மின் நூல்

Monday, November 24, 2008

ஆத்மாவைத் தேடி....20

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


20. காற்றின் தந்தை நீ!


பை அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்த அமைதியில் இலயம் மாறா சுருதி போல நிவேதிதாவின் பேச்சு, அந்த ஹால் பூராவும், ஹாலைத் தாண்டியும் ஒலித்துக்கொண்டிருந்தது.

"உயிர்ப் படைப்புகளில், மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். இது பூர்வஜன்ம பலனல்லாது வேறில்லை.

'ந ஹி மனுஷ்யாத் ஸ்ரேஷ்ட தரம் ஹீ கிஞ்சித்"

--என்று மகாபாரத்தில் வரும். இறைவனிடமிருந்து கிடைத்ததை பாதுகாப்புடன் பேணி வைத்திருந்து இறைவனுக்கு அர்ப்பணிப்பது தான் மனிதனின் தலையாய கடமையாகும். மனிதன் இறைவனில் ஐக்கியமாவதற்கு இப்பிறவி கிடைதற்கரிய பேறு.

"சிந்தனை செய்யும் சக்தி, நல்லது-கெட்டதை பகுத்துணரும் அறிவு மனிதனுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட வரம். இதுவே இறைவனின் இறுதிப் படைப்பு. அடுத்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு இறைவனிடம் கலப்பதுதான்.

"மனிதனை அவன் கொள்ளும் எண்ணங்களே சிற்பி கை உளியாய் செதுக்கிச் செதுக்கி வடிவமைக்கின்றன. எண்ணம் சும்மா இல்லாது செயல்படத் தூண்டுகிறது. எண்ணத்தின் தன்மைக்கேற்ப செயல் வடிவு பெற்று, அது நன்மையோ, தீமையோ செய்தவனை அதன் விளைவைத் துய்க்கச் செய்கிறது. நல்ல எண்ணங்கள் அனுபவப்படும் பொழுது நல்ல பயன்களைத் தந்து நேர்மறைச் சிந்தனைகளை சிந்தையில் கிளர்த்தும். அது உடலின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். எதிர்மறைச்சிந்தனைகள், இதற்கு எதிர்மறை.


"நேற்று உளவியல் பேராசிரியர் தேவதேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். எண்ணத்தின் ஆளுகை பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் நிறையச் சொன்னார். கேட்கக் கேட்க அதிசயமாய் இருந்தது. அவர் இந்த அவையில் உரையாற்றுகையில் அதையெல்லாம் பற்றி நிறைய சொல்லவிருப்பதாகச் சொன்னார். கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னபடி நாம் பாக்கியம் செய்தவர்கள். இங்கு வந்து நிறைய நிறைய புதிய விஷயங்களை நாம் தெரிந்து கொண்டோம்.

"பிரபஞ்சத்தைப் படைத்து இறைவன், உயிரினத்தின் உறைவிடப் பிரச்னையைத் தீர்த்தார். இயற்கை இருக்க, உணவு பிரச்னையும் தீர்ந்தது. உண்ணும் உணவே ஊட்டமாகிறது. ரொம்ப சரி.

"அடுத்து உடல் இயக்கத்திற்கு சக்தியாக இருக்கும் பிராணன். ஒவ்வொரு அவயவத்தையும் இயக்கும், நமது செயல்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் பிராணன். இது எது?.. இந்த பிராணனைப் பற்றி விளக்கச் சொல்லும் பிரச்ன உபநிஷத்தில், பிராணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வார்த்தை வருகிறது. அதுதான் பிடித்து இழுக்க கிடைத்த நூலிழை.

'பிதா த்வம் மாதரிச்வன'
--இந்த சொற்றொடருக்கு அர்த்தம்: 'காற்றின் தந்தை நீ!'

"பிராணனை வாயு ரூபத்தில் கொள்ளும் பொழுது, பிராணவாயு என்று தமிழில் நிறைய அர்த்தத்துடன் தான் சொல்லியிருக்கிறார்கள்!.

யா தே தனூர்வாசி ப்ரதிஷ்ட்டிதா யா ச்ரோத்ரே யா ச சக்ஷக்ஷி யா ச மனஸி ஸந்ததா சிவாம் தாம் குரு மோத்க்ரமீ:

"இந்த பிரச்ன உபநிஷத ஸ்லோகம் சொல்கிறது: "ஓ, பிராணனே! ஒரு பொருளைப் பார்க்கின்ற பொழுதும், ஒன்றைக் கேட்கின்ற பொழுதிலும், ஒன்றைப் பேசுகின்றபொழுதும், உனது சக்தியின் அளவு செயல்படுவதற்கு ஏதுவாக எந்த அளவு இருந்து செயல்படுகிறதோ, மனத்திலும் எந்த அளவு நீக்கமற நிறைந்திருக்கிறதோ, அதே மாதிரி இருக்கச் செய்! போய்விடாதே!"

"'ஒவ்வொரு அவயவமும் இயங்குவதற்குத் தேவையான சக்தியைக் கொடு. இதில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாதே!' என்று இறைஞ்சலாக வந்திருக்கிறது. பிராண சக்தியின், அதன் வீச்சின் அளவுநிலை வேறுபட்டால், உடல் நிலை பாதிக்கபடும் என்பது அறிந்து இந்த வேண்டுகோள்.

"இந்தப் பிராணன், உயிர்க்காற்று தான் பிரதானமாக இருந்து கொண்டு தானே-- அபானன், சமானன், வியானன், உதானன் என்று வேறு வேறு கலவைகளில் வேறு வேறு செயல்களில் ஈடுபடுகிறதாம். "

சகோதரி நிவேதிதா மேலும் தொடர, அவையினர் உன்னிப்பாகக் கேட்கத் தலைப்பட்டனர்.


(தேடல் தொடரும்)

Thursday, November 20, 2008

ஆத்மாவைத் தேடி....19

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

19. உத்தமன் கோயில் கொண்டான்

காலை உணவை முடித்துக் கொண்டு அத்தனை பிரதிநிதிகளும் அவைக்கு வரத்தொடங்கி விட்டனர்.

அந்த நீண்ட ஹாலின் வெளியே மனோகர்ஜியும், பெரியவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்களும் நின்று கொண்டு அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். ஆற்றும் உரைகளின் குறிப்பெடுப்பவர்கள், ஒலி-ஒளிப்பதிவாளர்களென்று எல்லோரும் உற்சாகத்தோடு தம் பணியைத் தொடங்கக் காத்திருந்தனர்.

சரியாக பத்து மணிக்கு சகோதரி நிவேதிதா மேடையேறி விட்டார். மைக்கைப் பேசுவதற்கு வாகாக சரிப்படுத்திக்கொண்டு அவர் துவங்குகையில் அரங்கே நிறைந்திருந்தது.

"சகோதர, சகோதரிகளே!" என்று அவர் தொடங்கும் பொழுது, அந்த அழைப்பு அர்த்தமுள்ள உச்சாடனமாக அந்த ஹால் முழுதும் பரவி அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி காணப்பட்டது. அருட்பிரகாசர் விவேகானந்தர், சிகாகோ மாநாட்டில் ஆற்றிய உரையில் ஆரம்ப வரியல்லவா இது என்கிற புளகாங்கிதம் அனைவரிடத்தும் ஏற்பட்டது. அதுவும் பேசத்துவங்குபவர் பெயர் நிவேதிதா என்றிருந்ததும் அவர் அழைத்த அந்த அழைப்பு, பொருள் பொதிந்ததாக இருந்தது.

"'உயிர்களின் ஜனனத்திலிருந்து'.. என்கிற தலைப்பில், இந்திய தத்துவ இயலின் மணிமகுடமாம் உபநிஷத்துகளிலிருந்து கருத்துக்களைத் தொகுத்துச் சொல்லும்படி ஒருங்கிணைப்பாளர் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி என்னைக் கேட்டுக் கொண்டபொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உயிரியலைப் பாடமாக எடுத்து கல்லூரியில் படிக்கும் நேரத்தே எனக்கு உபநிஷத்துக்களின் மேல் ஒரு தனிப்பட்ட பிரேமை உண்டு.." நிவேதிதாவின் பேச்சு, பெண்மைக்கே உரிய குழைவுடன்ஆற்றோட்டமாக இருந்தது.

ஒரு நிமிஷம் நிறுத்தித் தொடர்ந்தார் அவர்: "இறைவன், தவத்தின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்த நினைத்துத் தானே தவமிருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்று நேற்று கூறினார்கள். இந்தப் படைப்புக்கு, பஞ்சபூதங்கள் என்று நாம் அழைக்கின்ற வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய இந்த ஐந்து சக்திகளும் அடிப்படையாக அமைந்தன என்பதையும் தெரிந்து கொண்டோம். உயிர்களைப் படைத்து அவற்றிற்கு
இந்த ஆரம்பப் படைப்புச் செல்வங்களை வாரி வழங்கிடச் செய்ய வேண்டுமென்பதே இறைவனின் ஆசை... மனிதர்கள் தமது குடும்ப வாழ்க்கையை நடத்த முதலில் குடியிருக்க ஒரு வீட்டைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு அப்புறம் சொந்த பந்தத்தோடு குடிபுகுகிறோம், இல்லையா? அதே மாதிரி, தான் பிற்பாடு படைக்கப்போகும் உயிரினங்களின் நலன் கருதி, அவற்றின் மகிழ்ச்சி கருதி, முன்னாலேயே பிரபஞ்சத்தைப் படைத்து விடுகிறான், இறைவன். உயிரினங்களையும் படைத்து, முன்னால் ஆக்கப்பட்ட பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் இவருக்கே--இவருக்கே--என்று பட்டயம் எழுதிக் கொடுத்து விட்டான்! ஆகவே படைத்தவனின் அல்டிமேட் எய்ம், உயிரினங்களின் படைப்பே! இவற்றிக்காகத் தான்-- உயிர் சுமந்து உலவும் அத்தனையின் தேவைக்கும், சந்தோஷத்திற்காகவும் தான்-- முன்னால் படைத்த அத்தனையும்.. எவ்வளவு முன்னேற்பாடு பாருங்கள்! இந்தப் பேரருளை கருணை என்றல்லாமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது நீங்களே கூறுங்கள்!..


இத்தனையும் அல்லாமல், ஜடப்பொருளாக படைக்கப்பட்ட உடம்பை இயக்க உயிராகவும் இறைவனே உள்ளே புகுந்தான்.. இறைவனே நமது இயக்கமாக இருக்க வேறென்ன வேண்டும், சொல்மனமே' என்றுதான் மகிழ்ச்சி பொங்கக் கூவத் தோன்றுகிறது..


"ஸ ஏதமேவ ஸீமானம் விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத
ஸைஷா வித்ருதிர்நாம த்வாஸ்ததேதன்னாந்தனம்
தஸ்ய த்ரய ஆவஸ்தா: த்ரய: ஸ்வப்னா:
அயமாவஸதோ sயமாவஸதோ sயமாவஸத இதி"

--என்று ஐதரேய உபநிஷதத்தில் ஒரு ஸ்லோகம்.. ரிக் வேதத்தைச் சேர்ந்த ஆரண்யகம் இது. இதை அருளியவர் மஹீதாச ஐதரேயர் என்கிற முனிவராகையால், அவர் பெயரிலேயே இந்த உபநிஷதும் அழைக்கப்படுகிறது..
'பிரம்ம ரந்திரம்' என்பது தலையின் உச்சிப்பிரதேசத்திலுள்ள ஒரு சிறு துவாரம். இந்த இடத்தைப் பிளந்து கொண்டு இறைவன் உடலினுள் நுழைகிறான்.. ஜடமாகிய உடலில், உணர்வலைகள் ஸ்தாபிதமாகித் தூண்டலுருவதை, இறைவன் நுழைவதாகக் கொள்ள வேண்டும்.

பதினோரு வாசல் கொண்ட உடலின் ஒரு வாசல் பிரம்ம ரந்திரம். உடலினில் அமைந்திருக்கும் நூற்றியொரு நாடிகளில் ஒன்று இந்த வழியாகச் செல்கிறது. இந்த வாசல் வழியே உயிர் பிரிந்தால், மீண்டும் பிறப்பில்லை என்கிறது கட உபநிஷதம். சிறந்த யோகியருக்கு இந்த வாசல் வழிதான் உயிர் பிரியும் என்பர். வந்த வழியே போகும் வழியாக இருந்தால், பிறப்பிலா நிலை. இதையெல்லாம் பற்றி 'மரணத்திற்குப் பின்' பகுதியில் உரையாற்ற இருப்பவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.


ஆக, இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலே, இந்த உடல் என்கிற உணர்வு பெற்றால், இந்த உடலின் மேல் அளபரிய அன்பு பிறக்கும். நற்குணமென்னும் குன்றின் மீதேறி இதைப் பேணிக்காக்க ஆசை பிறக்கும்.


அவன் அருளினால் தீமை ஒழித்து, நல்ல செயல்களைச் செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த, உய்யக் கிடைத்த ஒப்பற்ற ஓடம் இந்த உடல்.
வெறும் சட்டையல்ல; விலைமதிப்பற்ற செல்வம்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக்குள்ளே கோயில் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே."

-- என்று திருமூலர், தனது திருமந்திரத்தில் அற்புதமாக தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

யாக்கை நிலையானது இல்லை தான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வாராது வந்த மாமணி போல, இந்த உடல் கிடைத்தது, 'இனி பிறவா நிலை வேண்டும்' என்கிற வேண்டலுக்குக் கிடைத்த ஓர் அரிய சாதனம் இல்லையா?..

வெறும் வேண்டல், வேஸ்ட்.. மனிதப்பிறவி கிடைத்தற்கரிய பேறு. ஏதாவது நல்லதைச் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், இப்பிறவியில் தானே அது முடியும்?.. கிடைத்திருக்கிற வாழ்க்கை, புண்ணியம் சேர்த்துக் கொள்ள ஒரு சான்ஸ். கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவாரும் உண்டோ?.. நழுவ விடின், என்னாகும் என்று தெரிந்த பின்னும்?..

பேலன்ஸ் ஷீட் போட்டுப் பார்த்தால், பளிச்சென்று தெரியும். வாழ்க்கைப் பேரேட்டில், கிரெடிட் எவ்வளவு, அதில் டெபிட் எவ்வளவு, இன்னும் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பது புரியும்.

பரோபகாரம், உதவி, ஒத்தாசை, வறியோர்க்கு ஈதல், முதியோர்க்கு ஆதரவு என்று கிரெடிட் பண்ண எத்தனையோ காரியம் இருக்கு... வாழ்க்கை என்னும் இந்த பரமபத விளையாட்டில் அவைகளே நாம் போடும் தாயங்கள்.

ஆமாம், நன்றாகத் தெரிகிறது.. பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது."

உணர்வு கொப்பளிக்க உரையாற்றிய சகோதரி நிவேதிதா, கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் பேசத் தயாரானார்.


(தேடல் தொடரும்)




Monday, November 17, 2008

ஆத்மாவைத் தேடி....18

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


18. மனசில் எழுந்தக் குரல்

தாழ்ந்திருந்த, சிவப்புக் கம்பளம் விரித்திருந்த படிகளேறி மேடையேறினார் கிருஷ்ணமூர்த்தி.

ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியைக் கண்டதும் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். இந்த சில நாட்களில் தன் பண்பாலும், நெருங்கி பழகும் சுபாவத்தாலும், எல்லோருடைய தேவைகளையும் உடனுக்குடன் கவனித்து அவரவர்களுக்குத் தேவையானதை செய்த நேசத்தாலும் அனைவரின அன்புக்கும், பிரியத்திற்கும் உரியவராகியிருந்தார் அந்தப் பெரியவர்.

மைக் பிடித்து, "சகோதர, சகோதரிகளே!" என்று கணீரென்று ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. இத்தனை வயதில் கொஞ்சம் கூட அலுப்புக் காட்டாமல் உற்சாகமாக இருந்தார் அவர். "உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம். நாமெல்லோரும் பாக்கியம் செய்தவர்கள்.. பேராசிரியர் சாம்பசிவம் சொன்னாரே, 'மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்கலக்கும் இடம் இதுதான்' என்று... அவர் அதைச் சொல்லும் போது, நான் பரவசப்பட்டுப் போனேன். கோயில் கோயிலாகவும், கிராமம் கிராமமாகவும் சென்று புராணசொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டிருந்தேன். தீர்க்கமாகச் சொல்லப் போனால், அதுதான் என் தொழில் என்றாலும், அப்படிப் புராணச் சொற்பொழிவு ஆற்றுவது எனது மனதுக்கு மிகவும் பிடித்துப் போனதால், எனது செயலில் நேர்த்தி கூடி, போகப்போக 'இறைவனின் புகழ்பாடும் இப்படிப்பட்ட பணியைச் செய்யத்தான் ஜென்மம் எடுத்தோம்' என்று நினைக்கத் தலைப்பட்டேன். அந்த நினைப்பு மேலோங்க மேலோங்க, என்னுள் ஒரு தீனக்குரல் எழுந்து சதாசர்வ காலமும் என்னை உருக்கத்தொடங்கியது. 'அந்தப் பிறைசூடிய பெம்மான் உறையும் அந்த வெண்பனிமலைக்குப் போவோம், வா!' என்பதே பல்வேறு விதங்களில் எனக்கு நானே உணர்ந்த அந்தக் குரலின் சராம்ச செய்தி.

"ஆரம்பத்தில் ஒரு நினைப்பாக இருந்த இந்த எண்ணம், நாளாக நாளாக வலுப்பெற்று ஒருநாள், "வடக்கே போகிறேன்.." என்று வீட்டில் சொல்லி விட்டு ரயிலேறி விட்டேன். இந்த தில்லி பட்டணம் வரை தான் என் பிரயாணம் சித்தித்தது. இந்த மாநகரின் மண்ணில் என் காலடி பட்டதும், அவன் சித்தம் வேறாகிப் போனது போலும்! பெரியவர், புரவலர், மனோகர்ஜியை நான் சந்தித்தது, அவர் என்னைத் தேடிக் காத்திருந்தது, இந்த சதஸ்.. அதற்கான பணிகள்---எல்லாமே தெய்வ சங்கல்பங்கள்!


"எதற்கு சொல்ல வந்தேனென்றால், ஆன்மீகம் என்பது பரந்து விரிந்து விழுது பரப்பிச் செழித்த ஆலமரம் என்று இங்கு வந்து இந்த சபையில் உட்கார்ந்ததும் தான் எனக்குப்புரிந்தது. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி யோகி குமாரஸ்வாமி அவர்களும், பேராசிரியர் சாம்பசிவம் அவர்களும் அழகழகாகச் சொன்னார்கள். அவர்களுக்கு இந்த அவையினர் சார்பாக மிக்க நன்றி.


"வெறும் புராணக்கதைகளை அறிந்ததோடு நின்றுவிடாமல், யதார்த உலகில் கால் பதிக்கிற உண்மைகளாய், நான் இதுவரை அறிந்திராத பல செய்திகளை அறிந்துகொண்ட்டேன். இனி நான் 'புராண கதா காலேட் சேபங்களை'ச் சொல்லும் பொழுது, நான் அறிந்த இந்தப் புதிய தகவல்களையும் சேர்த்து என் கதை சொல்லும் பணி அமையும் என்று இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன். இது இறைவன் இட்ட கட்டளை.


"பயத்தின் அடிப்படையில் எதுவுமே இருக்கக்கூடாது; கடவுள் பக்தி கூட.
பயம் விட்டதென்றால், பக்தி போய்விடும். பிரமிப்பு கூடத்தான்; அது குழந்தைத்தனம். அதை விடக் கூட ஆன இன்னொரு பிரமிப்பில் இது போய்விடும்... எதையும் மனசாரப் புரிந்து கொண்டோமென்றால், 'இது அவசியம் இந்த வாழ்க்கைக்கு'ன்னு தோன்றினதென்றால், அது நிலையா இருக்கும். சுகமா அழுந்தப் படுத்திண்டு தூங்கறதை விட்டுட்டு, இது என்ன விடிஞ்சாப் போதும், மூக்கைப் பிடிச்சிண்டு உட்கார்ற வேலைன்னு, பிராணாயாமத்தைப் பழகிக்கறச்சே ஆரம்பத்லே எரிச்சலா வரும்.. 'இது ஒரு மூச்சுப்பயிற்சி; உயிருக்கு கொடுக்கற டானிக்; உடல் ஆரோக்யமா அங்கேயும் இங்கேயும் அலையறத்துக்குத் தேவை; செஞ்சா மூஞ்சிலே தேஜஸ் பொங்கும்'ன்னு புரிஞ்சிண்டா அலுப்புத் தட்டாது. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாச் செய்யச் சொல்லும்.

"கடவுளுடோட அன்பும் அருளும் நம்ம நெஞ்சிலே பதியறது தான் முக்கியம்.
அவனிடமிருந்து பெற்ற அந்த அன்பை எல்லாரிடமும் திருப்பிச் செலுத்தறது தான் முக்கியம். கொடுக்கறது எதுவும் ரெண்டு மடங்கா திருப்பி நமக்கே வருங்கறதுங்கறதும் இன்னொரு உண்மை. இப்படி கொடுத்தும் வாங்கியும் அடையற இன்பத்தை அனுபவிச்சவங்களுக்கு நன்னா தெரியும். நாளா வட்டத்தில் அதுதான் வாழ்க்கைங்கறதும் புரியும்.

"எங்கோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிடுத்து. 'உயிர்களின் ஜனனத்திலிருந்து' என்கிற இரண்டாவது தொடரில், உபநிஷதுகள் சொல்லும் செய்திகளை சொல்லி சகோதரி நிவேதிதா அவர்கள் நாளை உரை ஆற்ற இருக்கிறார்கள்.
உங்களைப் போல நானும் அவர் சொல்லவிருக்கும் செய்திகளைக் கேட்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். எல்லோருக்கும் மிக்க நன்றி.."என்று தனது உரையை பெரியவர் கிருஷ்ணமூர்த்தி முடித்துக் கொண்டார்.

மனோகர்ஜி எல்லோருக்கும் நன்றி கூற அனைவரின் முகத்திலும்
அசாத்திய மகிழ்ச்சி தெரிந்தது.

(தேடல் தொடரும்)









Friday, November 14, 2008

ஆத்மாவைத் தேடி....17

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


17. சிருஷ்டியின் ரகசியம்


பேராசிரியர் சாம்பசிவம் தொடர்ந்து பேச அவையோர் உன்னிப்பாகக் கேட்டனர்.

"அணுக்களின் கூட்டமைப்பு தான் அத்தனை பொருள்களும். கலந்து கட்டி பல அணுக்கள் சேருகையில் அப்படிச் சேரும் தன்மைக்கேற்ப அந்தப் பொருளுக்கு வடிவமைப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு அணுவும் இன்னொரு அணுவுடன் சேர்ந்து கூட்ட அடுக்குகளாகும் அணு சேர்க்கை அற்புதமாக நிகழ்கிறது.

துக்குணூண்டுக்கும் துக்குணூண்டான, நம் கற்பனைக்கும் குறைவாகக் குறுகித்தரித்த ஓர் அணுவின் உட்கரு போன்ற சமாச்சாரம் அணுவின் மையப்பகுதி. எலெக்ட்ரான்,புரோட்டான், நியூட்ரான் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது அணு. புரோட்டான்களும், நியூட்ரான்களும் கலந்தது, அணு மையப்பகுதி. இந்த மையப்பகுதியை எலக்ட்ரான்கள், அதிவேகமாக வட்டமடிக்கின்றன. இப்படி புரோட்டான், நியூட்ரான் சேர்ந்த மையப்பகுதியை எலக்ட்ரான் சுற்றுவதுதான் அந்த அணுவின் இயக்கம்.


ஒவ்வொரு அணுத்துகளுக்குள்ளும் இந்த 'சுற்றல்' இயக்கம் சர்வசதாகாலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உயிருள்ளவைகளில் மட்டுமல்ல, உயிரற்ற ஜடப்பொருள்கள் என்று நாம் கருதும் மரபீரோ, நாற்காலி, இரும்புத்துண்டு என்று அத்தனை பொருள்களிலும் இப்படிப்பட்ட இயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் இந்த எலக்ட்ரான் சுற்று அதிவேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.


உயிர் என்பதே ஒரு கூட்டணுதான். தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் (Replication) தன்மை படைத்த கூட்டணு. இந்த அடிப்படையிலான உயிரை 'செல்' என்கிறார்கள். கல்லுக்குள் இருக்கும் தேரையும் வளர்வதை விட்டு விடுங்கள்.. ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்.


எந்த ஆற்றலும் எப்பொழுதுமே அழிக்க முடியாத ஒன்று. ஆற்றலின் ஒரே மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொறு நிலைக்கு மாறுவதே. மாற்றம் ஏற்படுவதே உயிர்ப்புக்கு அடையாளம். தன்னுள் தன்னையே அடக்கிக் கொண்டதான இந்த இயக்க வடிவமே பிரபஞ்சமாகத் திகழ்கிறது. நிலையான நிலையிலிருந்து, இயக்க ஆற்றலாக (Kinetic Energy) மாறி சகலத்தையும் இயக்கிக் கொண்டிருப்பது இந்தப் பேராற்றலே.

யோகி குமாரஸ்வாமி அவர்கள் இறைவன் பிரபஞ்சமாகத் தன்னையே சிருஷ்டித்துக் கொண்டான் என்றாரே, இதுதான் அந்த சிருஷ்டியோ என்று நான் வியக்கிறேன்.


இரும்பு போன்ற திடப்பொருளுக்கு வெப்பமேற்றி பழுக்கக் காய்ச்சினால், திடநிலையில் இரும்பு என்று பெயர் கொண்டிருந்த அது, திரவநிலைக்கு மாறும். மேலும் மேலும் சூடேற்றினால், காற்றாகி காற்றில் கலந்து விடும். நாம் என்ன செய்கிறோம்?.. பழுக்கக் காய்ச்சுவதின் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை விரைவாக்குகிறோம். சுழற்சி வேகம் மிகும்போது அதன் ஆற்றலால், அணுக்கூட்டம் சிதைவுற்று ஆவியாகிக் காற்றில் கரைந்து விடுகிறது.

இதே வேலைதான் அண்டப்பெருவெளியிலும் நடக்கிறது. ஆனால் மறுதலையாக; உல்ட்டாவாக.

சுத்தப்பெருவெளியில் உள்ள ஆற்றல், முதலில் அணுக்களாக, அடுத்து அணுத்தொகுதிகளாக என்னும் மூலமாக உருவாகி, அவற்றின் கூட்டுச் சேர்க்கைதான் காற்று, நெருப்பு, திரவம், திடப்பொருள் என மாறுபாடு அடைகின்றன.

இத்தனைக்கும் காரணமான இந்தப் பேராற்றலுக்கு அவரவர் விருப்பத்திற் கேற்ப பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் சொல்லும் உண்மை இதுவே. அதுமட்டுமல்ல,மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் கலந்து கைகோர்க்கும் இடமும் இதுதான்.

"எல்லாவற்றிலும் என்னையே காண்கிறேன்" என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதாகக் கீதை சொல்கிறது.

'தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்" என்று இரண்யகசிபுவிடம் பிரகலாதன் சொன்னதும் இதுவே. "


--- தனது உரை முடிந்து விட்டதற்கு அடையாளமாக காகிதக் கற்றைகளை
மடித்து, அவையினரை நோக்கிக் கைகூப்பி வணங்கினார் பேராசிரியர் சாம்பசிவம்.


எல்லோருடைய மனத்திலும் சந்தோஷம் கலந்த திருப்தி நிலவியது. அவையிலிருந்த அத்தனை பிரதிநிதிகளும் எழுந்து நின்று அவருக்குத் தங்கள்
நன்றியையும் மரியாதையையும் தெரிவித்தனர்.


ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வேகமாக மேடையை நோக்கி விரைந்தார்.


(தேடல் தொடரும்)

Tuesday, November 11, 2008

ஆத்மாவைத் தேடி....16

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


16. சூரியன் வருவது யாராலே?..


சிறிதளவு நீரை அருந்திவிட்டுப் பேராசிரியர் சாம்பசிவம், தனது உரையைத் தொடர்ந்தார்:

"இறைவனே பிரபஞ்சமாகத் தன்னை சிருஷ்டித்துக் கொண்டார் என்று உபநிஷதங்களிலிருந்து மேற்கோள் காட்டி யோகி குமாரஸ்வாமி சொன்னார்.


"இதுலே ஓர் உண்மைபார்த்தீங்களா?.. படைக்கப்பட்ட எந்தப் பொருளும் இயங்காமல் இல்லை. அதுபோலத்தான் இந்த அகண்டப்பெருவெளியில் இருக்கும் அத்தனையும் இயங்கிக் கொண்டேஇருக்கின்றன. வெறுமனே 'இயங்குகின்றன' என்று சொன்னால் மட்டும் போதாது. எப்படி இயங்குகின்றன, எதனால் இயங்குகின்றன என்பதும் அடிப்படை கேள்விகள்.


"இதைச் சொல்லும்பொழுது எங்கத் தமிழ்நாட்டு கவிஞர் ஒருவரோட பாட்டு என் நினைவுக்கு வர்றது. அந்தக் கவிஞர் பிறந்த ஊர்ப்பெயரை முன்னால் போட்டு, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளைன்னு நாங்க சொல்வோம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்காக நிறைய பாட்டுகள் எழுதியிருக்கார். அவர் எழுதின பாட்டு ஒண்ணுலே, இந்தக் கேள்வியைக் கேட்டு, சூரியனும், சந்திரனும் வானில் இப்படிச் சுற்றித் திரிகின்றனவே, ஒருநாள் தவறாம எப்படி இது நடக்கறது.. இதெல்லாம் யாராலே நடக்கறது, இந்த வேலைக்கெல்லாம் அதிகாரியா இருந்து செயல்பட வைக்கறது யாருன்னு ஆச்சரியப்பட்டிருக்கார். இதையெல்லாம் தெரிஞ்சிக்கணும்னு குழந்தைகள் மனசிலே ஆர்வத்தை விதைச்சிருக்கார், அந்த அற்புதமான கவிஞர். இது தான் அவரோட அந்தப் பாடல்:


"சூரியன் வருவது யாராலே?.. சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினி போல் கண்ணில் தெரிவன அவையாவை
பேரிடி மின்னல் எதனாலே, பெருமழை பெய்வதும் எவராலே
யாரிதற்கெல்லாம் அதிகாரி அதை நாம் எண்ணிட வேண்டாமோ?"


--இந்தக் கேள்விகளுகெல்லாம் பதில் தெரிந்தால், அண்டசராசரத்தில் இவையெல்லாம் இயங்குவதின் அருமை புரியும். அது புரிந்தால், அடுத்தபடி இந்த இயக்க ஆற்றலின் மேன்மையும் புரியும். ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்றால், தான் என்ன ஆவோம் என்பதும் தெரியும். தெரிந்தால், கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்.

சூரியனின் வயதை-- ஏறத்தாழ ஐந்தாயிரம் மில்லியன் வருடங்களுக்கு முன்னதானது அது என்று கணித்திருக்கிறார்கள். பத்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே முகிழ்த்த பழைமையான விண்மீன்கள் கூட இந்த அகண்டவெளியில் இப்போ இருக்கறதா கணக்குப்போட்டு சொல்கிறார்கள்.
நதிமூலம், ரிஷிமூலம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த விண்மீன் களுக்கும், கோள்களுக்கும் மூலம் தான் என்ன?.. இவையெல்லாம் எப்படி ஜனித்தன, இப்படிப்பட்ட நிலையை எப்படி எய்தின என்பதெல்லாம் விண்வெளி பேரதிசயங்களின் அடிப்படையான உண்மைகள்.

அண்டவெளியில் பரவியிருக்கும் துகள்கள் (cosmic dust) பல்வேறு திசைகளில் அலைக்கழிக்கப்படுகின்றன என்றும் அந்த அலைக்கழிப்பில் ஏற்படும் உராய்வில் பரந்த வெளியில் பரவிக்கிடக்கும் மின்காந்த சக்தியால் மூலக்கூறுகளில் அணுக்கள் சேகரமாகின்றன என்றும் சிறிய, பெரிய துகள்கள் ஒன்று சேர்ந்து ஒன்றில் ஒன்று கலந்து கட்டிக் கலக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

பெளதீக மொழியில் அணுக்கூட்டுக்கு மாலிக்யூல்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மின்காந்த சக்தியுடன் மாலிக்யூல்ஸ்க்கு இணைப்பு ஏற்பட்டால் அடர்த்தியாகி அதற்கு உருவம் கிடைக்கிறது. இந்த அற்புத செயலுக்கு தனது சார்பு நிலைத் தத்துவத்தில் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டுபிடித்த சமன்பாட்டைப் பொருத்திப் பார்த்தால் பளிச்சென்று விடை கிடைக்கும். ஆக, பெளதீக விதிப்படி அருவத்திற்கு உருவம் கொடுக்கலாம்.

அணுக்களின் கூட்டமைப்பு தான் அத்தனை பொருட்களும். கலந்து கட்டி பல அணுக்கள் சேருகையில் அப்படிச் சேரும் தன்மைக்கேற்ப அந்தப் பொருளுக்கு வடிவமைப்பு கிடைக்கிறது. அவற்றின் உயிர்ப்புடனான இயக்கத்தால், இயல்பாக அந்தந்த பொருள்களில் அழுத்தம் ஏற்படுகிறது. அழுத்தத்தினால், வெப்பம் உண்டாகி, வெப்பம் மின்காந்த சக்தியாக உருவெடுக்கிறது.

அறிஞர்கள் கூடியிருக்கும் இந்த அவையில், உங்களுக்கெல்லாம் மிகவும் பரிச்சியமான விஞ்ஞான உலகின் பாலபாடங்களை நான் சொல்லிக் கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. இதற்குப் பிறகு நான் சொல்லவிருக்கும் சில தகவல்களுக்கான ஆரம்பமாக இவை இருப்பதினால், ஒரு தொடர்ச்சி கருதி இவற்றைச் சொல்ல வேண்டி நேரிட்டிருக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

மேலும் தொடருவதற்கு முன் நிமிர்ந்து அந்த சபைச் சுற்றி ஒரு முறை நோட்டமிட்டு விட்டு, மைக்கை சரிசெய்து கொண்டார் பேராசிரியர் சாம்பசிவம்.

(தேடல் தொடரும்)



Thursday, November 6, 2008

ஆத்மாவைத் தேடி....15

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

15. அண்டவெளியில் அதிசயம்

புவியியல் பேராசிரியர் சாம்பசிவம் தனது உரையை ஆரம்பிக்கும் பொழுது மதியம் மணி இரண்டுக்கு மேலாகிவிட்டது. நிறுத்தி நிதானித்துப் பேசும் அவர் பேச்சை மிக உன்னிப்பாக எல்லோரும் செவிமடுத்தனர்.

காலை யோகி குமாரஸ்வாமியின் உரை பிரபஞ்சத் தோற்றம் குறித்து உபநிஷத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதாய் இருந்ததினால், இப்பொழுது அந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி புவியியல் விஞ்ஞான உண்மைகளாய் இவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கும் ஆவல் எல்லோருக்கும் இருந்தது.

பேராசிரியர் சாம்பசிவம் நிதானமாகத் தன் உரையை ஆரம்பித்தார்.
"நமக்குத் தெரிந்த சூரியனின் குடும்பத்தில் பூமியைச் சேர்த்து ஒன்பது கோள்கள். பல கோள்களுக்குத் துணைக்கோள்கள் உண்டு. கவிஞர் பாடிய வெள்ளை நிலாதான் பூமிக்குத் துணைக்கோள்; இயற்கையான துணைக்கோள். செவ்வாய்க்கு இரண்டு என்றால், வியாழனுக்குப் பதினாறு துணைக்கோள்கள்! இதுவரை கண்டுபிடிக்காத எத்தனையோ துணைக்கோள்கள் சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப்படுகிறார்கள்.

"சூரியன், சந்திரன், மற்றும் வானவெளியிலும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள்-- நமது புலனுக்குத் தெரியும் இவை சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி மட்டுமே அண்டவெளியல்ல. மிகவும் சகிதிவாய்ந்த தொலை நோக்கியால் விண்வெளியைப் பார்த்தால், ஆச்சரியப்பட்டுப் போவோம். பிரகாசமிக்க ஒளிவெள்ள கோலாகலம் தான்! அந்த பால்வெளி வீதியில் ஒளிவெள்ளத்தைப் பீச்சியடிக்கும் பல கோடி விண்மீன்களின் சாகசம் தான் அந்த வெளிச்சத் திருவிழா!

"பால்வெளியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்தவைகளை விட, தெரியாதவை அதிகம். பன்மடங்கு பெருக்கம் கொண்ட கோடிக்கணக்கான பால்வெளிகளின்தொகுப்பே அகண்டவெளி. கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்; கோடிக்கணக்கான விண்மீன்கள்! அந்தக் கோடியில் நமக்குத் தெரிந்த ஒரு விண்மீன்,சூரியன்! அவ்வளவுதான்!

"கற்பனைக்கும் விஞ்சிய அகண்டப் பெருவெளி இந்த அண்டவெளி. இன்னும் அறிய வேண்டிய இயற்கையின் சூட்சுமங்கள், அனந்த கோடி! ஒன்றுக்கு ஒன்றான ஈர்ப்பு விசையால் தான் அண்டத்திலுள்ள அனைத்தும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். இந்த ஈர்ப்பு விசை இற்றுப் போனதால், அண்டவெளியிலிருந்து காணாமல் போன அல்லது வெவ்வேறான திசைகளில் இடம் மாறிப்போனவை எத்தனையோ!

"ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள், விண்மீன்கள்
என்ற அத்தனையின் ஆக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கின்றன். இதைத்
தவிர அண்டவெளியைப் பற்றிய ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்ல
வேண்டும்" என்ற பேராசிரியர் சாம்பசிவம் தொண்டையைச் செருமிக் கொண்டார்.

(தேடல் தொடரும்)

Monday, November 3, 2008

ஆத்மாவைத் தேடி....14

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


14. இயற்கையாய் பரிணமித்த இறைவன்

ரிஷிகள் தாங்களே அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மைகளாக இந்த உபநிஷத்துக்கள் இருந்தாலும், எந்த ரிஷிபெருமானும், எந்த இடத்தும், எனது கருத்து இது என்று சொல்லவில்லை. "எங்களுக்கு இது பற்றி சொல்லியவர்கள், இப்படிச் சொன்னார்கள்" என்று மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறார்கள்.

வேதங்கள் கூட ரிக்,யஜூர்,சாம, அதர்வண என்று நான்காக வியாச பெருமானால் தொகுக்கப்பட்டு, மூன்றாகப் பிரிக்கப்பட்டவைதாம். தேவர்களிடம் பிரார்த்திக்கும் 'சம்ஹிதை', யாக விவரங்களை விவரிக்கும் 'பிராம்மணம்', உபநிஷதங்களாம் உண்மையான உண்மைகளை உள்ளடக்கியிருக்கும் 'ஆரண்யகம்' என்று மூன்று பிரிவுகள். உப நிஷத்துக்களில், பதினாங்கை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில், ஐதரேய, கெளசீதகி இரண்டும் ரிக் வேதத்திலும், ஈச,கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண-இவை ஏழும் யஜூர் வேதத்திலும், கேன, சாந்தோக்கிய ஆகிய இரண்டும் சாம வேதத்திலும், ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய ஆகிய மூன்றும் அதர்வண வேதத்திலும் அமைந்துள்ளன.

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து அதர்வண வேதத்து முண்டக உபநிஷத்தில் நிறைய சொல்லபட்டிருக்கிறது.

இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்தான். சரி. எப்படிப் படைத்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவன் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு முந்தைய நிலை எப்படிஇருந்தது? பிரபஞ்சத்தைப் படைக்கையில் பரம்பொருளின் மனநிலை எவ்வாறு இருந்தது?-- நமது எல்லா சந்தேகங்களுக்கான விளக்கங்களைக் கோர்வையாகச்சொல்லி, அறியாமை இருளை அகற்றுகிறது, முண்டக உபநிஷதம்.

ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இறைவன் கூட தவம் செய்து தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தாராம்! அது ஞானமயமான தவம். எந்த நோக்கமும் அற்ற, இயல்பானதவம். தவத்தின் மேன்மையையும், பெரும் பெருமைகளையும் சொல்ல, அந்தப் பெருமானே தவம் மேற்கொண்டான் போலும்!

தானே தவமியற்றி, அந்த தவத்தின் பயனாகத் தானே வேறொன்றாக வெளிப்பட்டது தான் இந்த தவத்தின் விசேஷம். எந்த பற்றுமின்றி ஞானமயமாக மேற்கொண்ட தவத்தின் பயனாய் விளைந்தது இந்த பிரபஞ்சம்.

சூன்யத்திலிருந்து எதுவும் தோன்றாதாகையால், தோற்றுவிக்க ஒரு சக்தி செயல்பட்டிருக்க வேண்டும். செயல்பட்ட அந்த சக்தியே எல்லாவற்றிலும் நிறைந்திருக்க வேண்டும். தோன்றாநிலையிலிருந்து இறைவன் இயற்கையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கோலம் இது! வெளிப்பட்டாலும் ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொருதொடர்ச்சியான பரிணாம வளர்சியிலும் அந்த சக்தியின் கூறு உள்ளீடாக நிரவி, நீக்கமற நிறைந்திருக்கும் விஞ்ஞான பேருண்மை இது.


லம்--ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி!
ஹம்- ஆகாசாத்மனே புஷ்பை பூஜயாமி!
யம்- வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி!
ரம்- அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி!
வம்- அம்ருதாத்மனே அம்ருதம் மஹா-நைவேத்யம் நிவேதயாமி!
ஸம்-ஸ்ர்வாத்மனே ஸர்வோபசார-பூஜாம் ஸமர்ப்ப்யாமி
--ஸ்ரீ ருத்ரம்

'லம்' என்ற பிருதிவி பீஜத்தால், பிருதிவி வடிவான உமக்கு சந்தனம் சமர்ப்பிக்கிறேன்.
'ஹம்' என்ற ஆகாச பீஜத்தால், ஆகாய வடிவான உம்மை மலர்களால் பூஜிக்கிறேன்.
'யம்' என்ற வாயு பீஜத்தால், வாயுவடிவான உமக்கு தூபம் காட்டுகிறேன்.
'ரம்' என்ற அக்னி பீஜத்தால், அக்னிவடிவமான உமக்கு தீபம் காட்டுகிறேன்.
'வம்' என்ற அம்ருத பீஜத்தால், அம்ருதவடிவான உமக்கு அம்ருத மாஹா நைவேத்தியத்தை தெரிவிக்கிறேன்.
'ஸம்' என்ற ஸர்வாதம் பீஜத்தால், ஸர்வாத்மகரான உம்மை எல்லா உபசாரங்களாலும் பூஜிக்கிறேன்.

--என்று ஸ்ரீருத்ரத்தில் பூஜாமந்திரங்கள் ந்யாஸம் பகுதியில் வருகின்றன.

நீர், நிலம், ஆகாயம், தீ, காற்று-- என்ற ஐந்து பெரும் சக்திகளிலும் இறைசக்தி உறைந்திருப்பதை உணரத்தலைப்பட்ட பின், இயற்கை வழிபாடு துவங்கியது.

இறைவன் இயற்கையாய் இருந்து காப்பது புத்திக்குப் புரிந்ததும், இயற்கையோடு இயைந்த வாழ்வு கொள்வதை பாக்கியமாக எண்ணி மனம்பரவசப்பட்டது. இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை என்னும் ஞானம் பிறந்தது.

இயற்கையின் அற்புத அழகில் மயங்கி மனத்தைப் பறிகொடுத்த கவிஞர்கள் ஏராளம். வேர்ஸ்ட்வொர்த்திலிருந்து பாரதி வரை, அவருக்குப் பின் வந்தோரும் இயற்கையில் இறைவனை உள்ளார்ந்து உணர்ந்து பரவசப் பட்டிருக்கிறார்கள். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று மகிழ்ந்து கூத்தாடியிருக்கிறார்கள்.

பிரபஞ்சத் தோற்றத்திலிருந்து--இறைவனும் சிருஷ்டியைத் தோற்றுவிப்பதாகத் தன்னையே பிரபஞ்ச இயற்கையாய் சிருஷ்டித்துக் கொண்டதிலிருந்து, மனிதம் வரை- அந்த சிருஷ்டியின் நீட்சியை 'மனிதனின் ஜனனத்திலிருந்து' பகுதியைப் பற்றி சொல்ல இருப்பவர்கள் கூறக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு விஷயத்தை மிகுந்த தாழ்மையுடன் இந்த சபையில் விண்ணப்பிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மனிதகுலத்திற்குக் கிடைத்த மகத்தான அளப்பரிய செல்வமான உபநிஷத்துக்களின் வீரியத்தை இங்கொன்றும் அங்கொன்றுமாய் எடுத்துச் சொல்லிய குறிப்புகளாலும், காகிதத்தில் அச்சடித்த வெற்று உரைகளாலும் உணர்ந்து விட முடியாது. அவற்றின் சாரம், தவமிருந்து பெற்ற செல்வம். முனிவர்கள் மட்டும் அல்லர்; ஜனகர், அஜாதசத்ரு போன்ற மாமன்னர்களும் தவவலிமை கொண்டு ஞானத்தைத் தேடிப்பெற்ற செல்வம்.

வேத, உபநிஷத மந்திரங்களின் உண்மையான பொருள் என்பது மிகவும் அர்த்தம் நிரம்பியது. திரும்பத் திரும்ப அவற்றைப் படிப்பதின் மூலமும், அவற்றை அனுதின நடைமுறை வாழ்க்கை நடவடிக்கைகளில் கடைபிடிப்பதின் மூலமும், அவற்றில் தோய்ந்தும், திளைத்தும், ஆனந்தித்தும் அடையும்படியான அனுபவம் இது. அவரவர் சுய அனுபவத்தின் மூலமே இது சாத்தியமாகும். உடல் ஆரோக்கியமும், மனநிம்மதியும், வாழ்க்கையில் சந்துஷ்டியும் இதனால் சித்தியாகும். தூய வெள்ளை மனத்துடன்,தினம் தினம் நம்மை வழிநடத்திச் செல்லும் பரம்பொருளின் மாறாத அன்பில் மனம் செலுத்தி அடையக்கூடிய ஞானச்செல்வம் இது.

ஒன்று மட்டும் நிச்சயம். கிடைத்தற்கரிய பேறு மனிதம். அந்த மனித வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ, அன்பை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்ள, நம் முன்னோர்கள் நமக்களித்த இந்த பழம்பெரு செல்வங்கள், கைவிளக்காக இருந்து ஒளிகாட்டி வழிநடத்திச் செல்லும் என்பது மட்டும் உண்மை.

இத்துடன் எனது குறிப்புகளுக்கான உரையை முடித்துக் கொண்டு, அடுத்த அமர்வில் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே! உங்களுக்கு மிக்க நன்றி. நமஸ்காரம்" என்று யோகி குமாரஸ்வாமி பேசிமுடித்ததும், அத்தனை பிரதிநிதிகளும் எழுந்து நின்று அவருக்குத் தங்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


மதிய உணவிற்குப் பின், பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய தனது உரையைப் படிக்க பூவியல் பேராசிரியர் சாம்பசிவம் தயாராக இருந்தார்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails