மின் நூல்

Saturday, November 1, 2014

கோபம்

A. எப்பொழுதெல்லாம் உங்களுக்குக்  கோபம் வருகிறது?

1. பிறர் உங்களை குற்றம் சொல்லும் பொழுது.

2. உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும் பொழுது.

3. நீங்கள் பிறரால் அலட்சியப் படுத்தப்படும்  பொழுது


B. கோபப்படுதல் உடல் நலத்திற்கு  தீங்கு என்று தெரியுமா?

1.  தெரியும்

2. தெரியாது

3. அப்படீன்னா சொல்றீங்க?

C.  கோபத்தை தவிர்க்க  முயன்றிருக்கிறீர்களா?

1.  இல்லை

2.  முயன்றதுண்டு

3. அதெல்லாம் வேலைக்கு ஆகாது.


D.  கோபப்பட்டு ஜெயித்ததுண்டா?

1.  இல்லை

2.  சிலசமயம் உண்டு

3.  ஹிஹி.. அதுக்காகத்தாங்க கோபமே


E,  கோபம் வந்தால் என்ன நிகழும்?

1.  பிபி எகிறும்.

2. படபடப்பா இருக்கும்.  கைகால் உதறும்.

3.  கண்ணைக் கட்டிவிட்ட மாதிரி.  என்ன நடக்குதுனே தெரியாது


F. வீட்லே, வெளிலிலே எங்கே அதிகமா கோபப்படுவீங்க?

1.  எல்லா இடத்திலேயும்

2.  வீட்லே நிறைய;  வெளிலே கொஞ்சம்

3.  வீட்லே தாங்க.  வெளிலே பெட்டிப்பாம்பு

G.  கோபத்திற்கும்  சொரணைக்கும் சம்பந்தம்  உண்டா?

1.  சொரணான்னா என்னங்க?

2.  உண்டு.  அதுனாலே தாங்க  கோபமே

3.  நீங்க கேக்கறதே சரியில்லை.  கோபமூட்டாதீங்க


H.  கோபம்  எப்படி வரும்?

1.  டக்குனா?

2.  நிதானிச்சு ஆற அமரவா?

3. முதல்லேயே தீர்மானம்  பண்ணியா?

I.  கோபத்தை தவிர்ப்பதற்கு  ஏதாவது  யோசனை  உண்டா?

1.  தெரியாதுங்க.

2.  உண்டு.   கோபம் வந்தா  1,2, 3,4,-ன்னு எண்ணிக்கிட்டே சமாளிச்சுப்  பாப்பேன்.

3.  பின்னாடி வருந்தியிருக்கேன். அதுனாலே இப்போ  எவ்வளவோ  பரவாயில்லை.


J. மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பான்னு  பாரதி சொல்லியிருக்கறதைப்  பத்தி  என்ன நினைக்கிறீங்க?

1.  நீங்க சொல்லித் தான் பாரதி அப்படி சொல்லியிருக்கார்ன்னு தெரியும்.

2.  பாப்பாக்கு தானே சொல்லியிருக்கார்.  நமக்கில்லை தானுங்களே?..

3.  அவரே சொல்லியிருக்கார்.  அப்ப என்னங்க கோபப்படாம இருக்க முடியுங்களா?


H.  கோபம்ன்னாலே எந்த முனிவர் நினைவு உங்களுக்கு வருகிறது?

1.  வசிஷ்டர்

2.  துர்வாசர்

3. ஜமதக்னி


-- எப்பவோ அசாத்திய கோபத்தில் இருந்த பொழுது  ஒரு காகிதமெடுத்து கிறுக்கின questionnaire  மேலே காண்பது.  பழைய காகிதங்களையெல்லாம்  குடைந்து கொண்டிருந்த போது கிடைத்தது.

சரியான  விடையோ, இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி என்று பார்த்துக் கொள்வதோ உங்கள் விருப்பம்.

கோபத்தை அடக்கக் கூடாது.  கக்கிவிடவேண்டும் என்பது சிலரது கணிப்பு.  கோபமாவது வந்த சுவடு தெரியாமல் போய் விடுமாம்;  அடக்கினால் அதுவே இரண்டு மடங்கு தீமை தரும் என்பது அவர்கள் கட்சி.

கோபப்படற மாதிரி நடிக்கறது, கோபப்படறது மாதிரி சம்பந்தப்பட்டவருக்கு அவ்வளவு  கெடுதல் விளைவிக்காதாம்.  பெரும்பாலும் குழந்தைகள் இடத்தில் இது செல்லுபடியாகுமாம். இப்படி நடிக்கறதிலே நாம விரும்பற பலனும் கிடைக்கும்;  உடல் நிலை பாதிப்பும் இந்த விஷயத்தில் இல்லைங்கறது அனுபவப்பட்டவர் ஒருவரது அபிப்ராயம்.  இதிலே இன்னொரு எதிர்மறை விஷயம் என்னன்னா,  குழந்தைகளும் இந்த மாதிரி கோபப்படறதுக்கு சின்ன வயசிலேந்தே பழகிக்குமாம்.  இதுனாலே இந்த விஷப்பரிட்சை வேண்டாம் என்கிறார் ஒரு மனநல  ஆலோசகர்.

கோபத்திற்கு எதிர்நிலை சாந்தமாம்.  எப்பவும் சாந்தமா இருக்கறது எப்பவும் ஸ்வீட் சாப்பிடற மாதிரியாம்.  அளவோட ஸ்வீட்டும்  காரமும் இருந்தால் மந்தத்தன்மை இல்லையாம்.  அதனாலே கோபத்தையும் சாந்தத்தையும் மிக்ஸ் பண்ணி சமநிலையில் அவ்வப்போது அனுசரித்துப் பாக்கலாமாம். அறவே கோபம் இல்லாமலும் அறவே சாந்தம் இல்லாமலும் இருப்பது ஒரு வாழ்க்கை அனுபவம் என்கிறார் அனுபவப்பட்ட ஒரு ஆசாமி.

ஆயிரம் சொல்லுங்கள், ஒவ்வொருத்தர் குணமும் அவர்களின் ஏற்றுக்கொள்ளலும் ஒரு மாதிரி என்பதால் அவரவருக்கு ஒத்து வர்றதை  கைக்கொள்ளலாமாம். இதுவே இக்கால வேத நெறியாம்.

ஒருத்தர் கோபம் ஒருத்தரோட போகாதாம்.  நாம யாரிடம் கோபப்படுகிறோமோ அவருக்கும் பத்திக்குமாம்.  கோபத்திற்கு எந்தக் காலத்திலேயோ யாரோ கொடுத்த சாபம் இது என்கிறார்கள் புராண ஞானம் கொண்டவர்கள்.

அந்த சாபத்தைச் செயலிழக்கச் செய்ய சில உபாயங்கள் உண்டு. கோபப் படுகிறவர் கோபத்தில் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிராளி எதுவும் பேசாமல் மெளனத்தைக் காப்பது கோபப்படுகிறவரை நிலைகுலையச் செய்ய பெரிதளவு துணை நிற்குமாம்.  ஒரு கை ஓசையில்  கொஞ்ச நேரத்தில் அவர் கோபமும் தணிந்து விடுமாம்.

எப்பப்பார்த்தாலும் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் அது செல்லாக்காசாகி விடுமாம்.  அதனாலே அளவு தெரிஞ்சு  அப்பப்போ இல்லை எப்பவோன்னு கைக்கொள்றது புத்திசாலித்தனம் என்கிறார் ஒரு விவேகி.

கோபிப்பது வேறே கோபத்திற்கு ஆளாவது வேறே என்று லெக்சர் எடுத்தார் ஒருவர்.  அதைக் கேட்கிற பாக்கியம் கிடைத்தது எனக்கு.  ஆரம்பத்தில் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது;  போகப்போக கோபிப்பவரின்  மனநிலை, கோபத்திற்கு ஆளாகுபவரின்  மனநிலைன்னு  அதை ரெண்டாப்  பிரிச்சார் அவர்.  கடைசியில்  கோபிப்பவர் நிலை, கோபத்திற்கு ஆளானவர் நிலை, இதைப் பார்ப்பவரின்  நிலை என்று மூன்றாக ஒவ்வொருவர் நிலையையும் பிரிச்சப்போ அவர் மேல் கோபம்  கோபமாக வந்தது.  இந்த மூணு நிலைலே எந்த நிலை என் நிலைன்னு நினைச்சதாலே வந்த   கோபம் அது.


கோபம் ஒரு தீ
தீக்கும் கோபம் பற்றும்
பற்றினால் பரவும்
பரவினால் சாம்பல்
சாம்பல் அழிதல்
அழிதலால் அறிதல்
அறிதலால் புரிதல்
புரிதலின் வினை தெரிதல்
தெரிதலின்மை கோபம்


-- வண்ணம் பூசி வெளிவந்த  ஒரு பத்திரிகைக் கவிதை.

(ஒரு வரியின் கடைசி வார்த்தையும், அடுத்த வரியின் ஆரம்ப வார்த்தையும்
ஒன்றாக இருக்குமாறு புனையப் பட்ட கவிதை என்று  ஒரு குறிப்பு வேறே!)


Related Posts with Thumbnails