்க அக்காக்கு லஷ்மின்னு பேரு வைச்சாங்களாம்."

ஊர்மிளாவுக்கு நாராயணன் சொன்ன கோலம் நினைவுக்கு வந்து திடீரென்று மனசு பூராவும் மகிழ்ச்சி அலை பரவியது.  கூடி வரும் பொருத்தங்கள் நினைத்து பெருமிதம் பொங்கி வழிந்தது. "வேணி! ஜாதகம் பத்திரம். இங்கே அங்கே வைச்சிட்டுப் போயிட்டேன்னு சொல்லக் கூடாது. இன்னிக்கே அம்மாகிட்டே கொடுத்து, பொருத்தம் பாக்கச் சொல்லு.." என்று கைக் கெடியாரத்தைப் பார்த்தாள். "ஒண்ணு செய். நீ வேணா பர்மிஷன் போட்டு, இப்பவே வீட்டுக்குப் போறையா?"

"இல்லேக்கா.  மதியம் லஞ்ச்சுக்கு அப்பாலே போறேன். அம்மாவும் அக்காவும் வீடு வந்து சேர இன்னும் ரெண்டு மணி நேரமாகும்.."

"சரி.  சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பிடு.  நல்ல வேளை வந்திடுத்து போலத் தெரியறது. எல்லாம் நன்னா நடக்கும்..ஜாதகம் பாக்கணும்ன்னு கூட இல்லே. எல்லாம் உங்க திருப்திக்குத் தான்.  சரியா?" என்று ஊர்மிளா லேசாக அவள் தோளில் தட்டினாள். தட்டிய ஊர்மிளாவின் கையை அப்படியே இறுகப் பற்றிக் கொண்டாள் வேணி.

"ஜோசியர் பக்கத்து வீடு தான்ங்க்கா.  மூணு மணிக்குள்ளாற நான் போய்க் கொடுத்தாக் கூட உடனே பாத்திடுவாங்க..  பாத்திட்டு உங்களுக்கு போன் பண்றேன் அக்கா.." என்றவள் குழந்தை போல ஊர்மிளாவின் முழங்கைப் பக்கம் இறுகப் பற்றிக் கொண்டு லேசாக விசும்பினாள்..

திடுக்கிட்டு, "வேணி, என்ன இது?" என்று அவள் கையைப் பற்றினாள் ஊர்மிளா.

"அக்கா.. எல்லாத்துக்கும் நீங்க கூடயே இருக்கணும். எங்களுக்கு மனுஷாள் கிடையாது அக்கா" என்று லேசாக வேணி விசும்பிய போது, வயிற்றிலிருந்து பந்து போல மேலெழும்பி ஏதோ தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டார் போலிருந்தது ஊர்மிளாவுக்கு.

"நாங்க இருக்கோம்.  நீ தைர்யமாயிரு" என்று அது ஆபீஸ் என்றும் பாராமல் வேணியின் தலையை வருடி விட்ட போது ஊர்மிளாவின் மனசு பூராவும் பரிதாபம் பொங்கி வழிந்தது.  அந்த ஷணமே, லஷ்மியின் கல்யாண ஏற்பாடுகள் அத்தனையையும் தானே முன்னின்று செய்ய வேண்டுமென்று தன்னுள் சூளுரைத்துக் கொண்டாள்.  

எங்கே போயிருக்கும் என்பது தான் அதிசயமாக இருந்தது.  பொதுவாக தன் கேபின் பொருட்களை மிக நேர்த்தியாக வைத்துக் கொள்பவள் ஊர்மிளா. அலுவலகம் விட்டுக் கிளம்பும் அன்றைய உபயோகத்திற்குப் பிறகு கழித்துக் கட்டிய வேண்டாத காகிதங்கள், பேப்பர் பிட்டுகள் எல்லாவற்றையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்து விட்டு டிராஷில் கொண்டு போய்ப் போடுவாள்.  ஸ்டாப்ளர், குண்டூசி டப்பா, ம் குப்பி, A4 பேப்பர்கள் கொஞ்சம் பிரிண்ட்டரில் மீதி வெளியே பண்டலில் என்று எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரி இருக்க வேண்டும் அவளுக்கு.  அதனால் அடைசலுக்கு வழியே இல்லை. அப்படியிருக்க அந்த 'நடக்குமென்பார் நடக்கும்' எங்கே போயிருக்கும் என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது.

"அடுத்த பதிப்புக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா'ன்னு சின்னவர் உங்களைப் பார்க்கச் சொன்னார்ங்க.." என்று போன வெள்ளிக்கிழமை சண்முகம் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகக் கட்டு பிரிக்கப்பட்டுக் குவியலாக பக்கத்து டேபிளில் கொலு வீற்றிருந்தது. இந்தக் குவியலைத் தான் நாராயணன் குறிப்பிட்டுச் சொன்னான்.  அங்கேயிருக்க சான்ஸ் இல்லை.  இந்த பழுப்புக் கவரின் சைஸே பெரிசு.  பார்த்தாலே பிதுங்கித் தெரியும்.  இருந்தாலும் அந்த புத்தகக் குவியலை கலைத்துப் பார்த்தாள்.  ஊஹூம்.. அங்கேயும் இல்லை.  பின்னே எங்கே?..

அந்த புத்தகப் பிரதி 262 பக்கமோ என்னவோ. இன்னொரு பிரதி போட்டுப் ஃபோல்டர் போட்டால் ஆயிற்று என்றால் அதற்கான அவகாசம் இல்லை என்பது மட்டுமில்லை;  பழைசு கிடைத்தால் தான் அது ஏற்படுத்திய கலக்கம் நீங்கி நாராயணனின் முகத்தில் களையைப் பார்க்க முடியும்.. எங்கே போயிற்று அது?..

மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.  அந்த நாவல்கள் லிஸ்ட்டை எடுத்துக் கொண்டாள் ஊர்மிளா.  லிஸ்ட்டில் இருந்த நாவல்களும் பழுப்பு நிற கவர்களில் இருந்த நாவல் பிரதிகளும் சரியாக இருக்கின்றனவா என்று ஆரம்பித்திலிருந்து மறுபடியும் சரி பார்க்கத் தொடங்கினாள்.

ஒன்று, இரண்டு, மூன்று, ஆங்... நாலாவது கவர் வந்த பொழுது லேசான வெளிச்சக் கீற்று.. அந்த நாலாவது கவர் ரொம்பவும் பம்மிப் பெரிசாக இருப்பதைப் பார்த்து மேல் பட்டையைப் பிரித்துப் பார்த்தால்...

ஒரே கவரில் உள்ளே இரண்டு ஃபோல்டர்கள் அடைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.  அவசர அவசரமாக எடுத்துப் பார்த்த பொழுது.. ஹூவா.. 'நடக்குமென்பார் நடக்கும்' உள்ளே முழுசாகப் பதுங்கியிருந்தது.  ஆக, நாராயணனைப் பொருத்த மட்டில் இனி நடக்கப் போவதின் நீட்சி குறித்து எந்த சஞ்சலமும் கொள்வதற்கில்லை.

'நடக்குமென்பார் நடக்கும்' ஃபோல்டரை மட்டும் தனியே எடுத்து, ஒரு காலி பழுப்புக் கவரில் அடைத்து கவரின் மேல் நாவலின் பெயரை சிவப்பெழுத்துக் களில் எழுதினாள்.  நாவலை எழுதிய ஆசிரியரின் பெயரையும் எழுத லிஸ்ட்டைப் பார்த்த பொழுது வராஹமிஹிரர் என்று குறித்திருந்தது.  வராஹமிஹிரர்!  இந்த தேசத்து பெருமை மிகு வானவியல் அறிஞர் அல்லவோ? அவளுக்குத் தெரிந்து வராஹமிஹிரர் நாவல் எதுவும் எழுதவில்லை.  ஆக, இது இந்த நாவலை எழுதியவரின் புனைப்பெயராகத் தான் இருக்க வேண்டும் என்கிற நினைப்பில் அவரின் பெயரையும் பழுப்பு நிறக் கவரின் மேல் எழுதி முடித்த பொழுது, கேபின் போன் சிணுங்கியது.

வேகமாகப் போய் ஊர்மிளா ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்த பொழுது, மறுமுனையில்---

பெரியவர்!


(இன்னும் வரும்)

Thursday, June 28, 2012

பார்வை (பகுதி-51)

பேச்சு வழக்கிற்காக கதை என்று சொன்னாளே தவிர நடந்த நிகழ்ச்சிகளின் சங்கிலிப் பிணைப்பு நாராயணனைத் திகைக்க வைத்து ஊர்மிளா சொன்னதை உன்னிப்பாகக் கேட்க வைத்தது.

"நாராயணன்! உங்க அப்பாவை எனக்கு முன்னே பின்னே தெரியாது.  ஆனா உங்க ஜாதகம் அவர் மூலம் என்னிடம் வந்தது தான் ஆச்சரியம்" என்றாள் ஊர்மிளா.

"அப்பா ஏதோ மேரேஜ் மேட்சிங் சென்டரில் என் விவரங்களைப் பதிவு செய்து வைச்சிருக்கறதா சொல்லிருக்கார்..  அவங்க அனுப்பச் சொல்லி உங்களுக்கு அனுப்பியிருப்பார்ன்னு நெனைக்கிறேன்."

"அப்படிக் கூட இல்லை.." என்று ஊர்மிளா சொன்ன போது நாராயணனின் புருவங்கள் ஏறி இறங்கின. "ஆச்சரியமானா இருக்கு.."

"இதில் இன்னொரு ஆச்சரியமும் எனக்கு உண்டு" என்று ஊர்மிளா முறுவலித்தாள். "யாருக்காக உங்க ஜாதகத்தை வரவழைச்சேனோ அந்தப் பெண்ணை நான் பாத்தது கூட இல்லை..  ஆனா இப்போ என்னன்னா அந்தப் பெண்ணுக்கு உங்க ஜாதகம் பொருந்தி வந்து அந்தப் பெண்ணே உங்களுக்கு மனைவியா வரணும்ன்னு, ஏனோ தெரிலே, எனக்கு ரொம்பவும் ஆர்வமா இருக்கு" என்றாள்.

"போச்சுடா.. ஜோசியர் சொன்னார்ன்னு என் ஜாதகம் பத்தி எங்கப்பா அப்பப்ப ஏதாவது சொல்லிண்டே இருப்ப்பார்.  அவர் சொல்றதிலே பலதைக் கேக்க எனக்கே ஆச்சரியமா இருக்கும். இப்போ நீங்க சொல்றதைப் பாத்தா இன்னும் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் தொடர்ந்து வரும் போல இருக்கே.. ஒவ்வொண்ணா சொல்லுங்க.  நானும் எனக்குத் தெரிந்த ஆச்சரியங்களோடு உங்களது ஆச்சரியங்களையும் சேர்த்துப் பார்த்து சரியா இருக்கான்னு செக் செஞ்சுக்கறேன்.." என்று சொல்லிச் சிரித்தான்.

"அடேடே! உங்களுக்குக் கூட ஆச்சரியங்கள் கைவசம் இருக்கா? அப்படீன்னா ஏதாவது ஒண்ணைச் சொல்லுங்களேன்" என்று ஊர்மிளா பரபரத்தாள்.

"வேணாம். இப்பச் சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காதுங்க.. பின்னாடி சொல்றேனே!"

"அப்படியா சொல்றீங்க?.." என்று அவள் கேட்ட போது 'பொசுக்'கென்று அவள் முகம் போனதென்னவோ உண்மைதான்.  ஆனால் ஒரே வினாடியில் தன் ஏமாற்றத்தை சரிசெய்து கொண்டு,"நீங்க சொல்றதைப் பாத்தா இப்போ சொல்ல வேண்டாம்ன்னு நீங்க சொல்றதுக்கு ஏதோ காரணம் இருக்கற மாதிரித் தெரியறது.  போனாப் போகட்டும்..   ஆனா, ஒண்ணு எனக்கேத் தெரியறது. உங்க ஜாதகம் எனக்கு வந்த விதம் அதைத் தொடர்ந்து நடக்கறதெல்லாத்தையும் பாத்து எனக்கே ஆச்சரியமா இருக்கு.   நீங்க சொல்றது கூட சரிதான். உங்க ஆச்சரியம் உங்களோட இருக்கட்டும்.  என்னோட அனுபவ ஆச்சரியம் என்னோட.  சரியா?.. பின்னாடி பகிர்ந்துக்கலாம். அப்போ நம் ஆச்சரியங்கள் இன்னும் கூடக் கூடலாம்" என்றாள்.

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியாது.  ஆனா ஒண்ணு தெரியறது, மேடம். என் திருமணத்துக்காக என்னிக்கு எங்க வீட்லே பேச்செடுத்தாங்களோ, அன்னிலேந்தே அது தொடர்பா நடக்கற எல்லாத்தையும் ஒரு இன்ட்ரஸ்ட்டோட கவனிச்சிக்கிட்டு வர்றேன். அதெல்லாம் பாத்து என் மனசிலே புதுசு புதுசா சில விஷயங்கள்லே சில அபிப்ராயங்கங்கள் உருவாகியிருக்கு. அதெல்லாம் பத்தி நிறைய யோசிக்கறேன். ஒரு காலத்திலே நான் நம்பாத சில விஷயங்களை இப்போ நம்ப ஆரம்பிச்சிருக்கேன். நீங்க சொல்லப் போறதும் நிச்சயம், எந்த நினைப்பெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து என் மனசிலே ஒரு உருவகத்தை உருவாக்க முயற்சிக்கறதோ அதுக்குத் தான் உதவி செய்யப்போறதுன்னு எனக்குத் தெரியறது. அதன் அடிப்படைலே நீங்க இப்பச் சொல்லப் போறதும் சட்டுன்னு நான் ஒரு முடிவுக்கு வர எனக்கு செளகரியமா இருக்கும். அதுக்குத் தான் சொல்றேன். ப்ளீஸ்.. யூ ப்ரொஸீட்.." என்று நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து தளர்த்தி உட்கார்ந்து கொண்டான் நாராயணன்.

"நாராயணன்! எனக்குக் கூட கல்யாணத்திற்குக் காத்திருக்கிற இந்தப் பெண்ணோட தங்கையைத் தான் தெரியும். அந்தப் பெண் மூலம் தான் அவளோட அக்காவைப் பத்தி கொஞ்ச விவரம் தெரியுமே தவிர நேர்லே பாத்தது கிடையாது.  அந்தப் பெண்ணைத் தெரிந்த இன்னொருத்தர் சொல்லி தங்கையை விட அக்கா அழகா இருப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கேன். கொஞ்சம் வறுமையான குடும்பம் தான்.  ஆனா, வறுமையில் செம்மைன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரியான பக்குவம். அதனாலேயே தங்கைக்காரி மேலே எனக்கு ஒரு பாசம்.  இவளோட அக்கா திருமணத்திற்குத் தயாரா இருந்ததாலே, நம்மாலே இந்தக் குடும்பத்துக்கு ஏதாவது நல்லது செஞ்சாத் தேவலையேங்கற எண்ணத்திலே எனக்குத் தெரிஞ்ச இடங்கள்லே சொல்லி வைச்சிருந்தேன். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமும் நிச்சியமாயிடுத்து ன்னா என்னாலே முடிஞ்ச அவங்களுக்குத் தேவையா இருக்கற ஏதாவது உதவியையும் செய்யலாம்ன்னு தீர்மானிச்சிருக்கேன்."

"சொல்லுங்க, மேடம்.  உங்களுக்கு இந்தக் குடும்பத்தின் மேலே இருக்கற நல்லெண்ணம் புரியறது.  ஆரம்பமே எனக்கு சந்தோஷமா இருக்கு.  சொல்லுங்க.."

"சொல்றேன்.  இந்தப் பெண்ணின் திருமண விஷயமா நான் சொல்லி வைச்சிருந்தவங்கள்லே ஒருத்தர் வித்யா; எங்க ஃபேமலி ஃப்ரண்ட். இப்போ ரிஷின்னு கதையெல்லாம் எழுதறாரே, அவர் ஒய்ஃப்."

"ரிஷி?.. 'காதல் தேசம்' ரிஷி தானே?"

 "எஸ். அவரே தான்.  இந்தப் பத்திரிகைக்காரங்களைச் சொல்லணும். கதைக்கெல்லாம் எப்படி பேர் வைக்கறாங்க, பாருங்க.. 'பசக்'ன்னு ஞாபகத்லே ஒட்டிண்டு ஆளையே அடையாளப்படுத்தற மாதிரி.."

"அது நமக்குத் தெரிந்த விஷயம் தானே?.. அப்புறம், என்ன நடந்தது?.." என்று அவன் கேட்ட ஆர்வத்தில் பேசும் பேச்சின் டிராக் மாறிடக் கூடாதெங்கிற கவலை அவனுக்கு இருந்ததை வெளிப்படையாகக் காட்டியது.

"நானும் நாலைஞ்சு பேர்கிட்டே சொல்லி வைச்சிருந்தேன்னு வைச்சிக்கங்க..  ஆனா, முதல் ரெஸ்பான்ஸ் வித்யாகிட்டேயிருந்து வந்தது.-- உங்கப்பாகிட்டே யிருந்து ஜாதகக் காப்பியே வாங்கி அவங்க எங்கிட்டே கொடுத்திட்டாங்க.."

"இன்ட்ரஸ்ட்டிங்.. அவங்களுக்கு எப்படி என் அப்பாவைத் தெரிஞ்சதோ, தெரிலே.."

"கவனிங்க. உங்க ஜாதகப் பயணம் இங்கேயிருந்து தான் ஆரம்பிக்குது. இப்போ நடந்ததே, அந்த எழுத்துப் பட்டறைலே கலந்துக்க வித்யா அவங்க வீட்டு வாசல்லே நின்னுண்டு ஆட்டோவைத் தேடினப்போ அந்தப் பக்கமா வந்த உங்கப்பா ஆட்டோலே ஏறிக்கிறாங்க.."

"ஓ.. அப்புறம்?"

"ஒரு பத்து நிமிஷப் பயணம் தான்.  பொதுவா ஆட்டோக்காரர் வண்டிலே உக்காந்தவங்க கேட்ட இடத்திற்குப் போய் வண்டியை நிறுத்த, பயணம் செய்றவங்களும் இறங்கிண்டு கேட்ட காசைக் கொடுத்திட்டுப் போகன்னு  வழக்கமா அமைஞ்சிருக்க வேண்டிய சவாரியா இது அமையாமப் போனது தான் விசேஷம்.  அந்த பத்து நிமிஷப் பயணத்திலே, அவருக்கும் இவங்களைப் பாத்து என்ன தோணித்தோ தெரியலே, பையனுக்கு பெண் பாத்திண்டிருக்கிற தைப் பத்தி, தன்னைப் பத்தி, தன் ஊர் பத்தி எல்லாத்தையும் உங்கப்பா அவங்க கிட்டே சொல்றார்.  மொத்தத்தலே தன் பேச்சாலே, நடவடிக்கைகளாலே உங்கப்பா அவங்களை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணிடறார். உங்களுக்கு தகுந்த ஒரு பெண் தெரிய வந்தா நிச்சயம் உங்கப்பாக்குத் தெரியப்படுத்தணும் ன்னு வித்யா அந்தப் பத்து நிமிஷப் பயணத்திலேயே தீர்மானிச்சிடறாங்க..  இதுக்கு நடுவே எங்கேயானும் வெளிலே போனா, உபயோகமாக இருக்குமேன்னு உங்கப்பா செல் நம்பரையும் வித்யா வாங்கிக்கறாங்க...

"எழுத்தாளர் பட்டறை ரெண்டு நாள் நிகழ்ச்சி.    ரெண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு வித்யா வரும் போதே அவங்க கிட்டே நான் சொன்னது ஞாபகம் இருந்து உங்க அப்பாக்கும் போன் செய்து அவரை உங்க ஜாதகத்தோட வரவழைச்சு, அவர் ஆட்டோவிலேயே நிகழ்ச்சி நடந்த கல்யாண சத்திரத்தில் வந்து இறங்கிக்கறாங்க..  சத்திரத்திற்கு வர்ற வழிலே,  யதேச்சையா உங்கப்பா வித்யாகிட்டே ஜஸ்ட் கல்யாணப் பெண் பேர் கேக்கறார்.  பொண்ணு பேரு லஷ்மின்னு இவங்க சொல்றத்தே, ஆட்டோ ஒரு தெருவில் திரும்பறது.  அந்தத் தெரு பேரு லஷ்மி தெரு.  அப்பவே உங்கப்பா வித்யா கிட்டே 'இது ஒரு சுப நிகழ்ச்சியைத் தொடங்கற அறிகுறியா எனக்குத் தெரியறது. அதனாலே  எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பாக்க வேணாங்க.. வேணுன்னா அவங்க பாத்து பொருந்தி வர்றதுன்னா அதுவே எங்களுக்கு சரி'ங்கறார்.  அப்புறம், இன்னொண்ணு.  பெண்ணின் பேரான லஷ்மியையும், உங்க பேரையும் சேர்த்துப் பார்த்தா லஷ்மி நாராயணன்னு வர்றதில்லையா..."

"அட! எங்க குலதெய்வப் பெயர்" என்று உற்சாகத்தோடு உரக்கச் சொன்னான் நாராயணன்.  அடுத்த நிமிஷமே குரல் தழைந்து, "மேடம்!   இப்போ எனக்கு அந்த சேதி கிடைச்சிடுச்சி, மேடம்" என்றவனிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. "எல்லாத்தையும் பார்த்தா இந்த லஷ்மி தான் என் மனைவியா வர்றப் போறாங்கன்னு என் உள் உணர்வு சொல்றது!.. ஏதாவது பராக்குப் பார்த்து கோட்டை விட்டேனோ, என்னை மாதிரி ஒரு மடப்பயல் இருக்க மாட்டான்." என்று சொன்ன போது அவன் விழிகள் பளபளத்தன.

"எப்படி நாராயணன் அவ்வளவு தீர்மானமாகச் சொல்றீங்க?.."

"எப்படின்னு சொன்னா என்னை ஒரு மாதிரி பார்ப்பீங்க.  அதனால இப்போ வேணாம்.  முதல்லே நினைக்கறது நடக்கட்டும். அப்புறமா சொல்றேன்."

அந்த சமயம் பார்த்து 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம்  ஏதுமில்லை' என்கிற திரைப்பாடல் ஊர்மிளாவின் நினைவுக்கு வந்து அதை மறக்க வேண்டி சடாரென்று தலையைக் குலுக்கிக் கொண்டாள் அவள்.

அவள் அப்படிச் செய்தது வித்தியாசமாகத் தெரிந்து, "என்ன மேடம், என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டான் நாராயணன்.

"ஒண்ணுமில்லை.." என்று அந்த நினைவைக் கிளறாமல் வலிந்து சிரிப்புக் காட்டினாள் அவள்.

"இல்லை. என்னத்தையோ எங்கிட்டேயிருந்து மறைக்கிறீங்க.. எதுனாலும் பரவாயில்லை.  சொல்லுங்கள்"

"என்னவோ தெரிலே. 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்'ங்கற கண்ணதாசனோட பாட்டு நேரம் காலம் தெரியாமல் எக்குத் தப்பா எனக்கு நெனைவுக்கு வந்திடுத்து..  ஸாரி."

அவள் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தான் நாராயணன். "எஸ். அதான் வேணும். பொருத்தமாத் தான் அந்தப் பாட்டு உங்க நினைவுக்கு வந்திருக்கு.." என்று சொன்னவனை விநோதமாகப் பார்த்தாள் அவள். "என்ன சொல்றீங்க?.."

"கவிஞர் சொன்னது என்னன்னா, சகஜமா நாம் நினைப்பதைத் தான். நாம நினைக்கறதெல்லாம் நடந்துட்டா, அப்புறம் தெய்வம்ன்னு ஒண்ணு என்ன இருக்கு?.. நடக்கறதெல்லாம் தெய்வத்தின் செயல்' என்கிறார்.  இந்த விஷயத்லே கூட நாம அப்படித் தானே நினைக்கிறோம், மேடம்?.. தொடர்ச்சியா இப்போ நடந்திருக்கிறதெல்லாம் தெய்வத்தின் வழிகாட்டல். அந்த வழி காட்டும் பாதை பார்த்து நடந்தா, எல்லாம் நல்லபடி முடியும்ங்கறதை மனப்பூர்வமா நான் நம்பறேன். இதுவரை நடந்த எல்லாத்தையும் வரிசையா நீங்க சொல்லிட்டு வந்தப்போ, என் மனசுக்குக் கிடைத்த சேதி இதான்.." என்று சொல்லி முடித்த போது புசுபுசுவென்று லேசாக மூச்சிறைத்தது அவனுக்கு.

அவன் உணர்வுகளுக்கு தன்னாலான உதவிகள் செய்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த சமயத்தில் நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.

"கோலம் போடற மாதிரி மேடம்.  சொல்லப்போனா, தெய்வக் கோலம் . இன்ன கோலம் தான்னு தீர்மானிச்சு முன்னாடியே கோலப்புள்ளிகளை இட்டாச்சு.. புள்ளிகளை இணைச்சு கோலத்தைப் பூர்த்தி செய்யற வேலையை மட்டும் மனுஷங்க கையிலே கொடுத்திருக்கு..  அவங்க இல்லாம எதுவும்ன்னா அது அமானுஷ்யம் மாதிரி ஆயிடும் இல்லையா?.. அதுக்காகத் தான் அந்த ஏற்பாடு. . கண்ணுக்குத் தெரிஞ்சி அவங்க இன்வால்வ் ஆனாத் தான் அவங்களுக்கும் ஒரு அசட்டுத் திருப்தி.  அதுக்காக அது.  ஊர்மிளா மேடம்,  நீங்க தான் ஆரம்பிச்சு வைச்சீங்க. அதாவது கோலத்தைத் தொடங்கி வைக்கற பாக்கியம் உங்களுக்குத் தான் கெடைச்சது.  அங்கங்கே போய்ட்டு மறுபடியும் கோலடப்பா இப்போ உங்க கைக்கு வந்திருக்கு. வித்யா மேடம் விட்ட இடத்திலேந்து தொடர்ந்து நீங்களும் புள்ளிகளை கோடிழுத்து இணைச்சுத் தொடருங்கள் மேடம்.  ப்ளீஸ்.." என்று அவன் கேட்டுக் கொண்ட பொழுது ஊர்மிளாவின் உடல் சிலிர்த்தது. ஏதோ தெய்வ ஆக்ஞையைக் கேட்ட மாதிரி அவள் முகம் பரவசத்தில் பளிச்சிட்டது.

"சரி, நாராயணன்.  அடுத்த கட்டம் உங்க ஜாதகம் அவங்க கிட்டே போறது தான். இன்னும் கொடுக்கலே. என் ஹாண்ட் பேக்லேயே இருக்கு.  இன்னிக்கே நான் இந்த ஜாதகத்தை அவங்களுக்குச் சேர்த்திடறேன்" என்ற ஊர்மிளாவின் உதடுகள் ஜபிப்பது போல படபடத்தன.

"எஸ். சேத்திடுங்க. ஒரு ரிக்வெஸ்ட்.  இந்த அம்பத்தூர் புது வீடு சமாச்சாரம் அவங்களுக்குத் தெரிய வேண்டாம்.  எதுக்காகவும் எது ஒண்ணும்ன்னு இருக்கக் கூடாதுங்கறத்துக்காகத் தான் அந்த வேண்டுகோள்.  தெய்வ சங்கல்பம் இருக்கறச்சே அப்படி நேராது.  இருந்தாலும் மனுஷங்களோட குழறுபடிகள் இல்லாம கோலம் எப்படிப் போகணுமோ அப்படிப் போய் அழகாப் பூர்த்தியாகணும்ன்னு நான் ஆசைப்படறேன்.  என்னோட சுய அபிலாஷை இது. பூர்த்தியான கோல அழகைப் பாக்கணும்ன்னு மனசு கிடந்து அடிச்சிக்கறது.."என்று சொல்லி முடித்த போது நாராயணன் குரல் அமுங்கிப் போன மாதிரி இருந்தது.

"கவலையே படாதீங்க.  எனக்கும் இது எப்படிப் போறதுன்னு பார்க்க ஆர்வமா இருக்கு. அதனால எதுவும் லீக் ஆகாது.  என்னை நீங்கள் நம்பலாம், நாராயணன்" என்றாள் ஊர்மிளா.

"தேங்க்ஸ்..." என்று நாராயணன் சொன்ன போது அவன் முகத்தில் ஒரு பரவசம் பளிச்சிட்டது.   ரொம்ப இயல்பாக, "அடுத்தாப்ல ஆபிஸ் வேலையைப் பாக்கலாமா?.  மொத்தம் 52 நாவல்கள் என்றா சொன்னீர்கள்?.. டெலிவரி சிலிப் உங்க கிட்டே தானே இருக்கு?.. நான் ரிஸீவ் பண்ணிக்கலாம்லே?" என்று அவன் சொன்ன போது வேறு ஒரு நாராயணனாக அவன் ஊர்மிளாவுக்குத் தோற்றமளித்தான்.

"எல்லாம் ரெடி, நாராயணன்.  அச்சுக்கான எல்லா பிரிண்ட்ங் மேட்டர்களையும் வழக்கம் போலத் தனித்தனி கவர்லே போட்டு அடுக்கியாச்சு. கவரிங் லெட்டர் இதோ.." என்று மேஜை இழுப்பறை திறந்து ஊர்மிளா அந்த காகிதங்களை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

"நீங்க சரிபாத்திட்டீங்கல்லே?.." என்று அந்த லிஸ்ட்டை மேலோட்டமாகப் பார்த்தபடியே கேட்டான் நாராயணன்.

"பாத்திட்டேன்.  இருந்தாலும் உங்க முன்னாடி ஒரு தடவை பாத்திடலாம். எல்லாம் சரியா இருந்து நீங்க கையெழுத்திட்டு வாங்கிண்டா எனக்கும் ஒரு திருப்தி." என்று ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நாராயணன் அடுக்கி வைத்திருந்த அச்சுக்கான பழுப்பு நிற கவர்களை எண்ணத் துவங்கி விட்டான்.

"ஆமா, ஐம்பத்திரண்டுன்னு தானே சொன்னீங்க?..ஐம்பத்து ஒண்ணு தான்..கொஞ்சம் இருங்க.. இன்னொரு தடவை எண்ணிடறேன்.." என்று மறுபடியும் எண்ண ஆரம்பித்தான்நாராயணன். எண்ணி முடித்து விட்டு,"இப்போ கூட ஐம்பத்து ஒண்ணு தானே வர்றது.." என்று புருவங்கள் வளைய ஊர்மிளாவைப் பார்த்தான்.

"கொஞ்ச நேரம் முன்பு நான் கூட வெரிஃபை பண்ணினேனே?.. சரியா இருந்ததே?" என்று நெற்றியைச் சுளித்த ஊர்மிளா, "ஒவ்வொரு நாவல் பேரா கவர் மேலே எழுதியிருக்கு பாருங்க,  நீங்க படிச்சிண்டே வாங்க, நான் இந்த லிஸ்ட்டோட சரிபார்க்கறேன்.." என்றாள்.

அப்படி சரிபார்த்ததில், ஒரு நாவல் அடுக்கி வைத்திருந்த கவர்க் கூட்டத்தில் இல்லாமலிருந்தது தெரிய வந்தது.

"அதாங்க, லிஸ்ட்டில் ஐம்பத்திரண்டு இருக்க, இங்கே ஐம்பத்தோரு கவர் இருந்திருக்கு.." என்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாராயணன், "விட்டுப் போன அந்த நாவல் பேரு என்னங்க?.. இந்த புத்தகக் குவியல்லே எங்கையானும் இருக்கான்னு தேடிப் பாக்கலாம்.." என்றான்.

"அந்த நாவல் பேரு தானே?" என்று இழுத்த ஊர்மிளா லிஸ்ட்டில் இவள் இப்பொழுது சரிபார்க்கையில் டிக்கடிக்காமல் விடுபட்டிருந்த பெயரைப் பார்த்து, "நாவல் பேர் 'நடக்குமென்பார் நடக்கும்'ன்னு போட்டிருக்கு" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு திகைத்த நாராயணன், "நல்ல பேருங்க.. நம்பிக்கை கொடுக்கற பேருங்க.. ஆனா.. ஆனா.. அது இப்போ இல்லேனா.." என்று குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். அவன் முகம் லேசாக வியர்த்திருந்தது. கர்ச்சீப்பை எடுத்து கழுத்துப் பட்டையைத் துடைத்துக் கொண்டவன் சோர்வுடன் நாற்காலியில் விழுந்தான் என்றே சொல்ல வேண்டும்.


(இன்னும் வரும்)
Related Posts with Thumbnails