மின் நூல்

Monday, December 30, 2019

மனம் உயிர் உடல்

26.   அன்னை  பாலா சரணம்


ந்தத் தியானத்திற்கு மிக முக்கியமானது இறைவன் ஒருவனே எல்லா சக்திகளையும் கொண்ட ஒரே தலைவன் என்ற உறுதியான எண்ணம் நம்  சிந்தனையில் கெட்டிப்பட்டு இருக்க வேண்டும்.    அடுத்தது நாம் நம்  சொந்த  நன்மைக்காக பிறருக்கு பாதிப்பில்லாத எந்த கோரிக்கை வைத்தாலும் இறைவன் கருணையால் அது நிறைவேறும் என்ற உறுதியான எண்ணம் நமக்கிருக்க வேண்டும்.  அடுத்தது அப்படி வேண்டிப் பெற்ற எந்த வரத்தையும் கிடைத்தற்கரிய விஷயம் அவன்  அருளால் நமக்குக் கிடைத்திருக்கிறது என்ற கிடைத்த வரத்தின் அருமை நம் மனசில் பதிந்திருக்க வேண்டும்.    பெற்ற வரத்தை மீறாமலிக்கிருக்க வேண்டும்.  இதெல்லாம் நாம் நம் நன்மைக்காகக் கொள்ளும்  உறுதிப்பாடுகள்.

அந்நாட்களில்  நீதி மன்றங்களில்  கூண்டேறி சாட்சியம் அளிக்கும் முன்  கையில் பகவத்கீதை நூலைக் கொடுத்து  தான் சொல்வதெல்லாம்  உண்மை என்று சாட்சியிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வார்கள்.  அந்நாளைய  சில திரைப்படங்களிலும் இப்படியான  காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பெற்ற நூலாக இந்து மக்களுக்கு பகவத்கீதை இருந்தது.   இன்றும் பதவிப் பிரமாணங்கள் ஏற்கும் பொழுது கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்கும் சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருக்கின்றன.

இந்த தியானத்திலும்  பெறும் வரங்களுக்கான செல்வாக்கு மனத்தில் பதிய வேண்டும்,  அவற்றை மீறாதிருக்கும் படியான கட்டுப்பாட்டு உணர்வு நம்மில் இருக்க வேண்டும் என்பதற்காக  இதையெல்லாம் சொல்ல நேர்ந்தது.

நம்மை பீடிக்கும் சில நோய்களுக்கு நமது பழக்க வழக்கங்களே காரணமாக இருக்கின்றன. அப்படியான பழக்க வழக்கத்திலிருந்து  விலகி மீள வேண்டும் என்பதற்கு இந்த தியானம் மிகச் சிறந்த பயிற்சி.   தானே வரும் சிக்கல்களை தவிர நமக்கு நாமே  வர வழைத்துக் கொள்ளும்  சிக்கல்கள் எளிமையான வாழ்க்கையை இறுகச் செய்கின்றன.   இப்படியான சிக்கல்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இந்த தியானம் நிச்சயம் உதவும்.

இந்த தியானத்தைக் கைக்கொள்வதற்கு இறை பக்தி அவசியம்.  இறை உருவை மனத்தில் இருத்தி வேண்டி 'இந்த மாதிரியான தீய குணத்திலிருந்து நான் மீள வேண்டும்' என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.  வேண்டுதல் மனசார, கள்ளம் கபடில்லாமல் இருக்கும் பொழுது வேண்டாத சில குணங்கள், அவற்றால் ஏற்படும் சிக்கல்களின் விலகலை நாமே உணர ஆரம்பிப்போம்.
உடல் நலனைப் பாதிக்கும்  குணங்கள்  மறுபடியும் நம்மை பீடிக்காமல் இருப்பது நம் உறுதியின் பாற்பட்டது.   அந்த உறுதிக்குத் தான் இறை வேண்டல் தேவையாக இருக்கிறது.   வேண்டுவோர் வேண்டல்  சாத்தியமாக ஆழ்ந்த இறைபக்தி தேவையாக இருக்கிறது.  அந்த பக்தி தான் வேண்டலை மனசில் வினைபுரிந்து சாத்தியமாக்குகிறது.  இப்படியான  ஒன்றுக்கு  ஒன்றான தொடர்பு பூர்த்தியாகும் பொழுது  நம் வேண்டலுக்கான பலன்  கிடைக்கும் என்பது  உறுதி.

'இப்படிச் செய்; அப்படிச் செய்' என்று யோசனை சொல்வதற்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள்.  யோசனைகள் சொல்வதோடு முடிந்து விடக் கூடாது.  அதன்படி நடப்பது முக்கியம்.  மகாத்மா காந்தியடிகள் தன்னளவில் எந்த அகச்சோதனைகளையும் பரிசீலித்துப்  பார்த்து  விட்டுத் தான் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைத்தவர் என்பதனை நாம் அறிவோம்.  எந்த சோதனையிலும் ஆட்பட்டு அனுபவித்து மீண்டு பலன்  பெற்று அதை அனுபவிப்பதே அனுபவ பூர்வமான சந்தோஷத்தை அளிக்கும்.

இது ஒரு Process.   தியானத்திற்கு  உட்கார ஆரம்பித்ததிலிருந்து  பலன் கிடைக்கும் வரையான பல கட்ட உள்ளுணர்வுகள் முட்டி மோதி வேண்டிய பலன் கிடைப்பதற்கான படிப்படியான செயலாக்க உந்துதல்கள் நம்மில் நடைபெறும்.  அதைப் பற்றி விவரிப்பதற்கு முன் சென்ற பகுதியில்  எல்லோருக்கும் பொதுவான ஒரு வேண்டுதல் கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  பலருக்கு  இந்தக் கவிதை பற்றித் தெரிந்திருந்திருக்கும்.  இந்த தியானத்திற்கு சுலபமாக மனசில் பதிகிற இந்த மாதிரி கவிதைகள் அவசியம் என்பதினால்  அதை இங்குக் குறிப்பிடுகிறேன்.  இந்தக் கவிதையை யாத்தவர் நெமிலி வெங்கட் கிரி என்ற பக்தர்.  உள்ளத்து உணர்வு பீரிடலாய் அன்னை பாலா திரிபுர சுந்தரியிடம் வேண்டிக் கொள்கிற அற்புத பிரவாகமாக ஒரு கவிதை தொகுப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்..  இறைவிக்கு 
தீபாராதனை செய்யும் பொழுது சொல்ல வேண்டிய அருட் கவிதையாக இந்தக் கவிதை அவர் உள்ளத்தில் மலர்ந்திருக்கிறது.  அந்தக் கவிதை  நாம் தியானம் செய்யும் பொழுது மனத்தில் விளக்கேற்றி வைத்து அன்னையின் அருள் வேண்ட துணையாயிருக்கும் என்பதினால் அதை இகு குறிப்பிடுகிறேன்.  கவிஞருக்கு நன்றி.

வழிபடுவதற்கு பலவித  ரூபங்களில் அம்பிகை நமக்கு  அருள்  பாலிக்கிறாள்.  ஒன்பது வயது குழந்தையாக,  பாலாவாக அம்பிகை வழிபாடு வழி வழி வந்த பழக்கம்.   சித்தர்கள் அம்பாளை  'வாலை' என்றே அழைப்பர்.  அகத்தியர், போகர், திருமூலர், கொங்கணார், கருவூரார்  என பல சித்தர்களும் வணங்கிய அன்னை பாலாவை வணங்கினால் உள்ளத்தில் நெடுநாட்களாக உறைந்து போயிருக்கிற வேண்டாத  சிந்தனைகள் பொசுங்கிப் போகும்.   வாழ்வில் வளம்,  குடும்பச் சிறப்பு, கல்வி கேள்விகளில் ஞானம்,  திருமண பாக்யம் போன்ற  வாழ்க்கைக்கான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை பாலா என்ற நம்பிக்கை பலருக்கு  உண்டு.   வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஊரான நெமிலியில் சத்திரம் தெருவில் அமைந்துள்ளது நெமிலி பாலா பீடம்.

இதோ அந்த அருட்  கவிதை:

அருள்மழை  பொழியும்
அன்னை பாலா
திரிபுர சுந்தரி சரணம்  -  உன்
அருமையை உணர்ந்து
பணிந்திடும் பக்தர்
கனவினில் நீயும் வரணும்
அன்னை பாலா சரணம்  -- நின்
அன்பினை எனக்குத் தரணும்            (அன்னை)

ஓரு முக விளக்கை
ஒற்றுமையுடனே
ஏற்றியே வைத்தோம் பாலா  -- உன்
ஒளி சிந்தும் முகத்தில்
ஒரு  சிறு புன்னகை
நீயும் காட்டிடு  பாலா!                       (அன்னை)

இருமுக விளக்கை
இங்குள்ள அனைவரும்
ஏற்றியே வைத்தோம் பாலா  -- எம்
இன்னல்கள் தீர
இன்பங்கள் சேர
அன்புடன் காத்திடு  பாலா!                (அன்னை)

மும்முக விளக்கை
முழு மனத்துடனே
ஏற்றியே வைத்தோம்  பாலா  -- எம்
முதலும்  முடிவும்
நீயே அன்றி
வேறோர் உளரோ பாலா                     (அன்னை)

நான்முக விளக்கை
நாதம் முழங்கிட
ஏற்றியே வைத்தோம்  பாலா  --  எம்                        
நாவினில்  என்றும்
உந்தன் பெயரே
நடமிட வேண்டும்  பாலா!  --  எம்
நாவினில் என்றும்
உந்தன் பெயரே               
நடமிட வேண்டும்  பாலா                  (அன்னை)

ஐம்முக விளக்கை
ஐம்புலனடக்கி
ஏற்றியே  வைத்தோம்  பாலா  --   வீண்
ஐயம் போக்கிடு
விரயத்தை நீக்கிடு
விந்தைகள்  புரிந்திடு  பாலா!            (அன்னை)

இப்புவி ஒளிர
இருபத்தியேழு
விளக்கினை ஏற்றினோம்  பாலா!  --  நீ
இருப்பது சேயாய்
காப்பது  தாயாய்
கவலைகள்  இல்லையே  பாலா      (அன்னை)

ஓரு முறை  இரு முறை
என மொத்தம் ஐம்முறை
துர்கா  தீபங்கள்  பாலா    - எம்
துயரங்கள் போக
துன்பங்கள்  போக
துணையென்றும் நீயே  பாலா!         (அன்னை)

பூரண விளக்கை
பரிபூரணமாய்
நாங்கள் அளித்தோம்   பாலா!   - உன்
பூஜைகள் காண
ஒருவித சிலிர்ப்பு
உள்ளத்தில் தோன்றுதே  பாலா        (அன்னை)

பூஜையின்  நிறைவாய்
பூவையின் நினைவாய்
தீபாராதனை  பாலா  --  இப்
பூவுலகெல்லாம்
அமைதி மலர்ந்திட
அருள் புரிவாயே  பாலா!       
அன்னை பாலா சரணம்  -- நின்
அன்பினை எனக்குத் தரணும்..             


-- நன்றி கவிஞர் நெமிலி வெங்கட்கிரிதர்

Wednesday, December 25, 2019

மனம் உயிர் உடல்


25.   அன்பே சிவம்

திகாலையும்   இரவு தூங்கப் போவதற்கு முந்தைய காலமும் இந்த தியானத்திற்கு உகந்த நேரங்கள். 

அதிகாலை என்றால்  காலைக் கடன்கள் முடித்து பல் விளக்கி முகம் துடைத்து  சுத்தமாக இருக்க வேண்டும்.  குளியலை முடித்து விடுவது என்பது அவரவர் விருப்பம் என்றாலும் அதுவே உத்தமம்.  இறுக்கிப் பிடித்த மாதிரி இல்லாமல் தளர்த்தியான ஆடைகள் அணிவது அவசியம்.   பூஜைக்கு  உட்காருகிற மாதிரியான கெடுபிடிகள் எல்லாம் தேவையில்லை.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனம் இலேசாக இருந்தால் போதும்.   சொல்லப் போனால்  மனம் இலேசாக இருக்கும்  மற்றும் உற்சாகமாக இருக்கும் நேரங்களில் எல்லாம் இந்த தியானத்தை கைக்கொள்ளலாம்.   சந்தனக்  கீற்றோ,  வீபூதியையோ அல்லது அவரவர் வழக்கப்படி எதுவோ அதை நெற்றியில்  தரித்துக் கொள்ளலாம்.  அகவுடல் பயணத்திற்கு வசதியாக இயல்பாக அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இமைகளை மூடிக் கொள்ளலாம். 
உங்களுக்கு மிகவும் பிடித்த இறை உருவை  மனதில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து  அதில் லயிப்பதற்கு மனதை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீக்கமற நிறைந்திருக்கும் வெட்ட வெளியே இறைவன்.   வெட்ட வெளிக்கு உருவம்  கொடுக்க முடியாமையாலும் உள் மனத்தில் மனப்படமாகத் தான் பதிய முடியும் என்பதினால் நீங்கள் மிகவும் நேசிக்கும் இறைவன் உருவை அல்லது குலதெய்வ உருவை உங்கள் மனசில் ஆசனமிட்டு அமரச் செய்யுங்கள்.

இயல்பான நிலையில் மனம்  இருக்கட்டும். 

ஆரம்பத்தில் தரையில் அமர்ந்து தியானத்தைப் பழகிக் கொண்டால்,  போகப் போக  எதில் உட்கார்ந்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.  தரையில் என்றால் வெறும் தரையில் இல்லாமல் ஒரு தடுக்கு அல்லது ரொம்ப உயரமில்லாத பலகையில் அமரலாம்.  எல்லாவிதங்களிலும்  உடல் ஈஸியாக தளர்த்தியாக  அமர்ந்திருப்பதே சிரமம் கொடுக்காதவாறு செளகரியமாக இருப்பதாக இருக்கட்டும்.  தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது கால் வலி, கை வலி என்று உடல் அசெளகரியங்கள்.  செய்யும் தியானத்திற்கு குறுக்கே வராமல் இருக்க வேண்டும் என்பதற்கு தான் இத்தனை ஏற்பாடுகளும்.  அதிகாலை என்றால் நீர் அருந்தி விடுங்கள்.  இரவு காலம் என்றால் இரவு
உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் நேரமாக இருக்கட்டும்.

மூச்சு அதன் இயல்பான போக்கிலேயே இருக்கட்டும்.   இந்தத்  தியானம் மூச்சுப் பயிற்சி இல்லை என்பது தெளிவாக மனசில் படியட்டும்.  நீங்கள் தியானத்தில் ஆழ்வது என்பது வழக்கமாக  ஆழ்ந்த யோசனையில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அப்படி இருப்பது தான்.   விசேஷமான எந்த அசெளகரியங்களையும் கைக்கொள்ளாமல் வெகு சுலபமாக மனசையும் உடலையும் வைத்துக் கொள்ளுங்கள்.  இது முக்கியம்.                                         

இறை நம்பிக்கை உள்ளவர்கள்  இறைவன் என்ற தலைவன் பற்றி என்னவெல்லாம் உங்கள் மனசில் பதிந்திருக்கிறது என்பதனை மனசில் ஓட விடுங்கள்.  புரியவில்லையா?..  புரிகிற மாதிரி சொல்கிறேன்.  இறைவன் என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு  ஆற்றப் போகிற மாதிரி அல்லது இறைவன் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிற மாதிரி நினைத்துக் கொண்டால் என்னவெல்லாம் கருத்துக்கள் உங்கள் மனசில் அலை  மோதுமோ அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

எண்வகை குணங்கள் கொண்டவனாக இறைவனை பக்தியாளர்கள் குறிப்பிடுவார்கள்.   எளிமையாக நாம் எப்படியெல்லாம் இறைவனை உருவகப்படுத்தியிருக்கிறோம் என்று  நினைத்துப் பார்க்கலாம்.

போன வாரம் என் வீட்டிற்கு  தன் மகனுடன் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அந்தச் சிறுவன் எட்டாம் வகுப்பில் பயில்வதாக என்னிடம் சொன்னான்.  அந்தப் பையனிடம் இறைவனைப் பற்றி உனக்குத்  தெரிந்தவையெல்லாம் சொல்லு என்று நான் கேட்டதற்கு  அந்தச் சிறுவன் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்.

இறைவன் எல்லா உயிர்களையும் படைத்தவன்.

அதனால் அவனே எல்லா உயிர்களையும் காப்பவன்.

உயிர்களிடத்து கருணை கொண்டவன்.

இறைவன் தீமை செய்பவர்களைத் தண்டிப்பவன்.

அன்பே சிவம் என்பார்கள்,  அதனால் இறைவன்  சகல உயிர்களிடத்தும் அன்பானவன்.

அவனே நம் துன்பங்களைத் தீர்ப்பவன்.

நல்லது செய்பவர்களுக்கு நல்லது செய்பவன்.  அவர்களை ரட்சிப்பவன்.

--- என்று தனக்குத் தெரிந்தவைகளை அந்தச் சிறுவன் சொன்னதும் நான்
அசந்து  போனேன்.

எட்டாவது படிக்கும் சிறுவன்.  பதினாங்கு வயது  இருக்குமா?..  அந்த சிறு குழந்தையின் மனசில் இறைவன் எவ்வளவு அழகாகப் படிந்திருக்கிறான் என்று நெக்குருகிப் போனேன்.

எந்தக் கோயிலிலாவது சந்திக்கும் எவரையாவது  பார்த்து, "இறைவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று ஒரு கேள்வியைப் போட்டால் இந்தளவுக்குச் சொல்வாரா என்பது சந்தேகமே.. சொல்லப்போனால் இப்படியான ஒரு  கேள்வி  ஆன்மிக குருமார்கள் கூட எதிர்கொள்ளாத  கேள்வியாகத் தான்  இருக்கும்.     'இறைவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்கும் நம்மை 'இவன்  'ஒரு மாதிரி'யான ஆசாமியாக இருப்பானோ என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்தச் சிறுவன் சொல்லாதது ஏதாவது பாக்கியிருந்து அது உங்களுக்குத் தெரிந்திருந்தால்  அவற்றையும் இறைவனைப் பற்றிய  உங்கள் எண்ணமாக   சேர்த்துக் கொள்ளுங்கள்.  இந்தப் பதிவைப்   படிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் மற்றவர்களுக்கு  உதவியாக இறைவனைப் பற்றிய உங்கள்  எண்ணங்களையும் சொல்லலாம்.

இப்பொழுது  இறைவனிடம் பொதிந்துள்ளதாக   நீங்கள் நினைக்கும் அவனது இயல்புகள்  உங்களிடமும்  உருப்பெறுவதற்கு  அவன் அருளை நீங்கள் வேண்ட  வேண்டும்.  உதாரணமாக இறைவன் சகல உயிர்களிடத்தும் அன்பானவன் என்றால் 'இறைவா!  சகல உயிர்களையும் நேசிக்கும் குணத்தை எனக்கு அருள்வாயாக' என்ற அர்த்தத்தில் அவரவர்கள் எப்படி இறைஞ்சிக் கேட்பீர்களோ அந்த முறையில் வேண்டிக் கொள்ள வேண்டும்.   வேண்டிக் கொள்ளுதல் மனசுக்குள்ளேயே அமிழ்ந்து போய் விடாமல் நீங்கள் இறைவனிடம் இறைஞ்சுவது உங்களுக்கும் செவி வழி கேட்கிற அளவுக்கு தெளிவாக ஜபிக்கிற மாதிரி இருக்க வேண்டும்.   இப்படி சன்னக் குரலில் சொல்வதால் இரண்டு  நன்மைகள்.  1.   நீங்களே இறைவனிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்.    2. என்ன கோரிக்கை வைக்கிறீர்களோ அதை நீங்களே செவிமடுத்து தெளிவாக உங்கள் கோரிக்கையை அழுத்தமாகப் புரிந்து கொள்கிறீர்கள்.

நீங்களே இறை சக்தியிடம் கேட்டுப் பெறும் வரம் இது.   அந்த வரம் இறைவன்
அருளால் உங்களுக்குக் கிடைக்கும் பொழுது  அதை மீறிச் செயல்படுவதற்கு உங்கள் மனம் லேசில் ஒப்பாது.   இதான் இதில் இருக்கும் ஒப்பற்ற  நன்மை. 

1. பொறுமையாக பிறர் சொல்வதைக் கேட்க முடியாமை.

2. எவர் எது  சொன்னாலும் அது தனக்குத்  தப்பாகப் படுவது.

3.  தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து யார் சொன்னாலும் அதைப்  பரிசீலனை பண்ணவே தயங்குவது.

4. தன்னைப் பற்றி கற்பனையாக பிரமாதமாக நினைத்துக் கொள்வது.

5.  சின்னச் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வயப்படுவது.

6.  உலகமே தனக்கு  எதிராக இருப்பதாக நினைப்பது.

7.  சகிப்புத்தன்மையே இல்லாமல் இருப்பது.


-- இப்படியெல்லாம் ஏகப்பட்ட குறைபாடுகளைக் கொண்டவர்கள் தான் நாம்.
அவையெல்லாம் தன்னிடமிருந்து விலகிப் போக வேண்டுமென்று  நெஞ்சார வேண்டி செவிமடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில்  எல்லோருக்கும் பொருந்தக் கூடிய  ஒரு வேண்டுதல் கவிதையைத்  தருகிறேன்.   அது பயிற்சிக்கு சுலபமாக இருக்கும்.

இறைவன் அருளால் எல்லோருக்கும் நன்மைகள் பயக்கட்டும்.

அன்பே சிவம்.

(வளரும்)


Saturday, December 21, 2019

மனம் உயிர் உடல்

24.    அருள் பாதை

யோகம் என்றால் சாதனை.   இறைவனுடான மன  நெருக்கம் எல்லாம் பக்தி யோகத்தில் அடக்கம்.

மகாபாரதப் போரில்  ஒரு நெருக்கடியான கட்டத்தில் அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர்  உபதேசித்ததாகச் சொல்லப்படும் 700 சுலோகங்கள் கொண்ட புனிதத் தொகுப்பு  ஸ்ரீமத் பகவத் கீதை.

வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்குத் தேவையான உபதேசங்கள்  கர்ம யோகம்,  பக்தி யோகம்,  ராஜ யோகம், ஞான யோகம் என்று நான்காகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. 

ஒரு செயலைச் செய்வது தான் கர்மம்.  நமது எந்த
செயல்பாட்டையும் எந்த நோக்கத்திற்காக செய்கிறோமோ அதன் அடிப்படையில்  தான் அந்தச் செயலுக்கான பலன் நமக்குக் கிடைக்குமாம்.    இறைவனைத் துதிப்பதிலும் கூட அதற்கான நோக்கமும்,  அந்த செயல்பாட்டிற்குரிய நேர்த்தியும் உள்ளடங்கி இருக்கிறது.

இறைவனைத் துதித்தலிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். தனக்கான   இகவுலக சுகங்களை வேண்டி இறைவனைத் துதிப்பது காம்ய பக்தியாம்.  காம்யம் என்றால் பலன் கருதி என்று பொருள் கொள்ளலாம்.  காம்ய பக்தி எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும்.

இதற்கு எதிர் நிஷ்காம்ய பக்தி.   எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைவனிடத்து பக்தி செலுத்துதல்.  கிட்டத்தட்ட கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காமலிருப்பது.

இஷ்ட தெய்வத்தின் பெயர், உருவம் எல்லாவற்றையும் மனத்தில் நிறுத்தி தியானிப்பதற்கு   சகுண  உபாசனை என்று பெயர்.

இதற்கு எதிர் நிர்குண உபாசனை.   உருவமற்ற இறைவனை மனத்தில் துதித்து தியானிப்பது இந்த உபாசனையின் சிறப்பு.

வேதாந்த ஞானத்தால் பிரம்மத்தை சிக்கெனப் பற்றுவதான பாவனையில் சந்தோஷிப்பது  ஞான யோக பக்தி. 

இவ்வளவு தான்.                                     

எந்த பக்தி  நிலையில் ஆரம்பித்தாலும் சரி,  அது ஞான யோகத்தில் முடிவது தான் இந்த தியானத்தின் இலட்சியம்.  ஒவ்வொரு படி நிலையிலும் அடுத்த படி நிலைக்கு செலுத்துகிற உணர்வை  இந்த தியானத்தை மேற்கொள்வோர் உணர்வார்கள்.

வாசித்துத் தெரிந்து  கொள்வதாலோ  பிறர் சொல்லித் தெரிவதாலோ ஏற்படுவதில்லை இறை பக்தி என்பது.   தனக்குத் தானே உணர்வது அது.  அத்தகையதான உணர்தல் உங்களுக்கு சித்தித்து விட்டதெனில் இறைவனுடனான நெருக்கத்தை விட்டு விலகவே முடியாது.  இந்த தியானத்தை கைக்கொள்வதின் நோக்கமும் அதுவே.

 பற்றற்றான்  பற்றினைப் பற்றுவதற்கு கொஞ்சம்  கொஞ்சமாக அவனுக்கே சொந்தமான  அருங்குணங்களை நம்மில் பதித்துக் கொள்ள முயற்சிப்பதே இந்த தியானத்தின் இலக்கு.   அந்த இலக்கை அடைவது தான் பிரம்ம பிரயத்தானமான முயற்சி.

வாழ்க்கை என்கிற வழுக்கலான பாதையில் எடுத்த முயற்சியில் தளர்ச்சி அடைவதற்கு  சோதனைகளும் வழியெங்கும் காத்திருக்கும் தான்.  இருந்தாலும் குறிக்கோளில் கொஞ்சமே முன்னேறினாலும்  அடையும் மனச்சாந்தி அற்புத அனுபவமாக இருக்கும்.   கூடவே வசதிகளும் வாய்ப்புகளும் சுகபோகங்களும் கூடி வரும் சறுக்குப் பாதையில் சறுக்காமல் மீண்டு வருவதே  பெறும் பாடாக இருக்கும்.  இறுதி வெற்றி வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்து யாண்டும்   இடும்பை இல்லாத நிலையை அடைவது தான்.  அந்த சிந்தனையே துணையாயிருந்து வழி நடத்தும் பெரும் பேறைப் பெற்றவர்கள் பாக்யசாலிகள்.. 

காம்ய பக்தி,  நிஷ்காம்ய பக்தியாய் நம்மில் மாற்றம் கொள்வது  தான் முதல் படி.    அநிதித்யத்திலிருந்து நித்தியத்திற்கான வழிப்பாதையின் ஆரம்பப்படி அது.

அந்த அருட்பாதையில் தொடர்ந்து பயணிக்கத் தொடங்குவோம். 


(வளரும்)







Saturday, December 7, 2019

மனம் உயிர் உடல்

23.   நினைமின் மனனே;   நினைமின் மனனே...


னசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது.  இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பார்கள்.  காரணம் மன உணர்வுகளிலிருந்து விலகியிருந்து அவர்களுக்கு எந்தக் காரியத்தையும் செய்யத் தெரியாது என்பதினால் தான்.  நல்லவர்களின் மனம் நல்ல செய்கைகளின் பொழுது இயல்பாகவே மலர்ந்து இருக்கும்.  எந்த தீய செயல்களின் நினைப்பும் அதை சுருங்கச் செய்து விடும்.  அனிச்சை மலர் போல அவ்வளவு மென்மையானது அவர்கள் மனம்.

whole heartedly  -- என்ற ஆங்கில வார்த்தையை அறிவீர்கள்.  இதயம் தான் மனம் என்று பரவலாக அறியப்பட்ட காலத்தில் உருவான சொல் இது.  முழு மனதுடன் என்று தமிழில் அர்த்தம் கொள்வது கூட அவ்வளவு சரியில்லை.. அதையும் தாண்டிய  பூரணத்துவம் கொண்டது அந்த வார்த்தை. 

மனம் சம்பந்தப்படாத, அல்லது மன உணர்வுகளை விலக்கி வைத்து  விட்டுச் செய்யும் எந்தக் காரியமும் அரைக்கிணறு தாண்டிய சமாச்சாரமாய்த் தான் முடியும்.  மனசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் எதையும் நிறைவாகவேச் செய்ய முடியும்.  செய்யும் செயலை மனம் அங்கீகரித்து விட்டால் அந்த செயலுக்கு புது சக்தி கிடைக்கும்.    மனசின் ஒத்துழைப்போடு செய்யும் எந்த செயலுக்கும் இரண்டு பெருமைகள் உண்டு.  1. செயலின் வெற்றி.  2. நாமடையும்  திருப்தி.   செய்த காரியத்தில் தோல்வியே ஆயினும் மனசின் ஒத்துழைப்பு இருக்கும் பொழுது சோர்ந்து போய் விடாமல் அடுத்த கட்ட நகர்விற்கு அதுவாகவே  இழுத்துச் செல்லும்.

சென்ற பகுதி  கேள்விகளை லேசாக நினைவு கொள்ளுங்கள்.   நேரடி பதில்கள் இல்லையென்றாலும்  பட்டும் படாமலும் உங்களுக்குப்  புரியும்.  நேரடி பதில்கள் இருக்க வேண்டாமே என்பதற்குத்  தான் இந்த ஏற்பாடு.

அன்றாடம் நம்மைச் சூழும் செயல்பாடுகளில் தம்மை இணைத்துக் கொள்ளும்  சக்தி கிடைப்பதற்காகத் தான் உணவைச் சாப்பிடுகிறோம்.  வேறு ஏதாவது நினைப்புடன் அல்லது  கவலையுடன் சாப்பிட்டால் உடம்பில் ஒட்டாது என்று பெரியோர் சொல்வர்.   சாப்பிடும் உணவு சக்தியாக உருக்கொள்ளாது என்பதற்காகத் தான் ஒட்டாது என்ற அந்த வார்த்தை வந்தது.  சொல்லப்போனால் அறிவியல் மிகவும் வளர்ச்சி கொண்டுள்ள இன்றைய நாட்களில் சாப்பிடும் பொருளில் என்ன சக்தி நிறைந்திருக்கிறது என்பதை மனதில் கொண்டு அந்த சக்தியை உடம்பில் கொள்வதாக நினைப்பில் கொண்டு சாப்பிடச் சொல்கிறார்கள். உதாரணமாக கேரட் (Carrot) என்று வைத்துக் கொள்ளுங்கள்.   கேரட்டை உண்பதற்கேற்ப  பக்குவப்படுத்தி உண்ணும் பொழுது  அந்த கேரட்டில் நிரம்பியுள்ள சக்தியை உட்கொள்வதாக மனதில் கற்பிதம் கொள்ள வேண்டும் என்று உணவியலில் துறைபோகியவர்கள் சொல்கிறார்கள்.   அப்பொழுது   தான் அந்த உணவில் அடங்கியிருக்கிற சக்தி துல்லியமாக  முழு அளவும் கிரகிக்கப் படுகிறதாம்.  சாப்பிடும் உணவில் இருக்கும்  உள் கூறுகள் பற்றி  அறிவு கொள்ளுதல் நம் உடல் வாகுக்கேற்ப கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளவும் துணையாக இருந்து உடல் நலம் பேணுகிறது.  நாமே மனமாகவும்,  மனமே நாமாகவும் பின்னிப் பிணையும் பொழுது  ஏற்படும் திருப்தி உடல் ஆரோக்கியத்திற்கு முழுமையான  பலனைத் தருகிறது.

இறை வழிபாட்டில் கூட நடப்பது இது தான்.   பிராகார சுற்றில் வலம் வரும் பொழுது  எதையாவது  உச்சாடனம் செய்தவாறு அசுர வேகத்தில் உங்களைக் கடக்கும் நபர்களை பார்த்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும்.   நின்று  நிதானித்து என்ற பேச்சுக்கே இடமில்லை.   ஏதோ தலைபோகிற காரியம் அடுத்து இருப்பது போல அவர்கள் செயல்பாட்டில் அவ்வளவு வேகம் இருக்கும்.  பிராகார சுற்று, கர்ப்பகிரத்தில் ஒரு கும்பிடு,  போகும் நேரத்தில் வீபூதி கிடைத்தால் சரி;  இல்லையென்றாலும் பரவாயில்லை.  வெளிவந்து நவகிரகங்கள் சந்நிதியில்  மூன்றே நிமிடத்தில் மூன்று சுற்று-- இதோ ரோடுக்கு வந்தாச்சு..  காத்திருக்கும் அடுத்த வேலைக்காக  கோயிலினுள் கொண்ட அதே வேகம்  தெரு சந்தடி நெரிசலிலும்..  சாவி கொடுத்த பொம்மை மாதிரியான தற்கால ரோபோக்கள் போலவானவர்கள் ..   இவர்கள் விஷயத்தில் உடல் இயக்கத்தின் பார்வையாளராக மனம்  பட்டுக்கொள்ளாமல் சகல விஷயங்களிலும் தனித்து விடப் பட்டிருக்கும்.

கோயில் என்பது  சந்நிதியில் இறைவனோடு நம் மனசை ஒன்றரக் கலக்கும்
இடம்.  இறைவன் முழுமை என்றால் அதன் துக்குனூண்டு கூறு  நாம்.  அந்தக் கூறு  தன் முழுமையை தரிசிக்கும் அனுபவம்
கொள்ளும் பொழுது தன் மனதை ஊடகமாகக் கொண்டு முழுமையோடு ஒன்றரக்  கலக்கத் தவிக்கிறது.   அந்த தவித்தலில் இறைவனால்   ஆட்கொள்ளுகிற மாதிரியான அனுபவத்தைப் பெறும் பொழுது  சொல்லொண்ணா சுகானுபவத்தைப் பெறுகிறது. தாய் மடி கிடைத்த குழந்தை போல.  அணுவினுக்கு  அணுவான இருப்பு,  தன் முழுமையுடன் கொள்ளும் ஈர்ப்பு இது.  சின்ன அகலில் அடங்கிய வெளிச்சம்,  பேரொளியில் ஐக்கியமாகிற அனுபவம் இது.  சொல்லி விளக்க முடியாத அனுபவம் ஒன்றினாலேயே அடையக் கூடிய பேறு இது.  கோயிலுக்குச் சென்றால்  அல்லது  செல்வோருக்கெல்லாம் இந்த ஐக்கிய அனுபவம் கிடைத்து விடும் என்றும் இல்லை.  அது கிடைப்பதற்காகத் தான்  கோயிலுக்குப் போவதே.

அந்தர்யாமி என்ற நிலையில் இறைவனே நம் மனசாட்சியாகி நல்லதை உணர்த்தி நமக்கு வழிகாட்டுகிறான் என்று  இறை அனுபவ நிலைகளைப் பற்றிச் சொல்வோர் சொல்வதுண்டு.  வினைப்பயனும், அமையும் சூழ்நிலைகளும் ஜீவனை பற்றி அலைக்கழிக்கும் பொழுது  மனசாட்சியாய் இருக்கும் இறைவனின் வழிகாட்டல் கிடைக்கும் என்கிறார்கள்.

'நினைமின் மனனே நினைமின் மனனே;  சிவபெருமானை செம்பொன் அம்பலவனை; நினைமின் மனனே  நினைமின் மனனே -- என்பார்
பட்டினத்தார்..  இறைவனின் ஈர்ப்பு மகிழ்ச்சி நம்மைப் பற்றி கொண்டு மனசில் படரும் பேறு கிடைத்து விட்டால்  கோயில் என்றில்லை, எங்கிருந்தாலும் 
இறைவனை நம் மனசுக்குள் கொண்டு வந்து விடலாம்.    'மட்டுப்படாத
மயக்கமெலாந் தீரஎன்னை வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே' என்பார் தாயுமானவர் சுவாமிகள்.   பரந்த வெட்டவெளியே தெய்வமாக இருக்கும் பொழுது  மனசில் இறைவனை வைத்து வழிபடுவதற்கு ஏதுவாகத் தான்  சிவனென்றும் விஷ்ணுவென்றும் பல்வேறு நாமங்களில் இறைக்கு ஒரு உரு கொடுக்க முனைப்பு உருவாயிற்று. 

இன்னொன்று.  மனப்படமாகத் தான் உள்மனதில் பதிய வேண்டிய நிலைக்கு இறைவனுக்கு உருவம் கொடுத்தது ஏதுவாகப் போகிறது.

இறை அனுபவம் வாய்த்தவர்கள் பாக்கியசாலிகள்.   நல்லனவற்றிற்கு வழி நடத்த  இறைவன் என்ற ஒரு சக்தி இவர்களுக்கு துணையாக இருக்கிறது.
இறை மறுப்பாளர்களோ  தம்முள் நல்லன   விளைவதற்காக  வேறு வழிகள் பார்க்க   வேண்டியது தான்.   நமக்கு வேண்டியது  நமக்கு நல்லவை விளைய வேண்டும். அவ்வளவு  தான். 

அதற்கு என்ன வழி என்று அடுத்துப் பார்ப்போம்.

(வளரும்)


Saturday, November 30, 2019

மனம் உயிர் உடல்

22.  அலசலுக்காக  ஆறு  கேள்விகள்


கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடி அசைந்ததா'

-- என்ற கண்ணதாசனின் பழம் பாடல் நினைவுக்கு வருகிறது.  அதே மாதிரியான ஒன்று தான் இதுவும்..

எண்ணம் வந்ததும் செயல் பிறந்ததா
செயல் பிறக்கத்தான் எண்ணம் வந்ததா

-- என்று இனம் பிரித்துப் பார்க்க முடியாதவைகள் எண்ணமும், செயலும்.  எண்ணம் இல்லாமல் செயல் இல்லை  என்பது அறிவியல்  உண்மை.

வெளிமனம்  எது பற்றியும் ஒரு எண்ணத்தை நம்மிடம் படர விட்டுத் தான் அந்தச் செயலைச் செய்யத் தூண்டுகிறது.  மழை வருவதற்கு முன் மேகம் கன்னங்கரேல் என்று கருப்பது போலவான போக்கு  இது.  வெளிமனம் தான் நாம் என்றாலும் எண்ணம் தான் வெளிமனத்திற்கும் நாம் செயல்படுவதற்கும் ஒரு  தொடர்புச் சாதனமாக இருக்கிறது.

படுக்கையில் படுத்திருப்பவர்  எழுந்திருக்க வேண்டும் என்றால் கூட எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணத் தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதல் எப்படி ஏற்பட்டது என்பது உங்கள் யோசனைக்கு.  அந்தத் தூண்டுதல் இல்லை என்றால் 'எழுந்திருந்தால் போச்சு' என்ற அலட்சியம் வந்து விடும்.  தூண்டுதலுக்கு அடுத்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்..  பல் விளக்குவதற்காக டூத் பேஸ்ட் இருக்குமிடம் போய், ப்ரஷில் பேஸ்ட்டைப் பிதுக்கி...  இதெல்லாம் தினம் தினம் செய்து இயந்திர கதியில் நடக்கும் பழக்கப்பட்ட மூளையில் பதிந்த  அனிச்சை செயல்கள்...  ப்ரஷ் பற்களில் இயங்கிக் கொண்டிருக்க  அன்றைக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் கூட நினைப்பு ஊர் சுற்றிக் கொண்டிருக்கலாம்.  நினைவு அப்படி எங்கேயோ பதிந்து  இருக்கையில் பல் தேய்த்து, வாய் கொப்பளித்து,  துண்டால் முகம் துடைத்து இதெல்லாம் எந்த உந்துதலும் இல்லாமல் நடந்து விடுவது தான் ஆச்சரியம்...  எப்படி நம் மூளை சில விஷயங்களை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது,  பாருங்கள்..    சாதம், குழம்பு, ரசம், மோர் தான்...  என்றைக்கும் மோர், ரசம், குழம்பு இல்லை.. ஏன்?.. இந்த வரிசைக்கிரமம்  பழக்கத்தால் மனசில் பதிந்து போன ஒன்று..  ஒரு நாளைக்கு இந்த வரிசைக் கிரமத்தை மாற்றி மோர், ரசம், குழம்பு என்று சாப்பிட்டுப் பார்த்தால் நமக்கே அது வேடிக்கையாக இருக்கும்.

சில விஷயங்கள்  நமக்குப் பிடித்திருப்பதால் திரும்பத் திரும்பச் செய்யப் போய் அதுவே பழக்கமாகிப் போகிறது.   இறை வழிபாடு போன்றவை நமக்கு நல்லது செய்யும் என்ற எண்ணத்தில் நம் மனசில் பதிந்து போகின்றன. பழக்கமான விஷயங்களைத் திரும்பத் திரும்ப செய்யும் பொழுது  அதில் மனம் ஆழ்ந்து ஈடுபடாமல் ஒரு இயந்திர கதி ஏற்படுவதை நீங்களே உணரலாம் --  பல் விளக்கல் உதாரணம் போல.

எதைச் செய்யும் பொழுதும் மனம் அதில் பதிந்தால் தான் செய்யும் விஷயத்தோடு செய்பவருக்கு  ஒட்டிய உறவு  ஏற்படும்.  அந்த ஒட்டிய உறவு தான்  மனத்தையும் செய்யும்   செயலையும் ஒன்றாகக் கட்டி வினை புரிவது.  நீங்கள்  எந்தக் காரியம் நடக்க   வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அந்தக் காரியத்தோடு வெளி மனதின் வழிகாட்டல், உள்  மனதின் ஆற்றல்-- இவை  பிணைத்தால் தான் ஒரு ஒழுங்கு முறை லயத்தோடு அந்தக் காரியம் நடப்பதற்கான சாத்திய கூறுகள் உங்கள் மனசிலேயே பதியும்.  இல்லையென்றால் எந்தச் செயல்பாடும் விழலுக்கு இறைத்த நீர் தான்.

அடுத்து,  செய்கிற காரியத்தை எதற்காகச் செய்கிறோம் என்ற கேள்விக்கு தீர்க்கமான பதில் உங்களுக்குள்ளேயே கிடைத்தால் தான்  செய்கிற காரியத்தில் ஆழ்ந்து உங்கள் கவனம் பதியும். நம்பிக்கை பிறக்கும். எதிர்பார்ப்பு எகிறும்.   உங்கள் எண்ணமும் ஒத்துழைத்து  அந்தக் காரியத்தை பிசிறின்றித் தெளிவாக செய்ய உதவும். இல்லையென்றால் மனம் ஒட்டாத  ஏனோ தானோ தான். 

உங்கள் உதவிக்காக கீழே சில கேள்விகள். அதற்கான உங்களுக்கான பதிலை நீங்களே நிச்சயப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.  வெளிப்பட பதிலை பொதுவெளியில் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.  பதில் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.  அந்த பதில்கள் உங்கள் சுய பரிசோதனைக்கு உதவும்.

1.  A. எதற்காக உணவு உட்கொள்கிறோம்?..  என்  (அவரவர்) உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு எந்தந்த சேர்க்கைகள் என் உணவில் இருக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். 

    B.  பசிக்கு கிடைத்ததை சாப்பிடும் ரகம் நான்.

2.  A.  ஏன் கோயிலுக்குப் போகிறேன்? அல்லது ஏன் போவதில்லை?
 B.  இறை நம்பிக்கை  எனக்கு உண்டு..  அல்லது இல்லை. 
C.  இறை நம்பிக்கை இருந்தும் அதிகமாக கோயிலுக்கு  போவதில்லை.

3. A. எனக்கென்று தனிக் கருத்து ஏதும்  எதிலும் இல்லை. ( கணவன் அல்லது மனைவி ) சொன்னால் சரி தான்.  நண்பர்கள்   சொன்னாலும் சரிதான்.   
B.  என்றாலும்   எங்கள் இரண்டு பேருக்கும் ஒத்து வந்தால் தான்   அந்த கருத்துக்கு மதிப்பு அளித்து அதன்படி செயல்படுவோம்.

4. A. ஆழ்ந்து யோசித்து செயல்படும் பழக்கம் உண்டு. 
B.  வெகுஜன செயல்பாடு மாதிரி பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறார்களோ அதைப் பார்த்து நானும் அந்த மாதிரியே செய்து விடுவதுண்டு.

5.A.  காலையில்  நேரம் ஒதுக்கி தவறாமல் நடைபயிற்சி உண்டு.  கூடிய மட்டும் இந்தப் பழக்கத்தை தவறாமல் கடைபிடிக்கிறேன். 
 B.  நடை பயிற்சியா?  அதை மறந்தே ரொம்ப நாளாச்சு..

6. A.  நான் விசேஷமானவன் என்ற எண்ணம் எனக்குண்டு.  அந்த விசேஷத்திற்கு ஏற்பவான நடைமுறைகள் என்னிடம் உண்டு. 
B.  அப்படியெல்லாம் எதுவுமில்லை.. ரொம்பவும் சாதாரணமாக ஆசாமி சார் நான்.  ஹிஹிஹி...  ஏன் அப்படி இருக்கிறேன் என்றும் எனக்குத் தெரியும்.

இதற்கெல்லாம் பதிலைத் தேர்ந்து  உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.  பின்னூட்டங்களில் கூட சொல்ல  வேண்டாம்.  அடுத்த பகுதியில் இந்த ஆறு விஷயங்களையும் அலசும் பொழுது உங்களுக்கு அந்த அலசலில் வெளிப்படும்   தகவல்கள்   உதவுமா  இல்லை உதவாதா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  உங்கள் மனம் வழிநடத்துகிற வழியில் அதற்கேற்ற மாதிரி  செயல்படுங்கள்.

வாழ்த்துக்கள்..


(வளரும்)


Wednesday, November 27, 2019

மனம் உயிர் உடல்

21.  உள் மனதின் ஆற்றல்


னம் என்று தனியாக ஏதுமில்லை.  நம் மூளையில் இருக்கும் ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட நியூரான்களின் இணைப்பைத் தான் மனம் என்று சொல்கிறோம்  என்பது  இந்தத் தொடரின் பால பாடம் தான்.

இருந்தாலும் அந்த நியூரான்கள் செயல்படும் விதம் நாம் கொள்ளும் எண்ணங்களினால் தீர்மானிக்கப் படுகிறது  என்பது  இன்னொரு உண்மை.

அதாவது  கேளிக்கை விடுதிகளுக்கு போவதா, இல்லை நூல்  நிலையத்திற்கு போவதா என்பதை தீர்மானிக்கும் உறுதி நமக்கு வந்து விட்டால் நம் எண்ணத்திற்கேற்ப நியூரான்களின் செயல்பாட்டை அமைத்துக் கொள்ளலாம்  என்ற வசதி நம்மிடமிருந்து   தான் உருவாகிறது என்பது பலருக்குத்  தெரியாத  அதிசயம்.

இதுவே அளப்பரிய  சக்தி கொண்ட உள் மனதை நல்ல பழக்க வழக்கங்களில் சிறைப்படுத்தும் வித்தை.  உள் மனம் நல்லது  கெட்டது அறியாத  பேதை. அதுவே அதை நல்வழிப்படுத்துவதும் நமக்கு சுலபமாகும்.  பிடித்து  வைத்த பிள்ளையார் மாதிரி  நாம் உருக்கொடுப்பதற்கேற்ப உருவாகும் இயல்பு பெற்றது அது.                                                   

இதையே 'உன் எண்ணம் எதுவோ அதுவாகவே நீ ஆகிறாய்' என்று ஆன்றோர் சொல்வர்.   பயம்,  சந்தேகம்,  போகம்,  பொறாமை போன்ற உணர்வுகள்  வெளி மனத்தை எளிதில் பற்றும்  இயல்பு கொண்டவை.  பற்றியவை பற்றிய ஆளைப் பற்றும்  வரம் கொண்டவை.               

உள்மனம் அளவற்ற சக்தி வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஆராய்ந்து செயல்படத் தெரியாத ஒரு சக்திமான் என்பதும் நினைவிலிருக்கட்டும்.  அதை வழி நடத்தும் பெரும் பொறுப்பு  வெளி மனத்தால் மட்டுமே முடியும் என்பது அடிப்படை உண்மை.

யோசிப்பது வெளிமனத்தின் தொடர்ந்த நடவடிக்கை.   நீங்கள் எதை ஆழமாக யோசிக்கிறீர்களோ  அந்த யோசிப்பின் அடிபடையில் விரும்புகிறீர்களோ அந்த விருப்பம் உள்  மனத்திற்கு படமாக அனுப்பப்பட்டு உள் மனத்தின் ஆற்றலில் அற்புதமாக நிறைவேற்றப் படுகிறது.  வெளி மனத்தில் முகிழ்க்கும் ஆசைகளை அற்புதமாக நிறைவேற்றித்  தருவதற்கு கிடைத்த மந்திரச்சாவி உள் மனம் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்.

ஒரு  நாலாந்தர திரைப்படத்தைப் பார்த்து விட்டு அந்தத் திரைப்பட கதாநாயகனைப்  போலவே நாலாந்தரமாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களின் வெளிமனத்தில் வலுப்பட்டால் அதற்கான சந்தர்ப்பங்கள் உங்களின் உபயோகத்திற்காக வாசல் கதவைத் தட்டும்.  பழம் நழுவி பாலில் விழுந்தது என்று அப்பாவியாக நினைத்துக்  கொள்வீர்கள்.  பாலை ஏற்பாடு  பண்னியதும், பழத்தை நழுவ வைத்து அதில் விழ வைத்ததும் அப்படியான காரியத்திற்கான உங்கள் வெளிமனத்தில் படிந்த சிந்தனை தான் என்பது உங்களுக்கேத்  தெரியாது.  ஈ நெருப்பை வலம் வரும் பொழுது அந்த சூடு இதமாகத் தான் இருக்கும். அந்த சுகத்திற்கு ஏங்கி திருப்பி திருப்பி நெருப்பை வலம் பொழுது ஏதாவது ஒரு சுற்றலில் அந்த ஈ நெருப்பில் விழாமல் போகாது.
                                                                                                                   
கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும்  ஐம்புலன்களின் ஈர்ப்புகளினால் வெளி மனம் உருவாகிறது.  அல்லது அந்த ஈர்ப்புகளின் தாக்கத்தில்  வெளிமனம் தன்னை உருவாக்கிக் கொள்கிறது.  அந்த ஈர்ப்புகளை செயல்படுத்த சக்தி மிக்க உள் மனத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறது.   அந்த உபயோகம் லாகிரி வஸ்துகளின்  ஈர்ப்பு போல  வெளி மனத்தை பற்றிக் கொண்டு உள் மனத்தின் ஆற்றல் மிகுந்த சக்தியால்  நிறைவேற்றப்பட்டு அதுவே  வெளி மனத்திற்கு அனுபவமாகிறது.

அதனால் எதையும் அனுபவிப்பது வெளி மனமே.  நாம் சந்தோஷிப்பதாக நினைப்பது வெளி  மனத்தின் சந்தோஷத்தையே.   அதனால்  நான் என்ற நம் நினைப்பை மிகச் சரியாகப் பிரதிநிதித்துவப் படுத்துவது நமது  வெளிமனமே.

அதனால் ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் வெளிமனத்தின் ஆளுகையிலேயே என்பதே புரிதலாகிறது.  அன்னை, தந்தை, ஆசிரியர், நம் வாசிப்பு  தேர்வுகள், பார்ப்பவை, பழகுபவை, எதிர்கொள்பவை எல்லாம் வெளிமனத்தில் தடம் போட்டு அந்தத் தடங்களே நாமாகிறோம்.

இதனால் என்ன  தெரிகிறது?..

வெளி மனதை அழுக்குப்படாமல் வைத்துக் கொள்ள வேண்டும்  என்று தெரிகிறது.  நல்ல சிந்தனை,  நல்ல ஒழுக்கம்,  பரோபகாரம்,  இரக்கம்,  ஏமாற்றாமை, எளியோருக்கு  இரங்குதல்   போன்ற நற்பண்புகள்  மட்டுமில்லை  புகழ், வெற்றி, உடல் ஆரோக்கியம்,  அமைதியான  ஆர்பாட்டமில்லாத வாழ்க்கை,  சமூக உறவுகளைப் பேணிக்காத்தல் போன்ற  நற் சிந்தனைகளையும் மனத்தில் பதித்துக் கொண்டு அவற்றை அடை காத்தால் வெளிமனம் அவற்றை தன்னில் பதித்துக் கொண்டு  உள்மனத்தின் சக்தி வெளிப்பாடாக  நாம் நினைப்பதெல்லாம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பிக்கும்.

சில செயல்களுக்கு உடனடியான தீர்வுகள் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம்.  நாமே அது பற்றி  சலித்துப் போயிருக்கிற நேரங்களில் 'இப்படி செய்து பார்த்தால் என்ன?' என்ற அறிவுறுத்தல் நமக்குள்ளேயே கிடைக்கும்.   அப்படி செய்து பார்க்கும் பொழுது   ஊறப் போட்டிருந்த விஷயத்திற்கு உடனடியான தீர்வும் கிடைத்து  நாம் மகிழ்ச்சியில் ஆழலாம்.  உள்ளிட்ட எதையும் நாமே மறந்து போனாலும் நம் உள் மனம் மறப்பதில்லை.  ஊறப் போட்டு அலசி ஆராய்ந்து  அதற்கு  என்ன செய்ய வேண்டும் என்பதனை நமக்குத் தெரிவிக்கிறது.

ஆக்கபூர்வமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமில்லை,  வெளிமனம் தீய செயல்களுக்கான  உருவாக்கத்தை உள் மனத்திற்கு  அளிக்கும் பொழுது அவற்றின் நிறைவேற்றலுக்கான தீர்வுகளுக்கும்  உள் மனம் உழைத்து தீர்வுகளை அளிக்கிறது  தான்.  உள் மனத்திற்கு  நல்லவை-- தீயவை என்ற பாகுபாடெல்லாம்  தெரியாது.  அதன் வேலை வெளிமனத்தின்  வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பது ஒன்றே என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

வெளி மனதை எப்படி கறை படியாமல்  வைத்துக்  கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்த  தியானத்தின் அடுத்த கட்டமாக அடுத்துப் பார்ப்போம்.

(வளரும்)


Friday, November 22, 2019

மனம் உயிர் உடல்

20.   மனம்  நம்  தோழன்

பொதுவாக எல்லோருக்கும் தாங்கள் விரும்புவதை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.   அடைவது இருக்கட்டும். ஒன்றை அடைய வேண்டும் என்ற  அந்த விருப்பம் ஏற்படுவது எப்படி?

சொந்தத்தில் வீடு வாங்க வேண்டும்  என்று என் நண்பன் ரமணிக்கு ரொம்ப நாளாக ஆசை.  சமீபத்தில்   என் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தவன்   என்னிடம் "இந்த மாதிரி நிறைய  கிரகப்பிரவேசத்திற்கு வந்தே, எனக்கும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று  மனதில் ஆசை ஏற்பட்டு விட்டதடா." என்றான்.

"அப்படியா?.. உன்னோட மனசு தானே ஆசைப்பட்டது.. உன் மனசே அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும், பார்.." என்றேன்.

"என்னடா இப்படி சொல்லிட்டே?  இந்த விஷயத்தில் ஒருவர் மனசு என்ன செய்யும்?" என்று ஆவலோடு கேட்டான்.

"தனக்கு  ஆசை ஏற்பட்டதை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்று உன் மனசுக்கேத் தெரியும்... அது  அப்பப்போ இந்த விஷயத்தில் சொல்ற ஆலோசனைகளை மட்டும் கவனமா கேட்டுக்கோ.. அதன் படி நட.  அது போதும்.. கிட்டத்தட்ட வீடு வாங்கிட்ட மாதிரி தான்.." என்றேன்.

அவனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.  "தேங்கஸ் டா.   நீ கூட உன் மனம் தான் ஆசைப்பட்டு இந்த வீட்டை வாங்கியிருக்கையா?" என்றான்.

"என் கதையும் அதாண்டா.. நியாயமான விஷயத்திற்கு ஆசை படும் மனசை மட்டும் ஏமாத்தாதே.. அது சொல்றபடி நடந்துக்கோ.." என்றேன்.

"நீ இவ்வளவு தூரம் சொல்றத்தே கோட்டை விடுவேனா?.. அப்படியே நடந்துக்கறேன்..  ஏதாவது சந்தேகம்ன்னு வந்துட்டா,  உன் வீட்டு வாசல்லே தான்  வந்து நிப்பேன்..  இந்த விஷயத்திலே ப்ளீஸ் ஹெல்ப் பண்ணூடா.." என்றேன்.

"உனக்கு இல்லாமலாடா?..  யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்.." என்றேன்.

ஒரு வாரம் ஓடிப்போனதே   தெரியவில்லை.   ஒரு  ஞாயிற்றுக்கிழமை.   ரமணி  என்னைப் பார்க்க வந்திருந்தான்.

"என்னடா, ரமணி?  உன்  வீட்டுக் கனவு என்னாயிற்று?" என்றேன்.

"அதைச் சொல்லத்தாண்டா வந்திருக்கேன்.." என்று சொல்லிச் சிரித்தான்.
அவன் முகத்திலேயே உற்சாகம் பொங்கியது..

"உன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு  வந்த முகூர்த்தம்  தான் எல்லாம்.  அடுத்த  நாள் என் மனைவி பேப்பரில் வந்த ஒரு  விளம்பரத்தைக் காட்டினாள்.  இடத்தைப் போய்ப் பார்த்தோம்.  பில்டரும் பிரபலமானவர்.  நிறைய கட்டிடங்களைக் கட்டி இருக்கிறார்.   விசிட்டர்ஸ் ரூம்லேயே  டாக்குமெண்ட்களின்  ஜெராக்ஸ் காப்பி  எல்லாம் வைத்திருந்தார்கள்.   அந்த அளவில் எல்லாம் திருப்தியாக இருந்தது..   அதனால் அட்வான்ஸ் பணம் மட்டும் கொடுத்து  ஒரு அப்பார்ட்மெண்டை நிச்சயித்து விட்டு வந்திருக்கிறோம்..  ஒரே வாரத்தில் இப்படி ஒவ்வொன்றாக வரிசைஆக எப்படி நடந்தது என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது " என்றான் முகம் நிறைந்த சந்தோஷத்துடன்.                                                                                       

"நல்லது, கெட்டது என்றில்லை.   நம் மனம் மட்டும் எந்த ஒரு  விஷயத்திலும்  ஆழ்ந்து குவிந்து விட்டால் இப்படித் தான்.  எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடக்கும்.." என்று நண்பனுக்கு பதில் சொல்லி விட்டேனே தவிர இதைப் பற்றியே அன்று பூராவும் யோசனை நீண்டது என்னவோ உண்மை.

ள் மனம்,  வெளி மனம் என்ற வார்த்தைகள் எல்லாம் நம்மில் பலருக்குத் தெரிந்தது தான்.  மனசில்  நெஜமாகவே அப்படி ஏதும் தனித்த பிரிவுகள் இல்லை.   நம் மூளையின்  ஆயிரம் கோடி   நியூரான்களின் இணைப்பைத் தான் அவற்றின் சில செயல்பாடுகளை விளக்கிச் சொல்வதற்காக அப்படிப் பிரித்துக் கொள்கிறோம். 

ஒரு பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்று மனசில் நினைப்பு அலைபாய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  தானாக அலைபாயவில்லை.  இன்னொரு வீட்டில் இருக்கும்  பிரிட்ஜையும் அதன் உபயோகத்தையும் பார்த்த பிறகு நமக்கும் இப்படி ஒன்று  இருந்தால் என்ன என்ற  நினைப்பின் உருவாக்கத்தை   மனம் கொள்கிறது.  ஆரம்பத்தில்  கொஞ்ச நாட்கள் ஏற்படும் எந்த எண்ணமும் மனதில் ஊறப் போட்ட ஊறல் நிலையிலேயே இருக்கும்.  தேவையின் எண்ணத்தின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க  வாங்கியே ஆக வேண்டும் என்ற உறுதி பிறக்கும்.  உடனே தான் இந்த வெளி மனம் தன் வேலையை ஆரம்பிக்கும்.  சந்தையில் இருக்கும் பிரிட்ஜ் தயாரிப்பாளர்களில் லிஸ்ட்,  அவற்றின்  தர வரிசை,  நமக்கு தோதுப்பட்ட விலைக்கான தேர்வு,  மொத்தப்  பண பட்டுவாடாவா - இல்லை இன்ஸ்ட்டால்மெண்ட்டா போன்ற எல்லா விவரங்களையும் இந்த  வெளி மனசு தீர்மானித்து சேகரித்து விடும்.

இன்னொன்று உள் மனம் இல்லையா?..  இது அல்லாவுதீன் அற்புத விளக்கு மாதிரி..  அளப்பரிய சக்தி ஆற்றல் கொண்டது.  வெளிமனம் மாதிரி தர்க்க ரீதியாக அலசத்  தெரியாது.  அதனால் வெளிமனம் என்று நாம் அழைக்கிற நியூரான்களின் சேர்க்கைப் பகுதி எந்த விஷயத்தையும்  அலசி ஆராய்ந்து உள்மனத்திற்கு  சித்திர வடிவில் தகவல் தெரிவித்து நினைப்பை நடத்தி வைக்கிறது.  இதெல்லாம் பொதுவான லோகாயதமான செயல்பாட்டிற்கு.

ஆனால் உள்மனம் தன்னுள் புதைத்துக் கொண்டிருக்கும்  புதையல்களின் சமாச்சாரமே வேறே.   அன்றாடம் நாம் செயல்படும் செயல்பாடுகளின் களம் தான் உள்மனத்தின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம்.   இன்பம், துன்பம், ஏமாற்றம், கசப்புணர்வு,  அன்பு, கோபம்,  வெறுப்புணர்வு, காமம் போன்ற அனுபவிப்புகள் ஆழமாக உள்மனத்தில் புதைக்கப்படுகின்றன.

நமது அனுபவிப்புகளாக சில விஷயங்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  உண்மையிலேயே உள் மனதின் அனுபவங்களாகத் தான் அவை  ஆகின்றன.    அந்த அனுபவிப்புகளின்    சாரம் பிடித்திருந்தால் வேட்கையாகவும் 
பிடிக்கவில்லை என்றால் வெறுப்பாகவும்   உள் மனம் என்று நாம் பெயர் சூட்டியிருக்கிற நியூரான்களின் ஆக்கிரமிப்பு பகுதியில் உணர்வுப் படிமங்களாகப்  படிகின்றன.   வேட்கைகள்  தகுந்த சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கும்.  சந்தர்ப்பம் அமைய ஏங்கும்.  அப்படியான சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிமனத்தின் தடுப்பு வேலியையும் நொறுக்கி நினைப்புகளை சாத்தியமாக்கும்.  மீண்டும் மீண்டும்  அப்படியான அனுபவிப்புகளுக்கான ஆசையை  கிளர்த்திக் கொண்டே இருக்கும்.   சில நேரங்களில் வெளிமனம்  தான் பெற்ற அனுபவ அறிவு ஞானத்தில்  உள் மனத்தின் வேட்கைகளை சமனப்படுத்துவதும் உண்டு. அதைக் கேட்டுக் கொண்டு உள்மனம் சமாதானம் அடைவதும் உண்டு.

வேட்கை என்பது ஒரு விஷயத்தை   செயல்படுத்துவதில் கொண்டுள்ள தாகம்.   வேட்கை என்பதில் நல்லது, கெட்டது போன்ற பிரிவுகள் உண்டு.  யாருக்கு நல்லது  கெட்டது என்றால்  செயல்படுகின்ற கர்த்தாவிற்கு.  அதாவது செயல்படுகின்றவனுக்கு. 

கண் போன போக்கிலே  கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன  போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

---  போன்ற இதோபதேசங்கள்  உள் மனத்திற்குத் தான்.   அதனால் உள் மனத்தில் நாம் விதைக்கத் துடிக்கும் விதைகளில் கவனம் கொண்டிருக்க வேண்டும்.

(வளரும்)


Monday, November 18, 2019

மனம் உயிர் உடல்

19.    குடும்ப தியானம்

சென்ற பகுதியில்  குப்பண்ணாவின் குடும்ப சூழ்நிலையையும், ராஜாராமனின்  குடும்ப நிலையையும் குறிப்பிட்டுச் சொல்லியமைக்குக் காரணம் ஒன்றுக்கொன்று எதிரான இருவேறு குடும்பச் சூழல்களை எடுத்துக்காட்டத் தான்.   ஒன்றில் புருஷன் செயலில் மனைவி அதிருப்தி கொள்கிறார் என்றால் இன்னொன்றில் கணவர் விஷயத்தில் அவரது மனைவி தலையிடுவதே இல்லை என்றிருக்கிறது.

இந்த இரண்டு நிலைகள் மட்டுமல்ல.   இந்த மாதிரி வகைக்கொன்றாக நிறைய நிலைகள்.  சில அதீத தீவிரம் கொண்டவை.  சில மட்டுப்படுத்த  முடிந்தவை.  பல சரிப்படுத்தவே முடியாத நிலைகள்.

 குடும்பம் என்றாலே எந்த ஒருவரின் செயல்பாடும் இன்னொருவரின் மனம் சம்பந்தப்பட்ட சந்துஷ்டிக்கோ, சீர்குலைவிற்கோ காரணமாக இருக்கிறது.  அதனால் மனதை ஒருநிலைப்படுத்தி  ஒரு  புரிந்துணர்வோடு  நம் ஆளுகைக்குக் கொண்டு வர தனி நபர் முயற்சி எடுப்பதைத் தாண்டி அவர்
குடும்பமே  கவுன்ஸிலிங் என்று சொல்வார்களே,  அந்த மாதிரி இந்த தியானத்தில் புரிதலோடு ஈடுபட்டால் தான்  அது அந்த குடும்ப உறுப்பினர்      அனைவரின் நலனுக்கும் பயனுடையதாக இருக்கும்.

'தியானம் என்று ஒருவர் உட்காருவது கடினம். உட்கார்ந்த உடனேயே, சமையலறையில் செய்யும் பொருட்களின் வாசனை, குழந்தை ஏதோ அம்மாவிடம் சண்டை போடுவது, பாத்திரங்கள் கீழே விழும் சப்தம்... இது மாதிரி ஏகப்பட்டது நடக்கும். அப்போ, இன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டிருப்பா, பருப்புசிலிக்கு இந்த வாசனை வராதே.. நேற்று மோர்க்குழம்புன்னுனா சொன்னா..இன்னைக்கு வெந்தயக் குழம்பு வாசனை வருதே... குளித்துவிட்டு ஹீட்டரை ஆஃப் பண்ணினாளா... என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாயும்.'

-- என்று இந்தத் தொடர் பதிவுக்கான பின்னூட்டமொன்றில் நெல்லைத் தமிழன் சொல்லியிருந்தார்.  எந்த தியானத்திற்கும் இந்த மாதிரி அலைபாய்கிற மனம்
தியானத்தில் ஆழாது தான்.  அந்தச் சுற்றுப்புற சூழ்நிலை நம்மை பாதிக்காத அளவுக்கு நாம் நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது தான் எந்த தியானத்தின் வெற்றியையும் தீர்மானிக்கும்.   சொல்லப் போனால் சுற்றுச்சூழலை மறக்க முயன்று வெற்றி காண்பது  தான் எந்த தியானத்தினதும் முதற் கட்ட பரிசோதனை.  அதில் வெற்றி காண்பதைப் பொறுத்து இருக்கிறது நீங்கள் அந்தக் கட்டத்திற்கு அடுத்து தியானத்தைத் தொடர்வதற்கான நகர்தல்.

நெல்லை சொன்ன மாதிரியான சாதாரண விஷயங்களே இந்த அளவுக்கு தியானத்திற்கு குறுக்கே வரும் என்றால்,   நிம்மதியற்ற அல்லது  யாரும் யாரின் மேலும் அக்கறை கொள்ளாத குடும்ப சூழ்நிலை தனி மனிதரை எவ்வளவு பாடுபடுத்தும்,  நினைத்துப் பாருங்கள்..

குப்பண்ணாவின் பரோபகாரமும் அவரின் அந்த உயர்ந்த நிலையும் அவர் மனைவியால் எள்ளி நகையாடப்படுகிறது..  இளிச்சவாயன் என்று பட்டம் சூட்டப்படுகிறார்.  இந்த மாதிரியான  குடும்பச் சூழ்நிலைகள்    அமைதியான  தியான முறைக்கு நிச்சயம் ஒத்து வராது.    ராஜராமனின் நாத்திகப் போக்கும் அவர் மனைவியின் ஆத்திகமும் ஒரே குடும்பத்தில் இரு வேறு துருவ சிந்தனைப் போக்கிற்கான முரண்பாடுகள்.

இப்படியான போக்குகளைக் கூட்டிக் கழித்து ஒருநிலைப்படுத்த குடும்ப உறுப்பினர் அத்தனை பேரும் இந்த தியானத்தில் தங்களை ஆட்படுத்திக் கொள்வதே சரியாக தீர்வாக அமையும்.

இதே நிலை தான் ஒட்டு மொத்த  சமூக சிந்தனைப் போக்கின் ஒன்றிணைப்பும்.   சோவியத் யூனியன்  சோஷலிச சிந்தனைகளுடனான சமூக அமைப்பை தன் தேசத்தில் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொண்ட பொழுது  அந்த அணியில் மற்ற நாடுகளைக் கொண்டு வரவும் மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொண்டன.  அதில் வெகுவாக பயனும் பலனும் பெற்ற நாடுகளில் நம் பாரதமும் ஒன்று.   இது எதற்காக என்றால் உலக அரங்கில் எந்த தனித்த போக்கும் வளமும், வலிமையும் பெறாது  என்ற நிதர்சன நோக்கிலேயே  தங்கள் அணியில் மற்ற   நாடுகளையும் திரளச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டன.

அடுத்து மொழி.  இறைவனை மனக்கண்ணில் கொண்டு  வந்து பூஜிக்க வேண்டியிருக்கும்.   இறை சக்தியோடு மனசார ஒன்றரக் கலக்க வேண்டியிருக்கும்.  இசையோடு  பாடல் பாடி வணங்க வேண்டியிருக்கும்.    மனசார என்று வந்தாலே அவரவர்க்கு   அவரவர் தாய்  மொழி தான் துணை  நிற்கும் என்பது எழுதப்படாத  விதி. 

தானே  தன் போக்கில் மனம் நினைக்கும்  வாறெல்லாம் தன் மொழியில்  பேசிக் களிப்பது இறைவனுக்கும் தியானிப்பவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும்.  இடைவெளியைக் குறைக்கும்.  எந்தக் கட்டுப்பாடும் இன்றி  இஷ்டம் போல எது வேணாலும் பேசிக்  களிக்கலாம்.  பாடலாம்.  ஆடலாம்.  ஆனந்தக் கூத்தாடலாம்.

இறை பக்தி இல்லாதோரும் உடல் ஆரோக்கியம் போன்ற ஏதாவது குறிக்கோளை முன் வைத்து   இந்த தியானத்தின் ஆரம்பப் படிக்கட்டில் மனசார  கால் வைத்தால் போதும்.  ஆரம்ப  முயற்சி  அடுத்த நிலைக்கு காந்தம் போல இழுத்துக் கொண்டு போகும்.   மனம், தீப  ஜோதியை ஏந்திய  மாதிரி எந்த  தயக்கத்தையும் தொய்வையும்  துடைத்தெறிந்து  நடக்கும் நிகழ்வுகளில் வெளிச்சத்தை ஏற்றும். 

(வளரும்)


Wednesday, November 13, 2019

மனம் உயிர் உடல்

18.   வாழ்க்கை என்னும்  வேதம்


சொந்த  வாழ்க்கையில் தனக்கென்று  வாய்த்திருக்கும் சில குணநலன்களைப் பலரால் கைவிட முடியாமல் சிரமப்படுவதுண்டு.  பொய்யாகவேனும் தனது சொந்த குணத்திற்கு  மாறான செயல்களைச் செய்வதற்கான நிர்பந்தங்கள் பலருக்கும் ஏற்படுவது உண்டு.  'என்ன செய்யறது  சார்?..  நாம்  நெனைக்கிற மாதிரியே எல்லா விஷயங்களிலும் நடந்துக்க முடியறதா, என்ன?  அப்படி இப்படி அட்ஜெஸ்ட் பண்ணிக்கத் தான் வேண்டியிருக்கு' என்பது இன்றைய தேதியில் நம் எல்லோருக்குமான சிக்கல்.

இது தான் ஒரு மாதிரியான இரட்டை வாழ்க்கை.

இந்த வயதில் நம்மிடம் குடிகொண்டிருக்கும் இந்த குணங்கள் நம் பிறப்போடையே கூடச் சேர்ந்து வந்ததல்ல.   'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே..  பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே'  என்று தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று  நினைவுக்கு வருகிறது.    'அன்னை வளர்ப்பதிலே' என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்து விட்டு,  'அவரவர் பெறும் அனுபவங்களிலே' என்று மாற்றிக் கொண்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.  குழந்தையாய் பிறக்கும் பொழுது  எந்த எண்ணப்பதிவும் இல்லாத அதன் மூளைப் பகுதியில் அந்தக் குழந்தை வளர்கையிலேயே தான் கொஞ்சம் கொஞ்சமாக இதற்காக இது என்று ஒவ்வொரு சிந்தனையும் படிப்படியாக மனசில் படிகிறது.

குழந்தைக்கு மூளையில் முதலில்  படியும் எண்ணப் பதிவு பிரசவ அறையின் சீதோஷ்ண நிலையை உள்வாங்கிக் கொள்கிற வீரிடல் தான்.
அடுத்து பசி..  குழந்தையின் ஆரோக்கிய உடல் வளர்ச்சிக்காக  அந்த உணர்வு ஏற்படும் பொழுது கேட்டுப் பெற இறைவன் ஆற்றலையும் தந்திருக்கிறான்.   'வீல் வீல்' என்ற குழந்தையின் வீரிடல்,  சிணுங்கல் போன்றவை தான் உணரும் எந்த அசெளகரித்தையும்  நெருக்கமானவர்களுக்குத் தெரியப்படுத்த  இறைவன் அதற்கு  அளித்திருக்கும் ஆற்றல்.   தாய்ப்பால் கிடைக்கையிலே அந்தப் பசி உணர்வு மறைந்து போவதால்  பாலின் தேவையும் அதன் ருசியும் அதற்கான விருப்பமும் குழந்தையின் மூளையில் படிந்து போகிறது.  அதோடு தன் தேவையைத் தீர்த்து வைத்த தாயின் அருகாமையும்,  அவளின் முகத் தோற்றமும், அவளின் சீராட்டலும்,  அன்பும், சிரிப்பும் என்று நிறையச் சொல்லலாம்.  தாயின் உடல் சூடு கூட தீட்சண்யமாக குழந்தையின் எண்ணத்தில் (மூளையில்) பதிகிறது.  தன் தாயை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி குழந்தை அறிந்து  கொள்ளும் ஆற்றல் ஏற்படுவதும் இதனால் தான்.   யார் தன்னை நெருங்கி முகம் காட்டி சிரித்துக் கொஞ்சினாலும் குழந்தையும்  பதிலுக்குச் சிரிப்பதும் பழக்கமாகிறது.

சில பேதைகள் கிச்சு கிச்சு மூட்டி குழந்தையை  சிரிக்க வைக்க முயல்வர்.  அந்தப் பிஞ்சுப் பிராயத்தில் அந்தக் கூச்சத்தின்  பதிவு குழந்தையின்  மூளைப்பகுதியில் பதிவதெல்லாம் தேவையில்லாத  சமாச்சாரங்கள்.   ஆண் குழந்தைகளுக்கு இதெல்லாம் கூடவே கூடாத விஷயங்கள்;  அந்த கூச்ச உணர்வு  பிற்காலத்தும்  தொடர்ந்து வரும் என்பதினால்.

அதே மாதிரி  குழந்தை வளர வளர  பேய்-கீய் என்று இல்லாத விஷயங்களைச் சொல்லி   பயமுறுத்துதல்,  ஏதோ கண்ணைக் குத்தத் தான் இறைவன் இருப்பது போல  'உம்மாச்சி கண்ணைக் குத்தும்'  அச்சுறுத்தல்கள், ஆத்திரங்கள்,  ஏமாற்றுதல்கள்,  வாக்கு வாதங்கள், வன்மம் - பழிக்குப் பழி பாடம் போதித்தல்  ('அவன் உன்னை அடிச்சான்னா,  உன் கை என்ன பூப்பறிக்கப் போச்சா?'  போன்ற வழிகாட்டல்கள்) போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும். 

குழந்தைப் பருவத்தோடு போய் விடுவதில்லை இதெல்லாம்.   எந்த வயதிலும் பீடிக்கும் சில வேண்டாத உணர்வுகள் அதற்கேற்பவான பாடம் பெறும் வரை வாழ்க்கை பூராவும் தொடரும்  ஜென்ம விதிகள்  இவை.

'மனித வாழ்வே கிடைத்தற்கரிய வரம் என்கிறார்கள்.  அப்படியாகக் கிடைத்த  அந்த அரிய ஒரு வாழ்க்கையிலும்  மனசுக்குப் பிடித்த மாதிரியான காரியங்களைச் செய்யலேனா அது எப்படி?' --  குப்பண்ணா நேற்றைக்குத் தான் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்.

குப்பண்ணா என் நண்பர்.   பக்கத்துத் தெரு டீக்கடையில் நாங்கள் சந்திப்பது வழக்கம்.     டீயோ, கடையோ எங்களுக்கு முக்கியமல்ல.  காலை செய்தித் தாளை மேய்ந்தவுடன் மனசில் பட்ட எண்ணங்களை  பரிமாறிக் கொள்ள ஒரு இடமும்,  நமக்கேத்த நட்பும் வேண்டும் என்ற  விருப்பத்தில் விளைந்த எங்களுக்கான பழக்கம் இது..

"ஏன் அப்படிச் சொல்றீங்க, குப்பண்ணா?"  என்று கொக்கி போட்டேன்.

குப்பண்ணா பணி ஓய்வு  பெற்ற ஆசிரியர்.  கணிதம், உயர் நிலை வகுப்புகளில் அவர் போதித்த பாடம்.  குப்பண்ணாவின் நண்பர் ராமலிங்கம் எனக்கும் நண்பர் தான்.  பரம ஏழை.  ராமலிங்கத்தின் பெண் இந்த வருடம் பள்ளி இறுதித் தேர்வு எழுதுகிறாள்.  தினமும்  மாலை  இரண்டு மணி நேரம் அந்தப் பெண் குப்பண்ணா வீட்டிற்கு வந்து குப்பண்னாவிடம் கணிதப் பாடம் கற்கிறாள்.  டியூஷன் மாதிரி தான்.   அருமை நண்பர்  ராமலிங்கத்தின் ஏழ்மை நிலை   கருதி அவர் பெண்ணுக்கு இலவசமாகவே   சொல்லித் தருகிறார்.  இந்த இலவச ஏற்பாடு குப்பண்ணாவின் மனைவிக்குப் பிடிக்கவில்லை.  பணத்திற்குச் சொல்லித் தந்தால் வீட்டுச் செலவு எதற்காகவாவது ஈடுகட்டுமே என்பது அவர் மனைவி கட்சி.

இந்த விஷயத்தை விவரமாகக் குப்பண்ணா என்னிடம் சொன்னார்.   "அந்தப் பெண் பாடம் படித்துப் போன கொஞ்ச நேரத்திற்கெல்ல்லாம் எதையாவது சாக்கிட்டு என் மனைவி என்னுடன் சண்டை போடுகிறாள்.  மற்றவர்கள் மாதிரி வாழத் தெரியாத இளிச்சவாயனாம் நான்.  தினமும் இதே ரோதனையா போச்சுப்பா.." என்று வருந்தினார்.

குடும்பம் என்று வந்து விட்டால் எந்த விஷயத்திலும் தனிக் கருத்து கொண்டிருக்க முடியவில்லை என்பது இன்னொரு இடைஞ்சல்.  அதற்காக சன்னியாசம் வாங்கிக் கொண்டா போக முடியும்?..  கணவன்-- மனைவி கூடிப் பேசி கருத்து ஒருமித்து வாழ்வது  என்பது குதிரைக் கொம்பாகத் தான் பலருக்கு இருக்கிறது. 

கருத்து ஒருமித்து என்ற பேச்சுக்கே இடமில்லாமல்  'உன்பாடு உனக்கு; என் பாடு எனக்கு' என்ற போக்கு  ராஜாராம் போக்கு.   எங்கள் வீட்டுக்கு நாலு வீடுகள் தள்ளி இருப்பவன் இன்னொரு நண்பன் ராஜாராம்.   இந்த டீக்கடை அரட்டையில் அவனும் கலந்து கொள்கிறவன் தான்..  ஏனோ நேற்றைக்கு வரவில்லை.

எங்களுக்கு ராஜாராம் விஷயங்களை டீல் பண்ணுகிற பாணியே ஒரு விதத்தில் புதுமையாக இருக்கும்.  பொதுவா, 'ஹாயா'ன்ன வாழ்க்கை..

சாமி நம்பிக்கை லவலேசமும் இல்லாத மனுஷன்.   பைஜாமா--ஜிப்பா, பரட்டைத் தலை,  எப்பவும் இரண்டு மாச தாடி மழிக்காமல்.  புதுயுகக் கவிஞன்.  'மனிதரைப் பாடுவோம்' என்ற கவிதைக் குழாமில் குறிப்படத் தகுந்த ஆசாமி. தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றில்  வேலை.  ஐந்திலக்க ஊதியம்.   ஓரளவு ராஜராம் எப்படிப்பட்டவன் என்று கோடி காட்ட இது போதும்.

"எந்த வயசிலேந்து உனக்கு இந்த சாமி நம்பிக்கை போச்சு?" என்று ஒரு நாள் அவனைக் கேட்டேன்.

"நெனைவு தெரிஞ்ச பருவத்திலேந்தேன்னு வைச்சுக்கோயேன்.." என்றான்.  "எங்கப்பாவுக்கு அந்த வாசனையே கிடையாது;  எங்கம்மா அவருக்கு மேலே; அந்த ஜீன் எப்படியிருக்குமோ அப்படியிருக்கேன்.." என்று  சொல்லிச் சிரித்தான்.

"அப்போ உன் வாரிசும் அப்படித்தான்  உருவாவான் என்று சொல்லு..."   ராஜாராமனுக்கு  பன்னிரண்டு வயசில் ஒரே ஒரு பையன்.

"அதான் இல்லை.." என்று சிரித்தான்.  "அவன் என் மனைவியைக் கொண்டிருக்கிறான்..  இந்த வயசிலேயே விஷ்ணு சகஸ்ரநாமம் அது இது என்று தூள் கிளப்புகிறான்..  அம்மாவுக்கேத்த பிள்ளை.  ஆன்மிக விஷயங்களில் அவள் தான் இவன் குரு.  சில சமயங்களில் இந்த ரெண்டு  பேர் கிட்டயேயும் நான் மாட்டிக்கிட்ட பொழுது நீங்க பாக்கணுமே.." என்று கலகலத்தான்.

நாங்களும்  சிரித்தோம்.

இப்படியும் சிலர் வாழ்க்கை அமைந்து தான் இருக்கிறது.  கணவன் - மனைவி - பையன்கள் என்று ஒருவர் சுதந்திரத்தில் இன்னொருத்தர்  தலையிடாமல்  (மதிக்கிறது என்று சொல்கிறார்கள்)  அவரவர் அவரவர் போக்கில் வாழ்வது.

(வளரும்)


Wednesday, November 6, 2019

மனம் உயிர் உடல்

17.   தன்னில் உணர்ந்த தான்


மூளை என்பதே ஒரு மர்மச் சுரங்கம்.  நிறைய கேள்விகள் அதற்கான தகுந்த விடை கிடைக்கக் காத்திருக்கின்றன என்பதே உண்மை.  உடல் சாத்திர ஆய்வுகளில் இன்னும் இன்னும் தெரிந்து  கொள்ள வேண்டியவைகள் நிரம்ப இருக்கின்றன என்பதே இன்றைய நிலை.

நரம்பியல் என்னும் ஆகப்பெரிய சாத்திரத்தின் ராஜா மூளையும்  மூளை சார்ந்த உடலியக்க உன்னதங்களும்.   இதையெல்லாம்  படைத்தவனைக்  கோயில் கட்டி கொண்டாடுவதில் எந்த  பிரமையும் இல்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக் கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.   உடலின் சகல பகுதி உறுப்புகளையும் இயக்கத்தில் வைத்திருப்பது உயிர்ப்புள்ள மூளையின் சாகசமே என்று சென்ற பதிவில் பார்த்தோம்.    உறுப்புகள் மட்டுமல்ல சகல உணர்வுகளையும் தன் கட்டுப்பாட்டு அறையில் பொருத்தி  வைத்துக் கொண்டு லாக்கர் சாவியையும் தன் கைவசமே வைத்திருக்கும் மூளையின் உன்னத ஆற்றல் பற்றி நிறையவே சொல்லலாம்.

செம டிராஃபிக்.   இந்தக் குறுக்குப் பாதையைத் தவிர்த்திருக்கலாம்.  நுழைந்தது நுழைந்தாயிற்று.  இனி பின்வாங்கவும் முடியாது.   வண்டிகள் எறும்பு கூட்டம் போல ஊர்ந்து நகர்ந்தன என்ற நிலை.  திடீரென்று தேசலாய் கேட்டு,  கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுதல் டெஸிபலில் (100 dB)  வீரிட்ட ஆம்புலன்ஸ்  சைரன் ஒலி அந்த ஊர்தலில் ஒரு பரபரப்பைத் தொற்ற வைத்தது.  சட்டென்று நம் வாகனத்தைக் ஆம்புலன்ஸ் கடந்து செல்லும் பொழுது 'பாவம்.. யாருக்கு என்னவோ' என்ற பரிதாப உணர்வு பீரிடல்..  கடவுளே!  அந்த சிக்னல் விழுவதற்குள் ஆம்புலன்ஸ்  இந்த நாற்சந்தியைக் கடந்து  விட வேண்டுமே என்ற எதிர்பார்ப்பின் தீவிரம் கூடக் கூட சைரனை லட்சியம் பண்ணாமல் குறுக்கே குறுக்கே முந்த   முயற்சிப்போரின் மீது எரிச்சல்..  அப்பாடி..  ஆம்புலன்ஸ் நாற்சந்தியைக் கடக்கவும், சிக்னல் விழவும் சரியாக இருக்க... மனசுக்கு ஒரு நிம்மதி..  கொஞ்ச நேரத்திற்கு முன்பு சலிப்பாய் இருந்த ஊர்தல் இப்பொழுது அப்படி இல்லை;  பரவாயில்லை.. பொறுத்துப் போகலாம் என்ற ஆசுவாசம்..

சலிப்பு, பரபரப்பு, பரிதாபம், எதிர்பார்ப்பு, எரிச்சல், நிம்மதி, ஆசுவாசம் என்று இரண்டே நிமிடங்களில் ஒன்று மாற்றி  ஒன்று என்று எத்தனை  உணர்வுகள்!  இத்தனைக்கும்  இடையே சைரன் ஒலி செவி வழியாய்  கடத்தப் பட்டு அதற்கான உணர்வைக்  கொடுத்து  (ஆம்புலன்ஸ், ஆபத்தான நிலையில்  நோயாளி, எவ்வளவு விரைவாக மருத்துவ மனை போக வேண்டுமோ அவ்வளவு விரைவாக என்றெல்லாம் நிகழ்வை உணர்த்தி) சொடுக்கு நேரத்தில் கொஞ்சம் கூட பிசிறில்லாமல் அத்தனையும் மூளை என்ற படைப்பின் உன்னதம் நிகழ்த்திய அற்புதம் தான்!  இந்த மாதிரி  ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகள்.  மூளையின்  மின் வேதியியல் (Electro chemical) சாத்தியப்பாடுகள் சாத்தியப்படுத்தும் சாகசங்கள்!

இப்பொழுது நான் யார் என்ற பழைய கேள்விக்கு வருவோம்.

நான் யார் என்றால் நான் இப்படியானவன் என்ற தன்னுடைய  குண நலன்களைக் குறிப்பிட்டு சிலர் சொல்லலாம்.

நான் கோபக்காரன் என்று ஒருவர் சொன்னால் தான் கொள்ளும் கோபம் அவருக்கே தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்.

தன்னைப் பற்றி தனக்கே தெரிந்திருப்பதை சுய விழிப்புணர்வு எனலாம்.     இந்த மாதிரியான தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்கள் தன்னை எந்த நேரத்தும் சரிப்படுத்திக் கொள்ள தயாராக இருப்பார்கள்.

அதாவது, தான்  இப்படி இருப்பது தவறு;  இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நினைத்தால் தான் நினைக்கிற படி தன்னை அமைத்துக் கொள்வது அவருக்கு எளிதான காரியமாக இருக்கும்.

கோப உணர்விற்கு ஆட்பட்ட ஒருவர் தனக்கு வாய்த்திருக்கிற கோபத்தை தனக்கான தகுதியாக எண்ணலாம்.  இல்லை, தகுதியின்மையாகவும் கருதலாம்.  அது அடுத்த கட்ட நிலை.

இந்த அடுத்த கட்ட நிலை பெரிய விஷயமில்லை.  அதை எந்த நேரத்தும் தனக்கேற்ற மாதிரி அவர் சரிப்படுத்திக் கொள்ளலாம்.  அதற்கான சுய பயிற்சிகள் எளிமையானவை.
அவை என்ன பயிற்சிகள் என்று பிறகு பார்க்கலாம்.

எந்த சார்பு நிலையும் இல்லாமல்,  தான் எப்படிப்பட்டவன் என்று தானே அப்பட்டமாக உணர்ந்து கொள்ளும் நிலை தான் முக்கியம்.   தன்னைப் பற்றி தன் சுய ரூபம் பற்றி தனக்கேத் தெரியாமல்  குழப்பமாக இருக்கக் கூடாது.  அப்படி இருப்பது மன வளர்ச்சியற்ற நிலை.  வாழ்க்கையில் நாம் எடுக்கும் பல முடிவுகளை அபத்தத்திற்கு அவை இட்டுச் செல்லும்.

நம்மைப் பற்றி நாமே கறாராக கணிக்கும் அறிவு நமக்கு  வாய்த்தல் ஒரு வரம்.   அந்த உயர்ந்த நிலை வாய்க்க நம்மை அர்ப்பணித்துக் கொள்வது தான் இந்த தியானத்தின் முதல் படி.   இதை சாத்தியப்படுத்த இரட்டை நிலை இல்லாத  வாழ்க்கை முறை சித்திக்க வேண்டும்.

அது என்ன இரட்டை நிலை?..

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(வளரும்)

Saturday, October 26, 2019

மனம் உயிர் உடல்


16.   நினைவாற்றல் என்னும் வரம்

ரு ஊசியை எடுத்து நிரண்டினால் கூட கொஞ்சம் கூட வலிக்காத பிரதேசம் நம்  உடம்பிலேயே மூளைப் பகுதி  ஒன்று தான்.  குறைந்த பட்சம் தொடு உணர்ச்சி கூட மூளைக்குக் கிடையாதாம். அதனால்  மூளையில் ஊசி குத்த வேண்டுமானால் கூட  சம்பந்தப்பட்டவர்களை மயக்கத்தில் ஆழ்த்துவதில்லை.  நேரடியா 'சுருக்' தான்.

1400 கிராமிலிருந்து 1500 கிராம் வரை எடை கொண்டது மூளை.  மூளை தான் உயிர் என்று சொல்கிற அளவுக்கு உடல் உறுப்புகள் அத்தனையையும்  இதயம் தவிர  இதன் கட்டுப்பாட்டிலேயே.  ஆக்ஸிஜனும், பிற ஊட்டச்சத்துக்களும் தேவைப்படும்  பிரதேசம்.  நரம்பு செல்கள் கோடிக்கணக்கில் உள்ளே பதுங்கி இருக்கின்றன.  உடம்பில் உள்ள செல்களுக்கும் மூளை செல்களுக்கும் உள்ள பெருத்த வித்தியாசம் என்னவென்றால்,  மூளை செல்கள் சேதம் அடைந்தால் அம்போ தான். மற்றவிடங்களில் உள்ள செல்களுக்கு சேதம் அடைந்தாலும் வளர்ச்சி உண்டு.

நம் தியானம் மனம் சம்பந்தப்பட்டது.. மனமோ மூளை சம்பந்தப்பட்டது.  அதனால் தியானத்திற்கு முன்னான அமர்வில்  நம் மூளை சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொண்டோமானால், அது  மனத் தொடர்பான இந்த தியானத்தை அனுஷ்டிக்கும் பொழுது ஒரு ஒத்துழைப்பு மனோபாவத்துடன் உபயோகமாக இருக்கும். அதற்காகவே தான் இந்த மூளைக்கல்வி.

எங்கையோ  படித்தது.  நலைஞ்சு வருஷமானாலும் பிரமிப்புடன்  மனசில் தேங்கியிருக்கிறது.  சொல்லப்போனால் இதைப் படித்தவுடன் தான்  மூளையைப் பற்றி  நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  அந்த ஆவலை ஏற்படுத்தியதும்  மூளைத் தான் என்று பின்னால் தெரிந்ததை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது. 
மூளையில் இருக்கும் நரம்பு நார்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வைத்தால் அந்த நீளத்திற்கு பூமியிலிருந்து சந்திர மண்டலத்திற்கு போய் விட்டுத் திரும்பலாமாம். எண்ணிக்கை, பருமன், நீளம் இதெல்லாம் முக்கியமில்லை;  உள்ளே இருக்கும் சர்க்யூட் தான் முக்கியம் என்று அவர் அந்த பேட்டியில் சொன்னது தான் முக்கியமாகப் போயிற்று.  சொன்னவர்  இவரோ அவரோ இல்லை;  பிரபல நரம்பியல் மருத்துவர்.  பல விருதுகள் வாங்கியவர். நம்ம சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நரம்பியல் பிரிவில் முக்கியமானவராக திகழ்ந்தவர்.  இதை வாசித்த நாளிலிருந்து மூளை என்றாலே என் மனசில் (!) ஒரு பிரமிப்பு.   மூளை பற்றின எந்த விஷயம் தெரிய வந்தாலும் அதற்கென்றே ஒரு தனி டயரி போட்டு குறித்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

மூளை விஷயத்தில்  பெண்களுக்கு  ஆண்களை விட  கொஞ்சம் சின்ன சைஸாம்.    ஆண்கள் மூளையில் சுமார்  4000 உயிரணுக்கள்  அதிகம்  இருக்கிறதாம்.  இருந்தும்  படிப்பு சம்பந்தப்பட்ட தேர்வுகளில் பெண்கள் தான்  அதிக அளவு தேர்ச்சி பெறுகிறார்கள், என்கிறீர்களா?   நியாயமான கேள்வி தான்.   இயல்பாக வே அவர்களுக்கு  ஞாபகசக்தி அதிகம் போலிருக்கு.  ஞாபக சக்தி என்றாலே ஹிப்போகேம்பஸ்  ஞாபகம் வந்து விடும்.  ஹி.கேம்பஸ் பற்றி பின்னால் பார்க்கலாம்.

இந்த அதிசயத்தைக் கேளுங்கள்.  குழந்தை பிறந்து நாலே வயதுக்குள் அதன் மூளைக்குள் 100 கோடி நியூரான்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறதாம்.  வளர்ந்த ஒரு மனிதனின் மூளையில் இருக்கும்   செல்களின் எண்ணிக்கை  ஏறத்தாழ இரண்டு கோடியே கோடியாம்.  ஒத்துக் கொள்ளத் தான்  வேண்டும். கணக்கிலே நான் கொஞ்சம் என்ன நிறையவே வீக்.  நூறு ரூபா நோட்டுகளாக பத்தாயிரத்திற்கு கொடுத்து எண்ணிப் பார்த்துச் சொல்லுன்னா,  பத்து தடவை எண்ற வழக்கம்.

அதனால் பணம்-காசு   என்றால் ஜோரா ஒரு  தடவை கைதட்டி விட்டு  இந்த ஆட்டத்திற்கு நான் வர்லே சாமின்னு ஒதுங்கிக்கற வர்ணம்.  ஊழல்களின் ராஜாவான 2G ஊழலின் அந்த 1.76 லட்சம் கோடி ரூபாயை எண்ணாய் எழுதும் பொழுது எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே முழி பிதுங்குகிற விழிப்பாய் இருந்த லட்சணத்தில்  இந்த இரண்டு கோடியே கோடிக்கு எத்தனை சைபர்கள்?.. தெரிந்தவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்..

உடலில் சகல பகுதிகளையும் இயக்கத்தில்  வைத்திருப்பது மூளையே.   மூளைப் பகுதிலே லேசான மின்சார தூண்டுதல் கொடுத்த  பொழுது தான் உடல்  உறுப்புகளுக்கும் மூளைக்கும் இருந்த சம்பந்தமே தெரிய வந்ததாம்.  மூளைலே எலெக்ட்ரிக் ஸ்டிமுலேஷன் கொடுத்த பொழுது உடம்புப் பகுதிலே ஓரிடத்திலே துடிப்பு ஏற்படுவதைப் பார்த்தார்களாம்.  மூளைலே வேறொரு இடத்திலே அதே மாதிரி  மின்சார தூண்டுதல் கொடுத்த பொழுது வேறொரு உறுப்பு லேசா விதிர்விதிர்த்ததாம்.  இதிலேந்து தான் நம் உடம்பு உறுப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மூளைன்னும் மூளையோட எந்தப்  பகுதி எந்த உறுப்பைக் கட்டுப்படுத்தறதுன்னும் தெரிஞ்சிண்டாங்களாம்.

நமது  கட்டை விரல்களுக்கும் மூளைக்கும் ஒரு அந்தியந்த தொடர்பு உண்டு.  மனுஷனோட கட்டை விரல்கள் தாம் மூளையோட அடிபணிந்த  ஆர்டர்லியாம்  மூளை அதிகமா வேலை வாங்கறது கட்டை விரலைத் தானாம்.  கட்டை விரலை வருடிக் கொடுத்தா மூளையை வருடிக் கொடுத்த மாதிரியா?..  தெரிலே!

முக்காலே மூணு வீசம் மூளைப் பிரதேசமே கொழுப்பின் ஆக்கிரமிப்பில் தான்.   தலைத் தோலின் கீழே சதை கிடையாது.  மனிதனின் மண்டையோட்டிற்கு அவனது எண்பது வயது வரை  வளர்ச்சி உண்டாம்.    அதனால் மண்டை சிறிசா இருக்கேங்கற கவலையெல்லாம்  அநாவசியம்.

நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்
(Hippocampus) வசம்.   எனது ஆறு வயதில் மதுரை டவுன் ஹால்  ரோடு இருந்த தோற்றத்தையும்  இப்பொழுதிய  நிலையையும்  இந்த ஹிப்போகேம்பஸ் உதவியால் பொருத்திப்  பார்த்துக் கொள்ளலாம்.   இது எப்படி சாத்தியமாகிறது என்கி்ற விஷய ஞானம் நம் தியானத்திற்கு பெரிதும்  உதவியாக இருக்கும். அப்படியே ஹிப்போகேம்பஸின் அருமையையும் தெரிந்து  கொள்ளலாம்.

"வழிலே சுந்தரேசனைப் பார்த்தேண்டி.."

"எந்த சுந்தரேசன்?"

"இது என்ன கேள்வி?.. நமக்குத் தெரிஞ்சது  ஒரு சுந்தரேசன் தானேடி?.. நம்ப ரகுவோட வாத்தியார் சுந்தரேசன் தானே?"

"அப்புசாமி சீதாபாட்டியை விழுந்து விழுந்து குமுதத்லே படிப்பீங்களே! அந்த  ஜீ.ஆர். சுந்தரேசனை மறந்திட்டீங்களா?"

"ஜீ.ஆர்.  இல்லேடி அவர்.  ஜே.ஆர்.--- ஜ.ரா. சுந்தரேசன்.  ஒத்துக்கறேன். அந்த சுந்தரேசன் சட்டுனு ஞாபகத்துக்கு வரலே..."

"அதை விடுங்கோ.. வாத்தியார்  என்ன சொன்னார்?.. நம்ம ரகுவைப் பத்தி என்ன சொன்னார்?"

"அவன் பெருமை தான் பேசினார்.    நன்னா புரிஞ்சிக்கறான்.  கிராஸ்பிங்க்  பவர் நன்னா இருக்கு..  படிச்சது எல்லாம்  நன்னா நினைவிலே வைச்சிக்கறான்.   நீங்க குடுத்து வைச்சவா.  நான் இன்னிக்குச் சொல்றேன்  உங்க பிள்ளை நன்னா முன்னுக்கு வருவான், பாருங்கோ.."ன்னார்.  அதைக் கேட்டு எனக்கும் சந்தோஷம்..  உனக்கும் சந்தோஷமா இருக்குமேன்னு சொன்னேன்.

'இப்படி பக்கத்து அறைலே அப்பாவும்  அம்மாவும் பேசிண்டது நன்னா கேட்டது. அவங்க பட்ட பெருமை தான் என்னை வாசிக்க வைச்சதுன்னு தாராளமா சொல்லலாம்..' என்று போன வாரம் யு.எஸ்.லேந்து  வந்திருந்த ரகு எங்கிட்டே சொல்லிக் கொண்டிருந்தான்.

ரகு  யார்ன்னா என்  எதிர் வீட்டு நண்பர் பையன்.  அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் என் ஞாபகம் என்னவோ நம் மூளையில் பொதிந்திருக்கிற ஹிப்போகேம்பஸ் மேல் தான் படிந்திருந்தது.

(வளரும்)

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

பர்கள்                     

Sunday, October 20, 2019

மனம் உயிர் உடல்

15.   தியானத்தின் ஆரம்ப நிலை

டலின் புறத்தூய்மை நீரால் அமைவது போல மனிதனின் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்பது வள்ளுவனாரின் வாய்மொழி.   அவர் இங்கே அகம் என்று குறிப்பிடுவது நமது மனத்தைத் தான்.  வாய்மை தெய்வத்தின் பண்புக் குறியீடு  ஆதலால் அகத்தூய்மைக்கான அவசியத்தை வாய்மையில் பொதித்துத் தந்திருக்கிறார்.

மனம் இறைவன் கோயில் கொள்ளும் இடம் என்று மனசார  நாம் நினைக்கும்   தகுதியை நமக்காக்கிக் கொண்டதும்   கோயிலை அசுத்தமாக குப்பை கூளமாக வைத்துக் கொள்ளலாமா?..  கூடாதாகையில் கூளங்களை நீக்கி சுத்தம் செய்வோம்.

என்னன்ன  குப்பைகள் இருக்கிறதோ அவற்றை ஒரு பட்டியலாய் போட்டுக் கொள்ளுங்கள்.  உங்கள் உள்ளத்தை மாசு படுத்திக் கொண்டிருக்கும் எதையெல்லாம் குப்பைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ  அவை தான் அந்தப் பட்டியலில் இருக்க வேண்டும்.  எல்லாவற்றிலும் உங்கள் சாய்ஸ் தான் பிரதானம்.   இன்னொருத்தருக்காக இல்லை,  உங்கள் நலனுக்காகத் தான்  இத்தனையும் என்பதினால்  எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் உங்கள் மனக் குப்பைகளை ஸின்ஸியராக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்று பேராசான் வள்ளுவப் பெருந்தகை சில வேண்டாமைகளைப் பரிந்துரைக்கிறார். அவற்றையும் நல்ல ஆலோசனைகளாக எடுத்துக்  கொள்ளுங்கள்.    வெகுளின்னா கோபம்.   ஒன்றுக்கும் உதவாதற்கெல்லாம்   கோபம்  சிலருக்கு வரும்.  அவர்கள் தங்கள் பட்டியலில் கோபம் என்பதனைக் குறித்துக் கொள்ளலாம்.  இந்தக் கோபம் வேறு அறச்சீற்றம் வேறு.  இரண்டுக்கும் வித்தியாசம்  தெரிந்திருக்க வேண்டும்.  பாரதியாரின் 'தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லை எனில்' -- அறச்சீற்ற ரகம்.  அறச்சீற்றம் நம்மில் அழிந்து விடக்கூடாது.  அறச்சீற்றம் இருந்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்.  சமூகம் ஆரோக்கியமாக இருப்பது நம் மன ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்தும். ஒன்றைத் தொட்டு   ஒன்றான சங்கிலிப் பிணைப்பு இது.  அதனால்  வெகுளி என்பதனை இனம் பிரிப்பதில் கவனமாய் இருங்கள்.   அதே மாதிரி அளவான காமம் உடலுக்கு ஆரோக்கியமானது.  குடும்ப மகிழ்ச்சிக்கு குத்து விளக்கு அது.   குறை வைக்க வேண்டாத ஒன்று.   அதனால் அதிலும் கவனம் கொள்ளுங்கள். 

ஆக ஒரு வழியாக நம்மிடம் அழுக்காய் படிந்திருக்கும் பல  தீய குணங்களை பட்டியலிட்டுக் கொண்டாலும் ஒன்றில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.  ஒன்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற நிம்மதியான உணர்வு நமக்குள் நிச்சயமானதும் அடுத்ததைக் கையில் எடுத்துக் கொண்டால் போதும்.  தொடர்ந்து இந்த மனப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது நாளாவட்டத்தில்  கொஞ்சம்  கொஞ்சமாக விலகல் தொடர்ந்து முழு மன  சம்மதத்தோடு நாம் விலக்க நினைத்த  அந்த வேண்டாத குணங்கள்  நம்மிடமிருந்து   விடைபெறுவதை அனுபவ ரீதியாக உணரலாம்.

பார்க்கப் போனால் எல்லாமே நமக்காகத் தான்.  நம் ஆரோக்கியத்திற்காகத் தான்.  நம் வளர்ச்சிக்காகத் தான்.  நம் சந்தோஷத்தை நிச்சயப்படுத்துவதற்காகத் தான்.  சொல்லப் போனால் கடவுள் வழிபாடு கூட அதற்காகத் தான்.  எதற்காக அப்படிச் சொல்கிறேன் என்பதை பின்னால் சொல்கிறேன்.

அடுத்த  வேலை தியானத்திற்கான ஆயத்தங்கள்.  என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் .

முதலில் முதுகு  வளையாமல் நேராக  ஒரு  தடுக்கில் உட்கார்ந்து  கொள்ளுங்கள்.

நாலு நாளைக்கு முன்னாடி அல்லது சமீபத்தில் நடந்த உங்களைப் பாதித்து மன உளைச்சலைக் கொடுத்த எதையாவது   நினைத்துக் கொள்ளுங்கள்..  நினைத்துக் கொள்வது எதுவாக இருந்தாலும் அது ஆழ்ந்து உங்கள் மனசில் தொடர்ச்சியாக நடந்த நினைவுகளை மீட்டுவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.  கற்பனையில் வலை பின்னுகிற மாதிரி நடந்தவைகளை மனசில் ஓட்டிப் பார்க்கத் தெரியாதவர்கள் இந்த வழி தியானங்களை புறக்கணித்து விடலாம் என்பது ஆரம்ப யோசனை.

மூச்சு சம்பந்தப்பட்ட எந்த சேஷ்டைகளும் வேண்டவே வேண்டாம். சொல்லப் போனால் சுவாசத்தையே நாம் கவனத்தில்  கொள்ளாதவாறு வழக்கமாக அது எப்படி இயல்பாக இருக்குமோ அப்படியே இருப்பது ரொம்பவும் நல்லது.  வெளி சக்தி அதன் இயல்புப்படி உள்ளே--வெளியே போய் வருவது ஆரோக்கிய  வாழ்வுக்கு இறை சக்தி அளித்த கொடை. அதற்கு  ஒரு லயம்  உண்டு. அந்த  லயத்தை அதுவே பார்த்துக் கொள்ளும்.  அதை நம் இஷ்டப்படி அடக்குவது-- வெளிவிடுவது  என்று குறுக்கே குறுக்கே போய் குறுக்கிட வேண்டாம்.   அப்படிச் செய்வது  நாம் எதை நினைத்து வலை பின்னுகிறோமோ அந்த முயற்சியைக் குலைக்கும்.  அதனால் மூச்சு விஷயத்தில் நம் தலையீடே வேண்டாம்.   அது இயல்பாக எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும்.  நாம் செய்யப்  போவது நம்மை பாதித்த ஏதாவது ஒரு பழைய நினைவை நினைத்துக் கொள்கிற ரொம்பவும் சுலபமான காரியம் மட்டுமே.

பலருக்கு தன்  நினைவுகளைக் கோர்வையாகத்   திரட்டுவது இயலாத காரியம்.   அப்படியானவர்களுக்கு இந்த பயிற்சி சோகையான பலனைத் தான் தரும்.   தந்த வரைக்கும் சரி என்று மேலும் மேலும் நினைவுகளைக் கோர்வையாகத்  திரட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளியுலகில் நடப்பதை மறந்து அதாவது வெளியுலகத் தொடர்பை முற்றாகத்  துண்டித்துக் கொண்டு  வீட்டுக்குள் என்றால் ஜன்னல் கதவுகளை விரியத் திறந்து மின் விசிறியை   இயக்க வைத்து காற்றோட்டமாக உட்கார்ந்து  முதலில் தந்தையின் முகம், பின் தாயின்  முகம் என்று ஆழ்ந்து அவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள்-- அவர்கள் சம்பந்தப்பட்ட கடந்த  கால நினைவுச் சுழலில் ஆழ்ந்து போங்கள்..

கற்பனைக்கென்ன,  கடற்கரையில் உட்கார்ந்திருக்கிற மாதிரி கூட கற்பித்துக் கொள்ளலாம்.  இந்த திறமையெல்லாம் கைக்கொள்ள திறம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

உடலையும் மனசையும் தளர்த்திக் கொள்ளுங்கள்.   மூச்சின் லயம் அதுபாட்டுக்க இருக்கிறபடி  இருக்கட்டும்.

இந்த அளவுக்கு  ஆரம்ப தயாரிப்பு நிலை  இருந்தால் போதும்.  அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது தான் 'உங்கள் சாய்ஸ்'க்கான நேரம்.  நம்மிடமிருந்து கழட்டி விட வேண்டிய எந்த தீய குணத்திற்கு பட்டியலில் முன்னுரிமை கொடுத்திருக்கிறீர்களோ  அது  நடந்து நம்மை பாதித்த சமீபத்திய நிகழ்வு ஒன்றை மனசில் நினைத்துக் கொள்ளுங்கள். 

(வளரும்)

Related Posts with Thumbnails