இவையெல்லாம், உயிரில்லாத செல்வங்களென்றால், உயிருள்ள ஒரு செல்வமும் உண்டு. அதுதான் குழந்தைச் செல்வம். இந்தச் செல்வம் மற்ற செல்வங்களிலிருந்து மாறுப்பட்டது. பெற்றிருப்பவருக்கு மட்டுமில்லை, பெற்றிருப்பவரின் சுற்றத்தினருக்கும், பெருமையையும், மனமகிழ்ச்சியையும், உறவுச்சங்கிலி உணர்வையும் கொடுப்பது.இந்தச் செல்வம் மட்டும், யாருடைய முயற்சியின் அடிப்படையிலும் கிடைப்பதல்ல; வேண்டினால் கிடைப்பதும், வேண்டாமையால் கிடைக்காமல் போவதுமில்லை. அதனால் தான் குழந்தைச்செல்வத்தை மட்டும் பாக்கியம் என்கிறோம். இயல்பாக ஏழை,பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் கிடைப்பதினால் தான், குழந்தை பாக்கியத்தை கடவுளின் கொடை என்று சொல்கிறார்கள்.
இந்த வரம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதிலிருந்து தொடங்கி பரவ ஆரம்பிக்கும் மகிழ்ச்சி, அதைத்தொடர்ந்து தன் சுகம், தன் நலன் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பிறக்கப்போகும் அந்த சிசுவுக்காக ஏங்கும் அந்த போக்குகள், ஒருவழியாக தாய்க்கு பிரசவம் நல்லபடி நடந்து குழந்தை இந்த பூமிப்பந்தின் பிரஜை ஆனதும் ஏற்படுகின்ற சிலிர்ப்பு, அந்த சிசுவின் அணைப்பில் ஏற்படுகின்ற சுகானுபவ ஆனந்தம், தங்கள் ரத்தத்தின் உயிர்த்துடிப்பான அந்த பூபாரத்தைக் கையில் தூக்கிச் சுமக்கையில் ஏற்படுகின்ற பரவசம், பொக்கை வாய் திறந்து அந்தக் குழந்தை சிரிக்கையில் ஏற்படும் பரமானந்தம், காரணமில்லாமலேயே வீல்வீலென்று அழுகையில் உணரும் பரிதவிப்பு --- எல்லாமே சொற்களில் சிறைபடுத்திச் சொல்லமுடியாத, ஒவ்வொருவரும் உணர்ந்து அனுபவித்து உணர வேண்டிய வாழ்க்கையின் வரங்கள்...
இந்தக் காலத்தில் தான் இப்படி என்றில்லை. எந்தக் காலத்திலும், இந்த சீராட்டும், பாராட்டும் இப்படித்தான். வாராது வந்த அந்த மாமணியை கட்டி அணைத்து, ஊரார் கண் பட்டுவிடப் போகிறதே என்று கன்னத்தில் கண்மைப் பொட்டிட்டு,அதன் பொக்கைவாய்ச் சிரிப்பில் உலக இன்பங்கள் அனைத்தும் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக உவகை கொண்டு மகிழ்வோர் தான் எல்லோரும். மனித இனத்தில் மட்டுந்தான் என்றில்லை, ரத்தவாடை நுகரும் மிருகங்களிலிருந்து, சின்னஞ்சிறிய குருவிகள் வரை--தனது குட்டிகள்,குஞ்சுகள் என்றால் அந்த அன்பும், அளப்பரிய கரிசனமும் எங்கிருந்துதான் வரும் என்றுத் தெரியவில்லை. தனக்கில்லாவிட்டாலும், தன்னிலிருந்து விடுபட்ட அந்த தனி உயிருக்கு, தன்னையே தந்துவிடும் அந்த பாசத்திற்கு ஈடுஇணை இவ்வுலகில் எதுவுமே இல்லை எனலாம். இந்தச் சீராட்டல், மண் குடிசையாயிருந்தாலும் சரி, மன்னனின் மாளிகையாய் இருந்தாலும் சரி, ஆசையும் அன்பும், ய்பாசமும் போட்டி போட்டுக் கொண்டு இடம் பார்த்துப் பேதப்படாமல் எல்லா இடங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கும்.
இதோ, கடைச்சங்கக் காலத்து மன்னன் பாண்டியன் அறிவுடைநம்பி என்ன சொல்கிறான், பாருங்கள்:

"படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே."
(புறநானூறு--188)
ஆஹா, எப்படி அனுபவித்திருக்கிறான்!..எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறான்! மன்னனாலும் சரி, பரம ஏழையாய் இருந்தாலும் சரி, ஒரே உணர்வு தான், போலும்!
தத்தித்தத்தி தளர் நடை நடந்து, தன் சின்னக்கை நீட்டி,அந்தச் சின்ன அன்ன பாத்திரம் தொட்டு, அதில் வைக்கப் பட்டிருக்கும் நெய்வார்த்த உணவில் தன் பிஞ்சு விரல்கள் புதைத்து,தொட்டு, விரல்களால் அளைந்து, ஓரிரு பருக்கைகள் எடுத்துக் கவ்வி வாயில் போட்டுக் கொண்டும், வாயிலிருந்து நழுவிய சில பருக்கைகளை தன் மேனி எங்கும் உதிர்த்துக்கொண்டும் அட்டகாசம் பண்ணி நம்மை மயக்கி களிப்பில் ஊஞ்சலாட்டும் இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெறாதவர், ஓ, வாழ்க்கையில் எந்தப் பயனையும் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை என்கிறான்!..
எவ்வளவு உணர்வுபூர்வமான வர்ணிப்பு பாருங்கள்.. எவ்வளவு கூரிய பார்வை அவனுக்கு!..
எனக்குத் தெரிந்து வேறு எந்தக் கவிஞனும்,சின்னஞ்சிறு குழந்தைகளின் சித்திர உலகையையும் அதனால் நமக்கு ஏற்படுகின்ற உவகையையும் இவ்வளவு அழகாக வர்ணித்ததில்லை! இவன் சரியான ரசிகனாய் இருக்கிறான்!
புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடும் புகழ்ப்பாட்டுகளால் மகிழ்வேற்பட்டு, ஆணவமும்-அகங்காரமும் பாதாதிகேசம் பரவி, அந்த அகமகிழ்ச்சியில் தன்னை வாழ்த்தி இறைஞ்சிய புலவர்களுக்கு, பண்டையத் தமிழ்மன்னர்கள் மனம்போன போக்கில் வாரி வழங்கினார்கள், என்கிற வசைச்சொல் இவனால் நீங்கியது... பாடும் புலவரின் பாடலை புரிந்து கொள்பவராயும், அதை வகைப்படுத்தி ரசிப்பவராயும் மட்டுமல்ல, தாங்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்களாயும் இருந்திருக்கின்றனர் என்று அறிவுடைநம்பியின் அட்டகாசமானப் பாட்டால் அறிந்து கொள்கிறோம். உண்மையிலேயே இந்தப் பாண்டிய மன்னன் தன் பெயர்கேற்ப, தமிழ்ப்புலமையை தன்னகத்தேக் கொண்டுச் சிறந்திருந்தான் என்று தான் இந்தப் புறப்பாடலால் புரிகிறது
