மின் நூல்

Sunday, May 31, 2009

ஆத்மாவைத் தேடி....2 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

2. மனத்திற்குக் கிடைத்திட்ட பேறு


னவியல் பேராசிரியர் மேகநாதனின் இன்றைய சொற்பொழிவுத் தொடர்ச்சியை எதிர்பார்த்து வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் சீக்கிரமாகவே அவை நிறைந்து விட்டது. மேகநாதனும் நிறைய குறிப்புகளோடு வந்திருந்தார். மனோகர்ஜியுடன் தொடர் சொற்பொழிவுகளின் தொடர்ச்சியைப் பற்றி விளக்கிச் சொல்லிவிட்டு, கிருஷ்ணமூர்த்தி மேடையேறி மேகநாதனை முதல் நாள் சொற்பொழிவின் தொடர்ச்சியாய் பேச அழைத்தார். மேல்துண்டை சரிசெய்து கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் மேடையேறிய மேகநாதன்
அமர்ந்திருந்த அவையோருக்கு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு தன் பேச்சை முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

"மனம் என்பது பற்றி இன்றைய உரையில் ஓரளவு குறிப்புகளைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்...

"'மனம்' என்ற ஒற்றைச் சொல்லால் மனத்தைப் பொதுவாக நாம் குறிப்பிட்டாலும் மூன்று நிலைகளில் அவற்றின் செயல்பாடு இருப்பது யோசித்துப் பார்த்தால் புலப்படும்.

அவற்றை வசதிக்காக----

புறமனம்--- Conscious Mind
உள்மனம்--- Sub Conscious Mind
ஆழ்மனம்--- Super Conscious Mind

----என்கிற மூன்று நிலைகளில் அவற்றின் செயல்பாட்டை அடக்கலாம்.

"உருவமில்லாத ஒரு மனத்தையே விஞ்ஞானத்தால் நிரூப்பிக்க முடியாத போது அதற்கு மூன்று நிலைகளா என்று ஆச்சரியப்படாதீர்கள்.

"ஒன்றை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். மனம் என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அல்ல --- உறுப்பு கொண்டு அதன் இருப்பை நிரூபிக்க முடியாததால். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.

"மனம் என்பது மெய்ஞானம் சார்ந்த உண்மை ---- உணர்வு கொண்டு அதன் இருப்பை உணர்வதால். 'மனம்' இல்லையெனில், வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்பதும் உண்மை. மனிதனின் ஒவ்வொரு நிமிட வாழ்க்கைச்சாரமும் அவனது மனத்தைச் சார்ந்திருப்பதை வெகு சாதாரணமாக நாம் அறியலாம். வாழ்க்கை வெறும் வரட்சியாகப் போய்விடாமல், அதற்கு பசுமை ஏற்படுத்த வேண்டி இறைவன் கொடுத்த வரம் மனம். இறைவன் பார்த்துப் பார்த்து படைத்த படைப்பின் உச்சபட்ச உன்னதம் இந்த 'மனம்'.

"அதனால் தான் இறைவனிலிருந்து அவனை உணர்ந்து அவன் மேல் செலுத்தும் பிரேமையாகிய பக்தி வரை எல்லாமே உணரப்படுகிற உணர்வு சம்பந்தபட்டவைகளாய் இருக்கின்றன. இந்த உணர்வு இல்லையெனில், பக்தி இயக்கமோ, இலக்கியமோ இல்லை. திருப்பாவையும், திருவெம்பாவையும் ஜீவனற்று வெற்று எழுத்துச் சொற்றொடர்களாய் இருந்திருக்கும்; சூடிக்கொடுத்த சுடர்க்கொடியையோ மாணிக்கவாசக சுவாமிகளையோ, அவர்தம் நெஞ்சத்து உணர்வுகளையோ நாம் அறிய முடியாது போயிருக்கக் கூடும்.

"நீ நாளும் நன்நெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்
சா நாளும் வாழ்நாளும் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூ நாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே"


---என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.

"மனத்தின் 'பிர்மாண்டம்' அளவிட முடியாத ஒன்று. இமயமலையின் உச்சிக்கும், ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்திற்க்கும் ஒரு நொடியில் சென்று மீளலாம். அங்கெல்லாம் சென்று வந்த அனுபவம் இருப்பின் இன்னும் விசேஷம்; நம் உடலையே அங்கு கொண்டுபோய்க் கிடத்தலாம்.

"மனத்தின் இருப்பை நிரூபணம் செய்து அறிவிக்க முடியாத அவஸ்தையில் தான் மூளையில் உறைந்திருக்கும் நியூரோன்களின் செயல்பாடாக் 'மனம்' என்பது இருக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறது விஞ்ஞானம். அதாவது மூளை சார்ந்த ஒரு சமாசாரமாக விஞ்ஞானம் 'மனத்தை' கொள்கிறது. ஆனால் 'மனம்' என்ற ஒன்றே இல்லை என்று கறாராக அதனால் கணிக்க முடியவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

"இன்னொன்று. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆன்மீகத்தின் அடித்தளமே இந்த மனம் தான். 'மனம்' என்ற ஒன்று, இன்னது என்று மட்டும் விஞ்ஞானத்தின் வெளிப்பாடாய்க் கண்டுபிடித்து நிரூபித்து விட்டால், ஆன்மீகத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணாது; இன்னும் பலப்படும் என்பது தான் நிதர்சன உண்மை.


"மனத்திற்கும் உடம்பிற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. தொடர்புக்கு வழி (via) மூளைதான். மனம் உடம்பைத் தன் ஆளுகைக்கு உட்படுத்துவதெல்லாம் மூளை வழி தான்.

அதனால் மூளை அழியின், மனத்தின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. உடலுக்கும், உடலின் உள்ளுருப்பான மூளைக்கும் உண்டான அழிவு மனத்திற்கு இல்லை. மனம் அழிவற்ற சாஸ்வதமானது. மனத்திற்கு அழிவில்லை என்பதினால் மனதால் கொண்ட எண்ணங்களுக்கும் எஞ்ஞான்றும் அழிவில்லை. அதனால் தான் மனத்தை வசப்படுத்திய எண்ணங்கள் ஆயுட்பரியந்தமும் நினைவை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. ஒருவரின் சுயஎண்ணங்கள் அவரைவிட்டு அழிவதில்லை என்பது மட்டுமல்ல, எழுத்தாக-- பேச்சாக வெளிப்பட்ட எத்தனையோ அறிஞர்களின் எண்ணங்கள் அவர்தம் வாழ்வுக்குப் பின்னரும் உயிரெழுச்சி கொண்டு இன்னொருவரின் மூலமாக செயல்படுவதைப் பார்க்கிறோம். அதாவது, எண்ணங்களால் கூடு விட்டு கூடு கூடப்பாய முடியும். சமூக வளர்ச்சி, அதன் நலன் சம்பந்தப்பட்ட உயர்வான சிந்தனைகளுக்கு அந்த சிந்தனைகளுக்கே உயிருள்ள மாதிரி தனிப்பட்ட வளர்ச்சியே உண்டு. அப்படிப்பட்ட சிந்தனைகள் பலரின் ஒட்டுமொத்த சிந்தனை ஆகி மேலும் மேலும் செழுமை படுத்தப்படும். அப்படிபட்ட சாகாவரம் பெற்ற பல சிந்தனைகளைத் தொடக்கி வைத்த பெருமை கொண்ட ஞானிகள் பலரை உங்களுக்கும் தெரியும்.


"உடல், அதன் உள்ளிருக்கும் உறுப்புகள் அதற்கான ரசாயன சேர்க்கைகள் என்று அத்தனையும் அழிந்து போகலாம். இறைவனுடனான எண்ண உறவாக, பக்தியாக பரிமளிக்கும் மனத்தின் மாசுமருவற்ற எண்ணங்கள் ஒரு 'கடக்கும் சாதனமாக' உருமாற்றம் கொண்டு அழியாது நிலைத்திருக்கும் பேறு பெற்றது,


"ஆதிசங்கரர் பெருமான் தாம் அருளிய 'சிவானந்த லஹரீ'யில் பக்தியின் இயல்பு பற்றிச் சொல்ல வந்தவர், மனத்திற்கு மட்டும் கிட்டும் பாக்கியம் பற்றிச் சொல்கிறார்:

"அங்கோலம் நிஜபீஜஸந்ததி--ரயஸ்காந்தோபலம் ஸூசிகா,
ஸாத்வீ நைஜவிபும் லதா க்ஷிதிருஹம் ஸ்ந்துஸ்ஸ்ரித்வல்லபம் !
ப்ராப்னோதீஹ யதா ததா பசுபதே: பாதாரவிந்த-த்வயம்,
சேதோவ்ருத்தி- ருபேத்ய திஷ்டதி ஸதா ஸா பக்திரித்-யுச்யதே


"அங்கோலம் என்பது ஒருவகை மரம். அந்த மரமும், அதன் விதை வர்கங்களும், காந்தத்தை ஊசியும், நாயகனை நாயகியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும்--என்று இவை ஒன்றுக்கொன்று ஈர்ப்புடன் இருப்பதைப் போல, மனத்தின் நாட்டம் எஞ்ஞான்றும் பெருமானுடைய தாமரைத் திருவடிகளைச்சேர நிலை பெற்றிருந்தால், அந்த பேற்றுக்குப் பெயர் தான் பக்தி என்கிறார்.


"மனம் அவ்வளவு பெருமை பெற்றது. மனமாகிய புஷ்பம் மலர்ந்திருக்க வேண்டும். வாட்டம் இயல்பாயினும், அதனை வாடி நைந்து போகாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அன்றலர்ந்த மலராக யாரிடமிருந்து பெற்றோமோ அவரிடமே அதே நிலையில் அதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய க்டமையாகிய இறுதிப் பேறும் பொறுப்பும் இருக்கிறது நமக்கு என்பதே தாத்பரியம்.

"இன்றைய காலை அமர்வை நிறைவு செய்வதற்கு முன், என்றென்றும் நம் நினைவில் இருக்குமாறு தாயுமானவர் சுவாமிகள் பாடல் ஒன்றை இசைத்து
முடிக்கின்றேன். இறைவனுடன் ஒன்றரக் கலக்க வேண்டுமென்ற தணியாத தாபத்தை இதைவிட அழகாக யாரால் வெளியிட முடியும், பாருங்கள்!

"வைத்திடுங் காலைப் பிடித்துக் கண்ணில் மார்பில்
வைத்தணைத்துக் கொண்டு கையால் வளைத்துக் கட்டிச்
சித்தமிசை இருத்திப் பிடித்துக் கொண்டு
தியக்கமற இன்பசுகஞ் சேர்வதென்றோ?"......


மனவியல் அறிஞர் மேகநாதன் மேடைவிட்டு இறங்கியதும் பிரதிநிதிகளின் பெருங்கூட்டம் ஒன்று ஆர்வத்துடன் அவரைச் சூழ்ந்து கொண்டது. 'மனம்' என்கிற சப்ஜெக்ட் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவரவர்களுக்கு இந்த விஷயத்தில் ஏகப்பட்ட சந்தேகங்களும் இருந்தன. அவர்கள் கேட்கக் கேட்க ஒவ்வொன்றையும் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டார் அவர்.


இறுதியில் "ஒன்று செய்யலாமே?" என்றவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தார். "இன்று மாலை அமர்வை மட்டும் கேள்வி-பதில் போக்கில் வைத்துக் கொண்டால் போயிற்று. எனக்குத் தெரிந்ததைச் சொல்ல முயற்சிக்கிறேன்" என்றார்.

எல்லோருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி; நீண்ட கைத்தட்டலுடன் அதை அவர்கள் வெளிப்படுத்தினர்.


பக்கத்தில் நின்றிருந்த மாலு ஒரு புதுவகை உரையை எதிர்கொண்ட உற்சாகத்தில் தோற்றமளித்தாள். அவளுக்கும் மேகநாதனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன.

தேடல் தொடரும்)








Tuesday, May 26, 2009

ஆத்மாவைத் தேடி....1 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

1. காணவாரீர், கயிலைநாதன் தரிசனம்!

அன்று சனிப்பிரதோஷம் வேறு; கேட்க வேண்டுமா?...

மகாதேவ் நிவாஸே விழாக்கோலம் பூண்ட மாதிரி சிவன் கோயில் பகுதி வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில்மண்டபத்தின் வெளிவாசல் படியில் ஆரம்பித்து சன்னதி வரையும், சன்னதியைச் சுற்றியும் வெவ்வேறான வடிவங்களில் பெரிய பெரிய மாக்கோலங்கள் கண்ணைக் கவரும் வகையில் போடப்பட்டிருந்தன.

கொத்துகொத்தாக கொன்றைப் பூக்கள் பூத்துக்குலுங்க, முல்லைக் கொடிகளோ மண்டபத்தூண்களை ஆரத்தழுவி ஆறாம் வேதம் படித்துக்கொண்டிருந்தன. வெள்ளை வெளேறென்று தும்பை, அதன் அருகில் மல்லிகைப் பந்தல், இருவாட்சி என்று வகைவகையாக இருந்த மலர்க்கூட்டத்தினுள் புகுந்து வெளிப்பட்ட தென்றல் காற்று தன்னுடன் சுகந்த வாசனையையும் சுமந்து தன்னையும் சுகந்தமாக்கிக் கொண்டு வந்தது.

சன்னதியை நோக்கி நடுவில் இருந்த நந்திதேவருக்கு முதுகில் பச்சைபட்டுப் போர்த்தி அழகுபடுத்தியிருந்தனர். நந்திதேவரைச் சுற்றி அங்கங்கே மண்டபத்திற்குள் நுழைந்தவர்கள் சன்னதி நோக்கி கைகூப்பி வணங்கி சுற்றிலும் வரிசை வரிசையாக அமர்ந்து கொண்டனர்.

பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் தொடங்குவதற்கு அறிகுறியாக 'டாண்,டாண்'ணென்று கண்டாமணி ஒலித்தது.

"திருச்சிற்றம்பலம்...
"ஓம் நமச்சிவாய வாழ்க...
நாதன் தாள் வாழ்க.."
என்று ஒரு கோடியிலிருந்து உச்சஸ்தாதியில் முழக்கம் கிளம்ப...
"ஓம் லிங்க மூர்த்தயே நம:
ஓம் லிங்கோத்பவ மூர்த்தயே நம:"
--- என்று கோஷம் ஒலித்தது.
குழைந்த குரலில் கிருஷ்ணமூர்த்தியின் குரல் அந்த சூழ்நிலையில் எடுப்பாகத் தெரிந்தது.

"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன் என்றே....


"---- தமிழ்நாட்டிலுள்ள தெய்வத்திருத்தலம் சீர்காழி.. விழுப்புரம்--மாயவரம் மார்க்கத்தில் உள்ளது. பாடல் பெற்ற ஸ்தலம் இது. திருப்பிரமபுரம் என்றும் சொல்வார்கள்.

"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு வந்து, பெருமானை தரிசித்த பேறு பெற்றமைக்கு நெகிழ்ந்து பாடிய பாடல் இது. தோடு அணிந்த செவியன் அவன். தூய வெண்ணிற சந்திரனை சிரசிலே தரித்துக்கொண்டு சுடுகாட்டுச் சாம்பலை மேனியெங்கும் பூசியவனாய் இடபவாகனத்தில் அம்சமாக அமர்ந்திருக்கிறான். இவன் என் உள்ளம் கவர்ந்த கள்வன். ஒருகாலத்தில் பிரமதேவன் இவனை வழிபட இத்தலத்திற்கு வந்தான். அருள்வேண்டி வந்த பிரமனுக்கு இவன் அன்போடு அருள் பாலித்தவன். திருப்பிரமபுரம் என்னும் தலமாகிய இச்சீர்காழி தலத்தில். அருள் பாலிக்கும் பெம்மானே! பெரியோனே! உன் தாள் சரணம்!" என்கிறார் ஞானசம்பந்தர். இத்தலத்து சுவாமியின் பெயர் பிரம்புரீசுவரர் தோணியப்பர். தேவி திருநிலைநாயகி பெரியநாயகி அம்பாள்.

"கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சுண்டவர் மிக இரிய அமரர் கட்குருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை உண்டு கண்டத் தேவைத்த பித்த நீ செயத
சீலங்கண்டு நின் திருவடி யடைந்தேன் செழும்பொழில் திருப்புன்கூருளானே..


"தமிழகத்து வைத்தீஸ்வரன் கோயில் திருத்தலத்திலிருந்து இருமைல்கள் தொலைவில் உள்ளது திருபுன்கூர். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்து இறைவன் அருளில் சொக்கிப் பாடிய பாடல் இது.

"மந்திரமலையை மத்தாக்கி, வாசுகிப்பாம்பை நாணாக்கி சமுத்திரம் கடைந்து எடுத்த ஆலகால விஷத்தை அருந்தி கண்டத்தில் தேக்கிக்கொண்ட நீலகண்டப் பெருமானே! எழிலார்ந்த திருப்புன்கூர் தலத்தில் உறைவோனே! உனது திருவடிகளே சரணம், சரணம்!" என்று மனமுருகிப் பாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சோலைகள் சூழ்ந்த இத்தலத்து சுவாமியின் பெயர் சிவலோகநாதர். அம்பாள் சொக்கநாயகி. அம்மையே--அப்பனே, நிங்கள் அருள் எங்களைக் காக்க, காக்க!"

---ஒவ்வொரு பிரதோஷத் தினத்தன்றும் இரு திருமுறைப் பாடல்களைப்பாடி, பாடல்பெற்ற தலவரலாறு கூறி பெருமானைத் தொழுவது பெரியவர் கிருஷ்ணமூர்த்தி மஹாதேவ் நிவாஸூக்கு வந்ததிலிருந்து நடந்து வருகிறது. இன்றும் அவரது உரைக்குப்பின் பிறவாயாக்கைப் பெருமானுக்கு பூஜையும் அபிஷேகமும் தொடர்ந்தது.

இலிங்கத்திருமேனியாய் எழுந்தருளியிருந்த பெருமானுக்கு அபிஷேகம் அத்தனைபேரும் பக்தியில் நெக்குருகி நிற்க நடந்தது. வெளிப்பிராகாரத்தில் உற்சவமூர்த்தி ரிஷப வாகனராய் உமாதேவியாருடன் பல்லக்கில் எழுந்தருளியிருந்தார். அடியார்கள் திருப்பல்லக்குத் தூக்க மெதுவாக பிராகாரச்சுற்று ஆரம்பமாயிற்று.. அவரவர் மொழியில் இறைவனின் திருநாமம் உச்சரிக்கப்பட்டு அதை அத்தனைபேரும் கோரஸாகத் திருப்பிச் சொன்னார்கள். தமிழகத்திலிருந்து சென்றிருந்தோர்---

"ஓம் நமசிவாய - சிவாயநம:" என்றும்,

"தென்னாடு உடைய சிவனே, போற்றி!
எந்நாட்டவர்க்கும், இறைவா, போற்றி!
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய், போற்றி!
உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி!"


என்று உணர்வுப் பிழம்பாய் கோஷித்தனர். மத்தள, நாதஸ்வர ஒலி தொடர்ந்து, துந்துபி முழங்க, புறப்பாட்டின் நடுவே பிராகாரச்சுற்றில் அங்கங்கே வாகனத்தை நிறுத்தி திருமுறைப் பதிகங்கள் பாடப்பாட உற்சவமூர்த்திக்கு பன்னீர் சொரிய நீராட்டு நடந்தது. பதிகங்களை சிவராமனும், மாலுவும் சேர்ந்து பாடுகையில், மெய்மறந்து கூட்டம் நின்றது.


"வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெளளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே"


முன்வரிசையிலிருந்த மனோகர்ஜியால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பதிகங்கள் முறையாகப் பாடப்பாட, பல்லக்கு சுமந்தும் சுற்றியும் வந்த பக்தர்கள் பெருமானின் அன்பு மழையில் நனைந்தார்கள். பிறவி எடுத்த பயன் அறிந்து கொண்ட அதிசயத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.

ரிஷப வாகனத்தில் மஹேஸ்வரரின் நடைச்சுற்று மூன்று முறை பதிகப்பாராயண பக்திப் பிரவாகத்துடன் நடந்தது. அது நிறைவடைந்ததும், உற்சவ மூர்த்தியை இறக்கி வைத்து தீபாராதனை நடந்தது. பின் 'ஹரஹர மஹாதேவ' கோஷத்துடன் கர்பக்கிரகத்திலும் கற்பூர ஹாரத்தி நிறைவேறி தரிசனம் முடிந்து எல்லோரும் கிளம்ப ஏழு மணிக்கு மேலாகி விட்டது.

"உங்களுக்கு பிரயாணக் களைப்பாயிருக்கும்.. ஆகாரத்தை முடித்துக் கொண்டு, ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. நாளை சந்திக்கலாம்" என்று சிவராமனிடம் விடைபெற்றுக்கொண்டார் மனோகர்ஜி.

கீழ்த்தளத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்களை அறைக்கு அழைத்து வந்தார் கிருஷ்ணமூர்த்தி.

சிவராமன் - மாலு வந்தால் தங்குவதற்காக தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கதது அறையை மனோகர்ஜியிடம் சொல்லி தயாராக வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

சிவராமன் கையோடு கொண்டுவந்திருந்த அவரது உடைமைகளும் முன்னமேயே இந்த அறையில் தான் வைக்கப்பட்டிருந்தன. அறைச்சாவியும் அவரிடம் தான் இருந்தது.

கதவு திறந்து உள்ளே நுழைந்தனர். பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதேத் தெரியவில்லை. "நிம்மதியாகத் தூங்குங்கள்.. காலையில் பார்க்கலாம்" என்று கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் விடைபெற்று தன் அறைக்குத் திரும்பும் பொழுது இரவு மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது.

(தேடல் தொடரும்)

Wednesday, May 13, 2009

ஆத்மாவைத் தேடி....43

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


43. உடலுக்குள் மனத்தை வைத்து யார் தைத்தது?..


ன்னிப்பாகக் கவனிக்கையில் மனவியல் என்கிற இந்த சாத்திரத்தில் பேராசிரியர் மேகநாதன் கொண்டிருக்கிற ஈடுபாடு வெளிப்படையாகத் தெரிந்தது. கண்களின் இமைப்பகுதி பாதி மூடிய நிலையில், மிகுந்த இரசிப்புடன் கூடிய வெளிப்பாடாய் ஆற்றோட்டமான சொற்கோவைகளாய் அவர் நினைப்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார்.

"என் உள்மனம் சொல்கிறது-- இது நிச்சயம் நடக்கும், பாரு!" என்று சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். 'உளமனம் என்று ஒன்று இருக்கா, அது பேசுமா, சொல்லுமா, சொல்கிற மாதிரி நடக்குமா என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அவர் சொன்ன மாதிரி நடக்கவும் நடக்கும். காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை இல்லை. நிஜமாலுமே நடக்கும். அவர் சொன்ன மாதிரியே நடந்தது கண்டு நமக்கு வியப்பாக இருக்கும்.

"நடக்கும்ன்னு சொன்னேன்லே.. நடந்திடுச்சி, பாரு."

"எப்படிடா?.."

"அதான் நடந்திருச்சில்லே.. பின்னே என்ன?"

"எப்படின்னு சொல்லேன்."

"எப்படின்னு எனக்கேத் தெரியாது. சில நேரங்கள்லே இப்படித் தான் நடக்கும் பாரேன்னு தோண்றது.. தோண்ற மாதிரியே நடந்திடவும் செய்யறது..அதான் ஆச்சரியமா இருக்கு."

நமக்கும் அவர் சொல்றதைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும். எப்படின்னு அவர் வாயைப்பிடுங்கி தெரிஞ்சிக்காம இருக்க நம்மாலே முடியாது.


"ஒருகால் ப்ளூக்கோ?" என்று ஓரக்கண்களால் பார்த்தபடி உண்மையை வரவழைக்க ஆத்திரப்படுத்துவோம்.

"'ப்ளூக்'னு இதை அசிங்கப்படுத்த விரும்பலே.. மனசுக்குள்ளே நினைப்பா ஏற்பட்டு, 'இப்படித்தான் நடக்கும்'னு யாரோ சொல்ற மாதிரி இருந்தது."

"யாரோவா?.. யாரோன்னா?"

"கடவுள்னு வைச்சுக்கோயேன்... தெய்வத்தின் குரல்னு வைச்சுக்கோயேன்."

"என்னவோ கடவுள் வந்து உங்கிடே சொல்ற ரேஞ்சுக்கு போயிட்டே?.. அருள்வாக்கா?"

"எப்படிவாணா வைச்சுக்கோயேன். எப்படின்னு எனக்குச் சொல்லத்தெரியலே.. சும்மா எப்படி எப்படின்னு தொணப்பினா எப்படி?"

"தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்."

"நானே பலதைச் சொல்றதில்லே.. இன்னொருத்தருக்கு நல்லதுன்னாத்தான் சொல்றது."

"வருத்தப்படாதே.. மன்னிச்சிக்கோ." அவர் மனசைக் காயப்படுத்திட்டோமோன்னு நமக்கும் வருத்தமா போயிடும்.

"பொதுவா நல்லவர்கள், எந்தப் பலனையும் எதிர்ப்பார்த்து எதையும் செய்யத் தெரியாதவர்கள், சொல் பொறுக்கமாட்டார்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள், நினைப்பது சொல்வது நடக்கும் என்பதும் உண்மைதான்" என்று சொன்ன மேகநாதன், பக்கத்தில் செம்பில் வைத்திருந்த நீரைக் கொஞ்சம் அருந்தி விட்டு மேலும் தொடர்ந்து பேசலானார்:

"நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்லவற்றை நாடும் பழக்க வழக்கங்கள் என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு உள்மனத்திற்கு வளப்பம் ஏற்படுத்தலாம். உள்மனத்தின் ஆரோக்கியம், வெளிப்புற ஆரோக்கியத்தையும் அறுதியிட்டு நிச்சயப்படுத்தும் என்பது இன்னொரு உண்மை. மனத்தின் ஆரோக்கியமே, தேஜஸ்ஸாக வெளிப்பட்டு வெளி உடலின் ஆரோக்கியமாக செயல்படும் கிரியாஊக்கி வித்தை இது.

"பாலபருவம், வாலிபம், வயோதிகம் என்று துள்ளலிலிருந்து தளர்வது வரை புற உடலுக்கு பல நிலைகள் உண்டு. அதே போல வெளிப்பார்வைக்குத் தெரியும் உடலின் உள்ளே சிறைப்பட்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கும் தொடர்ந்த இயக்கத்தின் காரணமாகத் தளர்வும் சிதைவும் உண்டு. இந்தத் தளர்வும், சிதைவும் இயற்கையானது; இயல்பனது; விஞ்ஞான பூர்வமானது. யாராலும் மறுக்க முடியாதது.

"உடல், உடலின் உள்ளே உள்ள உறுப்புகள், அவற்றின் இயக்கம், சீர்கேடானால் சரிப்படுத்துவது எப்படிங்கற இவற்றைப் பற்றியதான அறிவு--- இவ்வளவுதான் உடற்கூறு விஞ்ஞானம். இதையே இன்னொரு விதத்தில் சொல்வதானால், புலன்களுக்குத் தட்டுப்படும் எதுபற்றியும் ஆராய்ந்து, அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக அறிவால் அறியப்படும் உண்மைகளே விஞ்ஞானம் என்று சொல்லலாம்.

"இந்த எல்லைக்குள் வராத எது பற்றிய அறிவும் விஞ்ஞானமல்ல. அதாவது விஞ்ஞான எல்லைகள் என்று நாம் இப்பொழுது தீர்மானித்திருக்கும் எல்லைக்குள் வ ராத எதையும் விஞ்ஞான அளவுகோல்களைத் தூக்கிக்கொண்டு தீர்மானித்து விடமுடியாது.

"'இந்த நிமிடம் வரை' 'இதுவரைத் தெரிந்த உண்மைகளின்படி' என்றெல்லாம் காலத்தை சம்பந்தப்படுத்தி சொல்வது விஞ்ஞானத்தின் இயல்பு. அதுபடிப் பார்த்தால் விஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகள் கூட நாளாவட்டத்தில் விஸ்தாரமாகிப் புலன்களுக்குப் புலப்படாத எத்தனையோ அமானுஷ்ய நிகழ்வுகள் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகலாம். ஆக, விஞ்ஞான சோதனைகளுக்கு உட்படாததெல்லாம், உட்படுத்தப்படாததெல்லாம், உட்படுத்த 'இன்றைக்கு' இயலாததெல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது.

"பரபரப்பு, கோபம், ஆத்திரம், வெறுப்பு, வேகம், விரக்தி, அதீத ஆசை, அர்த்தமற்ற ஆவல்--- போன்ற ஆசாபாச உணர்வுகளுக்கெல்லாம் நேரடி சம்பந்தப்பட்ட உறுப்புகள் உடலின் உள்ளே கிடையாது. அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்கும் ஆரோக்கியம் அளித்தால் அல்லது அறுவை சிகித்சை செய்தால், இந்த வேண்டாத உணர்வுகளைச் சரிப்படுத்தலாம், இல்லை சமனப்படுத்தலாம் என்பதற்கும் வழியில்லை. ஆனால் இத்தகைய ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் பல நேரங்களில் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று மட்டும் உடற்கூறு விஞ்ஞான சாத்திரம் சொல்கிறது.

"அதாவது இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், 'உணர்வுகள் உண்டு; ஆனால் அதற்கான கட்டுப்பாட்டு உறுப்புகள் இல்லை' என்கிற நிலை. இல்லாத விஷயங்களுக்கு வைத்தியம் இல்லை என்று சுலபமாக மருத்துவ விஞ்ஞானம் கைவிரித்து விடலாம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ்வார்.


--- என்று நமது வள்ளுவப் பேராசான் உணர்வுகளை ஒழுங்குபடுத்த ஒப்பற்ற மருந்து சொல்கிறார்.

"பொதுவாக மருந்தின் இயல்பு கசப்பாயினும், இனிப்புச்சுவை மேலோட்டமாகத் தடவியிருப்பினும், கசப்பொழிந்த தித்திக்கும் இனிப்பான இன்னொரு இனிப்பு மருந்தைச் சொல்கிறார் அப்பர் சுவாமிகள்.

"பெரும் புலர் காலை மூழ்கிப் பித்தர்க்கு பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.
"


திருநாவுக்கரசரின் கற்கண்டு வாசகங்களைச் சொல்லிவிட்டு அவையைச் சுற்றி நெடுகப் பார்வையை வீசினார் மேகநாதன்.

அன்று பிரதோஷம்.

சாயரட்ஷை பூஜைக்கு சிவன் கோயிலில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்படியே அத்தனை பேரும் பூஜைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இன்றைக்கு இந்த அளவில் முடித்துக் கொள்ளலாமோ என்கிற எண்ணாத்தில் மேகநாதன் கைக்கடியாரத்தை லேசாக நோட்டமிட்டு விட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க குறிப்பறிந்து கிருஷ்ணமூர்த்தியும் 'சரி'யென்று தலையசைத்தார். அனைவரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவுறுத்தி மனவியல் அறிஞர் மேகநாதன் அன்றைய உரையை முடித்த அதே நேரத்தில்----

கிருஷ்ணமூர்த்தியைத் தேடி அந்த செய்தி வந்தது.

மஹாதேவ் நிவாஸின் வெளிப்புற பாதுகாவலர்களில் ஒருவர் வந்து பவ்வியமாகக் குனிந்து கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார்: "சார்.. உங்கள் உறவினர்கள் இருவர் உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். வெளிப்புற வராண்டாவில் அவர்களை அமர வைத்திருக்கிறேன் ."

'ஓ... மாலுவும், சிவராமனும் வந்து விட்டார்களா?' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவரின் முகம் மலர்ந்தது. " வெளிவராண்டா தானே?.. இதோ, நானே வருகிறேன்.." என்று கிருஷ்ணமூர்த்தி அவருடன் வாசல்பக்கம் விரைந்தார்.

(தேடல் தொடரும்)




(முதல் பாகம் முற்றும்)


















Friday, May 8, 2009

ஆத்மாவைத் தேடி....42

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

42. வாழ்க்கைப் பட்ட கதை


பெங்களூர் குளிர் மிரட்டாமல் உடலுக்கு இதமாக இருந்தது.


வாசல் பக்கம் சிவராமன் வந்த பொழுது ஈஸிச்சேரில் சாய்ந்தபடி அப்பா பஞ்சாங்கத்தில் ஆழ்ந்திருந்தார். ஸ்டூலில் அமர்ந்து ஷூ-ராக்கிலிருந்து ஷூவை எடுக்கையில் வெளிப்பக்கம் நிழல் தட்டிய மாதிரி இருந்தது.

"மாமி---"

சாக்ஸை மாட்டிக்கொள்வதில் கவனமாயிருந்த சிவராமன் குரல் கேட்டு தலை நிமிர்ந்தான். திகைத்தான். பாவாடை--தாவணிப் போர்த்தி ஓர் அழகு மயில் ஒயிலாகத் தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.

"மாமி இருக்காங்களா?" -- இரண்டே வார்த்தைகள். அதைச் சொல்லி முடிப்பதற்குள் குங்குமமாய் சிவந்த முகத்தில் நாணம் அப்பிக்கொண்டது.

"நீங்கள்?.."

"பக்கத்து வீடு.. புதுசா குடித்தனம் வந்திருக்கோம்." படபடப்பு வெளிப்படையாக வெளியே தெரிந்தது.

"ஓ" என்று உதட்டைக் குவித்த சிவராமன், "உள்ளே வாருங்கள்" என்று அந்தப் பெண்ணிடம் சொல்லி விட்டு உள்பக்கம் பார்த்து "அம்மா!" என்று குரல் கொடுத்தான்.

கையைத் துடைத்தபடி சமையலறையிலிருந்து வெளிவந்த அம்மா, வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்து முகம் மலர்ந்தார். "வாம்மா, மாலு! வா!.."

வந்த பெண்ணின் பெயர் மாலு என்று தெரிந்தது. சிவராமான் முதன் முதலாய் மாலுவைப் பார்த்தது அப்பொழுது தான்.

அடுத்த தடவை பார்த்தது நவராத்திரியின் ஒன்பது தினங்களில் ஒரு தினம். அன்று கொஞ்சம் லேட்டாய்த்தான் விமானதளத்திலிருந்து திரும்பியிருந்தான்.
வீட்டு உள்பக்கம் நுழைகையிலேயே உள்ளடங்கியிருந்த ஹால் பக்கமிருந்து கர்ணாமிர்தமாக சுருதி சுத்தமாக வந்த குரல் கட்டிப்போட்ட மாதிரி வாசல் சோபாவில் அவனை உட்கார்த்தி வைத்து விட்டது. ஷூவைக் கழட்டினால், அந்த சிறு சப்தம் கூட நாத ஒலியில் நீக்கமற நிறைந்திருந்த அந்த சூழ்நிலைக்கு அபச்சாரமாய் போய்விடுமோ என்கிற உணர்வில் தன்னை மறந்து உட்கார்ந்து விட்டான் சிவராமன்.

நீயே மூவுலகுக்கு ஆதாரம்
நீயே சிவாகம் மந்திர சாரம்


-என்று உணர்வைக் குழைத்த குரலில் உள்ளிருந்து குரல் வந்தது. பாபநாசன் சிவனின் வார்த்தை வரிகளுக்கு உயிர் கொடுத்த உச்சரிப்பு. அதுவும்,

நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா, சதனா


--என்று சரணத்தில் தன்னையே சமர்ப்பிக்கும் உணர்வு அடிநாதமாய் ஸ்ரீரஞ்சனியில் குழைந்து சங்கமமாகுகையில் சிவராமன் அந்த தெய்வீகக் குரலில் தன்னை மறந்தான்.

உள்ளே அம்மாவுக்கும் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். "மாலு! நன்னா பாடறே! என்னைக்கும் இல்லாத சந்தோஷமா இன்னைக்கு இருக்கு.. இன்னொரு பாட்டுப் பாடம்மா.." என்று கேட்டுக் கொண்டார்.

உள்ளே ஒரு நீண்ட மெளனம். அந்த ஒரு வினாடி கூட வெளியே சிவராமனுக்கு நீண்ட இடைவெளியாய்த் தெரிந்தது. அடுத்து என்ன பாட்டு என்று அவன் ஆவலாய் எதிர்பார்க்கையில், அருணாசலக் கவிராயர் அழகு தமிழில் கேள்விக் கணைகளோடு நின்றார்.

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா, ஸ்ரீரங்கநாதா--- நீர்
ஏன் பள்ளி கோண்டீர் ஐயா?


-- என்று குறும்பும், குழைவும், குதூகலமும், சந்தேகமும் ஒன்றாய்க் கலந்து ஓரிழையில் பயணிக்கிற சாதுர்யமாய் மாலு ஆரம்பித்த பொழுது சிவராமனுக்கு நிலைகொள்ளவில்லை. தேர்ந்தெடுத்த மோகனம், மோகமாய் தவழ்ந்து குழைந்து சுருதி பிசகாமல் சுந்தரமாய் திகைத்து நின்றது.

சிவராமன் நினைவில் வில்லேந்திய ஸ்ரீராமன் தடந்தோள் புடைத்து மதுராந்தகம் ஏரிகாத்த ராமனாய் மந்தகாசமாய் நின்றான். கொண்டல் மணிவண்ணனாய் கோசலை குமாரனாய் நின்றான். ஜானகிமணாளன் ஜெயஜெய கோஷம் சுற்றிலும் ஒலிக்க நின்றான். வழிநீண்ட வனாந்தரத்தில், வெளிர்நீல வெட்ட வெளியில் இலக்கற்ற பயணமாய் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போவது போலிருந்தது.

பாட்டு எப்பொழுது முடிந்தது என்று தெரியவில்லை. மாலுவின் சாரீரம் அலைஅலையாய் எழும்பி நெஞ்சின் உணர்வுகளை மீட்டி விட்ட கனவுலகில்
சஞ்சரித்துக் கொண்டிருந்தான் சிவராமன்.

மாலுவுக்கு வெற்றிலைப் பாக்கு கொடுத்து அவளை வழியனுப்ப அவளுடன் வாசலுக்கு வந்த அம்மா, சிவராமன் சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து,
"அடேடே.. நீ எப்போடா வந்தே?" என்றாள்.

"கொஞ்ச நேரத்துக்குய் முன்னாடி தான் அம்மா.. சரியாச் சொல்லணும்னா, மாலு பாடிகிட்டிருக்கறத்தே..." என்றான் சிவராமன்.

'மாலு' என்று சொந்தத்தில் நெருங்கிவந்து சொன்ன மாதிரி சிவராமன் தன் பெயரைச் சொன்ன பொழுது மாலுவுக்கு உடம்பு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

"அப்போ மாலு பாடினதை நீ கேட்டேன்னு சொல்லு."

"ஆமாம்மா.. அந்த பாக்கியம் பெற்றேன். அற்புதமா பாடறாங்க.." என்று சிவராமன் தலை நிமிர, வெட்கத்தில் தலை கவிழ்த்துக் கொண்டாள் மாலு.

சிற்றாடைப் பருவம்; சிரித்த சிவந்த உதடுகள்; ஓவல் முகம்; அதற்கேற்ற அளவெடுத மாதிரி குவிந்த நெற்றி; அந்த நெற்றியில் அலட்சியமாக விட்ட மாதிரி எந்நேரமும் பறந்த இரண்டு மூன்று குழல் கற்றைகள்.

"அம்மா, நான் அப்புறம் வரேன்.." என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டு மாலு விடுவிடுவென்று போய்விட்டாள்.

அடிநாதமாய் தனது தெய்வீகக்குரலை சித்தத்தில் மாலு விட்டு விட்டுப் போன உணர்வுதான் சிவராமனுக்கு இருந்தது.

நாளாவட்டத்தில் தன் மனத்தைச் சுண்டியிழுக்கிற இந்த இசை போதை ஓர் அம்சமாக மாலுவிடம் படிந்து இருப்பதை சிவராமன் உணர்ந்தான். சிவராமனின் நடத்தையில் காணப்பட்ட மேலான நாகரிகமும் பண்பாடும் மாலுவை மிகவும் கவர்ந்தது.

வாழ்க்கையில் ஒவ்வொரு திருப்பமும் சிவராமனைப் பொருத்தமட்டில் தானே கதவைத் தட்டிக்கொண்டு வந்தது தான். இது வேண்டும், அது வேண்டுமென்று அதீத ஆசை கொண்டான் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஈஸ்வர சமர்ப்பணமான இயல்பான வாழ்க்கை; அவன் ஆசைப்பட்டு லட்சிய வெறியுடன் வசதியில்லாவிட்டாலும் சாதிகக வேண்டுமென்று பிரயாசைப் பட்டுப் படித்தது பொறியியல் படிப்பு ஒன்றுதான். அவன் ஆசைப்பட்டது கிடைத்ததுமே வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்ட திருப்தி ஏற்பட்டுவிட்டது. காய்ந்து கிடந்த நிலம் குளமாகிப் போன திருப்தி.

எம்.இ., டிஸ்டிங்ஷனில் முடித்ததும்--- ஏரோநாட்டிக்ஸில் எம்.இ., அதுவும் எம்.ஐ.டி.யிலிருந்து என்றதும்-- H.A.L--ல்லின் கதவு ராஜமரியாதை காட்டிப் பறக்கத் திறந்து கொண்டது. கை நிறைய சம்பளம், கார் எல்லாம் கொடுத்து, இஷ்டம் போல் செயல்பட அனுமதித்தது---எல்லாமே அவன் எதிர்பார்த்துக் காத்திருந்து நடந்ததில்லை.

இதற்கடுத்தாற் போல அது என்கிற மாதிரி யாரோ பார்த்துப் பார்த்து அன்பு காட்டிச் செய்தது. யாரோ என்ன, எல்லாமே இறைவனின் கருணை!...

அந்தக் கருணை மனசுக்குப் பிடிபட்டுப் போனதில் வாழ்க்கையில் நிதானமும், அமைதியும் வந்து விட்டது. 'வருகிற நேரத்தில் வரும்; வருவதை ஏற்றுக் கொள்வதே நீ செய்ய வேண்டிய வேலை' என்கிற மாதிரியான பரபரப்பற்ற நிதானம்.

ஒருநாள், "ஏண்டா, சிவா! மாலுவைப் பத்தி நீ என்ன நெனைக்கறே?" என்றாள் அம்மா.

பக்கத்திலிருந்த அப்பா ஆவலுடன் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தார்.

மாலு அவனுக்கு வாழ்க்கைப் பட்டதும், அந்த வீட்டில் விளக்கேற்றி வைத்ததும் அப்படித்தான் நடந்தது...

சிவராமன் தோள்பக்கம் லேசாக ஒருக்களித்து சாய்ந்திருந்த மாலு திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தாள்.

"ஏன்னா! டெல்லி வந்தாச்சா!.." என்று அவள் கேட்பதற்குத் தான் காத்திருந்தது போல, ஸீட் பெல்ட்டைக் கட்டிக்கச் சொல்லி அறிவிப்பு தலைக்கு மேலே ஒளிர்ந்தது.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails