மின் நூல்

Monday, August 10, 2015

மனம் உயிர் உடல்

                    நுழைவாயில்

லகம் பூராவும் உள்ள மக்கள் திரள் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை எது என்று ஒரு கணக்கெடுபப்பு எடுத்தார்கள்.  ‘நான்’ என்கிற வார்த்தை தான் எல்லா நாடுகளுக்குமான எல்லா மொழிகளிலும் அதிகம் பயன்படுத்துகிற வார்த்தையென்று பெருத்த ஆய்வுக்குப் பின் தெரிய வந்தது.

அவ்வளவு மவுசு வாய்ந்த இந்த ‘நானை’ அவரவர் மனம் தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்கிற உண்மை அதன் தொடர்பாக பிறகு நடந்த பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்தது. மனம் என்பது உடல் சம்பந்தப்பட்ட ஒன்று என்று மேலோட்டமாக வெகுவாக எண்ணப்படுகிறதே தவிர இது இன்னது தான் என்று இதுவரை துல்லியமாக எவராலும் வரையறுத்துச் சொல்ல முடியாத விசித்திரமாக இருப்பது தான் இந்த மனத்திற்கான  தன்னைத் தானே காட்டிக் கொள்ளாத பெருமையாக இருக்கிறது.

உடல் சம்பந்தப்பட்ட ஒன்று தான் இந்த மனம் என்று கொள்வது பொதுவான கருத்தாயிருப்பினும் உடல் உறுப்புகளில் ஒன்று தான் இந்த மனம் என்பதை  நிருவ முடியாமல் இருப்பது தான் மனம் பற்றிய ஆராய்ச்சிகளில் மிகவும் பின்னடைவு கொடுக்கக்கூடிய சமாசாரமாக இருக்கிறது.  இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போல ஒரு உறுப்பாக இது நாள் வரை இந்த மனம் எந்த ஆய்விலும் அடையாளம் காணப்படவில்லை. அதனால் மனம் என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒரு அம்சமாக உத்தேசமாக இப்போதைக்குக் கொண்டிருக்கிறோம். எப்படி காதல் என்கிற உணர்விற்கு இதயத்தை அடையாளமாக்குகிறோமோ அப்படியான ஒரு அடையாளப்படுத்துதலே இது என்று கொள்ளலாம்.  அதனால் தான் மேனாட்டு மருத்துவ இயலில் மைண்ட் (MIND)  என்கிற சொல்லே மனம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.

மனமாவது பரவாயில்லை; இவ்வளவு கால ஆராய்ச்சிக்குப் பிறகு சிக்மண்ட் பிராய்ட் போன்ற ஒப்பற்ற ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பிற்குப் பிறகு ‘மன இயல்’ என்கிற துறையில் வகைப்படுத்தவாவது முடிந்த அளவுக்கு விவரங்கள் செறிந்ததாகக் கொள்ள முடிகிறது.  ஆனால் இந்த உயிர்?....
.
உயிர் என்பது மனத்தை விட சூட்சுமான ஒன்றாக போக்குக் காட்டுகிறது.  உடலில் அசைவோட்டமே அற்றுப் போய்விட்டதென்றால் இத்தனை நாள் இந்த இயக்கத்திற்குக் காரணமாக இருந்த உயிர் என்ற அந்த ஒன்று உடலை விட்டு நீங்கி விட்டதாகக் கொள்கிறோம். ஆக உடலின் உயிர்ப்புக்குக் காரணமான சூட்சுமான ஒன்றை உயிர் என்று காரணப்பெயர் கொண்டு அழைக்கிறோமே தவிர இன்னது தான் இந்த உயிர் என்று இதுநாள் வரை அறிவுலகம் விவரமாக அறுதியிட்டு அறியாத ஒரு சூட்சுமாகவே உயிர் என்று நம்மால் பெயரிடப்பெற்ற ஒன்று இருக்கிறது.

மனம், உயிர் போலல்லாமல் இந்த இரண்டையும் உள்ளடக்கியதாக நாம் நினைத்துக் கொண்டுள்ள உடல் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விவரமாகத் தெரிந்துள்ளோம்.  ஏனெனில் மற்ற இரண்டும் மாதிரி அல்லாது உடல் அதன் உள் பொதிந்த உறுப்புகள் எல்லாம் நம் மருத்துவ சாத்திர அறிவிற்கு உட்பட்ட நிலையில் கைவசமாகி விட்டது.  கண், மூக்கு, காது, கை, கால் என்று வெளிக்குத் தெரிகிற உடல் அமைப்புகள், நுண்ணிய கருவிகள் மூலம் காணக்கிடைக்கிற உடலின் உள் உறுப்புகள் என்று உடலும் உடல் சார்ந்த உறுப்புகளும் இன்றைய தேதியில் திறந்த புத்தகமாகியிருக்கிறது. உடல் சார்ந்த மருத்துவ சாத்திரம் நாள் தோறும் வெவ்வேறான ஆராய்ச்சிகளின் விழுமிய கண்டுபிடிப்புகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சூட்சுமங்களைத் தம்முள் பொதித்துக் கொண்டுள்ள மனம், உயிர் என்பதெல்லாம் என்னவென்று ஆராய முற்பட்டதும், நமக்கு நன்கு தெரிந்திட்ட உடல் சாத்திரத்துடன் இந்த இரண்டுக்கும் ஆன உறவு பற்றித் தெரிந்து கொள்வதற்குமான ஒரு முயற்சியே இந்தத் தொடராக வடிவம் கொண்டுள்ளது.

மனம், உயிர் பற்றிய தெளிந்த கண்ணோட்டத்திற்காக வழி நடத்திச் செல்லும் ஒரு சிறுமுயற்சியாக தன் பங்களிப்பைச் செலுத்தினால் அதுவே இந்த தொடருக்கான பெருமையும் ஆகும்.
                                                                          
அன்புடன்,
ஜீவி                                                             
                                                        
                          
        அத்தியாயம்: ஒன்று. என் மனம் நீ அறிவாய்! உந்தன்...

‘மனம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த சொல் தான்.  தெரிந்த என்பதைத் தாண்டி எல்லோராலும் உணர்ந்த சொல் அது.  அவரவர் மனம் என்னவென்பது அவரவர் ;உணர்ந்த ஒன்று தான்.  ஒவ்வொருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கொண்டது அவரவர் மனம்.  

சொல்லப் போனால் நாம் எல்லோரும் நமக்காக வாழ்வதில்லை. நம் மனசுக்காக அதன் திருப்திக்காகத் தான் வாழ்கிறோம். அல்லது ஒவ்வொரு விஷயத்திலும் தனது விருப்பம் என்னவோ அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனம் நம்மை வழிநடத்திச் சென்று அதன் திருப்தியைத் தீர்த்துக் கொள்கிறது. இப்படியாக மனசின் திருப்தியை நம் திருப்தியாக நினைக்கிறோம். ஆக, நம் மனசின் திருப்தியை நம் திருப்தியாகக் கொண்டு நாம் செயல்படுவதைத் தான் வாழ்க்கை என்று சொல்கிறோம் என்று தெரிகிறது.

உண்பது, உடுப்பது, மகிழ்வது, மலர்வது, முயங்குவது எல்லாமே மனசுக்காகத் தான் என்று ஆகிறது. மனம் திருப்தி கொண்டால் நமக்கும் திருப்தி.  மனம் சந்தோஷம் கொண்டால் நமக்கும் சந்தோஷம். மனசுக்கு ஒன்று வருத்தம் என்றால் நமக்கும் அது வருத்தம். எதிலும் மனசுக்கு ஆர்வமில்லை என்றால் நமக்கும் அதில் ஆர்வமில்லை. மனசுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் நமக்கும் பிடிக்கவில்லை. எதிலாவது மனசுக்குக் கொண்டாட்டம் என்றால் நமக்கும் அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது.  இப்படியாக அவரவர் மனசின் அந்தரங்க துய்ப்புகளுக்கான ஆர்வமே அவரவர் செயல்பாடுகளாகி அவரவர் வாழ்க்கையும் அதுவே தான் என்றாகிவிடுகிறது.. 

இப்படி நம் செயல்பாடுகள் எல்லாமுமே மனசுக்காக என்று அமைந்து விடுகிற பொழுது தனக்காக என்று எதுவுமில்லை என்று தெரிகிறது.  இல்லை, ‘தான்’ என்பதே பொய்யோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  அல்லது ‘மனம்’ -- ‘’தான்’ என்று தனித்தனியாக இரண்டில்லை, ஒன்றைத் தான் நம் அறியாமையால் இரண்டாகக் கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணம் மேலிடுகிறது.

“நீ யார்?” என்று எவராவது கேட்டால் அதற்கு நம்மிடம் பதிலுண்டு..“நான் யார்?” என்று நமக்கு நாமே கேட்டுக் கொண்டால் அதற்கு தெளிவான ;பதிலில்லை.  வெகுவான யோசனைக்குப் பிறகு ‘என் மனசு தான் நான்’ என்று நாமே உணருகிற மாதிரி நமக்கு நாமே கேட்டுக் கொண்ட கேள்விக்கு நல்ல ஒரு பதில் கிடைத்து விட்ட மாதிரித் தோன்றுகிறது..  தெரிவதற்காகக் கேள்வி கேட்டதும், தெளிவதற்காக விடை கொடுத்ததும் மனசு தானோ என்று நினைக்கையில் அந்த அமானுஷ்யம் பிர்மாண்டதாகவும் அதே நேரத்தில் கைக்கடக்கமான குழந்தையாகவும் குழைகிறது.

‘எனக்கென்று எதுமில்லை;  எல்லாம் என் மனசின் கூத்தாட்டம் தான்’ என்று தெரிந்து விட்ட பிறகு ‘நான்’ என்று இன்னொன்று மனதைத் தவிர்த்துத் தனியாக இருப்பதற்கு சாத்தியமில்லை என்று தெரிகிறது.  அல்லது  மனசைத் தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று ஐயம் திகைக்கிறது.

நான் என்று சொல்வதற்காவது உடல் என்கிற நடமாடுகிற கண்ணுக்கு யதார்த்தமாய் புலப்படுகிற ஒன்று இருக்கிறது.  ஆனால் எல்லாம் தானே ஆகிய மனம் என்பதின் இருப்பை நிரூபணமாய் நிரூபித்துக் காட்டுவதற்கு எதுவுமில்லையே என்கிற உண்மையும் சுடுகிறது.  ஆக மனம் என்று ஒன்று இருப்பதாக நினைப்பதே கற்பிதமோ என்று சுடுதலில் கிளர்ந்த ஞானோதயம் கேள்வியாய் எழுகிறது.

கண்ணுக்குத் தெரிகிற உடலாகிய ‘நானை’ப் புறக்கணித்து விட்டு இது இன்னது என்று நிரூப்பிதற்கு இயலாத கற்பிதமான மனம் என்ற ஒன்றுக்கு இருப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று உள்ளொளி மினுக்குகிறது.

‘கற்பிதமான மனம்’ என்று நினைக்கையிலேயே அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போலிருக்கிறது.  இல்லாத ஒன்றை அடித்தளமாகக் கொண்ட ஆட்டபாட்டங்கள் தான் பொல்லாத இந்த வாழ்க்கையின் ஆயாசமா? இல்லை, புலனுக்குப் புலப்படாத எதுவும் இருப்பு கொண்டிருப்பதில்லை என்று தீர்மானமாகப் புறக்கணித்து விடுவது தான் விஞ்ஞான உண்மையா?..

யோசிப்போம்....


(தொடரும்..)

Friday, February 6, 2015

இரு கவிஞர்கள்; இரு வேறு நினைவுகள்

புதுவையில் வசித்த காலத்தில் மறக்க முடியாமல் மனதில் தடம் பதித்த நினைவு இது.

புதுவை பெருமாள் கோயில் தெருவில் நுழைந்தாலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் நினைவு வரும்.  அந்தத்  தெருவில் 95 இலக்கமுள்ள வீடு அவரது.

தன் சுயத்தை  மதிப்பவர் பிறரது சுயத்தையும் தவறாது மதிப்பார் என்கிற சிறந்த குணத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் புரட்சிக் கவிஞர்.  தன் மனத்திற்கு ஏற்புடையதை  ஏற்றுக் கொண்டாரேயானால் அந்தக் கொள்கையில் பிறழாது ஒழுகுபவர்.  அவர் பூண்டிருந்த புனைப்பெயர் கூட
பலரின் கண்களை உறுத்தியது.  நெருங்கிய வட்டாரத்தின் முகச்சுளிப்பிற்காக தன் மனதுக்கு பிடித்த செயல்களை அவர் மாற்றிக்  கொண்டதில்லை.  அதில் அவருக்கு எஃகு போன்ற உறுதி  இருந்தது.

நடிகர் திலகத்தை நாயகனாகக் கொண்டு தனது 'பாண்டியன்  பரிசை' திரைப்படமாக்க வேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது.  அதன் தொடர்பான நடவடிக்கைகளுக்காக என்றே புதுவை நீங்கி சென்னைக்கு குடிபெயர்ந்தார்.  இது 1961 ஆண்டு வாக்கில் என்று நினைவு.

அவர் சென்னை சென்றதைத் தொடர்ந்து புதுவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த அவரது 'குயில்' கவிதை ஏடும் சென்னையிலிருந்து வெளிவரத் துவங்கியது.  ஒரு பக்கம் பாண்டியன் பரிசுக்கான வேலைகள் நடந்து  கொண்டிருக்கையிலேயே  பாரதியாரின் வாழ்க்கையையும் திரைப்படமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

அப்பொழுது புதுவையில் அரசுப் பணியில் இருந்தேன்.  தொலைபேசி  இலாகா.  அதற்கே உரித்தான ஷிப்ட் ட்யூட்டி.  ஒரு நாளின் பல மணி நேர இடைவெளிகளில் பணி  இருக்கும்.   காலை 6.00 லிருந்து 13.30 வரை.  காலை0800 மணியிலிருந்து 1530 வரை  காலை 1000 மணியிலிருந்து 1730 வரை 1330  மணியிலிருந்து 2100 வரை 1530 மணியிலிருந்து 2300 மணி வரை 1640 மணியிலிருந்து 0000 மணி வரை 0000 மணியிலிருந்து அடுத்த நாள் 0640 வரை என்று நாள் முழுக்க பல ஷிப்டுகளாக அலுவலகப் பணி  நேரம் இருக்கும்.

1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி.   அன்று மதியம் 1330-யிலிருந்து இரவு 2100 மணி வரை பணிக்காலம்.  அந்த   நேரத்தில் தான் பாரதிதாசன் அவர்கள் சென்னை  பொது மருத்துவ மனையில் காலமாகிவிட்டார் என்று கலங்க வைக்கும் அந்தச் செய்தி தெரியவந்தது.  அவர் புகழுடல் புதுவைக்கு  காரில் வருவதாகத் தகவல்.  இரவு ஒன்பது மணிக்கு அலுவலகப் பணி முடிந்ததும் நேரே பெருமாள் கோயில் தெருவிற்கு நானும் என் அருமை நண்பர் அ.க.பெருமாள் அவர்களும் மிகுந்த சோகத்துடன்  விரைந்தோம்.

சின்ன மரத்தூண்கள் பொருத்திய அகல வாசல் கொண்டு உள்ளடங்கிய வீடு. உள்பக்க பெரிய ஹாலில் வீறுகொண்ட கவிஞரின் பூத உடல்  கிடத்தப் பட்டிருந்தது.   கருப்பு-சிவப்பு சின்னகட்டங்கள் போட்ட பட்டுப் போர்வை போர்த்தியிருந்தார்கள். புரட்சிக் கவிஞருக்கே தனித்த ஒரு அடையாளமாக அமைந்திருந்த சின்ன அடர்த்தியான மீசைக்கிடையே புன்முறுவலுடனான
அவர் முகம் மனசைப் பிசைந்தது.   சிம்ஹம் போன்ற துடிப்பு கொண்ட அடலேறு ரோஜாப்பூ மாலைகள் சூட்டப்பெற்று அமைதியாக அப்படி இருந்தது அவரது இயல்புக்கு மாறான ஒரு செயலாய் மனசைக் குடைந்தது.  ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஓரிரு குத்து விளக்குகள்.  தலைமாட்டிற்கு பின்புறச் சுவரின் உயரத்தில்  புரட்சிக் கவிஞர் ஏட்டில் பேனா பிடித்து எழுதுகிற தோற்றத்தில் ஓரளவு பெரிய  புகைப்படம்.

அந்த இரவு நேரத்தில் நீண்ட அந்த ஹாலில் எங்களைச் சேர்த்து எட்டு அல்லது ஒன்பது பேர் இருந்திருப்போம்.   இருவர் கைத்தாங்கலாக அழைத்து வர தடியூன்றிய  ஒரு பெரியவர் உள்பக்கம் வந்ததும்  "வாங்கய்யா, வாங்க...  வாத்தியார் ஐயா வந்திட்டாரான்னு கேப்பீங்களே!  இதோ இருக்காரய்யா.." என்று பெருங்குரல்அழுகை கொண்டு பெண்கள் பக்கமிருந்து துக்கம் பொங்கியது.

மனம்  கனத்துப் போனது.  நானும் நண்பர் பெருமாளும் புரட்சிக் கவிஞரின்  காலடிப் பக்கம் அமர்ந்து கொண்டோம்.  'துன்பம்  நேர்கையில் யாழெடுத்து நீ...'  என்கிற கவிஞரின் பாடல் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நெஞ்சுக்கூட்டை நிரப்புகிற வரிகளாய் எனக்குள் பீறிட்டது. அழக்கூடாது என்று என்ன முயன்றும் முடியவில்லை.  ஏதேதோ நினைவுகளில் மனம் துவண்டு தத்தளித்தது.  கண் நீரை கட்டுப்படுத்த முடியாமல் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மெதுவாக எழுந்திருந்து வெளி வந்தோம்.

காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்புகையில் வெளிச்சுவர் பக்கம் நிமிர்ந்து பார்த்தேன்.   பித்தளைத் தகட்டினால் வேய்ந்த பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.  அந்தப் பெயர்ப் பலகையில்  பாரதிதாசன்  என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று  IN  -- OUT   குமிழ்கள் தென்பட்டன.   புரட்சிக்கவிஞர் அவர்கள் சென்னையில் இருந்ததினால் போலும்,  பித்தளைக் குமிழின் 'IN' மறைக்கப்பட்டு  OUT- தெரிவதாய் இருந்தது. அதைப் பார்த்ததும் மனம் வேதனையில் துவண்டு, சடாரென்று  மனசில் முகிழ்த்த எண்ணமாய், பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ  மறைத்து ' IN'  தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன்.    ஆம்!  சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின்  'அழகின் சிரிப்பு'ம், குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம்  இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'  என்று நினைப்பு நெஞ்சில் அலையாய் புரண்டது.

அடுத்த நாள் புரட்சிக் கவிஞருக்கு அஞ்சலி செலுத்த பெருங்கடல் பொங்கி வந்தால் போல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் புதுவை  திணறியது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் நிறைய வந்திருந்தார்கள்.

பிற்காலத்தில் 'கடைசி வரை யாரோ?' என்று பாடல் எழுதிய கவியரசர் கடைசி வரை நடந்தே வந்தார்.

அந்த வார குமுதம் இதழில் இந்த என் நினைவுகளை  பதிவும் செய்திருந்தேன்.



து நடந்ததும் புதுவையில் தான்.   புதுவை கடற்கரை சாலையில்.

கவியரசர் கண்ணதாசன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.

கண்ணதாசன் அவர் கார் கதவு திறந்து வெளிவந்த பொழுதே ஆட்டோகிராப் புத்தகத்துடன் நெருங்கிய என்னை பார்த்து விட்டார்..  அந்தக் காலத்தில் மனசுக்குப்  பிடித்தமான பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது ஒரு பழக்கமாகவே இருந்தது.  தனக்கு  பிடித்த பொன்மொழி மாதிரி ஏதாவது வரி எழுதிக் கையெழுத்திட்டுத் தருவார்கள்.

சட்டென்று கவிஞருக்கு மிகவும் அருகில் சென்றவுடன் அவரே என் கையிலிருந்த ஆட்டோகிராப்  புத்தகத்தை வாங்கிக் கொண்டார்., முதல் தடவையாக அவ்வளவு நெருக்கத்தில் கவியரசரைப் பார்க்கிறேன். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அவரிடம் தந்தபடியே சொன்னேன்: "எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர்.  ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன்.  ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும்  பிடிக்கும்.  அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்.." மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன்.  என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.

"அப்படியா?" என்று கண்ணதாசன்  புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது.  காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப்  புத்தகத்தை வைத்து  'இலக்கிய கண்ணதாசன்' என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே
கையெழுத்திட்டார்.   முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக்  கொடுத்தது மனசுக்கு  சந்தோஷமாக இருந்தது.  என் தோளில்  லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணுதெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன்  சொன்ன பொழுது திகைப்பாக  இருந்தது.

எனது அந்த 22 வயசில் தத்துவார்த்தமாக அவர் சொன்னது புரியாது பின் புரிபட்ட பொழுது இந்த நிகழ்வை நினைக்கும் பொழுதெல்லாம் அவரது வசீகரமான புன்முறுவல் தான்  நினைவுக்கு வரும்.

இந்த என் அனுபவமும் குமுதத்தில் அந்த வார இதழில் பிரசுரமாயிற்று.

இந்த மாதிரி குமுதப் பிரசுரமான  ஆட்டோகிராப் நினைவுகள் நிறைய. இருந்தாலும் அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் இந்த மாதிரியான பிரசுரங்களில் ஒரு வருத்தமும் இப்பொழுது மேலோங்குகிறது.

ஜெராக்ஸ் மிஷின்கள் இல்லாத காலம் அது.  அதனால் பத்திரிகை காரியாலயங்களுக்கு ஒரிஜனல் தான் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அதற்கு அச்சு வடிவம் கொடுத்தாலும் ஒரிஜனல் இல்லாதது இப்பொழுது நினைத்துப்  பார்க்கையில் ஒருவிதத்தில் இழப்பாகத் தான் தெரிகிறது.



குறிப்பு:  படங்கள்  உதவியவர்களுக்கு நன்றி.


Wednesday, January 14, 2015

வாசிப்பு என்னும் தனி உலகம்

வெகுஜன ஊடகங்களின் மூலம் சில  படைப்புக்கள்  தெரிய வந்தன.
இந்தப் புத்தகச் சந்தையில் அவற்றைத் தேடித் திரிந்து சுய வாசிப்புக்காகச் சொந்தமாக்கிக்  கொள்ள வேண்டும்.

மிளிர் கல்  ---  நாவல் -  இரா. முருகவேள் -  பொன்னுலகம் பதிப்பகம்

பைத்திய ருசி -  சிறுகதைத் தொகுப்பு  -  கணேசகுமாரன்  -  தக்கை பதிப்பகம்

டார்வின் ஸ்கூல் -  சிறுவர் இலக்கியம் -  ஆயிஷா இரா. நடராசன் -                   புக்ஸ் ஃபார் சில்ரன்

அரேபிய இரவுகளும், பகல்களும் - மொழிபெயர்ப்பு நாவல் - சா. தேவதாஸ் - எதிர் வெளியீடு

நீல நாயின் கண்கள் -  மொழிபெயர்ப்பு உலகச் சிறுகதைகள் + இரண்டு நாவல்கள் -  அசதா -  நாதன் பதிப்பகம்

உறங்காத உறவுகள்  -  சமூக நாவல் -  எஸ்,வி, ரமணி -  சாரதாம்பாள் பதிப்பகம்

அஞ்ஞாடி  -  நாவல்  -  பூமணி -  (சாகித்ய அகாதமி விருது பெற்றது)

 7 கதாசிரியர்கள், 96 சிறுகதைகள் -  கதாசிரியர்கள்:  புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, லா.ச.  ராமாமிர்தம்,  சூடாமணி,  அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன்-  ஒவ்வொரு கதாசிரியருக்கும் தனித்தனி புத்தகம்  -  ஆனந்த விகடன் வெளியீடு

சிவானந்தலஹரீ பாஷ்யம் -  ஸ்ரீ ராமகிருஷ்ண  மடம்

Self - knowledge  -  (An English Translation of Sankaracharya's  Atmabodha with Notes, Comments, and Introduction  -  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

உபநிஷதங்கள் -- தனித்தனி புத்தகங்கள் - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

பாரதியார் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு  -- தனித்தனி  புத்தகங்கள் -  வர்த்தமானன்  பதிப்பகம்

மனவளக்கலை -  (இரண்டு பாகங்கள்)  -   தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி -
உலக சமுதாய சேவா சங்கம்,  வேதாத்திரி பதிப்பகம்

சங்க இலக்கியங்கள் ( மர்ரே எஸ்.ராஜம் அவர்களால் வெளியிடப் பெற்ற
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, பாட்டும் தொகையும் ஆகிய நூல்களை 'சங்க இலக்கியங்கள்' என்னும் தலைப்பில் 12 பாகங்கள் கொண்ட தொகுதி --  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

My Apprenticeship  and My Universities -  Maxim  Gorky  -  (Collected works of Maxim Gorky) -நியூ செஞ்சுரி  புக்  ஹவுஸ்

An Autobiography  -  Mahathma Gandhi -  Navajivan Publishing House

ஜீவா என்றொரு  மானுடன் -  பொன்னீலன் -  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சங்க சித்திரங்கள் -  ஜெயமோகன் -(ஆனந்த விகடன் ஸ்டாலில் கிடைக்கலாம்)

அவன் -  ரா.கி.ரங்கராஜன்   -- வானதி பதிப்பகம்


இப்போதைக்கு  இது!


Related Posts with Thumbnails