மின் நூல்

Showing posts with label அழகிய தமிழ்... Show all posts
Showing posts with label அழகிய தமிழ்... Show all posts

Tuesday, August 6, 2019

அழகிய தமிழ் மொழி இது!

                                                                28


துரையில் நடந்த நிகழ்வுகள் பற்றிக் கேட்ட செங்குட்டுவனுக்கு மாடலன் விவரமாக தான் அறிந்த  செய்திகளைக்  கூறுவானான்:

"ஒரு பொற்கொல்லன் செய்த தவறு தம் குடிப்பிறப்பிற்கே பெரும் களங்கமாக அமைத்தது என்று  நாணிக் குறுகிய  பொற்கொல்லர்  ஈரைஞ்நூற்றுவர்  (2x500= 1000)  ஒரு பகற் பொழுதின் முடிவான மாலை துவங்கும் நேரத்தில் தம் தலைகளைத் தாமே கொய்து கொண்டு பத்தினி கடவுளுக்கு  உயிர்ப்பலி கொடுத்தனர்.  இச்செயல் மதுரை மூதூர் முழுவதும் அவர் தம் புகழாகப் பரவியது.   இந்த நேரத்தில் கொற்கையிலிருந்து ஆட்சி பரிபாலனம் செய்த வெற்றிவேற் செழியன்,  மன்னன் இல்லாது தவிக்கும் மதுரை மாநகர் மக்களைக் காத்து வழிநடத்துவது தனக்கான உரிமை என்று உறுதி பூண்டு
மதுரை வந்து முடிசூட்டிக் கொள்கிறான்.

"கொற்கையிலிருந்த வெற்றிவேல் செழியன்                           
பொற்றொழிற் கொல்லர்  ஈறைஞ்நூற்றுவர்
ஒரு முலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒரு பகல் எல்லை உயிர்ப்பலி யூட்டி..."

--- என்பது  தொடர்ச் செய்யுளாய் வரும் வஞ்சிக் காண்டத்து வரிகள்.

பொற்கொல்லர் பலி கொண்டது பற்றி  தனியாக சிலப்பதிகார உரைபெறு கட்டுரை ஒன்றும் உண்டு.  அது இது:

"அன்று தொட்டு பாண்டியனாடு  மழை வறங்
கூர்ந்து வறுமையெய்தி  வெப்பு நோயும் குருவும்
தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய
நாடு  மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.."   

அன்றையிலிருந்து பாண்டிய நாட்டில் மழை பெய்வது பொய்த்து  வெப்பத்தால் வரும் நோயும், குருவும் தொடர  கொற்கையிலிருந்த மன்னன் வெற்றி வேற் செழியன் கண்ணகி நங்கைக்கு  ஆயிரம் பொற்கொல்லரை பலி கொடுத்து சாந்தி செய்ய  மழை பொழிந்து நாட்டு மக்களை பீடித்த நோயும் அதனால் ஏற்பட்ட துன்பங்களும் நீங்கின..  என்று பொருள் கொள்ளலாம்.

பாடி வீட்டில்  பகல் பொழுது கழிந்து மாலை வந்தது.   அந்திச் செவ்வானத்திலே வெண்பிறை தோன்றியது.  பாடி வீட்டில் தங்கியிருந்த செங்குட்டுவன் யோசனையுடன் அந்தப் பிறையைக் கூர்ந்து நோக்க குறிப்பறிந்த காலக்கணிதன் "மன்ன! நீவிர் வஞ்சி மாநகர் நீங்கி வந்து  எண் நான்கு (8x4=32)  மாதங்கள் கழிந்திருக்கின்றன" என்கிறான்.   

32  மாதங்கள் என்றால்  இரண்டு வருடமும், எட்டு மாதங்களும்-- ஏறத்தாழ இரண்டே முக்கால் வருடம்!  அத்தனை காலம்  தலைநகர் வஞ்சி மா நகர் நீங்கி ஒரு அரசன் வட தேசத்திலேயே தங்கி இருந்திருப்பானா என்ற ஐயமும் ஏற்படுகிறது...

இதற்கான சிலப்பதிகார வரிகள்:

"அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப்
பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்
எண் நான்கு  மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த....

இந்த வரிகளில்,  எண்  நான்கு மதியம்  என்று வரும் இடத்தில் 'மதியம்' என்ற வார்த்தைக்கு  மாதம்  என்றே  பேராசிரியர்கள்,  முனைவர்கள் எல்லாம் பொருள் கூறுகின்றனர்..   நம் வாசக அன்பர்கள்  என்ன நினைக்கிறார்கள் என்பதை பதிய வேண்டுகிறேன்.

இந்த இடத்தில் செங்குட்டுவனின் ஒரு உலா காட்சி வருகிறது.   கொடிகள் கட்டிய  தேர்கள் வரிசை கட்டி நிற்கும் வீதியில்  மெதுவாக  நடை பயில்கிறான்   மாமன்னன்.   சிறிதும் பெரிதுமான மலை வரிசை போன்று தோற்றம் கொடுக்கும் இல்லங்களைத் தாண்டி ஓவியர் கைவண்ணம் பதிந்த ஓவிய விதனத்தின் கீழ்  அமைந்திருந்த  செம்பொன்னாலான ஒரு இருக்கையில் கோமகன் ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி அமர்கிறான்.

ஒரு நீண்ட யோசனைக்குப் பின் "மாடலனை அழைத்து வருக.." என்று  சற்றுத் தள்ளி நின்றிருந்த   வீரர்க்கு ஆணையிடுகிறான்.

மாடலன் வந்ததும்  சோழ நாட்டின் அப்பொழுதிய நிலை என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில்,  "இளவரசர் ஒன்பது மன்னரும் இறந்ததன் பின்னர் சோழ நாட்டு  கொற்றமும் வளமும் தீதின்றி உளவோ?" என்று வினா தொடுக்கிறான்.

செங்குட்டுவனின் மைத்துனன்  கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன்.  இவனை மற்ற வளவர்களோடு வித்தியாசம் காட்ட வேண்டி பெருங்கிள்ளி என்றும் பெருநற்கிள்ளி என்றும் சோழ வரலாற்றில் பதியப் பட்டிருக்கிறான்.  இந்தக் கிள்ளி வளவனுக்கு  தாயத்தார்  நாட்டில் கலகமுண்டாக்கி  இவன் ஆட்சிக்கு அவலமுண்டாக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்கின்றனர்.  தனது மைத்துனன் ஆகையால் அவன் நிலை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் "சோழ நாடும் கொற்றமும் எப்படியிருக்கிறது மாடலன்?" என்று மாடலனிடம் கேட்கிறான் செங்குட்டுவன்.

"மன்னா!  சோழ வேந்தர் பழம் பெருமை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?..      ** குறு குறுவென்று நடை பயிலும் இயல்புடைய   புறாவின் நெடுந்துயர் தீரவும் அந்தப் புறாவைத் துறத்தி வந்த பருந்தின் பசித் துன்பம் நீங்கவும்  தன் உடல்   அரிந்து தன் தசையை  தானே தராசுத் தட்டில்   இட்டவனின் வழிவழி வந்த அறச் செல்வோர் அரசாளும் நாட்டிற்கு தீது நேரிடுமோ?..  மாமழை பொய்த்திடினும் காவிரி தன் நீர் வளப்பத்தால் காத்திடும் சோழ வள நாட்டின் மன்னனுக்கு எந்த தீதும் இல்லை மன்னவா!.." என்று நற்சொல்லில் கிள்ளி வளவின் நலன் பற்றி மாடலன் சொல்கிறான்.

அது கேட்ட செங்குட்டுவன் மனம் மகிழ்ந்து,  "மாடல் மறையோனே!  இதைக் கொள்வாயாக!.." என்று  தன் எடைக்கு எடையாகிய ஐம்பது  துலாம் பொற்கட்டியை அளித்தான்.

பின்பு தன் நண்பர்  ஆரிய  மன்னர்  ஐயிரு பதின்மரை (5X2X10=100)  நூற்றுவர் கன்னரை அன்புடன் உபசரித்து, அவர் தம் நாட்டிற்கு மகிழ்வொடு செல்லவும் வழி வகை செய்தான்.

தாடி வேடம் பூண்டு தப்பிப் பிழைக்க நினைத்தோடி சிறைப்பட்ட ஆரிய வம்ச அரச குமாரர்கள்,  அழகிய கொங்கை--பருத்த தோள்கள்--தளர் நடை--துடி இடை கொண்ட ஆரிய பேடிகள்,  அருந்தமிழ் ஆற்றல் அறியாது கொக்கரித்த கனக விசயர்--  இவர்கள் கூட்டத்தை  கஞ்சக முதல்வர் ஆயிரவரிடம் ஒப்படைத்து  சோழ, பாண்டிய வேந்தரகளுக்கு இவர்களைக் காட்டிக் கொணர்க.. " என்று கட்டளையிட்டான்.                       

இரவு  நெருங்கியது.   வற்றா கங்கை நதியின் பரந்து பாயும் நீர் பரப்பைச் சுற்றிலுமுள்ள  வயல்  வெளிகளில் மண்டி  மலர்ந்திருந்த பச்சை இலை தாமரைகள் கவர்ந்திழுத்த வண்டினத்தின் யாழ் மீட்டல் ரீங்காரத்தில் பாடி வீட்டில் நல்ல உறக்கம் கொண்டான்  செங்குட்டுவன்.  விரிந்த கதிர் பரப்பி
இள ஞாயிறு எழுந்தது.   பையப்பைய மேலோங்கி   கீழ்த்திசை மலை உச்சி மீது    ஆரோகணித்தது.   குடதிசையாளும் கொற்ற வேந்தன்,  வடதிசை சென்று ஆரிய மன்னரைப் புறங்கொண்டு தும்பைப்பூ பொருந்திய வாகை மாலை  சூடி  தென் திசை நோக்கி தலைநகர் வஞ்சிக்குத்  திரும்பலானான்.


===================================================================
**  'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்
      தன் அகம் புக்க குறுநடைப் புறவின்
      தபுதி அஞ்சிச்  சீரை புக்க
      வரையா ஈகை உரவோன்......' 

-- என்று சோழன்  சிபி சக்கரவர்த்தியின் வரலாற்றை
புலவர் தாமப்பல் கண்ணனார்  புறநானூறு - 43 -ம் பாடலில் பதிகிறார்.

(வளரும்)

Thursday, July 18, 2019

அழகிய தமிழ் மொழி இது!...


                                                      பகுதி:  27

நெல்லைத்தமிழன்  கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது....

இதற்கு முன் பகுதி:   https://jeeveesblog.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D..


னகனும், விஜயனும் இமயச் சாரலில் கோலோச்சிய மன்னர்கள்.  சேரன் செங்குட்டுவனின் தந்தையார் *இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன்.  கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதி.  இமயம் வரை படையெடுத்துச்  சென்று  வெற்றி வாகை சூடியதால் இவன் இமயவரம்பன் என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறான்.   இவன் தம்பி @பல்யானை செல்கெழு குட்டுவன் என்று அழைக்கப்பட்டவன்.  தன் தமையனார் நெடுஞ்சேரலாதனுக்குப் பின் ப.செ.குட்டுவன்  பட்டம் சூட்டிக் கொண்டவன்.   தன் சிறிய தமையனாருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் சேரன் செங்குட்டுவனின் தமையன் #களக்காய்
கண்ணி நார்முடிச் சேரன்..   சித்தப்பாவும் தமையனும் ஏறத் தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்ட பின்பு சிலப்பதிகாரச் செங்குட்டுவன் ஆட்சிக்கு வருகிறான்.  & இவன் ஆட்சிகாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகக் கொள்ளலாம்.

இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன் வடபுலத்திற்குப் படையெடுத்து வந்த பொழுது எம்மைப் போன்ற அரசர் இங்கு இல்லையாதலால் அவன் இப்பகுதியை வெற்றி கொள்ள நேர்ந்தது என்ற இறுமாப்புடன் வடபுலத்துக்
குறுநில மன்னர்  கனக விசயர் சொன்ன வார்த்தைகள்  செங்குட்டுவனுக்கு ஆத்தரமூட்டி,  கனக விஜயரை வெற்றி  கொள்ளவும்  கண்ணகிக்கு சிலை எடுக்க கல் கொண்டு வரவும் செங்குட்டுவன் இமயமலை நோக்கி படையெடுத்துச் செல்கிறான்.

உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்ற மன்னர்களும் கனக விஜயர் பக்கம் சேர்ந்து கொண்டு பெரும் படையைக் களத்தில் இறக்கினர்.  யானைக் கூட்டத்தைக் கண்டு உவகை அடைந்த சிங்கம் போல் செங்குட்டுவன் எதிர்த்து வரும் படைப்பலத்தின்  மீது மேவினான்.

தேர்ப்படை வடவர்களின் ஆற்றல்   மிகுந்த சொத்து.  செங்குட்டுவன் அதைச்  சின்னாப்  பின்னமாக்கினான்.    வாய் கிழிய பேசிய   கனக--விஜயரோடு சேர்ந்து போரிட்ட ஐம்பத்திருவரும் ஒட்டு மொத்தமாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.  சாம்பல் பூசிய சைவத் துறவியர் போலவும்,  மயில் பீலி கையில் கொண்ட சமணத் துறவியர் போலவும், பண்ணிசைக்கும் பாணர் கூட்டம் போலவும் இசைக் கருவிகளை  தோளில் சுமந்த கூத்தர் போலவும் பகைவர்கள் பல்வேறு வேடம் பூண்டவராய் தப்பி ஓடினர்.

'வடதிசை இமயமலைச் சாரலில் வேதங்களை உயிர்மூச்சென ஓதும் அந்தணரின் ஓம குண்டத்து முத்தீ அணையாது பேணும் அருள் செயலை புரிவீர்களாக!' என்று செங்குட்டுவன் தன் படை வீரர்களுக்கு  அறிவுறுத்தினான்.  பொன் நிறமாக மின்னும் உச்சியுடைய இமயமலைச் சாரலில் ஒப்பற்ற பத்தினித் தெய்வம் கண்ணகியின் சிலை உரு அமைக்க  தகுந்த பெரும் பாறை தேடி படை வீரகள் புடை சூழ அமைச்சன் வில்லவன் கோதையுடன் புறப்பட்டான்.

தேடிப் போன மூலிகை கைவசமான  மாதிரி  குறைபாடுகள் இல்லாத ஒப்பற்ற சிறப்புகள் பொருந்திய பெருங்கல்லொன்று குட்டுவனின் நினைப்பிற்கு ஏற்றவாறு கிடைத்தது.   செங்குட்டுவனும் சிறைப்பட்ட கனக-விஜயர் முடித்தலையில் அக்கல்லை சுமக்கச் செய்தான்.  பெரும் படையுடன் கங்கைப்  பேராற்றின் நெடிய கரையடைந்து  பத்தினிக் கடவுளின் சிலை வடிப்பதற்காக  தெரிவு செய்த கல்லை நீர்ப்படை வல்லுனர்களின் அறிவுரைப்படி  கங்கையின் புனித நீரில் நீராட்டினான்.  நூற்றுவர் கன்னர் கங்கைப் பேராற்றின் தென் கரையிலே  மன்னன் தங்குவதற்காக மிக அழகான பாடி வீடு அமைத்திருந்தனர்.   அந்தப் பாடிவீட்டில்  தங்கி  பதினெட்டே நாழிகையில்  பகைவரைத் துறத்தியடித்து வெற்றிக்கனி பறிக்க விழுப்புண் ஏந்திய வீரப் பெருந்தகைகளுக்கு பரிசில்கள் வழங்கினான்.

அந்த சமயத்தில் $ மாடலன் அங்கு வந்தான்.  "மன்னர் பெருமானே, வாழ்க, வாழ்க!  மாதவி மடந்தை பாடிய   கானல்வரி பாடல், கனக விஜயர் தம் முடித்தலை நெரித்தது!   கடல் சூழ் உலகை ஆட்சி புரியும் பேறு பெற்றவனே, நீ  வாழ்க!" என்று வாழ்த்துகிறான்.

"நான்மறையாள!  நீ சொன்னதற்கு யாது பொருள்?" என்று கேட்கிறான்.  செங்குட்டுவனுக்கு  கோவலன் அநியாயமாகக் கொலையுண்டதும், தெய்வமாய் கண்ணகி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கியதும் தான் தெரிந்த செய்திகள்.   அவர்களின் முன் கதையை அறியான். அதனால் புகார் நகரச் செய்திகளில் தொடங்கி  மாதவி பாடிய கானல்வரி பாட்டின் தொடர்நிகழ்வாய் கோவலன் தன் காதல் மனையாள் கண்ணகியின் அருகாமை பெற்றது, இருவரும் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை வந்தது,  பின் கோவலன் கொலைப்பட்டது வரையான நிகழ்வுகளைச் சொல்கிறான். 

"மாமுனி    அகத்தியன் வதியூம் பொதிகை மலை வலம் வந்து  தெங்குமரித் துறையில் நீராடி என் ஊழ்வினையின் பயன் போலும், மதுரை மாநகர் அடைந்தேன்.   'கோவலன் தீதிலன்;  பாதுகாப்புக்காக என்னை அண்டி வந்த
கோவலன் இப்படி கொலைக்களப் பட்டானே!  அவனை நான் பாதுக்காக்கத் தவறினேனே' என்று கதறி அழுத மாதரி  இருள் மண்டிய நள்ளிரவில் எரிமூட்டி அதில் மாண்டு போனதாகக் கேள்விப்பட்ட செய்தியைச் சொன்னான்.   'இவர்கள் தீவினை என்னுடன் இவர்களைப் பிணைத்ததோ என்று மருகி கவுந்தி அடிகள் உண்ணா நோன்பு  மேற்கொண்டு அவர் உயிர் பிரிந்த சேதியையும் மாடலன் செங்குட்டுவனுக்கு செப்பினான்.   வழியில் தான் புகார் நகரத்திற்குச் சென்றதையும் அங்கு கோவலன் தந்தை மாசாத்துவானைச் சந்தித்தித்தையும்   மதுரைச் செய்திகள் கேள்விப்பட்டு அவர் பெருந்துயர் அடைந்து துடித்ததையும் சொன்னான்.

'தனது மகனுக்கு ஏற்பட்ட தீங்கு அவரை மிகவும் வாட்டியது.   தன் செல்வம் அனைத்தையும் வாரி வாரி தானமாக வழங்கினார்.   இந்திரனால் உருவாக்கப்பட்ட ஏழு அரங்குகள் கொண்ட இந்திர விகாரம் என்னும் தவப்பள்ளி சென்றார்.   இந்தப் பிறப்பே இறுதிப் பிறப்பாக இருக்க வேண்டி துறவு பூண ஆயத்தமானார்.   அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்  (6 x 50)  முந்நூற்றுவர் முன்னிலையில் மாசாத்துவான் தீட்சை ஏற்று துறவு பூண்டார்.  இது செய்தி கேள்விப்பட்டு கோவலனின் தாயாரும் பெரும் துயர் வாட்டியெடுத்து இறப்பை எய்தினார்' என்று மாடலன்  செங்குட்டுவனுக்குச் சொல்லி மேலும் தொடர்ந்தான்.

"கண்ணகியின் தந்தைக்கும் இதே நிலை தான்.   ஆசிவகர் முன் புண்ணியத்திற்குரிய  தானங்கள் செய்து துறவறம் பூண்டார் அவர்.  கண்ணகியின் தாயோ துயரச் செய்திகள் கேள்வியுற்று அப்போதே தன்  உயிர் பிரிந்தாள்.    கோவலன்--கண்ணகி நிலை கேட்டு மாதவி மடந்தை  மனம்
மருகிப் போயிற்று.   'நான் இனி நன்னெறியான துறவறம் செல்லத் துணிந்தேன்.  மணிமேகலையை வான்  துயர் உறுக்கும் கணிகையர் கோலம் பூணாது செய்க' என்று தன் தாய்  சித்ராபதியிடம் உறுதிபடச் சொல்லி தான் அணிந்திருந்த தலைமாலையை கூந்தலுடன் ஒருசேரக் களைந்து துறவறம் பூண்டாள்.   நான் சொன்ன செய்தி கேட்டோரில் தங்களை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டென்பதினால்,    புனித கங்கையில் நீராட வந்தேன்.    மன்னர் கோவே!  நின் கொற்றம் சிறக்க!    வாழிய  நீவிர்!" என்று செங்குட்டுவனை  மாடலன் வாழ்த்தினான்.

"வளம் பொருந்திய தென்னவன் நாடு,   பாண்டிய மன்னவன் இறந்து  பட்டதும்   யாது ஆயிற்று?  அதைச் சொல்வாயாக!" என்று செங்குட்டுவன் மாடலனிடம்  கேட்டான்.

(வளரும்)


======================================================================

 * சங்க இலக்கியம் பதிற்றுப் பத்தில்   இமயவரம்பன் குறித்து புலவர் குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல்கள் இரண்டாம் பத்தில் காணக்கிடைக்கின்றன.

@  பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தாக இவன் பெருமை  சொல்லும் பாடல்கள் காணப்படுகின்றன.

#  பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தாக இவன் சிறப்பு குறித்து காப்பியாற்று காப்பியனார் என்ற புலவர் பாடியுள்ளார்.  அகநானூற்றிலும் புலவர் கல்லாடனார் பதிந்துள்ள இவன் பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

$  சிலப்பதிகாரத்தில் பல இடங்களில்   உலா வரும் அந்தணன் மாடலன்.   ஒரு வகையில் மாடலனை வைத்தே   காப்பியத்தை இளங்கோ அடிகளார்  நகர்த்திக் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம்.

&  செங்குட்டுவன் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்று வரலாற்று
அறிஞர்  மு. இராகவையங்கார்  கூறுவார்..

Saturday, August 12, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

சென்ற பகுதி:

http://jeeveesblog.blogspot.in/2017/02/blog-post_63.html

பகுதி--26
ன்னன் செங்குட்டுவனின் கவனம் வாயிற்காவலர் மேல் படிந்தது.  'ஏது சேதி?'  என்று பார்வையிலேயே கேட்ட  மன்னனிடம் காவலன் ஒருவன் பணிந்து சொல்லத் தொடங்கினான்:

"மன்னர்கோவே!  பல்வேறு வகைப்பட்ட திறமையுடைய நாடக மகளிர் நூற்று இருவர்;  குயிலுவக் கருவியை கையாள்வோர் இருநூற்று எண்மர்;  தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தோர்;  நகை வேழம்பர்  நூற்றுவர்;    தேர்கள் நூறும்,  ஐந்நூறு யானைகளும், பிடரி மயிர் அலைபாயும் பதினாயிரம் புரவிகளும்,  வடபுலத்து விளையும் பொருள்கள் ஏற்றி வந்த இருபதினாயிரம் வண்டிகளும், தலைப்பாகையும் சட்டையும் இட்ட தங்கள் தலைவன்  தூதுவன் சஞ்சயனுடன் வந்திருக்கும் ஆயிரவரும் தலைவாயிலில் திரண்டிருக்கின்றனர்,  வில் கொடி செங்கோல் வேந்தே!" என்றான்.

"ஓ! நல்லது.  நாடக மகளிரும் குயலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு  இங்கு வர வழி காட்டுங்கள்.." என்று ஆணையிட்டான்  மன்னன்.

செங்கோல் வேந்தனின் திருவிளக்கு அவையத்து சஞ்சயன் வந்து தாழ்ந்து வணங்கி மன்னவனைப் போற்றித்  துதித்தான்.  தன்  கூட வந்திருந்த கலைஞர் பெருமக்களை மன்னவனுக்கு சஞ்சயன் இன்னார் இவர் என்று தெரிவித்து வணங்கினான்.  "தங்களுக்கு ஒரு சேதி சொல்ல வந்துள்ளேன் மன்னவா.." என்ற சஞ்சயன் அந்தச் சேதியை என்னவென்று கூறலானான்.

"மன்னாதி  மன்னா!  கடவுள் சிலை அமைக்க  கல் வேண்டி வடபுலம் நோக்கி செல்வது  தான் சேர மன்னனின் நோக்கம் எனில் ஓங்கிய இமயத்திலிருந்து  கல் எடுத்து அதனை கங்கை பேராற்றில் நீராட்டி, நின் நாட்டிற்கே கொண்டு வந்து தர சித்தமாக இருக்கிறோம் என்று நட்புச் சேதியை   நூற்றுவர் கன்னர் தகவலாக என் மூலம் அனுப்பியுள்ளனர், மன்னா!"  என்று சஞ்சயன் தான் தூதுவனாக வந்த காரணத்தைச் சொன்னான்.

"அப்படியா, சேதி!  **** நூற்றுவர் கன்னரின் நட்பு வாழ்க!" என்று வாழ்த்தித் தொடர்ந்தான் சேர மாமன்னன்.  "சஞ்சயரே!  கேட்டுக் கொள்ளவும்.. இப்பெரும் படை எழுச்சி  பெருந்தெய்வ உரு பொறிக்க இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வருவது மட்டுமல்ல!" என்று அவை அதிரச் சொன்னான். "காவா நா கொண்ட கனக, விஜயர் என்னும் இரு குறுநில மன்னர் தாம் கூட்டிய விருந்தொன்றில்  பிற மன்னருடன் கூடிக் குலவி அருதமிழாற்றல் அறியாது உளறியிருக்கின்றனர். அவர்கள் அறியாத தமிழர் தம் வீரத்தையும் பெருமையையும் அவருக்கு  நேரில் அறிவுறுத்தும் பொருட்டும் எம் வடபுலப் பயணம் ஏற்பாடு ஆகியிருக்கிறது, சஞ்சய!"  என்றான்.  "சஞ்சய!  நம் நட்பு பேணும் நூற்றுவர் கன்னருக்கும் என் சேதியாக ஒன்றைச் சொல்வாயாக!    கங்கை பேராற்றை யாமும் என் கூற்றுவப் படையினரும் கடந்து  செல்வதற்குத்  தேவையான பரிசில்களுக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு சொல்வாயாக!" என்றான்.

"மன்னர்க்கு மன்னவா!  தங்கள் ஆணை எங்களின் பெருமிதம்!  அப்படியேச் சொல்கிறேன்.."என்று வணங்கி அவை நீங்கிச் சென்றான் சஞ்சயன்.

சஞ்சயன் சென்ற பின்,  ஆயிரம் கஞ்சுகர் சந்தன, முத்துக் குவியலையும் தென்னவர் இட திறைப் பொருட்களோடு கொண்டு வந்து சேர்த்தனர்.   சேர்த்த பொருட்களுக்கு   அவை சேர்ந்தமைக்கு அடையாளமாக         இலட்சினை இட்ட திருவோலைகளை திருமுகம் எழுதுவோர் திறைப் பொருள் தந்த மன்னர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு வழங்கினர்.  அப்படியான திருமுகங்களைப் பெற்றுக் கொண்டு கஞ்சுகர் அவை நீங்கினர்.

திரை கடல் தான் திரண்டதோ என்று வியக்கும் வண்ணம் பெரும் படையை வடபுலம் நோக்கி நடத்திச் சென்ற செங்குட்டுவன் நூற்றுவர்  கன்னர் ஏற்கனவே ஏற்பாடு  செய்திருந்த ஓடங்களை உபயோகித்து கங்கை பேராற்று வங்கப் பரப்பின்  வடகரையை அடைந்தனர்.  பின் பகைவரை எதிர் கொள்ள பாடி வீடு அமைத்துத்  தங்கினர்.

கனக விஜயருக்கும் சேதி போனது.   உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன்,  சித்திரன், சிங்கன்,  தனுத்திரன், சிவேதன் என்ற எட்டு வட நாட்டு அரசர்களுடன் கூட்டு கொண்டு "தென் தமிழ் ஆற்றலைக் காண்போம், நாம்"    என்ற இறுமாப்புடன்   சேரமாமன்னனுடன் மோதினர்.

ஞாயிறு தென்படவில்லை.  அதன் வெயில் கதிரை துகில்  கொடிப் பந்தல்கள் விழுங்கின.  பதப்படுத்தப் பட்ட தோலால் போர்த்திய வளைந்த போர்ப்பறை, வெண்மை உமிழும் சங்கு, நீண்ட கொம்பு,  இடி இடித்தாற் போல முழங்கும் போர்முரசு,  இழும் என்னும் ஒலி நாதம் கொண்ட கஞ்சதாளம் எல்லாம் ஒரு சேர முழங்கி உயிர்க் குலை நடுநடுங்க திசைகள் அதிர விநோதமான ஓசைகள் பிளந்தன.

தோளில் வில் தாங்கிய வீரர்,  அதிவேகமாக தேரைச் செலுத்தும்
திறமையாளர்,  யானை மத்தகத்தின் மேல் அமர்ந்து வரும் யானை மறவர், குதிரை வீரர் என்று வரிசை வரிசையாக வருவோரின் அதகள ஆர்ப்பாட்டத்தில் நிலம் அதிர்ந்து புழுதி கிளம்பி யானைகள் தம் முதுகில் சுமந்த மணி நாவிலும்,   சங்குகளின் நாவிலும் நிரம்பி அவை தம் செய்தொழில் மறந்து ஓசை எழுப்ப முடியாது தவித்தன.

இரு பக்கப் படைகளும் ஒன்றில் ஒன்று மோதி ஒன்றாகின.  தோள்களும், தலைகளும் தனித்தனையாக சிதறுண்டு கிடந்த பிணக்குன்றின் மீதேறி  பேய்கள் கூத்தாடிக் களித்தன.   நிணம் பொருந்திய குறுதி ஆற்றில் பெண் பேய்கள் தம் கூந்தலை தாழத் தழைய விட்டு இரத்த குளியல் நிகழ்த்தின.

வலிமை கொண்ட தேர்ப்படை வடவரசர்களின் சிறப்பு.  வாளேந்திய சேர வீரப்படையினரின் கூர்வாள் தேர் மொட்டுக்களைக் கொய்தன.   கடுங்களிர்களின் பிடரியும்,  புரவிகளின் முதுகுகளும் பாழ்பட  கூற்றுவன் அந்தப் பகல் நேரத்திலேயே பல உயிர்களை நாசம் கொள்வான்  என்பதனை வடவரசர்கள் கண்கள் பிதுங்கக் கண்டனர்.  இறுதியில் போர்  ஓய்ந்து  வெற்றி வாகை சூடிய  செங்குட்டுவன் பனம் பூ தொடுத்த தும்பை வெளிர் மாலையை சுற்றியிருந்த படைவீரர்  ஆரவாரத்திற்கிடையே  தன் சென்னியில் சூட்டிக் கொண்டான்.


(தொடரும்)

========================================================================

****  நூற்றுவர்  கன்னர் என்ற மன்னன்,  கங்கையாற்றைக் கடந்து செங்குட்டுவன்   படைகள் செல்ல உதவினான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  சாதகர்ணி என்ற வடமொழிப்  பெயரே   நூற்றுவர் கன்னர் என்றாயிற்று என்பர் வரலாற்று ஆய்வாளர்கள்.

========================================================================


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Saturday, February 4, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

இதற்கு முன் பகுதி:    
http://jeeveesblog.blogspot.in/2016/10/blog-post_11.html

பகுதி—25

மாமன்னன்  செங்குட்டுவனின் வடபுலப் பயணம் பற்றிப் பறையறிவித்ததும் அந்தச் செய்தி  எங்கணும் பற்றிக் கொண்டது.

ஆசான்,  அரச நிமித்திகன், அமைச்சர், படைத்தலைவர்கள் ஒன்று கூடியிருக்க  மன்னன்,  மன்னன் பரம்பரை பாத்யதையான சிங்க முகம் சுமந்த சிங்காதனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான்.   

அவையில் வாழ்த்தொலி முழங்க, சந்னதம் கொண்ட குரலில் மாமன்னன் செங்குட்டுவன்  சொன்னான்:  


இமையமலையிலிருந்து இங்கு வந்திருந்த முனிவர்கள் சொன்னார்கள்.  கங்கை பேராற்றின் கரையைக் கடந்து  இமயமலையில் வில்,புலி, கயல் இலச்சினைகளை யான் பொறித்த பொழுது ‘எம்போலும் ஆற்றல் கொண்ட மன்னர் யாரும் இங்கு இல்லை போலும்’ என்று எக்காளமிட்ட  வடபுலத்து வேந்தர்களின் பழிச்சொல்லை முனிவர்கள் சொல்லக்   கேட்டேன்.  அது  சோழ, பாண்டிய அரசர்களும் எம்மை இகழ்வதற்கு இடம் கொடுத்த்தாகி விடும்.  இப்பொழுதே, இவ்விடத்தே சொல்கிறேன்.   “அவ்வடபுலத்து மன்னர் முடித்தலை மீது பெண்தெய்வத்திற்கு உரு வடித்தற்குரிய கல்லைச் சுமந்து வரச்செய்வேன்.    யான் அவ்வாறு செய்யேன் ஆயின் வீரப்போரில் வீரக்கழல் பூண்டு வாளேந்தி பகைவரை நடுங்கச் செய்யும் மன்னன் அல்லாது  பயன்மிகுந்த நாட்டில் எம் குடிமக்களை அஞ்சச் செய்யும் கொடுங்கோல் மன்ன்ன் என்று ஊர் பழி தூற்றும் இழிநிலையுடையேன் ஆவேன்..”  எனறு ஆவேசதுடன் சூளுரைத்தான்.

உடனே நிமித்திகன் எழுந்து, மன்னனை வாழ்த்தி, “உன் செந்தாமரையன்ன சிவந்தத் திருவடிகளைப் போற்றிப் பணியும் காலம்  இது, மன்னா!  காலம் கனிந்திருக்கிறது;   நேரமும் நல்ல நேரமாய் வாய்த்திருக்கிறது.  குறித்த திசை நோக்கிப் போருக்கு எழலாம்..” என்று ஜோதிட பலன் கூறினான்.
             
அது கேட்ட செங்குட்டுவன் படைத்தலைவனைப் பார்த்து “நம் வாளையும் குடையையும் வட்திசை நோக்கி புறப்படுமாறு செய்வாயாக..” என்று ஆணையிட்டான்..

மன்னனின்  ஆணைக்குத் தான் காத்திருந்த்து போல நிலமதிர போர்வீர்ர்கள் தங்களுக்கே உரித்த ஆரவாரத்துடன் வெற்றி முழக்கமிட்டனர்.  முரசுகள் முழங்க,  கொடிகள் காற்றில் அலைபாய்ந்தன.

அணிஅணியாக ஆரப்பரித்தப்  படைவீரர்களைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்களும், கரணத்தியலவர் முதலான் எண்பேராயக்தினரும், காலத்தைக் கணிப்போரும்,  அறம் கூறுவோரும் சென்றனர்.  இடையிடையே,”எம் மன்னர் புகழ் நீடுழி வாழ்க!’  என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பட்டத்து யானை வெற்றி வாளையும்,  வெண்கொற்றக் குடையினையும் சுமந்து  முன்னால் சென்றது.  அரண்மணை  அருமேயிருந்த கொற்றவை கோயில் அருகே அத்தனை பேரும் குழுமினர்.  வஞ்சிப்பூவும் பனம்பூவும் கலந்த  மாலையைச் சூடும் சேர மன்னனின் அரசவை மாந்தரும் அந்தக் கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டனர்.

அரும்படைத் தானை வீரர்க்கும்,  பெரும்படைத் தலைவர்க்கும் மன்னன் பெரும் சோறு அளித்தான்.  அவர்களை வைத்துக் கொண்டு பூவா வஞ்சியில்  பூத்த வஞ்சியாய் மன்னன் வஞ்சிப்பூமாலையைத் தன்  முடியில் சூட்டிக்கொண்டான்.  மற்ற நாட்டு மன்னர்கள் தாம் ஏந்தி வந்திருக்கும் திரைப் பொருட்களைச் செலுத்தாலாம் என்பதற்கு அழைப்பு விடுப்பது போல காலை முரசம் கடைவாயிலில் முழங்கியது.  

நிலவுக்கதிர் நீந்தும் நீள்முடியும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளை வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் செங்குட்டுவன் தன் தலையிலே அணிந்து  பெருமானின்  கோயிலை வலம் வந்து  வணங்கினான்.   அச்சமயத்தில் அந்தணர் ஏந்தி வந்த ஆகுதியின் நறும்புகை சூழ வஞ்சி மாலை நெஞ்சில் புரள  மன்னன்  பட்டத்து யானையின் பிடர்த்  தலை ஏறினான்.

“சேர மன்னன் செங்குங்குட்டுவன் கொற்றம் சிறக்க!..” என்ற வாழ்த்தொலிக்கிடையே  திருவனந்தபுரத்துக் கோயிலில் பாம்பணையின் மீது பள்ளி கொண்ட பெருமாளின்
சேடத்தைக் கொண்டு வந்து தந்து   சில ஆன்றோர் வாழ்த்தினர்.  ஏற்கனவே பிறாவா யாக்கைப் பெரியோனின் திருவடிகளைத் தன் தலை மீது வைத்திருந்தமையால்,  பெருமாளின் சேடத்தைப் பெற்று  சேரன் தன் திண்ணிய புஜத்தின் மீது தாங்கிக் கொண்டான்.

ஆடல் அரங்குகளில் நர்த்தனமிடும் நாடக மகளிர் கை கூப்பி வழி நெடுக நின்றிருந்தனர். “கொற்ற வேந்தே!  வாகை மாலையின் அழகில் தும்பை சேர அத்துடன் பனம்பூ மாலையும் சேர்ந்து நின் பட்டத்து யானையின் முகத்தே புரள்கின்றன.  வெண்கொற்றக் குடை நிழலில் நீ யானையின் முடித்தலை அமர்ந்து வருகையில் எம் கைவளைகளைக் கவர்வாய்!  எம் கண்கள் களிகொள்ளும் இவ்வழகிய தோற்றத்தை என்றும் நீ பெற்றிருப்பாயாக..” என்று வாழ்த்தினர்.

மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதரும் மன்னனின் வெற்றிக்காக வாழ்த்தினர்.  யானை வீரரும்,  குதிரை வீரரும்,  வாளேந்திய காலாட்படை மறவரும் வெற்றியைப் போற்றிப புகழதனர்.  அந்த சமயத்தில்  அசுரருடன் போரிட அமராவதியினின்றும் போர்ப்படையை நடத்திச் சென்ற இந்திரனே போன்று செங்குட்டுவன்  செம்மாந்து  தன் தலைநகரை விட்டு நீங்கினான்.  அலைகளின் ஆர்ப்பாட்டம் கொண்ட மேற்குக் கடற்கரையின் விளிம்பில் பிர்மாண்டமாக படைகள்  அணிவகுத்துச் சென்ற  பொழுது பின்புலக்காட்சியாய் மலைகளின் முதுகுகள் தெரிந்தன. கனைக்கும்  குதிரைகள் கொண்ட தேர்ப்படை நிலமதிர நகர  உலகநாயகன் நீலகிரி மலையின் சரிவில் அமைந்திருந்த பாடிவீட்டை நெருங்கினான்.   பாடிவீடு அடைந்ததும் யானை எருத்தத்து அமர்ந்திருந்த மன்னவன் கீழிறங்கி படை மறவர்கள் புடைசூழ பாடி வீட்டில் அமைதிருந்த அமளியில் அமர்ந்தான்.

படைகளின் இயக்கத்தால் எங்கணும் பேரொலி சூழ்ந்திருந்தது.  அந்த ஒலியின் வீச்சு அலைஅலையாய் விரிந்து வானத்திலும் ஒலித்தது.  விண்ணில் உலாவிய முனிவர்கள் அவ்வொலி கேட்டு, ‘இப்பெரிய நிலத்தை ஆளும் இந்திரனைப் போன்ற தீரனை நாமும் காண்போம்’ என்று கருதி மண்ணுலகம் இறங்கினர்.  மின்னலின் ஒளியையும் மயங்கச் செய்யும் பேரொளியொடு தன் முன் வந்திறங்கிய முனிவர் குழாத்தைக் கண்டு மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போன மன்னன் அமளியிலிருந்து எழுந்திருந்து பணிவன்புடன் அவர்களை நெருங்கி  வணங்கினான். “செஞ்சடைக் கடவுளின் அருளினால்  விளங்கிய  வஞ்சியில்  தோன்றிய மன்னனே கேட்பாயாக!  நாங்கள் பொதிகை செல்லும் வழியில் நின் பெரும் படையின்  ஒலியால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தோம்.  நீ இமயம் செல்லும் கருத்து அறிவோம்.  அருமறை கற்ற அந்தணர் ஆங்கு வாழ்கின்றனர்.  பெருநில மன்னனே! அவர்களைப் பாதுகாத்தல் நின் கடமையாகும்”என்று கூறி செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர்.

முனிபுங்கவர்கள் அவ்விடம் நீங்கியதும், “வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க!” என்ற வாழ்த்தொலியோடு  கொங்கணக் கூத்தரும் கர்நாடகக் கூத்தரும் வந்தனர்.  கூத்தர் குலத்திற்கான ஒப்பனை அவர் பூண்டிருந்தது தூக்கலாகத் தெரிந்தது.   தழைத்த மாலையைத் தலையில் சுற்றியவராய்,  மணிவடங்கள்  சுமந்த இளம் நகில்களைக்  கொண்டவராய்,  கயல் நெடுங்கண்ணினராய் திகழ்ந்த ஆடல் மகளிரும் அவருடன் இருந்தனர்.   ‘கருங்குயில்கள் பாடின;  இன வண்டினம் யாழ் இசைத்தன;  அரும்புகள் அலரும் பருவமாய் இளவேனில் காலமும் வந்தது;  ஆனால் எம் காதலரோ  இன்னும் வரவில்லை..” என்னும்  பொருள் பொதிந்த மாதர்ப்பாணி வரிப்பாடலை இசைத்துக்  கொண்டே அவர்கள் வந்தது மயக்கம் தருவதாய் இருந்தது.

‘கலகலக்கும் வளையல் அணிந்த நங்கையே!  எழுவாய்; கோலம்கொள்வாய்! (ஒப்பனை பூணுவாய்!)  கடிதாக இடி இடித்த  உறுமலோடு கார்க்காலம் வந்த்து, காணாய்!   சென்ற காரியம்  முடித்துத் திரும்பும் காதலரைச் சுமந்த தேரும் வந்தது, பாராய்!’   என்று முன் இசைத்த வரிப்பாடலுக்கு வைப்பாடலே பதிலாய்  இசைத்தபடி    பின் வந்த ஆடல் மகளிருடன் குடகர்கள்  மாமன்னன் முன் வரிசையிட்டு நின்றனர்.,

அவர்களுக்குப் பின் ஓவர்கள் வந்தனர்.  அவர்கள் வருகையிலேயே “வாள்வினை முடித்து மறவாள் வேந்தன் ஊழி ஊழி வாழி” என்று வாழ்த்தொலிகளுடன் வந்தனர்.  ஆடலாசிரியன் வழிகாட்ட  அங்கு குழுமியிருந்த அத்தனை இசைக்கலைஞர்களுக்கும்   பொன்னும், முத்தும், பவழமுமாய் மன்னன் அணிகலன்களை வாரி வழங்கினான்.

அந்த  சமயத்தில் தான் வாயிற்காவலர் ஏதோ சேதி சொல்வது போல வந்து பணிந்து நின்றனர்.

(வளரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.




Tuesday, October 11, 2016

அழகிய தமிழ் மொழி இது!....

பகுதி—24

மயத்தில் வில் கொடி பொறித்த குடி சேரர் குடி.  அந்தக்குடிப் பெருமகன் சேர அரசன் செங்குட்டுவன்.  அத்தகைய சிறப்பு கொண்ட மாமன்னன் செங்குட்டுவன் தன் நாட்டு மலைவளம் காண விரும்பி பேரியாற்றங்கரையில் தன் படைவீரர்கள், அரசு அதிகாரிகள், ஆயமகளிர் புடைசூழ தண்டு அமைத்து தங்கியிருக்கிறான்.   செங்குட்டுவனின்  இளவல் இளங்கோவும்,  அரசியார் வேண்மாளும் உடனருந்தனர். அப்பொழுது மன்னனைப் பார்ந்து தங்கள் நலன் தெரிவிக்க பெருங்கூட்டமாக  குறவக்குடி பெருமக்கள் பெர்ளுமளவு பரிசல்களைத் தங்கள் தலையில் சுமந்து வந்தனர்.

மன்னனை வாழ்த்தி அவன் ஆட்சியில் தாங்கள் எந்தக் குறையும் இன்றி வளமொடு வாழும் பாங்கினைச் சொல்லும் பொழுது தாங்கள் கண்ட அந்த அதிசய நிகழ்வை மன்னனுக்கு வியப்புடன் விவரித்தனர்.  “வாழ்க நின் கொற்றம், மன்னா!  அன்று நாங்கள் கண்ட அந்தக் காட்சியை எம் முன்னோர் கூட தம் வாழ்நாளில் கண்டதில்லை!  காட்டு வேங்கை மர நிழலில் துயரமே வடிவாய்க் கொண்ட பெண் ஒருத்தியைக் கண்டோம்.  வானிலிருந்து அந்த தேவதை மீது மலர் மாரிப் பொழிந்தது.  சற்று நேரத்தில் வானோர் புடைசூழ்ந்து போற்றி வாழ்த்த  அவள் வானகம் சென்றதை எம் கண்களால் பார்த்தோம்..  அந்தப் பெண் எந்நாட்டைச் சேர்ந்தவளோ?..  யார் பெற்ற மகளோ?..  நின் நாட்டில் நிகழ்ந்த இந்த நிகழ்வை  நாங்கள் இதற்கு முன் எம் நினைப்பிலும் அறியோம்!” என்று செங்குட்டுவனுக்கு தாம் கண்ட காட்சியை வியப்போடு விவரித்தனர்.

அப்பொழுது அரசனோடு இருந்த தண் தமிழ் ஆசான் சீத்தலை சாத்தனார்,”அரசே!  கண்ணகிக்கு நேர்ந்ததெல்லாம் யான் அறிவேன்.. அதுப் பற்றிச் சொல்வேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.  “முற்பிறப்பில் செய்த தீவினை,  கண்ணகியின் காற்  சிலம்பைக் கருவியாக்கிக் கொண்டு  அவள் கணவன் கோவலனின் உயிரைப் பறிப்பதற்குக் காரணமாயிற்று.  கண்ணகி தன்  எஞ்சிய காற்சிலம்பை பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் மன்னன் முன் வழக்காடி உடைத்து உண்மையை நிலைநாட்டினாள்.  கோவலன் கள்ளவனல்ல என்றும் தன் பிழையே அவன் உயிர் பறிக்கக் காரணமாயிற்று என்றும் உணர்ந்தக் கணமே  பாண்டியன்  அரசுக் கட்டிலிலிருந்து  நிலைகுலைந்து விழுந்து தன் வளைந்த செங்கோலை நிமிர்த்தினான்.  அரசன் இறந்தக் கணமே  தன் உயிர் கொண்டு மன்னன் உயிரைத் தேடித் தொடர்ந்தாற் போல அரசர் தேவி கோப்பெருந்தேவி மன்னன் மார் மீது விழுந்து உயிர் துறந்தாள். ஊழ்வினையின் 
கோரத்தாண்டவமாய்  மதுரை மூதுர்  தீ வசப்பட்ட்தும்,  தனித்தவளாய் கண்ணகி தன் நாடு செல்லாமல் நின் நாட்டிற்கு வந்தனள்..” என்றார்.

“ஆராயாது செயல்பட்டதால் பாண்டியர்க்கு பழி வந்து சேர்ந்த்து. ஆனால் அப்பழிச்சொல் எம்மை போன்ற வேந்தர்க்குத் தெரியும் முன்னே, தான் உயிர் நீத்த செய்தி எல்லோரையும் வந்தடையுமாறு வல்வினை வளைத்த கோலை பாண்டியனின் செல் உயிர் நிமிர்ந்திச் செங்கோலாக்கியது..” என்ற செங்குட்டுவன் மிகுந்த யோசனை வயப்பட்டான். ”மழை பெய்யாது பொய்க்குமாயின்  அரசர்க்கு அதுவே மிகப்பெரிய அச்சமாகிப் போகிறது.. யாதொரு காரணத்தினாலும் பிறவியெடுத்த உயிர்கள் வருந்துமாயின் அதுவே அரசர்க்கும் பேரச்சம்..  குடிமக்கள்  அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது  தொழுதற்கு ஏதுமில்லை..” என்று உணர்ந்து சொன்னான் சேர மன்னன்.  

தான் சொல்வதையெல்லாம் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் தன் தேவியை நோக்கி,   “கணவன் உயிர் செல்வழி தன் உயிரையும் செலுத்திய மாண்பு பொருந்திய கோப்பெருந்தேவி -யும்  சினத்துடன் நம் நாடடைந்த சேயிழை கண்ணகியும் நம் போற்றுதலுக்குரியவர் ஆயினும் இவ்விருவருள் நீ வியக்கத்தக்கவர் யாரெனச் சொல்வாயாக..” என்றான்.

ஒரு கணமே யோசித்த சேரமாதேவி, “பாண்டிமாதேவி கோப்பெருந்தேவி தன் கணவனுடன் உடன்  உயிர் துறந்து வானுலகம் ஏகினாள் ஆதலின் அங்கு அவள் பெரும் சிறப்பை நிச்சயம் பெறுவாள்.  நாம் நம் நாட்டை அடைந்த பத்தினிக் கடவளை பரசல் வேண்டும்..(போற்றித் துதிக்க வேண்டும்)” என்று சொல்ல செங்குட்டுவன் முகம் மலர்ந்தான்.  ‘இது குறித்துச் செய்ய வேண்டுவன யாது?’  என்று குறிப்பால் உணர்த்துவது போன்று  நூலறி புலவரை மன்னன் நோக்கினான்.    

அவரோ, “ஒல்கா முறைமை பொருந்திய பொதிய மலையிலாயினும், வில் தலை கொண்ட வியன்  பேர் இமயத்தாயினும் கல்லினை எடுத்து வந்தால் அது கடவுள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும்.  பொதிய மலையிலிருந்து எடுத்து வருவோம் ஆயின் காவிரிப் புனலினும்,  இமயத்திலிருந்து எனில் கங்கைபேர் ஆற்றிலும்  எடுத்து வரும் கல்லை நீராட்டி தூய்மை செய்வித்தல் நலமுடையதாகும்..” என்றனர்.

அது கேட்ட செங்குட்டுவனின் முகத்தில் பெருமிதம் பொங்கியது. “பக்கத்திலிருக்கும்  பொதியக் குன்றத்து   கல்லெடுத்து வந்து முதுநீர் காவிரியில் நீராட்டுதல்,  வீரமும் வாளும் வேலும் கொண்ட சேரர் குடியோருக்கு சிறப்பாக அமையாது.  ஆதலின் இமையத்துக் கல் எடுத்து வருதலே சாலச்சிறக்கும்.  பெருமலையரசன், மாட்சிமை கொண்ட பத்தினிக் கடவுளுக்கு கல தாரான் எனில்  குடைநாள் கொள்ளும் வஞ்சியையும், அரசர்க்கு வெற்றிமாலையாகிப் போகும் கொற்ற வஞ்சியையும், வீரச்சிறப்பை அடையும் நெடுமாராய வஞ்சியையும், பகைவர் நாட்டை தீயிட்டுக்
கொளுத்தும் வியன்பெரு வஞ்சியையும்,  சிறப்புமிக்க பெருஞ்சோற்று வஞ்சியையும்,  குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், பகைவர் அஞ்ச பணதோட்டுடன் படைகளை அணியச் செய்து  பூவா வஞ்சியாம் நம் வஞ்சி நகரின்  புறத்தே பகைவருடன் பொருந்தக் காத்திருக்கும் எம் வாளுக்கு வஞ்சி மாலை சூடுவோம்..” என்றான்.

“பல்லாண்டு வாழ்க நின் கொற்றம்..” என்று வாழ்த்தி அமைச்சன் வில்லவன் கோதை சொல்லலூற்றான்.  “கொங்கர்தம் செங்களத்தில் சோழ—பாண்டியர் தோற்று  புலிக்கொடியையும் கயற்கொடியையும் இழந்து ஓடியமை எல்லாத் திக்கிலும் பரவிற்று.  கொங்கரும், கலிங்கரும், கருநாடகரும், வங்காளரும், கங்கரும்  வடவாரியருடன் சேர்ந்து உன்னை எதிர்கொண்ட பொழுது அவர்களின் யானைப்படையை தனி ஒருவனாக நீ துவம்சம் செய்த காட்சி  இன்னும் என் மனக்கண்ணில் பதிந்துள்ளது. கங்கை பேரியாற்று நீர் நிலையில் உனது தாயாரை நீராடச் செய்த அந்த நாள் மறக்கமுடியாத ஒன்று.   ஆரிய மன்னர் ஆயிரிருவரை நீ ஒருவனே எதிர்கொண்டு புறமுதுகிட்டு ஓடச்செய்த வெற்றியை யாராலும் மறக்கவே முடியாது.  இமிழ் கடல் சூழ் நிலப்பரப்பு பூராவையும் நீ தமிழ்நாடாக்க விரும்பினாலும் உன்னை எதிர்ப்போர் இந்தாளில் யாருமே இல்லை.  கடவுள் சிலையமைக்க ஒரு கல்லுக்காக இமையம் நீ செல்வாயாயின்,  வடதிசை வேந்தர்க்கெல்லாம்  தண்டமிழ் நாட்டின் இலச்சினைகளாகிய  வில்,கயல், புலி பொறித்த முடங்கல்களை வரைந்து அனுப்புவாயாக..” என்றான்.

அடுத்து அழும்பில் வேள் என்னும் அமைச்சன் எழுந்து தன் கருத்தைக் கூறலானான்:  “அரசர்க்கரசே!  நான் சுருக்கமாகவே சொல்கிறேன். இந் நாவலந் தீவில் பகைநாட்டு ஒன்றர் படை காவல் மிக்க நம் வஞ்சிக்கோட்டைப் புறத்தே அல்லும் பகலும் காத்து கிடப்பர்.  ஆதலான் உன் வடநாட்டு வழிப்பயணத்தைப் பற்றி பறையறிவித்து நம் நாட்டில் தெரிவித்தால் போதும்,  காத்துக் கிடக்கும் ஒற்றர் இதையே பெரும் சேதியாக தம் நாட்டில் கொண்டு சேர்ப்பர்.  ஆக  நம் பங்கில் அந்தக் காரியம் ஒன்றே போதும்!”  என்றான்.

அழும்பில் வேள் சொன்னதை அக்கணமே ஏற்றான் சேரன் செங்குட்டுவன்.  தன் வடநாட்டுப் பயணத்தை பறையறிவித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அறிவித்து தானும் வஞ்சி நகர் மீண்டான்.

“வாழ்க எம் மன்னவர் பெருந்தகை!.  ஊழிதோறும் ஊழி நம் மன்னனனே இவ்வுலகைக் காப்பானாக!  வில் தலை கொண்ட பேரிமையத்திலிருந்து பத்தினித் தெய்வத்திற்கு பெரும்சிலை அமைக்க கல் கொண்டு மீள்வான் நம் பேரரசன்!  ஆதலின் வடதிசை மன்னரெல்லாம் இடுதிறைச் செல்வத்தோடு வந்து எம்மன்னரை எதிர்நோக்கி அளிப்பீராக!..  அவ்வாறு செய்யாது போவீராயின்  கடல் நடுவே கடம்பினை வீழ்த்திய போரில் பெற்ற பெருமையையும், இமையத்தில் விற்கொடி பொறித்த வீரம் விளைந்த செயலையும் செவிமடுத்தாவது பணிந்து போவீராக!..  எம் மன்னரின் நாடு போற்றும் வீர பராக்கிரமங்களை கேட்டுப் பணிந்து போக விருப்பம் இல்லையாயின்,  நும் மனைவியரின் நெருக்கத்தைத் துறந்து மீதி வாழ்க்கைக்குத் துணையாகப் போகும் தவத்தினை மேற்கொண்டு பிழைத்துப்  போவீராக!   வீரக்கழல் தரித்த மாமன்னனின் திருமேனி வாழ்கவே!” 

--- பட்டத்து யானை பிடர்த்தலை முரசம் ஏற்றி இவ்வாறு அறையும் பறைஒலி வஞ்சி மாநகர் வீதியெங்கும் முழங்கி  மக்களை வெற்றிக் களிப்பில் எக்காளமிட வைத்தது...


(வளரும்..)
   
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி. 



Friday, September 30, 2016

அழகிய தமிழ் மொழி இது!...


                           
                           
      வஞ்சிக் காண்டத்திற்கு  நுழைவாயில்   



கோவலன் இரண்டு பெண்டாட்டிக்காரன்.  கண்ணகியின் கணவன்.  தாலி கட்டி மனைவீயாக உரிமையாக்கிக் கொள்ளாத மாதவியை மனைவி ஸ்தானத்திலேயே வைத்துக் கொண்டு அவளுடன் வாழ்கிறான்.

கோவலனின் மேல்,  அவன் கொண்டிருந்த இசை ஞானத்தின்  மேல்  அவனின் எதிர்கால நலங்களின்
மேல் அக்கறையும் அன்பும் கொண்டவள் மாதவி. இவளோடையே அதிக காலம் கோவலன் வாழ்க்கை நடத்தியதும் அல்லாமல் ஒரு பெண் குழந்தையையும் தந்திருக்கிறான்

சொல்லப்போனால் கோவலனுக்கு ஒன்று என்றால் அதைக் கேள்விப்பட்ட ஷணத்திலேயே தாங்கிக்கொள்ள முடியாமல் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி மாதிரி உடனே உயிர் போகக் கூடிய நிலையில் இருப்பவள் மாதவி தான். அதற்காக மாதவி உயிர் விட வேண்டும் என்று   நான் சொல்லவில்லை. எல்லோரும் இப்படியே உயிர் விட்டால் எப்படி?.. அவர்கள் நெருக்கமாக வாழ்ந்த தீவிரத்தின் அடிப்படையில் சொன்னேன்

கோவலன் தன்னை விட்டுப் பிரிந்து  ண்ணகியுடன் சேர்ந்து விட்டான் என்றவுடனேயே மனத்தளவில் அதை வரவேற்று இவ்வளவு  தான்  தன்  பிராப்தம் என்று ஏற்றுக் கொண்டு விட்டவள்  மாதவி.

அந்த மனநிலை ஏன் ஏற்பட்டது என்றால் என்ன இருந்தாலும் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டவனுடன் வாழ்க்கை நடத்தியவள் அவள். கோவலனிடம் கண்ணகிக்கான உரிமையை மதித்து ஏற்றுக் கொண்டு அவனுக்கு அந்த மடல் அனுப்பியவுடனேயே அவனது எதிர்கால மகிழ்ச்சியான  வாழ்க்கைக்காக தன்னைக் கத்தரித்துக் கொண்டவள்.   அந்தளவுக்கு கோவலனிடம் அவள் நேசிப்பு இருந்திருக்கிறது.  

இப்பொழுது கண்ணகியைப் பார்ப்போம். அழகான கணவனை அக்னி வலம் வந்து கைப்பிடித்த போதும் இன்னொரு பெண்ணிடம் அவனைப் பறிகொடுத்தவள் அவள்

கணவன் தன்னைக் கைவிட்டுப் போனபின்பு கூட  ஒரு நாள் திரும்பி  வருவான் என்னும் நம்பிக்கையில், அவன் நினைவில் மாசு படாமல் காலம் தள்ளியவள் அவள். அவளை மறந்தே போன கணவன் பல காலம் கழித்து சொத்தெல்லாம் மாதவியுடனான் நெருக்கத்தில் இழந்து விட்டு அவளைத் தேடி வந்த பொழுது கொஞ்சமும் முகம் சுளிக்காமல் 'எல்லாத்தையும்' மறக்கடித்துக் கொண்டு அவனது வியாபார விருத்திக்காக, 'சிலம்புள; கொள்க' என்று தந்தவள்

தந்தது மட்டுமல்ல, அவன் அருகாமையையே பெரும் பேறாகக் கொண்டு அவனுடன் காடு, மலை, பருக்கைக் கற்களின் புண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அவனுடன் மதுரை சென்றவள். பாவி அவளுக்கு மாதவியிடம் கோவலன் போன பிறகு ஒருநாள் கூட சந்தோஷமாக அவனுடன் வாழக் கொடுத்து வைக்க வில்லை.

இன்று நேற்றல்ல, ஆதி காலத்திலிருந்தே இது ஆண் ஆதிக்க சமுதாயம்.


மனம்  நொறுங்கிப் போகும்  சோதனைத் துன்பங்களைத் தூக்கிச் சுமந்தக் காரணத்தை   ஒட்டியே நளாயினியின் கற்பைப்  போற்றிப்  பட்டயம் கொடுத்த நாடு இது.

ஆனால் யாரும் செய்யாத ஒரு அரிய செயலை தாலி கட்டிய கணவனுக்குச்  செய்திருக்கிறாள்  கண்ணகி.   'கள்வன்' என்று ஊருக்குக் காட்டப்பட்டவனின் பக்க நியாயத்தை

உலகோருக்குத் தெரியப்படுத்தி, அவன் கள்வன் இல்லை என்று மன்னன் சபையில் நிரூப்பித்த ஒரு காரியம் இருக்கே, அது கோவலனின் செத்துப் போன ஆத்மா கூட சந்தோஷத்தில் துடிக்கிற காரியம். இதை மட்டும் அவள் செய்யவில்லை என்றால் கள்வனாகவே கருதப்பட்டு கோவலனக்கு அவன் குடும்பத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டிருக்கும். மதுரையை எரித்தது, அவள் அல்ல.  அவள் ஆத்திரத்தை உபயோகப்படுத்திக்  கொண்ட  ஊழ்வினையின் ஏற்பாடு அது.



 அவள் துயரை மதுராபதித் தெய்வமே காணச் சகிக்காமல் அவளை வழிநடத்துகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது. எதனால், யாரால் இந்த இழப்புகள் ஏற்பட்டன என்று தெரிந்ததும், கண்ணகி சொன்ன கடைசி வாக்கியம் என்ன தெரியுமா? 'யான் தீவினையுடையேன்!' என்று கணவனுக்கு வந்த தீவினை தன்னைப் படுத்தியப் பாட்டை தனக்காக என்று ஏற்றுக் கொள்கிறாள்.

அதனால் தான் அவள் பெண் தெய்வம்.

கணவனுடன் ஒழுங்காக வாழ கொடுத்து வைக்காமலேயே, கணவனின் ஊழ்வினையை தன் வினையாகச் சுமந்த தெய்வம். கோவலனின் ஊழ்வினையின் தீயபலன் கூடப் பாருங்கள், அவனைப் பெற்றவர்களின் மீதோ, அவனுடன் கொஞ்சிக் குலவி வாழ்ககை நடத்திய மாதவியின் மீதோ சாராமல், இவள் தலையில் வந்து விடிகிறது.

ஏனென்றால் கோவலனால் தாலி கட்டப்பட்ட, அவனுக்கான ஒரே மனைவி கண்ணகி ஒருத்ததியே!   மனைவி துன்பத்தை கணவன் சுமக்கிறானோ இல்லையோ, கணவன் துன்பத்தை மனைவி தான் சுமக்க வேண்டும் என்பது இந்த நாட்டில் வழிவழி வந்த பாடம், பண்பாடு, பகுத்தறிவு, சட்டம் 
 எல்லாம்!

மாதவி மீது லவலேசமும் குற்றம் சொல்லவில்லை. அவரவருக்கு வாய்த்தது என்னவோ அது நடந்திருக்கிறது. கீதோபதேசம் என்னவென்று நமக்குத் தெரியும்


இவருக்குத் தான் இது போய்ச் சேர வேண்டும் என்று நிர்ணயிக்க நாம் யார்?..  புகழாரம் எவர் கழுத்தில் விழுகிறதோ, அவர் கழுத்தில் விழுகிறது. நாம் பார்வையாளர்களாகவே இருந்து  காப்பிய ஆசிரியர் இளங்கோ அடிகளார் சொல்ல வந்ததை உள்வாங்கிக் கொள்வது மேம்பட்ட ரசனைகளை  ஊக்குவிக்கும்.


இனி  வஞ்சிக் காண்டத்திற்குள்  நுழைவோம்.
Related Posts with Thumbnails