மின் நூல்

Monday, December 30, 2019

மனம் உயிர் உடல்

26.   அன்னை  பாலா சரணம்


ந்தத் தியானத்திற்கு மிக முக்கியமானது இறைவன் ஒருவனே எல்லா சக்திகளையும் கொண்ட ஒரே தலைவன் என்ற உறுதியான எண்ணம் நம்  சிந்தனையில் கெட்டிப்பட்டு இருக்க வேண்டும்.    அடுத்தது நாம் நம்  சொந்த  நன்மைக்காக பிறருக்கு பாதிப்பில்லாத எந்த கோரிக்கை வைத்தாலும் இறைவன் கருணையால் அது நிறைவேறும் என்ற உறுதியான எண்ணம் நமக்கிருக்க வேண்டும்.  அடுத்தது அப்படி வேண்டிப் பெற்ற எந்த வரத்தையும் கிடைத்தற்கரிய விஷயம் அவன்  அருளால் நமக்குக் கிடைத்திருக்கிறது என்ற கிடைத்த வரத்தின் அருமை நம் மனசில் பதிந்திருக்க வேண்டும்.    பெற்ற வரத்தை மீறாமலிக்கிருக்க வேண்டும்.  இதெல்லாம் நாம் நம் நன்மைக்காகக் கொள்ளும்  உறுதிப்பாடுகள்.

அந்நாட்களில்  நீதி மன்றங்களில்  கூண்டேறி சாட்சியம் அளிக்கும் முன்  கையில் பகவத்கீதை நூலைக் கொடுத்து  தான் சொல்வதெல்லாம்  உண்மை என்று சாட்சியிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வார்கள்.  அந்நாளைய  சில திரைப்படங்களிலும் இப்படியான  காட்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பெற்ற நூலாக இந்து மக்களுக்கு பகவத்கீதை இருந்தது.   இன்றும் பதவிப் பிரமாணங்கள் ஏற்கும் பொழுது கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்கும் சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருக்கின்றன.

இந்த தியானத்திலும்  பெறும் வரங்களுக்கான செல்வாக்கு மனத்தில் பதிய வேண்டும்,  அவற்றை மீறாதிருக்கும் படியான கட்டுப்பாட்டு உணர்வு நம்மில் இருக்க வேண்டும் என்பதற்காக  இதையெல்லாம் சொல்ல நேர்ந்தது.

நம்மை பீடிக்கும் சில நோய்களுக்கு நமது பழக்க வழக்கங்களே காரணமாக இருக்கின்றன. அப்படியான பழக்க வழக்கத்திலிருந்து  விலகி மீள வேண்டும் என்பதற்கு இந்த தியானம் மிகச் சிறந்த பயிற்சி.   தானே வரும் சிக்கல்களை தவிர நமக்கு நாமே  வர வழைத்துக் கொள்ளும்  சிக்கல்கள் எளிமையான வாழ்க்கையை இறுகச் செய்கின்றன.   இப்படியான சிக்கல்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இந்த தியானம் நிச்சயம் உதவும்.

இந்த தியானத்தைக் கைக்கொள்வதற்கு இறை பக்தி அவசியம்.  இறை உருவை மனத்தில் இருத்தி வேண்டி 'இந்த மாதிரியான தீய குணத்திலிருந்து நான் மீள வேண்டும்' என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.  வேண்டுதல் மனசார, கள்ளம் கபடில்லாமல் இருக்கும் பொழுது வேண்டாத சில குணங்கள், அவற்றால் ஏற்படும் சிக்கல்களின் விலகலை நாமே உணர ஆரம்பிப்போம்.
உடல் நலனைப் பாதிக்கும்  குணங்கள்  மறுபடியும் நம்மை பீடிக்காமல் இருப்பது நம் உறுதியின் பாற்பட்டது.   அந்த உறுதிக்குத் தான் இறை வேண்டல் தேவையாக இருக்கிறது.   வேண்டுவோர் வேண்டல்  சாத்தியமாக ஆழ்ந்த இறைபக்தி தேவையாக இருக்கிறது.  அந்த பக்தி தான் வேண்டலை மனசில் வினைபுரிந்து சாத்தியமாக்குகிறது.  இப்படியான  ஒன்றுக்கு  ஒன்றான தொடர்பு பூர்த்தியாகும் பொழுது  நம் வேண்டலுக்கான பலன்  கிடைக்கும் என்பது  உறுதி.

'இப்படிச் செய்; அப்படிச் செய்' என்று யோசனை சொல்வதற்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள்.  யோசனைகள் சொல்வதோடு முடிந்து விடக் கூடாது.  அதன்படி நடப்பது முக்கியம்.  மகாத்மா காந்தியடிகள் தன்னளவில் எந்த அகச்சோதனைகளையும் பரிசீலித்துப்  பார்த்து  விட்டுத் தான் அதை மற்றவர்களுக்கு பரிந்துரைத்தவர் என்பதனை நாம் அறிவோம்.  எந்த சோதனையிலும் ஆட்பட்டு அனுபவித்து மீண்டு பலன்  பெற்று அதை அனுபவிப்பதே அனுபவ பூர்வமான சந்தோஷத்தை அளிக்கும்.

இது ஒரு Process.   தியானத்திற்கு  உட்கார ஆரம்பித்ததிலிருந்து  பலன் கிடைக்கும் வரையான பல கட்ட உள்ளுணர்வுகள் முட்டி மோதி வேண்டிய பலன் கிடைப்பதற்கான படிப்படியான செயலாக்க உந்துதல்கள் நம்மில் நடைபெறும்.  அதைப் பற்றி விவரிப்பதற்கு முன் சென்ற பகுதியில்  எல்லோருக்கும் பொதுவான ஒரு வேண்டுதல் கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  பலருக்கு  இந்தக் கவிதை பற்றித் தெரிந்திருந்திருக்கும்.  இந்த தியானத்திற்கு சுலபமாக மனசில் பதிகிற இந்த மாதிரி கவிதைகள் அவசியம் என்பதினால்  அதை இங்குக் குறிப்பிடுகிறேன்.  இந்தக் கவிதையை யாத்தவர் நெமிலி வெங்கட் கிரி என்ற பக்தர்.  உள்ளத்து உணர்வு பீரிடலாய் அன்னை பாலா திரிபுர சுந்தரியிடம் வேண்டிக் கொள்கிற அற்புத பிரவாகமாக ஒரு கவிதை தொகுப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்..  இறைவிக்கு 
தீபாராதனை செய்யும் பொழுது சொல்ல வேண்டிய அருட் கவிதையாக இந்தக் கவிதை அவர் உள்ளத்தில் மலர்ந்திருக்கிறது.  அந்தக் கவிதை  நாம் தியானம் செய்யும் பொழுது மனத்தில் விளக்கேற்றி வைத்து அன்னையின் அருள் வேண்ட துணையாயிருக்கும் என்பதினால் அதை இகு குறிப்பிடுகிறேன்.  கவிஞருக்கு நன்றி.

வழிபடுவதற்கு பலவித  ரூபங்களில் அம்பிகை நமக்கு  அருள்  பாலிக்கிறாள்.  ஒன்பது வயது குழந்தையாக,  பாலாவாக அம்பிகை வழிபாடு வழி வழி வந்த பழக்கம்.   சித்தர்கள் அம்பாளை  'வாலை' என்றே அழைப்பர்.  அகத்தியர், போகர், திருமூலர், கொங்கணார், கருவூரார்  என பல சித்தர்களும் வணங்கிய அன்னை பாலாவை வணங்கினால் உள்ளத்தில் நெடுநாட்களாக உறைந்து போயிருக்கிற வேண்டாத  சிந்தனைகள் பொசுங்கிப் போகும்.   வாழ்வில் வளம்,  குடும்பச் சிறப்பு, கல்வி கேள்விகளில் ஞானம்,  திருமண பாக்யம் போன்ற  வாழ்க்கைக்கான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை பாலா என்ற நம்பிக்கை பலருக்கு  உண்டு.   வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஊரான நெமிலியில் சத்திரம் தெருவில் அமைந்துள்ளது நெமிலி பாலா பீடம்.

இதோ அந்த அருட்  கவிதை:

அருள்மழை  பொழியும்
அன்னை பாலா
திரிபுர சுந்தரி சரணம்  -  உன்
அருமையை உணர்ந்து
பணிந்திடும் பக்தர்
கனவினில் நீயும் வரணும்
அன்னை பாலா சரணம்  -- நின்
அன்பினை எனக்குத் தரணும்            (அன்னை)

ஓரு முக விளக்கை
ஒற்றுமையுடனே
ஏற்றியே வைத்தோம் பாலா  -- உன்
ஒளி சிந்தும் முகத்தில்
ஒரு  சிறு புன்னகை
நீயும் காட்டிடு  பாலா!                       (அன்னை)

இருமுக விளக்கை
இங்குள்ள அனைவரும்
ஏற்றியே வைத்தோம் பாலா  -- எம்
இன்னல்கள் தீர
இன்பங்கள் சேர
அன்புடன் காத்திடு  பாலா!                (அன்னை)

மும்முக விளக்கை
முழு மனத்துடனே
ஏற்றியே வைத்தோம்  பாலா  -- எம்
முதலும்  முடிவும்
நீயே அன்றி
வேறோர் உளரோ பாலா                     (அன்னை)

நான்முக விளக்கை
நாதம் முழங்கிட
ஏற்றியே வைத்தோம்  பாலா  --  எம்                        
நாவினில்  என்றும்
உந்தன் பெயரே
நடமிட வேண்டும்  பாலா!  --  எம்
நாவினில் என்றும்
உந்தன் பெயரே               
நடமிட வேண்டும்  பாலா                  (அன்னை)

ஐம்முக விளக்கை
ஐம்புலனடக்கி
ஏற்றியே  வைத்தோம்  பாலா  --   வீண்
ஐயம் போக்கிடு
விரயத்தை நீக்கிடு
விந்தைகள்  புரிந்திடு  பாலா!            (அன்னை)

இப்புவி ஒளிர
இருபத்தியேழு
விளக்கினை ஏற்றினோம்  பாலா!  --  நீ
இருப்பது சேயாய்
காப்பது  தாயாய்
கவலைகள்  இல்லையே  பாலா      (அன்னை)

ஓரு முறை  இரு முறை
என மொத்தம் ஐம்முறை
துர்கா  தீபங்கள்  பாலா    - எம்
துயரங்கள் போக
துன்பங்கள்  போக
துணையென்றும் நீயே  பாலா!         (அன்னை)

பூரண விளக்கை
பரிபூரணமாய்
நாங்கள் அளித்தோம்   பாலா!   - உன்
பூஜைகள் காண
ஒருவித சிலிர்ப்பு
உள்ளத்தில் தோன்றுதே  பாலா        (அன்னை)

பூஜையின்  நிறைவாய்
பூவையின் நினைவாய்
தீபாராதனை  பாலா  --  இப்
பூவுலகெல்லாம்
அமைதி மலர்ந்திட
அருள் புரிவாயே  பாலா!       
அன்னை பாலா சரணம்  -- நின்
அன்பினை எனக்குத் தரணும்..             


-- நன்றி கவிஞர் நெமிலி வெங்கட்கிரிதர்

Wednesday, December 25, 2019

மனம் உயிர் உடல்


25.   அன்பே சிவம்

திகாலையும்   இரவு தூங்கப் போவதற்கு முந்தைய காலமும் இந்த தியானத்திற்கு உகந்த நேரங்கள். 

அதிகாலை என்றால்  காலைக் கடன்கள் முடித்து பல் விளக்கி முகம் துடைத்து  சுத்தமாக இருக்க வேண்டும்.  குளியலை முடித்து விடுவது என்பது அவரவர் விருப்பம் என்றாலும் அதுவே உத்தமம்.  இறுக்கிப் பிடித்த மாதிரி இல்லாமல் தளர்த்தியான ஆடைகள் அணிவது அவசியம்.   பூஜைக்கு  உட்காருகிற மாதிரியான கெடுபிடிகள் எல்லாம் தேவையில்லை.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனம் இலேசாக இருந்தால் போதும்.   சொல்லப் போனால்  மனம் இலேசாக இருக்கும்  மற்றும் உற்சாகமாக இருக்கும் நேரங்களில் எல்லாம் இந்த தியானத்தை கைக்கொள்ளலாம்.   சந்தனக்  கீற்றோ,  வீபூதியையோ அல்லது அவரவர் வழக்கப்படி எதுவோ அதை நெற்றியில்  தரித்துக் கொள்ளலாம்.  அகவுடல் பயணத்திற்கு வசதியாக இயல்பாக அதிகம் அழுத்தம் கொடுக்காமல் இமைகளை மூடிக் கொள்ளலாம். 
உங்களுக்கு மிகவும் பிடித்த இறை உருவை  மனதில் ஆவாஹனம் (எழுந்தருளச்) செய்து  அதில் லயிப்பதற்கு மனதை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீக்கமற நிறைந்திருக்கும் வெட்ட வெளியே இறைவன்.   வெட்ட வெளிக்கு உருவம்  கொடுக்க முடியாமையாலும் உள் மனத்தில் மனப்படமாகத் தான் பதிய முடியும் என்பதினால் நீங்கள் மிகவும் நேசிக்கும் இறைவன் உருவை அல்லது குலதெய்வ உருவை உங்கள் மனசில் ஆசனமிட்டு அமரச் செய்யுங்கள்.

இயல்பான நிலையில் மனம்  இருக்கட்டும். 

ஆரம்பத்தில் தரையில் அமர்ந்து தியானத்தைப் பழகிக் கொண்டால்,  போகப் போக  எதில் உட்கார்ந்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.  தரையில் என்றால் வெறும் தரையில் இல்லாமல் ஒரு தடுக்கு அல்லது ரொம்ப உயரமில்லாத பலகையில் அமரலாம்.  எல்லாவிதங்களிலும்  உடல் ஈஸியாக தளர்த்தியாக  அமர்ந்திருப்பதே சிரமம் கொடுக்காதவாறு செளகரியமாக இருப்பதாக இருக்கட்டும்.  தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது கால் வலி, கை வலி என்று உடல் அசெளகரியங்கள்.  செய்யும் தியானத்திற்கு குறுக்கே வராமல் இருக்க வேண்டும் என்பதற்கு தான் இத்தனை ஏற்பாடுகளும்.  அதிகாலை என்றால் நீர் அருந்தி விடுங்கள்.  இரவு காலம் என்றால் இரவு
உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் நேரமாக இருக்கட்டும்.

மூச்சு அதன் இயல்பான போக்கிலேயே இருக்கட்டும்.   இந்தத்  தியானம் மூச்சுப் பயிற்சி இல்லை என்பது தெளிவாக மனசில் படியட்டும்.  நீங்கள் தியானத்தில் ஆழ்வது என்பது வழக்கமாக  ஆழ்ந்த யோசனையில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அப்படி இருப்பது தான்.   விசேஷமான எந்த அசெளகரியங்களையும் கைக்கொள்ளாமல் வெகு சுலபமாக மனசையும் உடலையும் வைத்துக் கொள்ளுங்கள்.  இது முக்கியம்.                                         

இறை நம்பிக்கை உள்ளவர்கள்  இறைவன் என்ற தலைவன் பற்றி என்னவெல்லாம் உங்கள் மனசில் பதிந்திருக்கிறது என்பதனை மனசில் ஓட விடுங்கள்.  புரியவில்லையா?..  புரிகிற மாதிரி சொல்கிறேன்.  இறைவன் என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு  ஆற்றப் போகிற மாதிரி அல்லது இறைவன் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போகிற மாதிரி நினைத்துக் கொண்டால் என்னவெல்லாம் கருத்துக்கள் உங்கள் மனசில் அலை  மோதுமோ அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

எண்வகை குணங்கள் கொண்டவனாக இறைவனை பக்தியாளர்கள் குறிப்பிடுவார்கள்.   எளிமையாக நாம் எப்படியெல்லாம் இறைவனை உருவகப்படுத்தியிருக்கிறோம் என்று  நினைத்துப் பார்க்கலாம்.

போன வாரம் என் வீட்டிற்கு  தன் மகனுடன் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அந்தச் சிறுவன் எட்டாம் வகுப்பில் பயில்வதாக என்னிடம் சொன்னான்.  அந்தப் பையனிடம் இறைவனைப் பற்றி உனக்குத்  தெரிந்தவையெல்லாம் சொல்லு என்று நான் கேட்டதற்கு  அந்தச் சிறுவன் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்.

இறைவன் எல்லா உயிர்களையும் படைத்தவன்.

அதனால் அவனே எல்லா உயிர்களையும் காப்பவன்.

உயிர்களிடத்து கருணை கொண்டவன்.

இறைவன் தீமை செய்பவர்களைத் தண்டிப்பவன்.

அன்பே சிவம் என்பார்கள்,  அதனால் இறைவன்  சகல உயிர்களிடத்தும் அன்பானவன்.

அவனே நம் துன்பங்களைத் தீர்ப்பவன்.

நல்லது செய்பவர்களுக்கு நல்லது செய்பவன்.  அவர்களை ரட்சிப்பவன்.

--- என்று தனக்குத் தெரிந்தவைகளை அந்தச் சிறுவன் சொன்னதும் நான்
அசந்து  போனேன்.

எட்டாவது படிக்கும் சிறுவன்.  பதினாங்கு வயது  இருக்குமா?..  அந்த சிறு குழந்தையின் மனசில் இறைவன் எவ்வளவு அழகாகப் படிந்திருக்கிறான் என்று நெக்குருகிப் போனேன்.

எந்தக் கோயிலிலாவது சந்திக்கும் எவரையாவது  பார்த்து, "இறைவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று ஒரு கேள்வியைப் போட்டால் இந்தளவுக்குச் சொல்வாரா என்பது சந்தேகமே.. சொல்லப்போனால் இப்படியான ஒரு  கேள்வி  ஆன்மிக குருமார்கள் கூட எதிர்கொள்ளாத  கேள்வியாகத் தான்  இருக்கும்.     'இறைவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்கும் நம்மை 'இவன்  'ஒரு மாதிரி'யான ஆசாமியாக இருப்பானோ என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்தச் சிறுவன் சொல்லாதது ஏதாவது பாக்கியிருந்து அது உங்களுக்குத் தெரிந்திருந்தால்  அவற்றையும் இறைவனைப் பற்றிய  உங்கள் எண்ணமாக   சேர்த்துக் கொள்ளுங்கள்.  இந்தப் பதிவைப்   படிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் மற்றவர்களுக்கு  உதவியாக இறைவனைப் பற்றிய உங்கள்  எண்ணங்களையும் சொல்லலாம்.

இப்பொழுது  இறைவனிடம் பொதிந்துள்ளதாக   நீங்கள் நினைக்கும் அவனது இயல்புகள்  உங்களிடமும்  உருப்பெறுவதற்கு  அவன் அருளை நீங்கள் வேண்ட  வேண்டும்.  உதாரணமாக இறைவன் சகல உயிர்களிடத்தும் அன்பானவன் என்றால் 'இறைவா!  சகல உயிர்களையும் நேசிக்கும் குணத்தை எனக்கு அருள்வாயாக' என்ற அர்த்தத்தில் அவரவர்கள் எப்படி இறைஞ்சிக் கேட்பீர்களோ அந்த முறையில் வேண்டிக் கொள்ள வேண்டும்.   வேண்டிக் கொள்ளுதல் மனசுக்குள்ளேயே அமிழ்ந்து போய் விடாமல் நீங்கள் இறைவனிடம் இறைஞ்சுவது உங்களுக்கும் செவி வழி கேட்கிற அளவுக்கு தெளிவாக ஜபிக்கிற மாதிரி இருக்க வேண்டும்.   இப்படி சன்னக் குரலில் சொல்வதால் இரண்டு  நன்மைகள்.  1.   நீங்களே இறைவனிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்.    2. என்ன கோரிக்கை வைக்கிறீர்களோ அதை நீங்களே செவிமடுத்து தெளிவாக உங்கள் கோரிக்கையை அழுத்தமாகப் புரிந்து கொள்கிறீர்கள்.

நீங்களே இறை சக்தியிடம் கேட்டுப் பெறும் வரம் இது.   அந்த வரம் இறைவன்
அருளால் உங்களுக்குக் கிடைக்கும் பொழுது  அதை மீறிச் செயல்படுவதற்கு உங்கள் மனம் லேசில் ஒப்பாது.   இதான் இதில் இருக்கும் ஒப்பற்ற  நன்மை. 

1. பொறுமையாக பிறர் சொல்வதைக் கேட்க முடியாமை.

2. எவர் எது  சொன்னாலும் அது தனக்குத்  தப்பாகப் படுவது.

3.  தன் கருத்துக்கு மாற்றுக் கருத்து யார் சொன்னாலும் அதைப்  பரிசீலனை பண்ணவே தயங்குவது.

4. தன்னைப் பற்றி கற்பனையாக பிரமாதமாக நினைத்துக் கொள்வது.

5.  சின்னச் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வயப்படுவது.

6.  உலகமே தனக்கு  எதிராக இருப்பதாக நினைப்பது.

7.  சகிப்புத்தன்மையே இல்லாமல் இருப்பது.


-- இப்படியெல்லாம் ஏகப்பட்ட குறைபாடுகளைக் கொண்டவர்கள் தான் நாம்.
அவையெல்லாம் தன்னிடமிருந்து விலகிப் போக வேண்டுமென்று  நெஞ்சார வேண்டி செவிமடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில்  எல்லோருக்கும் பொருந்தக் கூடிய  ஒரு வேண்டுதல் கவிதையைத்  தருகிறேன்.   அது பயிற்சிக்கு சுலபமாக இருக்கும்.

இறைவன் அருளால் எல்லோருக்கும் நன்மைகள் பயக்கட்டும்.

அன்பே சிவம்.

(வளரும்)


Saturday, December 21, 2019

மனம் உயிர் உடல்

24.    அருள் பாதை

யோகம் என்றால் சாதனை.   இறைவனுடான மன  நெருக்கம் எல்லாம் பக்தி யோகத்தில் அடக்கம்.

மகாபாரதப் போரில்  ஒரு நெருக்கடியான கட்டத்தில் அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர்  உபதேசித்ததாகச் சொல்லப்படும் 700 சுலோகங்கள் கொண்ட புனிதத் தொகுப்பு  ஸ்ரீமத் பகவத் கீதை.

வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்குத் தேவையான உபதேசங்கள்  கர்ம யோகம்,  பக்தி யோகம்,  ராஜ யோகம், ஞான யோகம் என்று நான்காகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. 

ஒரு செயலைச் செய்வது தான் கர்மம்.  நமது எந்த
செயல்பாட்டையும் எந்த நோக்கத்திற்காக செய்கிறோமோ அதன் அடிப்படையில்  தான் அந்தச் செயலுக்கான பலன் நமக்குக் கிடைக்குமாம்.    இறைவனைத் துதிப்பதிலும் கூட அதற்கான நோக்கமும்,  அந்த செயல்பாட்டிற்குரிய நேர்த்தியும் உள்ளடங்கி இருக்கிறது.

இறைவனைத் துதித்தலிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். தனக்கான   இகவுலக சுகங்களை வேண்டி இறைவனைத் துதிப்பது காம்ய பக்தியாம்.  காம்யம் என்றால் பலன் கருதி என்று பொருள் கொள்ளலாம்.  காம்ய பக்தி எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும்.

இதற்கு எதிர் நிஷ்காம்ய பக்தி.   எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைவனிடத்து பக்தி செலுத்துதல்.  கிட்டத்தட்ட கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காமலிருப்பது.

இஷ்ட தெய்வத்தின் பெயர், உருவம் எல்லாவற்றையும் மனத்தில் நிறுத்தி தியானிப்பதற்கு   சகுண  உபாசனை என்று பெயர்.

இதற்கு எதிர் நிர்குண உபாசனை.   உருவமற்ற இறைவனை மனத்தில் துதித்து தியானிப்பது இந்த உபாசனையின் சிறப்பு.

வேதாந்த ஞானத்தால் பிரம்மத்தை சிக்கெனப் பற்றுவதான பாவனையில் சந்தோஷிப்பது  ஞான யோக பக்தி. 

இவ்வளவு தான்.                                     

எந்த பக்தி  நிலையில் ஆரம்பித்தாலும் சரி,  அது ஞான யோகத்தில் முடிவது தான் இந்த தியானத்தின் இலட்சியம்.  ஒவ்வொரு படி நிலையிலும் அடுத்த படி நிலைக்கு செலுத்துகிற உணர்வை  இந்த தியானத்தை மேற்கொள்வோர் உணர்வார்கள்.

வாசித்துத் தெரிந்து  கொள்வதாலோ  பிறர் சொல்லித் தெரிவதாலோ ஏற்படுவதில்லை இறை பக்தி என்பது.   தனக்குத் தானே உணர்வது அது.  அத்தகையதான உணர்தல் உங்களுக்கு சித்தித்து விட்டதெனில் இறைவனுடனான நெருக்கத்தை விட்டு விலகவே முடியாது.  இந்த தியானத்தை கைக்கொள்வதின் நோக்கமும் அதுவே.

 பற்றற்றான்  பற்றினைப் பற்றுவதற்கு கொஞ்சம்  கொஞ்சமாக அவனுக்கே சொந்தமான  அருங்குணங்களை நம்மில் பதித்துக் கொள்ள முயற்சிப்பதே இந்த தியானத்தின் இலக்கு.   அந்த இலக்கை அடைவது தான் பிரம்ம பிரயத்தானமான முயற்சி.

வாழ்க்கை என்கிற வழுக்கலான பாதையில் எடுத்த முயற்சியில் தளர்ச்சி அடைவதற்கு  சோதனைகளும் வழியெங்கும் காத்திருக்கும் தான்.  இருந்தாலும் குறிக்கோளில் கொஞ்சமே முன்னேறினாலும்  அடையும் மனச்சாந்தி அற்புத அனுபவமாக இருக்கும்.   கூடவே வசதிகளும் வாய்ப்புகளும் சுகபோகங்களும் கூடி வரும் சறுக்குப் பாதையில் சறுக்காமல் மீண்டு வருவதே  பெறும் பாடாக இருக்கும்.  இறுதி வெற்றி வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்து யாண்டும்   இடும்பை இல்லாத நிலையை அடைவது தான்.  அந்த சிந்தனையே துணையாயிருந்து வழி நடத்தும் பெரும் பேறைப் பெற்றவர்கள் பாக்யசாலிகள்.. 

காம்ய பக்தி,  நிஷ்காம்ய பக்தியாய் நம்மில் மாற்றம் கொள்வது  தான் முதல் படி.    அநிதித்யத்திலிருந்து நித்தியத்திற்கான வழிப்பாதையின் ஆரம்பப்படி அது.

அந்த அருட்பாதையில் தொடர்ந்து பயணிக்கத் தொடங்குவோம். 


(வளரும்)







Saturday, December 7, 2019

மனம் உயிர் உடல்

23.   நினைமின் மனனே;   நினைமின் மனனே...


னசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது.  இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பார்கள்.  காரணம் மன உணர்வுகளிலிருந்து விலகியிருந்து அவர்களுக்கு எந்தக் காரியத்தையும் செய்யத் தெரியாது என்பதினால் தான்.  நல்லவர்களின் மனம் நல்ல செய்கைகளின் பொழுது இயல்பாகவே மலர்ந்து இருக்கும்.  எந்த தீய செயல்களின் நினைப்பும் அதை சுருங்கச் செய்து விடும்.  அனிச்சை மலர் போல அவ்வளவு மென்மையானது அவர்கள் மனம்.

whole heartedly  -- என்ற ஆங்கில வார்த்தையை அறிவீர்கள்.  இதயம் தான் மனம் என்று பரவலாக அறியப்பட்ட காலத்தில் உருவான சொல் இது.  முழு மனதுடன் என்று தமிழில் அர்த்தம் கொள்வது கூட அவ்வளவு சரியில்லை.. அதையும் தாண்டிய  பூரணத்துவம் கொண்டது அந்த வார்த்தை. 

மனம் சம்பந்தப்படாத, அல்லது மன உணர்வுகளை விலக்கி வைத்து  விட்டுச் செய்யும் எந்தக் காரியமும் அரைக்கிணறு தாண்டிய சமாச்சாரமாய்த் தான் முடியும்.  மனசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் எதையும் நிறைவாகவேச் செய்ய முடியும்.  செய்யும் செயலை மனம் அங்கீகரித்து விட்டால் அந்த செயலுக்கு புது சக்தி கிடைக்கும்.    மனசின் ஒத்துழைப்போடு செய்யும் எந்த செயலுக்கும் இரண்டு பெருமைகள் உண்டு.  1. செயலின் வெற்றி.  2. நாமடையும்  திருப்தி.   செய்த காரியத்தில் தோல்வியே ஆயினும் மனசின் ஒத்துழைப்பு இருக்கும் பொழுது சோர்ந்து போய் விடாமல் அடுத்த கட்ட நகர்விற்கு அதுவாகவே  இழுத்துச் செல்லும்.

சென்ற பகுதி  கேள்விகளை லேசாக நினைவு கொள்ளுங்கள்.   நேரடி பதில்கள் இல்லையென்றாலும்  பட்டும் படாமலும் உங்களுக்குப்  புரியும்.  நேரடி பதில்கள் இருக்க வேண்டாமே என்பதற்குத்  தான் இந்த ஏற்பாடு.

அன்றாடம் நம்மைச் சூழும் செயல்பாடுகளில் தம்மை இணைத்துக் கொள்ளும்  சக்தி கிடைப்பதற்காகத் தான் உணவைச் சாப்பிடுகிறோம்.  வேறு ஏதாவது நினைப்புடன் அல்லது  கவலையுடன் சாப்பிட்டால் உடம்பில் ஒட்டாது என்று பெரியோர் சொல்வர்.   சாப்பிடும் உணவு சக்தியாக உருக்கொள்ளாது என்பதற்காகத் தான் ஒட்டாது என்ற அந்த வார்த்தை வந்தது.  சொல்லப்போனால் அறிவியல் மிகவும் வளர்ச்சி கொண்டுள்ள இன்றைய நாட்களில் சாப்பிடும் பொருளில் என்ன சக்தி நிறைந்திருக்கிறது என்பதை மனதில் கொண்டு அந்த சக்தியை உடம்பில் கொள்வதாக நினைப்பில் கொண்டு சாப்பிடச் சொல்கிறார்கள். உதாரணமாக கேரட் (Carrot) என்று வைத்துக் கொள்ளுங்கள்.   கேரட்டை உண்பதற்கேற்ப  பக்குவப்படுத்தி உண்ணும் பொழுது  அந்த கேரட்டில் நிரம்பியுள்ள சக்தியை உட்கொள்வதாக மனதில் கற்பிதம் கொள்ள வேண்டும் என்று உணவியலில் துறைபோகியவர்கள் சொல்கிறார்கள்.   அப்பொழுது   தான் அந்த உணவில் அடங்கியிருக்கிற சக்தி துல்லியமாக  முழு அளவும் கிரகிக்கப் படுகிறதாம்.  சாப்பிடும் உணவில் இருக்கும்  உள் கூறுகள் பற்றி  அறிவு கொள்ளுதல் நம் உடல் வாகுக்கேற்ப கொள்வதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளவும் துணையாக இருந்து உடல் நலம் பேணுகிறது.  நாமே மனமாகவும்,  மனமே நாமாகவும் பின்னிப் பிணையும் பொழுது  ஏற்படும் திருப்தி உடல் ஆரோக்கியத்திற்கு முழுமையான  பலனைத் தருகிறது.

இறை வழிபாட்டில் கூட நடப்பது இது தான்.   பிராகார சுற்றில் வலம் வரும் பொழுது  எதையாவது  உச்சாடனம் செய்தவாறு அசுர வேகத்தில் உங்களைக் கடக்கும் நபர்களை பார்த்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும்.   நின்று  நிதானித்து என்ற பேச்சுக்கே இடமில்லை.   ஏதோ தலைபோகிற காரியம் அடுத்து இருப்பது போல அவர்கள் செயல்பாட்டில் அவ்வளவு வேகம் இருக்கும்.  பிராகார சுற்று, கர்ப்பகிரத்தில் ஒரு கும்பிடு,  போகும் நேரத்தில் வீபூதி கிடைத்தால் சரி;  இல்லையென்றாலும் பரவாயில்லை.  வெளிவந்து நவகிரகங்கள் சந்நிதியில்  மூன்றே நிமிடத்தில் மூன்று சுற்று-- இதோ ரோடுக்கு வந்தாச்சு..  காத்திருக்கும் அடுத்த வேலைக்காக  கோயிலினுள் கொண்ட அதே வேகம்  தெரு சந்தடி நெரிசலிலும்..  சாவி கொடுத்த பொம்மை மாதிரியான தற்கால ரோபோக்கள் போலவானவர்கள் ..   இவர்கள் விஷயத்தில் உடல் இயக்கத்தின் பார்வையாளராக மனம்  பட்டுக்கொள்ளாமல் சகல விஷயங்களிலும் தனித்து விடப் பட்டிருக்கும்.

கோயில் என்பது  சந்நிதியில் இறைவனோடு நம் மனசை ஒன்றரக் கலக்கும்
இடம்.  இறைவன் முழுமை என்றால் அதன் துக்குனூண்டு கூறு  நாம்.  அந்தக் கூறு  தன் முழுமையை தரிசிக்கும் அனுபவம்
கொள்ளும் பொழுது தன் மனதை ஊடகமாகக் கொண்டு முழுமையோடு ஒன்றரக்  கலக்கத் தவிக்கிறது.   அந்த தவித்தலில் இறைவனால்   ஆட்கொள்ளுகிற மாதிரியான அனுபவத்தைப் பெறும் பொழுது  சொல்லொண்ணா சுகானுபவத்தைப் பெறுகிறது. தாய் மடி கிடைத்த குழந்தை போல.  அணுவினுக்கு  அணுவான இருப்பு,  தன் முழுமையுடன் கொள்ளும் ஈர்ப்பு இது.  சின்ன அகலில் அடங்கிய வெளிச்சம்,  பேரொளியில் ஐக்கியமாகிற அனுபவம் இது.  சொல்லி விளக்க முடியாத அனுபவம் ஒன்றினாலேயே அடையக் கூடிய பேறு இது.  கோயிலுக்குச் சென்றால்  அல்லது  செல்வோருக்கெல்லாம் இந்த ஐக்கிய அனுபவம் கிடைத்து விடும் என்றும் இல்லை.  அது கிடைப்பதற்காகத் தான்  கோயிலுக்குப் போவதே.

அந்தர்யாமி என்ற நிலையில் இறைவனே நம் மனசாட்சியாகி நல்லதை உணர்த்தி நமக்கு வழிகாட்டுகிறான் என்று  இறை அனுபவ நிலைகளைப் பற்றிச் சொல்வோர் சொல்வதுண்டு.  வினைப்பயனும், அமையும் சூழ்நிலைகளும் ஜீவனை பற்றி அலைக்கழிக்கும் பொழுது  மனசாட்சியாய் இருக்கும் இறைவனின் வழிகாட்டல் கிடைக்கும் என்கிறார்கள்.

'நினைமின் மனனே நினைமின் மனனே;  சிவபெருமானை செம்பொன் அம்பலவனை; நினைமின் மனனே  நினைமின் மனனே -- என்பார்
பட்டினத்தார்..  இறைவனின் ஈர்ப்பு மகிழ்ச்சி நம்மைப் பற்றி கொண்டு மனசில் படரும் பேறு கிடைத்து விட்டால்  கோயில் என்றில்லை, எங்கிருந்தாலும் 
இறைவனை நம் மனசுக்குள் கொண்டு வந்து விடலாம்.    'மட்டுப்படாத
மயக்கமெலாந் தீரஎன்னை வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே' என்பார் தாயுமானவர் சுவாமிகள்.   பரந்த வெட்டவெளியே தெய்வமாக இருக்கும் பொழுது  மனசில் இறைவனை வைத்து வழிபடுவதற்கு ஏதுவாகத் தான்  சிவனென்றும் விஷ்ணுவென்றும் பல்வேறு நாமங்களில் இறைக்கு ஒரு உரு கொடுக்க முனைப்பு உருவாயிற்று. 

இன்னொன்று.  மனப்படமாகத் தான் உள்மனதில் பதிய வேண்டிய நிலைக்கு இறைவனுக்கு உருவம் கொடுத்தது ஏதுவாகப் போகிறது.

இறை அனுபவம் வாய்த்தவர்கள் பாக்கியசாலிகள்.   நல்லனவற்றிற்கு வழி நடத்த  இறைவன் என்ற ஒரு சக்தி இவர்களுக்கு துணையாக இருக்கிறது.
இறை மறுப்பாளர்களோ  தம்முள் நல்லன   விளைவதற்காக  வேறு வழிகள் பார்க்க   வேண்டியது தான்.   நமக்கு வேண்டியது  நமக்கு நல்லவை விளைய வேண்டும். அவ்வளவு  தான். 

அதற்கு என்ன வழி என்று அடுத்துப் பார்ப்போம்.

(வளரும்)


Related Posts with Thumbnails