11
என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதலாம். எக்காலத்தும் மனிதன் தனித் தீவல்ல. அந்தத் தொன்மை காலத்தும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதே நியதி. உலகின் மற்ற நிலப்பகுதி வாழ் மக்களிடமிருந்து தமிழன் மட்டும் வேறுபட்டுத் தனித்திருந்தான் என்று கொள்வது வரலாற்று ரீதியான பிழை என்று கொண்டால் கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கான உலக அளவிலான தொன்மை நாகரிகச் சிறப்புகளை அலச வேண்டியது கட்டாயமாகிறது.
இப்போதைக்கு நாம் ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம் தலைச்சங்க, இடைச்சங்க காலம் மட்டுமே. தொன்மையான இந்த காலத்துக்கான வரலாற்று சான்றுகளில் தான் பல்வேறுவிதமான மாறுபட்ட கருத்துக்களை வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டுள்ளார்கள்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் பார்த்தாலே ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த அஜாதசத்ரு கங்கைக் கரையில் பாடலிபுத்திரம் என்ற பெருநகரை நிர்மாணிக்கிறான். நந்த வம்சத்தின் கடைசி மன்னனான தன நந்தனுக்கும் அர்த்த சாஸ்திர புகழ் கெளடில்யர் என்னும் அந்தணருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக கெளடில்யர் சந்திரகுப்தன் துணையுடன் நடத்திய புரட்சியின் விளைவு மெளரிய பேரரசுக்கு வித்திடுகிறது. பாடலிபுத்திரம் மெளரிய ஆட்சியின் தலைநகராகிறது. இது நடந்தது கி.மு. 322 ஆண்டில்.
கிரேக்க மாமன்னன் அலெக்ஸாந்தரின் படைத்தளபதி செலுக்கஸ் நிகோடர் சிந்து ஆற்று சமவெளி வரை படையெடுத்து வந்த பொழுது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சந்திரகுப்தனுடன் நடந்த போரின் விளைவாக இரு பகுதியினருக்கும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாபின் சில பகுதிகள் மெளரிய பேரரசுடன் இணைக்கப்பட்டன. ஒரு நல்லிணக்க நட்பின் அடையாளமாக செ.நிகோடரின் மகள் ஹெலனாவை சந்திர குப்தர் மணம் முடித்தார். செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக மெகஸ்தனிஸ் மெளரிய பேரரசின் அரசவையை அலங்கரித்தார். மெகஸ்தனிஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலான இண்டிகாவும், கெளடில்யரின் அர்த்தசாத்திரமும் சந்திரகுப்தரின் ஆட்சி சிறப்பை நமக்கு தெரியப்படுத்தும் வரலாற்று ஆவணங்களாயின. அலெக்ஸாந்தரின் படையெடுப்பின் மிகச் சிறந்த விளவுகளில் ஒன்று கிரேக்க செலுக்கசிய மரபினர் வழிவந்த கலப்புத் திருமணங்களாகும்.
சந்திரகுப்த மெளரியரின் திருமகனார் பிந்துசாரர் சந்திர குப்தருக்கும், ஹெலனாவிற்கும் பிறந்தவராவார். சந்திர குப்தனின் பேரன் அசோகன் கி.மு. 273-ல் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவர் பிந்துசாரருக்கும் அவர் மனைவி சுமத்திராங்கிக்கும் பிறந்தவர். இந்திய துணைக்கண்டத்தின் தமிழக, கேரளப் பகுதியைத் தவிர்த்து கிட்டதட்ட மொத்த இந்திய நிலப்பரப்பும் மெளரிய பேரரசின் ஆட்சிக் குடைக்கீழ் வந்த காலம் இது.
பேரரசர் அசோகர் எதிர்கொண்ட முதல் போரும் முடிவுப் போரும் கலிங்கப் போரே. கங்கை ஆற்றிலிருந்து கோதாவரி ஆறு வரை விரிந்து கிடந்த பரந்த பூமி கலிங்கம். இந்தப் பகுதியின் வித்தியாசமான சிறப்பு சுதந்திர வேட்கை கொண்ட பழங்குடிகளின் வாழும் பூமியாக இருந்தது. இன்றைய ஒரிஸாவின் தயா ஆற்றங்கரையில் ஒன்றுபட்ட பழங்குடியினர் மிகத் துணிசலுடன் ஒரு பேரரசின் பிர்மாண்ட படையை எதிர் கொண்டனர். பல்லாயிரக் கணக்கான எளிய மக்களை காவு வாங்கிய ரத்த ஆறு ஓடிய வன்மப் போர் இது. கி.மு. 261 காலகட்டத்தில் நிகழ்ந்த கலிங்கப் போரின் துயரம் அசோகரின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்து எல்லா உயிர்களின் மேலுமான அன்பே மனிதகுலத்தின் ஆன்ம ஞானத்திற்கு வழிகாட்டல் என்ற கோட்பாட்டை சொந்த அனுபவத்தில் ஏற்றுஅசோகர் புத்தமதத்தைத் தழுவுகிறார். தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த மதம் பரப்பும் ஞானத் தூதுவர்களாக இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.
தென் இலங்கையில் ஜம்புகோளப்பட்டினம் என்ற கடல் சார்ந்த இடம். இன்றைய சம்புத்துறை இதுவே. இங்கே தான் சங்கமித்திரை தன் சகோதரன் மகேந்திரனுடன் ஒரு வெள்ளரசு மரக்கிளையுடன் வந்து சேர்கிறார்கள். அசோகனே இந்தக் மரக்கிளையுடன் தன் மக்களை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக பெளத்த வரலாற்று நூலான மகாவம்சத்தில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
கர்னாடகம் வரை அசோகரின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடந்தது. இலங்கைக்கு தன் மக்களை புத்த மதத்தைப் பரப்பும் நோக்கோடு அனுப்பும் அளவுக்கு இலங்கையின் அக்கால சூழல்களோடு அசோகருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. இடையில் இருந்த அந்நாளைய தென் தமிழக நிலப்பரப்பில் அசோகரின் செல்வாக்கின் நிலை என்ன என்பது தான் வரலாற்றின் பக்கங்களில் நாம் தேட வேண்டிய சேதி.
கிட்டத்தட்ட இந்தக் காலம் தான் தமிழ் கூறு நல்லுலகில் தலை, இடை சங்கங்கள் இருந்த காலம்.
அசோகரைப் பற்றி ஏகப்பட்ட குறிப்புகள் சரித்திர பாடங்களில் நான் வாசித்த 1950 பள்ளிப்பருவ காலகட்டங்களிலேயே உண்டு. அந்த அளவுக்கு சங்க காலங்களைப் பற்றிய தகவல்கள் இருந்ததா என்றால் வருத்தத்துடன் இல்லை என்றே சொல்ல வேண்டும். அன்றில்லை, இன்றாவது இருக்கிறதா என்றால் தெரியவில்லை. அது போகட்டும். அதை விட மெத்தனப்போக்கு என்னவென்றால் மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களே முதல், இடை சங்கங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. அல்லது மேலோட்டமானவை.
அவர்களை போல அல்லாமல், தமிழின் முதல், இடைச் சங்க காலத்தைப் பற்றி தீர்க்கமாகவே நாம் பார்ப்போம்.
================================================
"அரசனின் மகிழ்ச்சி அவனது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளடக்கியுள்ளது.. அவனது நலம் அவர்களின் நலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவன் தனக்குத் திருப்தியளிக்கக் கூடிய ஒன்றை மட்டும் நல்லதென்று கருதக் கூடாது. குடிமக்களுக்கு எது நலனாகவும் அவர்களின்
திருப்தியாகவும் இருக்கக்கூடுமோ அதுவே தனக்கான திருப்தியாகவும் நலனாகவும் அவன் கொள்ள வேண்டும்.
--- கெளடில்யர்.
================================================
(வளரும்)