மின் நூல்

Saturday, March 27, 2021

மொழி

                                                        10


மஸ்கிருதம் தேவ மொழியென்றால்  அமிழ்தத் தமிழ் தெய்வ மொழி என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பண்டைய தமிழன் தெய்வத்தைத் துதித்துப் பாடாதிருந்ததில்லை.  சங்க காலத்தில் தெய்வத்தின் வழிபாடாகவே வண்ண வண்ண மலர்களாய் அர்ச்சிக்கப்பட்ட பாடல்கள்..  'சங்க காலத்தோடு  மட்டும் சொந்தம் கொண்டாடுவோம், சங்க காலத்து தமிழரின் தெய்வ வழிபாட்டை கண்டுக்க மாட்டோம்' என்பது காலத்தின் நிர்பந்தம் போலாயிற்று.  

'மாயோன் மேய  காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே'  --  என்றும்


பாலை நில கொற்றவை வழிபாடு குறித்து---

'மறம் கடை கூட்டிய துடி நிலை. சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணை புறனே'  

              (--  தொல். பொருளதிகார புறத்திணையியல்)

என்றும்,  வாழ்ந்த ஐவகை நில அமைப்புகளுக்கு ஏற்ப மாயோன், சேயோன், இந்திரன், வருணன், துர்க்கை  என்று திணைநிலைத் தெய்வங்களை வழிபடும் வழக்கமிருந்திருக்கிறது என்பதற்கு ஆதார பூர்வமான எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன.

கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன  மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

                (தொல். புறத்திணைவியல்: 85)

கடந்து நிற்பவர் என்ற பொருளில் கடவுள் என்ற சொல் தொல்காப்பியத்திலேயே எடுத்தாளப்படுகிறது.  'தெய்வம் தான் தமிழரின் வழிபாடே தவிர கடவுள் இல்லை' என்று  கடவுள் - தெய்வம் வார்த்தைகளையே வித்தியாசப்படுத்திய பெருங்கவிஞர் ஒருவரின் உரையைக்  கேட்ட நேரத்து திகைப்பாய் இருந்தது,   'எம்மிடம் தயிர் தான் இருக்கிறது;  மோர் இல்லை'  என்கிற மாதிரியாக இது எனக்குத் தோன்றியது. ஏதோ தயிருக்கும் மோருக்கும் அவரளவில் வித்தியாசம் காணுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.  மேற்கண்ட  தொல்காப்பிய நூற்பா இப்பொழுது தெரிய வந்து, இதோ கடவுளும் தொல்காப்பிய காலத்தில் இருக்கிறரே என்று குஷியாயிற்று.   

கடவுள், தெய்வம் எல்லாம் ஒன்று என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?..  இல்லை என்பது சில தமிழ்ப் பேரறிவாளர்களின் கருத்து.  எல்லாம் வார்த்தைகளுக்குக் கொள்ளும் பொருள் சம்பந்தப்பட்ட  விளையாட்டுகள் தான்.   

'இயற்கையை தெய்வமாக வணங்கியவன் தமிழன்;  தீயைத் தெய்வமாகப் போற்றியது ஆரியம்' என்று ஆறு வித்தியாசம்  காணுகிற மாதிரி என்னன்னவோ மயக்கங்கள்.  தீ,  இயற்கையின் வெளிப்பாடு இல்லையா, என்றால் அதெப்படி என்று ஆயிரத்தெட்டு வக்கணைகள்.

'கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற'

கொடிநிலை என்றால் கதிரவன்  (சூரியக் கடவுள்).   'ஆதித்யானாம் அஹம்  விஷ்ணு' என்பது பகவத்கீதையில் கண்ணபிரான் வாக்கு. 'நானே சூரியனாய்த் திகழ்கிறேன்' என்று இதற்குப் பொருள்.   தமிழகத்தில் சூரியக் கடவுள் கோயில் கொண்டுள்ள குடந்தைக்கு அருகிலுள்ள  தலம் சூரியனார் கோயில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.  சிலப்பதிகாரத்திலோ  உச்சிக் கிழான்  கோட்டம் என்ற பெயர் சூரியனுக்கான கோயிலைச் சுட்டுகிறது.   இன்றைய  ஒடிசா மாநிலத்தில் கொனார்க்கில் அமைந்துள்ள சூரியனார் கோயில் பற்றி நாம் அறிவோம்.

தன் ஈர்ப்பு சக்தியால் அத்தனைக் கோள்களையும் ஆகர்ஷித்துப் பின்னிப் பிணைந்திருக்கும் நிலை 'கொடிநிலை'யாகி அதுவே காரணப் பெயராயிற்று.

தண்கதிரை வாரிவழங்கி இராக்காலங்களில் பயிரைக் காத்து அருளுவதால் திங்கள் (சந்திரன்) வள்ளியாயிற்று.

கந்தழி என்றால்  நெருப்பு  (அக்னி).  நெருப்பு, தீ என்றால் உடன்பாடாகத் தெரிவது அக்னி என்றவுடனேயே முகச்சுளிப்பாகி விடுவதற்கு காரணம் இருக்கிறது.  உண்மை  என்பது உணர்வாக இருப்பினும்  சமஸ்கிருதம் என்றால் ஒரு தயக்கத்துக்கு பிறகே ஏற்றுக்கொள்ள மனதில் சம்மதம் கிடைக்கிறது.  இந்த சம்மதம் கிடைக்காததாலேயே  கடலில் மூழ்கிய கடைச்சங்க காலத்திற்கு முந்தைய காலத்தை அப்படியான ஒரு பொற்காலம் இருந்ததே இல்லை என்று மறுக்க மனசைத் தயார்படுத்தியது.

ஞாயிறு,  தீ, திங்கள் ஆகிய மூன்றும் வடுநீங்கு  சிறப்பு கொண்ட தெய்வங்கள் என்பது தொல்காப்பியனார் வாக்கு.

பிற்காலத்தில் இதே நிலையை ஒட்டித் தான் 'வான் இனிமையுடைத்து,  தீ இனிது,  நீர் இனிது, நிலம் இனிது, என்ற  பாரதியாருக்கு தீக்குள் விரலை வைத்த  பொழுதும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் உணர்ந்து இறைவனுடனான
நெருக்கத்தின் சுகம் பெறும் பேறு பெற்றார்.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகைப்  பிறவும் கருவென மொழிப

 (தொல்காப்பியம். பொருள். அகத்திணையியல். 18)


இந்நூற்பாவிலிருந்து  தொல்காப்பியர் காலத்து தெய்வம் என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதனை உணரலாம்.   மக்கள் வாழ்ந்த நிலம், அவரவர் தேவைகள் என்பவையின் அடிப்படையில் அவர்கள் தெய்வ வழிபாடு அமைந்திருக்கிறது.

(தொடரும்)
 

Monday, March 15, 2021

மொழி

                                                           9

ங்க இலக்கிய காலம் என்பது கி.மு. 500-லிருந்து கி.பி.200 வரை உள்ள காலப்பகுதியில் உருவான செவ்வியல் தமிழ் இலக்கிய படைப்புகளைக் குறிப்பிடும் கால கட்டமாகும்.  தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்  என்ற நம் வசதிக்காக மூன்றாகப் பிரித்த மன்றங்கள் வளர்த்த தமிழின் மேன்மையான காலம் இது.  

தலைச்சங்க காலத்தில்  சகோதரிகள் போல சமஸ்கிருதமும் தமிழும் ஒன்றாய் உறவாடிய மொழிகள் என்றும் அதற்கு ஆதாரங்களாய் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் அதங்கோட்டு ஆசானின் பங்கு, தொல்காப்பிய பாயிரம் சொல்லும் தகவல்கள் என்றெல்லாம்  பார்த்தோமில்லையா?

சமஸ்கிருத -- தமிழ் உறவுகளை சகிக்காத சிலர்  இந்த சரித்திர உண்மைகளை புறந்தள்ளும் முனைப்பில் தலையாவது, இடையாவது,   தமிழ்ச் சங்கம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று தீர்மானமாக மறுத்தனர்.  அதற்கு அவர்கள் சொன்ன காரணம் வேடிக்கையானது.

சங்கம் என்ற வார்த்தை தமிழிலேயே இல்லையாம்.  சங்கம் என்ற வார்த்தையே தமிழில் இல்லாத பொழுது தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆகப்பெரிய கண்டுபிடிப்பாய் மனமறிந்த பொய்யை உண்மை போலச் சொல்லத் துணிந்தனர்.

அதற்கு ஆதாரமாய் தொல்காப்பியத்தையே துணைக்குக் கொண்டது தான் வேடிக்கை.   சங்கம் என்ற வார்த்தையின் முதல் எழுத்து,  'ச' என்ற எழுத்து இல்லையா?..  இந்த 'ச' முதல் எழுத்தாய் இருந்து தொடங்கும் சொற்களுக்கு சில வரையறைகள் உண்டு என்பதற்கு தொல்காப்பிய எடுத்துக்காட்டு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டனர்.

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ ஐ ஒள எனும்  மூன்றலங் கடையே
        
                                           (தொல்காப்பியம்  62)

அ ஐ ஒள என்னும் மூன்று எழுத்துகளோடு சேர்ந்து சகரம் முதலெழுத்தாக வராது.  (உதாரணம்: ச, சை, செள) இந்த மூன்றைத் தவிர்த்தப்  பிற ஒன்பது  உயிர்களுடன் சேர்ந்து முதலெழுத்தாய் வரும் என்பது கருத்து.

சகரக் கிளவி பற்றிய  தொல்காப்பியரின் இந்த நூற்பாவிற்கு 
உரையாக இளம்பூரணர் இரண்டு காரணங்களைச் சொல்வார்:

அ ஐ ஒள -- என்னும் மூன்று எழுத்துக்களோடு சேர்ந்து 'ச' என்ற எழுத்து முதலெழுத்தாக வருகின்ற சூழல்களில் அது சமஸ்கிருத எழுத்தின் பாதிப்பில் இருக்கும் என்பது இளம்பூரணர் கருத்து.  இரண்டாவதாக இன்னொன்றையும் சொல்கிறார் அவர்.  'கடி சொல் இல்லை, காலத்து படினே'  (சொல்லதிகாரம் - 56) என்ற வரியை எடுத்துக் காட்டாகச் சொல்லி அவ்விதிப்படி அவை அமையும்' என்கிறார்.  

நச்சினார்கினியர் கருத்தும் இதுவே.  சட்டி, சகடம் -- ஆகிய சொற்கள்  தமிழ்ச் சொற்களே என்று தன் காலத்து வழக்கில் இருக்கும் சொற்களையும் இவர் எடுத்துக் காட்டுகிறார்.

வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகுமே

                                              (தொல். சொல்லதிகாரம். 5)

என்பதும் தொல்காப்பியர் காட்டிய வழிதான்.

சமஸ்கிருத மொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் வடசொல் என்று தொல்காப்பியரே இலக்கணம் வகுத்து,  சங்கம் என்ற சொல்லின் இருப்பிற்கு நியாயம் வழங்கியிருக்கையில்  முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல  தலைச்சங்கம், இடைச்சங்கம் இவையெல்லாம் இருந்ததே இல்லை, எல்லாம் நம் கற்பனை என்றால் எப்படி?..  அந்த இரண்டு சங்கமும்  கடற்கோளில் மூழ்கிப் போயிருக்கலாம்.  ஆனால் அந்த இரண்டு சங்கங்களிலும் படைக்கப்பட்ட இலக்கியங்கள், ஆகச்சிறந்த தொல்காப்பியம் இருக்கிறதே என்றால்...  இருக்கும் அந்த இலக்கியங்களின் தொன்மை குறித்து  கேள்வி எழுப்புவதில் கொண்டு போய் முடிக்கிறார்கள்.

ஆயிரம் இருந்தும் என்ன,  சங்கம் என்ற ஒன்று இருந்ததே இல்லை, அது முழுக் கற்பனை என்ற வாதததை முன் வைத்கும் அளவுக்கு சமஸ்கிருத ஒவ்வாமை கொண்டிருந்தது உறுத்தலாகத் தான் இருக்கிறது.

புறப்பொருள் வெண்பா மாலை என்றொரு நூல் உண்டு.  அந்த நூலில் தமிழ்க்குடியின் மூத்த வரலாற்றைக் கொஞ்சமே உயர்வு நவிற்சியுடன் குறிப்பிடும் பாடல் ஒன்றுண்டு.

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர்  --  கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,  வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

                  (பு.வெ. மாலை -- கரந்தைப் படலம்)

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,  வாளொடு முன் தோன்றிய மூத்த குடி இது'  என்ற குரல் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்து அரசியல் மேடைகளில் ஒங்கி ஒலித்த குரல்...  

அந்தக் காலம் வேறே!  இந்தக் காலம் வேறே!  இந்தக் கால மாற்றத் கோளாறுகளையும் இந்தப் பாடலின் முதல் வரி படம் பிடித்துக் காட்டுவது இன்னும் அதிசயம்! ஆதித்தமிழ் மொழிக்கு புகழ்மிகு புலவர்கள் சூட்டிய கிரீடங்களான  சங்க இலக்கியக்களை பயிலாமலும்,  பயின்ற சிலரும் மறந்தே போவோம் என்று சூளுரைத்த மாதிரி மெளனம் பயில்வதும்  மனம் போன போக்கில் மாற்றி வரலாற்றை திசைதிருப்ப முயல்வதுமான காலம் இது!  

சங்க இலக்கியங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எழும்பிய தமிழ் மொழியின் இயல்பான வளர்ச்சி பிற்காலத்தில் எப்படியெல்லாம் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்க்கலாம்.  

அகப்பொருளையும் இலக்கண வரையறைகளுக்கு உள்ளடக்கிய கி.பி. காலத்து நூலான இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு அக்காலத்துப் புலவரான நக்கீரர் என்பவர் எழுதிய உரையில் மூன்று சங்கங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகிறது.   

ஒரு பருந்துப் பார்வையில் சங்க காலம் பற்றிய அடிப்படை குறிப்புகளை நம் நினைவில் கொள்வோம்:

தலைச்சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில்செயல்பட்டது.  தலைச் சங்கத்தைத் தோற்றுவித்து பெருமை கொண்டவன்  காய்சின வழுதி என்ற பாண்டிய மன்னன்.   தலைச்சங்க கால கட்டத்தின் இறுதியில் ஆட்சி புரிந்தவன்  கடுங்கோன் என்ற பெயரிய பாண்டியன்.  இந்த நீண்ட காலத்தில் ஏறத்தாழ 449 புலவப் பெருந்தகைகள் மன்றத்தை அலங்கரித்ததாகத் தெரிகிறது.

அக்காலத்து முக நாரை,  முதுகுருகு, கனரியாவிரை, பரிபாடல் போன்ற நூல்களை  பற்றி பிற்காலத்து இறையனார் களவியல் தெரியப்படுத்துகிறது. தலைச்சங்க காலத்து முக நாரை என்ற இசைப் பற்றிய நூல் தான் தமிழின் முதல் படைப்பாக்கம். 

 அகத்தியரின்  அகத்தியம் தலைச்சங்க காலத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இலக்கண நூல் .  இடைச்சங்க காலத்தில் அகத்தியத்தோடு தொல்காப்பியமும் சேர்ந்து கொள்கிறது.   

காற்று வந்ததும் கொடி அசைந்ததா, இல்லை,  கொடி அசந்ததும் காற்று வந்ததா போன்ற சிக்கலான கேள்வி,  இலக்கியம் தோன்றியதும் தோன்றிய நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டதா,  இல்லை  இலக்கண வழி காட்டல்களின்  அடிப்படையில் இலக்கியம் உயிர்ப்பு கொண்டதா என்பது.
இலக்கண அடிப்படையில் இலக்கியம் உருவானதாகக் கொள்வோம்.

ட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் தான் சங்க நூல்களில் காலத்தால் முற்பட்டது.  தலைச்சங்க காலத்து பழம்பெரும் சொத்து இது.  

'முதலூழி யிருதிக்கண் தென் மதுரையகத்து  தலைச்சங்கத்து அகத்தியனாரும்,  இறையனாரும்,  குமர வேளும், முரஞ்சியூர் முடி நாகராயனாரும், நிதியின் கிழவனும்  என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்பர்  எண்ணிறந்த பரிபாடலும், முதுநாரையும்,  முதுகுருகும், களறியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து..' என்ற அடியார்க்கு நல்லாரின் உரை பரிபாடலின் தலைச்சங்க காலத்துத் தொன்மையை உரைக்கும். 

ஆயிரம் விரித்த அணங்குடை  அருந்தலை
தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மையில்வால் வளைமேனிச்
சேயுயிற் பணைமிசை எழிற்வேழம் ஏந்திய
வாய் விளங்கும் வளை நாஞ்சில் ஒருகுழை ஒருவனை...

-- என்று தொடங்கும் 70 பாடல்களைக் கொண்ட பண்ணிசை இலக்கியம் பரிபாடல்.    பரிகள் கால்களைப் பரிந்து விரைவது போல பண்ணிசை வரிகளால் பாக்கள் ஆனதால் பரிபாடல் என்று காரணப் பெயர் பெற்றது.  'பாய் பரிப் புரவி'  என்று மதுரைக் காஞ்சி  பரிபாடலின் புகழ் பாடும்.

பரிபாடல் அமைந்த அழகைப் பார்ப்போம்:

திருமாலுக்கு எட்டு பாடல்கள்,  மால் மருகனுக்கு 31 பாடல்கள், கொற்றவை காளி தேவிக்கு பாடல் ஒன்று, வையை நதிக்கு 26 பாடல்கள், பழம் பெருமை கொண்ட மதுரைக்கு நான்கு பாடல்கள் மொத்தம் எழுபது பாடல்கள் கொண்ட பழம்பெரும் நூலென்று இளையனார் களவியல்  எடுத்தோதும்.

அழிந்து படும் நிலையிலிருந்த ஓலைச்சுவடி பரிபாடல் பாடல்களை ஐயந்திரிபற சோதித்து 1889-வாக்கில் அச்சு வடிவம் ஏற்றியவர் தன்னேரில்லா தமிழர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள்.


(தொடரும்)

Tuesday, March 9, 2021

மொழி

                                                            8

ண்டைய தமிழோடு ஒன்றிக் கலந்த சமஸ்கிருதமும் தமிழைப்  போலவே இலக்கண வளப்பம் நிறைந்த மொழி.  

அஷ்டாத்யாயிக்கு முன்பே சமஸ்க்ருதம் வேறு சில இலக்கண நூல்களைப் பெற்றிருந்தது என்பதற்கான குறிப்புகளை அஷ்டாத்யாயிலேயே காணலாம்.   இது எட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய ஆக்கம் ஆதலினால்  அஷ்டாத்யாயி என்று அழைக்கப்படல் ஆயிற்று. தில்லை நடராஜ பெருமான் நடனமாடிய பொழுது அவரது உடுக்கையிலிருந்து புறப்பட்ட பதினாங்கு ஒலி வடிவுகள் எட்டு அத்தியாயங்களாயின என்று புராணக் கதை வழி சொல்லப்படுகிறது.

ஐந்த்³ரம்ʼ சாந்த்³ரம்ʼ காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ |
ஸாரஸ்வதம் சாபிஸ²லம்ʼ ஸா²கலம்ʼ பாணினீயகம்ʼ ||

-- என்று சமஸ்கிருத இலக்கண படைப்புகளுக்கு வழிகாட்டும் ஸ்லோகம் ஒன்று உண்டு.

வியாகரணம் என்றால் இலக்கணம்.  இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், காஸாக்ருத்ஸ்னம், கெளமாரம்,  ஸாகடாயனம்,  ஸாரஸ்வதம், ஆபிஸலம், ஸாகலம், பாணினீயம் --  என்பன சமஸ்கிருத இலக்கண நூல்களாக அறியப்பட்டவை.    இவற்றில் கெளமாரம் திருமுருக பெருமானானின் அருளால் படைப்பாக்கம் கொண்டது என்று அறியப்படுகிறது.  கெளமாரம்,  கலாபம் என்றும் அழைக்கப் படுகிறது.  கலாபம் என்றால் சமஸ்கிருதத்தில் மயில்.

ஐந்திரம் தான் இந்திர வியாகரணம்.  இந்த ஐந்திர வியாகரணத்தை ஒட்டித் தான் தொல்காப்பியம் ஆக்கமுற்றதாக தொல்காப்பியப் பாயிரம் பகின்றதை ஏற்கனவே பார்த்தோம்.

மேற்சொன்ன சமஸ்கிருத இலக்கண நூல்களில் பாணினியின் படைப்பாக்கமான அஷ்டாத்யாயி  தான் இன்றும் காணக் கிடைக்கிறது.   இந்த அரிய நூலை முனைவர் கு. மீனாட்சி அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தமிழகத்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அதை நூலாகவும் வெளியிட்டிருக்கிறது.   பாணினியின் அஷ்டாத்யாயி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்திருக்கிறேன்.  சென்னை தரமணியில் இருக்கும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  முனைவர் கு. மீனாட்சி அவர்களின் தமிழாக்கத்தில் மூன்று பாகங்களாய் அஷ்டாத்யாயி மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.  

மஸ்கிருதம் தேவ மொழி  என்றால்  நம் அருமைத் தமிழோ  தெய்வ மொழி.  இறையனாரும்,  முருக பெருமானும் தலைச்சங்கத்தைக் காத்து நின்ற கடவுளர்கள்.  தமிழனுக்கு இலக்கணமே தெய்வத்தின் புகழ் பாடுவது தான் என்று சொல்லும் அளவுக்கு இறை வழிபாட்டை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இனம் இது. 

பழந்தமிழரின் தெய்வ வழிபாடுகளைப் பற்றிப் பேச விருப்பமில்லாது  போயின்,  சங்க இலக்கியங்களைப்  பற்றிப் பேச முடியாமலேயே போகும்.   

வாழ்வுக்கு அடிப்படை நிலம் தான்.  அந்த நிலப்பாகுபாடுகளை முன் நிறுத்தி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலப் பாங்குகளை அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட வகுத்த பழந்தமிழ் பண்பாட்டு அழகு வியக்கத் தக்கதாகும்.   தமிழர் வாழ்வு காத்த தெய்வங்களைப் பற்றிப் பார்ப்போம்:

மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லைக் குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே..

-- என்பது தொல்காப்பிய பொருளதிகாரச் செய்யுள்.

நில அமைப்புகளையே திணைகளாகக் கொண்டு அந்தந்த நிலப் பகுதிகளுக்கான வழிபடும் தெய்வங்களையும் வகுத்து வணங்கிய தமிழரின் மாட்சியை துல்லியமாகப் படம் பிடித்துச் சொல்லும் அழகு நினைத்து நினைத்து இன்புறத் தக்கது.

காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம்
மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்

முல்லை நிலத்திற்கு திருமாலை தெய்வமாக வரித்தும், குறிஞ்சிக்கு மால் மருகனை கடவுளாகக் கொண்டும்,  மருதத்திற்கு இந்திரனை தலைவனாகக் கொண்டும், 
நெய்தலுக்கு வருணனைத் தெய்வமாக வகுத்தும்  பழந்தமிழரின் இயற்கையோடு இயந்த வழிப்பாட்டு முறை தொல்காப்பியரால் தெளிவு படுத்தப் படுகிறது.

பைந்தமிழில் 'முருகு' என்றால் அழகு என்று பொருள்.  இயற்கையின் அழகுச் செடி கொடிகளாய் பூத்துச் செறியும் மலையும் மலைச்சாரலும் நிறைந்த குறிஞ்சி நிலத்திற்கு அந்த இயற்கை அழகையே வழிபடும் நிலையில் முருகன் தெய்வமானார்.

கோடை வெப்பத்தால் மாற்றுத் தோற்றம் கொள்ளும் இடம் பாலையாயிற்று.  பாலை நிலத்திற்கான தெய்வத் தலைமை தொல்காப்பியத்தில் குறிப்பிடாவிட்டாலும் தொல்காப்பியம் பொருளதிகாரத் துணைத் திணையியலில்,

மறம்கடை கூட்டிய துடிநிலை,  சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணை புறனே 

                                   (தொல், புறத்திணை: 62) 

-- என்ற வரிகள் காணக் கிடைக்கின்றன.

குறிஞ்சியும் முல்லையும் என்னதான் வளப்பச் செல்வம் பொருந்தியிருப்பின் நெடுநாள் மழையில்லாது தவிக்கும் நிலை ஏற்பட்டால் பாலையாகும் என்ற உண்மையை ஓர்ந்து அதுபற்றிய குறிப்பொன்றை சிலப்பதிகாரத்தில் பார்க்கலாம்.

சிலம்பின் மதுரை காண்டத்தின் ஆரம்பப் பகுதி தான் காடு காண் காதை.   கவுந்தி அடிகளின் வழிகாட்டலுடன் கோவலனும் கண்ணகியும் உறையூரை விட்டு  நீங்கி மதுரை மாநகர் நோக்கி வழிப்பயணம் மேற்கொண்ட பொழுது வழியில் குறுக்கிட்ட ஒரு சோலையினுள் நுழைகின்றனர்.  அங்கிருந்த மண்டபம் ஒன்றில் பாண்டியன் புகழ் பாடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைச் சந்திக்கின்றனர்.  அவரிடம் "மாமறை முதல்வ!   மதுரைச் செந்நெறி கூறுவீர்' எனக் கோவலன் கேட்க, 

".. முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து  
நல்லியல் பிழந்து நடுங்குதுயர்  உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்..."

".. இத்தகைய வேனில் காலத்தே காரிகையுடன் கடும் பயணம் மேற்கொண்டீரே!" என்பார்.   முல்லையும் குறிஞ்சியும் நீண்ட காலம் மழை பொய்யாது காய்ந்து போயிருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதனை மாமறை முதல்வன் மூலமாக இளங்கோ  அடிகளார் சுட்டிக் காட்டுகிறார்.

இத்தகைய இயற்கை மாறுபாடு காரணமாகவே  முல்லைக்கும் குறிஞ்சிக்கும் கொற்றவை பொது தெய்வமாகிப் போனாள். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணனரும் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையே என்று உறுதி செய்கிறார்.


(தொடரும்)

Tuesday, March 2, 2021

மொழி

                                                                   7

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றிய குறிப்புகளைக் கேட்டிருந்தார் ஸ்ரீராம்.  

அதற்கு முன் தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அரசவையில் அரங்கேறிய பொழுது அந்த சிறப்பான நிகழ்விற்கு தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசானைப் பற்றி தெளிவு கண்டு விட்டு பனம்பாரனாருக்கு வருவோம்.

அதங்கோட்டு ஆசானுக்கு அறிமுகமாய் 'நான்மறை முற்றிய' அதங்கோட்டு ஆசான் என்ற பரம்பாரனாரின் குறிப்பு வருகிறது.  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தாம் நான்கு மறைகள் என்பது நமக்குத் தெரியும்.  சமஸ்கிருத மொழியில் அமைந்த  இந்த நான்கு வேதங்களையும்  முற்றும் கற்ற அதங்கோட்டு ஆசான் என்று பரம்பாரனார் அவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.    தொல்காப்பிய


எழுத்ததிகாரத்திற்கு உரைப் பாயிரம் எழுதிய இளம் பூரணரும் இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார். அன்றைய தமிழறிஞர்கள்,  தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒன்றரக் கலந்தக் கல்வியாய் கற்றுப்  புலமை பெற்றிருந்தார்கள் என்பதற்கு அதங்கோட்டு ஆசான் எடுத்துக் காட்டுமாகும்.

இத்தகு மொழிப்புலமை பெற்ற அதங்கோட்டு  ஆசான் தான்  அந்த நிகழ்விற்கு தலைமையேற்று நடத்திச் செல்கிறார்.  தகுந்த சான்றோர்களின் மேற்பார்வையில் அவர்களின் ஒப்புதலுடன் தான் அரசவையில் அரிய நூல்கள் அரங்கேறின என்பதற்கு சான்றுகள் இவை.

தொல்காப்பியம் அரங்கேறும் பொழுது எழுத்து, எழுத்து முறை இவற்றில் தமக்கேற்பட்ட சில ஐயங்களை தொல்காப்பியரிடம் கேட்டு தெளிவு கொள்கிறார் அதங்கோட்டு ஆசான்.  இவையெல்லாமே பனம்பாரனார் தம் பாயிரத்தில் சொல்லி நமக்குத் தெரிபவை.

கன்னியாகுமரி மாவட்டத்தில்   வள்ளுவன் கோடு (!) என்றொரு ஊர் உண்டு.  இதுவே இன்று விளவன்கோடு என்று அழைக்கப் படுகிறது.  இதன் அருகில் அமைந்த  சிற்றூர் தான் அதங்கோடு. இந்த அதங்கோட்டில் இருக்கும் சூரிய முக்கு என்ற பகுதியில்  தாமிரபரணி ஆறு ஓடுகிறது.  குழித்துறை தாமிரபரணி என்று அழைக்கிறார்கள்..  (இந்த இடம் பற்றிய மேலதிகத் தகவல்கள் நமது நெல்லைக்குத் தெரிந்திருக்கலாம்.)  இந்தக் குழித்துறை தாமிரபரணி தான் பண்டைய சங்ககால பஃறுளி ஆற்றின் விட்ட குறை  தொட்ட குறையாய் இன்றிருப்பது என்றும் சொல்வார்கள்.

அடுத்து பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றி.

தொல்காப்பியரும் பனம்பாரனாரும் அகத்தியரிடம் பயின்ற ஒருசாலை மாணாக்கர்கள் என்று ஏற்கனவே தெரிந்திருந்தோம்.   இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும்  சாத்தான் குளம்  அருகில் பன்னம்பாறை என்றொரு சிற்றூர் உள்ளது.  இந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற கருத்தில் பனம்பாரனார் என்ற அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்தி மொழி வேறு;  சமஸ்கிருதம் வேறு.  வடமொழி என்ற பொதுச் சுட்டலில் இரண்டையும் ஒன்றாகக் கருதி நாம் மயக்கம் கொள்கிறோம்.  சமஸ்கிருதம் தமிழைப் போலவே இலக்கணச் சிறப்பில் வளப்பம் நிறந்த மொழி.  தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து கி.மு. காலங்களிலேயே  செம்மொழிச் சிறப்புடன் தனித்தியங்கும் ஆற்றலுடன் இலக்கிய, இலக்கண வளம் நிறைந்து இயங்கின. இன்னொரு ஒப்புமை இவ்விரண்டு மொழிக்கும் என்னவென்றால் இரண்டுக்குமே மூல இலக்கணம் ஒன்றே தான்.

ஐந்திரம் என்பது  காலத்தால் முற்பட்ட சமஸ்கிருத இலக்கண நூலென்றும் இது இந்திரனால் ஆக்கப்பட்டது என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன.  ஐந்திரம் பற்றிய முதல் தகவல் குறிப்பைத் தந்தவர்  ஆர்ய பட்டர் என்று சொல்லப்படுகிறது.

சொல்லக் கேட்டது தானே தவிர, ஆர்ய பட்டர் என்ன குறிப்பு கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.   ஆனால் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த இலக்கிய மேதைகள் ஐந்திரம் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்ட முதல் பகுதி '.காடு காண் காதை'.  கோவலன் கண்ணகியுடன் மதுரை புகுங்கால்  வழித்துணையாகக் கிடைத்த கவுந்தி அடிகள், அவர்களுக்கு வழிகாட்டிச் செல்கிறார்:

"...... அவ்வழி செல்லாது இடப்பக்க வழியாகச் செல்வீராயின் திருமாலிருஞ்சோலை மலையை அடைவீர்கள்.  அங்கே பிலத்துவ வழியொன்று உண்டு.  அப்பிலத்தினுள்ளே புண்ணிய சரவணம், பலகாரணி, இட்ட சித்தி எனப் பெயர் கொண்ட மூன்று பொய்கைகள் உள்ளன.  அதில் புண்ணிய சரவணம் என்கிற பொய்கையில் மூழ்கி நீராடுவீராயின்,  விண்ணவர் கோமானால் இயற்றப்பட்ட  ஐந்திரம் என்னும் இலக்கண நூலைக் கற்றுத் தேர்ந்தவராவீர்..'  என்று ஐந்திரத்தின் பெருமை பற்றிச் சொல்கிறார். 

கம்பனோ, அனுமன் ஐந்திரம் பற்றி அறிவான் என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.

யுத்த காண்டத்தில் விபீஷணன் அடைக்கல படலம்:

'இயைந்தன இயைந்தன இனையக் கூறலும்

மயிந்தம் துயிந்தனும் என்னும்  மாண்பினார்

அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்..'  

-- என்பது கம்பன்  வாக்கு.  

மயிந்தன், துயிந்தன் என்ற இரு வானரர்கள்,  ஐயிந்திர இலக்கண வழிகாட்டுதல்களை அறிந்த அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர் என்கிறார்.   இது படித்து யுத்த சாத்திர நுணுக்கங்களின் பாங்குகள் ஐந்திரத்தில் காணக் கிடைக்குமோ என்ற ஆவலும் நம்முள் தலையெடுக்கிறது.

தொல்காப்பியப் பெருமான்  அகத்தியத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.  அதே காலத்து சமஸ்கிருத இலக்கண நூலான ஐந்திரத்தின் சிறப்பையும் அறிந்தவர்.  இந்தச் சிறப்புகளையே அடித்தளமாகக் கொண்டு தன் மொழி ஆற்றலையும் ஆழப்பதிந்து தொல்காப்பியத்தை ஒரு முந்து நூலாகப் படைத்தருளியிருக்கிறார்.  சொல் அதிகாரம்,  எழுத்து அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற முப்பெரும் பிரிவுகளில் காப்பிய அழகோடு, தமிழ்த் தாய்க்கு அணிகலனாய் விளங்கும் ஒப்பற்ற நூல் தொல்காப்பியம்.

சமஸ்கிருதத்தில் இந்திரனின் ஞானத்தில் விளைந்த ஐந்திரம் என்னும் இலக்கண முறையும், பாணினியின் உருவாக்கத்தில் விளைந்த பாணினீயம் என்ற வகையும் இருந்ததாகத் தெரிகிறது.

இவ்வளவு சொல்லி விட்டு சமஸ்கிருத இலக்கண நூலான பாணினியின் அஷ்டாத்யாயி பற்றியும் சொல்லவில்லை என்றால் இந்தப் பகுதி  நிறைவு கொள்ளாது.  

அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)


Related Posts with Thumbnails