மின் நூல்

Tuesday, October 21, 2014

மறக்க முடியாத சில குறுங்கவிதைகள்


ரபுக் கவிதைகள் வலம் வந்த காலத்தில் தான் புத்தம் புது முயற்சிகளாய் ஏழெட்டு வரிகளில் அடங்கியதாய் உத்தியை முதன்மையாக் கொண்டு எழுதப்பட்ட கவிதை சாயலுள்ள வார்த்தைக் கோர்வைகள் கவிதைளாய் தோற்றம்  கொண்டன.

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் 'புல்லின் இலைகள்' என்னும் கவிதைத் தொகுப்பின் பாதிப்பில் பல மொழிகளில் இம்மாதிரியான வசனக் கவிதைகளின் தாக்கம் துளிர் விட்டன.  மஹாகவி பாரதியாரும் வால்ட் விட்மனின் இந்த வசனக் கவிதைகளைப் (free verse poems)  பற்றி  தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழ்க் கவிதை உலகிற்கு இவ்வகையான வசனக் கவிதை புதுவரவாகையால் அந்த நேரத்து அவை புதுக்கவிதைகள் என்று அழைக்கப்பட்டன.    கவிதைகள் யாப்பது என்பது பண்டிதர்களின் வசமாய் இருந்த காலத்தில் அவர்களிடமிருந்து பறிக்கப் பட்ட ஒரு செயலே போன்று தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றோர் எல்லாம் கவிதை எழுதலாம் என்கிற ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தமையால் வெகு எளிதில் தன் வளர்ச்சியைத் தானே நிர்ணயித்து கொண்ட மாதிரி  இப் புதுகவிதைகள் இயல்பாகவே வெகுஜன பிரபலம்  கொண்டன.  தமிழ் படித்த எல்லோருமே இப்படியான கவிதைகள் எழுத ஆசைப்பட்ட காலம் அது.

சி.சு. செல்லப்பா தனது 'எழுத்து' பத்திரிகையில் புதுக்கவிதைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததோடு மட்டுமல்லாது, 'புதுக்குரல்கள்' என்று ஒரு தொகுப்பை வெளியிட்டு புத்தக மூட்டைகளை சொந்தத் தோளில் சுமந்து பள்ளிகள், கல்லூரிகள் என்று அலைந்து அவற்றைக் கல்விச்சாலைகளில் அறிமுகப்படுத்தியவர்.  புதுக்கவிதைகளுக்கென்று  முதன் முதல் வெளிவந்த தொகுப்பு நூல் செல்லப்பாவின் 'புதுக்குரல்கள்' தொகுப்பு தான். தமிழில் புதுக்கவிதைக்கு மணிக்கொடிக் காலம், எழுத்துக் காலம், வானம்பாடிக் காலம் என்று அந்தந்த காலத்தை ஒட்டிய வளர்ச்சிப் போக்கு உண்டு.   'கசடதபற',  'தீபம்', 'சரஸ்வதி'. 'ழ', 'கலாமோகினி', 'கணையாழி', 'ஞானரதம்', 'நடை', 'தாமரை','கிராம ஊழியன்',
'ஐ',  'சூறாவளி' போன்ற இதழ்கள் புதுகவிதைகளின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களித்திருக்கின்றன.


கலை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காலகட்ட இயக்கமும் தனக்கு முற்பட்ட காலத்தின் இயக்க ரீதியான வழக்கு முறைக்கு எதிர் வினையாகத் தோற்றம் கொடுப்பதை மாற்றத்தின் செயலாக அந்தந்த இயக்கத் தொடர்ச்சியின் ஊடாக வழிநெடுக நாம் பார்க்கலாம்.  இந்த மாற்றத்தை  ஒரு காலத்து செயல்பாட்டிலிருந்து இன்னொரு காலக்கட்ட வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்வதாகக் கொள்ளலாம்.  இதையே 'கடந்து  செல்வதாக' சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.  ஒரு காலத்தின்   வழக்கு முறைகளைக் கடக்கும் இந்தக்கடத்தல் தவிர்க்கமுடியாத ஒன்றாக ஒவ்வொரு இயக்கப் போக்கிலும் தன்னாலே நிகழ்கிறது.

இதற்கு தனிநபர்கள்  காரணமல்ல.  காலத்தின் மாற்றங்களில் அதற்கேற்பவான வழிமுறைகளும் மாற்றம் கொண்டு அந்தகைய மாற்றங்ளுக்கு உபயோகப்படுவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறது என்றே நாம் கொள்ளுதல் தகும்.


தமிழில் புதுக்கவிதைக்கு பாரதி தான்  முன்னோடியாக அமைந்தார் என்றாலும் அவருக்குப் பிறகு புதுக்கவிதையுலகை வார்த்தெடுத்த பெருமை

பிச்சமூர்த்தி  அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது.  சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பத்திரிகை, பிற்காலத்தில் கோவையில் நிலைகொண்ட  'வானம்பாடி' இயக்கம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சிக்கேற்ப சீராட்டல்கள் நடந்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்திலும் கவிதை எனப்படுவதும் இதுவே என்கிற செல்வாக்கும் கிடைத்திருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த சூழ்நிலையில் என் நினைவுகளில் மறக்கவே முடியாமல் பதிந்து போய் விட்ட சில கவிதைகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதின் விளைவு இப்படி ஒரு பதிவாக மலர்ந்திருக்கிறது.



ஆனை வந்தது முதலில்
அப்புறம் கலைந்து போனது
குதிரை மீதில் ஒருவன்
கொஞ்ச நேரம் போனான்                                  
பாட்டன்  புரண்டு மல்லாந்தான்
பாளை வெடிச்சு மரமாச்சு
அலையாய் சுருண்டது கொஞ்சம்
மணலாய் இறைந்தது கொஞ்சம்
கணத்தில் மாறிடும் மேகம்
உண்மையில் எது உன் ரூபம்?

                                                                -- மாலன்
                                                                                              


ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் தான் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நானும் கேட்கவில்லை
அவரும் சொல்லவில்லை.

                                                          -- நகுலன்




திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ சொன்னான்
களவு போகாமல் கையருகே வை

                                                           --  ஞானக்கூத்தன்



எங்கிருந்து வருகிறது
இந்த நதி?
    மலைகளின்
   மெளனம் உடைந்தா?
முகில்களின்
ஆடை கிழிந்தா?
வ்னங்கள் பேசிய
இரகசியங்கள் கசிந்தா?

என்னிலிருந்து

என் அந்தரங்களின்
ஊற்றுக் கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் இரத்த குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு
அங்கிருந்து வருகிறது
இந்த நதி

                                                                         -  சிற்பி



இலக்கண செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை

                                              -- மு. மேத்தா




முட்டி முட்டி பால்குடிக்கின்றன
நீளக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

                                                         -- பாலா

மழைக்குப் பயந்து
அறைக்குள் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்

                                        -- பாலகுமாரன்





பின்னாலும் போகவில்லை
முன்னாலும் போகவில்லை
நடுக்கிணற்றில் நிகழ்காலம்

                                                          
                                                                                                                              
யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி

                                                              --  சி. மணி




(பிறிதொரு போழ்து இன்னும் நிறைய பகிர்ந்து  கொள்ளலாம்..)



அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!




Related Posts with Thumbnails