மின் நூல்

Friday, December 22, 2017

பாரதியார் கதை -3

                                                                           3


பாரதியாரின் அத்தை குப்பம்மாளுக்கு ருக்மணி என்று இன்னொரு பெயரும் உண்டு.   அவரைப் பற்றிய  பல குறிப்புகளில் ருக்மணி என்றே காணப்படுவதால் பெயர்க் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நாமும் ருக்மணி என்றே பாரதியாரின் அத்தையை இனி குறிப்பிடுவோம். பாரதியின் அத்தை ருக்மணியின் கணவர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் சிவன்.

பாரதியாருக்கு ஒரு தங்கை உண்டு.  அவர் பெயர் லஷ்மி.  லஷ்மியின் கணவர் பெயர் கேதர்நாத் சிவன்.

கேதர் நாத் சிவனின் அண்ணன் விஸ்வநாதன் சிவன்.  இவரின் மனைவி பார்வதி.  இந்தப் பார்வதி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் சகோதரி.

1897-ம்  வருடம்  ஜூன் மாதம்  27-ம்  தேதி.  இந்தத் திருநாள்  தான்  சுப்பிரமணிய பாரதியாருக்கும்  செல்லம்மாவுக்கு திருமண நன்னாள்.

அதே நன்னாள் அன்று  பாரதியாரின் தங்கை  லஷ்மி-- கேதர்நாத் சிவன் திருமணமும்,  விஸ்வநாதன் சிவன்-- பார்வதியின் திருமணமும் நடந்திருக்கின்றன.

பாரதியாரின் தங்கை கணவரின் அண்ணன் பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் தமக்கையை மணந்து கொண்டார்.

ஒரே நாளில் ஒரே மேடையில் குடும்ப உறவுகளுக்குள்ளேயே நடைபெற்ற மூன்று திருமணங்கள். 

அக்காலத்தில் ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை போகும் பக்தர்களுக்கு  அன்னதானம் செய்யும் கைங்கரியத்தை  பாரதியாரின் தாத்தா புலி சுப்பையரும்,  கிருஷ்ண சிவனின் தந்தை மீனாட்சி வல்லபரும் செய்து வந்தனர்.   அவர்களின் தருமச்  செயல்களை  மெச்சும் காரியமாக அந்நாளைய ராமநாதபுரம் சேதுபதி ராஜா தன் ராஜாங்க பிரதிநிதிகளை அனுப்பி வைத்து இந்த மூன்று திருமணங்களையும் சிறப்பாக நடத்தி வைத்தார்.

தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள சின்ன கிராமம் மாகுளம். இந்த கிராமத்தில் கிருஷ்ண சிவனின் முன்னோர்கள் காலத்திலிருந்து அவர்களுக்குச் சொந்தமான நிறைய நிலபுலன்கள் இருந்தன.   1857- 58 காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் நீர் வற்றிப் போய் பயிர் நிலங்கள் எல்லாம்  தரிசுகளாகி மிகப் பெரிய வறட்சியில்  அந்தப்  பகுதியே சிக்கிக் கொண்டது.  இனிமேல் இங்கிருந்து வாழ முடியாது என்ற சூழலில் மீனாட்சி வல்லபரின் தமையனார் வெங்கடேஸ்வர சிவன் கடுமையான வழிப்பயணங்களை மேற்கொண்டு  ஒரு வழியாக காசிக்கு வந்து சேர்ந்தார்.

காசியில் காலூன்றி அவர் காலத்தில் வாங்கிப்  போட்ட மனைகளில் சங்கர மடமும் சிவ மடமும் கட்டப்பட்டன.   பிரிட்டிஷார் காலத்தில் கூட கோயில் சார்ந்த மனைகள், மடங்கள் இவற்றிற்கு வரி விலக்குகள்  அளித்திருந்தார்கள்.   அதனால் வீட்டோடு சேர்ந்து  கோயிலும் உருவாகின.   சிவ மடத்திலும் சித்தேஸ்வரன், சித்தேஸ்வரி  என்று மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தனர்.  இன்றும் இக் கோயில்களை சிவ மடத்தில்  காணலாம்.   காஞ்சிப் பெரியவர் இந்த மடத்திற்கு வந்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறார்.  இக்கோயிலில் நந்திகேஸ்வரர் மீது நாகம் இருப்பது இன்னொரு அதிசயம்.

பாரதியின் தகப்பனார் சின்னசாமி அய்யர் இறந்த பொழுது காசியிலிருந்த சின்னசாமி அய்யரின் சகோதரி ருக்மணி தம்பியின் இறுதிச் சடங்குகளுக்காக எட்டையபுரம் வந்தவர்,  காசி திரும்பும் பொழுது தன்னுடன் பதினாறு வயது பாரதியையும் அழைத்துச் செல்கிறார்.  பாரதி மட்டுமல்ல, பாரதியாரின் பாட்டி, கிருஷணன் சிவத்தின் தாயார், பாட்டி என்று அத்தனை பேரையும் கூட்டிச் செல்கிறார்.   ருக்மணி அம்மையாரின் அன்பையும் விட்டுக் கொடுக்காத குடும்ப பாசத்தையும் இந்தக் காலப் பார்வையில் நினைத்துப்  பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.


பாரதிக்கு காசியில் புத்தகங்களில் மேல் இருந்த காதலைத் தீர்த்து வைத்தது தியாசாபிகல் சொசைட்டி தான்.    ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் என்று எல்லா எழுத்துச் சிற்பிகளின் நூல்களும் பாரதியாருக்கு அங்கு வாசிக்கக்  கிடைத்தன.    அதற்காகவே தினமும்  மாலை வேளைகளில் நாள் தவறாமல் பாரதி காசி தியாசாபில்  சொசைட்டிக்குச் செல்வார்.  சொசைட்டியும் பாரதியார் வீட்டுக்கு அருகாமையில் இருந்திருக்கிறது..   சொசைட்டிக்கு போகும் வழியிலேயே அன்னி பெசண்ட் அம்மையார் தங்கியிருந்த வீடு இருந்தது.    கோட்டு, வேஷ்டி, தலைப்பாகை என்று  வித்தியாசமான உடை அலங்காரத்துடன் தன்  வீட்டைக் கடந்து  செல்லும் அந்த இளைஞன்  அன்னிபெசண்ட் அம்மையாரின்  கவனத்தைக்  கவர்ந்திருக்கிறான்.

ஒரு நாள் தன் வீட்டு ஜன்னல் அருகே அமர்ந்திருந்த அம்மையார்  அவர் வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தலைப்பாகை  இளைஞனைப்  பார்த்ததும் தன்னை மீறிய ஆவலில், "ஹலோ.. " என்று உரக்கக் கூவி அழைத்திருக்கிறார்.   திரும்பிப்  பார்த்த பாரதியை, 'இங்கே வா' என்று சைகை காட்டி அழைத்து, "நீ யார்ன்னு நான்  தெரிஞ்சிக்கலாமா?"  என்று கேட்டிருக்கிறார்.

"நான் சுப்பிரமணிய பாரதி..." என்று நெஞ்சை நிமிர்த்தி தன்னை அம்மையாருக்கு அறிமுகப்படுத்திக்  கொண்டார். "எனக்கு வரலாற்று நாயகர்களையும்,  ஷெல்லி போன்ற கவிஞர்களையும் மிகவும் பிடிக்கும்.  அவர்கள் எழுத்தைப் படிக்கவும், அவர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவும் தான் தினசரி தியாசாபிகல் சொசைட்டிக்கு செல்கிறேன்.   இங்கே அருகில் என் அத்தை வீட்டில் தங்கியிருக்கிறேன்." என்று பாரதி தன்னைப்  பற்றிச் சென்னனும் அவரை வீட்டுக்குள் அழைத்து அம்மையார் பேச்சுக்  கொடுத்திருக்கிறார்.;

"எனக்கு ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் ஒன்றும் சுத்தமாகப்
பிடிக்கவில்லை.  அவர்களை எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் துரத்தி விட வேண்டும் என்று அல்லும் பகலும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அதற்காக என் பள்ளித் தோழர்கள் எட்டு பேரைக்  கொண்டு இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை அமைத்திருக்கிறேன்.  ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு விரட்டுவதில் நாம் பயம் கொள்ளலாகாது.   துணிந்து ஏதாவது  செய்தாக வேண்டும்.." என்று பாரதியார் தன்  மனத்தை உறுத்தும் சிந்தனைகளை அம்மையாரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.   

பாரதியார் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மத்திய  இந்துக் கல்லூரி  (Central Hindu  College)     அன்னிபெசண்ட் அம்மையார் நிறுவியது.  தான் அந்த அம்மையாருடன் தான் பேசிக்  கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த பாரதியாருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை..

"நான்  மதன் மோகன் மாளவியா அவர்களைச் சந்திக்க வேண்டுமே.. அந்த சந்திப்புக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்.

இந்த   இடத்தில்  மதன்  மோகன்  மாளவியா எப்படி பாரதியாரின் உள்ளத்தைக் கவர்ந்தவராய்  இருந்தார் என்பதைச் சொல்ல வேண்டும்.  பாரதியார்  காசி  மத்திய  இந்துக்  கல்லூரியில் படித்துக்  கொண்டிருந்த காலத்தில் காசியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ மதன்  மோகன் மாளவியா வீடு வீடாகச் சென்று நிதி  திரட்டிக் கொண்டிருந்தார்.  அவர் நிதி திரட்டிய பட்டியலில் பெரும் பணக்காரர்களும் உண்டு;  பரம ஏழைகளும் உண்டு.  அவரது அயராத  அந்த முயற்சியால் தான் காசி பல்கலைக் கழகம்   (Banaras  Hindu University)  உருபெற்றது.

அன்னி பெசண்ட் அம்மையார்  மாளவியாவிடம் சொல்லி பாரதியார் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்.

அந்த நாளும் வந்தது.



(வளரும்)

உசாத்துணை:  பாரதியாரின் அத்தை ருக்மணி அம்மாளின் பேரன் பெரியவர் கே.வி. கிருஷ்ணன் நினைவிருக்கிறதா?..  அவர் ஒரு பேட்டியில் சொன்ன தகவல்களைத்  துணையாகக் கொண்டு.

படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.



Monday, December 18, 2017

பாரதியார் கதை - 2

                                                                         2

வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை.

அதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால்  எந்த நெருக்கடியிலும் அடுத்து நடக்க வேண்டியது இது தான் என்று ஏற்கனவே யாரோ தீர்மானித்து வைத்திருக்கிற மாதிரி அந்த அந்த நேரத்து அது அது நமது எந்த பிரயாசையும் இன்றி சொல்லி வைத்தாற் போல நடப்பது தான். 


இதை பகவான் கிருஷ்ணர் உபதேசித்ததாகச் சொல்லப்படும் 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது' என்ற கீதாச்சாரம் வரியோடு இணைத்துச் சொல்லலாம்.  நடப்பது எதுவும் நம் தேவைகளுக்காக நம்மை இணைத்துக் கொண்டு தான் செயல்படுகின்றன.  இது இந்துத்வா என்றால் இந்துத்வா; இல்லை,   நம்மை நாமே புரிந்து  கொள்வதற்கான ஞானம் இது என்றால் ஞானம்.

தன்  தந்தை மறைவுக்குப் பிறகு அலமந்து நின்ற பாரதியார் வாழ்விலும் அவர் அடுத்தப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டல் கிடைக்கிறது.  பாரதியாரின் தந்தை சின்னசாமி அய்யரின் சகோதரி  காசிமாநகரில் இருந்தார்.   அந்த மாதரசியின் பெயர் குப்பம்மாள்.  குப்பம்மாளும் அவர் கணவர் கிருஷ்ணசிவனும் தமிழ் நாட்டிலிருந்து சிவ ஸ்தலமான காசிக்கு வரும் யாத்திரிகர்களுக்கு வேண்டுகிற உதவிகளை தாமாக முன் வந்து செய்யும்  மேன்மயான குணம் பெற்றிருந்தார்கள்.   சொந்த  சகோதரனின்  மகன் நிலை புரிந்ததும்  'நீ  காசிக்கு வந்து விடு' என்று அத்தையிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது.  எந்த சக்தி பாரதியை உந்தித் தள்ளியதோ  தெரியவில்லை,  மறுக்காமல் பாரதியும் உடனே காசி கிளம்பி விட்டார்.

'யாதும் ஊரே; யாவரும்  கேளிர்' என்பது  தமிழ்ச் சான்றோனின்  அமுத
வாக்கு.  யாதும் ஊராயினும்  ஒவ்வொரு தலத்திற்கும் இயற்கையின்  கொடையால் விதவிதமான நேர்த்திகள் கிடைத்திருக்கின்றன என்பதும் நமது புரிதல்களில் ஒன்றாகியிருக்கிறது.  காசி 15000 வருடங்களுக்கு மேலான பழைமை வாய்ந்த இடம்.

புனித கங்கை நதியின்  அருட்கொடை பெற்ற காசி மாநகரம் கல்விச்சாலை களுக்கும் வேத விற்பன்னர்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்கியது தான் பாரதியின் எதிர்கால வாழ்க்கைத் திருப்பங்களுக்கு பெரும் கொடையாக அமைந்தது. 

அத்தையின் வீடு கங்கைக்கரையோரம் இருந்தது.  ஹனுமந்த் காட் படித்துறைக்கு வெகு அருகில்.  பாரதிக்கு கங்கைக்கரையே மனம் லயிக்கும் இடமாக மாறிப் போனது.

"இன்னது  நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே.." என்று கவிதை அவர் சிந்தனையில் கொப்பளித்துக் கிளம்பியது.  காசி மிஷன் கல்லூரியும், ஜெயின் நாராயண் கல்லூரியும் பாரதியின் கல்விச்சாலைகள்.  அலகாபாத்
சர்வ கலாசாலை நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.
 ஹிந்தியும், சமஸ்கிருதமும் இயல்பாகவே அவரது கல்வி கற்றலுக்கு துணை நின்று பரந்து விரிந்த பார்வையைத் தந்தன.  காசி நகரில் சில காலம் பள்ளி  ஒன்றில் பாரதியார் ஆசிரியப்பணியும் ஆற்றியிருக்கிறார்.

வாலிப வயதின் ஆரம்பப் பருவம் என்பது மிக முக்கியமான ஒன்று. சிறுவன் நிலையிலிருந்து வாலிபத்தின் தலை வாசலில் நிற்கும் பொழுது புதுச் சிந்தனைகளும், கருத்துக்களும் மிகச் சுலபமாக மனசை ஆக்கிரமிக்கின்றன.   ஒரு  முழு  மனிதன் உருவாகத் தொடங்குகிற ஆரம்ப காலத்தில் உளவியல் பாங்கில் இந்தப்  பருவம் புதுக்கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தன்னில் விதைத்துக் கொள்ள விளைநிலமாய் காத்திருக்கிறது.  அந்த பருவத்தில் பாரதிக்குக்  கிடைத்த பேறாய் வடபுலத்துக் கல்வியும் அமைந்த வாழ்க்கை அனுபவங்களும் மன விசாலத்தை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பைத் தந்திருக்கின்றன.

இமயம் முதல் தெற்குக் கோடி குமரி வரை ஒரே நாடு-- அது எங்கள் பாரதம் என்ற இருமாப்பு மனசில் ஏறி அமர்ந்தது.  'காவிரியும் நமதே; கங்கையும் நமதே' என்ற அகண்ட பாரதப்  பார்வை.  இந்த 'ஏக இந்தியா' உணர்வு தான் பாரதி காசி போய் படித்ததின் பெரும் பலன் என்று இன்றும் என் எண்ணமாய் இருக்கிறது.  தமிழகத்தில் எனக்கமைந்த வாலிபப் பருவ கல்விச் சூழல்களின் அனுபவங்கள் இந்த எண்ணத்தை உறுதிபடுத்துகின்றன.

கங்கையாற்று ஹனுமான் காட்டிற்கு வெகு அருகில் சின்ன சந்து போல இருக்கும் தெருவில்  இன்றைய சங்கர மடத்திற்கு எதிரில் இருக்கும் * 'சிவ மடம்' என்று பெயர் பொறித்திருக்கும் நீண்ட குடில் தான் பாரதியின் அத்தை வீடு.  மாமா கல்விமான்.  வீட்டிற்கு வேதம் படித்த  பண்டிதர் நிறைய பேர் வந்து போவார்கள்.  அவர்களுடன் பேசிக்  களிக்கவும்,  கருத்து விவாதங்கள் நடத்தவும் பாரதிக்கு அந்த இளம் வயதிலேயே வாய்ப்புகள் அமைந்தன.

அந்த வயதில் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி விடுதலை உணர்வைப் போதித்த  பாரதியின் உள்ளம் கவர்ந்த கவிஞானான்.  கங்கைக்கரை படிக்கடிக்கட்டுகளில் ஷெல்லியின் கவிதைப் புத்தகமும் கையுமாக உலாவிக் கொண்டிருப்பாராம் பாரதி.  வாசித்து அறிந்திருக்கிறேன்.  பிற்காலத்தில் 'ஷெல்லி தாசன்'  என்றே அவர் புனைப்பெயர்  கொண்டார்.  இருப்பினும்  ஷெல்லியிடமிருந்து பெற்ற கவிதானுபவம்  பாரதியின் காதல் கவிதைகளில் மட்டும் அவனது நீட்சியாயிற்று.  அந்தக் காதலையும் கண்ணன் மேல் கொண்ட  காதலாக ஆண்டாளைப் போன்ற இறைக்காதலாக உருமாற்றிக் கொண்டவர் பாரதியார்.   அவரது முதல் காதலையும் இறைக்காதலாக உருவகம் கொள்ளவும் முடியும்.   'ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சில் ஊன்றி வணங்கினன்' என்று  கன்னியை வணங்குவதாக மானசீகமாக  அந்த தெய்வக் கன்னிகைக்கு மரியாதை கொடுக்கிறார் என்று இப்பொழுதிய ஞானோதயம்.

ஒரு நாளைக்கு பலமுறை கங்கை நீரில் மூழ்கி எழுவாராம் பாரதி.  கங்கை அவர் மனசில் ஒரு நதியாக தோற்றம் கொள்ளவில்லை.  காற்றும் தெய்வம்; கங்கையும் தெய்வம் தான் அவருக்கு. 

காசி வாழ்க்கை இளம் வயது பாரதியிடம் உடை மாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.   கச்சம் வைத்துக் கட்டிய வேஷ்டி, கோட், தலைப்பாகை என்று அந்நாளைய பேராசிரியர்கள் தோற்றம் கொடுத்திருக்கிறது.   பால கங்காதர திலகரின்  சுதந்திர வேட்கை கொண்ட வீர  உரைகள் அவர் நாடி நரம்புகளில் முறுக்கேற்றியது.  காசி வாசம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

வாழ்க்கையின் போக்குகள் நாம் நினைக்கின்ற மாதிரி அமைவதாகப் போக்குக் காட்டினாலும் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி வாழ்க்கையின் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை.

காசி வாழ்க்கையை மிகவும் நேசித்த பாரதி மீண்டும் எட்டையபுரம் திரும்ப நேரிட்டது.


(வளரும்)


========================================================================


 *  சென்ற தடவை காசி ஷேத்திரத்திற்குச் சென்ற பொழுது,  பாரதி இளம் பருவத்தில் வாழ்ந்த 'சிவ மடம்'  குடிலில் நுழைந்து பார்க்கும் பாக்கியம் கிட்டிற்று.  வீட்டின் நுழைவுப் பகுதியில் ஆர்ச் மாதிரியான வளைவுக்குக் கீழே இந்தியிலும் தமிழிலும்  'சிவ மடம்' என்று சிமெண்ட் எழுத்துக்களில் பொறித்திருக்கிறது.  நான் போயிருந்த பொழுது பெரியவர் ஒருவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது.  பெரியவரின் பெயர் கே.வி. கிருஷ்ணன். பாரதியாரை காசி வாழ்க்கைக்கு அழைத்து பெருமை பெற்ற பாரதியின் அத்தை குப்பம்மாள் அவர்களின் பேரனாம் இவர்.  காசி தமிழ்ச் சங்கத்தின் தலைவர்.  தான் பாரதியின் குடும்ப உறவுமுறை  என்பதில் ஏகப்பட்ட பெருமிதம் அந்தப் பெரியவருக்கு.  பாரதிக்குப் பிற்காலத்தவர் இவர் ஆயினும் இவரிடமிருந்து  பாரதியைப்  பற்றி நிறைய அந்நாளைய தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.  மடத்தில் பாரதியின் மார்பளவு சிலை ஒன்றும் உண்டு.
========================================================================

படங்கள் உதவியோருக்கு நன்றி.

Wednesday, December 13, 2017

பாரதியார் கதை

                                                                   
                                      1 








தென்பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர்  திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம்.   இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து  பெறப்படுகின்ற காரணம் எளிமையானது.   நெல் வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்து  இருந்ததால்  அவ்வூர் திருநெல்வேலி என்று பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும்    பெரிய நகரங்கள் எல்லாம்  இதற்கு முன்னால் ஜில்லா என்று அழைக்கப்பட்டன..  திருநெல்வேலியும் ஒரு  ஜில்லா தான்.

திருநெல்வேலி  ஜில்லாவில்  எட்டையபுரம்  சின்ன ஊர்.   இப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியாக  இருக்கிறது.   எட்டையபுரம் இளசை என்றும் அழைக்கப்படுகிறது.   பாண்டிய மன்னரின் ஆளுகைப்  பகுதியாக இருந்த இடம்.   பின்னர் பாளையக்காரர்கள் வசம் வந்தது.  ஆங்கிலேயர்கள் காலத்தில் சமஸ்தான மன்னர்கள்.

அது  1882-ம்  ஆண்டு.  எட்டையபுரத்தில் வாழ்ந்த சின்னசாமி ஐயருக்கும்,  இலஷ்மி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  குழந்தையை சீராட்டி வளர்த்தனர்.  சுப்பிரமணியனை செல்லமாக சுப்பையா என்று அழைத்தனர்.   சின்னசாமி அய்யர் சமஸ்தானத்தில் கணக்கு வழக்குகளை மேற்பார்வை செய்யும் பணியில்  இருந்தார்.  வசதியான குடும்பம் தான்.  குழந்தையின் ஐந்து வயது பிராயத்தில் தாயார் இலஷ்மி அம்மாள் இயற்கை எய்தினார்.

*தாய்வழி பாட்டனாரின் வளர்ப்பில் குழந்தை சுப்பையா வளர்ந்தான்.  ஆங்கிலம், தமிழ்,  கணிதப்  புலமையில்  தேர்ச்சி பெற்றிருந்த சின்னசாமி ஐயர் தன் அருமை மகனும் இப்படியான கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆனால் சுப்பிரமணியனுக்கோ கணிதம் என்றால் அது வேப்பங்காயாகக் கசந்தது.  அவனுக்கோ கவி புனையும் ஆற்றலில் பெரும் ஈடுபாடு இருந்தது.  கண்டிப்பு கொண்ட தந்தை தெருப் பிள்ளைகளுடன் கூடி ஆடி விளையாட தன்னை அனுமதிக்காமல் இருந்த நேரத்து தன் மனதில் குவிந்த ஏக்கத்தை பிற்காலத்தில் தன் கவிதை வழியே வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்.#

பாரதிக்கு ஏழு வயதாகும் பொழுது சின்னசாமி அய்யர், வள்ளியம்மாள்என்னும் மங்கையை மறுமணம் புரிகிறார்.  வழக்கமான சீற்றம் கொண்ட சிற்றன்னையாக இல்லாமல் வள்ளியம்மாள் தாயில்லா சிறுவன்  சுப்பிரமணியனுக்கு பெற்ற தாயாகத் திகழ்ந்தாள்.  சிறுவனுக்கு உபநயனம் செய்து வைக்கின்றனர்.

சமஸ்தான பணிகளுக்குச் செல்லும் பொழுது சிறுவன் சுப்பிரமணியனையும் கூடவே அழைத்துச் செல்லும் பழக்கமும்  சின்னசாமி அய்யருக்கு இருந்தது.  அதுவே சுப்பிரமணியனுக்கான சமஸ்தான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது.

எட்டையபுர மன்னருக்கு தமிழ்க்காதல் உண்டு.  சமஸ்தானத்து மன்னர் அவையில் தமிழ் மொழியில் ஆற்றல் மிகுந்தவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.  சமஸ்தானப் புலவர்கள் தரும் ஈற்றடிக் கொண்டே முழுக்கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தான் சிறுவன் சுப்பிரமணியன்.

இந்த ஆற்றல் சுப்பிரமணியனின் பதினோரு வயதில் கவிதைப் பிழம்பாய் ஜொலித்து நாம் இன்றும் முண்டாசுக் கவிஞனை நினைவு கொள்கிற 'பாரதி' என்ற பட்டப்பெயர்  எட்டையபுர அவைக் களத்தில் அவன் கொள்ள ஏதுவாயிற்று.

சிவஞான யோகியார் அக்காலத்தில் சிறப்புப் பெற்ற புலவர்.  அவர் தலைமையில் எட்டையபுர தமிழ்ச் சான்றோர் கூடியிருந்த அரசவையில் பதினோரு வயது சுப்பிரமணியனின் கவிதை புனையும்  ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து  எட்டையபுர மன்னர்  'பாரதி' என்ற பட்டத்தை அவனுக்கு அளிக்கிறார்.   சிறுவன் சுப்பிரமணியன், சுப்பிரமணிய பாரதி ஆகிறான்.

பாரதியின் தந்தைக்கோ தன் மகன் ஆங்கிலப் புலமையும், கணித மேன்மையும் கொண்டு தன்னை போல அரசவையில் அதிகாரி தோரணையில் உலா வர வேண்டும் என்ற கனவு.   அந்தக்  கனவை நனவாக்க  பாரதியை  திருநெல்வேலி திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்திருந்தார்.   அந்த வயதிலேயே ஆங்கிலக் கல்வி கற்பதில் பாரதிக்கு உள்ளூர ஒரு வெறுப்பு படிந்திருந்தது.@

காதற் வயப்பட்டோருக்கு விநோதமான அனுபவங்கள் உண்டு.  காதலில்  முதற் காதல் என்பதும் உண்டு என்போர் அனுபவப்பட்டோர்.  மராத்திய எழுத்தாளர் காண்டேகர் 'முதல் காதல் என்பது வெட்டி விட்டுப் போகும் மின்னல்' என்று சொல்லுவார்.  'ஏதோ பருவக் கோளாறு; அது காதலே அல்ல' என்பது அவர் கட்சி..  ஒருவிதத்தில் அவர் சொல்வது நியாயம் தான்.  முதல் காதலுக்கு வாழ்க்கை பூராவும் அதை நினைத்து உருகுகிற, தேகம் பூராவும் உருக்குகிற சக்தி கிடையாது..  காண்டேகர் அகராதியில் முதல் காதல் உப்புக்கு சப்பாணி காதல்.   நிஜக்காதல் என்பது அதுக்குப் பின்னால் வருவது.  இது  தான் காதல் என்று காதலுக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொண்ட பின்னாடி அர்த்தபூர்வமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் விளைவது.

'காதல், காதல், காதல் போயிற்-- சாதல், சாதல், சாதல்' என்று காதல் பொய்த்துப் போயின் சாதல் தான் என்று பரிந்துரைத்த பாரதிக்கும் முதல் காதல் அனுபவம் அவனது பத்து வயசில் வாய்த்ததாம்.  பத்து வயசில் வாய்ப்பதெல்லாம் காதலா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் பாரதி தனது அந்தப் பிள்ளைக் காதல் உணர்வைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறான்..

"ஆங்கோர் கன்னியைப் பத்து பிராயத்தில்
ஆழ நெஞ்சிற் ஊன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
 எந்தை வந்து மணம் புரிவித்தனன்..

அதெல்லாம் சரி;  அதற்கப்புறம் அவன்  சொல்வது தான் முக்கியமானது:

"மற்றோர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
 மாதரா ளிடைக்  கொண்டதோர் காதல் தான்
 நிற்றல் வேண்டுமென உளத்தெண்ணிலேன்.."  என்கிறான்.

அந்தக் காதலை தன் தந்தையிடம் எடுத்துக் கூறும் திறனற்றுப் போயினேன் என்றும் சொல்கிறான்.   காண்டேகர் சொல்கிற மாதிரி முதல் காதல் காதலே இல்லை என்பதினால் அதைப் பற்றி அதிகமாகச் சொல்வதற்கும் ஏதுமில்லை.

'முதல் காதலாவது, இரண்டாவது காதலாவது?.. காதல் என்பது ஒன்று தான் ஐயா!'  என்பவர்களால் காண்டேகர் சொல்லும் இந்த முதல் காதலைப் புரிந்து கொள்ள முடியாது என்பது வாஸ்தவம் தான்.

பாரதிக்கு வாய்த்தது அவன் தந்தையார்,  சிற்றன்னை பார்த்து முடித்து வைத்த திருமணம்.

&நெல்லை இந்துக் கல்லூரி சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே பாரதியாரின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார் சின்னசாமி அய்யர்.  அந்தக் கால இளம் பருவ விவாகம்.   கடையம் செல்லப்பா அய்யரின் புதல்வி செல்லம்மாள் பாரதியின் கரம் பற்றும் பாக்கியம் பெற்றாள்.   திருமணத்தின் போது பாரதிக்கு 14 வயது;  செல்லம்மாவுக்கோ  ஏழே வயது.   பிற்காலத்தில்  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பெருமையைப் பார்க்கும் பொழுது  போட்டி போட்டுக் கொண்டு இருவரும் ஒருவர் பெருமையில் இன்னொருவரின் பெருமையைக் கரைத்ததாகவே தெரிகிறது.

இந்தத் திருமணம் நடந்து முடிந்த ஓராண்டிலேயே இதற்காகவே காத்திருந்து நடத்தி வைத்த கடமையை முடித்தாற் போல  பாரதியின் தந்தையார் சின்னசாமி அய்யர் காலமானார்.    'தந்தை தாய்  இருந்தால்  உமக்கிந்த        தாழ்வெல்லாம் வருமோ, ஐயா?'--  என்று சிவபெருமானை நினைத்து பொன்னையா பிள்ளை இயற்றி,  என்.ஸி. வஸந்த கோகிலம் பாடிய பாடல் ஒன்று உண்டு.   அம்பலவாணனின் அப்படியான நிலைதான் பாரதிக்கும்.

ஐந்து வயதில் தாயை இழந்து, பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து  தன் துயரம் தன்னையே சுமக்க  வறுமை சூழ்ந்த நிலையில் அநாதை போல  வாழ்க்கையின் வாசல் படிகளில் பாரதி நின்றார்.

தனது சுயசரிதைக் கவிதையில் பாரதி இதை சொல்லும் பொழுது இறுக்கிப் பிழிந்த துணி மாதிரி நம் மனமும் துவண்டு போகும்.  +


தன் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தன் பெற்றோர் வாழக் கொடுத்து வைத்தவர்களாலும்  இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.



(தொடரும்)


=======================================================================


*  என்னை ஈன்று எனக்கு ஐந்து வயது பிராயத்தில்
    ஏங்க விட்டு விண் எய்திய தாய்   

               (தனது சுயசரிதையில் பாரதியார்)




#   ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
            ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
     ஈண்டு பன்மரத்து ஏறி இறங்கியும்
             என்னொடு ஒத்த சிறியர் இருப்பரால்;
      வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
              வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
       தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
               தோழமை பிரிதின்றி வருந்தினேன்.

                                                                               (சுயசரிதை: 4)

@     பள்ளிப் படிப்பினிலே மதி
         பற்றிட வில்லை எனினும் தனிப்பட 
         வெள்ளை மலரணை மேல் அவள்
         வீணையும் கையும் விரிந்த முகமலர்
          விள்ளும் பொருள் அமுதும் கண்டேன்
          வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா

                                                                                 ('ஸரஸ்வதி காதல்'--1)



   
&   செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது;
                 தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன;  
       நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை
                 நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்.

                                                                                  (சுயசரிதை: 29)



#  +     தந்தை போயினன்,   பாழ்மிடி  சூழ்ந்தது
                தரணி மீதினில்  அஞ்சல் என்பார் இலர்;
     சிந்தையில் தெளிவு  இல்லை;  உடலினில்
                திறனும் இல்லை; உரன் உளத்து இல்லையால்
       எந்த மார்க்கமும் தோற்றிலது  என் செய்கேன்?
                ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?..


                                                                                     (சுயசரிதை)சுயசரிதை)




Sunday, December 10, 2017

பாரதியாரின் கதை



                                         



                                                               



தென் பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர் திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்கு காரணங்கள் பலவாக இருக்கலாம்.  இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து பெறப்படுகிற காரணம் எளிமையானது.  நெல்வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்திருந்ததினால், அவ்வூர் திருநெல்வேலி என்று  பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும் பெரிய நகரங்கள் எல்லாம் இதற்கு முன்னால்  ஜில்லா என்று அழைக்கப்பட்டது.  திருநெல்வேலியும் ஒரு ஜில்லா தான்.




                                                         விரைவில்  ஆரம்பம்


                                 இதுவரை பரவலாகத் தெரியாத பல  தகவல்களுடன்



                                              பாரதியாரின்  கதை

                                                                                   
                           
                                                             (நெடுந்தொடர்)         






Monday, August 28, 2017

வாழ்க்கை அழைக்கிறது

                                           ஒரு  வாழ்வியல்  தொடர்


முந்தைய பகுதி:    http://jeeveesblog.blogspot.in/2017/08/blog-post_7.html


3.   தன்னம்பிக்கை என்னும் யானை பலம்.


ம்பிக்கை கொள்ளுதல் என்பது வாழ்க்கையின் ஆதாரசுருதி. தன்மீது, தன் செயல்களின் மீது தனக்குத் தானே நம்பிக்கைக்கொள்ளுதல் தன்னம்பிக்கை எனலாம்.       இந்த நம்பிக்கை வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைத்தேவை.

தன்னம்பிக்கையில்லாதவன் எதையும் சுயமாகச் செய்ய துணிவில்லாது போவான். எதற்கும் இன்னொருவரை எதிர்பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளபடுவான். தன்னால் இதைச் செய்யமுடியும் என்று நம்பிக்கை கொள்ளமுடியாமல், அதைச் செய்து முடிக்கவே இன்னொருவர் தயவை நாடுவது நாளாவட்டத்தில் எதுவென்றாலும் பிறரை எதிர்பார்க்கிற நிலைக்குக் கொண்டு போய்விடும்.

தனக்கு நெருங்கியவர்களிடம் ஏற்படும் பிரமிப்பும் சில நேரக்களில் ஒருவனின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்.  பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது,  எவ்வளவு அருமையாக அவர்கள் நினைத்ததை எழுத்தில் வடித்து அதை வாசிக்கும் நமக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படும்.

பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.   வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும்.   பொதுவாக ஆரம்ப முயற்சிகள் அவ்வளவு சிறப்பாக அமையாது.   இருப்பினும் தன்னம்பிக்கை இழக்காமல் திருப்பித் திருப்பி முயற்சிக்கும் பொழுது  நாளாவட்டத்தில்  தானே மகிழும் அளவுக்கு எடுத்த முயற்சி அமையும் பொழுது அதுவே அலாதியான சந்தோஷத்தை இயல்பாகவே கொடுக்கிறது.

எனக்கு சாரங்கன் என்றொரு நண்பர் இருந்தார். இராணுவத்தில் 'ஹவில்தாராக' இருந்தவர். ஓய்வு பெற்று வந்துவிட்டார். வாழ்க்கைப் பாட்டிற்கு ராணுவ பென்ஷன் தான். எங்கள் நண்பர்
குழாமில் அவரை 'சவடால் சாரங்கன்' என்றே அழைப்போம். அப்பா....மனுஷன் என்ன பேச்சு பேசுவார், தெரியுமா?..அவர் செய்த ஒவ்வொரு காரியமும், ஷூக்கு பாலீஷ் போட்டார் என்றால் கூட, ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தோடு, யாருமே எதிர்கொள்ளாத பிரச்னைகளைத் தான் எதிர்கொண்டமாதிரி, அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் பேச்சில் பண்ணுவார்.

கொஞ்சம் கொஞ்சமாக நாளாவட்டத்தில் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவர் ஒரு ஹீரோ ஆகிவிட்டார். வீட்டு விசேஷத்திற்கு வாழைமரம் வாங்கிக் கட்டவேண்டுமா, கல்யாணச் சாப்பாட்டிற்கு அருமையான கேட்டரிங் ஏற்பாடு பண்ண வேண்டுமா, தாசில்தார் ஆபிஸில் மனுகொடுக்க வேண்டுமா, அடுத்த நாள் ரயிலுக்கு அவசர ரிசர்வேஷனா, பஸ் பாஸூக்கு ஏற்பாடா, பாஸ்போர்ட்டுக்கு அப்ளிகேஷனா---சாரங்கனிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் 'ஆச்சு காரியம்' என்பதில் ஆரம்பித்து,கிணற்றில் தோண்டி விழுந்துவிட்டால் எடுக்க சாரங்கன், வீட்டில் கரண்ட் சப்ளை போய்விட்டால் ப்யூஸ் ஒயர் போடக் கூட சாரங்கன் என்பது வரை தெருவே சாரங்கனைத் தேட ஆரம்பித்து விட்டது.


இதில் கோடிவீட்டு கோதண்டம் ரொம்ப மோசம்; பிளாஸ்டிக் மூடிதிறக்க அடம்பிடிக்கும் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் பொருத்தக்கூட சாரங்கனைத் தேடுவான். சாரங்கனும்,  'நான் ஆஜர்' என்று சொல்கிறமாதிரி காலையில் 'காப்பி' குடித்துவிட்டு வீட்டுத்திண்ணையில் 'ஹாயாக' உட்கார்ந்திருப்பான்.    யார் வீட்டில் எப்பொழுது கூப்பிடுவார்கள் என்று தெரியாது.


சின்னச் சின்ன வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த சாரங்கன் இப்பொழுது அயனாவரத்தில், 'A--Z' என்று 'அ'விலிருந்து 'ஒள'வரை எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுக்கும்  சேவைநிலையம் ஒன்றை ஆரம்பித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தில் உள்ள அத்தனை பேரும் அவனுக்குப் பழக்கம். அவனால், ஆகமுடியாத வேலை இல்லை. மீச்சுவல் பண்டிலிருந்து மைலாப்பூர் மியூசிக்கல் ஸ்டோர்களில் வயலின் வாங்குவது வரை பிட்டு பிட்டு வைத்து இலவச ஆலோசனை சொல்வான். அவன் சொன்னது எதுவும் சோடை போனதில்லை. எல்லாம் தன்னம்பிக்கை அவனுக்குக் கொடுத்த தைரியம்!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அவன் செய்த  உதவிகளின் அனுபவங்களை அஸ்திவாரமாகக் கொண்டது அவனது இன்றைய வளர்ச்சி என்பது அவனை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

எந்த வேலையிலும் சுயமாகத் தான் ஈடுபடுவதே தன்னம்பிக்கைக்கு அஸ்திவாரம். எந்தப் புதுவேலையும், செயலும் தொடங்குகையில பிரமிப்பாகத்தான் இருக்கும். சிக்கு விழுந்த நூல்கண்டு மாதிரி. நுனி கண்டுபிடித்து பொறுமையாக முயற்சித்தால், எல்லாம் வெற்றியோ வெற்றிதான்! ஆரம்பத்தில் உடனடியான வெற்றி இல்லையென்றாலும், இதற்கு இப்படி என்று ஒரு வழியாவது தெரியுமல்லவா?..

ஏதாவது ஒரு வேலையை முடிக்க வேண்டுமானால், 'இதுக்கெல்லாம் அவன் தான் லாயக்கு' என்று 'ரெடிமேடாக'   ஒரு  சிலர் பதில் வைத்திருப்பார்கள். இவர்கள் எதற்கும் லாயக்கில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.

எல்லா விஷயங்களையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம்.  ஆன்லைனில் பண பரிவர்த்தனை,    ஆதார் அட்டை எண்--  பான் அட்டை எண் இணைப்பு,  இவை இரண்டையும் வருமான வரிக் கணக்கோடு இணைப்பது என்று  தொடங்கி எந்த விஷயமும் நம்மிடமிருந்து அந்நியமாகிப் போய் விடாமல் வெகுதிரள் மக்களின் அன்றாட நடவடிக்கையாகிப் போயிருக்கிறது.

வங்கிகளில் பணம் எடுக்க செலுத்த வங்கி ஊழியர்கள் இருந்த காலம் மங்கி வருகிறது.   மனிதர்கள் போய் மிஷின்களோடு  உறவுப் பிணைப்பு ஏற்பட்டிருக்கும் காலம்  இது.   நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு  பாடமாகப் போதித்திருக்கிறது.

வாழ்க்கையின் இன்றைய அமைப்பும் வாழும் முறையும் விதவிதமான மாற்றங்களைக் கொண்டு நாள்தோறும் வெவ்வேறான பயிற்சிகளைப் பெறுவதற்கு நம்மை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது.   இது தகவல் தொழில் நுட்ப உலகம்.   எந்த விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளாத தகவல் குறைச்சலும் நம்மைப் பாதிக்கிறது. ஏதாவது ஒரு இழப்பை ஏற்படுத்துகிறது.

எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம்.   தன்னம்பிக்கை இழப்பு என்பது  ஒரு மனநோயாக உருவாகக் கூடிய சாத்திய கூறுகள் நிறைய உண்டு.  தன்னம்பிக்கை இழப்பு தாழ்வு மனப்பான்மையை நாளாவட்டத்தில் உள்ளத்தில் விதைத்துவிடும்.

எந்த உடல் உபாதையையும் விடக்கொடியது, இந்த உள்ள உபாதை. உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும் மருந்து என்றால், இந்த உள்ள உபாதை ஒழிய மனப்பயிற்சி அவசியம்.  

நீந்த வேண்டுமானால், தண்ணீரில் இறங்குவதுதான் வழி.

வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றிகளைக் குவித்தவர்களெல்லாம், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்   பெரும்பாலும்.   வாழ நேரிட்ட வாழ்க்கையே அவர்களின்  வாழ்க்கை வெற்றிக்கான பாடத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து  வெற்றி வாகை சூட வைத்திருக்கிறது..

தளராத உழைப்பும், தடுமாறாத செயல்களுமே  வெற்றிக்கனி பறிக்க அவர்களை வல்லவர்களாக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.


(வளரும்)


தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை அளித்த நண்பர்களுக்கு நன்றி.

Saturday, August 12, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

சென்ற பகுதி:

http://jeeveesblog.blogspot.in/2017/02/blog-post_63.html

பகுதி--26
ன்னன் செங்குட்டுவனின் கவனம் வாயிற்காவலர் மேல் படிந்தது.  'ஏது சேதி?'  என்று பார்வையிலேயே கேட்ட  மன்னனிடம் காவலன் ஒருவன் பணிந்து சொல்லத் தொடங்கினான்:

"மன்னர்கோவே!  பல்வேறு வகைப்பட்ட திறமையுடைய நாடக மகளிர் நூற்று இருவர்;  குயிலுவக் கருவியை கையாள்வோர் இருநூற்று எண்மர்;  தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தோர்;  நகை வேழம்பர்  நூற்றுவர்;    தேர்கள் நூறும்,  ஐந்நூறு யானைகளும், பிடரி மயிர் அலைபாயும் பதினாயிரம் புரவிகளும்,  வடபுலத்து விளையும் பொருள்கள் ஏற்றி வந்த இருபதினாயிரம் வண்டிகளும், தலைப்பாகையும் சட்டையும் இட்ட தங்கள் தலைவன்  தூதுவன் சஞ்சயனுடன் வந்திருக்கும் ஆயிரவரும் தலைவாயிலில் திரண்டிருக்கின்றனர்,  வில் கொடி செங்கோல் வேந்தே!" என்றான்.

"ஓ! நல்லது.  நாடக மகளிரும் குயலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு  இங்கு வர வழி காட்டுங்கள்.." என்று ஆணையிட்டான்  மன்னன்.

செங்கோல் வேந்தனின் திருவிளக்கு அவையத்து சஞ்சயன் வந்து தாழ்ந்து வணங்கி மன்னவனைப் போற்றித்  துதித்தான்.  தன்  கூட வந்திருந்த கலைஞர் பெருமக்களை மன்னவனுக்கு சஞ்சயன் இன்னார் இவர் என்று தெரிவித்து வணங்கினான்.  "தங்களுக்கு ஒரு சேதி சொல்ல வந்துள்ளேன் மன்னவா.." என்ற சஞ்சயன் அந்தச் சேதியை என்னவென்று கூறலானான்.

"மன்னாதி  மன்னா!  கடவுள் சிலை அமைக்க  கல் வேண்டி வடபுலம் நோக்கி செல்வது  தான் சேர மன்னனின் நோக்கம் எனில் ஓங்கிய இமயத்திலிருந்து  கல் எடுத்து அதனை கங்கை பேராற்றில் நீராட்டி, நின் நாட்டிற்கே கொண்டு வந்து தர சித்தமாக இருக்கிறோம் என்று நட்புச் சேதியை   நூற்றுவர் கன்னர் தகவலாக என் மூலம் அனுப்பியுள்ளனர், மன்னா!"  என்று சஞ்சயன் தான் தூதுவனாக வந்த காரணத்தைச் சொன்னான்.

"அப்படியா, சேதி!  **** நூற்றுவர் கன்னரின் நட்பு வாழ்க!" என்று வாழ்த்தித் தொடர்ந்தான் சேர மாமன்னன்.  "சஞ்சயரே!  கேட்டுக் கொள்ளவும்.. இப்பெரும் படை எழுச்சி  பெருந்தெய்வ உரு பொறிக்க இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வருவது மட்டுமல்ல!" என்று அவை அதிரச் சொன்னான். "காவா நா கொண்ட கனக, விஜயர் என்னும் இரு குறுநில மன்னர் தாம் கூட்டிய விருந்தொன்றில்  பிற மன்னருடன் கூடிக் குலவி அருதமிழாற்றல் அறியாது உளறியிருக்கின்றனர். அவர்கள் அறியாத தமிழர் தம் வீரத்தையும் பெருமையையும் அவருக்கு  நேரில் அறிவுறுத்தும் பொருட்டும் எம் வடபுலப் பயணம் ஏற்பாடு ஆகியிருக்கிறது, சஞ்சய!"  என்றான்.  "சஞ்சய!  நம் நட்பு பேணும் நூற்றுவர் கன்னருக்கும் என் சேதியாக ஒன்றைச் சொல்வாயாக!    கங்கை பேராற்றை யாமும் என் கூற்றுவப் படையினரும் கடந்து  செல்வதற்குத்  தேவையான பரிசில்களுக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு சொல்வாயாக!" என்றான்.

"மன்னர்க்கு மன்னவா!  தங்கள் ஆணை எங்களின் பெருமிதம்!  அப்படியேச் சொல்கிறேன்.."என்று வணங்கி அவை நீங்கிச் சென்றான் சஞ்சயன்.

சஞ்சயன் சென்ற பின்,  ஆயிரம் கஞ்சுகர் சந்தன, முத்துக் குவியலையும் தென்னவர் இட திறைப் பொருட்களோடு கொண்டு வந்து சேர்த்தனர்.   சேர்த்த பொருட்களுக்கு   அவை சேர்ந்தமைக்கு அடையாளமாக         இலட்சினை இட்ட திருவோலைகளை திருமுகம் எழுதுவோர் திறைப் பொருள் தந்த மன்னர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு வழங்கினர்.  அப்படியான திருமுகங்களைப் பெற்றுக் கொண்டு கஞ்சுகர் அவை நீங்கினர்.

திரை கடல் தான் திரண்டதோ என்று வியக்கும் வண்ணம் பெரும் படையை வடபுலம் நோக்கி நடத்திச் சென்ற செங்குட்டுவன் நூற்றுவர்  கன்னர் ஏற்கனவே ஏற்பாடு  செய்திருந்த ஓடங்களை உபயோகித்து கங்கை பேராற்று வங்கப் பரப்பின்  வடகரையை அடைந்தனர்.  பின் பகைவரை எதிர் கொள்ள பாடி வீடு அமைத்துத்  தங்கினர்.

கனக விஜயருக்கும் சேதி போனது.   உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன்,  சித்திரன், சிங்கன்,  தனுத்திரன், சிவேதன் என்ற எட்டு வட நாட்டு அரசர்களுடன் கூட்டு கொண்டு "தென் தமிழ் ஆற்றலைக் காண்போம், நாம்"    என்ற இறுமாப்புடன்   சேரமாமன்னனுடன் மோதினர்.

ஞாயிறு தென்படவில்லை.  அதன் வெயில் கதிரை துகில்  கொடிப் பந்தல்கள் விழுங்கின.  பதப்படுத்தப் பட்ட தோலால் போர்த்திய வளைந்த போர்ப்பறை, வெண்மை உமிழும் சங்கு, நீண்ட கொம்பு,  இடி இடித்தாற் போல முழங்கும் போர்முரசு,  இழும் என்னும் ஒலி நாதம் கொண்ட கஞ்சதாளம் எல்லாம் ஒரு சேர முழங்கி உயிர்க் குலை நடுநடுங்க திசைகள் அதிர விநோதமான ஓசைகள் பிளந்தன.

தோளில் வில் தாங்கிய வீரர்,  அதிவேகமாக தேரைச் செலுத்தும்
திறமையாளர்,  யானை மத்தகத்தின் மேல் அமர்ந்து வரும் யானை மறவர், குதிரை வீரர் என்று வரிசை வரிசையாக வருவோரின் அதகள ஆர்ப்பாட்டத்தில் நிலம் அதிர்ந்து புழுதி கிளம்பி யானைகள் தம் முதுகில் சுமந்த மணி நாவிலும்,   சங்குகளின் நாவிலும் நிரம்பி அவை தம் செய்தொழில் மறந்து ஓசை எழுப்ப முடியாது தவித்தன.

இரு பக்கப் படைகளும் ஒன்றில் ஒன்று மோதி ஒன்றாகின.  தோள்களும், தலைகளும் தனித்தனையாக சிதறுண்டு கிடந்த பிணக்குன்றின் மீதேறி  பேய்கள் கூத்தாடிக் களித்தன.   நிணம் பொருந்திய குறுதி ஆற்றில் பெண் பேய்கள் தம் கூந்தலை தாழத் தழைய விட்டு இரத்த குளியல் நிகழ்த்தின.

வலிமை கொண்ட தேர்ப்படை வடவரசர்களின் சிறப்பு.  வாளேந்திய சேர வீரப்படையினரின் கூர்வாள் தேர் மொட்டுக்களைக் கொய்தன.   கடுங்களிர்களின் பிடரியும்,  புரவிகளின் முதுகுகளும் பாழ்பட  கூற்றுவன் அந்தப் பகல் நேரத்திலேயே பல உயிர்களை நாசம் கொள்வான்  என்பதனை வடவரசர்கள் கண்கள் பிதுங்கக் கண்டனர்.  இறுதியில் போர்  ஓய்ந்து  வெற்றி வாகை சூடிய  செங்குட்டுவன் பனம் பூ தொடுத்த தும்பை வெளிர் மாலையை சுற்றியிருந்த படைவீரர்  ஆரவாரத்திற்கிடையே  தன் சென்னியில் சூட்டிக் கொண்டான்.


(தொடரும்)

========================================================================

****  நூற்றுவர்  கன்னர் என்ற மன்னன்,  கங்கையாற்றைக் கடந்து செங்குட்டுவன்   படைகள் செல்ல உதவினான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  சாதகர்ணி என்ற வடமொழிப்  பெயரே   நூற்றுவர் கன்னர் என்றாயிற்று என்பர் வரலாற்று ஆய்வாளர்கள்.

========================================================================


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Monday, August 7, 2017

வாழ்க்கை அழைக்கிறது

         ஒரு வாழ்வியல் தொடர்


முந்தைய  பகுதி:   http://jeeveesblog.blogspot.in/2017/07/blog-post_21.html

பகுதி--2

ந்தகோபாலுக்கு போன ஆண்டு தான் கல்யாணம் ஆயிற்று. முப்பது வயது வரைக் காத்திருந்து பிறகு செய்து கொண்டத் திருமணம். அதற்குள் குழந்தைக்கு அவர் அவசரப்படவில்லை போலிருக்கிறது. அவரே ஒரு குழந்தை என்பது வேறு விஷயம்.

சொந்தத்தில் ஒரு வீடு வாங்க வேண்டுமெனற ஆசை நந்தகோபாலுக்கு வந்திருக்கிறது. கையில் கொஞ்சம் சேமிப்பு இருப்பதாகச் சொன்னார். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறார்.

நந்தகோபால் போன்றவர்களுக்கு ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற ஆசை வருவதற்கே அவருக்குள் ஆயிரம் யோசனைக்குப் பின்னால் தான் என்று எனக்குத் தெரியும். அதன் சாதக பாதகங்களை அவரும் அவர் மனைவியும் தங்களுக்குள் அலசிப் பார்த்து முடிவில், 'சரி, இதில் இறங்கலாம்' என்ற முடிவிற்கு வந்த பின்னரே, அடுத்தாற்போல் என்ன செயவது என்று என்னிடம் கேட்க வந்திருக்கிறார்.

சொந்தத்தில் வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை--மேலும் மேலும் அதுபற்றி யோசித்து 'நம்மால் முடியும்' என்று தீர்மானிக்கின்ற நம்பிக்கை--அந்த நம்பிக்கை ஏற்படுத்தும் செயல் வடிவத்திற்கான துடிப்பு= இதுதான் முதல்படி.

"வீடு வாங்க வேண்டுமென்று நீ தீர்மானித்தவுடனேயே 50% ஜாப் ஓவர்" என்று நான் சொன்னதைக் கேட்டு நந்தகோபால் சிரித்தார்.

"என்ன சார்! வீடு வாங்கி, கிரகப்பிரவேசமே பண்ணிவிட்ட மாதிரி முடித்து விட்டீர்கள்?..இப்போத்தானே அதுபற்றி முடிவு செய்து, அடுத்து என்ன செய்வது என்று கேட்க வந்திருக்கிறேன்..."

"அந்த எண்ணம் உங்கள் மனசில் வலுப்பெற்று தன்னம்பிக்கையும், இதுபற்றி மேலும் என்ன செய்யலாம் என்று இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க வந்த பொழுதே, பாதி வேலை முடிந்த மாதிரி தான்" என்று சொல்லி, "இனி என் வேலை சுலபம்" என்று நந்தகோபாலுக்கு விளக்கினேன். நகர்புறத்தில் வாங்கும் பிளாட், ஊருக்கு வெளியே வாங்கும் தனிவீடு அல்லது நிலம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வீடு, பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஒப்பந்தமுறையில் கட்டிக்கொள்ளும் வீடு, பிளாட் என்றால் எத்தனையாவது மாடி, கிரவுண்டு ப்ளோர்-உச்சி-சாதகபாதகங்கள், லிப்ட் வசதி இதையெல்லாம் சொல்லி, வள்ளுவர் கோட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கும் 'சொந்தத்தில் வீடு' பற்றிய கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு விஷயங்களைச் சேகரம் பண்ணச் சொன்னதுமே நந்தகோபால் முகத்தில் உற்சாகம்.

நான் ஐந்து லட்ச ரூபாய்    அட்வான்ஸ்  பணம் கொடுத்து உதவிய மாதிரியான சந்தோஷத்தில், "தேங்க்யூ சார்!..உங்க ஆலோசனைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, சார்!" என்று ஆயிரம் நன்றி சொல்லிப் புறப்பட்டார்.

ஒருத்தருக்கொருத்த்ர் பரிமாறிக் கொள்கின்ற சந்தோஷம் மிகமிக முக்கியமானது.

கருத்துக்களை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் பொழுது,அல்லது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பொழுது புதுவிஷயங்களையும் அதே சமயத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிந்து கொள்கிறோம். ஒரு விஷயம் பற்றிய உண்மையான பிரச்னைகள், அவற்றை நாமே அணுகும் பொழுதுதான் புரிகிறது. சொந்த அவசியம் கருதி பிரச்னைகளைத்  தீர்க்கக்கூடிய சாத்தியகூறான வழிகளும் நமக்குப் புரிகின்றன.

நான் செய்தது, நந்தகோபால் குடும்பத்தில் ஊன்றிய விதைக்குத் தண்ணீர் ஊற்றி வெளிச்சம் கொடுத்தது தான்; இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

"O.K...go ahead....good luck.." என்று பிறரை  ஆசிர்வதிப்பது எவ்வளவு பெரிய சந்துஷ்டியையும், மன உற்சாகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது  என்பது லேசில் வெளித்தெரியாத விஷயம்.

நிச்சயம் நந்தகோபால் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்.  இன்னும் ஒரு வ்ருடத்தில் வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேத்தில் கூட, "சார், எனக்குக் கொடுத்த நம்பிக்கை தான் நான் இந்த வீடு வாங்கக் காரணம்!" என்று முகம் பூரா சந்தோஷ்த்தோடு சொல்வார் என்பதும் எனக்குத் தெரியும்.

கடற்காற்று போல, இலவசமாகக் கிடைக்கின்ற இந்த சந்தோஷங்களை அனுபவிப்பதில் தயக்கமென்ன?..


(வளரும்)


வாழ்க்கையின் ஈடுபாட்டிற்காக அழழகனான பொன்மொழிகளைத் தந்த  நண்பர்களுக்கு நன்றி.

Monday, July 31, 2017

மீண்டும் சுஜாதா.... சுஜாதா...

'எப்படி எழுதக் கூடாது?'  என்ற சுஜாதாவின்  தொடரின் நான்காவது பகுதியை வாசிக்க நேர்ந்தது.

 பிற்காலத்து  சுஜாதா அல்லாத எழுத்தின் சாயல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை போலும்.   அதனால் தான் இந்தப் பகுதியின் முதல்  பகுதி போல் அல்லாமல் சுஜாதா எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து எடுத்து எழுதுவது போல ரொம்பவே  அந்தப் பகுதியைக் குறுக்கி விட்டார்கள்.

குறுக்கியது தெரியாமல் இருக்க,  சுஜாதா எழுதிய இரண்டாவது சிறுகதையான 'ஒரு    பெரிய மனிதரும், பிக்பாக்கெட்டும்'  கதையை அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள்.  1962-ஆம் வருடத்திய  டிசம்பர் 27
'குமுதம்' இதழில் பிரசுரமான கதை  இது.   'லதா'வின் அட்டைப்பட  குமுதம் இதழ் அது.                                                                                          

சுஜாதா தனது முதல் கதையான 'அதிர்ச்சி'யை  எஸ்.ஆர். ராஜன் என்ற பெயரில்  எழுதியிருந்தார் என்றால்,  இரண்டாவது கதையான ஒ.பெ.ம.பி. கதையை எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

ரொம்ப சாதாரணமான கதை.    ஆரம்ப கால ரங்கராஜன் எதிர்கால சுஜாதாவாக எப்படி வளர்ந்து உருவானவானார் என்று இந்தக் கதையைப் படித்து தாராளமாக வியக்கலாம்.    'எப்படி  எழுதக் கூடாது'   என்பதை விட 'எப்படியும் எழுதலாம்' என்பதைக் கற்றுக் கொடுப்பது தான் சுஜாதா விட்டுச் சென்ற எழுத்துப்  பாணி சாகசமாகத் தெரிகிறது.

முக்கியமாக  இந்தக் கதை சம்பந்தப்பட்ட விவரங்களிலிருந்து ஆச்சரியமான சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நூறு ரூபாய் காசுக்காக ஹைதராபாத்திலிருந்து   கனமான  ஒரு பெட்டி  நிறைய விஸ்கி பாட்டில்களை  கடத்தி வர கதைநாயகன் ஒப்புக் கொள்கிறான்.

ஒரு சின்ன வெள்ளிக் கிண்ணியின்  விலை  வெறும் பத்து  ரூபாய்!

1962-ம் வருடத்திய குமுதம் இதழின் விலை  25  காசுகள்.  ஆக 40 குமுதம் இதழ்களின் விலை ஒரு வெள்ளிக் கிண்ணிக்கு சமம்.  அல்லது  40 குமுதம் இதழ்களை வாங்குவதைத் தவிர்த்து விட்டால் ஒரு வெள்ளிக் கிண்ணி வாங்கி விடலாம்!

கட்டக் கடைசியாக   வழக்கம்  போல  புதிர் இல்லாவிட்டால் எப்படி?..

இந்த வார 'எப்படி எழுதக் கூடாது?' தொடரை வைத்து ஒரு சின்ன புதிர்.


அன்றைக்கு ராத்திரியே அவசர அவசரமாய் 'ஒரு பெரிய மனிதரும் பிக்பாக்கெட்டும்' கதையை எழுதி காகிதம் உலர்வதற்குள் குமுதம் அலுவலகத்துக்கு  போஸ்ட் செய்தேன்.

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  அது கையில் கிடைத்தவுடனே,  கவரைக் கூடப் பிரிக்காமல்,  பரணில் தூக்கிக் கடாசி விட்டார்கள்.

                                                                                                   --  சுஜாதா

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  என்றால் என்ன?


இதான்,  புதிர்!   சொல்லுங்கள்,  பார்க்கலாம்.


இந்தப்  புதிரில் ஒரு மிஸ்ஸிங்கும்  உண்டு.   அதையும் சேர்த்துச் சொல்பவர்கள்  உண்மையில் தமிழ் பத்திரிகை வாசகர் உலகில் கில்லாடிகள் தாம்!...


Tuesday, July 18, 2017

வாழ்க்கை அழைக்கிறது !

         ஒரு வாழ்வியல் தொடர்


1.   இன்று புதிதாய்ப் பிறந்தோம்


"எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று வியந்து போற்றிப் புகழ்வார், பாரதியார்.


இன்பம் எப்பொழுதுமே இனிப்பான விஷயம். அது துய்ப்பதின்பால் பட்டது. எதையும் அனுபவிப்பதற்கு ஒரு அவா வேண்டும். மனது தான் அவா என்கிற ஓர் அற்புதத்தை சிந்தையில் ஏற்படுத்தி, இது வேண்டும் என்கிற ஆசையைக் கிளறிவிட்டு, அந்த இன்பத்தை அனுபவிக்க தூண்டுகோலாக இருக்கிறது. அந்த ஆசை இல்லையென்றால், பாரதியாரின் கண்ணுக்குக் கோடிகோடியாகத் தெரிந்த அந்த இன்பம் ஒன்று கூட நமக்குப் புலப்படாது. மனம் ஒத்துழைப்பில்லாத எதுவும் இன்பத்தைக் கொடுக்காது.

ஆசைப்படுவதற்கும் ஓர் அர்த்தம் வேண்டும்; ஒரு நியாயம் வேண்டும். ஆசைப்படுவதை அடைய, ஆசையை முன்னிருத்தி அதைப் படிப்படியாக அடைய உழைப்பு தேவை. எந்த உழைப்பும் உற்சாகத்தோடு கலந்து வந்தால் பன்மடங்கு வேகம் கிடைக்கும். ஈடுபாடு இருந்தால், உற்சாகம் தானே கதவைத்தட்டிக்கொண்டு வரும். தானே தனியாகக்கூட வராது; தன்னம்பிக்கையையும் தன் கூடவே கூட்டிக்கொண்டு வரும்.

எல்லா ஆசையும் ஆசையாகி விடாது. நியாயமான ஆசைகளுக்கு எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத ஒரு தார்மீக பலம் உண்டு.

நியாயமான ஆசையைத் தேர்ந்தெடுக்க நல்லறிவு வேண்டும்; குறைந்தபட்சம், நன்மை-தீமைகளை அலசுகின்ற மனசாவது வேண்டும்.

நந்தகோபால் என் நண்பர். போனவாரம் போன் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.

அவரைப்பார்த்ததுமே  குழந்தைகளுக்கு ஏகப்பட்ட உற்சாகம். "அங்கிள்..அங்கிள்.." என்று சுற்றிக்கொண்டு விட்டன. ஆண்ட்டி அவர் கூட வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு இன்னும் நெருக்கம் காட்டினர்.

விஷயம் இதுதான். நந்தகோபால் மிமிக்ரி பண்ணுவதில் மன்னன். இன்னொரு பிரபலம் மாதிரி அவர் பேசுவது, நடிப்பது எல்லாம் அச்சு அசலாக இருக்கும். இதைத்தவிர, கைவிரல்களை, முட்டியை இப்படி அப்படி அசைத்து, கோணி, குவித்து, பிரித்து வெள்ளைச்சுவரில் மான், பாம்பு, குதிரை, முயல், யானை என்று ஏகப்பட்ட நிழலுருவங்களை அநாயசமாகப் போட்டுக் காண்பிப்பார்.

ஒருதடவை செய்தது இன்னொருதடவை இல்லை என்று அவர் வரும் பொழுதெல்லாம் விதம் விதமாக வெரைட்டியாக நந்தக்குமார் குழந்தைகளை  உற்சாகப்படுத்துவார். குழந்தைகள் சந்தோஷிப்பதில் அவரும் 'குஷி'யாகி, தானும் ஒரு குழந்தையாகி விடுவார். அது தான் விஷயம்.

இவர் செய்து காண்பிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தங்கள் நண்பர்களுக்கு, "பார்த்தாயா, இதை?" என்று வேடிக்கைக் காட்டுவதில்  குழந்தைகளுக்கும் உற்சாகம்.

ஒருதடவை வீட்டுக்கு வந்தபொழுது, பேச்சோடு பேச்சாக தனனையறியாமல் நந்தகோபால் சொன்னார்: "நான் இப்படி குழந்தைகளோடு விளையாடுவது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. 'என்னங்க, இது, குழந்தைகளோடு சரிக்குச் சமமாக?..உங்க வயசென்ன, அவங்க வயசென்ன? நாளைக்கு அதுகளுக்கு உங்க மேலே மரியாதை இல்லாமல் போய்விடும்!' என்று தன் மனைவி குறைப்பட்டுக் கொண்டதாகச் சொன்னார். அதிலிருந்து
'ஆண்ட்டி' அவர் கூட வரவில்லை என்றால், குழந்தைகளுக்கு நந்தகோபாலைப் பார்க்கையில் கூடுதல் சந்தோஷம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குப் போனால், சில அன்பர்கள் பழம், பிஸ்கட், சாக்லெட் என்று ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். குழந்தைகள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து, கள்ளம் கபடறியாத அந்த பிஞ்சுகளின் முகம் மலர்வது கண்டு இவர்கள் மனமும் மலரும்.

குழந்தைகளோ, பெரியவர்களோ---இதில் ஒன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. மனசு மகிழ்கிறதே, மனசு மலர்கிறதே, அதுதான் விசேஷம். அதுதான் முக்கியம்.

மனுஷப் பிறவிகளில் யாரும் 'வேஸ்ட்' இல்லை. 'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.

அது போகட்டும். நந்தகோபால் எதற்கு வந்தார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே?.


(வளரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Wednesday, July 12, 2017

சுஜாதா.. சுஜாதா.. சுஜாதா

'குமுதம்'  பத்திரிகையில் 'இதுவரை எதிலும் வெளிவராத சுஜாதா எழுதிய அமர்க்களத் தொடர்' என்று ஆவலைத் தூண்டும் பில்டப் கொடுத்து இந்த வாரத்திலிருந்து   சுஜாதாவின்  தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.

தொடரை வாசித்ததில் அந்த சாவகாச எழுத்தைப் பார்த்து சுஜாதாவின் எழுத்துப் பாணியா இது என்று ஆச்சரியம் ஏற்பட்டது.   அவரின் எழுத்து மயக்கத்தில் திளைத்த வாசக உள்ளங்களுக்குத் தான் வெளிச்சம்!..

இந்த வார அந்தத் தொடரை வைத்து சில சின்னச் சின்ன புதிர்கள்.

புதிர்--1:  நான் எழுதிப் போட்ட மூன்று கதைகள் சு.அ.ப.  போல உடனே திரும்பி வந்தன.

கேள்வி:   அது என்ன  சு.அ.ப.?..    

சு.அ.ப. போல  இன்னொன்று:

கி.போ.க.

(இதுவும் பத்திரிகை அலுவலங்களுக்கு
அனுப்பபடும் கதைகள் குறித்துத் தான்! )                    


புதிர்--2:  எஸ். ரங்கராஜனாகிய  நான் ஒரு தற்செயலாய்த் தான் சுஜாதா ஆனது போலத் தோன்றுகிறது.

கேள்வி:  மேலே கண்ட வாக்கிய அமைப்பில் ஒரு பிழை உள்ளது.  என்ன அது?..

தொடரின் இடுக்கில்  சுஜாதாவின் வாக்குமூலம் போல அவரது  அட்வைஸ் ஒன்று என்னைக் கவர்ந்தது.

அது இது:

"நான் பார்த்த வரைக்கும் என் திறமையெல்லாம்  -- திறமை என்று ஏதாவது இருந்ததென்றால்-- அவாய்டிங்  பேட் ரைட்டிங்!..  (தண்டமாய் எழுதுவதைத் தவிர்த்தல்)  என்னுடையது நல்ல எழுத்து (குட் ரைட்டிங்) என்று நான் சொல்ல மாட்டேன்.  நல்ல எழுத்துக்கு முயற்சி செய்கிறேன்.  அவ்வளவு தான்.  ஆனால் மோசமான எழுத்தைத் தவிர்க்கிறேன்.

த்திரிகைகள் நினைத்தால் எதையும் கவிதை என்று லேபிள் குத்தி உலா விடலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.

எதுகை மோனை எல்லாம் கவிதையில் அநாவசியம் என்று சிலர் கருதுவது போலத் தெரிகிறது. ஆனால்  எனக்கென்னவோ -----

எதுகை மோனை 
இல்லையென்றால் 
ஏது கவிதை 
என்று தோன்றுகிறது.


இப்பொழுதெல்லாம் கவிதை
என்றால் இப்படித்தான் என்று
எழுதினாலும் என் பாணியில்
என் கவிதை ஒன்று:

ஒரு பார்வை:                                                                                        
                                                                                             
அய்யோடி!... இந்தக்  கிளிகளுக்குத் தான்
கொய்யா என்றால் எத்தனை ஆசை!
ஒரு கொத்து; ஒரு துளி கவ்வல்; நிமிர்ந்து
ஒரு பார்வை;  இப்படி அப்படி தலை திருப்பல்
அடுத்து அடுத்த கொத்தல்; கவ்வல்; தலை திருப்பல்
கெளசல்யாவுக்கு கொய்யான்னா பிடிக்காது அதனால்
கொய்யா சாப்பிடும் கிளிகளும் பிடிக்காது!
பாமினியே ஒரு சுதந்திரப் பறவை. அதனால்
பறக்கும் கிளி தான் அவளுக்குப் பிடிக்கும்;
கூண்டுக்கிளியைப்  பார்க்கவே சகிக்க மாட்டாள்.              
ரம்யாவிற்கோ கிளியைப் பிடிக்காவிடினும்  அதன்
கழுத்து வளையம் ரொம்பவும் பிடிக்கும்.
ஜெயத்திற்கோ ஓவியம் என்றால் உயிர்
கேட்டால் ஓவியக்கிளியின் ஒயில்
நிஜக்கிளிக்கு வருமா என்பாள்.
கிளியோ புலியோ எதுவோ ஒன்று;
அவரவர் ரசனையை வெளிப்படுத்த
ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதே
அது தான் வேடிக்கை.


ழுத ஆரம்பித்து மூன்று தொடர்கள்  அப்படியே அரைகுறையாக நிற்பது வருத்தமாக இருக்கிறது.

1.  ஆத்மாவைத்  தேடி...

2.  இனி...

3.  அழகிய தமிழ் மொழி இது!


முதலில் சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் எழுத முயன்ற 'அழகிய தமிழ் மொழி இது' தொடரை  விரைவில் தொடர்ந்து முடித்து விடுவதாக   இருக்கிறேன்.

அதற்கு அடுத்து  இனி..  தொடரை தொடர ஆரம்பிக்க வேண்டும்.

கடைசியாகத் தான் 'ஆத்மாவைத் தேடி..'   ஆனால் 'ஆத்மாவைத் தேடி..க்காகத் தான் தேடித் தேடி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


இந்த முப்பெரும் ப்ரொஜெக்ட்டும் ஒரு பக்கம்  மனசில் அலை பாய்ந்து கொண்டிருக்க   இடையில் தான் இந்தப் பதிவு மாதிரி ஜல்லியடித்தல் எல்லாம்..

பூவனம்  தளப் பதிவுகளை சலிக்காமல் வாசித்து பின்னூட்டம் இடும் பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றி.



படங்கள் உதவிய நண்பர்களுக்கும் நன்றி.



Thursday, July 6, 2017

என்றைக்கும் புதுசு தான்...


குக்கூ வென்றது கோழி அதன் எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.                                                        

                                                                                   (குறுந்தொகை- 157)

இரவில் கிடைத்ததாலோ என்னவோ
இன்னும் விடியவில்லை
                                                                 
                                                                        -யாரோ



              குதிரை வேதம்

1.
குதிரைகள் கடவுள் ஜாதி
கும்பிடுதல் உலக நீதி
புணர்ந்தபின் குதிரைகள்
ஒரு நாளும் தூங்கியதில்லை
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்கா பணிந்து போகும்?

2.

குளம்படி ஓசை- கவிதை
குதிரையின் கனைப்பு - கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு

3.
கூட்டமாய்ப் பறவை போல
குதிரைகள் பயணம் செய்யா..
இலக்குகள் குதிரைக்கில்லை...
முன் பின்னால் அலைவதைத் தவிர
இலக்கில்லா மனிதர் பெரியோர்.
உள்ளவர் அலைய மாட்டார்...
நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை..
ஏனைய உயிர்கள் போல....

5.

நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர்குணம் அறிய மாட்டார்
வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல்  கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில்  குழந்தை ஜாதி!

6.

விருப்புடன்  பிறந்த குதிரை
கொம்பில்லை;  விஷமுமில்லை..
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவார்?..

7.
குரங்குகள் மனிதர் போல
வளர்ந்தது உண்மையாயின்
குதிரைகள் மாறும்  ஒருநாள்

8.
குரங்குகள் மடியும் அன்று..
கதறிட  மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தைக் குதிரை அறியும்

                                                                                  --  பாலகுமாரன்

தேடப் போய்
இருந்ததும்
தொலைந்தது.

                                                                                 --  மாமல்லன்


சமரச வேஷமிட்ட குரங்கினிடம்
அப்பத்தைப் பறிகொடுத்த
பூனைகள் நாம்                  

                                                                            -  அப்துல் ரகுமான்

கை ஓய இருளை விடியும் வரை
கடைந்த  இரவு
ஒரு துளி வெண்ணையாய் உயரத்தில்
அதை வைத்து விட்டு நகர்ந்தது

                                                                              --  தமிழன்பன்


'அகர முதலெழுத்தெல்லாம்' என்று ஆரம்பிக்கும் முதல் திருக்குறள் அனைவருக்கும் தெரியும்.

1330=வது கடைசிக் குறள்?..

'ஊடல், கூடல்' சம்பந்தப்பட்ட ஒப்பற்ற குறளும் என்றைக்கும் புதுசு தான்!..

Saturday, February 18, 2017

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

பகுதி---5

நம் குணநலன்களை மூன்றாக வகுத்துள்ளார்கள் பெரியோர்கள்.

நிமிஷத்திற்கு நிமிஷம் சலனங்களில் ஆட்பட நேர்கிற நிர்பந்தம் கொண்டிருக்கிற இன்றைய வாழ்க்கை அமைப்பிலும் கூட  இன்றைய பெரியோர்களும் இந்த மூன்றையே இன்றும்  சொல்லிக் கொண்டிருப்பதினால்   இன்றைக்கும் பொருந்தி வருகின்ற மாதிரி அன்றே மூன்றில் அடக்கிய அன்றைய பெரியோர்களின் தீட்சண்யமிக்க செயல்பாடுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

அப்படிப்பட்ட அந்த அதிசய மூன்று தான்  என்ன?..

சத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்

-- என்ற மூன்றும்  அத்தனை பேரிலும் படிந்திருக்கிற    மூன்று அடிப்படை குணங்கள் என்கிறார்கள்.

மூன்றுமே வடமொழி வழிப்பட்ட விளக்கங்கள் தாம்.  எந்த மொழியாய் இருந்தால் தான் என்ன?  நமக்கு ஏதாவது உபயோகமாகிறதா என்று பார்ப்போம்.                                                      

 யாரையாவது பார்த்து  யாராவது,  'இவர் சாத்வீகமான ஆசாமிய்யா' என்றால் எதற்கும் கோபப்படாத சாந்தமான ஆசாமியைத் தான் சொல்கிறார் என்று       பொதுவாக அர்த்தம் கொள்ளலாம்.     எதற்கும் கோபப்படாத என்பதை வேண்டுமானால் அநாவசியத்திற்கெல்லாம்  கோபப்படாத என்று  இன்றைய காலத்துக்கும் பொருந்தி வருகிற மாதிரி கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் போலிருக்கு.

ஏனென்றால்  இன்றைய வாழ்க்கை அமைப்பில் கோபப்படாமலேயே இருக்க் முடியாது.  பாரதியார் சொன்ன மாதிரி 'அவர் முகத்தில் உமிழ்ந்து விடு, பாப்பா' என்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம்  செவ செவ என்று சிவந்து விடுகிற முகத்தைத்  திருப்பிக் கொள்ளவானும் செய்யலாம்.
நியாயமான கோபம் கூட இல்லையென்றால்  நம்மை சொரணை கெட்டவனாகவும் ஆக்கிவிட நமது  சொந்தங்களே காத்திருப்பார்கள்.  உடற்கூறுகளில் உற்பத்தியான  கோபத்தை அடக்கினாலும் உடல் நலத்திற்குக் கேடாம்.  அதனால் உள்டக்கிய கோபத்தை எப்படியானும் வெளித்தள்ளியே ஆக வேண்டும் என்று உடல் சாத்திரம் வேறு  இன்னொரு பக்கம் போதிக்கிறது.

 "மொத்தம் மூணு தான் சார்.  இந்த மூன்றுக்குள் இது வரை  இந்த உலகத்தில் பிறந்த,  இன்னும் பிறக்க இருக்கிற எல்லா ,மனுஷ ஜென்மங்களாயும்  அடக்கி விடலாம் என்று 'கெத்'தாய் சொல்கிறார்கள்.

முக்கோணம் போல  மூன்றே குணங்கள்!  யாருக்கும் தவிர்க்கவே முடியாமல் எல்லோரிலும் இந்த மூன்றும் பதுங்கியிருக்குமாம்.  ஆனால் அப்படிப் பதுங்கியிருந்தாலும் அதில் ஒரு விசேஷமும் இருக்குமாம்.   அதாவது இந்த மூன்றும் யாருக்கும் சம அளவில் இருக்காதாம்.  கூடக் குறைச்சலாய் இருக்குமாம்.    அவரவர் இயல்பில்  மூன்று வகைப்பட்ட குணங்களில் ஏதாவது ஒரு குணத்தின் தன்மை  மட்டும் சற்று   மேம்பட்டு இருக்குமாம்.

அப்படி மேம்பட்டு இருப்பதற்கும் ஒரு விதி வகுத்திருக்கிறார்கள்.  அது என்னவென்றால்  அவரவருக்கு வாய்த்த குணத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றமிருக்காதாம்.  அதே சமயத்தில் அவரது அடிப்ப்டை குண இயல்பை ஒட்டி  ஏதாவது நிகழும் பொழுது அப்படி அந்த நிகழ்வு  நிகழ்கின்ற சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏறப இந்த குணங்கள் மாறி மாறி அமையுமாம்.

தமோ, ரஜோ, சத்வ  இந்த மூன்றில்  ஏதாவது ஒன்று ஒருவரின் அடிப்படை குணம் என்றால் அதைச் சார்ந்தே அவரது அடிப்படை  அல்லாத மற்ற இரண்டு குணங்களும் மாறி மாறி அவரை ஆட்கொள்ளும்.

ரொம்ப சரி.  இப்போ  கீர்த்தி வாய்ந்த அந்த   மூன்று குணங்களைப் பற்றிய விவரங்களைத்  தெரிந்து  கொள்ளலாம்.

சத்வ குணம் ரொம்ப பெருமை வாய்ந்தது.  சாத்வீகம் ஞானத்தை வளர்க்குமாம்.   நல்லன அல்லாத  எந்தக் காரியத்தையும் செய்ய இந்த குணக்காரர்களுக்கு விருப்பமே வராதாம்.

ரஜோ குணம் தான்  ஒன்றின்  மீதான ஆசையை அல்லது பற்றுதலை ஏற்படுத்துமாம்.   ஒன்றின் மீது விருப்பம் ஏற்பட்டால் என்னவாகும்?.. அதை அடைந்து விட மனம் ஏங்கும்.  அதை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும்.

மூன்றாவது தமோ குணம்.  எதிலும் தாமதப்  போக்கு  உள்ளவர்கள் இந்த குணத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவர்கள்.

சரி, இவ்வளவு தானே பெரிசாய் இதில் என்ன இருக்கிறது என்று விட்டு விட முடியாதபடிக்கு மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாய் பின்னப்பட்டிருப்பது தான் படைப்பின் விசித்திரம்.

அது என்ன விசித்திரம் என்று கடைசியிலிருந்து பார்ப்போம்.

தமோ குணம் இயல்பு  அதிகமாய் இருந்தால் ஆள்  டல்லடித்து தூங்கி வழிபவனாய் இருப்பான்.  கோபு சார் பாஷையில்  சொல்வது என்றால் எழுச்சி இல்லாத ஆசாமியாய் சோம்பல் பேர்வழியாய் இருப்பான்.

அந்த சோம்பலைப் போக்க மருந்தாய் வந்த குணம் தான் ரஜோ குணம்.ஒன்றின் மேல் விருப்பம் ஏற்பட்டு  அது ஆசையாய் கொழுந்து விடத் தொடங்கி விட்டதென்றால் கொட்டாவி  விட்ட  சோம்பல் ஓடியேப்  போகும்.   மாமலையும் ஓர் கடுகாய் மாறுவதற்கு பெண்ணின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் என்பார் பாரதிக்கு தாசனார்.  அவர் சொல்லும்  அழகு மடந்தையின்    அந்தக்  கடைக்கண் பார்வை தான் என்றில்லை. ஒவ்வொருவருக்கும் ஒன்று.   ஒருவருக்கு 'ச்சீ' எனப்படுவது இன்னொருவருக்கு  'ஆஹா'.  வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் இப்படியான  தேர்வு முறை இருக்கிறது.  சரி, விஷயத்திற்கு வருவோம்..

ஒன்றின் மீதான விருப்பம் தீவிரமாகி  அதாவது ரஜோ குணம் மேலோங்குவது  அதை அடையும் வரை ஓயாது.  விருப்பதற்கு எல்லையே கிடையாது.   ஒன்றின் விருப்பத்தின் பலனான அனுபவிப்பின் முடிவு இன்னொரு விருப்பத்திற்கு  ஆரம்பமாக இருக்கும்.

 இப்படி  முடிவு-- ஆரம்பம்-- அதன் முடிவு இன்னொன்றின் ஆரம்பம்  என்று எவ்வளவு காலத்திற்குப் போய்க் கொண்டிருப்பது?   அப்படிப் போகாமல் இருப்பதற்கு தான் சத்வ குணம்.    சத்வ குணம்.  மேலோங்கும் போது  'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமில்லை'  என்று கண்ணதாசனார் சொன்ன மாதிரி எதிலும் எதுவும் இல்லை என்ற ஞானத்திற்கு இட்டுச் செல்லும்.

எதிலும் எதுவும் இல்லை என்பது ஞானம் ஆயினும் அது ஒரு அசட்டு ஞானம்.
அந்த அரைகுறை ஞானம்,  எதிலும் எதுவும் இல்லை என்று தோற்றத்திற்குத் தட்டுப்பட்டாலும்  எல்லாவற்றிலும்  ஏதுவோ இருக்கிறது என்ற  ஞானத்தின் பரமானந்த நிலைக்கு  இட்டுச் செல்லும்.  அந்த எதுவோவும் இல்லை என்றால் -- டெட்  வுட்-- இயக்கமே இல்லை என்ற  தத்துவம் புரிதலாகும்.  எல்லாமே ப்யூர் சயின்ஸ் என்பது தான் இதிலிருக்கிற ஆச்சரியமே.

இந்த இடத்தில் இன்னொரு வேடிக்கை பற்றியும் சொல்ல வேண்டும்.  பரமானந்த நிலை பற்றிச் சொன்னோம், இல்லையா?.. . அந்த பரமானந்த நிலையில்  ஆழ்ந்து கிடப்பதற்கும் வழியில்லாத மாதிரி-- சத்வ குணத்திலேயே மயங்கிக் கிடக்காமல்--   நமக்கு வாய்த்த இந்த நிகழ்   வாழ்க்கை பார்த்துக் கொள்ளும்.  போட்டி,  பொறாமை,  விட்டுக்  கொடுக்காமை,  நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கை சதவ குணத்தை செல்லாக் காசாக்கி நிதர்சனத்தைப் புரிய வைக்கும்.

நமக்கென்று தனி வாழ்க்கை எதுவும் இல்லை.  நம்மை சுற்றியிருக்கிற ஜனக் கூட்டத்தை சார்ந்தது தான் நம் வாழ்க்கையும்.  அதைத் தவிர்த்த  தனி வாழ்க்கை என்றால் காட்டுக்குத் தான் போக வேண்டும் என்று அந்தக்கால வழக்கத்திலும் சொல்வதற்கில்லை.   காடெல்லாம் அழிக்கப்பட்டு காங்கிரீட் தளங்களாகி விட்டன.  

ஆக,  சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களும் ஒருவனின் வாழ்க்கையில்  இது விட்டால் அது, அது விட்டால் இது என்று அந்தந்த நேரத்து சொர்க்கமாய் அமைந்த வட்டப் பாதைகள்.

நிதர்சன வாழ்க்கை  என்பது மாறிக்  கொண்டே இருக்கும்  பெளதீக உண்மை.    அந்த நிதர்சனம் நம்மில் ஒழியும் பொழுது தான் உண்மையான ஞானத்திற்கும் கதவு திறக்கிறது.

அந்த ஞானக் கதவை திறக்க முடியாமலும் நிதர்சனம் பார்த்துக் கொள்கிறது.

அப்படி என்னய்யா  கண்டும் விண்டும் உணர வேண்டிய  ஞானம் அது என்றால் அதைத்  தானே தேடித் திரிந்து தெரிந்து கொள்ளத் துடிக்கிறேன் என்'ற பதிலும் கியைக்கும்.

தட்டினால் தான் கதவும் திறக்கும்.

ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நீங்காத ஆவலும் தொடர்ந்த முயற்சியும் இருந்தால் தான் எது பற்றியும் கிஞ்சித்தானும் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது என்பவர்கள் சுகவாசிகள்.
சொல்லப் போனால் இப்போதைக்கு சுகவாசிகள்.  தெரிந்து  கொள்ள வேண்டிய அவசியம் வரும் பொழுது  தன்னாலே கை நீண்டு கதவைத் தட்டும்.

தட்டினால் தான் கதவும் திறக்கும்.   தட்டுவதற்கு அவசியம் இன்றி திறந்தே இருக்கிற கதவும் ஏதும் இல்லை.  திறந்தே இருக்கும் என்றால் கதவுக்கும் அவசியமில்லை.


(படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.)
Related Posts with Thumbnails