மின் நூல்

Monday, February 22, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

(பகுதி9--3)
         
"மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?   ஒருவொருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் அது.  அவ்வளவு தானே?" என்று கேட்டார் என் நண்பர்  ஒருவர்.

என்னால் அவ்வளவு எளிதாக அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் (tool) மட்டும் தானா மொழி என்பது?..

நிச்சயமாக இல்லை.    ரொம்பவும் பாமரத்தனமான புரிதலாக இது எனக்குப்  பட்டது.

மொழி பற்றி,  ஒருவனில் அந்த மொழியின்  ஆளுகை பற்றி எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள்.    கருத்துப் பரிமாற்றம் கொள்வதற்கு மொழியை விட்டால் வேறு வழி இல்லை.  உண்மை தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு மொழியில் புலமை பெறும் பொழுது அது நம்மை ஆட்கொள்ளும் நேர்த்தியில் எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக புரிதல் ஏற்படுகிறது.

முக்கியமாக அந்த மொழியின் இலக்கிய செல்வங்கள்.

எந்த மொழியும் தன்னில் ஞானம் கொண்டவனுக்கு இதில் வஞ்சனை செய்ததில்லை.  உலக மொழிகளில் எல்லா மொழிகளும் இந்த செல்வத்தை தன்னை அறிந்தோனுக்கு வாரி வழங்குவதில்  பாகுபாடு கொண்டதில்லை.

 ஒரு  மொழியில் புலமை பெற்றவன்   அந்த மொழியின் கருவூலமான இலக்கிய இன்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதில் ஆழ அமிழும் பொழுது இகவுலக சுகங்களை தாண்டியதான விவரிக்க இயலாத இன்பத்தை ஓர்ந்து உண்ர்ந்து கொள்பவனாகிறான்.

 திவ்ய பிரபந்த நாலாயிரத்தில் ஒரு பாடல் அது.

அச்சுதனின் அரங்கனின் பெருமைகளை  நா புரட்டி உச்சரிக்கும் புல்லரிக்கும் உணர்வை விட்டு விட்டு இந்திரலோகம் ஆளும் பெருமையையும் வேண்டேன் என்று இச்சுவை-- அச்சுவை  வேறுபாடு காட்டி நெகிழ்ந்திருப்பார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

மொழி என்பது ஒரு லாகிரி வஸ்து போல போதை தருவது.
.
எந்த மொழியாக இருக்கட்டுமே, அநத மொழியின் படைப்புகளில் ஆழ்ந்த தோய்தல் ஏற்படும் பொழுது அந்த ரசனை ஒருவித கிறக்க உணர்வை ஏற்படுத்தாமல் விடாது.

தாய் மொழி-- பிற மொழி என்றெல்லாம் இதில் பாகுபாடு ஏதுமில்லை. தாய்மொழி என்றால் இரட்டை மடங்கு கிறக்கம்.  அவ்வளவு  தான்.

அது ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காலம்.   பல நல்லது -- கெட்டதுகள் நமக்கு அறிமுகமான காலம்.

ஆங்கில மொழியறிவுக் கள்ளைப் பருகியதின் பாதிப்பில் அது போலவே தமிழில் எழுத வேண்டுமென்ற அளப்பரிய ஆசையின் போதை வயப்பட்டவர் பல பேர்.

'அது  போலவே'என்ற வார்த்தையை அட்சரம் பிசகாமல் தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்டு வந்த சிலரை மறக்கவே முடியாது.  இவர்கள் துணிந்து,பேண்ட், சட்டை, டை கட்டிய கதா பாத்திரங்களுக்கு வேஷ்டி, சட்டை தங்க பித்தான் கோர்த்த கோட், அங்கவஸ்திரம் உடுத்தி அழகு பார்த்தனர்.   சட்டை என்றால் அந்தக் காலத்தில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான். முழுக்கை சட்டையில் மணிக்கட்டு இடத்தில் கஃப் பட்டன் போட்டு, புஜப்பிரதேத்தில் கால் செ.மீ. அளவுக்கு வட்டமாய் துணியை மடித்துத் தைத்த கோலத்தில் அட்டகாசமாய் இருக்கும்.

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜூ (நம்ம ரா.கி.ரங்கராஜன் இல்லை; இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜனும் அறவே இல்லை!)  போன்றவர்களை மறக்கவே முடியாது.  ஆங்கில நாவலகளை தமிழ் படுத்தியதில் பயங்கர இலக்கிய மாற்று பங்களித்தவர்கள் இவர்கள்!   கதைகள் வாசிக்கம்  பழக்கம் இவர்களால் தான் அக்காலத்தில் படித்த வர்க்கத்தினரிடையே வழக்கமாகவும் மாறியது

இரத்தினபுரி இரகசியம்,  சொர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம், அபூர்வ சிந்தாமணி, மதன பூஷணம் அல்லது இறந்தவன்  பிழைத்தது போன்ற ஆரணி குப்புசாமி முதலியார் அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாவலகளை மறக்கவே முடியாது.

ஆரணியாரின் நாவல்களில் ஆங்கில கதாபாத்திரங்களும்  இங்கிலாந்து இடங்களும் தமிழ்ப் பெயர் பூணுவதை ரசித்து படிப்பதே ஒரு  தனி இன்பம் பயக்கும்.   எழுதிய மாத்திரத்தில் இவர் எழுத்தில் லண்டன்  இரத்தின புரியாகும்; வாட்ஸன் விஸ்வநாதன்  ஆவார்; ஆர்ஸின் லூயின் அரசூர் லஷ்மணனாவார்.


ஆரணி குப்புசாமி முதலியார் சிலகாலம் 'ஆனந்த போதினி' என்னும் பத்திரிகைக்கு ஆசிரியாராக வேறு இருந்தார்.  ஆ.கு.மு. காலத்திற்கு பிறகு நாரண துரைக்கண்ணன் (இவர் ஜீவா என்று புனைப்பெயர் கொண்டிருந்தார். பொதுவுடமைக் கட்சி ஜீவா இல்லை)  'ஆனந்த போதினி'யின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.  இந்த நாரண  துரைக்கண்ணன் அவர்கள் 'கலைமகள்'
பத்திரியகையில் தனக்கு முன்னோடியான  ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் ரக்சியம் பற்றி  ரசித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  அந்தக் கட்டுரையின்  சில வரிகளை என் குறிப்புப் புத்தகத்திலிருந்து  எடுத்து இங்கு எழுதுகிறேன்:

"ரெயினால்ஸ், வால்டர் ஸ்காட்,  அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின்  நாவல்களை மொழிபெயர்த்து தமிழர்களுக்குத் தர விரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ்நாட்டுப் பண்பாடுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும்  கதை மாந்தர்களின் பெயர்களையும்  நடை உடை பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார்.   அத்துடன் கதைகளுக்கு இடையிடையே நீதி போதனைகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச் சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

-- என்று நாரண துரைக்கண்ணன் ஆரணியாரைப்  பற்றி ரசனையுடன் எழுதியிருக்கிறார்.

ஆரணியார் இப்படி  என்றால் வடுவூரார் கதையே தனி.  துப்பறியும்  பாணி கதைகளை தனிக்குத்தகைக்கே எடுத்தவர் இவர்.   தமிழ்வாணனில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர் வரை அத்தனை மர்மக்கதை மன்னர்களுக்கும் இவர் தான் முன்னோடி!  இவர் எழுதுவதற்காகவே தான் பணியாற்றிய  தாசில்தார் வேலையைத் துறந்தார்.  அந்தக்காலத்தில் 'அல்லது'  இடையிட்டு நாவல் தலைப்பை எழுதுவது பிராபல்யம் அடைந்தவர்களின் ஒரு பழக்கமாகவும் இருந்தது!

கல்யாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த  விந்தை

மரண புரத்தின்  மர்மம் அல்லது லீலாவதியின் மூடு மந்திரம்

இரு மன  மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி!

--என்று வடூவூரானின் 'அல்லது' போட்ட சில நாவல் தலைப்புகள் இன்னும் நினைவுகளில் நிழலாடுகிறது!

இவரது ''கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்' பயங்கர பிரபல நாவல்!  திகம்பரம்  (ஐயே!)  என்றால் அர்த்தம் தெரியும் தானே!  'திகம்பர சாமியார்' திரைப்படமாகவும் வந்திருக்கிறது.  எம்.என்.நம்பியார் தி.சாமியாராய் நடித்து அசத்தியிருப்பார்!  மயிலாப்பூர்  அல்லையன்ஸ் பதிப்பகத்தார்  இவரது நாவல்களின் வரிசை ஒன்றை சில ஆண்டுகள் முன்பு பதிப்பித்திருக்கிறார்கள்!  வேண்டுகிறவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்!



(தொடரும்)

                                               
                                       

Friday, February 19, 2016

அழகிய தமிழ் மொழி இது!...



லகில் மொத்தம்  2796 மொழிகள் உள்ளனவாம்   இதில் பல மொழிகள் பேச்சு மொழிகளாகவே உள்ளன.  அதாவது அவற்றிற்கு எழுத்து வடிவம் இல்லை.

பாரதத்திலோ,  499-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்த நானூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆறு மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன.  அவை:  தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஒடியா மொழி.  பொதுவாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து  கிளைத்த தமிழ்க் குடும்ப மொழிகளாதலால் மனத்தளவில் அவற்றைத் தனியாகப் பிரித்தும் பார்க்க முடியவில்லை.   இருப்பினும் கணக்குக்காக  ஆறில் நான்கு திராவிட மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன என்பது நமக்குப்  பெருமை.

உலக அளவில்  கிரேக்க மொழி, இலத்தீன், பாரசீக மொழி, அரபு மொழி, எபிரேயம் மற்றும் சீன மொழி ஆகியவை செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

எதையும் ஆங்கிலத்தில் சொன்னால் இளைஞர்களுக்கு சுலபமாகப் புரியும் காலம் இது.

செம்மொழி என்றால் classical language. என்று ஓரளவு பொருந்தக் கூடிய அர்த்தத்தில் சொல்லலாம்.

அது சரி,  classical language  என்றால்---

"To qualify as a classical tradition, a language must fit several criteria:  it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature "

---  என்று மொழியியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூறுகிறார்.

செம்மொழி என்பது ஒரு மொழியில் அமைந்திருக்கும் இலக்கிய மற்றும் கலைப்படைப்புகளைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது.  என்றோ இருந்த பழங்கதையாக இல்லாமல் அப்படியான இலக்கிய கலைப்படைப்புகள், வருங்காலத்திலும் மென்மேலும் உருவானால் தான் இந்த மொழி செம்மொழி என்பதற்கான வரலாற்று பெருமைகளையும் தக்க வைத்துக் கொண்டவர்களாவோம்.

தற்கால தமிழின் கலை இலக்கிய  கலைப்படைப்புகள்  பற்றிய பார்வை நமக்கு அவசியம்.  பண்டைய தமிழ்ப் புலவர்களின் தொடர்ச்சியாய் தொடர்ந்து வரும் இன்றைய இலக்கிய சாம்ராட்களின்  படைப்புகளைப் பற்றிய பார்வையும் நமக்கு அவசியம்.

மன்னர்களின் ஆட்சி காலங்களின் பொழுது இயல்பாகவே  கலை இலக்கியங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமை பெற்றிருந்த மன்னர்களைச் சார்ந்திருந்தன.   தமிழில் கூட மன்னரைத் தவிர்த்து  ஒரு வணிகனை பாட்டுடைத் தளைவனாக வரித்துப் பாடப்பாட்ட முதல் காப்பியம் சிலப்பதிக்காரமே. அந்த வகையில் அதுவே தமிழில் முதன் முதல் தோன்றிய குடிமக்கள் காப்பியமாகும்.

சங்க காலத்தில் தமிழின் தமிழகத்தின் தமிழ்ப்புலவர்களின் நிலையை இன்றைக்கும் தாம் தெரிந்து கொள்வதற்கு தோன்றாத் துணையாய் இருப்பது சங்க இலக்கியங்களே. அந்த வகையில் இலக்கியங்கள் காலத்தின்  கண்ணாடி என்பது எல்லா நாட்டு அறிஞ்ர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

அதே போல தற்காலத்தைப் பற்றி எதிர்காலத்துக்கு எடுத்துச் சொல்லப் போவது இன்றைய இலக்கியங்களே.  அதனால் தமிழின் இன்றைய இலக்கியங்களை இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கக் கூடியதாய் படைக்க வேண்டியது அவசியமாகிறது.  அதே நேரத்தில் செம்மொழித் தமிழின் நீட்சியாய் இன்றைய தமிழ் இலக்கியங்களும் தமிழ் மொழியின் பெருமைகளை இழக்காமல் அதே நேரத்தில் காலத்தின் அலையோட்டத்தில் அமிழ்ந்து போய் விடாமல் காலத்தைத் தாண்டி வாழும் படைப்புகளாய் ஜீவிதம் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் ஆகிறது...

இந்தக் கோணத்தில் தற்கால தமிழ் இலக்கியம் பற்றிய  புரிதல் நமக்கு அவசியம்.

வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிற சிறப்பில் தமிழின் சங்க இலக்கியத்திற்கு ஈடு இணை இல்லை.  இதே ஈடு இணை எதிர்காலத்திற்கான தற்கால படப்பிடிப்புக்கும் தேவை என்றே சங்க இலக்கியங்கள் நமக்கு பாடம் சொல்கின்றன.

இலக்கியத்தை பாட்டில் வடித்தது பண்டைய காலம்;  உரைநடையில் சொல்வது தற்காலம்.   இதை ஒழுங்கில் சொல்ல வேண்டுமானால், பண்டைய கால கதைப்பாடல்கள்,  காப்பியங்கள்  என்று நம்மால் அடையாளப் படுத்தப்பட்டன.  அன்றைய காப்பியங்கள் தாம் இன்று நாவல் என்று பெயர் கொண்டு வலம் வருகின்றன.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அன்றைய காப்பியங்கள் என்றால் கல்கியின் அலைஓசையும், ஜெயகாந்தனின்  'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகமும் .சமகால நாவல்கள்.

நம் தேசத்தில் நூற்றைம்பது  கால அன்னிய ஆங்கிலேயர் ஆட்சி எல்லாவற்றிலும் தன் தடத்தைப் பதித்திருப்பது போல இலக்கியங்களிலும் தன் தடத்தைப் பதித்திருக்கிறது.

நாம் காப்பியங்கள் என்று பெயர் சூட்டியவை போன்று அமைந்திருப்பதை அவர்கள் நாவல் என்று அழைப்பார்கள் என்று புரிந்து கொண்டோம். அவர்கள் நாவல் என்று அழைத்ததினால் அத்தகையவற்றை நாமும் நாவல் என்று அழைக்கத் தலைப்பட்டோம்.

நாவல் என்பதனை புதினம் என்று அழைப்பதினால் அது ஒன்றும் தமிழ் வடிவமாகி விடாது.    ஆங்கில நாவல்கள் போன்று உரைநடையில் நாமும் நாவல்கள் படைக்கத்  தொடங்கினோம் என்பதே உண்மை.


(தொடரும்)

Monday, February 15, 2016

அழகிய தமிழ் மொழி இது !...

'ஒரு மொழியின் வளர்ச்சிப் போக்கும் அதற்கான  உந்து சக்திகளும்'  என்று இந்தத் தொடருக்கு தலைப்பு வைக்கலாம் என்று தீர்மானம் செய்து தலைப்பாக தட்டச்சும் செய்து விட்டேன்.

ஒரு தலைப்பே அதன் உள்ளடக்கத்தைச் சொல்கிற மாதிரியான தலைப்பு அது. ஆனால் இன்றைய வாசக ஆர்வம் இதையெல்லாம் வாசிக்கக் கூடத் தயங்கும் கூட இல்லை, திரும்பியே பார்க்காது என்கிற அச்சத்தில் தலைப்பை மாற்றினேன்.   குறைந்தபட்சம் இந்த ஆள் என்ன எழுதியிருக்கிறான் என்று பதிவைத் திறந்தானும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த தலைப்பு ஏற்படுத்தும் என் கிற நினைப்பில் துணிந்தேன்!

--- ஜீவி  .


'ஷ'
=======================

இந்த வடமொழி எழுத்து 'ஷ'' என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. அது நம் கையில் சிக்கி படாதபாடு படுகிறது.  வேண்டும் மாமியார், வேண்டாத மாமியார் போல சில நேரங்களில் நமக்கு இந்த 'ஷ' வேண்டும்.  சில நேரங்களில் வேண்டாம் என்கிற போக்கும் உண்டு. பலர் இந்த 'ஷ'வை தீர்மானமாக எழுத்தில் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து விடுகின்றனர். நாளாவட்டத்தில் 'ஷ' எழுத்தே தமிழ் எழுத்து வடிவில் புழக்கத்தில் இராமல் போய்விடும் போலிருக்கிறது.

வடமொழி வெறுப்பா என்று நினைத்தால் அதுவும் இல்லை என்று தெரிகிறது. 'ஷ்'ஷைத் தவிர்ப்பவர்கள், 'ஷ்'க்கு பதில் 'ஸ்'ஸை உபயோகிப்பதால், 'ஸ்'ஸும் வடமொழி தானே என்று ஒரு பக்கம் நினைப்பு ஓடுகிறது.

(உதாரணம்:  நாகேஷ் -- நாகேஸ்,  ராஜேஷ் --ராஜேஸ்)  ,

இதில் இன்னொரு முரண்பாடான விநோதம் கூட.   பேச்சு வழக்கில் எங்கெல்லாம் 'ஸ', 'ச' வருகிறதோ அங்கெல்லாம் வெகு சரளமாக 'ஷ'வை நகர்ப்புறங்களில் பெரும்பாலோர் உபயோகப்படுத்துகின்றனர்.   ஷங்கவி, ஷங்கர், ஷக்தி, ஷம்யுக்தா  இப்ப்டி.

'ஷ'வைத் தவிரிக்கவே முடியாத சில சொற்கள் உண்டு.

உஷா, பாஷை, கோஷ்டி

தமிழ் எழுத்து  'க்'கைக் கண்டால் ஏகக் காதல் இந்த 'ஷ'வுக்கு.  என்ன கெமிஸ்ட்ரியோ தெரியலே,, அந்த 'க்'கை நெருங்கினாலே அதனுடன் ஒன்றரக் கலந்து ஈருயிர் ஓருடலாய் ஒன்றி விடுகிறது..

ரிக் ஷா -- ரிக்ஷா

சில ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது 'ஷ'வை உபயோகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாது போகும்.

ஷூ,  பாலீஷ், .மஷ்ரூம்,

இன்னொரு பக்கம் வடமொழி எழுத்துக்களை தமிழ் படுத்துகிறேன் பேர்வழி என்று அதற்கான தமிழ்ச் சொற்களே மறந்து விடும் அளவுக்கு பரவலாகிப் போயிருக்கிறது.

சில உதாரணங்கள்:                          
                                                            
இஷ்டம்' என்பதை இட்டம் என்று வலிந்து தமிழ் படுத்துவதை விட்டு, விருப்பம்' என்று அழகு தமிழில் எழுதலாம்.

வருஷம், என்பதனை வருடம் என்று எழுதாமல் ஆண்டு எனலாம்.

கஷ்டம், 'கட்டம்' ஆவதைத் தவிர்த்து துன்பமாகலாம்.

நஷ்டம், நட்டம் ஆகாமல் இழப்பு ஆகலாம்.

விஷயம் விடயம் என்றோ விதயம் என்றோ ஆகாமல்  செய்தி ஆகலாம.

பாஷை  எந்த  சிதைவும் இல்லாமல்  மொழி  ஆகலாம்.


இப்படி நிறைய அழகழகான தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வராமலேயே நாளாவட்டத்தில் மறக்கப்பட்டு விடுமோ என்று அயர்வாக இருக்கிறது.

தற்சமம், தற்பவம் என்கிற இலக்கண விதிகள் எல்லாம்  இருக்கட்டும். வடமொழி எழுத்தைத் தவிர்க்க முயற்சித்து அதற்கு தமிழ் மாற்று  எழுத்து எழுதுவது, பலநேரங்களில் நல்ல பல தமிழ்ச் சொற்களையே தவிர்த்ததாகி விடுகிறது.

அந்த வடமொழி சொல்லின் அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய தமிழ் சொற்கள் உபயோகத்திற்கு வராமலேயே மறக்கப்படுகின்றனவே என்று ஆதங்கமாக இருக்கிறது.
                                               
தமிழின் தனிச் செல்வம்,  ழ
=======================                                              

வடமொழி 'ஷ'வைப் போலவேயான நிலை 'ழ'க்கு நேராமல் இருக்க வேண்டும்.  'ழ'வை உச்சரிப்பதே பலருக்கு சோதனையாக இருக்கிறது. தொலைக்காட்சி போன்ற மக்கள் நேசிக்கும் ஊடகங்களில் கூட 'ழ'வைச் சரியாக மொழிய வேண்டும் என்றோ அதற்கான பயிற்சியும் பழக்கமும் பெறவேண்டும் என்பதிலோ அக்கறையோ ஆர்வமோ கொள்ளாத நிலையில் இருக்கிறது.  'ழ'  தான் இப்படி என்றால் சமீப  காலங்களில் 'ள'வும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

தமிழுக்கு சிறப்பு சேர்ப்பது 'ழ' எழுத்து.  ஆங்கிலத்தில் ''வை எழுதும் பொழுது,  பெரும்பாலும் ஆங்கில 'L' எழுத்தையே உபயோகிக்கிறோம். பத்திரிகைகளில் கூட  Tamil Weekly, Tamil Daily தான்.   தமிழை TAMIZH என்று எழுதுவோர் இல்லை.



புதுச்சொற்கள்
==============

காலத்தின் தேவைகளூக்கேற்ப எல்லா மொழிகளிலும் புதுச் சொற்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.  புதியன புழக்கத்திற்கு வருவதற்கு பழையன கழிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அடுத்த நாளுக்கு இன்றைய நாள் பழசு;  இன்றைய நாளுக்கு நேற்றைய நாள் பழசு என்பார்கள்.  புதுச் சொற்கள் வருகையைத் தவிர்க்க முடியாது.  அது காலத்தின் கட்டாயம்.  தலைக்கவசம்-- தவிர்க்க முடியுமா, நம்மால்?..

இன்னொன்று.  எந்த மொழியின் வளர்ச்சியும் அது எந்த அளவு வெகுதிரள் மக்களின் நாவினில் எழுத்தில் புழக்கத்தில் இருக்கிறது என்கிற தகுதி கொண்டே அந்தந்த சொற்களின் ஆயுசு காலமும் தீர்மானிக்கப்படும்.

மொழி ஒன்றும் கண்ணாடி சட்டத்திற்குள் அடைத்து அழகு பார்ப்பதல்ல. அழ்கு பார்ப்பதற்கும் அல்ல. அது அந்த மொழி பேசும் மக்களின் உபயோகத்தில் நீடித்து வாழ வேண்டும்.  எந்த மொழிக்கும் உயிர் கொடுத்து வாழையடி வாழையாக வளர்ப்பவர்கள் பண்டிதர்கள் அல்ல, அந்த மொழி பேசும் எளிய வெகுதிரள் மக்களே.

எழுத்தாளர் சுஜாதா சர்வசாதாரணமாக தன் எழுத்தில்  நிறைய புதுச் சொற்களை வெள்ளோட்டமிட்டுப் பார்த்திருக்கிறார்.  அவர் எழுதிய 'கிளிக்கினான்' என்கிற சொல் அவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும். ஒரு வினையின் காரணமாக அந்த வினைக்கான சொல் உருவாகலாம். சுஜாதா ஒரு வினையின் ஒலியை வைத்தே சொல்லை உருவாக்கியிருக்கிறார்.

நேற்று தினமலரில் 'அலம்பல்' என்ற சொல்லை வாசித்து விட்டு இதற்கு வேர்ச்சொல் என்னவாக இருக்கும் என்கிற யோசனையில் ஆழ்ந்தேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இன்று தொலைக்காட்சியில் 'கலாய்த்தான்' என்று கேட்ட சொல் எப்படி உருவாக்கம் பெற்றிருக்கும் என்று யோசனையாயிற்று.

இப்படி நிறைய சொற்கள்.  இதை வாசிக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புழக்கத்திற்கு வந்திருக்கும் புதுச்சொற்களைச் சொல்லுங்கள்.  அந்த சொல் எப்படியாக உருப்பெற்றிருக்கும் என்கிற கண்டுபிடிப்பையும் சேர்த்துச் சொல்வீர்கள் என்றால் நம்மால் முடிந்தது,  பின்னூட்டங்களில் கைத்தட்டலாம்.


(தொடரும்)


Friday, February 12, 2016

இரு பதிவர்களிடம் ஒரே மாதிரியான கேள்வி

திவுலகில் இது பயணப் பதிவுகள் காலம் போலிருக்கு.

பயணம் தொடர்பான தொடர் பதிவுகள், தனிப்பட்டு தாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய குறிப்புகள் என்று பதிவர்கள் தூள் கிளப்புகிறார்கள்.

அப்படியான பயணப் பதிவுக்ளை வாசித்துக் கொண்டு வரும் பொழுது ஒரு எண்ணம் ஏற்பட்டது.  கிட்டதட்ட ஒரே மாதிரியான கேள்வியை இரு பதிவர்களிடம் கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்று அறிய ஆசை ஏற்பட்டது.

அந்த இருவர் யார் என்றால் இவர்களே:

1,  திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

2. ஜீஎம்பீ என்று செல்லமாக அழைக்கப்படும் திரு. ஜி. எம். பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்.

இந்த இருவரையும் இதுவரை நான் நேரில் சந்தித்ததில்லை என்றாலும் அது எனக்குப்  பெரிய குறையாகப் பட்டதில்லை.  நேரில் சந்தித்தவர்களை விட அதிக நெருக்கமும் உரிமையும் எடுத்துக் கொண்டு நிறைய இவர்களிடம் பதிவு சம்பந்தமாகக் கேட்டதுண்டு.  இந்த இருவரிடமும் எனக்கு மதிப்பும் மரியாதையும் நிரம்பவே உண்டு.  நான் கேள்வி  கேட்க  நினைத்த இந்த இரண்டு பேருமே சுற்றுலா மாதிரியான பயணம் மேற்கொண்டு அதுபற்றி இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பவர்கள்.  ஆனால் இந்த இருவர் பயணங்களுக்கும் நுண்ணிய வித்தியாசங்கள் உண்டு.

கீதா சாம்பசிவம் அவர்கள் ஷேத்திராடனம் மாதிரி புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் நோக்கத்துடன் இந்தப்  பயணத்தை மேற்கொண்டவர்.  ஆனால் ஜிஎம்பீ ஐயா அப்படியில்லை.  ஒரு  சந்தோஷ சுற்றுலா மாதிரி குடும்பத்துடன் நண்பர்களுடன் கிளம்பியவர் தான்.  அவர் பயணத்தில் கோயில்கள் குறுக்கிட்டதா, இல்லை அந்தந்த பிரதேசத்துக் கோயில்களையும் உள்ளடக்குகிற மாதிரி பயணத்திட்டம் வகுக்கப்பட்டதா, தெரியாது. இவரும் பெரும்பாலும் கோயில் தரிசனங்கள், அந்தந்த சூழ்நிலைகளில் த்ன் உணர்வில் பதிந்தவை, பிரயாணத்  தகவல்கள் என்று தன் பயணக்கட்டுரையை எழுதி வருகிறார்.

பதிவுலகில்  பிரபலமானவர்கள் எனினும் அவர்கள் இருவர் பற்றியும்  என் பார்வையில்  சிறு குறிப்பு கொடுக்க வேண்டியது இந்தப் பதிவுக்கு அவசியமாகிறது.

கீதா சாம்பசிவம் ஏராளமாக எழுதிக் குவித்தவர்.  எதையும் தீர்மானமாக எழுதுவார். தினமும் ஒரு பதிவு போட்டு பதிவுலகோடு சம்பந்தம் கொள்ளவில்லை என்றால் இவருக்கு அந்த நாள் வேஸ்ட்டாகப் போய்விடும் என்று நினைக்கும் அளவுக்கு  நிறைய எழுதுபவர்.
என்றாவது பதிவு போடவில்லை என்றால் அதைத் தெரிவிக்கும் முகமாக அதற்கும் ஒரு பதிவு போட்டுச் சொல்லும் பாசம் மிக்கவர்..  என்னன்ன மனசில் தோன்றுகிறதோ அதை அப்படியே சரளமாக எழுதும்  எழுத்து நடைக்கு சொந்தக்காரர்.  சமீபத்தில் தான் மேற்கொண்ட பயணத்தில் எதிர்ப்படும் தலங்களைப் பற்றிய குறிப்புகளாக இதுவரை இந்த  இடங்களைப் பார்த்திராதவர்களுக்கு அறிமுகப்படுத்துகிற மாதிரி நிறைய தகவல்களைக் கொடுத்து எழுதி வருகிறார்.

ஜிஎம்பீ அவர்கள் எழுத்தே அலாதி.  இந்த 77 வயது பெரியவர் எழுத்தை வெற்று பொழுது போக்குக்காக என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எழுதுபவர். வாசிக்கறவர் மனசில் தைக்கிற மாதிரி சில புதுமைக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே சமூக நோக்கோடு இவர் எழுதுவதாக எனது  புரிதல்.  எழுதுவதற்கான நோக்கம் இவருக்கு முக்கியமாகிப் போவதால் தான் எழுதியது பற்றி மற்றவர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த பிரயாசை கொள்பவர்.   எழுதியது சரியான  விதத்தில் போய்ச் சேர்ந்ததா என்று அக்கறை  கொள்பவரும் இவரே. பின்னூட்டங்களில் சரியான  பிரதிபலிப்பு ஏற்படாத பொழுதும் சலிப்பு கொள்ளாமல் இவர் ஆதர்சமாகப் போற்றும் எண்ணங்களை மீண்டும் மீண்டும் பதிபவ்ர்.  இவரது read between the lines-- க்காகவே இவர் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவன் நான்.

பிரயாணங்கள் பற்றி அதிகப்  பதிவுகள் பதியபடுகிற சமீப போக்கில் தங்கள் எழுத்தில் வேறுபட்டாலும் இந்த இருவரும் ஒரு விதத்தில் ஒரு விஷயத்தில் ஒத்துப்  போயிருந்ததைப் பார்த்தேன்.

கோயில் தரிசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி அந்தந்த நேரங்களில் கொண்ட உணவிற்கு,  உணவு விடுதிகளூக்கு இருவருமே முக்கியத்துவம் கொடுத்திருந்தனர்.  அதனால் அவர்கள் ஒன்றுபட்ட இந்த விஷயத்தில் அவர்களிருவரிடமும் அது  குறித்து கேள்விகள்  கேட்க வேண்டும் என்று தோன்றியது.

இதோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்:


கீதா சாம்பசிவம் அவர்களின்---

புவனேஸ்வரில் இட்லி, தோசையுடன் இரவு உணவு!   பதிவில்----
http://sivamgss.blogspot.in/2016/02/blog-post_10.html

ஜீவி

இது என்ன தலைப்பு?.. புவனேஸ்வரில் நீங்கள் இட்லி தோசையுடன் ஊத்தப்பமும் சேர்த்து சாப்பிட்டதா முக்கியம்

கீதா சாம்பசிவம்

ஆமாம், ஜீவி சார்! நிச்சயமா! இதுவும் முக்கியம் தான்! அதே போல் ஜவுளி பற்றி எழுதியதும் முக்கியமே! பலருக்கும் சாப்பாடு ஒரு பிரச்னை என்பது என் போன்ற வயிற்றுக்கோளாறு நிரந்தரமாக உள்ளவர்களுக்கு நன்கு புரியும். நல்ல சுத்தமான, சுவையான உணவு எங்கே கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லதே! மேலும் புவனேஸ்வரில் லிங்கராஜா கோயில் பார்த்ததோடு எங்களோட க்ஷேத்திராடனம் முடிஞ்சுது! தங்கும் இடம், நல்ல சாப்பாடு போன்றவை ஒழுங்காய் இருந்தால் தான் எந்த ஊருக்குப் போனாலும் நிம்மதியாகச் சுற்றிப் பார்க்க முடியும்.


ஓரளவு நான் எதிர்பார்த்தமாதிரியே கீதாம்மா பதில் சொல்லியிருக்கிறார்கள்.


அடுத்து,  ஜிஎம்பீ ஐயாவின்

தொடர் பயணம் -நாகர் கோவில் -1    பதிவில்

http://gmbat1649.blogspot.in/2016/02/1_11.html

ஜீவி

திருச்செந்தூர் பதிவிலாவது ஹோட்டல் சமாசாரங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு தங்கினீர்கள், என்ன சாப்பிட்டீர்கள் என்பதா முக்கியம்?

இந்த மாதிரிப் பயணங்களில் நமக்கேற்படும் அனுபவங்களில் புதுசாக நாம் தெரிந்து கொண்டதைத் தெரியப்படுத்துவதற்குத் தானே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்?..


ஜிஎம்பீ



@ ஜீவி
இப்பதிவில் தங்கும் இடம் பற்றியும் அங்கு காலை உணவு உண்டது பற்றியுமே சொல்லி இருக்கிறேன் மற்றவைகள் பற்றியே அதிகம் எழுதி இருக்கிறேன் பதிவுகள் முடியும் நேரத்துக்கு வந்து விட்டன. அடுத்து பயணம் மேற்கொண்டு எழுதும்போதுதங்குமிடம் உணவு பற்றிச் சொல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன் வருகைக்கும் குறிப்பிட்டுக் காட்டொஇயதற்கும் நன்றி.


வாசகர்களோடு வாசகராக ஒத்த ரசனையில் பயணிப்பது ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..  என்று தெரிகிறது.


மூத்த பதிவர்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த  நன்றி.


Related Posts with Thumbnails